செவ்வாய், 13 செப்டம்பர், 2022

பஸ்மாந்தா முஸ்லிம்களை அடையத் துடிக்கிறது பாஜக

 

-ஜியாஉஸ் சலாம்

சமீபத்தில் ஹைதராபாதில் நடந்த பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், சிறுபான்மையினரின் விளிம்பு நிலை மற்றும் நலிந்த பிரிவினரை அணுகுமாறு கட்சித் தொண்டர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். பஸ்மாந்தா முஸ்லிம் சமூகத்தை வென்றெடுப்பதற்கான கட்சியின் முதல் உத்தியோகப்பூர்வ முயற்சி இதுவாகும். இது உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் உள்ள பஸ்மாந்தா முஸ்லிம் தலைவர்களால் முன்கூட்டியே வரவேற்கப்பட்டதுதான், ஆனால் இது முஸ்லிம் சமூகம் முழுவதும் அலைகளையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரும் சிறுபான்மையினரான முஸ்லிம்களின் ஒற்றுமையை உடைக்கும் அரசின் முயற்சியாகவே பலரும் இதைக் கருதுகின்றனர். சிறுபான்மைச் சமூகத்தில் மிகப்பெரும் சமூகமாகிய இஸ்லாத்தில் சாதி அமைப்பு இல்லை என்று கூறிக்கொண்டே சாதி அடிப்படையிலான பிளவுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி அவர்களுள் சிலர் கேலி செய்தார்கள், இவ்வாறு கூறித் தாழ்த்தப்பட்டோர் பலரைத் தம்மோடு சேர்த்துக்கொள்ள முயல்வது, கட்சியின் வாக்கு வங்கியைப் பெருக்கிக்கொள்வதற்கான தந்திரங்களே என்றும் சுட்டிக்காட்டினர். 

வேதங்கள் என்ன சொல்கின்றன? : அவர்களின் கூற்றுக்கள் இஸ்லாத்தின் கொள்கைகளால் தாங்கப்படுகின்றன. இஸ்லாம் வழங்கிய சாதியற்ற, வர்க்கமற்ற சமூக அமைப்புதான் தாழ்த்தப்பட்ட இந்துக்கள் பலரை இஸ்லாத்திற்கு ஈர்த்தது. உண்மையில், இஸ்லாம் பிறப்பு, சாதி அல்லது வர்க்கத்தின் அடிப்படையில் எந்த வேறுபாட்டையும் அங்கீகரிக்கவில்லை; அதன் முழக்கம் முழுவதும் உலகளாவிய சமத்துவம் பற்றியதுதான். இறுதி இறைத்தூதர் முஹம்மத் நபி தமது கடைசிச் சொற்பொழிவில், “அரபியருக்கு அரபியல்லாதவர்களைவிட அல்லது வெள்ளையர்களுக்குக் கறுப்பினத்தைவிட எந்த மேன்மையும் இல்லை, இறையச்சத்தின் ஏற்றத்தாழ்வுகளைத் தவிரஎன்று கூறினார்கள்.

இன்றுவரை, முஸ்லிம்கள் உலகெங்கிலும் உள்ள மசூதிகளில் தோளோடு தோள் சேர்ந்து தொழுகையில் ஒன்றாக நிற்கிறார்கள். ஒருவரின் இடது அல்லது வலது அல்லது முன்னால் யார் நிற்கிறார் என்பது கவனிக்கப்படாது. தொழுகையை நடத்துகிற இமாமும் சமூகத்தின் எந்தப் பிரிவைச் சார்ந்தவராகவும் இருக்கலாம். இனம் அல்லது மத வேறுபாடுகள் ஒருபோதும் ஒற்றுமையைக் குலைக்கவில்லை. சாரே ஜஹான் சே அச்சா எனும் தேசியப் பாடலை எழுதிய பிரபல கவிஞர் முஹம்மத் இக்பால், "ஏக் ஹீ சஃப் மேன் கடே ஹோ கயே மஹ்மூதோ அயாஸ்/ ந கோயி பந்தா ரஹா, ந கோயி பந்தனவாஸ் (சுல்தான் மற்றும் அடிமை அருகருகே நின்றனர்/ அப்போது வேலைக்காரனோ எஜமானனோ எந்த வேறுபாடும் இல்லை; எதுவும் அவர்களைப் பிரித்துவிடவில்லை).” “எல்லா முஸ்லிம்களும் ஒரே உடலைப் போன்றவர்கள்: உடலின் ஏதாவது உறுப்புக்கு வலி ஏற்பட்டாலும் முழு உடலும் அந்த வலியை உணர வேண்டும்என்று ஒரு நபிமொழி கூறுகிறது. திருக்குர்ஆனில் அல்ஹுஜுராத் எனும் அத்தியாயத்தின் 10ஆம் வசனம், “முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள்என அழைக்கிறது. அவர்களுள் இருவர் சண்டையிட்டுக்கொண்டால் அவர்களுக்கிடையே சமாதானம் செய்துவைக்குமாறு கட்டளையிடுகிறது.


ஒரு தனித்துவமான வகை: அழகாகவும், உத்வேகம் தருவதாகவும் இருந்தாலும், இது பெரும்பாலும் வேதவசனங்களுக்குள் மட்டுமே இருக்கிறது. தற்கால இந்திய முஸ்லிம் சமுதாயம் நபியவர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பிரதி அல்ல. தொழுகை-நோன்பு-ஹஜ் போன்ற விஷயங்களில் மதநம்பிக்கையின் அனைத்துக் கோட்பாடுகளையும் அது நிலைநிறுத்த முற்படும் அதே வேளையில், சமூக-வரலாற்றுக் காரணிகள் இந்திய இஸ்லாத்தை ஒரு தனித்துவமான வகையாக ஆக்குகின்றன, அங்கு அறியாமலேயே இந்துப் பாரம்பரியமும்  இஸ்லாமிய மதிப்பும் இணக்கமாக உள்ளன. நிச்சயமாக, பெரும்பான்மைச் சமூகத்தின் அதீத மேன்மை இதில் ஒரு முக்கியப் பங்கைக் கொண்டுள்ளது. இந்திய முஸ்லிம்களில் மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் மதத்தை மாற்றிக்கொண்டனர், ஆனால் அவர்கள் தங்கள் சமூக-கலாச்சார நடைமுறைகளைத் தம்மோடு அப்புதிய நம்பிக்கைக்குக் கொண்டுவந்தனர்.


உண்மையில், இந்துக்களிடையே உள்ள தெஹ்ர்வீ' (13வது நாள்) சடங்கைப் போலவே, இந்திய முஸ்லிம்களும் தீஸ்ராமற்றும் 'சாலீஸ்வா' (இறந்தவர்களுக்குத் துக்கம் அனுசரிக்கும் மூன்றாவது மற்றும் 40ஆம் நாள்) போன்ற சடங்குகளைக் கொண்டுள்ளனர். இந்துப் பெண்கள் பெரும்பாலும் திருமணத்திற்கு முன்பு தங்கள் பெயருடன் 'குமாரி' என்ற பின்னொட்டையும், பின்னர் 'தேவி' என்ற பின்னொட்டையும் சேர்த்துக்கொண்டால், (வட இந்திய) முஸ்லிம் பெண்கள் 'ஜஹான்' அல்லது பர்வீன்' போன்ற பின்னொட்டுகளைக் கொண்டுள்ளனர், ஆனால் அவர்கள் தம் தந்தையின் பெயர் அல்லது குடும்பப்பெயரை அரிதாகவே பயன்படுத்துகிறார்கள்.


முஸ்லிம்கள் ஷீஆ, சன்னி என இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். ஹனஃபி, (இந்திய முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தப் பிரிவுச் சட்டத்தைப் பின்பற்றுவோர்), ஹன்பலி, மாலிகி, ஷாஃபிஈ போன்ற மேலும் துணைப் பிரிவுகளைக் கொண்டுள்ளனர்.

பெரும்பாலான கருத்து வேறுபாடுகள் ஷரீஆ பற்றிய அவர்களின் விளக்கத்துடன் தொடர்புடையவை.


அவர்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளும் கருத்தியல் ரீதியாகவும், சில வழிகளில், உலகளாவியவையாகவும் இருந்தாலும், இந்திய முஸ்லிம்கள் மத்தியில் சாதி இருப்பதுதான் அவர்கள் தனித்த இந்தியர்கள்என்று காட்டுகிறது. அவர்கள் சொல்வதுபோல், இந்தியாவில் நீங்கள் உங்கள் மதத்தை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் உங்கள் சாதியை மாற்ற முடியாது. தலித் சீக்கியர்கள், தலித் கிறிஸ்தவர்கள் போன்ற சொற்களின் முரண்பாட்டை நாம் கொண்டுள்ளோம், இருப்பினும் இரு மதங்களும் சாதி அமைப்பை ஏற்படுத்தவில்லை.


முஸ்லிம்களில், ‘இஸ்லாமியப் பிராமணர்கள்என்று அழைக்கப்படும் பத்து சையதுகள் எங்களிடம் உள்ளனர். அவர்கள் தங்கள் வம்சாவளியை நபிகள் நாயகத்தின் குடும்பத்தில் வைத்துள்ளனர். ஷேகுகள், முகலாயர்கள், பதான்கள் மற்றும் பிறருடன் சேர்ந்து, அவர்கள் அரபுத் தீபகற்பம் அல்லது மத்திய ஆசியாவில் இருந்து வந்ததாகக் கூறப்படும் சிறப்புவாய்ந்த முஸ்லிம்கள் அஷ்ரஃப் பிரிவினரை வளர்க்கிறார்கள். எங்களிடம் அஜ்லாஃப்கள் அல்லது பொது மக்கள், பொதுவாக மதம் மாறுபவர்கள் உள்ளனர்.

இறுதியாக, சில சமூகவியலாளர்கள் தலித்துகளுடன் ஒப்பிடும் அர்ஸல்கள் எங்களிடம் உள்ளனர் என்றும் கூறுகின்றனர்.


சமூக அடுக்குமுறை: இந்து சாதி அமைப்பை ஆதார மாதிரியாக வைத்து ஒப்பிடும்போது, முஸ்லிம்கள் மத்தியில்  உள்ள சாதிய அமைப்பு முறைகேடுகளைவிட்டு வெகு தொலைவில் உள்ளது. நாங்கள் தூயோர்; நீங்கள் மாசுபடிந்தோர்என்று சொல்கிற மாதிரி பெரும்பாலும் இல்லை. உதாரணமாக, ஒருவர் விரும்பிய கல்வி நிறுவனத்தில் கல்வியைத் தொடர்வதற்கோ குறிப்பிட்ட இடத்தில் வீடு வாங்குவதற்கோ எந்தத் தடையும் இல்லை. சைஃபி (தச்சர்) அல்லது அன்சாரி (நெசவாளர்) அல்லது சல்மானி (ஹஜ்ஜாம் - முடிதிருத்துபவர்) - ஒரு பஸ்மாந்தா முஸ்லிம் அல்லது ஒரு முஸ்லிம் ஓபிசி, ஒரு சையத் அல்லது ஷேக் மற்றும் கான் என அனைவரும் ஒரே பள்ளிவாசலில் தொழுகையில் கலந்துகொள்ள முடியும். இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த ஆண்கள் சையது அல்லது ஷேக் பிரிவைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமானால் போராட வேண்டியது ஏற்படலாம். அதேபோல் சையத் அல்லது ஷேக் ஆண் பஸ்மாந்தா பெண்ணை மணந்தால் விதிகள் வேறு. ஆண் மேலாதிக்கத்தின் அதே நெறிமுறைகள் இந்து மதத்தைப் போலவே பொருந்தும், அங்கும் ஒரு தலித் ஆணுக்கு ஒரு பிராமணப் பெண்ணைத் திருமணம் செய்வதைவிட உயர் சாதி ஆணுக்குத் தாழ்ந்த சாதிப் பெண்ணைத் திருமணம் செய்வது எளிது.


உண்மையில், இந்திய முஸ்லிம்கள் மத்தியில் இந்து மதத்தின் கலாச்சாரச் செல்வாக்கிற்கான ஒரு தெளிவான உதாரணத்தைச் செய்தித்தாள்களில் வருகிற திருமண விளம்பரங்களில் காணலாம், அங்கு ஒரு சையது குடும்பம் தன்னுடைய ஆண்பிள்ளைக்குத் தோதுவான வரன் தேடுகிறதுஅல்லது ஒரு ஷேக் குடும்பம் தன்னுடைய பெண்ணுக்குப் பொருத்தமான ஒரு வரன் தேடுகிறதுஎன்பதுபோன்ற விளம்பரங்களைச் சுருக்கமான வார்த்தைகளில் கொடுத்துவிடுவதைப் பார்த்திருக்கலாம். அவர்கள் விரும்பும் தனித்தன்மைகள் அதில் விவரிக்கப்படுவதில்லை. அதாவது அதே செல்வாக்கு உடையவராகவும் அதே குடும்பத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.  பிற சமூக அடுக்குகளில் இருந்து வருபவர்கள் தொடர்புகொள்ள வேண்டாம் என்பதெல்லாம் உள்ளே மறைந்திருக்கின்றன. இதுதான் இஸ்லாமிய அடையாளமும் இந்துச் சமூக நடைமுறையும் ஒன்றாகக் கலந்த கலவையாகும்.


நிச்சயமாக, இந்தச் சமூக அடுக்கு பரவலாக ஆங்காங்கே காணப்பட்டாலும் மேற்கு பெங்கால்-பீகார்-ஜார்கண்ட்-கிழக்கு உத்தரப்பிரதேசப் பகுதிகளில் மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. இங்கே, ஒருவர் மற்றொருவரை முதன்முதலில் சந்திக்கும்போது தமது ஆரம்பப் பெயரைச் சொன்னால், 'இஸ் கே ஆஹே க்யா லஹாத்தே ஹைன் (உங்கள் பெயருக்குப் பின்னால் நீங்கள் என்ன பயன்படுத்துகிறீர்கள்)' என்று கேட்பது வழக்கம். இது ஒருவனின் சாதி, தோற்றம் பற்றித் தெரிந்துகொள்ளத் தொடுக்கப்படுகின்ற நுட்பமான கேள்வி. பீகாரில், சாதி சார்ந்த கல்லறைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. டெல்லி போன்ற மலைப்பகுதிகளிலும், உத்தரப் பிரதேச நகரங்களிலும் கல்லறை 'இட ஒதுக்கீடு' நுட்பமானது. நாட்டின் சில பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அல்லது சில தொழில்கள் செய்வோர் மட்டுமே இவ்விடங்களில் அடக்கம் செய்யப்படுகின்றனர். மற்றவர்கள் அவ்விடங்களில் அடக்கம் செய்யப்பட மறுக்கப்படுகிறது. 


பல்வேறு சூழ்நிலைகளின்கீழ், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பே பஸ்மாந்தா முஸ்லிம்கள் அகில இந்திய பஸ்மாந்தா முஸ்லிம் மஹஸ், ‘அகில இந்திய முஸ்லிம் ஓபிசி அமைப்பு, ‘அகில இந்திய பின்தங்கிய முஸ்லிம் மோர்ச்சாபோன்ற பதாகைகளின்கீழ் ஒன்றிணையத் தொடங்கிவிட்டனர்.

 

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மோர்ச்சா, 32 பிற்படுத்தப்பட்ட இனங்களுக்கான ஒரே குடை அமைப்பாகக் கூறப்படுகிறது. சச்சார் கமிட்டி அறிக்கையின்படி, 40% இந்திய முஸ்லிம்கள் 'பஸ்மாந்தா' ஆவர். அதே நேரத்தில், 'தலித் பிச்டா ஏக் சமன், ஹிந்து ஹோ யா முசல்மான் (அனைத்து தலித்துகளும் இந்துவாக இருந்தாலும் சரி, முஸ்லிமாக இருந்தாலும் சரி)' என்ற முழக்கத்தைத் தொடங்கிவிட்டனர்.


இந்தப் பிளவைத்தான் பாஜக ஊக்குவிக்கவும் சுரண்டவும் முயல்கிறது. அதேநேரத்தில் 2014ஆம் ஆண்டு முதல் அரசின் சில கொள்கைகளும் வலதுசாரிக் கட்சியின் அடிவருடிகளும் இந்திய முஸ்லிம்களை முன்பு எப்போதோ ஒருங்கிணைத்துவிட்டனர். ஒருபுறம், முஸ்லிம் பெண்கள் குடியுரிமை எதிர்ப்பு (திருத்தம்) சட்டப் போராட்டங்களுக்கு எப்படித் தலைமை தாங்கினார்கள் என்பதை நாம் பார்த்தோம். நாடு முழுவதும் அவர்களின் சாதி, பூர்வீகம் குறித்து எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை.


மற்றொருபுறம் முஸ்லிம் பால் பண்ணையாளர்கள் மற்றும் கால்நடைகளை ஏற்றிச் செல்வோர் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைக் கண்டோம், சையதுகள், சைஃபிகள் மட்டும் அல்லாமல், ஷீஆக்களும் சன்னிகளும்கூட ஒருவரையொருவர் அவர்களுள் இறந்தோரை புதைத்துக்கொண்டும், ஒருவரோடொருவர் பேசிக்கொண்டும் இருந்ததைக் கண்டோம். எதிரிக்கும்பல் உங்கள் பிரிவையோ, சாதியையோ கேட்பதில்லை. தாக்கப்படுபவர் ஒரு முஸ்லிமாக இருந்தால் போதும்.


நமக்கான இன்றைய பெரிய கேள்வி என்னவென்றால், “நாம் அனைவரும் முஸ்லிமாக இருந்தால் போதுமா? அல்லது, பிஜேபி வலியுறுத்துவதுபோல், இன்றைய பஸ்மாந்தா முஸ்லிம்களாகவே இருக்கப்போகிறோமா?” எதிரிக்கும்பல் நம்மைத் தாக்கும்போது நம் பிரிவையோ, சாதியையோ கேட்கப்போவதில்லை. முஸ்லிமா என்று பார்த்துத்தான் தாக்குகின்றார்கள். எனவே நாம் அனைவரும் முஸ்லிம்களாக இருந்தால்போதும் என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வோம்.


தமிழாக்கம்: டாக்டர் நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி

தி இந்து ஆங்கில நாளிதழ் (07 08 2022)

===========================









வெள்ளி, 9 செப்டம்பர், 2022

நல்ல நேரம் - கெட்ட நேரம் எது? which is a good time and bad time?



நல்ல நேரம் - கெட்ட நேரம் எது? which is a good time and a bad time? -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. இமாம் மதீனா மஸ்ஜித் பட்டினப்பாக்கம் சென்னை-28 . (ஆகவே நபியே! அவர்களை நோக்கி) "அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் நிச்சயமாக எங்களை அணுகாது. அவன் தான் எங்களுடைய இறைவன்'' என்று நீங்கள் கூறுங்கள். நம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைக்கட்டும். (9: 51) 09/ 09 / 2022 11/ 02 / 1444

வியாழன், 8 செப்டம்பர், 2022

பிரார்த்தனையின் பலன்கள்-12

  


-மௌலவி முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி (இமாம், மதீனா மஸ்ஜித்-பட்டினப்பாக்கம், சென்னை)

----------------------

 

வீட்டிற்குள் நுழையும்போது

வீட்டிற்குள் நுழையும்போது வீட்டிலுள்ளோருக்கு முகமன் (ஸலாம்) சொல்லிவிட்டுச் செல்ல வேண்டும் என்பது நம்முள் பலருக்குத் தெரியும். ஆனால் வீட்டிற்குள் நுழையும்போது என்ன துஆ ஓத வேண்டும் என்று நம்முள் பலருக்குத் தெரியாது. ஏனெனில் நம்முள் பலர் அதைக் கற்றுக்கொள்ளாததே காரணமாகும்.

 

வீட்டினுள் நாம் நுழையும்போது மகிழ்ச்சியும் மனஅமைதியும் நமக்குக் கிடைக்கவேண்டுமே தவிர சண்டை சச்சரவுகள் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடாது. ஏனெனில் நாம் வீட்டினுள் நுழைகிறபோது ஸலாம் கூறவில்லையெனில் ஷைத்தானுக்கு நம் வீட்டினுள் தங்குவதற்கு இடம் கிடைத்துவிடுகிறது. நாம் உண்ணுமுன் பிஸ்மில்லாஹ் கூறாவிட்டால் அவனுக்கு உணவும் கிடைத்துவிடுகிறது. எனவே நாம் ஷைத்தானை நம் வீட்டிலிருந்து விரட்டிவிட வேண்டுமெனில் நாம் அவ்வப்போது ஓத வேண்டிய துஆக்களை மறவாமல் ஓதிக்கொள்ள வேண்டும்.   

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: ஒருவர் தம் வீட்டிற்குள்

நுழைந்தால்,

اللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلَجِ، وَخَيْرَ الْمَخْرَجِ، بِسْمِ اللهِ وَلَجْنَا، وَبِسْمِ اللهِ خَرَجْنَا، وَعَلَى اللهِ رَبِّنَا تَوَكَّلْنَا

 

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைரல் மவ்லஜி வ கைரல் மக்ரஜி, பிஸ்மில்லாஹி வலஜ்னா வபிஸ்மில்லாஹி கரஜ்னா வஅலல்லாஹி ரப்பினா தவக்கல்னா என்று சொல்லட்டும். பிறகு தமது வீட்டார்களுக்கு முகமன் (ஸலாம்) சொல்லட்டும்.

பொருள்: இறைவா! சிறந்த நுழைவிடத்தையும், சிறந்த வெளியேறுமிடத்தையும் நான் உன்னிடம் கோருகின்றேன். அல்லாஹ்வின் திருப்பெயரால் நாங்கள் (வீட்டிற்குள்) நுழைந்தோம். அல்லாஹ்வின் திருப்பெயரால் வெளியே சென்றோம். எங்கள் இறைவனாகிய அல்லாஹ்வையே முற்றிலும் சார்ந்துள்ளோம்.) (அபூதாவூத்: 4432)

 

அதேபோல் நாம் நம் வீட்டிலிருந்து வெளியே புறப்படுகின்றபோதும் அதற்குரிய பிரார்த்தனையை ஓதிக்கொள்ள வேண்டும். அதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். இதோ அந்த நபிமொழி.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: ஒரு மனிதர் தமது வீட்டிலிருந்து புறப்படும்போது,

 

بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

 

 'பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி லாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹி" (பொருள்: அல்லாஹ்வின் பெயரால் புறப்படுகின்றேன். நான் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்துள்ளேன். அல்லாஹ்வின் உதவியின்றிப் பாவங்களிலிருந்து விலகிடவும் முடியாது. நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவும் முடியாது) என்று கூறினால் அவரிடம் (உமது அலுவல்களில் உமக்கு நேரான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுவிட்டது, போதுமான அளவு உதவிகள் பெற்றுக்கொண்டீர் (பகைவர்களின் தீங்கிலிருந்து) உமக்குத் தகுந்த பாதுகாப்பு கிடைத்துவிட்டது என்று (வானவர்களின் வாயிலாக உறுதிமொழி) கூறப்படும். மேலும் ஷைத்தான்கள் அவரிடமிருந்து தூரமாகிவிடுவார்கள். 

 

அப்போது வேறொரு ஷைத்தான், ‘நேர்வழியையும் போதுமான உதவிகளையும், தகுந்த பாதுகாப்பையும் (இறைவனிடமிருந்து) பெற்றுக்கொண்ட ஒரு மனிதரை உன்னால் எவ்விதம் வழிகெடுக்க முடியும்?" என்று மற்றொரு ஷைத்தானிடம் கேட்பான். (அபூதாவூத்: 4431) ஆக இந்தப் பிரார்த்தனையை நாம் வழமையாக ஓதிக்கொள்வதால் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புப் பெறுவதோடு நம்முடைய மனித எதிரிகளிடமிருந்தும் பாதுகாப்பைப் பெறுகிறோம்.

 

காற்று அல்லாஹ்வின் அருளில் உள்ளதாகும். (சிலநேரம்) அல்லாஹ்வின் அருளாகிய காற்று அருளையே கொண்டுவரும். (சிலநேரம் அல்லாஹ்வின்) வேதனையைக் கொண்டுவரும். எனவே நீங்கள் காற்று வீசுவதைக் கண்டால் அதைத் திட்டாதீர்கள். (மாறாக) அதனுடைய நன்மையை அல்லாஹ்விடம் கேளுங்கள். அதனுடைய தீங்கைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாவல் கோருங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அபூதாவூத்: 4433) எனவே நாம் காற்றைத் திட்டக்கூடாது. மாறாக அதன் நன்மையைக் கேட்பதோடு அதன் தீங்கிலிருந்து பாதுகாப்பைத் தேடிக்கொள்ள வேண்டும்.

 

அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்துள்ள நபிமொழி ஒன்று முஸ்லிம் எனும் நபிமொழித்தொகுப்பு நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் சூறாவளிக் காற்று வீசினால் நபியவர்கள் இந்த துஆவைத்தான் ஓதுவார்கள் எனக் காணப்படுகிறது:

 

اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ

 

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க கைரஹா வ கைர மா ஃபீஹா வ கைர மா உர்சிலத் பிஹி, வ அஊது பிக மின் ஷர்ரிஹா வ ஷர்ரி மா ஃபீஹா வ ஷர்ரி மா உர்சிலத் பிஹி.

பொருள்: இறைவா, இந்தக் காற்றின் நன்மையையும் அதனுள் மறைந்திருக்கும் நன்மையையும் அது எதனுடன் அனுப்பப்பெற்றுள்ளதோ அதன் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும், அதனுள் மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும், அது எதனுடன் அனுப்பப்பெற்றுள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். (முஸ்லிம்: 1640)

 

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ள நபிமொழி ஒன்று தப்ரானீயில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், காற்றுவீசுவதைக் கண்டால் அதனை முன்னோக்கியவாறு முழங்காலிட்டு இவ்வாறு ஓதுவார்கள்: 

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِ هَذِهِ الرِّيحِ وَخَيْرِ مَا أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ، اللَّهُمَّ اجْعَلْهَا رِيَاحًا وَلَا تَجْعَلْهَا رِيحًا، اللَّهُمَّ اجْعَلْهَا رَحْمَةً وَلَا تَجْعَلْهَا عَذَابًا

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க மின் கைரி ஹாதிஹிர் ரீஹி வ கைரி மா உர்சிலத் பிஹி, வ அஊது பிக மின் ஷர்ரிஹா வ ஷர்ரி மா உர்சிலத் பிஹி. அல்லாஹும்மஜ்அல்ஹா ரியாஹன் வலா தஜ்அல்ஹா ரீஹன். அல்லாஹும்மஜ்அல்ஹா ரஹ்மத்தன் வலா தஜ்அல்ஹா அதாபன்.

 

பொருள்: இறைவா, இந்தக் காற்றின் நன்மையையும் இது எதனுடன் அனுப்பப்பெற்றுள்ளதோ அதன் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும், இது எதனுடன் அனுப்பப்பெற்றுள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா, இதை மழைதரும் காற்றாக ஆக்கிவிடு. வேதனை தரும் (வறண்ட) காற்றாக ஆக்கிவிடாதே. இறைவா, இதனை அருளாக ஆக்கிவிடு. வேதனையாக ஆக்கிவிடாதே. (தப்ரானீ: 977)  

 

மனிதர்களுடைய பாவங்களின் காரணமாக மழை பொழிவதை அல்லாஹ் நிறுத்திவிடுகிறான். மனிதர்கள் தம் பாவங்களுக்காக இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு மன்றாடுகிறபோது அவர்களை மன்னித்து மழையைப் பொழியச் செய்கிறான். அம்மழை நீர் மூலம் செடி கொடிகளையும் பயிர்களையும் முளைக்கச் செய்கிறான்.

இது குறித்து நூஹ் அலைஹிஸ்ஸலாம் தம் சமுதாயத்திற்குச் சொன்ன செய்தியை அல்லாஹ் திருக்குர்ஆனில் பதிவுசெய்துள்ளான்: உங்கள் இறைவனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிகவும் மன்னிக்கக்கூடியவன்'' என்றும் கூறினேன். (அவ்வாறு செய்தால், தடைபட்டிருக்கும்) மழையை உங்களுக்குத் தொடர்ச்சியாக அனுப்புவான். பொருள்களையும், மக்களையும் கொடுத்து, உங்களுக்கு உதவிபுரிவான்; உங்களுக்குத் தோட்டங்களையும் உற்பத்தி செய்து, அவற்றில் ஆறுகளையும் ஓடச் செய்வான். (71: 10-12)

அல்லாஹ்வின் அருள்நிறைந்த மழைநீர் மூலமே எல்லாப் பயிர்களும் விளைகின்றன. எல்லா மரங்களும் பூத்துக் குலுங்குகின்றன. அவன்தான் அந்த மழைநீர் மூலம் புவியிலுள்ள எல்லா உயிரினங்களையும் வாழச் செய்கின்றான். அது குறித்துப் பின்வரும் வசனம் கூறுவதைப் பாருங்கள்.

 

மேகத்திலிருந்து மிக பாக்கியமுள்ள மழையை நாம் பொழியச் செய்து, அதனைக் கொண்டு பல சோலைகளையும் (விவசாயிகள்) அறுவடை செய்யும் தானியங்களையும் உற்பத்தி செய்கின்றோம். அடுக்கடுக்காய் (கனிகள்) நிறைந்த குலைகளையுடைய நீண்டு வளரும் பேரீச்ச மரங்களையும் (முளைப்பிக்கச் செய்து), அதனை (நம்) அடியார்களுக்கு உணவாக்கி, அவற்றைக்கொண்டு வறண்டுபோன நிலத்தை நாம் உயிர்ப்பிக்கின்றோம்... (50: 9-11)

 

மழையை நிறுத்திவிட்டால் படைப்பினங்கள் யாவும் சிரமப்படும் என்பதைப் படைத்தோன் அல்லாஹ் அறிந்தே இருக்கின்றான். எனவேதான் மனிதர்கள் பாவமன்னிப்புக் கேட்டுவிட்டால் அதை அவன் ஏற்றுக்கொண்டு அவர்களை மன்னித்து, உடனடியாக மழையைப் பொழிவிக்கத் தயாராகவே இருக்கின்றான். ஆகவே நாம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்பதோடு மழையைப் பொழியச் செய்யுமாறும் கேட்க வேண்டும். அதற்கான துஆவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். இதோ அந்த துஆ:

«اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا، مَرِيئًا مَرِيعًا، نَافِعًا غَيْرَ ضَارٍّ، عَاجِلًا غَيْرَ آجِلٍ

அல்லாஹும்மஸ்கினா ஃகைஸன் முஃகீஸன் மரீஅன் மரீஅன் நாஃபிஅன் ஃகைர ளார்ரின் ஃஆஜிலன் ஃகைர ஆஜில்.

பொருள்: அல்லாஹ்வே! எங்களுக்கு உதவிகரமான, மகிழ்ச்சிகரமான, பசுமையை ஏற்படுத்தக்கூடிய மழையைப் பொழியச் செய்வாயாக! நன்மை தரக்கூடிய நட்டம் ஏற்படுத்தாத விரைவான, தாமதமாகாத மழையைப் பொழியச் செய்வாயாக!  (அபூதாவூத்: 1169)

 

இந்த துஆவின்மூலம் அல்லாஹ்விடம் நாம் பயனுள்ள மழையைக் கேட்கிறோம். அந்த மழை எங்களுக்கு உதவிபுரிவதாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அது யாருக்கும் எந்த இடையூறையும் ஏற்படுத்தாதவண்ணம் இருக்க வேண்டும். அத்தகைய மழையை நீ துரிதமாகத் தர வேண்டும்; தாமதமாக்கிவிடாதே என்றெல்லாம் பல்வேறு பொருள்களை இந்தப் பிரார்த்தனை பொதிந்துள்ளது.

 

நாம் செய்கின்ற துஆவை ஏற்றுக்கொண்டு அல்லாஹ் நமக்கு மழையைப் பொழியச் செய்துவிட்டால், மழை பொழிகின்ற அந்நேரத்தில், «اللهُمَّ أَغِثْنَا، اللهُمَّ أَغِثْنَا، اللهُمَّ أَغِثْنَا

அல்லாஹும்ம அஃகிஸ்னா, அல்லாஹும்ம அஃகிஸ்னா, அல்லாஹும்ம அஃகிஸ்னாஎன்று ஓத வேண்டும்.

பொருள்: அல்லாஹ்வே! மழையை (நன்றாக)ப் பொழியச் செய்வாயாக! அல்லாஹ்வே! மழையை (நன்றாக)ப் பொழியச் செய்வாயாக! அல்லாஹ்வே! மழையை (நன்றாக)ப் பொழியச் செய்வாயாக! (புகாரீ: 1014, முஸ்லிம்: 897)

 

ஒருவேளை மழை நன்றாகப் பொழிந்து, அடைமழையாக மாறி, தொடர்ந்து பெய்துகொண்டிருந்தால் அதுவும் மக்களுக்குச் சிரமம்தான். அதுபோன்று நபியவர்களின் காலத்தில் கடுமழை தொடர்படியாக ஏழு நாள்களாகப் பெய்துகொண்டிருந்தது. அப்போது நபித்தோழர் ஒருவர் வந்து நபியவர்களிடம் முறையிட்டார். அச்சமயத்தில் நபியவர்கள் செய்த துஆ இதோ:

 

«اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالظِّرَابِ، وَبُطُونِ الأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِயு

 

அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா, அல்லாஹும்ம அலல் ஆகாமி வழ்ழிராபி, வ புத்தூனில் அவ்தியத்தி வ மனாபித்திஷ் ஷஜர். 

இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களுக்கு (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே! இறைவா! குன்றுகள், மலைகள், ஓடைகள் விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)'' என்று பிரார்த்தனை செய்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம். (புகாரீ: 1014, முஸ்லிம்: 897)

 

ஆக இவைபோன்ற துஆக்களை நாம் மனனம் செய்துகொண்டு நம்முடைய தேவைக்கேற்ப ஓதி வர வேண்டும். எப்போதும் நாம் இறைவனை நினைவுகூர்ந்தவர்களாகவும் அவனோடு தொடர்புடையவர்களாகவும் இருக்க வல்லோன் அல்லாஹ் அருள்புரிவானாக. 

                                           -பிரார்த்தனை தொடரும்

====================








வெள்ளி, 2 செப்டம்பர், 2022

கருப்பைவாய் புற்றுநோய் எதனால்?

 உங்கள் வீட்டுப் பெண்களுக்கான பதிவு

 

கருப்பைவாய் புற்றுநோய் எதனால்?

-------------------------

கருப்பைவாய் புற்றுநோய் வராமல் தடுப்பதற்காக உள்நாட்டிலேயே முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ள செர்வாவேக் தடுப்பூசி சில மாதங்களில் மிகக் குறைந்த விலைக்குக் கிடைக்க உள்ளதாக ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு ஏற்படுகின்ற கருப்பைவாய் புற்றுநோய்க்கு என்ன காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா? யாரேனும் மருத்துவர் உங்களுக்குச் சொல்லியுள்ளாரா? கடந்த பத்தாண்டுகளாகத்தான் இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தப் புற்றுநோயால் ஆண்டுதோறும் 75 ஆயிரம் பெண்கள் இறப்பதாகத் தகவல் தெரிவிக்கிறது.

நீண்ட ஆய்வுக்குப் பின், பெண்கள் தம் மாதாந்திர உதிரப்போக்கின்போது பயன்படுத்தக்கூடிய நாப்கின்களால்தான் இப்புற்றுநோய் அவர்களுக்கு ஏற்படுகிறது என்று கண்டறிந்துள்ளனர். அத்தோடு வெள்ளைப்படுதல் எனும் நோயும் இதனால் ஏற்படுகிறது. எனவே கருப்பைவாய் புற்றுநோய் அறவே வராமல் தடுக்க வேண்டுமெனில் மாதாந்திர உதிரப்போக்கின்போது நாப்கின்களுக்கு மாற்றாகப் பருத்தித் துணிகளையே பயன்படுத்த வேண்டும்.

பெண்கள் பலர் வேலைக்குச் செல்வதாலும் அவ்வப்போது மாற்ற வேண்டிய தேவை ஏற்படும் என்பதாலும் பயன்படுத்த எளிதாக உள்ள நாப்கின்களையே தேர்வு செய்கின்றார்கள்; அவ்வப்போது துணியை மாற்றிக்கொள்வதைச் சங்கடமாக உணர்கின்றார்கள். ஆனால் நாளடைவில் அதனால் உடல் பாதிக்கப்படுகின்றபோது அது எதனால் ஏற்பட்டது; எதனால் புற்றுநோய் உண்டானது என்பதை அறியாமலேயே இறந்துபோய்விடுகின்றார்கள்.

மனசாட்சியுள்ள மருத்துவர்கள் நினைத்திருந்தால் இதை மக்களுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அத்தகைய மருத்துவர்கள் மிக மிக அரிதாகத்தானே இருக்கின்றார்கள்.  அவர்கள் வெளிப்படையாக எடுத்துச் சொன்னாலும், அவர்களுடைய செய்திகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குமேல் பரவாமல், காணாமல்போய்விடும். விளம்பர உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்களுக்கு எதையுமே ஒரு நடிகரோ ஒரு நடிகையோ திரையில் தோன்றி சொன்னால்தான் நம்புவார்கள்.

கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகள் முதலில் ஒரு பொருளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி விற்பனை செய்து பணத்தை அள்ளுவார்கள். பிறகு அதனால் ஏற்படும் தொல்லைகளுக்கும் நோய்களுக்கும் மருந்தைக் கண்டுபிடித்து, அதையும் விற்றுப் பணத்தை அள்ளுவார்கள். அந்த வகையில் நாப்கின்கள் மூலம் கோடிக்கணக்கான பணத்தை அள்ளியவர்கள், இப்போது அதனால் ஏற்படும் நோய்க்கான மருந்தைக் கண்டறிந்து அதை விற்றுப் பணத்தை அள்ள இருக்கின்றார்கள். ஆகவே அவர்கள் எதை அறிமுகப்படுத்தினாலும் பணத்தை அள்ளுவதே அவர்களின் நோக்கமாகும். நாம்தாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்; எது நமக்கு நல்லது என்பதை உய்த்துணர்ந்து பயன்படுத்த வேண்டும்.

தற்போது வரவிருக்கிற தடுப்பூசியின் விலை ரூ. 200 முதல் 400 வரை இருக்கலாம் என்று சொல்கிறார்கள். மிகக் குறைந்த விலைதான். ஆனால் இதன்மூலம் புற்றுநோய் அறவே வராமல் தடுக்க முடியுமா? இனி அறவே வராது என்று உறுதியாகக் கூற முடியுமா?

அதற்குப் பதிலாக நம் பெண்கள் சிரமம் பாராமல் இயற்கைக்கு மாறினால் எந்தத் தொல்லையுமின்றி நிம்மதியாக வாழலாம். பல்வேறு கம்பெனிகள் விற்பனை செய்கிற இரசாயன நாப்கின்களைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, பருத்தித் துணியையே பயன்படுத்தட்டும். அல்லது தற்போது சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள பருத்தித் துணியால் செய்யப்பட்ட நாப்கின்கள் (Cotton Cloth Sanitary Napkins), இரசாயனக் கலப்பற்ற மூலிகை நாப்கின்கள் (Organic napkins) ஆகியவற்றைப் பயன்படுத்தட்டும்.

எல்லோரும் இயற்கையோடு ஒன்றி, ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதே எமது எண்ணம்.

அன்புடன்

நூ. அப்துல் ஹாதி பாகவி

02 09 2022

04 02 1444

கூடுதல் தகவலுக்கு இங்கே சொடுக்குக:




வியாழன், 25 ஆகஸ்ட், 2022

பிரார்த்தனையின் பலன்கள்-11

  

பிரார்த்தனையின் பலன்கள்-11

-மௌலவி முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி (இமாம், மதீனா மஸ்ஜித்-பட்டினப்பாக்கம், சென்னை)

---------------------

தொழுகைக்குப்பின்

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் பல்வேறு பிரார்த்தனைகளைச் செய்துள்ளார்கள். ஆனால் இன்றைய மக்களுள் பெரும்பாலோர் தொழுது முடித்ததும் அவசர அவசரமாகப் பள்ளியைவிட்டுப் புறப்பட்டுச் செல்கின்றார்கள். அவர்கள் தொழுத தொழுகையில் முழுமையான அமைதி கிடைத்ததா என்றுகூட அவர்களுக்குத் தெரியாது. தம்முடைய நாட்டங்களையும் தேவைகளையும் நிறைவேற்றித் தருமாறு படைத்த அல்லாஹ்விடம் கெஞ்சிக் கேட்க வேண்டும் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை; அதற்காக அவர்கள் நேரம் ஒதுக்குவதே இல்லை. 

 

கடமையான தொழுகையை முடித்தபின் பல்வேறு பிரார்த்தனைகளையும் திக்ருகளையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டுள்ளார்கள்; ஓதியுள்ளார்கள். அவற்றை நாம் மனனம் செய்துவைத்துக்கொண்டு நம்மால் இயன்ற அளவு நாள்தோறும் ஓதிவர வேண்டும். அதைத் தெரிவிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.    

 

முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எனது கையைப் பிடித்து, “முஆதே அல்லாஹ்வின் மீதாணையாக நான் உன்னை நேசிக்கின்றேன். அல்லாஹ்வின் மீதாணையாக நான் உன்னை நேசிக்கின்றேன். முஆதே ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும்

اَللَّهُمَّ أَعِنِّيْ عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ

 

அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரிக வஷுக்ரிக வஹுஸ்னி இபாததிக (இறைவா உன்னை நினைப்பதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் அழகிய முறையில் உன்னை வணங்குவதற்கும் எனக்கு உதவிபுரிவாயாக) என்று கூறுவதை நீ விட்டுவிடாதே என உனக்கு நான் வலியுறுத்துகிறேன்என்று கூறினார்கள். (அபூதாவூத்: 1301)

 

அல்லாஹ்வை நினைவுகூர்தல், அவனுக்கு நன்றி செலுத்துதல், அவனை நல்ல முறையில் வழிபடுதல் ஆகியவற்றை நபியவர்கள் கேட்டுள்ளார்கள். நம்முடைய ஒவ்வொரு கணமும் பொழுதும் நம்மைப் பரிபாலித்துப் பாதுகாக்கின்ற இறைவனுக்கு நாம் நன்றி செலுத்துபவர்களாக இருக்க வேண்டும். அந்த நன்றியுணர்வைத்தான் இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறான். நாம் அவனுக்கு நன்றி செலுத்துவோராக இருந்தால் அவன் நமக்கு மேன்மேலும் வழங்குவதாகக் கூறியுள்ளான்: நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால் நிச்சயமாக நான் உங்களுக்கு (என் அருட்கொடைகளை) அதிகப்படுத்துவேன்.” (14: 7)

 

அவ்வாறு நன்றியுடையோராக இருப்பதும் இறைவனிடமிருந்தே நமக்குக் கிடைக்க வேண்டிய பெரும்பாக்கியமாகும். எனவேதான் தொழுது முடித்ததும் அவனிடமே அத்தகைய பாக்கியத்தைக் கேட்கிறோம். மேலும் நல்ல முறையில் அவனை வழிபடுவதையும் அவனிடமே கேட்கிறோம். அவனை நல்ல முறையில் வழிபடுகின்ற பாக்கியத்தையும் அவனே நமக்கு வழங்க வேண்டும். அவனுடைய கருணையின்றி அவனை நாம் நல்ல முறையில் வணங்கிவிட முடியாது.

 

ஸவ்பான் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகையை முடித்துவிட்டால், மூன்று தடவை அஸ்த்தஃக்ஃபிருல்லாஹ் (அல்லாஹ்விடம் நான் பாவமன்னிப்புத் தேடுகிறேன்) என்று கூறுவார்கள். பின்னர்,

اَللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ

அல்லாஹும்ம அன்த்தஸ் ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த்த யாதல் ஜலாலி வல்இக்ராம் (பொருள்: (இறைவா, நீ சாந்தியளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது. வலிமையும் மேன்மையும் உடையவனே! நீ சுபிட்சமிக்கவன்) என்று கூறுவார்கள். (இப்னுமாஜா: 918)

 

அல்லாஹ்தான் மக்களுக்கு அமைதியையும் நிம்மதியையும் வழங்குகிறான். அவனிடமிருந்தே அவை கிடைக்கப்பெறுகின்றன. எனவே அவனிடமே நாம் மனஅமைதியையும் நிம்மதியையும் கேட்க வேண்டும். அதையே ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் கேட்பதால் நமக்கு மனஅமைதி கிடைக்கிறது. அந்த மனஅமைதிக்காகத்தான் நாம் அவனை ஒவ்வொரு நாளும் ஐவேளை தொழுது வணங்குகிறோம். எனவே இந்தக் கீர்த்தனையை (திக்ரை) நாம் மனனம் செய்துகொண்டு ஓதி வரவேண்டும்.

 

உம்முஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்துள்ளார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதிகாலைத் தொழுகையை முடித்துவிட்டு, ஸலாம் கூறியபின்,

اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا

 

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க இல்மன் நாஃபிஅவ் வரிஸ்கன் தய்யிபவ் வஅமலம் முத்தகப்பலா (பொருள்: இறைவா! நான் உன்னிடம் பயனுள்ள கல்வியையும், தூய்மையான வாழ்வாதாரத்தையும், ஏற்றுக்கொள்ளத்தக்க செயல்பாடுகளையும் கேட்கிறேன்) என்று கூறுபவர்களாக இருந்தார்கள். (இப்னுமாஜா: 915)

 

இதில் மிக முக்கியமான மூன்று விஷயங்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டுள்ளார்கள். பயனுள்ள கல்வி, தூய்மையான வாழ்வாதாரம், ஏற்றுக்கொள்ளத்தக்க செயல்பாடு ஆகியவையே அவை. இம்மூன்றும் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதவை ஆகும். ஒவ்வொருவரும் கேட்க வேண்டியவை ஆகும்.

 

பயனுள்ள கல்வியைக் கற்பதன்மூலம் நன்மை; அதனைக் கற்பிப்பதன் மூலம் நன்மை; அதை மக்கள் மத்தியில் பரப்புவதன்மூலம் நன்மை. இப்படிப் பலவிதமான நன்மைகளை உள்ளடக்கிய பயன்மிகு கல்வியை நபியவர்கள் கேட்டுள்ளார்கள். எனவே நாமும் பயனுள்ள கல்வியை இறைவனிடம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். 

 

இரண்டாவது தூய்மையான வாழ்வாதாரம்மிக முக்கியமானது. எப்படி வேண்டுமானாலும் சம்பாதித்து எதை வேண்டுமானாலும் சாப்பிடுதல் எனும் தீய பழக்கத்திலிருந்து விலகி, நியாயமாகச் சம்பாதித்து, தூய்மையான உணவை மட்டுமே உண்ண வேண்டும் என்ற நல்லெண்ணத்தை மனத்தில் பதிய வைத்துக்கொள்ளும் பொருட்டு தூய்மையான வாழ்வாதாரத்தை அல்லாஹ்விடம் கேட்டுள்ளார்கள். அதை நமக்கான பாடமாக விட்டுச் சென்றுள்ளார்கள். நாமும் அத்தகைய தூய்மையான வாழ்வாதாரத்தை அல்லாஹ்விடம் கேட்கும்போது நமக்கு அவன் தூய்மையான வாழ்வாதாரத்தை வழங்குவான். தூய்மையான உணவை உண்பதால் நற்சிந்தனைகளும் நல்லெண்ணங்களும் நமக்குள் ஏற்படுவதோடு இறையச்சமும் பெருகும். 

 

 

ஏற்றுக்கொள்ளத்தக்க செயல்பாடுமுற்றிலும் முக்கியமானதாகும். ஏனெனில் நாம் பல்வேறு முயற்சிகள் செய்து ஏராளமான நல்லறங்களைச் செய்கிறோம். அவை அல்லாஹ்விற்காகவே செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும். அவற்றை அவன் ஏற்றுக்கொண்டு நமக்கு அவற்றிற்கான நற்கூலியை மறுமையில் முழுமையாகத் தரவேண்டும். மாறாக நம்முடைய செயல்பாடுகள் அல்லாஹ்விடம் ஏற்கப்படாமல் போய்விட்டால் நாளை மறுமையில் நாம் நன்மை ஏதும் இல்லாதவர்களாக நிற்கவேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுவிடும். எனவே அல்லாஹ்வே எங்களின் நல்லறங்களை ஏற்றுக்கொள்வாயாகஎன்று நாம் ஒவ்வொரு நாளும் அவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.  

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது: இரண்டு நற்குணங்கள் உள்ளன. அவ்விரண்டையும் பின்பற்றி நடப்பவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருக்கமாட்டார். அவ்விரண்டும் எளிதானது.  (ஆனால்) அவற்றைச் செயல்படுத்துபவர் குறைவு. ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும், பத்துத் தடவை ஸுப்ஹானல்லாஹ், பத்துத் தடவை அல்லாஹு அக்பர், பத்துத் தடவை அல்ஹம்து லில்லாஹ் என்று கூறவேண்டும். (அதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் கைவிரலில் அதை எண்ணிக்காட்டியதை நான் பார்த்தேன். ஆக, அவற்றை நாவில் சொல்ல (ஐந்து தொழுகைகளுக்கும் சேர்த்து) நூற்றைம்பது தடவையாகும். தராசிலோ ஆயிரத்து ஐந்நூறு தடவையாகும்... (நூல்: இப்னுமாஜா: 916)

 

இந்த நபிமொழியின் அடிப்படையில் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் பத்துப் பத்துத் தடவை ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர் கூற வேண்டும் என்பதை நாம் அறிகிறோம். மற்றொரு நபிமொழியின் அடிப்படையில் மேற்கண்ட திக்ருகள் ஒவ்வொன்றையும் முப்பத்து மூன்று தடவை கூற வேண்டுமெனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆக இந்த நபிமொழியையும் நம்முள் பெரும்பாலோர் ஒவ்வொரு நாளும் செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் பின்வரும் பிரார்த்தனையைச் செய்துள்ளார்கள்.

முஃகீரா பின் ஷுஅபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் முன்னாள் அடிமை வர்ராத் ரஹிமஹுல்லாஹ் அறிவித்துள்ளார்கள்: முஃகீரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முஆவியா பின் அபீசுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (தொழுகையை முடித்து) ஸலாம் உரைத்தால் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும்,

لاَ إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْـمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ، اَللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الجَدُّ.

லாஇலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஉதைத்த வலா முஉத்திய லிமா மனஅத்த வலா யன்ஃபஉ தல் ஜத்தி மின்கல் ஜத்து.

 

(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு யாதோர் இணையுமில்லை; அவனுக்கே அரசாட்சி; அவனுக்கே புகழ் யாவும்; அவன் எல்லாப் பொருளின்மீதும் ஆற்றல்மிக்கவன். இறைவா! நீ கொடுக்க நினைத்ததைத் தடுப்போர் யாருமில்லை; நீ தடுக்க நினைத்ததைக் கொடுப்போர் யாருமில்லை; முயற்சியுடையோரின் எந்த முயற்சியும் உன்னையன்றி எப்பயனுமளிக்காது) என்று ஓதுபவர்களாக இருந்தார்கள். (நூல்: புகாரீ: 844)

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடமையான தொழுகையை முடித்ததும் மேற்கண்ட பிரார்த்தனைகளை ஓதக் கற்றுக்கொடுத்துள்ளதன் மூலம், ஒவ்வொருவரும் தத்தம் இறைநம்பிக்கையைப் புதுப்பித்துக்கொள்வதோடு, அல்லாஹ்வின் ஆற்றலை மீறி எதுவும் நடந்துவிடாது என்ற நம்பிக்கையையும் மனதில் பதியவைத்துக்கொள்ள வழிகாட்டியுள்ளார்கள். எனவே நம்முள் ஒருவர் இந்தப் பிரார்த்தனையைச் செய்கின்றபோது அவரின் இறைநம்பிக்கை மேன்மேலும் வலுப்படுகிறது; அது மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. அத்தகைய இறைநம்பிக்கை தொழுகின்ற ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஆணித்தரமாகப் பதிய வேண்டும்.

 

மேற்கண்ட பிரார்த்தனையின் உட்கருத்து அல்குர்ஆனில் காணப்படுகிறது. அல்லாஹ் மக்களுக்குத் திறக்கின்ற எந்த அருளையும், அதைத் தடுத்து நிறுத்துகின்றவர் யாருமில்லை. அவன் தடுத்து நிறுத்துவதை அதன் பிறகு அனுப்புபவன் யாருமில்லை. (35: 2)

 

ஆக இவ்வாறு பல்வேறு திக்ருகளை நபியவர்கள் ஓதியுள்ளார்கள். நாமும் அவற்றை ஓதி நம்முடைய இறைநம்பிக்கையை வலுப்படுத்திக்கொள்வோமாக.

=================