சனி, 11 செப்டம்பர், 2021

நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

 Dr. A.P. முகமது அலி IPS (R) அவர்கள் எழுதிய

இளைஞனே உன் இலக்கு என்ன?

நூல் வெளியீட்டு விழா

 

நாள்: 12.09.2021 ஞாயிறு  நேரம்: மாலை 7 மணியளவில் இன் ஷாஅல்லாஹ்

இடம்: சென்னை பேலஸ், எண்: 107 (பு.எண்: 221) மூக்கர் நல்லமுத்து தெரு முனை, (சென்ட்ரல் பேங்க் பிரான்ச் அருகில்), சென்னை-1

கிராஅத் & நிகழ்ச்சித் தொகுப்பு

மௌலவி காரீ Dr. நூ. அப்துல் ஹாதி பாகவி Ph.D.

(மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர்) 

 

தலைமையேற்று நூல் வெளியிடுபவர்:

M. அப்துல் ரஹ்மான் M.A., Ex. M.P.

சேர்மன், தமிழ்நாடு வக்ஃப் போர்டு, சென்னை-1

 

நூல் பிரதிகள் பெற்று, வாழ்த்துரை வழங்குவோர்:

பேரா. டாக்டர் சேமுமு. முகமதலி Ph.D.

பொதுச் செயலாளர் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்

இயக்குநர் எஸ்-ஐஏஎஸ் அகாடமி, கோடம்பாக்கம், சென்னை.

 

திருமதி பாத்திமா முஸப்பர் B.Com., B.A. (Arabic)

(D/o சிராஜுல் மில்லத் மர்ஹூம் ஆ.கா.அ. அப்துஸ் ஸமது)

வக்ஃப் போர்டு மெம்பர்

 

பேரா. டாக்டர் ஹாஜா கனி Ph.D.

தலைவர் தமிழ்த்துறை, காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி, மேடவாக்கம், சென்னை. பொதுச்செயலாளர் த.மு.மு.க.

 

நன்றியுரை & ஏற்புரை

Dr. A.P. முகமது அலி IPS (Rtd) Ph.D.

நூலாசிரியர்

 

 

குறிப்பு: வாய்ப்புள்ளோர் வருகை தருமாறு மிக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

 

அன்புடன்

நூ. அப்துல் ஹாதி பாகவி




புதன், 18 ஆகஸ்ட், 2021

மனக்கோட்டம் நீக்குவோம்!

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
------------------------------------ 
கோட்டம் என்றால் கோணல் என்று பொருள். மனதில் தவறான எண்ணங்கள், கோணல் சிந்தனைகள் ஏற்பட்டால் அதனை மனக்கோட்டம் என்று சொல்வர். பேசும் பேச்சில் தவறான வார்த்தைகள், நெறிதவறிய சொற்கள் வெளிப்பட்டால் அதனைச் சொற்கோட்டம் என்பர்.

 கோணல் என்ற வார்த்தையை உயர்ந்தோன் அல்லாஹ் திருக்குர்ஆனில் பயன்படுத்தியுள்ளான். 
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன்தான் தன்னுடைய அடியார்மீது இவ்வேதத்தை இறக்கிவைத்தான். அதில் அவன் எவ்விதக் கோணலையும் ஆக்கவில்லை. அதனை நேர்மையானதாக (அவன் ஆக்கினான்). (18: 1-2)


இஸ்லாமிய மார்க்கம் நேர்மையையும் நேரான பாதையையுமே காட்டுகிறது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மனித குலத்திற்கு நேரிய வழியைத்தான் காட்டுகின்றார்கள். நேர்மையாகப் பேசவும் நேர்மையாக உழைக்கவும் நேர்மையாகத் தீர்ப்பளிக்கவும் கட்டளையிடுகின்றார்கள். தவறான பாதை செல்வதையும் தவறான வார்த்தைகள் பேசுவதையும் முறைதவறி உழைப்பதையும் தடை செய்கின்றார்கள்.

 
"இறைநம்பிக்கைகொண்டோரே அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். நீங்கள் சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்'' (33: 70) என்று திருக்குர்ஆன் கூறுகிறது. 
"அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைகொண்டவர் பேசினால் நன்மையைப் பேசட்டும். அல்லது (வாய்மூடி) மௌனமாக இருந்துவிடட்டும்'' (புகாரீ: 6018) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

 
நேர்மையாகச் சம்பாதிக்க வேண்டும்; உண்மையே பேச வேண்டும்; வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்; வாங்கிய கடனை உரிய முறையில் திருப்பிச் செலுத்த வேண்டும்; பதுக்கல் செய்யக்கூடாது; ஏமாற்றக்கூடாது; மோசடி செய்யக்கூடாது; பொய் பேசக்கூடாது; அளவு நிறுவையில் குறைத்தல் கூடாது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழங்கியுள்ளார்கள். இவை அனைத்தும் மனக்கோட்டம் நீக்கி, சீரான வாழ்க்கைக்கு வழிகாட்டுபவையாகும். 


கோணல் புத்தியுடையோர் எதையும் கோணலாகவே சிந்திப்பார்கள். கோணலான பாதையிலேயே செல்வார்கள். கோணல் புத்தியுடைய வியாபாரிகள் கோணலாகச் சிந்தித்து மோசடி செய்து, ஏமாற்றிச் சம்பாதிக்க நினைப்பார்கள். இன்றைய நவீன உலகில் வியாபாரிகள் பலர் கோணல் புத்தியுடையவர்களாகவே காணப்படுகின்றார்கள்.


 அதிலும் குறிப்பாக ஆள்லைன் வியாபாரிகள் பெரும்பாலும் மக்களை ஏமாற்றிப் பிழைக்கத் திட்டம் தீட்டுகிறார்கள். எந்தெந்த வழிகளிலெல்லாம் மக்களை ஏமாற்றலாம் என்று மணிக்கணக்கில், நாள்கணக்கில் யோசித்துச் செயல்படுகின்றார்கள். 
சான்றாக ஒரு பொருள் குறித்த விவரப்படங்கள், காணொலிக் காட்சி, விவரக் குறிப்பு எல்லாமே யாரையும் எளிதில் கவரும் வண்ணம் இணையதளத்தில் வெளியிடுவார்கள். அந்தக் காணொலிக் காட்சியைப் பார்க்கும் பெரும்பாலோர் அந்தப் பொருளை வாங்கிட ஆர்டர் கொடுத்துவிடுவார்கள்.

பொருள் வந்தபின் கையெழுத்துப்போட்டு, பணத்தைச் செலுத்தி, அப்பொருளைப் பெற்றுக்கொண்டபின், பிரித்துப் பார்த்தால் நாம் கேட்டது ஒன்றாகவும் அவர்கள் அனுப்பியது வேறொன்றாகவும் இருக்கும். நாம் ஆசைப்பட்டு ஆர்டர் கொடுத்த பொருள் அதனுள் இருக்காது. இதுதான் ஆன்லைன் மோசடி.

    
கோணல் புத்தியுடைய வியாபாரிகள் நாம் வாங்கும் பொருள்களின் எடையைக் குறைத்து, குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைப்பார்கள். இது காலம் காலமாக நடைபெற்று வருகின்ற மனக்கோட்டம்தான். இறைத்தூதர் ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் தம் சமுதாய மக்களுக்கு அறிவுறுத்திய நல்லுரை குறித்துத் திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:

 
என்னுடைய மக்களே! அளவையும் நிறுவையையும் நீதியாக முழுமைப்படுத்தி வழங்குங்கள். மனிதர்களுக்கு(க் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருள்களைக் குறைத்துவிடாதீர்கள். பூமியில் குழப்பம் செய்து கொண்டு அலையாதீர்கள். நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் (உங்கள் தொழிலில் இலாபகரமாக) அல்லாஹ் மீதப்படுத்துவதே உங்களுக்கு மிக்க மேலானதாகும். நான் உங்களைக் கண்காணிப்பவனல்லன்; (அல்லாஹ்தான் உங்களைக் கண்காணிப்பவன். ஆகவே, அவனுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள்)'' என்று கூறினார். (11: 85-86)


மேலும் அல்லாஹ் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சமுதாய மக்களை எச்சரிக்குமுகமாகப் பின்வருமாறு கூறுகின்றான்: 
அளவில் மோசம் செய்பவர்களுக்குக் கேடுதான். அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால், நிறைய அளந்து கொள்கின்றனர். மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுத்தாலும் அல்லது நிறுத்துக் கொடுத்தாலும் குறைத்து (அவர்களை நஷ்டப்படுத்தி) விடுகின்றனர். மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா? (83: 1-5) 


இறைத்தூதர் ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலம் முதல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலம் வரையுள்ள சமுதாய மக்கள் அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்தே வியாபாரம் மேற்கொண்டிருக்கின்றார்கள் என்பதைத் திருக்குர்ஆன் மூலம் அறிகிறோம். அந்த மனக்கோட்டம் இன்றுவரை தொடர்கிறது என்பது மட்டுமல்ல மிகவும் அதிகரித்துள்ளது என்பது கசப்பான உண்மை. 


வியாபாரத்தில் மிகப்பெரும் அளவில் மோசடி செய்வோர் தங்க வியாபாரிகள்தாம் என்றால் மிகையில்லை. ஆம். நாம் ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் வாங்கினால் அதில் 3 கிராம் செம்புக்குத் தங்கத்திற்கான பணத்தைக் கொடுக்க வேண்டியுள்ளது. அதாவது ஒரு பவுன் தங்கச் சங்கிலிக்கு 1.5 கிராம் செம்பு சேர்த்தால்தான் நகை செய்ய முடியும். 8 கிராம் தங்கத்தில் 1.5 செம்பு போக 6.5 கிராம்தான் தங்கம். பிறகு சேதாரம் என்ற பெயரில் மேலும் 1.5 கிராம் செம்பைத் தங்கத்தின் விலைக்கு பில்போட்டு விற்கின்றார்கள். ஆக 6.5 கிராம் தங்கமும், 3 கிராம் செம்பும் கொண்ட ஒரு பவுன் தங்கச் சங்கிலியில் (மொத்தம் 9.5) 3 கிராம் செம்பைத் தங்கத்தின் விலைக்கே ஏமாற்றி விற்கிறார்கள். 
ஆகவே இவர்கள்தாம் மிகப்பெரும் கோணல்புத்தியுடையவர்கள்; மோசடிக்காரர்கள் ஆவர். 


கோணல்புத்தியுடையவர்கள் குறுக்கு வழியில் பொருளீட்ட முனைகின்றார்கள். மக்கள் சாப்பிடுகிற உணவுப் பொருள்களில் கலப்படம் செய்து விற்பனை செய்கிறார்கள். சிறுவர் சிறுமியர் சாப்பிடுகிற உணவுப் பொருள்களிலும் தின்பண்டங்களிலும்கூட இரக்கமின்றிக் கலப்படம் செய்கிறார்கள். அதனால் சிறுவர்-சிறுமியர் உடல்ரீதியாகப் பாதிக்கப்படுவார்களே என்றெல்லாம் கவலைப்படுவதில்லை.

 
எல்லாத் தளங்களிலும் கோணல்புத்தியுடையோர் உள்ளனர். சமய வழிகாட்டிகளாகத் திகழ்வோர், நோயிலிருந்து மனிதர்களைக் காக்கும் மருத்துவர்கள், பிள்ளைகளுக்கு நல்வழிகாட்டியாகத் திகழும் ஆசிரியர்கள், இணையதளச் சேவைகளை வழங்குவோர், வங்கியில் பணிபுரிவோர், திருமண ஒருங்கிணைப்பாளர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகள் உள்பட அனைத்து வகையினரிலும் மனக்கோட்டம் கொண்டோர் உள்ளனர்.


மனக்கோட்டம் உடையோர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில்லை. கடன் வாங்கும்போதே எப்படியாவது ஏமாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்திலேயே வாங்குகின்றனர். பிறகு கடன் பெற்ற வங்கியை அல்லது தனி மனிதரை ஏமாற்றிவிடுகின்றனர். அல்லது விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் ஜோஷி முதலானோரைப் போல் வெளிநாடுகளுக்குச் சென்று தஞ்சமடைந்துவிடுகின்றனர்.


 
வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல்வேறு தருணங்களில் கூறியுள்ளார்கள். அவற்றுள் ஒன்று: யார்  கடனைத் திருப்பிச் செலுத்த எண்ணம்கொண்டாரோ அவருக்கு அல்லாஹ்வின் உதவி உள்ளது என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: முஸ்னத் அபீதாவூத்: 1628) 

அதாவது கடனை வாங்குகிறபோதே அதைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நல்லெண்ணம் கொள்ள வேண்டும். அந்த எண்ணம் உடையோருக்கு அதை நிறைவேற்றுவதற்கான நல்வாய்ப்பை அல்லாஹ் உருவாக்குகிறான்; உதவி செய்கிறான். மாறாக எப்படியாவது ஏமாற்றிவிட வேண்டும் என்ற மனக்கோட்டம் இருந்தால் அதை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்காமலேயே போய்விடும். 


பிறரைப் பற்றி நல்லதே எண்ண வேண்டும் என்பது நபியவர்களின் நல்லுரையாகும். தம் சமுதாய மக்கள் பிறரைப் பற்றித் தவறாக எண்ணக்கூடாது என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விடைபெறும் ஹஜ்ஜின்போது தவாஃப் செய்தார்கள். அப்போது அவர்கள், "உன்னுடைய மணம்தான் என்னே! உன்னுடைய வாசனைதான் என்னே! உன்னுடைய கண்ணியம் எவ்வளவு மகத்தானது! உன்னுடைய மதிப்பு எவ்வளவு பெரியது! எவனுடைய கையில் முஹம்மதின் ஆன்மா இருக்கிறதோ அவன்மீது சத்தியமாக! ஓர் இறைநம்பிக்கையாளரின் கண்ணியம் அல்லாஹ்விடம் உன்னுடைய கண்ணியத்தைவிட மகத்துவம் வாய்ந்தது. அவருடைய பொருளும் அவருடைய உயிரும் (உயர்வானவை). நாம் அவருக்கு நன்மையைத் தவிர எதையும் எண்ணமாட்டோம்'' என்று கூறினார்கள்.  (நூல்: இப்னுமாஜா: 3922)


அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:  இறைநம்பிக்கைகொண்டோரே அதிகமான (கற்பனை) எண்ணங்களைவிட்டுத் தவிர்ந்துகொள்ளுங்கள். திண்ணமாக எண்ணங்களுள் சில பாவம் ஆகும்.  (49: 12)


ஓர்  இறைநம்பிக்கையாளரைப் பார்த்தால் அவரைப் பற்றி நல்லவிதமாகத்தான் எண்ண வேண்டுமே தவிர தவறாக எண்ணக்கூடாது என்பதையே நபியவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அல்லாஹ்வும் அதையே வலியுறுத்துகின்றான்.


 சிலவேளைகளில் சிலரின் மனக்கோட்டம் பாவமாக ஆகிவிடுகின்றது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். 
ஆகவே நாம் நம் மனங்களிலுள்ள கோட்டங்களைக் களைந்து நல்லெண்ணத்தோடு வாழ்வோம்.  பல்வேறு தளங்களில் உள்ள கோணல்களைக் களைந்து நேரிய பாதையில் சீரிய சிந்தனையோடும்  நல்லெண்ணத்தோடும் வாழ அல்லாஹ் அருள்வானாக. 
===========

சனி, 19 ஜூன், 2021

வேண்டாம் தொடர்பிலா விஷயம்

வேண்டாம் தொடர்பிலா விஷயம் 
அரபி: டாக்டர் அப்துர் ரஹ்மான் அல்அரீஃபீ-இஸ்தம்திஉ பி ஹயாத்திக்க
தமிழில்: டாக்டர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி-வாழ்க்கையை அனுபவி
------------

முஸ்லிமான ஒருவருடைய நற்குணங்களுள் ஒன்று அவருக்குத் தொடர்பில்லாததை விட்டுவிடுவது ஆகும். உண்மையும் தூய்மையும் கொண்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய திருவாயிலிருந்து இதை நீ கேட்பது எவ்வளவு அழகானது! ஆம், "ஒருவன் தனக்குத் தொடர்பில்லாததை விட்டுவிடுவது நல்லது.''

மக்கள், தமக்குத் தொடர்பில்லாத விஷயங்களில் குறுக்கிடுவதன்மூலம் உன்னைக் கவலைப்படுத்துகின்ற தொந்தரவு கொடுக்கின்ற எத்தனையோ பேர் இருக்கின்றனர். அவர்கள் உன்னுடைய கைக்கடிகாரத்தைக் கவனிக்கின்றபோது,  "நீ இதை எவ்வளவுக்கு வாங்கினாய்?'' என்று கேட்டு உன்னைக் கவலைப்படுத்துகிறார்கள்.

"இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது'' என்று நீ கூறுகிறாய். அதன்பின் அவர்கள், "அன்பளிப்பா? யாரிடமிருந்து?'' என்று கேட்கலாம். "ஒரு நண்பரிடமிருந்து'' என்று நீ கூறுகிறாய்.

"பல்கலைக் கழகத்திலுள்ள உன்னுடைய நண்பரா? அல்லது உன்னுடைய வசிப்பிடத்தில் இருப்பவரா?அல்லது வேறு எங்கிருப்பவர்?'' என்று அவர் தொடரலாம். "ஆம், பல்கலைக்கழகத்தில் உள்ள என்னுடைய நண்பர்'' என்று நீ பதிலளிக்கிறாய். "சரி, ஆனால் என்ன தருணம்?'' என்று அவர் வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்.

"ஆம். பல்கலைக்கழக நாள்களில் ஒரு தருணம்'' என்று நீ பதிலளிக்கிறாய்.  அவர் அதன் பின், "சரி, ஆனால் குறிப்பாக என்ன தருணம்? பட்டமளிப்பா? அல்லது நீ சுற்றுலா சென்றிருந்தபோதா? அல்லது வேறு ஏதாவது தருணமா?'' என்று கேட்கிறார். 

அவர் உன்னிடம் முற்றிலும் மதிப்பற்ற விஷயங்களைப் பற்றித் தொடர்ந்து கேட்கிறார். அல்லாஹ்வின்மீது ஆணையாக, நான் உன்னிடம் கேட்கிறேன். நீ அவரிடம், "உனக்குத் தொடர்பில்லாத விஷயத்தில் தலையிடாதே'' என்று சத்தமாகக் கூறத் தோன்றுகிறதல்லவா?  அவர் உன்னிடம் சங்கடம் நிறைந்த கேள்விகளைப் பகிரங்கமாகக் கேட்பதன் மூலம் உன்னைத் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளினால் இன்னும் மோசமாக இருக்குமல்லவா?

ஒருமுறை நான் என்னுடைய நண்பர்களுடன் ஒரு கூட்டத்தில் இருந்ததை நினைவுகூர்கிறேன். மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு என்னுடைய நண்பர்களுள் ஒருவருடைய கைப்பேசி ஒலித்தது. 

அவர் எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தார். அவர் கைப்பேசியில் "ஆம்'' என்று பதிலளித்தார். எதிர்முனையில் அவருடைய மனைவி  திட்டிக்கொண்டிருந்தார். "ஹலோ நீ எங்கிருக்கிறாய், கழுதையே?''  அவருடைய குரல் மிகவும் கணீரென்றிருந்ததால் அவர்களுடைய உரையாடலை நன்றாகக் கேட்க முடிந்தது.  "நான் நன்றாக இருக்கிறேன்; அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பானாக'' என்று அவன் கூறினான். அவன் அவளிடம் அவளுடைய குடும்பத்தாரிடம் அழைத்துச் செல்வதாக வாக்குறுதி தந்துவிட்டு எங்களுடன் தங்கிவிட்டதைப்போல காணப்பட்டது. 

அவனுடைய மனைவி உண்மையாகவே கோபமாக இருந்தாள். "அல்லாஹ் உன்னைப் பாதுகாக்கமாட்டானாக;  நான் உனக்காகக் காத்துக்கொண்டிருக்கிற சமயத்தில் நீ உன்னுடைய நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கிறாயா?... நீ ஓர் எருமை!'' என்றெல்லாம் அவள் கூறினாள்.
 
"அல்லாஹ் உன்மீது அன்பு காட்டுவானாக;  நான் இஷாவிற்குப் பிறகு உன்னிடம் வருகிறேன்'' என்று கூறினான்.

அவனுடைய பேச்சு அவளுடைய பேச்சுடன் சரியாக ஒத்துப் போகவில்லை என்பதை நான் உணர்ந்தேன். அவன் தன்னைத்தானே தர்மசங்கடத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இவ்வாறு பேசிக்கொண்டிருந்தான் என்பதை அதன் பிறகு புரிந்துகொண்டேன்.

அவன் தன்னுடைய அழைப்பைப் பேசி முடித்தான்.  நான் அவர்கள் இருப்பதைப் பார்த்து, அவர்களுள் யாராவது அவனிடம், "கைப்பேசியில் யார்? உன்னிடமிருந்து அவர் என்ன வேண்டுகிறார்? அந்த உரையாடலுக்குப் பிறகு உன்னுடைய முகம் ஏன் மாறியது?'' என்று கேட்பார்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அல்லாஹ் அவன்மீது கருணை காட்டினான். எவரும் தமக்குத் தொடர்பில்லாத விஷயத்தில் தலையிடவில்லை.

இதேபோன்று, நீ ஒரு நோயாளியை நலம் விசாரிக்கச் சென்றால், அவரிடம் அவருடைய நோயைப் பற்றிக்கேள். அவர், "அல்ஹம்து லில்லாஹ், பெரிதாக ஒன்றுமில்லை; சிறிய நோய்தான்'' என்று சந்தேகமாகப் பதிலளிக்கலாம். அதற்கு அவரிடம் நீ, "நான் வருந்துகிறேன்; உங்களுடைய இந்த வாக்கியம் நான் கேட்ட கேள்விக்கு வெளிப்படையான பதில் இல்லையே. உண்மையில் என்ன வியாதி? தயவு செய்து எனக்கு அதைத் தெளிவுபடுத்துங்கள்'' என்றெல்லாம் விவரமான கேள்விகளை விடாப்பிடியாகக் கேட்பதன் மூலம் அவரைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தாதே. அவரைச் சங்கடப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

முஸ்லிமான ஒருவருடைய நற்குணங்களுள் ஒன்று அவருக்குத் தொடர்பில்லாததை விட்டுவிடுவது ஆகும். நான் சொல்ல முனைவது என்னவென்றால், "எனக்கு மூலம் இருக்கிறது'' அல்லது "எனக்கு அந்தரங்க இடத்தில் காயம் இருக்கிறது'' என்று அவர் உன்னிடம் சொல்வதற்காக உண்மையில் நீ காத்துக் கொண்டிருக்கிறாயா?  நீண்ட நேரம் அவர் உன்னிடம் மறைவான பதில் அளித்தால், அவரிடம் விவரங்களைக் கேட்பதற்கு எந்த அவசியமுமில்லை. நோயாளியிடம் அவருடைய நோயைப் பற்றிக் கேள்வி கேட்கக்கூடாது என்று நான் கூறவில்லை. நான் கூறுவது என்னவென்றால் ஒருவர் மற்றவருடைய நோயைப் பற்றி விவரமான கேள்விகளைக் கேட்கக் கூடாது என்றுதான் கூறுகிறேன். 

இதைப் பற்றி மற்றோர் உதாரணம். அதாவது ஒரு மக்கள் கூட்டத்தில் அனைவரின் முன்னால் ஒருவர் ஒரு மாணவனை அழைத்து சத்தமாக, "அஹ்மதே நீ தேர்வாகிவிட்டாயா?'' என்று கேட்கிறார். அஹ்மத் "ஆம்'' என்று கூறுகிறான். "எத்தனை சதவிகிதம்? என்ன தரம்?'' என்று கேட்கிறார்.

அவர் உண்மையாகவே அவனைப் பற்றி அக்கறை கொண்டிருந்தால், அவன் தனிமையில் இருக்கும்போது அவர் அவனிடம், "என்ன சதவிகிதம்? ஏன் நீ மறுபார்வைக்கு முறையிடவில்லை? ஏன் நீ இந்தப் பல்கலைக்கழகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை?'' போன்ற விவரங்களைக்  கேட்டிருக்கலாம். பொதுவெளியில் எல்லோரின் முன்னிலையில் கேட்பதற்கு அவசியம் இல்லை. 
அவர் உண்மையாகவே அவனுக்கு உதவி செய்வதற்குத் தயாராக இருந்தால், அவர் அவனைத் தன்னுடன் அழைத்துச்சென்று அவர் கேட்க விரும்பியதைப் பற்றி அவனிடம் கேட்டிருப்பார். ஆனால்  தம்முடைய இழுக்கான கேள்விகளைப் பொது இடத்தில் வெளிப்படுத்துகின்றார். எனவே அது மெய்யான அக்கறை இல்லை!

"முஸ்லிமான ஒருவருடைய நற்குணங்களுள் ஒன்று அவருக்குத் தொடர்பில்லாததை விட்டுவிடுவது ஆகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். 

இருப்பினும், கவனமாக இரு. ஒரு விஷயத்தை அதைவிடப் பெரிதாக்கி விட வேண்டாம். ஒரு முறை நான் மதீனாவிற்குச் சென்றிருந்தேன். அங்கு நான் பல சொற்பொழிவுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தேன். எனவே நான் ஓர் அன்பான இளைஞன் தன்னுடன் என் இரண்டு மகன்களான அப்துர் ரஹ்மானையும் இப்ராஹீமையும் அழைத்துச் செல்ல ஒத்துக்கொண்டேன். அஸருக்குப் பிறகு அங்கு குர்ஆன் மனனம் செய்யும் அமர்வும் அல்லது கோடைக்கால பொழுதுபோக்கு அமர்வும் நடைபெறுவதால் இஷாவிற்குப் பிறகுதான் அவர்களைத் திரும்ப அழைத்துவந்தான்.

அப்துர் ரஹ்மான் உடைய வயது பத்து. அந்த இளைஞன் உன் தாயின் பெயர் என்ன? உன்னுடைய வீடு எங்கு உள்ளது? உனக்கு எத்தனை சகோதரர்கள்? உங்களுடைய தந்தை உங்களுக்குச் செலவுசெய்ய எவ்வளவு பணம் கொடுப்பார்? போன்று தேவையற்ற கேள்விகளைக் கேட்கலாம் என்று நான் பயந்தேன்.

அதனால் நான் அப்துர் ரஹ்மானிடம் எச்சரித்துக் கூறினேன். அவர் உன்னிடம் தொடர்பில்லாத கேள்விகளைக் கேட்டால் அவரிடம், "முஸ்லிமான ஒருவருடைய நற்குணங்களுள் ஒன்று அவருக்குத் தொடர்பில்லாததை விட்டுவிடுவது ஆகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள் என்று சொல்.  நான் அவனிடம் அந்த நபிமொழியை அவன் மனனம் செய்யும் வரை திரும்பத் திரும்பக் கூறினேன்.

அப்துர் ரஹ்மானும் அவனுடைய சகோதரனும் காரில் அந்த இளைஞனுடன் அமர்ந்திருந்தார்கள். அப்துர் ரஹ்மான் அந்நேரத்தில் மிகவும் பதற்றமாகவும் மரியாதையாகவும் இருந்தான். அந்த இளைஞன் அன்போடு, "அல்லாஹ் உங்களுடைய வாழ்க்கையை நீடிக்கச் செய்வானாக, அப்துர் ரஹ்மானே'' என்று கூறினான். அதற்கு அப்துர் ரஹ்மான் "அல்லாஹ் உங்களுடைய வாழ்க்கையையும் நீடிக்கச் செய்வானாக'' என்று பதிலளித்தான். 

அந்த அப்பாவி இளைஞன் சூழ்நிலையை மகிழ்ச்சியாக்குவதற்காக "இன்று, ஷேக் ஏதாவது சொற்பொழிவு நிகழ்த்துகின்றாரா?'' என்று கேட்டான். அப்போது அப்துர் ரஹ்மான் அந்த நபிமொழியை நினைவூட்ட முயற்சித்தான்; ஆனால் அவனுடைய நினைவில் அது தங்கவில்லை. எனவே அவன் சத்தமாக,  "உங்களுக்குத் தொடர்பில்லாத விஷயத்தில் குறுக்கிடாதீர்கள்'' என்று கூறினான்.

 
உடனே அந்த இளைஞன், "நான் அவருடைய சொற்பொழிவில் கலந்துகொண்டு பயனடைய விரும்பினேன்; அதனால்தான் கேட்டேன்'' என்றான். தான் அறிவாளியாகச் செயல்பட முயல்கிறோம் என்று அப்துர் ரஹ்மான் தெரிந்துகொண்டான் என்பதை அறிந்துகொண்ட அந்த இளைஞன், அதே பதிலையே, "நான் என்ன நினைத்தேன் என்றால்...'' என்று மீண்டும் கூறினான். 

ஆனால் மறுபடியும் அப்துர் ரஹ்மான், "இல்லை! உங்களுக்குத் தொடர்பில்லாத விஷயத்தில் குறுக்கிடாதீர்கள்!'' என்று கத்தினான். நான் திரும்பி வருகின்ற வரை அவர்கள் அந்த நிலையிலேயே இருந்தார்கள். அப்துர் ரஹ்மான் என்னிடம் அந்த முழுக் கதையையும் பெருமிதமாகக் கூறினான். அதைக் கேட்டு நான் சிரித்துவிட்டு, மறுபடியும் நான் சொன்னதைப் பற்றி அவனுக்கு விளக்கமாகக் கூறினேன்.    
==================

வெள்ளி, 21 மே, 2021

நிம்மதியாக வாழ விடுங்கள்

நிம்மதியாக வாழவிடுங்கள்!
-------------------------------------
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் சுதந்திரமாக வாழ உரிமையுண்டு. வாழும் காலத்தில் பல்வேறு இன்னல்களையும் இடுக்கண்களையும் துன்பங்களையும் சிரமங்களையும் ஒவ்வொரு மனிதனும் சந்தித்தே ஆக வேண்டும். வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியே தொடர்ந்துகொண்டிருக்காது. துன்பமும் இன்பமும் இரவு-பகலைப் போல் மாறி மாறி வந்துகொண்டேதான் இருக்கும். அவ்வாறு நம் அனைவருக்கும் ஒரு சோதனையாக வந்ததுதான் கொரோனா தீநுண்மி ஆகும்.

 
இதைக் கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை. இது ஒரு சளி நோய்தான்; உயிர்க்கொல்லி நோய் இல்லை. இதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். இதைப் பலரும் வெளிப்படையாகச் சொல்வதில்லை. சிலர் மட்டுமே துணிவாகச் சொல்லி மக்களின் மனங்களில் தைரியமூட்டுகிறார்கள். அதற்கான சான்றாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவர்களின் இன்றைய (21.05.2021) எண்ணிக்கை (2, 23, 55, 440) இரண்டு கோடியே இருபத்து மூன்று இலட்சத்து ஐம்பத்தைந்து ஆயிரத்து நானூற்று நாற்பது ஆகும். இச்செய்தி எந்த நாளிதழிலும் அதன் முதல் பக்கத்தில் இடம்பெறாது. இது இன்றைய தினமணி நாளிதழின் 8ஆம் பக்கத்தில் இடம்பெற்ற செய்தியாகும். 


இச்செய்தி நமக்குத் தெரிவிப்பது என்ன? இது ஓர் உயிர்க்கொல்லி நோய் கிடையாது. இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டாலும் மீண்டும் குணமாகி வந்துவிடலாம் என்பதைத்தான். இதைத்  தெளிவாகச் சொல்ல ஏன் மருத்துவர்களும் அரசியல்வாதிகளும் தயங்குகின்றார்கள்?


ஆகவே கொரோனா தொற்றால் யாரேனும் பாதிக்கப்பட்டால் பீதியடைய வேண்டாம். உரிய முறையில் சிகிச்சை மேற்கொண்டால் எளிதில் குணமடைந்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு உங்கள் வாழ்க்கையை இயல்பாகத் தொடருங்கள். 


எனக்குத் தெரிந்து பலர் குணமடைந்திருக்கிறார்கள். ஏற்கெனவே நுரையீரல் பிரச்சனை, இரத்த அழுத்தம், கேன்சர், நீரிழிவு முதலான நோய்கள் உள்ளோர்தாம் கொரோனா பாதிப்பால் பெரும்பாலும் இறந்துபோகின்றார்கள். மற்றவர்கள் அனைவரும் குணமடைந்து தத்தம் இல்லம் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சித்தா, யூனானி முதலான ஆயுர்வேத சிகிச்சையைப் பெறுவோர் அனைவருமே குணமடைந்துவருகின்றார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.


கொரோனா குறித்து நம்முடைய பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: “கொரோனா என்பது குறிப்பிட்ட காலத்தில் முடிந்துவிடுவதன்று. இதன் அச்சுறுத்தல் நீண்ட காலம் இருக்கும்.” (21 05 2021 தினமணி) ஆம்! இது நீண்ட காலம் நீடிக்கக்கூடிய நோய்தான். அதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் சளியும் இருமலும் காய்ச்சலும் பன்னூற்றாண்டுகளாக மனிதர்கள் மத்தியில் உலா வந்துகொண்டிருப்பவையே. 


எனவே சாதாரண சளிநோயாக உள்ள தீநுண்மியை உயிர்க்கொல்லிநோயாகச் சித்திரிப்பதை ஊடகங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். மக்களை அச்சுறுத்தும் வேலையை விட்டுவிட்டு, சிகிச்சை பெற்று, குணமடைந்தோரை நேரடியாகப் பேட்டி எடுத்து அதை ஒளிபரப்ப வேண்டும். சிகிச்சை எங்கெல்லாம் மேற்கொள்ளப்படுகிறதோ அந்த விவரங்களையும் வெளியிட வேண்டும். இதைச் செய்தால், அதுதான் இன்றையக் காலத்தில் உங்களின் பொன்னான சேவையாகும். 


யாரோ சிலர் பரிந்துரைத்த ரெம்டெசிவர் மருந்தை கொரோனா சிகிச்சைக்கான மருந்து எனக் கருதி மக்கள் பலர் முண்டியடித்துக்கொண்டு வாங்கிக்கொண்டிருந்தார்கள். அம்மருந்தை எளிய முறையில் மக்கள் வாங்குவதற்கான ஏற்பாட்டைத் தமிழக அரசு செய்துகொடுத்தது. திடீரென உலக சுகாதார நிறுவனம் (WHO) ரெம்டெசிவர் மருந்தை கொரோனா சிகிச்சைக்கானது கிடையாது என்று நீக்கியுள்ளது. ஆக இந்த நோய்க்கான மருந்து எது என்பதிலேயே மருத்துவர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்பது கண்கூடு. 


மேலும் தற்போது மக்களுக்குச் செலுத்தப்படும் தடுப்பூசி குறித்து, நோபல் பரிசுபெற்ற பிரெஞ்சு நாட்டு வைராலஜிஸ்ட் டாக்டர் பேராசிரியர் லுக் மாண்டோக்னிர் கூறுவதாவது: “கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களே உருமாறிய கொரோனாவை உருவாக்குகிறார்கள். பெருந்தொற்றுக் காலத்தில் கொரோனா தடுப்பூசியைப் போடுவது ஏற்றுக்கொள்ள முடியாத தவறு. கொரோனா தடுப்பூசியைப் பெருமளவு மக்களுக்குச் செலுத்துவது அறிவியல் தவறு மட்டுமல்ல, மருத்துவத் தவறுமாகும். மேலும் உலகெங்கும் கவனித்துவிட்டேன். கொரோனா தடுப்பூசி போடத் துவங்கியபின், உருமாறிய தீவிர கொரோனா வருவதும் பெருந்தொற்று அதிகமாவதும் மரணங்கள் கூடுவதும் நடக்கிறது...” (Source: airfoundation.com)


இவரின் கூற்றிற்கிணங்க அண்மைக் காலமாக கருப்புப் பூஞ்சைத் தொற்று பரவத் தொடங்கியிருப்பது கவனிக்கத்தக்கது. ஆக உண்மைகள் ஒரு பக்கம் கசிந்துகொண்டிருக்க, சிகிச்சை முறைகளோ பற்பல விதங்களில் வரம்புமீறிச் சென்றுகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டே இருப்பதால் எது சரியான சிகிச்சை முறை என்பது  தெரியாமல் மக்கள் பயந்துபோய்தான் இருக்கின்றார்கள். 


ஆகவே கொரோனா குறித்து அச்சுறுத்துவதை விட்டுவிட்டு, மக்களைச் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ விட்டுவிடுங்கள். தத்தம் பாதுகாப்பை அவரவர் பார்த்துக்கொள்வார்கள். மீண்டும் மீண்டும் பொதுமுடக்கம் போட்டு மக்களின் வாழ்க்கையைச் சீரழிக்க வேண்டாம். பொதுமுடக்கம் ஒரு நிரந்தரத் தீர்வல்ல என்பதே பெரும்பாலோரின் கருத்தாகும். அரசு இதை உணர்ந்து செயல்பட வேண்டும். 


சிகிச்சை முறைகளையும், எங்கெங்கு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என்பதையும், கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் வேண்டுமானால் பொது மக்களுக்கு அறிவிப்புச் செய்துகொண்டே இருங்கள். அதுவே மக்களுக்குப் பயனளிக்கும்.        
அன்புடன் 
முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி
21 05 2021

குறிப்பு: என்னுடைய இப் பதிவை வாட்ஸ்அப் குழுமத்திற்குப் பகிர்பவர்கள் ஆதாரங்களாக நான் இணைத்துள்ள நாளிதழ் நறுக்கல்களையும் சேர்த்து அல்லது இந்த பிளாக் இணைப்போடு பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 
========================


சனி, 15 மே, 2021

மக்கள் தொகை குறைப்பா?

மக்கள் தொகை குறைப்பா?

உலகின் மக்கள் தொகை 790 கோடியைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால்  மனித எதிரிகள் மக்கள் தொகையைக் குறைக்க வேண்டும் என பத்தாண்டுகளுக்கே முன்பே முடிவெடுத்தனர். அதனால் பல்லாண்டு காலம் பல அறிஞர்கள் கொண்ட குழு ஆய்வுசெய்து கண்டறிந்ததுதான் கொரோனா வைரஸ் என்றும் அதனைத்  தொடர்ந்து வருகிற தடுப்பூசி என்றும் உலக அரசியல் அறிந்த அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர். இது குறித்த கட்டுரை ஆங்கில நாளேடான சவரன் இன்டிபென்டன்ட் (Soverign Independent) எனும் நாளிதழில் ஏற்கெனவே வெளிவந்துள்ளதை ஆதாரமாகக் காட்டுகின்றார்கள். இது நம்பும்படியாக உள்ளதா என்று கேட்டால் உலகில் காணும் இன்றைய நிலையைப் பார்த்தால் நம்பாமல் இருக்க முடியவில்லை என்றே சொல்லலாம். 


மனித எதிரிகள் கண்டறிந்த செயற்கையான வைரஸ்தான் இது என்பதற்கு மனிதநேயமுள்ள மருத்துவர்கள் கூறும் சான்று என்னவெனில், இயற்கையான தொற்றுநோய் என்பது குறிப்பிட்ட ஒரு மாகாணத்தில் அல்லது நாட்டில் தோன்றி அந்த நாட்டோடு முடிந்துவிடும். மற்ற நாடுகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. குளிர்ப்பிரதேசங்களில் தோன்றினால் வெப்ப மண்டலப் பிரதேசங்களில்  அது அழிந்துவிடும். ஆனால் இந்த கொரோனா வைரஸ் எங்கு முதலில் தோன்றியதோ அங்கிருந்து பரவி அண்டை நாடுகளுக்குப் பரவி, உலகம் முழுவதும் பரவத் தொடங்கிவிட்டது. இப்படி ஒரு  நாட்டில் உருவாகி உலகு முழுவதும் பரவுவது என்பது இதுவரை நாம் கண்டிராதது. எனவே இது செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான் என்று தீர்க்கமாகக் கூறுகிறார்கள். 


மனித எதிரிகள் இந்த வைரஸைத் தோற்றுவித்த காரணம், மக்கள் கொத்துக் கொத்தாக இறந்து, அதன்மூலம் மக்கள்தொகை குறைய வேண்டும் என்பதுதான். அது இன்று கண்கூடாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அத்தோடு இந்த கொரோனா வைரஸ் என்பதைக் காரணம் காட்டி, தடுப்பூசி என்ற பெயரில் மக்களை மலடாக்கும் வேலையைச் செய்ய வேண்டும். அதன்மூலம்  இனி குழந்தைப் பிறப்பையே தடுத்து நிறுத்திவிட வேண்டும். இதனால் மக்கள் தொகை வளர்ச்சி தடைபட்டு நின்றுவிடும் என்பது அந்தச் சதிகாரர்களின் திட்டம் என்று உலக அரசியல் அறிந்தவர்கள் கூறுகின்றார்கள்.  

 
அந்தத் தடுப்பூசி சிலருக்குத் துரித மரணத்தை ஏற்படுத்தலாம்; வேறு சிலருக்குத் தாமதமாக மரணத்தை ஏற்படுத்தலாம்; வேறு சிலர் மலடாகலாம். மலட்டுத்தன்மை என்பது இரு பாலருக்கும் உண்டு. ஆண்களின் உயிரணுக்களின் வீரியம் குறைந்து, பெண்ணின் கருப்பையை அடைய முடியாமல் செயலிழந்துவிடும். அல்லது ஆணின் உயிரணுவை ஏற்றுக்கொள்கிற வகையில் பெண்ணின் சினைப்பை செயல்படாமல் போகலாம். அந்தக் குறைபாடு இன்று இந்தியாவிலுள்ள பத்து சதவிகிதத்திற்கு மேலான ஆண்-பெண்களுக்கு இருக்கிறது. வெளிநாடுகளில் வாழும் பெரும்பாலான தம்பதியருக்கு இந்தக் குறைபாடு உள்ளது. எதிர்காலத்தில் இது இன்னும் பரவலாகலாம். இதனால் பல்வேறு தம்பதியரின் குழந்தைப்பேறு கனவாகவே முடிந்துவிடும். 


அதையும் மீறிக் குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்தால் அதற்கு நிறையப் பணம் செலவாகும். ஆம். செயற்கைக் கருவளர்ச்சி மையத்தைத்தான் தம்பதியர் நாட வேண்டும். அங்கு சென்றால் பல இலட்சங்கள் செலவழித்து ஒரு குழந்தையேனும் பெற்றுக்கொள்ளலாம். இதுவெல்லாம் மனித எதிரிகளான சதிகாரர்களின் சதித்திட்டம் என்பதை மனிதநேயமுள்ள மருத்துவர்கள் விவரிக்கிறார்கள்.

 
கொரோனா என்பதைச் சாதாரணமாகப் பார்த்தால் அது ஒரு சளிநோய்; அதை மிக எளிதாகக் குணப்படுத்திவிடலாம். பாதிக்கப்பட்ட பலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இதைப் பயத்தோடும் பயங்கரமாகவும் பார்த்தால் இது ஓர் உயிர்க்கொல்லி நோய். முதலில் காய்ச்சல் வரும்; பிறகு மூச்சுத் திணறல் வரும்; அதன் பிறகு மரணம். சாதாரண சளி நோயைப் பூதாகரமாக ஆக்குவது ஏன்? 


கொரோனாவுக்குப் பல்வேறு மருந்துகள், ஊசிகள் என வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால்  உண்மையிலேயே சரியான மருந்து எது, சரியான தடுப்பூசி எது என்று இதுவரை மருத்துவர்கள் உறுதியாகக் கூறவில்லை. தடுப்பூசி போட்ட பிறகு மீண்டும் கொரோனா வராதா என்ற கேள்விக்கு உறுதியான பதிலில்லை.  அதேநேரத்தில் மீண்டும் மற்றொரு தடுப்பூசி போட வேண்டும் என்கிறார்கள். இந்த ஊசி போட்ட பிறகு எதிர்விளைவுகளோ பக்கவிளைவுகளோ ஏற்பட்டால் காப்பீடு (இன்ஷ்யூரன்ஸ்) உண்டா என்றால், அதெல்லாம் கொடுக்க முடியாது என்கிறார்கள்.


கொரோனாவை உண்மையிலேயே குணப்படுத்த வேண்டும் என்ற எண்ணமுள்ளவர்கள் சென்ற ஆண்டு செயல்படுத்திய சிகிச்சை முறையை மேற்கொண்டு மிக எளிதாகக் குணப்படுத்திவிடலாமே? அதாவது சென்ற ஆண்டு மருத்துவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களின் பிளாஸ்மாவை (குருதிநீர்) எடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செலுத்தினால் குணப்படுத்திவிடலாம் என்று சொன்னார்கள். அதனடிப்படையில் நிறையப் பேர் வரிசையில் நின்று பிளாஸ்மா வழங்கினார்கள். ஆனால் இந்த ஆண்டு அது பற்றிய பேச்சே இல்லையே ஏன்? 

 
கொரோனாவை வியாபாரமாகப் பார்ப்பவர்கள் மக்களைப் பயமுறுத்திச் சம்பாதிக்கிறார்கள்; இதை  ஒரு சாதாரண நோயாகப் பார்ப்பவர்கள் எளிய சிகிச்சை முறைகளை வெளியிடுகின்றார்கள்; அச்சப்பட வேண்டாம் என்று ஆலோசனையும் சொல்கிறார்கள். அவற்றுள் மிக முக்கியமான ஆலோசனை நீராவி சிகிச்சையாகும். அதாவது நாம் நீரைச் சூடுபடுத்தி அதிலிருந்து ஆவி பிடித்தால் நம் மூக்கினுள் நுழைந்துள்ள கிருமிகள் இறந்துவிடும். இது ஓர் எளிய சிகிச்சை முறை. இதை ஒரு வாரம் செய்ய வேண்டும் என்கிறார்கள். இது எல்லோரும் பின்பற்றத்தக்க ஓர் எளிய சிகிச்சையாகும்.


மிக எளிய முறையில் குணமாகிவிடும் ஒரு சளி நோய்க்கு இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் ஏன்? ஊடகங்கள் ஏன் மக்களை இந்த அளவிற்கு அச்சுறுத்துகின்றன? ஏன் மக்களின் வியாபாரத் தலங்களெல்லாம் முடக்கப்படுகின்றன? ஏன் வழிபாட்டுத் தலங்களெல்லாம் பூட்டப்படுகின்றன? இதன் பின்னணி என்ன? இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் செய்யப்பட்டு அவர்கள் மக்கள் உடல்களில் திணிக்க முயல்வது எதை? தடுப்பூசியைத்தானே? பணத்திற்கோ இலவசமாகவோ அதைச் செலுத்தத் துடிக்கின்றார்கள்; கட்டாயப்படுத்துகிறார்கள். அதைச் செலுத்தவில்லையானால் ஒரு நாட்டிலிருந்து வேறு நாட்டுக்குச் செல்ல முடியாது என்று கட்டுப்பாடு விதிக்கிறார்கள். இதுவெல்லாம் மக்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தாதா? இதையெல்லாம் குறித்து மருத்துவ அறிஞர்களே மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை நிலை.


இந்தக் கொரோனா பூதாகரமாக்கப்பட்டுள்ளது என்று மனிதநேயமிக்க மருத்துவர்களே சொல்கிறார்கள். ஆம்! கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தோர் என்று கணக்குக் காட்டப்பட்டுள்ள ஏராளமானோர் ஆஸ்துமா, நீரிழிவு, கேன்சர், இதய நோய் உள்ளிட்ட பல நோய்களால் ஏற்கெனவே பாதிப்புக்குள்ளாகி இருந்தவர்கள். அவர்கள்தாம் இந்த வைரஸை எதிர்கொள்ள முடியாமல் இறந்துபோகிறார்கள். மேலும் இந்த நோய் குறித்த பயத்தாலும் பலர் இறந்துபோகின்றார்கள். இது தவிர, கொரோனாவால் இறப்போர் மிக மிகக் குறைவே என்று கூறுகின்றார்கள். அதற்கு ஆதாரமாக, கொரோனா இல்லாத காலங்களில் இறந்தோரின் எண்ணிக்கையையும் கொரோனா வந்தபின் இறந்தோரின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவ்வளவு பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை என்கிறார்கள். இருப்பினும் இது ஊடகங்களால் பூதாகரமாகக் காட்சிப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. 

   
இந்த கொரோனா வைரஸின் முக்கிய வேலை நுரையீரலுக்குள் புகுந்து அங்குள்ள ஈரப்பதத்தைச் சளியாக மாற்றிவிடுவதால் மூச்சுவிட முடியாமல் மனிதன் திணறுகிறான். அதனால்தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மனிதன் இறக்க நேரிடுகிறது. இதனால் ஆக்ஸிஜன் வாயு உருளை பொருத்தப்பட்டுச் செயற்கையாகச் சுவாசிக்கச் செய்யப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். இது உண்மையென்றே வைத்துக்கொள்வோம். ஆனால் ஆக்ஸிஜன் வாயு உருளை குறித்த பேச்சு சென்ற ஆண்டு எழவில்லையே ஏன்? ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்ற பேச்சு சென்ற ஆண்டு இந்தியாவின் எந்த மாநிலத்திலும் எழவில்லை. இந்த ஆண்டு மட்டும் ஆக்ஸிஜன் வாயு உருளை பற்றாக்குறை என்ற பேச்சு பரவலாகக் காணப்படுவதேன்?


நாடு முழுவதும் ஆக்ஸிஜன் வாயு உருளை பற்றாக்குறை என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி, தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் செய்து, 14 உயிர்கள் பலிகொடுக்கப்பட்டு, மூடப்பட்ட ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதைத் திறக்க அரசாங்கமே உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவெல்லாம் எதைக் காட்டுகிறது? பற்றாக்குறை என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி, பெருமுதலாளிகள் இலாபம் சம்பாதிக்க முயல்கிறார்களோ என்ற சந்தேகத்தை மக்கள் மனங்களில் ஏற்படுத்தியுள்ளதைத் தவிர்க்க முடியவில்லை.

     
இதையே மற்றொரு கோணத்தில் பார்க்கலாம். ஆக்ஸிஜன் வாயு உருளையைப் போதிய அளவு நம் நாட்டிலேயே தயாரிக்க முடியும். ஆனால் அதற்கான எந்த முன்னேற்பாட்டையும்  அரசு மேற்கொள்ளவே இல்லை. கடைசி நேரத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலர் மாண்டு கொண்டிருக்கிறார்கள். மக்களின் உயிர்கள்மீது அக்கறை உள்ள அரசு அதற்கான முன்னேற்பாட்டையல்லவா செய்திருக்க வேண்டும்?  

ஆக்ஸிஜன் வாயு பற்றாக்குறை பற்றியோ, பலர் மாண்டுள்ளதைப் பற்றியோ நம் பாரதப் பிரதமர் சிறிதும் கவலைப்படவில்லை; அலட்டிக்கொள்ளவில்லை. காரணம் அவர் இதற்குமுன் குஜராத்தில் 3000 முஸ்லிம்களைக் கொன்றவர். அதனால் மக்கள் இறப்பது குறித்து அவர் எந்த வருத்தத்தையும் வெளிப்படுத்த மாட்டார். அது மட்டுமல்ல இத்தகைய கல்நெஞ்சினர் ஒருவர்தாம் நமக்குத் தேவை என்று முடிவெடுத்த மனித எதிரிகளின் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டவர்தாம் இந்த மோடி. அதனால் அவர்களுக்குத்தான் விசுவாசமாக இருப்பாரே தவிர மக்கள் சாகின்றார்களே என்று அழுதுகொண்டிருக்க மாட்டார். 


மக்கள்மீது எந்த அக்கறையும் இல்லாத அரசு, கொத்துக் கொத்தாக மக்கள் இறந்தபோனதைக்  குறித்துக் கவலைப்படாத அரசு, திடீரென மக்கள்மீது அக்கறை ஏற்பட்டு, அனைவரையும் தடுப்பூசி செலுத்தக் கட்டாயப்படுத்துவது ஏன்? இதில் அரசுக்கு உள்நோக்கம் இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? 
மக்கள் கொத்துக் கொத்தாக இறந்தபோது எந்த வருத்தத்தையும் வெளிப்படுத்தாத மோடியைப் பலரும் விமர்சனம் செய்வதைக் காணமுடிகிறது. ஆனால் அவர்களெல்லாம் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது மனித எதிரிகள் எதிர்பார்த்த மரண எண்ணிக்கை இதைவிட அதிகமாகும். அந்த இலக்கு எண்ணிக்கையை அடைகின்ற வரை இந்த கொரோனா அலை மக்களை விட்டு அகலாது. இரண்டாம் அலை, மூன்றாம் அலை, நான்காம் அலை என்று தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். இன்னும் நிறைய உயிர்ப்பலிகள் ஏற்படவே செய்யும். ஆக கொரோனா எனும் வைரஸுக்குள் பல்வேறு சூழ்ச்சிகளும் மர்மங்களும் மறைந்துள்ளன. அவை ஒவ்வொன்றாக விரைவில் வெளிவரும்.  


அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: மனிதக் கரங்கள் தேடிக் கொண்டதன் விளைவாகத் தரையிலும் கடலிலும் சீரழிவு தோன்றிவிட்டது. அவர்கள் செய்த சில வினைக(ளின் விளைவுக)ளை அவர்களுக்கு அவன் சுவைக்கச் செய்ய வேண்டும் என்பதே இதற்குக் காரணம்.... (30: 41)
---------------------
அன்புடன் 
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி 
(துணை ஆசிரியர் இனிய திசைகள் மாதஇதழ்)
15 05 2021
====================

செவ்வாய், 11 மே, 2021

அல் குர்ஆன் ஓர் ஆழ்நிலைப் பார்வை

நூல் வெளிவந்துவிட்டது
--------------------------------
நூல்: அல்குர்ஆன் ஓர் ஆழ்நிலைப் பார்வை
நூலாசிரியர்: கெக்கிராவ ஸஹானா
பக்கங்கள்: 168
விலை: Rs 90/-
வெளியீடு: புதிய சமுதாயம் பதிப்பகம், கோயம்புத்தூர்

நூல் கிடைக்குமிடங்கள்:
 
அமீர் அல்தாப் (கோவை)
தொடர்புக்கு: 97876 75791

சாஜிதா புக் சென்டர், மண்ணடி, சென்னை.
தொடர்புக்கு: 98409 77758

ரஹ்மத் பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை.
தொடர்புக்கு: 94440 25000
----------------------

இந்நூலுக்கு நான் எழுதிய அணிந்துரை 
உங்கள் பார்வைக்கு...

திருக்குர்ஆன் ஓர் அறிவுப்பெட்டகம்; வரலாற்றுச் சுரங்கம். யார் எக்கோணத்தில் அணுகினாலும் அவரின்  சிந்தனைக்கேற்ப விரிந்துகொடுக்கின்ற நெகிழ்வுத்தன்மை கொண்டது. யார் எது குறித்து ஆய்வு மேற்கொண்டாலும்  அவருடைய ஆய்வுக்கான தீர்வும் ஆய்வுமுடிவும் அதில் கிடைக்கும். 

அந்த வகையில் சகோதரி ஸஹானா பெண்களைப் பற்றியும் அவர்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகள் பற்றியும் பெண்ணை அல்லாஹ் எவ்வளவு உயர்வாக மதிக்கச் சொல்லியிருக்கிறான் என்பது குறித்தும் ஓர் ஆய்வே நடத்தியிருக்கிறார். அந்த ஆய்வின் முடிவு அவருக்குச் சாதகமாக அதில் கிடைக்கப்பெற்றதை மகிழ்வோடு இந்நூல்மூலம் நம்முன் கொண்டுவந்து வைக்கிறார். சின்னச் சின்ன 47 தலைப்புகளில் சில பக்கங்களுக்குள், தான் சொல்ல வேண்டிய கருத்துகளை எடுத்துவைத்து, சீராக முடிக்கிறார். படிக்க எளிதாகவும் செம்மையாகவும் அமைத்துள்ளார். 

அல்லாஹ் திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் பலவகை அணிகளைப் பயன்படுத்தியிருந்தாலும் மக்கள் தம் பேச்சுகளில் அதிகமாகப் பயன்படுத்துகிற உவமை அணியையே பல்வேறு இடங்களில் பயன்படுத்தியுள்ளான். அதனால் குர்ஆன் சொல்லவருகின்ற கருத்தை மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதையும் குறிப்பிடுகிறார். 

    
அல்லாஹ்வின் பார்வையில் ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்ற குர்ஆனின் கூற்றை (3: 195) மேற்கோள் காட்டுகிறார். திருமணம், மணமுறிவு, இத்தா-காத்திருப்புக்காலம், மாதவிடாய்க் காலம், பிள்ளைப்பேறு, பாலூட்டுதல் உள்ளிட்ட பெண்கள் சார்ந்த பல்வேறு தகவல்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. அவை அனைத்துமே பிற சமுதாய மக்களிடம் பிரச்சனைக்குரியவை; விதிகள் வகுக்கப்படாதவை. ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தில் மேற்கண்ட அனைத்திற்கும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதனால் பெண்கள் பாதிப்புக்குள்ளாவதில்லை. எல்லா உரிமைகளையும் எளிதாகப் பெற்றுக்கொள்கிறார்கள். ஏனென்றால் அவர்களின் உரிமைகளை உரிய முறையில் கொடுக்கச் சொல்லி குர்ஆன் ஆண்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது. அதனால் அவையெல்லாம் செம்மையாகவும் சீராகவும் நடைபெறுகின்றன. 


சகோதரி ஸஹானா ஒரு பெண்ணாக இருந்து, தனக்குச் சாதகமாக குர்ஆன் என்ன கூறுகிறது என்று ஆய்வு செய்தபோது, அது பெண்களுக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் சாதகமாக சமநீதி வழங்குவதைக் கண்டு ஆச்சரியப்படுகிறார். திருக்குர்ஆனின் கருத்துகளைத் தாய்மொழியில் படித்து உணர்கின்றபோது குர்ஆனை ஓரளவேனும் உணர முடியும். ஓர் எழுத்துக்குப் பத்து நன்மை என்பதற்காக, காலம் முழுவதும் பொருள்புரியாமல் வெறுமனே ஓதிக்கொண்டிருந்தால் எப்போதுதான் இறைவனின் அற்புதக் கருத்துகளைப் புரிந்துகொள்வது? எப்போதுதான் குர்ஆனை ஆய்வு செய்ய முற்படுவது? ஆம். குர்ஆன் தன்னைச் சிந்திக்குமாறு பல்வேறு இடங்களில் மீண்டும் மீண்டும் சொல்கிறது. எனவே திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து ஓதுமாறு பணிக்கிறார். 

   
ஐந்து பக்கங்கள் அரபியில் பொருள்புரியாமல் ஓதினாலும் அதில் ஒரு பக்கமாவது அதற்கான  தமிழாக்கத்தைப் படித்தால், அல்லாஹ் கூறியுள்ள கருத்தை உணர்ந்துகொள்ளலாம்; புரிந்துகொள்ளலாம். குறிப்பாக நாம் அன்றாடம் தொழுகையில் ஓதிவருகின்ற அத்தியாயங்களுக்கான பொருளைப் படித்துத் தெரிந்துகொண்டால் தொழுகையில் ஓர் உயிரோட்டத்தைக் காணலாம் என்பதில் ஐயமில்லை. இக்கருத்தை வலியுறுத்தியே  இந்நூலாசிரியை சகோதரி ஸஹானா எழுதியுள்ளார்.

 
‘பெண்கள்’ என்ற பொருளில் ‘அந்நிஸா’ என்ற அத்தியாயம் அருளப்பட்டுள்ளது. அதில் பெண்கள் குறித்த பல்வேறு  சட்டங்கள் கூறப்பட்டுள்ளன. சொத்துரிமை, திருமணம், விவாகவிலக்கு, இத்தா-காத்திருப்புக்காலம் உள்ளிட்ட பல்வேறு விளக்கங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. ‘மர்யம்’ என்ற அத்தியாயம் இறைத்தூதர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. ஆக பெண்களுக்கெனத் தனிச்சிறப்பையும் உயர்வையும் அல்லாஹ் வழங்கியுள்ளான். 


ஒரு பெண் தன் கணவனுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற திருக்குர்ஆனின் கூற்று ஒரு புறம் இருந்தாலும் இது உலக வாழ்க்கையில்தான். ஆனால் ஒரு பெண் தன் கணவரைவிட உயர்வையும் மேன்மையையும் அடைய முடியும். எப்படி? ஒரு பெண் தன் கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செவ்வனே செய்வதோடு, படைத்த இறைவனுக்கான கடமைகளையும் செய்கிறாள்; மேலும் கணவனைவிட அதிகமான நேரம் குர்ஆன் ஓதுதல், இறைத்தியானம் (திக்ர்) செய்தல், ஏழைக்கு உணவளித்தல் உள்ளிட்ட எல்லாவித நல்லறங்களையும் செய்கிறாள்; உபரியான வணக்கங்கள் பலவற்றைச் செய்கிறாள்; அல்லாஹ் திருப்தியுறும்படி வாழ்க்கை நடத்துகிறாள் என்றால், அப்போது அவள் தன் கணவனைவிட அல்லாஹ்வின் பார்வையில் உயர்ந்துவிடுகிறாள்.

 
ஒரு பெண் பல்வேறு பரிமாணங்களில் இந்தச் சமுதாயத்திற்குப் பங்களிப்புச் செய்கிறாள். தாயாக, தாரமாக,  சகோதரியாக, அண்ணியாக, மாமியாக, மகளாக முதலான பல்வேறு பரிமாணங்களில் பங்களிப்புச் செய்தாலும் தாய் என்ற உறவே ஒவ்வோர் ஆணுக்கும் தவிர்க்க முடியாத உறவு. அந்த உறவில் ஓர் ஆண் தன் தாய்க்கு ஆற்றுகின்ற பணி மகத்தானது. எனவே ஒவ்வோர் ஆணும் தாயைப் போற்ற வேண்டிய முறைப்படி போற்றி, ஆற்ற வேண்டிய பணிவிடைகளை ஆற்றி, அந்தத் தாயின் பிரார்த்தனையைப் பெற்றுவிட்டால் அவனுக்கு அதுவே ஈருலக நற்பாக்கியத்தையும் பெற்றுத் தந்துவிடும். அல்லாஹ்வின் அருளால் இவ்வுலகிலும் நிம்மதியாக வாழலாம். மறுமையில் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்று, சொர்க்கத்தில் இடம்பிடித்து நிரந்தரமான வாழ்க்கை வாழலாம். 


 இவ்வாறு பெண்கள் குறித்த பல்வேறு செய்திகளைப் பல்வேறு கோணங்களில் சின்னச் சின்னத் தலைப்புகளில்  சிறுசிறு கட்டுரைகளாக எடுத்துரைக்கிறார். எளிமையான வாக்கிய அமைப்போடு நேர்த்தியாகவும் திறமையாகவும் இந்நூலை எழுதியுள்ளார். ஒரு நாவலைப் போன்ற ஓட்டம் இந்நூலைப் படிக்கும்போது ஏற்படுகிறது. இவ்வளவு திறமையாக இந்நூலை எழுதிய ஆசிரியை சகோதரி ஸஹானா இன்று நம்மோடு இல்லை. நல்ல நூலை எழுதிய ஸஹானாவை நான்கு வார்த்தைகள் புகழ்ந்து பேசி, அவரது முயற்சியைப் பாராட்டலாம் என்றால் அத்தகைய வாய்ப்பை அவர் நமக்கு வழங்கவில்லை. இந்நூலை எழுதிய ஸஹானா திடீரென இறந்துவிட அவர்தம் சகோதரி ஸுலைஹா தன் மூத்த சகோதரியின் முயற்சியை மக்கள் மன்றத்தில் கொண்டுவந்து சமர்ப்பிக்கும் பணியைச் செவ்வனே செய்துள்ளதை நான் பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன். 


இந்நூலை எழுதிய ஸஹானாவுக்கு இதுவே கடைசி நூலாக அமைந்துவிட்டது. எனவே இந்நூல்மூலம் கிடைக்கின்ற நன்மைகளை அல்லாஹ் அவருடைய மண்ணறைக்குச் சேர்த்து வைத்து, அவருடைய பிழைகளைப் பொறுத்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் அவருக்கு இடமளிப்பானாக. 


அன்புடன் 
நூ.  அப்துல் ஹாதி பாகவி
=================

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

என்ஜாய் யுவர் லைஃப் - நூல் மதிப்புரை

நூல்சோலை

என்ஜாய் யுவர் லைஃப்-வாழ்க்கையை அனுபவி
 
அல்லல், அவதி, இன்னல், துன்பம், கஷ்டம், நஷ்டம், கோபம், கொந்தளிப்பு, சோகம், இறுக்கம், விரக்தி முதலியவற்றால் வேதனையுற்று வாடி நைந்துபோன உள்ளங்களுக்கு அவற்றை வெல்லும் வகையை அழகுற எடுத்துரைத்துப் பெரும் தன்னம்பிக்கையை டாக்டர் முஹம்மத் அப்துர் ரஹ்மான் அரீஃபீ வழங்கியுள்ளார்.

வீழ்ந்துபோன சந்தர்ப்பங்களில் எழுந்து நிற்பது எப்படி என்பதை-இறைமறையாம் திருக்குர்ஆனைக் கொண்டும் இறுதித் தூதராம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வாழ்க்கை நெறிமுறையைக் கொண்டும் ஆசிரியர் எடுத்துரைத்திருக்கும் வகை மிகுந்த பாராட்டுக்குரியதாகும். 


"அவர்கள் பயன்பெறவில்லை' எனத் தொடங்கும் நூல் 91 கட்டுரைகளை உள்ளடக்கி "துணிச்சலோடு; இரு இன்றே தொடங்கு' என்ற கட்டுரையோடு முடிந்திருப்பது நூலின் கட்டுரைக் கட்டமைப்புத் திறனை வெளிப்படுத்துகிறது. மூலஆசிரியர் தமது வாழ்நாளில் கண்டு, கேட்டு அனுபவித்தவற்றை இந்நூலின்வழி எடுத்துக் காட்டி அவற்றுக்குத் திருக்குர்ஆன் மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மொழிவழி அணுகித் தீர்வு கண்டுரைப்பது இந்த நூல் வெறும் பிரச்சனைகளை மட்டுமே அலசி ஆராய்கிற நூலன்று, அவற்றுக்கான தீர்வுகளைத் திடமுடன் எடுத்துரைக்கிற நூல் என்பதைப் பறைசாற்றி வெற்றி கொள்கிறது.


டாக்டர் முஹம்மத் அப்துர் ரஹ்மான் அரீஃபீ இந்நூலில் பல்வேறு தலைப்புகளில் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களையும் அவற்றைத் தீர்க்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் எடுத்துரைக்கும் திறத்தினை நுணுகிக் காணும்போது அவர் தமது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது அமுத மொழிகளை அனுபவித்து வாழ்ந்திருக்க வேண்டும் என்பதனை உய்த்துணர வைக்கிறது. 


வாழ்க்கையை அனுபவிக்க வாசிக்கப்படும் இந்த நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூல்போல் இல்லாமல் ஒரு புதிய தமிழ் நூலை வாசிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துவதில் பெரிதும் வெற்றி பெற்றுள்ளதென்பதைப் பெருமிதத்தோடு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இவ்வகையில் மௌலவி டாக்டர் நூ. அப்துல் ஹாதி பாகவி வாழ்த்துதலுக்கும் பாராட்டுதலுக்குமுரியவர் ஆவார். 

வல்ல அல்லாஹ் அவருக்கு நீண்ட ஆயுளும் நிறைந்த சுகமும் தழைத்த வளமும் அவர் மேற்கொண்டுள்ள பணிகளில் ஈருலகப் புகழும் நல்கியருள இறைஞ்சி வாழ்த்திப் பாராட்டிப் பேருவகை கொள்வோம். வாழ்க... வளர்க...
-சேமுமு 
------------------------

நூலின் பெயர்: என்ஜாய் யுவர் லைஃப்-வாழ்க்கையை அனுபவி 
நூலாசிரியர்: டாக்டர் முஹம்மத் அப்துர் ரஹ்மான் அரீஃபீ  
மொழிபெயர்ப்பாளர்: மௌலவி டாக்டர் நூ. அப்துல் ஹாதி பாகவி
பக்கங்கள்: 640
விலை: ரூ. 400
நூல் கிடைக்குமிடம்: சாஜிதா புக் சென்டர், தம்புச் செட்டித் தெரு, மண்ணடி, சென்னை.. 
தொடர்புக்கு: 98409 77758 
=======================

நன்றிக்குரியோருக்கு நன்றி செலுத்துவோம்

நன்றிக்குரியோருக்கு நன்றி செலுத்துவோம்!
 
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
----------------------

இவ்வுலகில் பிறந்து வாழ்கிற மனிதர் ஒவ்வொருவரும் முதன்முதலில் நன்றி செலுத்த வேண்டியது அல்லாஹ்வுக்குத்தான். அந்த நன்றியை எவ்வாறு வெளிப்படுத்துவது? அல்லாஹ்வுக்குச் சிரம் தாழ்த்தி,  பணிந்து வழிபடுவதன்மூலமே வெளிப்படுத்த வேண்டும். அதையே இறைவன் தன் அடியார்களிடம் எதிர்பார்க்கிறான். அதனால்தான் ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளான்.

 
இரண்டாவது அவனது பெற்றோருக்கு நன்றி செலுத்த வேண்டும். ஆக இவ்விரண்டையும் அல்லாஹ்வே மனிதனுக்குக் கற்றுத்தருகிறான். முதலில் அல்லாஹ்வுக்கும் இரண்டாவது பெற்றோருக்கும் நன்றி செலுத்தவேண்டுமென அல்லாஹ் நிர்ணயித்துள்ளான். அல்லாஹ்தான் மனிதனைப் படைத்தான். எனவே அவனுக்கு முதல் நன்றி. பெற்றோர் அவனைப் பெற்றெடுத்தனர். எனவே அவர்களுக்கு இரண்டாவது நன்றி.

 
பின்வரும் வசனத்தைப் பாருங்கள்: "தனது தாய் தந்தைக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் அறிவுறுத்தினோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து(க் கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள். (பிறந்த) பிறகும் அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகளாகின்றன. ஆகவே, நீ எனக்கும் நன்றி செலுத்து; உன்னுடைய தாய் தந்தைக்கும் நன்றி செலுத்து. (31: 14) 

       
பெற்றோர் எனும் ஒரே வார்த்தையில் தாய்-தந்தை இருவரையும் சேர்த்துக் கூறும் இறைவன், பிறகு தாயை மட்டும் பிரித்து, அவளது தியாகத்தையும் சேவையையும் தனியாகக் கூறுகின்றான்.  அதாவது அவனுடைய தாய் துன்பத்திற்கு மேல் துன்பத்தை அனுபவித்து அவனைக் கர்ப்பத்தில் சுமந்தாள் என்றும் பிறந்தபின் அவனுக்கு ஈராண்டுகள் பாலூட்டினாள் என்றும் அவளது தியாகத்தைத் தனியாகக் கூறுகின்றான். இதையெல்லாம் பாசத்தோடு செய்யவைத்த இறைவனாகிய எனக்கு நன்றி செலுத்து. அத்தோடு உன்னுடைய பெற்றோருக்கும் நன்றி செலுத்து என்று கூறுகின்றான். நன்றி செலுத்து என்று கூறும்போது தன்னை அல்லாஹ் முற்படுத்தியுள்ளான். பிறகு இரண்டாவதாகப் பெற்றோர் என்ற வார்த்தையில் தாயையும் தந்தையும் ஒன்றிணைத்துக் கூறுகின்றான்.

 
இவ்வசனத்தை நாம் ஆழ்ந்து நோக்கும்போது, நன்றிக்குரியவர்கள் யார் யார் என்பதை விளங்கிக்கொள்ள முடியும். அதாவது நேரடியாக உபகாரம் செய்வோர் மட்டுமின்றி, மறைமுகமாக, கண்ணுக்குத் தெரியாமலும் நமக்கு உபகாரம் செய்வோருக்கும் நன்றி செலுத்த வேண்டும் என்று இறைவன் கூறுவதை நாம் உணரலாம். அதாவது தாய்தான் சிசுவைப் பத்து மாதங்கள் சுமந்து பெற்றெடுக்கிறாள்; ஈராண்டுகள் பாலூட்டுகிறாள். எனவே தாய்க்கு மட்டும் நன்றி செலுத்தினால் போதுமா? அந்தத் தாய் சிசுவைச் சுமப்பதற்கும் பாலூட்டுவதற்கும் காரணமான தந்தைக்கும் நன்றி செலுத்த வேண்டும். ஏனெனில் அவர்தாம் தாயின் தேவைகளை நிறைவேற்றுகிறார்; குழந்தைக்குப் பாலூட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருகிறார். எனவே அவருக்கும் சேர்த்தே நன்றி செலுத்துமாறு இறைவன் கட்டளையிடுகிறான். 

சரி, தாய்க்கும் தந்தைக்கும் மட்டும் நன்றி செலுத்தினால் போதுமா? அன்போடும் பாசத்தோடும் வளர்க்கின்ற இத்தகைய பெற்றோரைத் தனக்கு வழங்கியவன் யார் எனச் சிந்திக்க வேண்டாமா? கண்முன் தெரிகின்ற இந்தப் பெற்றோரை வழங்கிய ஒருவன் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கின்றான். அவனே இறைவன். எனவே அவனுக்கு முதல் நன்றி. இரண்டாவது பெற்றோருக்கு நன்றி.

 
இறைவனுக்கான நன்றியை எவ்வாறு செலுத்த வேண்டும்? சிரம் பணிந்து வணங்குவதன்மூலம் அவனுக்கான நன்றியைச் செலுத்த வேண்டும். பெற்றோருக்கான நன்றியை அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பதன்மூலம் நிறைவேற்ற வேண்டும். அதாவது அவர்களிடம் கனிவாகப் பேசுதல், கண்ணியமாக நடந்துகொள்ளல்,  அவர்களைக் கண்ணியப்படுத்துதல், அவர்களிடம் பணிவாக நடந்துகொள்ளல், அவர்களை அன்போடு பார்த்தல், அன்போடு உரையாடுதல், பணிவிடைகள் செய்தல், அவர்களுடைய கட்டளைக்கு மாறுசெய்யாதிருத்தல், எதிர்த்துப் பேசாதிருத்தல், அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தல் உள்ளிட்டவை அடங்கும்.

 
முதலாவது நன்றியை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்தால் பெரும்பாலான மனிதர்கள் அல்லாஹ்வுக்கு உரிய முறையில் நன்றி செலுத்துவதில்லை. மனிதர்களை இப்புவியில் படைத்து, அன்பான பெற்றோரை அவர்களுக்கு வழங்கி, நல்லவிதமாக வாழ வைத்த இறைவனுக்கு உரிய முறையில் நன்றி செலுத்தாமல் நன்றி கொன்றோராக இருக்கிறார்கள். அதனால் அல்லாஹ் அவர்கள்மீது கோபமடைந்து சோதனைகளை ஏற்படுத்துகிறான். சிலர் மட்டும் நன்றி கொன்றவர்களாக இருந்தால் அவர்களை மட்டும் சோதிக்கலாம்; தண்டிக்கலாம். ஆனால் பெரும்பாலானோர் நன்றி கொன்றோராக இருப்பதால் சோதனைக்கு மேல் சோதனையை ஏற்படுத்துவதோடு கரடுமுரடான, இரக்கமற்ற ஆட்சியாளர்களை நியமித்து மேன்மேலும் அவர்களைத் துன்புறுத்துகிறான்.

அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் அந்த வாய்ப்புகளை அலட்சியம் செய்தவர்கள், தற்போதைய சூழ்நிலையில் கொரோனா எனும் நோய்த்தொற்றைக் காரணம் காட்டி, அரசால் இறைவனை வணங்குகிற வாய்ப்பும் முஸ்லிம்களுக்கு மறுக்கப்படுகிறது. தன் அடியார்கள் தனக்கு நன்றி செலுத்துவதன்மூலம் ஈருலகிலும் மகிழ்ச்சியாக வாழ அல்லாஹ் வாய்ப்பளிக்கிறான். ஆனால் அறிவிலியான அடியார்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாமல் தம் வாழ்க்கையை அவர்களே சிரமத்திற்குள்ளாக்கிக்கொள்கிறார்கள். தன்னை வணங்கும் அந்த  வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் அல்லாஹ் அந்த வாய்ப்பைப் பறித்துக்கொள்வான். அதுதான் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எனவே வாய்ப்புக் கிடைக்கும்போதே அவனுக்கு நன்றி செலுத்த முந்திக்கொள்வோம்.  

அல்லாஹ்வுக்கு உரிய முறையில் நன்றி செலுத்தியோர் இறைத்தூதர்கள் ஆவர். அவர்கள் குறித்து அல்லாஹ்வே திருக்குர்ஆனில் கூறுகின்றான். இப்ராஹீம் நபியைப் பற்றி அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்: "இறைவனின் அருட்கொடைகளுக்கு (எந்நேரமும்) நன்றி செலுத்துபவராக இருந்தார்.'' (16: 121) இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக இருந்தார் என்று இறைவன் புகழ்ந்து கூறுகின்றான் என்றால் அவர் எந்த அளவிற்கு நன்றி செலுத்துபவராக இருந்திருப்பார் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

அதுபோலவே சுலைமான் அலைஹிஸ்ஸலாம் குறித்துப் பேசும்போது, அவருக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளைக் குறிப்பிடுகின்றான். அந்நேரத்தில் அவர் சொன்ன வார்த்தையையும் பதிவு செய்துள்ளான். இதோ: "இது நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா இல்லையா என்று என்னைச் சோதிப்பதற்காக என் இறைவன் எனக்குப் புரிந்த பேரருளாகும். எவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றியை நிராகரிக்கின்றானோ (அதனால் என் இறைவனுக்கு யாதொரு நட்டமுமில்லை.) நிச்சயமாக என் இறைவன் (யாருடைய) தேவையற்றவனும், மிக்க கண்ணியமானவனும் ஆவான்'' என்று கூறினார். (27: 40) 

இறைத்தூதர் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவராகவே இருந்து வந்தார். எனவேதான் அவருக்கு அல்லாஹ் மேன்மேலும் அருட்கொடைகளை வழங்கிக்கொண்டே இருந்தான். ஒரு தடவை தொலைதூர நாட்டு அரசியின் சிம்மாசனம் அவர் கண்மூடித் திறப்பதற்குள் அவர்முன் கொண்டுவந்து வைக்கப்பட்டது. அதைக் கண்டு அவர் வியந்தார். அல்லாஹ் இத்தகைய பணியாளர்களையெல்லாம் எனக்கு வழங்கி, நான் அவனுக்கு நன்றி செலுத்துகிறேனா இல்லையா என்று சோதிக்கிறான் என்றார். அவர் மிகுதியாக நன்றி செலுத்தியதால்தான் அல்லாஹ் அவருக்கு ஏராளமான அருட்கொடைகளை வழங்கினான் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். 

ஆக இவ்வாறு ஒவ்வோர் இறைத்தூதரும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியோராகவே இருந்தனர்.  எல்லா இறைத்தூதர்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வுக்கு மிகவும் நன்றிக்குரியவராக இருந்தார்கள் என்பதை அவர்களின் வரலாற்றில் காண்கிறோம். 

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழும்போது தம் கால்களில் வெடிப்பு ஏற்படும் அளவுக்குத் தொழுவார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இப்படிச் செய்கிறீர்களே! தங்களின் முந்தைய, பிந்தைய தவறுகள் மன்னிக்கப்பட்டு விட்டனவே?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆயிஷா! நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?'' என்று கேட்டார்கள். (நூல்: முஸ்லிம்: 5433) 

முந்தைய, பிந்தைய தவறுகள் மன்னிக்கப்பட்டபோதும் அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியாராக இருக்க வேண்டும் என்பதற்காக, அவனுடைய அருட்கொடைகளுக்காக இரவு பகலாக நின்று வணங்கியுள்ளார்கள் என்பதை அறிந்து வியக்கிறோம். நம்மையும் அவர்களுடைய வணக்க வழிபாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது வெட்கித் தலைகுனியாமல் இருக்க முடியாது. 

அல்லாஹ்வுக்கு முதல் நன்றி. பெற்றோருக்கு இரண்டாவது நன்றி. மூன்றாவது நன்றி யாருக்கு? கல்வியைக் கற்பித்த ஆசிரியருக்கே மூன்றாவது நன்றி. "லுக்மானுக்கு நாம் ஞானத்தைக் கொடுத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும்படி கூறினோம்'' (31: 12) என்று அல்லாஹ் கூறுகின்றான். அதாவது ஞானக் கல்வியை வழங்கிய அல்லாஹ் எனும் ஆசிரியனுக்கு நன்றி செலுத்துமாறு கட்டளையிடுகின்றான். எனவே நமக்குக் கற்பித்த ஆசிரியர்களுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டுமல்லவா?

  
இதைத் தாண்டி நம் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காகவும் நம்முடைய நலனுக்காகவும் பாடுபடுகிற, உதவி செய்கிற, ஒத்துழைப்பு நல்குகிற ஒவ்வொருவருக்கும் நாம் நம் நன்றியைத் தெரிவித்துக்கொண்டே இருக்க வேண்டும். அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வதும் அவர்களிடம் அன்பாக நடந்துகொள்வதும்தான் அவர்களுக்கு நாம் செலுத்துகிற நன்றியாகும். நம் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டோர், நம் கல்விக்கு உதவியோர், நல்வழி காட்டியோர், நல்ல ஆலோசனை வழங்கியோர், நம்முடைய வாழ்வில் எப்போதும் நம்மைச் சார்ந்தே நிற்கக்கூடிய மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள், மாமன்கள், மச்சான்கள், மச்சிகள், மாமிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி செலுத்த வேண்டும். மேற்கண்ட ஒவ்வொருவரும் நம் வாழ்வின் ஏதேனும் ஒரு தருணத்தில் நமக்கு உதவியவர்களாகவே இருப்பார்கள். நாம் உயர வேண்டும், நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணியவர்களாக, நமக்காகப் பிரார்த்தனை செய்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்கு நாம் நன்றி செலுத்தினால் அதைக் கண்டு அல்லாஹ் மகிழ்வான். 

மனைவி வழியே உறவுகளாக ஒட்டிக்கொண்ட மாமனார், மாமியார், மனைவியின் உறவினர்கள் என ஒவ்வொருவருக்கும் நன்றி செலுத்துவோம். எனக்குக் கல்வி கற்பித்தவருக்கு நன்றி செலுத்துவதோடு என் பிள்ளைக்குக் கல்வி கற்பித்தவருக்கும் நான் நன்றி செலுத்த வேண்டும். அது என் கடமை என்பதை உணர வேண்டும். அந்த வகையில் என் மனைவிக்கு உதவியவர்கள், என் மனைவியின் இல்வாழ்க்கைக்குத் துணைநின்றவர்கள் என அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகட்டும் என்று  நினைத்தால் நாம் நன்றி செலுத்துவதில் விசாலமான மனதுக்காரர் ஆகிவிடுவோம்.

  
யாரும் நம்முடைய நன்றியை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை. அல்லாஹ்வும்  நம்முடைய நன்றியை எதிர்பார்த்து இல்லை. நம்முடைய நன்றி அவனுக்குத் தேவையே இல்லை. அப்படியானால் நாம் ஏன்  அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்? நாம் நன்றாக வாழ்வதற்குத்தான். "(இதற்காக) நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால் (நான் என்னுடைய அருளைப் பின்னும்) உங்களுக்கு அதிகப்படுத்துவேன்'' என்று இறைவன் (14: 7) கூறுகின்றான்.

மற்றொரு வசனத்தில், "எவர் நன்றி செலுத்துகிறாரோ அவர்  தம் நன்மைக்காகவே நன்றி செலுத்துகிறார். எவன் (அதனை) நிராகரிக்கிறானோ (அவன் தனக்குத் தீங்கைத் தேடிக்கொள்கிறான். அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டமில்லை. ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவனாகவும் புகழுடையவனாகவும் இருக்கிறான்'' என்று (27: 40) கூறுகின்றான். 

ஆகவே நன்றி செலுத்துவது நம்முடைய நல்வாழ்விற்காகத்தானே தவிர பிறருடைய நலனுக்காக அன்று என்பதை நாம் உணர்ந்து அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்கும் நன்றிசெலுத்துவோராகத் திகழ்வோம். 
====================

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

முடிவுறுமா? தொடருமா?


முடிவுறுமா? தொடருமா? 
-----------------

கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாகப் பரவி வருவதாகச் சொல்லப்படுகிறது. முதன் முதலில் கொரோனா விமானத்தில் வந்தது. அப்போது விமானப் பயணிகள் காரணமாகவே கொரோனா பரவியதாகச் செசால்லப்பட்டது. இப்போது அதன் இரண்டாம் அலை என்று பரவலாகச் சொல்லப்படுகிறது. 

சரி, இந்த இரண்டாம் அலையோடு முடிந்துவிடுமா என்றால், முடியாது என்பதுதான் பதில். 
அடுத்து மூன்றாம் அலை, நான்காம் அலை எனத் தொடரும் என்றுதான் தெரிகிறது. ஏனென்றால் மக்களைச் சுதந்திரமாக வாழவிடுவதைவிடப் பயத்தோடு வாழ வைப்பதுதான் ஆட்சியாளர்களுக்கு வசதியாக இருக்கிறது.  எப்படி வேண்டுமானாலும் ஆட்சி செய்யலாம். எதிர்த்துக் கேட்க ஆள் இருக்காது. போராட்டங்களே இல்லாமல் செய்துவிடலாம். பிடிக்காதவர்களை கொரோனா பெயரைச் சொல்லி சமாதி கட்டிவிடலாம். 


யூதர்களின் திட்டம் என்னவென்றால், தஜ்ஜாலை வரவேற்க இவ்வுலகைத் தயார் செய்வதே ஆகும். அதற்கு மக்கள் ஒருவருக்கொருவர் வெறுத்தொதுக்கும் நிலையை உருவாக்குதல், வாயையும் மூக்கையும் மறைக்கச் செய்தல், ஒருவருக்கொருவர் ஒட்டாதவாறு இடைவெளியை ஏற்படுத்துதல் ஆகியவற்றைச் செய்தல். இதையெல்லாம் எப்படிச் செய்வது? அதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த கொரோனா. அதாவது பயத்தை ஏற்படுத்திவிட்டால் மக்கள் ஒருவருக்கொருவர் வெறுக்கத் தொடங்கிவிடுவார்கள். அதனால்தான் இப்போது யாரும் யார் வீட்டிற்கும் செல்ல விரும்புவதில்லை. யாராவது வருவதாகச் சொன்னாலும் கொரோனாவைக் காரணம் காட்டி, வரவேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்கள். 


கூட்டமாக இருப்பதை ஷைத்தான் விரும்புவதில்லை. அதனால்தான் சமூக இடைவெளி அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் நபிமொழி ஒன்றை நினைவூட்டுகிறேன். “நீங்கள் சமுதாயக் கூட்டமைப்புடன் சேர்ந்திருங்கள். பிரிந்துவிட வேண்டாம் என நான் உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் ஷைத்தான் (பிரிந்து வாழும்)  தனிமனிதனுடன்தான் இருக்கிறான். அவன் (இணைந்திருக்கும்) இருவரைவிட்டுத் தொலைவில் சென்றுவிடுவான்...” (திர்மிதீ: 2091) 


இப்போது புரிகிறதா? மனிதர்கள் கூட்டம் கூட்டமாக இருப்பதை ஷைத்தான் விரும்புவதில்லை. அவர்கள் தனித்தனியாக இருப்பதையே விரும்புகிறான். அதை செல்ஃபோன் மூலம் ஏற்கெனவே அவன் செய்துவிட்டான். இருப்பினும் பயத்தை அள்ளிப்போட்டால் இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பிரிந்துகிடப்பார்கள். அதுதான் அவனது எண்ணம்.
காலம் செல்லச் செல்ல அதைவிட மோசமான காலம்தான் வருமே தவிர வசந்த காலம் திரும்ப வராது. அதனால் இப்போது நாம் வாழும் காலமே நம்மைப் பொருத்த வரை பொற்காலம்.
இனி வரும் காலமெல்லாம் இதைவிட மோசமாகவே இருக்கும். அதுவெல்லாம் வறண்ட காலம். 


கொரோனா என்பது நோயல்ல. அது ஒரு பேரச்சம். அந்த அச்சம் யாருடைய மனதிற்குள் புகுந்துகொண்டதோ அவரெல்லாம் அதற்கு இரையாகிவிடுவார். யார் அல்லாஹ்வுக்கு மட்டும் அஞ்சி, மற்ற எதைக் கண்டும் அஞ்சாமல், எது வந்தபோதிலும் “அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் எங்களைத் தீண்டாது” என்று உரக்கச் சொல்கிறாரோ அவரை எதுவும் தீண்டாது. அவர் நிம்மதியாக வாழ்வார்.

 
ஐவேளை  தொழுகையைக் கடைப்பிடிப்போம். 
அல்லாஹ்வையே அஞ்சுவோம். 
எல்லா நிலைகளிலும் நிம்மதியாக வாழ்வோம். 

அன்புடன் 
நூ. அப்துல் ஹாதி பாகவி
13 04 2021    30 08 1442 

சனி, 10 ஏப்ரல், 2021

பலதரப்பட்ட நோன்புகள்

பலதரப்பட்ட நோன்புகள் 
   
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

------------

நம்மைப் படைத்த இறைவனுக்காக உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருப்பதே நோன்பாகும். அது வைகறையிலிருந்து தொடங்கி அந்தி மறையும் வரை நீடிக்கிறது. நோன்பு என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் ஐந்து தூண்களுள் ஒன்றாகும். இது ஹிஜ்ரீ 2ஆம் ஆண்டு கடமையாக்கப்பட்டது. இருப்பினும் அதற்குமுன்னரே நோன்பு இருந்து வருகிறது.


நோன்பு குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான்: உங்களுள் யார் அம்மாதத்தை (ரமளான்) அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். (2: 185) 


இந்த நோன்பு இந்தச் சமுதாயத்திற்கு மட்டுமின்றி முந்தைய சமுதாயத்திற்கும் கடமையாக்கப்பட்டிருந்தது என்பதைத் திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள்மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம். (2: 183)


பருவமடைந்த ஒவ்வோர் ஆணும் பெண்ணும் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது கடமையாகும்.  சிலருக்கு இதில் விதிவிலக்கு உண்டு. ரமளான் மாதத்தில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள், பிரசவ உதிரப்போக்கு ஏற்பட்ட பெண்கள், பாலூட்டும் அன்னையர்கள், பயணிகள், நோய்வாய்ப்பட்டிருந்தோர் முதலியோர் நோன்பு நோற்காமல் இருக்கச் சலுகை வழங்கப்படுகிறது. அத்தகையோர் ரமளான் மாதம் கழிந்துபின் பிற மாதங்களில் தமக்குத் தோதுவான நாள்களில், விடுபட்டுப்போன நோன்புகளை களா-நிறைவேற்ற வேண்டும். இதற்கு ‘களா நோன்பு’ என்று கூறப்படுகிறது.  


விடுபட்டுப்போன நோன்பைப் பிற நாள்களில் களா-நிறைவேற்ற வேண்டும் என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: (உங்களுள்) யாராவது நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால் (ரமளான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப்போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று) விடட்டும். (2: 185)


ஆறு நோன்பு: ரமளான் மாத நோன்பு நோற்று முடிந்து ஷவ்வால் பிறை 1 அன்று ஈத் பெருநாள் கொண்டாடிய கையோடு அன்று இரவே ஸஹர் சாப்பிட்டு, மறுநாள் முதல் 6 நாள்கள் வரை நோற்கப்படுகிற நோன்பே ‘ஆறு நோன்பு’ என்று சொல்லப்படுகிறது. இந்த ஆறு நோன்பைத் தொடர்படியாக ஆறு நாள்கள் நோற்க வேண்டும்.  அதேநேரத்தில் அதற்கான வாய்ப்பைப் பெறாதவர்கள் அந்த மாதத்திற்குள் ஏதேனும் ஆறு நாள்கள் நோற்றுக்கொள்ளலாம் என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.


இதனுடைய சிறப்பென்ன என்பதைப் பார்ப்போம். “ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்: 2159)


அதாவது ஒரு நற்செயலுக்கு, அதைப் போன்ற பத்து மடங்கு நன்மை உண்டு. அதன்படி, ரமளான் ஒரு மாதம் நோன்பு நோற்பதற்கு வருடத்தில் 10 மாதம் நோன்பு நோற்ற நன்மையும், ஷவ்வால் மாதத்தில் நோற்கும் ஆறு நோன்பிற்கு 60 நாட்கள் (2 மாதம்) நோன்பு நோற்ற நன்மையும், ஆக மொத்தம் 12 மாதங்கள் (ஒரு வருடம்) நோன்பு நோற்ற நன்மையும் கிடைக்கும் என்ற விளக்கவுரை அல்மின்ஹாஜ் எனும் நூலில் காணப்படுகிறது.

 
சுன்னத்தான நோன்புகள்: முஹர்ரம் பத்து-ஆஷூரா நாளில் நோற்கின்ற நோன்பு சுன்னத் ஆகும். இந்த ஆஷூரா நோன்பு ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்குமுன் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது.  அதன்பின் ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டபின் அதன் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. இருப்பினும் அதற்கான நன்மையும் சிறப்பும் குறையவில்லை.


ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: குறைஷி குலத்தினர் அறியாமைக் காலத்தில் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றுவந்தனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்படும் வரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஆஷூரா நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட) பின்னர் "(ஆஷூரா நாளின் நோன்பை) நோற்க விரும்புபவர் அதை நோற்கட்டும்! விட்டுவிட விரும்புபவர் அதை விட்டுவிடட்டும்!'' எனக் கூறினார்கள். (நூல்: புகாரீ: 1893) 


ஆக சுன்னத்தான நோன்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிற ஆஷூரா நாள் நோன்பை விரும்பியோர் நன்மையைக் கருதி நோற்கலாம். நோற்க வாய்ப்பில்லாதோர் அதை விட்டுவிடலாம். நோன்பு நோற்காதவரை நாம் குறை சொல்லக்கூடாது. ஆஷூரா நோன்பு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்திலிருந்தே நோற்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


அரஃபா நோன்பு: துல்ஹஜ் மாதம் 9ஆம் நாள் அரஃபா நாளன்று ஹாஜிகள் அல்லாதோர் நோற்கும் நோன்பே அரஃபா நோன்பாகும்.  


“...துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன்...” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்: 2151)


பராஅத் நோன்பு: ஷஅபான் 15ஆம் நாள் நோற்கப்படுவது பராஅத் நோன்பு ஆகும். இதை நோற்கலாமா கூடாதா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இருசாராரும் தமக்குரிய ஆதாரத்தை முன்வைக்கின்றனர். இருப்பினும் நன்மையைக் கருதி நஃபில் என்ற அடிப்படையில் நோற்பதில் தவறில்லை. ஆனால் அதை பித்அத் என்று சொல்வதைத் தவிர்த்துக்கொள்ளலாம். 
நோற்கக் கூடாது என்று கூறுவோர் முன்வைக்கும் ஆதாரம்: “ஷஅபான் அரைத் திங்கள் கழிந்துவிட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: ஷரஹுஸ்ஸுன்னா லில்பஃகவீ: 1721) 


நோற்கலாம் என்று கூறுவோர் முன்வைக்கும் ஆதாரமும் மேற்கண்ட நபிமொழிதான். அவர்கள் அதற்கு இவ்வாறு விளக்கம் சொல்கிறார்கள். அதாவது அரைத்திங்கள் என்பது 15 ஆம் நாளையும் உட்கொண்டதுதான்.  எனவே 15ஆம் நாளில் நோற்கலாம். 16ஆம் நாளில்தான் நோற்கக்கூடாது. ஆக ஷஅபான் 15ஆம் நாள் நோற்பதை பித்அத் என்று சொல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அவரவர் எண்ணப்படி நோன்பு நோற்றவருக்கு நன்மை கிடைத்துவிடும். 


மிஅராஜ் நோன்பு: ரஜப் 27ஆம் நாள் அன்று நோற்கப்படுகிற நோன்பு மிஅராஜ் நோன்பு எனப்படுகிறது. இந்த நோன்பு ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்படவில்லை. எனினும் மக்கள் சிலர் இந்நாளில் நோன்பு நோற்று வருகின்றனர். எனவே அதை பித்அத் என்று சொல்லாமல் நஃபிலான நோன்பை நோற்கிறார்கள் என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் நஃபிலான நோன்பு எப்போது வேண்டுமானாலும் நோற்கலாம் அல்லவா? 


அய்யாமுல் பீள் நோன்பு: ஒவ்வொரு மாதமும் பிறை 13, 14, 15 ஆகிய (பௌர்ணமி) வெளிச்ச நாள்களில் (அய்யாமுல் பீள்) நோற்கப்படுகிற  நோன்புக்கு அய்யாமுல் பீள் நோன்பு என்று பெயர்.  சிலர் 12, 13, 14 ஆகிய மூன்று நாள்கள் என்கிறார்கள். வேறு சிலர் பிறை 1, 11, 21 ஆகிய மூன்று நாள்கள் என்று கூறியுள்ளார்கள். இருப்பினும் முதற்கருத்தே சரியானது எனப் பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றார்கள்.


அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்குமாறும், "ளுஹா' நேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறும், உறங்குவதற்கு முன் வித்ர் தொழுகையைத் தொழுதுவிடுமாறும் இந்த மூன்று விஷயங்களை என் உற்ற தோழர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  எனக்கு அறிவுறுத்தினார்கள். (நூல்: புகாரீ: 1981) 

‘அய்யாமுல் பீள் நோன்பு’ என்ற தலைப்பின்கீழ் இந்த ஹதீஸை இமாம் புகாரீ ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்துள்ளார். அதிலிருந்தே இதன் சிறப்பு அறியப்படுகிறது. 
வாரந்தோறும் நோன்பு: வாரந்தோறும் திங்கள்கிழமை மட்டும் அல்லது திங்கள்கிழமையும் வியாழக்கிழமையும் நோன்பு நோற்பது நஃபிலான-உபரியான நோன்பாகும். நபியவர்களே வாரந்தோறும் திங்கள்கிழமை நோன்பு நோற்றுள்ளதாக நபிமொழித் தொகுப்பு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


அபூகத்தாதா அல்அன்ஸாரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், திங்கட்கிழமை நோன்பு நோற்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு "அன்றுதான் நான் பிறந்தேன்; அதில்தான் எனக்குக் குர்ஆன் (முதன்முதலில்) அருளப்பெற்றது'' என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம்: 2153) 


 மாதந்தோறும் நோற்கின்ற நோன்பைத்தான் நபியவர்கள் திங்கள்கிழமையும் வியாழக்கிழமையும் நோற்றுள்ளார்கள். வாரந்தோறும் தனியாகவும் மாதந்தோறும் தனியாகவும் நோற்கவில்லை என்பதை வேறு சில நபிமொழிகள்மூலம் அறிய முடிகிறது.

 அதாவது அய்யாமுல் பீள் எனும் 13, 14, 15 ஆகிய மூன்று நாள்களைத் தொடர்படியாக நோற்காமல் முதல் வாரத்தில் திங்கள், வியாழனும் அடுத்த வாரத்தில் திங்கள் அல்லது வியாழனும் நோற்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். நபியவர்கள் இவ்வாறு தொடர்ந்து செய்வதைக் கண்ட உஸாமா பின் ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அல்லாஹ்வின் தூதர்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் அந்த இரண்டு நாள்கள் மட்டும் தவறாமல் நோன்பு நோற்கின்றீர்களே?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “எந்த இரு நாட்கள்?'' என்று கேட்டார்கள். “திங்கள், வியாழன் ஆகிய கிழமைகள்தாம்” என்றார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அந்த இரு நாட்களில்தான் அகிலங்களின் அதிபதியிடம் நல்லறங்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. ஆகவே நான், நோன்பு நோற்ற நிலையில் என் நல்லறம் எடுத்துக் காட்டப்படுவதையே விரும்புகிறேன்'' என்று கூறினார்கள். (நூல்: நஸாயீ: 2318) 



ஆக நபியவர்கள் திங்கள்கிழமை நோற்ற காரணம் அது அவர்களின் பிறந்த நாள் என்பதற்காகவாகும். வியாழக்கிழமை நோன்பு நோற்ற காரணம்  அன்றுதான் நம்முடைய நல்லறங்கள் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் எடுத்துக் காட்டப்படுகின்றன என்பதற்காகவாகும்.

 
ஒரு நாள் விட்டு: வாரந்தோறும் நோன்பு, மாதந்தோறும் நோன்பு என்று பார்த்தோம். ஆனால் ஒருவர் இன்னும் அதிகமாக நோன்பு நோற்க விரும்புகிறார் என்றால் அவர் என்ன செய்யலாம். அவர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்கலாம். இஸ்லாமிய ஷரீஅத்தில் அதற்கான அனுமதி அவருக்குண்டு. 

அதற்கான சான்றைக் காண்போம். 
அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உயிருடனிருக்கும்வரை பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வணங்குவேன்” என்று நான் கூறிய செய்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எட்டியது. (இது பற்றி அவர்கள் என்னிடம் கேட்டபோது) “என் தந்தையும் தாயும்  தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நான் அவ்வாறு கூறியது உண்மையே!'' என்றேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “இது உம்மால் முடியாது! (சில நாள்கள்) நோன்பு நோற்றுக்கொள்; (சில நாள்கள்) நோன்பை விட்டுவிடு! (சிறிது நேரம்) தொழு; (சிறிது நேரம்) உறங்கு! ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்றுக்கொள்! ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அது போன்று பத்து மடங்கு நற்பலன் அளிக்கப்படும்! எனவே, இது காலமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமமாகும்!'' என்றார்கள். 


நான், “என்னால் இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியும்'' என்று கூறினேன். “அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று, இரண்டு நாள்கள் விட்டுவிடு!'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். அப்போது “என்னால் இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியும்?'' என்று நான் கூறினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடு!, இதுதான் தாவூத் நபியின் நோன்பாகும்! நோன்புகளில் இதுவே சிறந்ததாகும்!'' என்றார்கள். நான் “என்னால் இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியும்” என்று கூறினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “இதைவிடச் சிறந்தது எதுவும் இல்லை!'' என்றார்கள். (நூல்: புகாரீ: 1976)


ஆகவே ஒருவர் நிறைய நோன்புகள் நோற்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அவர் அதிகப்பட்சமாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்க அனுமதியுண்டு. அதேநேரத்தில் ஒருவர் தொடர்படியாக நோன்பு நோற்க அனுமதியில்லை. ஏனென்றால் ஒருவர் இல்லற வாழ்வில் ஈடுபடுவதும் அவர்களுக்காகச் சம்பாதித்துக்கொடுப்பதும்  ஒரு வகை இபாதத்-வழிபாடுதான். ஆதலால் நோன்பு, தொழுகை ஆகியவற்றைப்போல் ஒரு முஸ்லிமுடைய தூக்கமும் உழைப்பும் இபாதத்-வழிபாடுதான் என்பதை உணர்ந்து நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கணப்பொழுதையும் இறைவனுக்காக அமைத்துக்கொள்வோம்.   
====================