சனி, 10 ஜூன், 2017

ஸகாத் பெட்டி

 
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாமாக உள்ள ஒவ்வொருவரும் தாம் பணியாற்றும் பள்ளிவாசலில் அவ்வப்போது ஏதாவது அறிவிப்புச் செய்யாமல் இருக்க முடியாது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை கூட்டுத் தொழுகைக்குப் பிறகு அறிவிப்புச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். மத்ரஸா வசூல், திருமண உதவி, ஏழைகளின் மருத்துவ உதவி இன்னபிற அறிவிப்புகள் தொடரும். பள்ளி நிர்வாகம் சார்ந்த அறிவிப்புகளும் மஹல்லா மக்கள் சார்ந்த அறிவிப்புகளும் அவ்வப்போது உண்டு. ஆனால் இவ்வளவு அறிவிப்புகளிலும் எனக்குப் பிடித்த அறிவிப்பு ஒன்று உண்டு. அது ரமளானில் நான் செய்த அறிவிப்பு ஆகும்.

“மக்களே, நீங்கள் உங்களுடைய ஸகாத், ஸதகா ஆகிய எதையும் இப்பள்ளியின் இமாமாகிய எனக்குக் கொடுக்க வேண்டாம். நான் ஸகாத், ஸதகா வாங்கமாட்டேன். அன்பளிப்பை மட்டுமே ஏற்றுக்கொள்வேன். எனவே அவற்றை உங்களின் நெருங்கிய உறவினர்களுள் யாரேனும் ஏழைகளுக்குக் கொடுங்கள்; அல்லது உங்கள் வீட்டுக்கருகில், உங்கள் தெருவில் உள்ள ஏழைகளுக்குக் கொடுங்கள்.  அப்படி ஏழைகள் யாரும் உங்களுக்குத் தென்படவில்லையானால், இதோ நம் பள்ளியில் உள்ள ‘ஸகாத் பெட்டி’யில் உங்கள் பணத்தைப் போடுங்கள். அதில் போடப்படுகின்ற பணம் அனைத்தும் நம் மஹல்லாவில் உள்ள ஏழைகளுக்கும் கணவனை இழந்த கைம்பெண்களுக்கும் அநாதைகளுக்கும்  பிரித்துக்கொடுக்கப்படும்” என்று அறிவிப்புச் செய்தேன்.

இவ்வாறு அறிவிப்புச் செய்தபின் ஸகாத், ஸதகா இரண்டுமாக ஒரு பெருந்தொகை சேர்ந்தது. அதை எங்கள் மஹல்லாவில் உள்ள ஏழைப்பெண்களுக்கும் கணவனை இழந்த பெண்களுக்கும் பிரித்துக்கொடுத்தோம். ஏழைகள் வாழ்த்தினார்கள். துஆ செய்தார்கள்.

ஒவ்வொரு மஹல்லாவிலும் ஸகாத் கடமையானவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களுள் சிலர்தாம் முறைப்படி கணக்கிட்டு ஸகாத்தை வழங்கி வருகின்றார்கள். அவர்களுள் பலர் தம் மஹல்லாவில் பணியாற்றுகின்ற இமாம், முஅத்தினிடம் பெருநாள் அன்று கைலாகு (முஸாஃபஹா) செய்யும்போது நூறு, இருநூறு, ஐந்நூறு என வைத்துவிட்டுச் சென்றுவிடுகின்றார்கள். இதுதான் அவர்கள் வழங்கும் ஸகாத். இது முறையா?

இதற்கு முறையான வழிகாட்டுதலை யார் காட்ட வேண்டும்? ஒவ்வொரு பள்ளியிலும் ‘ஸகாத் பெட்டி’ உண்டா? இத்தகைய அறிவிப்பு உண்டா? மக்கள் வழங்கும் ஸகாத், ஸதகாவை ஆலிம்கள் பலர் தாமே வாங்கிக்கொள்கின்றார்கள். சரி, அவர்களுள் மிகவும் ஏழைகளாக உள்ளவர்கள் வாங்கிக்கொண்டால் பரவாயில்லை. அவர்களுள் ஸகாத் வழங்கும் தகுதியில் உள்ளோரும் எதுவும் பேசாமல் வாங்கிக்கொள்கிறார்களே, ஏன்?

ஐவேளைத் தொழுகை ஒவ்வொரு பள்ளியிலும் முறைப்படி நடைபெறுவதைப்போலவே ஒவ்வொரு பள்ளியிலும் ‘ஸகாத் பெட்டி’ ஒன்று இருக்கத்தான் வேண்டும். அதுதான் முறை. ஏனென்றால் தொழுகை, ஸகாத் இரண்டும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். அவ்விரண்டையும் பிரிக்கக் கூடாது. தொழுகைக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதுபோலவே ஸகாத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதை ஆலிம்கள்தாம் முன்னின்று செய்ய வேண்டும். ஒவ்வோர் ஆலிமும் ஒவ்வொரு பள்ளியிலும், “நான் ஸகாத் வாங்க மாட்டேன். உங்கள் ஸகாத்தை இதோ இந்த ‘ஸகாத் பெட்டி’யில் போடுங்கள்” என்று அறிவிப்புச் செய்து பாருங்கள். அதன்பின் சமுதாயத்தில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுவதோடு உங்கள் வாழ்க்கையிலும் ஒரு திருப்பம் ஏற்படும்.

சேர்ந்த பணத்தை ஒன்றுதிரட்டி, அந்தந்த மஹல்லாவில் வாழ்கின்ற ஏழைகளுக்கும்,  பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கின்ற பெண்களுக்கும், கணவனை இழந்தோருக்கும் பிரித்துக் கொடுங்கள். அவர்கள் உங்களை வாழ்த்துவார்கள். கொடுத்தோருக்கும் கொடுக்க ஏற்பாடு செய்தோருக்கும் ஈருலகிலும் நன்மை உண்டு என்பதை நினைவில் நிறுத்துங்கள். இவ்வாறு செய்வதால் ஊர் ஊராகச் சென்று பிச்சையெடுப்போரைக் குறைக்கலாம்; பொருளாதாரத்திற்காகக் கற்புநெறி தவறுவோரைக் காப்பாற்றலாம்; உரிய திறமை இருந்தும் பொருளாதாரச் சிக்கலால் படிக்க இயலாதோருக்குக் கல்வியுதவி செய்யலாம். இன்னும் எத்தனையோ திட்டங்களைச் செயல்படுத்தலாம்.

ஒரு மஹல்லாவில் உள்ள எல்லோரும் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக இருந்தால் அதை ஒரு தனிப்பட்ட நிதியாக வைத்துக்கொண்டு கல்வி, திருமணம், மருத்துவம் உள்ளிட்டவற்றிற்கு உதவி செய்யலாம். மேலும் அந்த மஹல்லாவை நாடி வருவோருக்கு உதவி செய்யலாம்; அவர்கள்  வெளியூரிலிருந்து வந்து பிறரிடம் கையேந்துவதைத் தடுக்கலாம்.
சமுதாய மக்கள் அனைவரும் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைவதற்கான வழிமுறைகளையும்  பொருளாதாரச் சிக்கலைப் போக்குவதற்கான நெறிமுறைகளையும் ஆலிம்கள்தாம் காட்ட வேண்டும்.  ஒவ்வொரு மஹல்லாவிலும் உள்ள இமாமும் அப்பள்ளியின் தலைவரும் இணைந்து ஒரு கூட்டுத் திட்டத்தை உருவாக்கிப் பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு உதவி செய்தால் ரமளான் காலத்திலும் பிற காலங்களிலும் பிச்சையெடுக்க ஊர் ஊராகப் படையெடுக்கின்ற ஏழைகளைக் குறைத்துவிடலாம்;  அவர்கள் அனைவரும் தன்மான உணர்வோடு வாழ வழிவகுக்கலாம்.

நம்முடைய ஸகாத் பணம் அனைத்தும் ஆங்காங்கே சிறுசிறு தூறல்களாக விழுவதால் மிக மிகக் குறைந்த பயனையே சமுதாயம் அனுபவிக்கிறது. அதேநேரத்தில் ஒரு மஹல்லா மக்களின் ஒட்டுமொத்த ஸகாத் பணமும் ஒரே பெட்டியில் போடப்பட்டு, அதை உரியவர்களுக்குப் பிரித்துக்கொடுத்தால் அதனால் விளையும் பயன்கள் ஏராளம்.

நம்முடைய ஸகாத், ஸதகா ஆகியவற்றை உரிய முறையில் வசூல் செய்து உரியவர்களிடம் வழங்காததால் எத்தனையோ பேர் உயர்கல்வி படிக்க இயலவில்லை. எத்தனையோ பேர் தொழிலில் நலிவடைந்து இருக்கின்றார்கள். எத்தனையோ முதிர்கன்னிகள் திருமணம் செய்யப்படாமல் காத்திருக்கின்றார்கள். எத்தனையோ பேர் வட்டிக்குக் கடன் வாங்கி, அந்த வட்டியைச் செலுத்த முடியாமல் திக்குமுக்காடுகின்றார்கள். இப்படி எத்தனையோ சிக்கல்கள் சமுதாயத்தில் பரவிக்கிடக்கின்றன. இவை அனைத்தும் அல்லாஹ் கட்டளையிட்ட பொருளாதாரத் திட்டத்தை நாம் நடைமுறைப்படுத்தாததால் விளைந்துள்ள தீமைகளாகும்.

தற்போது நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஓர் உறுதிமொழி ஏற்க வேண்டும். “நான் எந்த இயக்கத்திற்கும் என்னுடைய ஸகாத்தையோ ஸதகாவையோ வழங்க மாட்டேன். என்னுடைய நெருங்கிய உறவினர் அல்லது என்னுடைய அண்டை வீட்டார் அல்லது  என் தெருவிலுள்ளோர் அல்லது என் மஹல்லாவில் உள்ள ஏழைகளுக்கு மடடுமே கொடுப்பேன். அல்லது என் மஹல்லாவில் உள்ள பள்ளிவாசல் சார்பாக ஸகாத் வசூல் செய்யப்பட்டால் அங்கு வழங்குவேன்.” இந்த உறுதிமொழியை ஒவ்வொருவரும் எடுத்துக்கொண்டால் நம்முடைய ஸகாத் நிறைய ஏழைகளைச் சென்றடையும். அதிகமானோர் பயன்பெறுவார்கள் என்பது திண்ணம்.

“தொழுகையைக் கடைப்பிடியுங்கள். ஸகாத் (எனும் கட்டாயக் கொடையை) வழங்குங்கள்” (2: 43) என்று அல்லாஹ் திருக்குர்ஆனின் பல இடங்களில் இரண்டையும் ஒன்றாக இணைத்துக் கூறியுள்ளதைக் கூர்ந்து கவனியுங்கள்.

முஆத் (ரளி) அவர்கள் யமன் நாட்டிற்கு ஆளுநராகப் பயணம் புறப்பட்ட நேரத்தில், நபி (ஸல்) அவர்கள்  சொன்ன அறிவுரைகள் நினைவுகூரத்தக்கன. அவற்றுள் ஒன்று, “நிச்சயமாக அல்லாஹ் அவர்கள்மீது ஸகாத்தைக் கடமையாக்கியுள்ளான். அது அவர்களிலுள்ள செல்வந்தர்களிடமிருந்து பெறப்பட்டு, அவர்களிலுள்ள ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட வேண்டும் என அவர்களுக்கு அறிவிப்பீராக!” (நூல்: புகாரீ: 1496)

முஆத் (ரளி) அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட இந்தப் பணியை யார் செய்ய வேண்டும்? ஒவ்வொரு மஹல்லாவிலும் உள்ள இமாமும் பள்ளி நிர்வாகமும்தான் செய்ய வேண்டும். அங்குள்ள செல்வந்தர்களைக் கணக்கிட்டு அவர்களிடம் உரிய முறையில் ஸகாத்தைப் பெற்று அதை அங்குள்ள ஏழைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய பொறுப்பு அவர்களுக்குத்தான் உள்ளது. பள்ளிவாசலில் ஓர் இமாமை நியமித்து, ஐவேளையும் கூட்டுத் தொழுகை நடைபெற நிர்வாகத்தினர் எவ்வாறு பணியாற்றுகின்றார்களோ அதுபோலவே ஸகாத்தை வசூல் செய்ய ஆள் நியமித்து அல்லது பள்ளிவாசலில் அதற்கான ஏற்பாட்டைச் செய்து வசூல் செய்வதும், அதை உரிய முறையில் ஏழைகளுக்குப் பங்கிட்டு வழங்குவதும் அவர்களையே சாரும்.  இப்பொறுப்பை யாரும் தட்டிக் கழிக்க முடியாது.  இரண்டு கடமைகளுள் ஒன்றைச் செயல்படுத்துகின்ற அவர்களுக்கு இன்னொன்றைச் செயல்படுத்த என்ன தடை?

எனவே இந்த ஆண்டுமுதல் இந்த இரட்டைக் கடமைகளையும் ஒவ்வொரு மஹல்லா இமாமும் நிர்வாகமும் சேர்ந்து செயல்படுத்தத் தொடங்கட்டும். அதன் பயனாக நம்மிடையே உள்ள ஏழைகளின் பொருளாதாரச் சிக்கல் தீரட்டும். சமுதாய மறுமலர்ச்சி தோன்றட்டும். உயர்ந்தோன் அல்லாஹ் அதற்கான நல்வாய்ப்பை நமக்கு வழங்குவானாக.
=============================================================





   

கருத்துகள் இல்லை: