வெள்ளி, 14 ஜனவரி, 2011

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 16)

ஸ்ஹாக்-என்போரின் ஆதாரம்

மேற்கண்ட ஆதாரத்தைக் குறுக்கீடு செய்கிறார் அஸ்ஸுஹைலீ என்பவர். அல்லாஹ் கூறியுள்ள, நாம் அவருக்கு இஸ்ஹாக்கைக்கொண்டு நற்செய்தி கூறினோம் என்ற வசனம் ஒரு முழுமையான வாக்கியமாகும். அவன் மேலும் கூறுகின்றான்: அவருக்கு நாம் இஸ்ஹாக்கைப் பற்றியும் இஸ்ஹாக்குக்குப்பின் யஅகூபைப் பற்றியும் நற்செய்தி கூறினோம்.  (11: 71) இது மற்றொரு வசனம் ஆகும்.*


அவர் இஸ்ஹாக் நபிதான் என்று கூறுவோர்  பின்வரும் இந்த வசனத்தை ஆதாரமாகக் கூறுகின்றனர்: பின்னர், (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய வயதை அடைந்தபோது, அவர் கூறினார். (37: 102)  இஸ்மாயீல் நபி, இப்ராஹீம் (அலை) அவர்களுடன் இருக்கவில்லை. அவர் தம் சிறுபிராயத்தில் அவருடைய தாயுடன் மக்காவிலுள்ள மலையில்தான் தங்கியிருந்தார். பிறகு எப்படி அவர் தம் தந்தையுடன் நடந்து திரிய முடியும்?

இவர்கள் கேட்கின்ற இந்தக் கேள்வியும் ஆய்வுக்குரியதுதான். ஏனென்றால், இப்ராஹீம் (அலை) அவர்கள் பல தடவை புராக் வாகனத்தில் மக்கா சென்று, தம்முடைய மகனின் நிலையைத் தெரிந்துகொண்டு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வே நன்கறிபவன்.
அறுக்கப்பட்டவர்  இஸ்ஹாக் நபிதான் என்று கூறுபவர்களுக்கு கஅபுல் அஹ்பார் (ரளி) உடைய அறிவிப்பு மட்டுமே உள்ளது. ஆனால், அதற்கு முரணாக,  ’அறுக்கப்பட்டவர்  இஸ்மாயீல் நபிதான் என்ற கருத்து, உமர், அப்பாஸ், அலீ, இப்னு மஸ்ஊத், மஸ்ரூக், இக்ரிமா, சயீத் பின் ஜுபைர், முஜாஹித், அதாஉ, ஷஹ்பீ, முகாத்தில், உபைத் பின் உமைர், அபூமைசரா, ஸைத் பின் அஸ்லம், அப்துல்லாஹ்  பின் ஷஃபீக், ஸ்ஸுஹ்ரீ, அல்காசிம், இப்னு அபீ பர்ரா, மக்ஹூல், ஸ்மான் பின் ஹாளிர் போன்ற பல நபித்தோழர்கள் (ரளி-அன்ஹும்) மற்றும் தாபிஉகள் (ரஹ்-அலைஹிம்) உடைய அறிவிப்பின் மூலம் பெறப்பட்டுள்ளது. எனவே, இது முற்றிலும் ஆச்சரியமானது. அதுவும் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களின் இரண்டு அறிவிப்புகளுள் ஒன்றாகும் இது. எனவே, இந்தக் கருத்துக்கு வலு இல்லை. ஆகவே, அறுக்கப்பட்டவர் இஸ்மாயீல் நபிதான் என்பது நிரூபணமாகிறது.

அறுக்கப்பட்டவர்  இஸ்மாயீல் நபி என்பதே சரி!

அறிஞர்கள் பலர் கூறுகின்ற கருத்து, அறுக்கப்பட்டவர் இஸ்மாயீல் நபி என்பதுதான். அதுவே மிகச் சரியானதாகும். முஜாஹித், சயீத், அஷ்ஷஅபீ, யூசுஃப் பின் மஹ்ரான், அதாஉ (ரஹ்-அலைஹிம்) போன்றோர் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களிடமிருந்து அறிவிப்பது, அவர் இஸ்மாயீல் நபி என்பதுதான்.

தியாகத்திற்குத் தயாரானவர் இஸ்மாயீல் நபிதான். அவர் இஸ்ஹாக் நபி என்று யூதர்கள் கருதுகின்றனர். யூதர்கள் பொய்யையே கூறுகின்றனர் என்று இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறியுள்ளார்கள். இதை இப்னு ஜரீர் (ரஹ்) தெரிவிக்கிறார்.   (நூல்: தஃப்சீர் இப்னு ஜரீர்)

அவர் இஸ்மாயீல் நபிதான் என்று அப்துல்லாஹ் பின் அல்இமாம் அஹ்மத் (ரஹ்), தம் தந்தையிடமிருந்து அறிவித்துள்ளார். நான் என் தந்தையிடம், அறுக்கப்பட்டவர் யார்? என்று கேட்டேன். இஸ்மாயீல் நபி என்பதே சரியானது என்று அவர் பதிலளித்தார் என இப்னு அபீ ஹாத்திம் (ரஹ்) கூறியுள்ளார்.

அறுக்கப்பட்டவர்  இஸ்மாயீல் நபிதான் என்று அலீ, இப்னு உமர், அபூஹுரைரா, அபுத்துஃபைல், சயீத் பின் அல்முசய்யப் (ரளி-அன்ஹும்), சயீத் பின் ஜுபைர், அல்ஹசன், முஜாஹித், அஷ்ஷஹ்பீ, முஹம்மத் பின் கஅப், அபூஜஅஃபர் முஹம்மத் பின் அலீ, அபூசாலிஹ் (ரஹ்-அலைஹிம்) போன்றோர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று இப்னு அபீஹாத்திம் (ரஹ்) கூறியுள்ளார். அர்ரபீஹ் பின் அனஸ், அல்கல்பீ, அபூஅம்ர் பின் அல்அலாஉ போன்றோரிடமிருந்து அல்பஹவீ (ரஹ்) இதே கருத்தை எடுத்துரைக்கிறார்.  (நூல்: தஃப்சீருல் பஹவீ)

ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, `அறுக்கப்பட்ட இருவரின் மகனே!  என்று அழைத்தார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள் என்று முஆவியா (ரளி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது என இப்னு கஸீர் (ரஹ்) கூறியுள்ளார்.


 இக்கருத்தையே உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்), முஹம்மத் பின் இஸ்ஹாக் பின் யசார் (ரஹ்) போன்றோர் கூறியுள்ளனர். இதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) கூறியுள்ளார்.
முஹம்மத் பின் கஅப் (ரஹ்), உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் ஜனாதிபதியாக இருந்த நேரத்தில், அவருடன் சிரியா  நகரில் இருந்தபோது, அவருக்கு நாம் இஸ்ஹாக்கைப் பற்றியும் இஸ்ஹாக்குக்குப்பின் யஅகூபைப் பற்றியும் நற்செய்தி கூறினோம் (11: 71) என்ற வசனத்தின் அடிப்படையில், அறுக்கப்பட்டவர் இஸ்மாயீல் நபிதான் என்று கூறினார்.


 அதற்கு உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள், இவ்விசயம் பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். இப்போது, நீர் சொல்வதைப் போலவே நானும் கருதுகிறேன் என்று பதிலளித்தார் எனக் கூறியுள்ளார். இதை வரலாற்றாசிரியர் முஹம்மத் பின் இஸ்ஹாக் (ரஹ்) அறிவித்துள்ளார்.
உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள், தம்மோடு சிரியா நகரில் இருந்த ஒருவரை அழைத்து வர ஆள் அனுப்பினார். அவர் யூதராக இருந்து, இஸ்லாமிய மார்க்கத்தை   ஏற்றுக்கொண்டு, அதில் சிறப்பாகச் செயல்படுபவராக இருந்தார். அவர் ஏற்கெனவே யூத அறிஞர்களுள் ஒருவராக இருந்துள்ளார். அவரிடம், உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள்இப்ராஹீம் நபியுடைய இரண்டு மகன்களுள் யாரை அறுக்க அல்லாஹ் கட்டளையிட்டான்? என்று கேட்டார்.

 இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே! அல்லாஹ்வின்மீது ஆணையாக, அவர் இஸ்மாயீல் நபிதான். நிச்சயமாக, யூதர்கள் அதை அறிந்துள்ளார்கள். எனினும் அவர்கள், அரபியர்களான உங்கள்மீது  பொறாமை கொண்டுள்ளார்கள். அதாவது அல்லாஹ்வின் கட்டளைப்படி அவர் (இஸ்மாயீல்) உங்கள் தந்தை ஆவார். மேலும், அல்லாஹ் ஏவிய விசயத்தைப் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டதால் அல்லாஹ் அவரைச் சிறப்பித்துக் கூறியுள்ளான். இவற்றைக் கண்டுதான் அவர்கள் உங்கள்மீது பொறாமைகொண்டுள்ளார்கள்; எனவேதான், அவர்கள் அதை மறுக்கின்றார்கள். (அறுக்கப்பட்டவர்) இஸ்ஹாக் நபிதான் என்று கருதுகின்றார்கள். ஏனென்றால், ஸ்ஹாக் நபிதான் அவர்களுடைய தந்தை ஆவார் என்று பதிலளித்தார்.

இவ்விசயம் பற்றி, இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள், தம்முடைய திருக்குர்ஆன் விரிவுரையில் தெளிவான  ஆதாரங்களோடு வரலாற்றுத் தகவல்களையும் கூறியுள்ளார்.

----------------அடிக்குறிப்பு------------------------

* முன்பு கூறப்பட்ட நற்செய்தியில் இதற்குத் தொடர்பு இல்லை. ஏனென்றால்இடைச்சொல்லை மீண்டும் சொல்லாமல் ஒரு சொல் இகரக்குறி பெற முடியாது. இது அரபி இலக்கணமாகும். எனவேஅந்த வசனத்தில் `யஅகூப் எனும் வார்த்தைஒரு மறைமுக வாக்கியத்தின் மூலம் அகரக்குறி பெற்றுள்ளது. அந்த வாக்கியம், `...ஸ்ஹாக்க வ யஅகூப என்றிருக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ள இவ்விசயம் ஆய்வுக்குரியதாகும்.


அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.



சனி, 18 டிசம்பர், 2010

வெள்ளி, 17 டிசம்பர், 2010

திங்கள், 13 டிசம்பர், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 15)

அறுக்கப்பட்டவர் இஸ்மாயீல் நபியே!

திண்ணமாக அந்த ஆட்டின் தலை, அது காய்ந்துபோகின்ற வரை கஅபாவின் முகப்பிலேயே மாட்டப்பட்டிருந்தது என்று இப்னு அப்பாஸ் (ரளி) அறிவித்துள்ளார்கள். அறுக்கப்பட்டவர் இஸ்மாயீல் நபிதான் என்பதற்கு மேற்கண்ட நபிமொழியே ஆதாரமாகும். ஏனென்றால், அவர்தாம் மக்காவில் தங்கியிருந்தார். ஆனால், இஸ்ஹாக் நபி தம் சிறுபிராயத்தில் மக்காவுக்கு வந்தாரா என்பதையே நாம் அறியவில்லை. அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அல்லாஹ்வே நன்கறிபவன்.

இதுவே திருக்குர்ஆனின் வெளிப்படையான கருத்தாகும். இன்னும் சொல்லப்போனால், அறுக்கப்பட்டவர் இஸ்மாயீல் நபிதான் என்பதற்குத் திருக்குர்ஆனே மூல ஆதாரமாகும். ஏனென்றால், அல்லாஹ் இஸ்மாயீல் நபியின் வரலாற்றைக் கூறி முடித்த பின்னர்தான், நல்லோர்களிலுள்ள நபியாக இஸ்ஹாக்கை அவருக்கு (மகனாகத் தருவதாக) நாம் நற்செய்தி கூறினோம் (37: 112) என்ற வசனத்தைக் கூறியுள்ளான். யார் இவ்வசனத்தை ஒரே சமகாலத்தில் கூறப்பட்டது என்று சொல்லி, இதை ஆதாரமாக எடுக்க மறுக்கின்றாரோ அவர் மிகச் சிரமத்தை எடுத்துக்கொண்டார் என்றே பொருள்.
இஸ்ஹாக் நபிதான் அறுக்கப்பட்டவர் என்று கூறுவது கட்டுக்கதைகளுள் ஒன்றாகும். வேதக்காரர்களின் வேதங்களில் திரிபும் மாற்றமும் உள்ளன. குறிப்பாக, இவ்விசயத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் கூறுவது, நிச்சயமாக அல்லாஹ் இப்ராஹீமுக்குக் கட்டளையிட்டபோது, அவருடைய தனித்த மகனை அறுக்கக் கட்டளையிட்டான் என்பதாகும்.

 அரபிமொழியாக்கப்பட்ட மற்றொரு பிரதியில், அவருடைய இளைஞரான இஸ்ஹாக் என்ற வாக்கியம் உள்ளது. இவ்விடத்தில் `இஸ்ஹாக் எனும் வார்த்தை பொய்யாகவும் இட்டுக்கட்டியும் கூறப்பட்டுள்ளது. ஏனென்றால், இஸ்ஹாக் தனித்தவராகவோ இளைஞராகவோ இல்லை. அவ்வாறு இருந்த வர் இஸ்மாயீல் நபிதான்.

யூதர்களின் நம்பிக்கை என்ன?

யூதர்கள் நம்புவது, அறுக்கப்பட்டவர் இஸ்ஹாக் நபிதான் என்பதாகும். அவர்கள் இவ்வாறு சொல்வதற்குத் தூண்டிய காரணம், அவர்கள் அரபியர்கள்மீது கொண்டுள்ள பொறாமையே ஆகும். திண்ணமாக இஸ்மாயீல் நபிதான் அரபியர்களின் தந்தை ஆவார். அவர்கள் ஹிஜாஸில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் சந்ததிகளிலிருந்துதான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். இஸ்ஹாக் என்பவர், யஅகூபின் தந்தை ஆவார். அவர் பக்கமே `இஸ்ரவேலர்கள் இணைக்கப்படுகிறார்கள். அறுக்கப்பட்ட சிறப்பை அவர்கள் தம் பக்கம் இணைத்துக்கொள்ள விரும்பினார்கள். எனவே, அவர்கள் அல்லாஹ்வுடைய செய்தியையே மாற்றிவிட்டு, அதில் சுயமாகவே சிலவற்றை இணைத்துக் கொண்டார்கள். அவர்கள் அநியாயக்கார சமுதாயத்தினர் ஆவர். நிச்சயமாக சிறப்பு என்பது அல்லாஹ்வின் கையில் உள்ளது. அதை அவன், தான் விரும்புபவருக்குக் கொடுக்கின்றான் என்பதை அவர்கள் உறுதிகொள்ளவில்லை.

அறுக்கப்பட்டவர் இஸ்ஹாக் நபிதான் என்று முந்தைய அறிஞர்களுள் ஒரு பெருங்குழுவினரும் மற்றவர்களும் கூறியுள்ளனர். அவர்கள் இதை கஅபுல் அஹ்பார் (ரளி) அவர்களிடமிருந்து அல்லது வேதக்காரர்களின் வேதங்களிலிருந்து எடுத்திருக்கலாம். திருக்குர்ஆனுடைய தெளிவான, நேரடியான கருத்தை நாம் விட்டுவிடுமளவுக்கு, இஸ்ஹாக் நபிதான் அறுக்கப்பட்டவர் என்று மிகச் சரியான நபிமொழி ஏதும் அறிவிக்கப்படவில்லை. அறுக்கப்பட்டவர் இஸ்ஹாக் நபிதான் என்று விளங்கும் அளவிற்குத் திருக்குர்ஆனில் இறைவசனம் ஏதும் இடம்பெற வில்லை. மாறாக, திருக்குர்ஆனிலிருந்து நாம் விளங்குவதும் அதில் கூறப்பட்டுள்ளதும், அறுக்கப்பட்டவர் இஸ்மாயீல் நபிதான் என்பதைச் சற்றுச் சிந்தித்தால் விளங்கிக்கொள்ளலாம்.

இப்னு கஅப் அல்குரழி என்பவர் பின்வரும் வசனத்தைக் கொண்டு என்னே அழகாக ஆதாரம் எடுத்துள்ளார்! அவர் இஸ்மாயீல் நபிதான் என்பதற்குப் பின்வருகின்ற வசனமே சான்றாகும்: நல்லோர்களிலுள்ள நபியாக இஸ்ஹாக்கை அவருக்கு (மகனாகத் தருவதாக) நாம் நற்செய்தி கூறினோம். (37: 112) இஸ்ஹாக் மூலம் நன்மாராயம் எப்படி உண்டாக முடியும்? இஸ்ஹாக்கும் அவருக்குப் பின் யஅகூபும் பிறப்பார்கள் என்று சொல்லியபின், எப்படி அவருக்குக் குழந்தை (யஅகூப்) பிறப்பதற்கு முன்னரே அவர் சிறுவராக இருந்தபோது அவரை அறுக்க அல்லாஹ் ஏவுவான்? இது நிச்சயம் ஆகமுடியாது. ஏனென்றால், இது முந்தைய நற்செய்திக்கு முரணாக உள்ளது. அல்லாஹ்வே நன்கறிபவன்.


அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.

செவ்வாய், 30 நவம்பர், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 14)

இஸ்மாயீலை அறுக்க ஆணை


அல்லாஹ் கூறியுள்ள, பின்னர், (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய வயதை அடைந்தபோது என்ற வசனம் குறிப்பிடத்தக்கது. அதாவது அவர் வாலிபராகி, தந்தையைப் போல் நற்செயல்களில் ஈடுபட முற்பட்டபோது அல்லாஹ் இவ்வாறு ஆணையிட்டான். முஜாஹித் (ரஹ்) கூறியுள்ளார்: அந்த வசனத்தின் விளக்கம், அவர் வாலிபராகி பயணம் செய்தார்; அவருடைய தந்தை செய்கின்ற முயற்சி, நற்செயல் போன்றவற்றை அவரும் செய்ய இயன்றபோது, அல்லாஹ் இவ்வாறு ஆணையிட்டான் என்பதாகும். இவ்வாறு அவர் வாலிபராக ஆனபோது, இப்ராஹீம் தமது கனவில், அவருடைய மகனை (அல்லாஹ்வுக்காக) அறுக்குமாறு ஏவப்பட்டார்.
இப்னு அப்பாஸ் (ரளி) அறிவித்துள்ள `மர்ஃபூஉ’ ஆன ஹதீஸில் வருகிறது: நபிமார்களின் கனவு வேத அறிவிப்பு (வஹீ)தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: தப்ரானீ)1

தன்னுடைய நண்பரான இப்ராஹீமின் முதுமைப் பருவத்தில், அவரோ தளர்ந்து போய்விட்ட நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட அவருடைய அன்புக்குரிய குழந்தையை அறுக்க அல்லாஹ் உத்தரவிட்டது, இறைச்சோதனையாகும். இப்ராஹீம் (அலை) அவர்கள், தம்முடைய மகனையும் தம்முடைய மனைவியையும் யாருமில்லா வறண்ட நிலத்தில், புற்பூண்டுகளோ மனிதர்களோ எந்த விவசாயமோ விளைச்சலோ இல்லாத பள்ளத்தாக்கில் விட்டுவிடுமாறு கட்டளையிடப்பட்டார். எனவே, அவர் அல்லாஹ் தமக்கு இட்ட கட்டளைக்குப் பணிந்தார். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து அவன் மீதே உறுதிகொண்டு அவ்விருவரையும் பாலைவனத்தில் விட்டுவிட்டார். ஆனால், அல்லாஹ் அவ்விருவருக்கும் மகிழ்ச்சியையும் உணவிற்கான வழியையும் அமைத்துக்கொடுத்தான். அவ்விருவரும் எதிர்பாராவிதத்தில் அவர்களுக்கு அவன் உணவு வழங்கி னான்.
இவை அனைத்துக்கும் பிறகு, அல்லாஹ் அவருடைய குழந்தையை அறுக்கக் கட்டளையிட்டான். அல்லாஹ்வுடைய கட்டளையை அவர் நிறைவேற்ற இது ஒரு தனிப்பட்ட பெரும் சோதனையாகும். அந்த இஸ்மாயீல்தான் ஒரே குழந்தை; அவரைத் தவிர அவருக்கு வேறு குழந்தை ஏதும் இல்லை. இருப்பினும், அவர் தம் இறைவனுடைய கட்டளைக்குப் பணிந்தார்; எனவே, தம்முடைய இறைவனின் கட்டளையை நிறைவேற்ற விரைந்தார்.
பின்னர், அவரைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று நிர்ப்பந்தித்து அறுப்பதைவிட அவரது சுயவிருப்பத்துடனும் மனநிறைவுடனும் எளிய முறையில் அச்செயலை நிறைவேற்றுவதற்காகவே அவ்விசயத்தைத் தம் மகனிடம் சொன்னார். என்னருமை மகனே! திண்ணமாக நான் உன்னை அறுத்துப் பலியிடுவதாகக் கனவுகண்டேன். இதைப் பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக! (37: 102) என்று கூறினார்.

பொறுமைமிக்க அந்தச் சிற்றிளைஞர், தம் தந்தை இப்ராஹீமுக்கு நன்மை செய்ய விரைந்தார். அவர் தம் தந்தையிடம் கூறினார்: என்னருமைத் தந்தையே! நீர் ஏவப்பட்டபடியே செய்வீர். அல்லாஹ் நாடினால்- என்னை நீர் பொறுமையாளர்களுள் உள்ளவராகவே காண்பீர். (37: 102) அவருடைய இந்த பதில் மிக நேர்மையானதாகும். தம் தந்தைக்கும் அடியார்களின் இறைவனுக்கும் அவருடைய பணிவின் வெளிப்பாடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்: அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, அவர் (இப்ராஹீம்) அவரை (இஸ்மாயீலைப்) பலியிட முகங்குப்புறக் கிடத்திய போது...(37: 103) அதாவது அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்றுக்கொண்டு, அதன்மீதே அவ்விருவரும் உறுதிகொண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது இந்த வாக்கியத்தில் வார்த்தைகள் முன்-பின் ஆக்கப்பட்டுள்ளன. அவரை அவர் முகங்குப்புற கிடத்தினார் என்பதன் பொருள், அவர் அவருடைய முகத்தைக் கீழே வைத்தார் என்பதாகும். மற்றொரு கருத்து, அவர் அவருடைய முகத்தைப் பார்க்காமல் இருப்பதற்காக, அவருடைய பிடரியிலிருந்து அறுக்க நாடினார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதையே இப்னு அப்பாஸ் (ரளி), முஜாஹித், சயீத் பின் ஜுபைர், கத்தாதா, ளஹ்ஹாக் (ரஹ்-அலைஹிம்) போன்றோர் கூறியுள்ளனர்.

மாறாக, அறுக்கப்படுகின்ற பிராணிகள் எவ்வாறு படுக்கவைக்கப்படுகின்றனவோ அவ்வாறே அவர் தம் மகனைப் படுக்கவைத்தார். அவருடைய நெற்றியின் ஓரம் நிலத்தில் ஒட்டியவாறு இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. `வஅஸ்லமா என்பதன் பொருள், இப்ராஹீம் பிஸ்மில்லாஹ் கூறி, தக்பீர் கூறினார். அந்தச் சிறுவர், மரணத்திற்கான `ஷஹாதத் கலிமாவைக் கூறினார் என்பதாகும். அவர் தம் மகனின் கழுத்தில் கத்தியைச் செலுத்தினார். ஆனால், அக்கத்தி அவரைச் சிறிதளவும் அறுக்கவில்லை என்று சுத்தீ (ரஹ்) மற்றும் வேறு சிலர் கூறியுள்ளனர். அவருடைய கழுத்திற்கும் அக்கத்திக்கும் இடையே (இறைவனால்) செம்புத்தகடு வைக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வே நன்கறிபவன்.

அல்லாஹ்வின் பலிப்பொருள் அவர் தம் மகனின் கழுத்தில் கத்தியை வைத்து அறுத்தபோது, அவர் அல்லாஹ்வால் அழைக்கப்பட்டார். நாம் அவரை இப்ராஹீமே! என்று அழைத்தோம். திண்ணமாக, நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்திவிட்டீர். (37: 104) அதாவது உம்முடைய இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதில் எவ்வளவு துரிதமானவராக இருக்கிறீர்; எப்படி அவனுக்கு வழிப்படுகிறீர் என்று உம்மை நாம் சோதித்ததில் நீர் வெற்றிபெற்றுவிட்டீர். உம் உடலை நெருப்புக்கு வழங்கிடத் துணிந்ததைப்போல், உம்முடைய பொருளை விருந்தினருக்குச் செலவழிக்கத் துணிந்ததைப்போல், இப்போது உம் மகனையே இறைவனுக்காகப் பலியிடத் துணிந்துவிட்டீர். இதனால்தான், அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ்சோதனையாகும். (37: 106)

 அதாவது தெளிவான, வெளிப்படையான சோதனையாகும். நாம் ஒரு மகத்தான பலியைக்கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம் என்று அல்லாஹ் கூறுகின்றான். அதாவது, அவருடைய மகனை அறுப்பதற்குப் பகரமாக அவருக்கு எது இலகுவாக இருக்குமோ அதை நாம் அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தோம். அது வெண்மையான, நல்ல பார்வையுடைய, கொம்புகள் உடைய ஓர் ஆடு. அந்த ஆடு, மக்காவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மலை அருகில், ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்ததைக் கண்டார் என்பதே பெரும்பான்மையோரின் பிரபலமான கருத்தாகும்.

அது சொர்க்கத்தில் நாற்பது ஆண்டுகள் மேய்ந்து கொண்டிருந்த ஓர் ஆடு என்று இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறியதாக அஸ்ஸவ்ரீ (ரஹ்) அறிவித்துள்ளார். சயீத் பின் ஜுபைர் (ரஹ்) கூறியுள்ளார்: மக்காவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மலை பிளக்கின்றவரை சொர்க்கத்தில் அது மேய்ந்து கொண்டிருந்தது; அதன்மீது சிவப்பு உரோமம் இருந்தது. மேலும் இப்னு அப்பாஸ் (ரளி) கூறியுள்ளார்கள்: அவரிடம் மக்காவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மலையிலிருந்து ஓர் ஆடு இறங்கியது; அது கண்களையுடையது; கொம்புகள் உடையது; அந்த ஆடு சப்தமிடக்கூடியது; அதை அவர் அறுத்தார். ஆதமுடைய மகன் (ஹாபீல்) அல்லாஹ்வுக்காக அர்ப்பணம் செய்து, அவரிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆடுதான் அது. (நூல்: இப்னு அபீஹாத்திம்)

அந்த ஆட்டை அவர் மினாவில் அறுத்தார் என்று முஜாஹித் (ரஹ்) கூறியுள்ளார். மகாமே இப்ராஹீம் என்ற இடத்தில் அறுத்தார் என்று உபைத் பின் உமைர் (ரஹ்) கூறியுள்ளார். அந்த ஆடு ஓராண்டு பூர்த்தியான குட்டியாக இருந்தது என்று இப்னு அப்பாஸ் (ரளி) கூறியுள்ளார்கள். ஓராண்டுக்குள் உள்ள அதே வகையான ஒரு குட்டி என்று ஹசன் அல்பஸ் ரீ (ரஹ்) கூறியுள்ளார். இவ்விரண்டும் சரியாக இருக்கலாம் என்று சொல்ல முடியாது.
பின்னர், இது பற்றிக் கூறப்பட்டுள்ள பல செய்திகள் கட்டுக்கதைகளாகும். இது பற்றித் தேவையான தகவல்கள் நமக்கு திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. நிச்சயமாக அல்லாஹ் அவருக்குப் பகரமாக மிகப்பெரும் பலிப்பிராணியைக் கொடுத்தான். அது ஒரு பெரிய ஆடாகவே இருந்தது என்று நபிமொழிகள் மூலம் நாம் அறிகிறோம்.

அஹ்மத் (ரஹ்) கூறியுள்ளார்: பனூசுலைம் குலத்திலிருந்து ஒரு பெண் என்னிடம்-எங்கள் குடும்பத்தினர் அவளை வளர்த்தார்கள்- இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உஸ்மான் பின் தல்ஹா (ரளி) அவர்களின் வீட்டுக்கு ஆள் அனுப்பினார்கள் என்று கூறினாள். மற்றோர் அறிவிப்பில் அஹ்மத் (ரஹ்) கூறியுள்ளார்: அப்பெண் உஸ்மான் (ரளி) அவர்களிடம், உம்மை ஏன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள்? என்று கேட்டாள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இறையாலயத்தில் (கஅபா) நுழைந்தபோது நான் ஆட்டின் இரண்டு கொம்புகளைப் பார்த்தேன். அவ்விரண்டையும் மறைத்துவைக்குமாறு உம்மிடம் நான் சொல்ல மறந்துவிட்டேன். எனவே, நீர் அவ்விரண்டையும் மறைத்துவைப்பீராக! ஏனென்றால், தொழுபவரைத் திசைதிருப்பக்கூடிய எப்பொருளும் கஅபாவில் இருக்கக்கூடாது என்று என்னிடம் கூறினார்கள் என்று பதிலளித்தார். இதை ஸஃபிய்யா பின்த் ஷைபா அறிவித்துள்ளார். (நூல்: முஸ்னத் அஹ்மத்)

சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) கூறியுள்ளார்: ஆட்டின் இரண்டு கொம்புகள் அந்த இறையாலயத்தில் (கஅபா) மாட்டப்பட்டே இருந்தன. அந்த இறையில்லம் எரிந்துபோனபோது அவையும் எரிந்துவிட்டன.2

----------------அடிக்குறிப்புகள்------------------------


1.  இதே ஹதீஸை உபைத் பின் உமைர் (ரளி) அவர்களும் அறிவித்துள்ளார்.

2.  இஸ்மாயீல் (அலை) அவர்களுக்குப் பகரமாக வந்த ஆட்டை இப்ராஹீம் (அலை) அறுத்தார். அந்தக் காலத்தில் அவர்களின் மார்க்கப்படி அறுக்கப்பட்ட இறைச்சியை யாரும் சாப்பிடக்கூடாது. மாறாக, அதைக் குறிப்பிட்ட இடத்தில் வைத்துவிட வேண்டும். வானத்திலிருந்து ஒரு நெருப்பு இறங்கி அதைச் சாப்பிட்டுவிடும். அதுபோன்று இப்ராஹீம் (அலை) அறுத்த ஆட்டின் தலையைத் தவிர, மற்ற எல்லா பாகங்களும் குறிப்பிட்ட இடத்தில் வைக்கப்பட்டன. வானிலிருந்து நெருப்பு வந்து அதைச் சாப்பிட்டுவிட்டது. தலை மட்டும் கஅபாவின் சுவரில் மாட்டப்பட்டிருந்தது. முஹம்மத் (ஸல்) அவர்களின் காலம் வரை அவ்வாறே இருந்தது. முஹம்மத் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு முறை கஅபாவில் நெருப்புப் பிடித்துக்கொண்டது. அப்போது கஅபா எரிந்து கரிந்தபோது அந்த ஆட்டுத்தலையும் எரிந்து சாம்பலாகி விட்டது.




அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.

சனி, 20 நவம்பர், 2010

புதன், 10 நவம்பர், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 13)



கஅபாவை நிர்மாணித்தல்


பின்னர், அவர் தம் குடும்பத்தினரைச் சந்திக்காமல் நீண்ட காலம் வரை தங்கிவிட்டார். அதன் பிறகு ஒரு தடவை அவர்களிடம் வந்தார். அப்போது, இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஸம்ஸம் ஊற்று அருகே இருந்த அடர்ந்த நிழல் தரக்கூடிய மரத்தின்கீழ் தம்முடைய அம்பைத் தீட்டிக்கொண்டிருந்தார். அவர் தம்முடைய தந்தையைக் கண்டவுடன் அவரை நோக்கி எழுந்துசென்று வரவேற்றார். பின்னர், தந்தையும் மகனும் ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக்கொண்டனர். அதன் பின்னர், இஸ்மாயீலே! திண்ணமாக அல்லாஹ் எனக்கு ஒரு பணியை ஏவியுள்ளான் என்று கூறினார். (அப்படியா யின்)உம்முடைய இறைவன் ஏவிய விசயத்தைச் செய்து முடிப்பீர்! என்று மகன் கூறினார். நீர் எனக்கு ஓர் உதவிசெய்வீரா? என்று அவர் தம் மகனிடம் கேட்டார். நான் உமக்கு உதவிசெய்வேன் என்று மகன் கூறினார். திண்ணமாக அல்லாஹ், இங்கு ஓர் இறையில்லத்தைக் கட்டுமாறு என்னை ஏவியுள்ளான் என்று கூறிவிட்டு, அதனைச் சுற்றியிருந்த உயர்ந்த ஓரிடத்தைச் சுட்டிக்காட்டினார்.
அதன் பிறகு, அவ்விருவரும் இறையாலயத்திற்கான அடித்தளத்தை நிறுவினர். இஸ்மாயீல் நபி கற்களை எடுத்துவர, அவருடைய தந்தை இப்ராஹீம் நபி கட்டடத்தைக் கட்டினார். இறுதியில், கட்டடம் உயர்ந்துவிட்டது. (மகாமு இப்ராஹீம் எனும்) அந்தக் கல்லைக்கொண்டு வந்து, அவருக்காக வைத்தார். அவர் அதன் மீது ஏறி நின்றுகொண்டு கட்டடத்தைக் கட்டினார். இஸ்மாயீல் அவருக்கு உதவியாகக் கற்களை எடுத்துக்கொடுத்தார். அப்போது அவ்விருவரும் கூறினர்: எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக! திண்ணமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய். (2: 127)


அவ்விருவரும் அதைக் கட்டத் தொடங்கி, அதைச் சுற்றிவந்தபோது அவ்விருவரும் கூறினார்கள்: எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! திண்ணமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய் (2: 127) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


இப்ராஹீமுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் இடையே நடைபெற்ற நிகழ்வுகளெல்லாம் நடந்து முடிந்தன. அதன் பின்னர், அவர் தம் மகன் இஸ்மாயீலையும் இஸ்மாயீலின் தாயையும் (ஒரு வெட்டவெளியை நோக்கி) அழைத்துச் சென்றார். அவர்களிடம் ஒரு குடுவை இருந்தது. அதில் தண்ணீர் இருந்தது. அதன்பின் நடந்த நிகழ்ச்சிகளை அப்படியே இப்னு அப்பாஸ் (ரளி) கூறியுள்ளார்கள். (நூல்: புகாரீ)1


விருத்தசேதனம் செய்தல்


தவ்ராத் வேதத்தையுடையவர்கள் கூறியுள்ளனர்: நிச்சயமாக அல்லாஹ், இப்ராஹீமிடம் தம் மகன் இஸ்மாயீலுக்கும் அவருடன் இருந்த எல்லா அடிமைகளுக்கும் மற்றவர்களுக்கும் விருத்தசேதனம் செய்யுமாறு ஏவினான். எனவே, அவர் அவர்களுக்கு விருத்தசேதனம் செய்தார். இது அவருடைய 99 ஆம் வயது முடிவுற்றபின் நிகழ்ந்ததாகும். அந்நேரத்தில் இஸ்மாயீல் நபியின் வயது 13 ஆகும். இது, அவருடைய குடும்பத்தினர் அல்லாஹ்வுக்குப் பணிந்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் செய்த செயலாகும். இதை அவர் கடமை என்ற அடிப்படையில்தான் செய்தார். இதனால்தான் அறிஞர்கள், இது ஆண்கள் மீது கடமை (வாஜிபு) என்று கூறியுள்ளனர். இது பற்றி விளக்கமாக அதற்குரிய இடத்தில் பின்னர் கூறப்படும். இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் எண்பதாம் வயதில் கட்டைகளைச் செதுக்கக்கூடிய கருவியால் (கதூம்-வாய்ச்சி) விருத்தசேதனம் செய்துகொண்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரீ)2


சில அறிவிப்புகளில் பின்வருகின்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன: இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் எண்பதாம் வயதுக்குப் பிறகு விருத்தசேதனம் செய்துகொண்டார். அவர் கட்டைகளைச் செதுக்கக்கூடிய கருவியால் (கதூம்-வாய்ச்சியால்) விருத்தசேதனம் செய்துகொண்டார். (நூல்: முஸ்னத் அஹ்மத்) இங்கு இடம்பெற்றுள்ள `கதூம் எனும் சொல் ஒரு கருவியின் பெயரைக் குறிக்கிறது. அது ஓர் இடத்தின் பெயர் என்றும் கூறப்படுகிறது. மேற்கண்ட நபிமொழியில் இடம்பெற்றுள்ள `எண்பது வயது எனும் வார்த்தை அதைவிட அதிக வயது என்பதற்கு முரண் இல்லை. அல்லாஹ்வே நன்கறிந்தவன். அவருடைய மரணம் குறித்த நபிமொழியில் இது பற்றிய விளக்கத்தைக் காணலாம். இப்ராஹீம் நபி, தம்முடைய நூற்று இருபதாம் வயதில் விருத்தசேதனம் செய்துகொண்டார். அதன் பிறகு அவர் எண்பது ஆண்டுகள் வாழ்ந்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: இப்னு ஹிப்பான்)


அறுக்கப்பட்டவர் இஸ்மாயீல் நபியா?


அறுக்கப்பட்டவர் இஸ்மாயீல் நபிதான் என்ற வரலாறு மேலே எவ்விடத்திலும் கூறப்படவில்லை. அதேநேரத்தில் இப்ராஹீம் நபி தம் மகனார் இஸ்மாயீலைத் தேடி மூன்று தடவைதான் சென்றதாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் முதலாவது தடவை, ஹாஜிருடைய மரணத்திற்குப் பிறகு இஸ்மாயீல் நபி திருமணம் செய்துகொண்ட பின்னர் சந்திக்க வந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில், இஸ்மாயீல் நபியின் குழந்தைப் பருவம் முதல் அவருடைய வாலிபப் பருவம் வரை அவர்களுடைய (மனைவி, மகன்) நிலையைப் பற்றித் தெரிந்துகொள்ளாமலே, அவர்களைச் சந்திக்காமலே எப்படி அவர் விட்டிருப்பார்? அவருக்கு நிலம் (எளிதில் பயணம் செய்யத்தக்க வகையில்) சுருக்கப்பட்டிருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, அவர் அவர்களைச் சந்திக்கச் சென்றால், புராக் வாகனத்தில்தான் பயணம் செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது, அவருடைய மகனும் மனைவியும் உச்சக்கட்டத் தேவையில் இருந்தநிலையில் அவர்களின் வாழ்க்கை நிலையைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல் அவர் எப்படிப் பின்தங்கியிருப்பார்? மேற்கண்ட தகவல்களை வைத்துக்கொண்டு இப்ராஹீம் நபி பற்றி இவை போன்ற கேள்விகளை கேட்கத் தோன்றுகிறது.
ஆகவே, மேற்கண்ட தகவல்களுள் சில கட்டுக்கதைகளும் மர்ஃபூஉ ஹதீஸ்களோடு வேறு சில வார்த்தைகளைச் சேர்த்து அலங்கரிக்கப்பட்டவையுமே ஆகும். அதில் அறுக்கப்பட்டவரின் வரலாறு கூறப்படவில்லை. ஆனால், அஸ்ஸாஃப்ஃபாத் அத்தியாயத்தில் உள்ளபடி, அறுக்கப்பட்டவர் இஸ்மாயீல் நபிதான் என்பதற்கு நாம் ஆதாரம் காட்டியிருக்கிறோம். இது மிகவும் சரியான வரலாறு ஆகும். (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர்) 


அறுக்கப்பட்டவரின் வரலாறு


* மேலும், அவர் கூறினார்: திண்ணமாக நான் என்னுடைய இறைவனிடம் செல்பவன்; அவன் எனக்கு நல்வழியைக் காண்பிப்பான். என்னுடைய இறைவா! நீ எனக்கு நல்லோர்களிலிருந்து (ஒரு சந்ததியை) அளிப்பாயாக! (என்று பிரார்த்தனை செய்தார்). எனவே, நாம் அவருக்கு சகிப்புத் தன்மையுடைய (இஸ்மாயீல் எனும்) ஒரு மகனைக் கொண்டு நற்செய்தி கூறினோம்.


பின், (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய வயதை அடைந்தபோது அவர், என்னருமை மகனே! நான் உன்னை திண்ணமாக அறுத்துப் பலியிடுவதாகக் கனவுகண்டேன். இதைப் பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக! என்று கூறினார். (அதற்கு மகன்) கூறினார்: என்னருமைத் தந்தையே! நீர் ஏவப்பட்டபடியே செய்வீர். அல்லாஹ் நாடினால்- என்னை நீர் பொறுமையாளர்களுள் உள்ளவராகவே காண்பீர். ஆகவே அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, அவர் (இப்ராஹீம்) அவரை (இஸ்மாயீலைப்) பலியிட முகங்குப்புறக் கிடத்தியபோது, நாம் அவரை இப்ராஹீமே! என்று அழைத்தோம்.


திண்ணமாக, நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்திவிட்டீர்; நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலிகொடுக்கிறோம். இது தெளிவான ஒரு பெருஞ்சோதனையாகும். ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக்கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும், அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு நினைவூட்டுதலை) விட்டுவைத்தோம். இப்ராஹீம் மீது சாந்தி உண்டாவதாக! இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலிகொடுக்கிறோம். நிச்சயமாக அவர் இறைநம்பிக்கையாளர்களான நம் அடியார்களுள் உள்ளவர். நல்லோர்களிலுள்ள நபியாக இஸ்ஹாக்கை அவருக்கு (மகனாகத் தருவதாக) நாம் நற்செய்தி கூறினோம்.


நாம் அவர்மீதும், இஸ்ஹாக் மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம். மேலும், அவ்விருவருடைய சந்ததியருள் நன்மை செய்பவர்களும் இருக்கின்றார்கள்; தமக்குத்தாமே பகிரங்கமாக அநியாயம் செய்துகொள்வோரும் இருக்கின்றனர். (37: 99-113)


இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை


இப்ராஹீம் (அலை) அவர்கள் தம்முடைய நாட்டைவிட்டுத் துறந்து சென்றபோது, அவர் தம் இறைவனிடம், தமக்கு ஒரு நல்ல குழந்தையை வழங்குமாறு பிரார்த்தனை செய்தார் என்று அல்லாஹ் கூறுகின்றான். எனவே, அவர் பிரார்த்தனை செய்த தற்கு இணங்க, பொறுமைமிக்க ஆண் குழந்தையைத் தருவதாக அவன் அவருக்கு நற்செய்தி கூறினான். அவர்தாம் இமாயீல் ஆவார். ஏனெனில், இப்ராஹீம் நபியின் எண்பத்து ஆறாம் அகவையில் பிறந்த முதல் குழந்தையே இமாயீல் (அலை) அவர்கள்தாம். மார்க்க அறிஞர்கள் மத்தியில் இதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஏனெனில் அவர்தாம் இப்ராஹீம் நபியின் முதற் குழந்தை.




----------------அடிக்குறிப்பு------------------------


1) மேற்கண்ட ஹதீஸ்கள் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களின் கருத்துகளாகும். அவற்றுள் சில மர்ஃபூஉ நிலையில் உள்ளன. மேலும், அவற்றுள் சில `ஹரீப் தரத்தில் உள்ளன. இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறியவற்றுள் சில இஸ்ராயீலிய்யா-கட்டுக்கதைகளைச் சார்ந்தவை ஆகும். அதில் ஒன்று, (இப்ராஹீம் நபி இறையாலயத்தைக் கட்டிய)அப்போது இஸ்மாயீல் பால்குடிப் பாலகராக இருந்தார் என்பது ஆகும்.


2 ) அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்துள்ள இதே நபிமொழி `முஸ்லிம் நூலிலும் இடம்பெற்றுள்ளது.



அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.

செவ்வாய், 2 நவம்பர், 2010

தினமணி ஆசிரியருக்குக் கடிதம்

ஆர். நடராஜ் எழுதியிருந்த `விழலுக்கு நீர் பாய்ச்ச மாட்டோம் எனும் கட்டுரை படித்தேன். இலஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்று பொது அறிவிப்புச் செய்துவிட்டதாலோ `வாங்காதீர்கள்! கொடுக்காதீர்கள்! என்று வெறுமனே பரப்புரை செய்துகொண்டிருப்பதாலோ இதற்கு நிரந்தரத் தீர்வு கண்டுவிட முடியாது. பொதுவாக, ஒரு பிரச்சினையின் ஆணிவேரைக் கண்டுபிடித்து அதை முற்றிலும் களைவதுதான் அதற்குரிய தீர்வாகும். இலஞ்சத்தின் ஆணிவேர் `செய்யும் வேலைக்கு அதிகபட்சப் பிரதிபலனை எதிர்பார்ப்பதுதான்.
அரசு அலுவலகங்களில் ஒரே வகையான வேலைக்குப் பல ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அச்சமயத்தில் அவர்களுள் பலர் அலட்சியப்போக்கோடு செயல்படுகிறார்கள். அத்தகைய அலுவலகங்களில் `அவர் பார்த்துக்கொள்வார் என்ற பொறுப்பற்ற தன்மை சிலருக்கு உண்டு. `அவர் கையொப்பம் இட்டால்தான் அது முடியும் எனும் வகையான பணியிலுள்ள ஊழியர்களும் உள்ளனர். இவர்களிடம்தான் இலஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. இதைத் தடுக்க, அனைத்து அலுவலகங்களிலும் `டோக்கன் முறையைச் செயல்படுத்தலாம்.  யார் யார் எத்தனை வாடிக்கையாளர்களை, நுகர்வோர்களைச் சந்தித்துள்ளனர் என்பதற்கான கணக்கீடுதான் அந்த டோக்கன். அவற்றின் எண்ணிக்கைக்கேற்ப ஆண்டின் இறுதியில் அவர்களுக்கு `போனஸ்  வழங்கலாம். பொதுவாக வழங்கப்படுகின்ற போனசை இரத்துச் செய்து விட்டுப் பொதுமக்களுக்குப் பணிபுரிந்த டோக்கன் எண்ணிக்கை அடிப்படையில் `புள்ளிகள் வழங்கப்பட்டு அதற்கேற்ப போனஸ்   வழங்கலாம். இதனால் முந்திவந்தவர்கள், பிந்தி வந்தவர்கள் என்று நுகர்வோரிடையே சண்டை ஏற்படாது. அரசு ஊழியர்களும் தம் எதிர்காலப் பிரதிபலனை மனதிற்கொண்டு மகிழ்ச்சியுடன் பணிபுரிவர். இது நடைமுறைப்படுத்தப்பட்டால் இலஞ்சம் தானாகவே விடைபெற்றுக்கொள்ளும்.
-நூ. அப்துல் ஹாதி பாகவி,

வியாழன், 28 அக்டோபர், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 12)

சார்ரா அம்மையாரின் சீற்றம்

ஹாஜிர் (அலை) அவர்களுக்கு இஸ்மாயீல் (அலை) பிறந்தபோது, சார்ரா அம்மையாரின் சீற்றம் அதிகமானது. எனவே, அவர் தம் கணவர் இப்ராஹீம் (அலை) அவர்களிடம், ஹாஜிரை என் கண்பார்வையிலிருந்து மறைத்துவிடுவீராக! என்று கேட்டுக்கொண்டார். ஆகவே, இப்ராஹீம் நபியவர்கள் ஹாஜிரையும் அவருடைய மகன் இஸ்மாயீலையும்  அழைத்துச் சென்று, இன்று மக்கா என்று அழைக்கப்படுகின்ற இடத்தில் அவ்விருவரையும் விட்டுவிட்டார். அவருடைய குழந்தை இஸ்மாயீல் அந்நேரத்தில் பால்குடிப் பாலகராக இருந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
அங்கு அவர் அவ்விருவரையும் விட்டுவிட்டுத் திரும்பிச் சென்றார். ஹாஜிர் (அலை) எழுந்து அவருடைய ஆடையைப்  பிடித்துக்கொண்டு, “இப்ராஹீமே! எங்களை இங்கே விட்டுவிட்டு நீர் எங்கே செல்கின்றீர்? எங்களுக்குத் தேவையான அளவுக்கு (உணவுப்பொருள்) இங்கு இல்லையே?” என்று வினவினார். ஆனால், அவர் அவருக்கு பதிலளிக்கவில்லை. அவர் தொடர்படியாகக் கேள்விகள் கேட்டும் அவர் பதிலளிக்காதபோது, “இதைச் செய்ய அல்லாஹ்தான் உம்மை ஏவினானா?” என்று வினவினார். ஆம்! என்று பதிலளித்தார். அப்படியானால், அவன் எங்களை வீணாக விட்டுவிடமாட்டான் என்று ஹாஜிர் (அலை) மறுமொழி பகன்றார்.

ஷைக் அபூமுஹம்மத் பின் அபூஸைத் (ரஹ்) தம்முடைய `அந்நவாதிர் எனும் நூலில் கூறியுள்ளார்: திண்ணமாக சார்ரா (அலை) ஹாஜிர் (அலை) மீது கோபம்கொண்டார். எனவே, ஹாஜிருடைய மூன்று உறுப்புகளை வெட்டு (துளையிடு)வதாக சார்ரா அம்மையார் சத்தியம் செய்துகொண்டார். ஆகவே, இப்ராஹீம் (அலை) அவர்கள் ஹாஜிரிடம், இரண்டு காதுகளையும் துவாரமிட்டுக்கொள்வதோடு, அவருடைய கீழுறுப்பையும் விருத்தசேதனம் (கத்னா) செய்து (துளையிட்டுக்)கொள்ள வேண்டும் என்று ஏவினார். அதன் மூலம் சார்ரா (அலை), தாம் செய்த சத்தியத்தை நிறைவேற்றியவராக ஆகிவிட்டார்.

ஸ்ஸுஹைலீ (ரஹ்) கூறுகிறார்: பெண்களுள் முதன்முதலில் விருத்த சேதனம் (கத்னா) செய்துகொண்டவர் ஹாஜிர் (அலை) ஆவார். அவர்களுள் முதன்முதலில் தம் இரண்டு காதுகளில் துவாரமிட்டுக்கொண்டவரும் அவரே. முதன்முதலில் அவரே தம்முடைய ஆடையை நீளமாகத் தொங்கவிட்டார்.

மனைவி-மகனைத் துறத்தல்

முதன்முதலில் இடுப்புக் கச்சையை அணிந்தவர் இஸ்மாயீல் நபியின் தாயார் ஹாஜிர் (அலை) ஆவார். சார்ரா தம்மீது கொண்டுள்ள மனக்கசப்பை நீக்கிக்கொள்வதற்காகவே அவர் இடுப்புக் கச்சையை அணிந்துகொண்டார். பிறகு, இப்ராஹீம் (அலை) அவர்கள், அவரையும் அவருடைய பால்குடி மகனான இஸ்மாயீலையும் அழைத்துச் சென்றார். மஸ்ஜிதின் மேற்புறத்தில் ஸம்ஸம் அருகில் பெருமரத்தின் நிழலில் அவ்விருவரையும் விட்டுவிட்டார். அந்நாளில் மக்காவில் யாருமில்லை. அங்கு எந்தத் தண்ணீரும் இல்லை.  அவர்கள் அருகில் பேரீச்சம்பழம் நிறைந்த ஒரு பையையும் தண்ணீர் நிறைந்த ஒரு குடுவையையும் வைத்து,  அவ்விருவரையும் அங்கேயே விட்டுவிட்டார் என்று இப்னு அப்பாஸ் (ரளி)  கூறியுள்ளார்கள்.   (நூல்: புகாரீ)

இப்ராஹீம் நபி திரும்பிச் செல்லுதல்

அவ்விருவரையும் விட்டுவிட்டு இப்ராஹீம் நபி திரும்பிச் சென்றார். அவரைத் தொடர்ந்து பின்னாலேயே இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயாரும் சென்றார். எந்த மனிதரும், எந்தப் பொருளும் இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களை விட்டுவிட்டு இப்ராஹீமே! நீர் எங்கே செல்கின்றீர்? என்று அவர் வினவினார். இவ்வாறு அவர் பல தடவை கேட்டார். ஆனால், அவரோ அவரைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. அதன் பின்னர், “இவ்வாறு செய்ய அல்லாஹ்வா உம்மை ஏவினான்?” என்று வினவினார். ஆம்! என்று பதிலளித்தார். அப்படியானால், அவன் எங்களை வீணாக விட்டுவிடமாட்டான் என்று கூறிவிட்டுத் திரும்பி (அதே இடத்துக்கு) வந்துவிட்டார்.

இப்ராஹீம் (அலை) நடந்துசென்றார். யாரும் அவரைப் பார்க்க முடியாத மலைப்பாதை அருகே வந்து இறையாலயத்தை முன்னோக்கி, தம் இரண்டு கைகளை உயர்த்திப் பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்: எங்கள் இறைவா! திண்ணமாக நான் என் வழித்தோன்றல்களுள் சிலரைப் பயிரற்ற பள்ளத்தாக்கு ஒன்றில், உனது புனித ஆலயத்திற்கு அருகே  குடியமர்த்தியுள்ளேன். எங்கள் இறைவா!  இவர்கள் தொழுகையைக் கடைப்பிடிப்பதற்காகவே (இவ்வாறு செய்தேன்). எனவே, மக்களுள் சிலருடைய இதயங்களை இவர்கள்பால் கவரச் செய்வாயாக! இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக! (இதன்மூலம்) இவர்கள் நன்றி செலுத்துவோர் ஆகலாம் (என்றும் இப்ராஹீம் பிரார்த்தனை செய்தார்).  (14: 37)

ஸ்மாயீலின் தாய் அவருக்கு அமுதூட்டத் தொடங்கினார். அவர் அருகில் இருந்த தண்ணீரை அருந்தத் தொடங்கினார். அந்தத் தண்ணீர்க் குடுவையில் தண்ணீர் இருந்த வரை அதை அவர் அருந்தினார். அது முடிந்தபின் அவரும் அவருடைய பிள்ளையும் தாகம்கொண்டனர். அவருடைய குழந்தை சிரமப்படுவதைப் பார்த்தார். அக்குழந்தையைப் பார்க்கச் சகிக்காமல் (அங்கிருந்து) நடந்தார். அவருக்கு அருகில் ஸஃபா குன்று இருந்ததைக் கண்டார்.  அக்குன்றின் மேல் ஏறினார். பின்னர் அந்தப் பள்ளத்தாக்கை முன்னோக்கி யாராவது வருகிறாரா என்று பார்த்தார். ஆனால், அவர் யாரையும் காணவில்லை. எனவே ஸஃபாவிலிருந்து இறங்கினார். பின்னர், அந்தப் பள்ளத்தாக்கின் நடுப்பகுதியை அவர் அடைந்தபோது, அவர் தம்முடைய உடற்கவசத்தின் ஓரத்தை உயர்த்திக்கொண்டார். பிறகு, அவர்  சிரமப்படக்கூடியவன் ஓடுவதைப்போல் ஓடினார். அவ்வாறே அவர் அந்தப் பள்ளத்தாக்கைக் கடந்துவிட்டார். பின்னர், மர்வா குன்றுக்கு வந்தார். அதன் மீது ஏறினார். யாராவது வருகின்றாரா என்று தேடிப் பார்த்தார். ஆனால், அவர் யாரையும் காணவில்லை. இவ்வாறே அவர் ஏழு தடவை செய்தார்.
அதனால்தான் (இன்றைய) மக்கள் அவ்விரண்டையும் (ஸஃபா-மர்வா) சயீ செய்கின்றார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

ஸம்ஸம் தண்ணீர் ஹாஜிர் (அலை)  மர்வாவை அடைந்தபோது ஒரு சப்தத்தைக் கேட்டார். அமைதியாக இரு! என்று தம்மைத்தாமே கூறிக்கொண்டார். பிறகு, அவர் கூர்ந்து கவனித்தபோது மீண்டும் அந்தச் சப்தத்தைக் கேட்டார். உன்னிடம் உதவி இருப்பதால்தான் நீ கேட்கச் செய்திருக்கிறாய் என்று கூறிக்கொண்டே அப்பக்கம் பார்த்தார். அங்கே ஸம்ஸம் தண்ணீர் (இடத்தின்) அருகே ஒரு வானவர் இருப்பதைக் கண்டார். அவர் தம்முடைய குதிங்காலால் (அல்லது சிறகால்) அதைத் தோண்டினார்; தண்ணீர் வெளிவந்தது; அதனைச் சுற்றி ஹாஜிர் பாத்தி கட்டத் தொடங்கினார்; அவர் தம் கையாலே ஸம்ஸம் (நில்நில்) என்று சொல்லலானார்; தம் கைகளால் தண்ணீரை எடுத்துக் குடுவையில் நிரப்பினார்; அவர் (தமக்குத் தேவையான) தண்ணீரை எடுத்துக்கொண்டபோதும் அது நில்லாமல் பொங்கிவழிந்து கொண்டிருந்தது.
ஸ்மாயீலின் தாய்க்கு அல்லாஹ் அருள்புரியட்டும்! அவர் ஸம்ஸமை (பாத்தி கட்டாமல் அப்படியே) விட்டிருந்தால் அது ஓடிக்கொண்டிருக்கும் ஓர் ஊற்றாக ஆகியிருக்கும். அவர் அதிலிருந்து பருகினார்; தம் பிள்ளைக்குப் பாலூட்டினார். அப்போது ஒரு வானவர் அவரிடம், “நீர் வீணாகப் போய்விடுவீர் என்று அஞ்சாதீர்!; ஏனென்றால், இவ்விடத்தில் அல்லாஹ்வுக்காக ஒரு வீடு இருக்கிறது. அவ்வீட்டை இந்தச் சிறுவரும் அவருடைய தந்தையும் கட்டுவார்கள் என்று கூறினார். நிச்சயமாக அல்லாஹ் அவருடைய குடும்பத்தினரை வீணாக விட்டுவிடமாட்டான் என்று வானவர் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறியதை இப்னு அப்பாஸ் (ரளி)  அறிவித்துள்ளார்கள்.

இறையாலயத்தைக் கட்டத் தொடங்குதல்

அவ்வீடு நிலத்தைவிட்டு உயர்ந்து ஒரு குன்றைப் போல் (உயர்ந்து) நின்றது. (அவ்வப்போது) அதனை நோக்கி பெருவெள்ளம் வரும். அது இடப்புறத்தையும் வலப்புறத்தையும் அரித்துச் செல்லும். ஜுர்ஹும் குலத்தினர் அவ்விடத்திற்கு வருகின்ற வரை அது அவ்வாறே இருந்தது. அவர்கள் கதாஉ என்ற இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.  அவர்கள் மக்காவின் தாழ்வான ஒரு பகுதியில் தங்கினர். அப்போது அவர்கள் ஒரு பறவை வட்டமிடுவதைக் கண்டார்கள். திண்ணமாக அந்தப் பறவை தண்ணீரைக் கண்டுதான் சுற்றிக்கொண்டிருக்கிறது. எனவே, நாம் அந்தப் பள்ளத்தாக்கை நோக்கிச் சென்று, அங்குள்ள தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று (பேசிக்கொண்டனர்).  ஆகவே, அவர்கள் அதனை நோக்கி ஓரிரு சிறுவர்களை அனுப்பி, தகவல் தெரிந்துவரச் செய்தனர். அவர்கள் சென்று பார்த்தபோது (தாம் நாடிய) தண்ணீர் அவர்களுக்கு அருகிலேயே இருந்தது. எனவே அவர்கள் (தம்முடைய உறவினர்களிடம்) திரும்பிச் சென்று அங்குத் தண்ணீர் இருப்பதைத் தெரிவித்தனர். இதைக் கேட்டவுடன் அவர்கள் அதை நோக்கிச் சென்றனர்.
ஸ்மாயீலின் தாய் தண்ணீர் அருகே இருந்ததைக் கண்ட அவர்கள், “நாங்கள் இங்குத் தங்குவதற்குத்  தாங்கள் அனுமதி தருகின்றீர்களா?” என்று கேட்டனர். ஆம்! நான் அனுமதிக்கிறேன். ஆனால், எங்களிடம் உள்ள தண்ணீரில் உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று பதிலளித்தார். அதற்கு அவர்கள், அதை ஆமோதித்தனர்.
ஸ்மாயீலின் தாய் மனிதர்களை விரும்புகின்ற நிலையில், அவர்கள் அங்கு வந்து தங்கியது அவருக்கு ஆறுதலைக் கொடுத்தது. எனவே, அவர்கள் அங்கே தங்கினார்கள். அவர்கள் தம் குடும்பத்தினர் எல்லோருக்கும் சொல்லி அனுப்பினார்கள். அவர்களோடு அவர்களின் குடும்பத்தினரும் வந்து தங்கினர். இறுதியில், அவர்கள் மூலம் பல வீடுகள் உண்டாகிவிட்டன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரளி) அறிவித்துள்ளார்கள்.

ஸ்மாயீல் நபியின் திருமணம்

ஸ்மாயீல் (அலை) வாலிபர் ஆனார். அம்மக்களிடம் அரபிமொழியைக் கற்றுக்கொண்டார். அவர் இளைஞராக ஆனபோது அவர்கள் மத்தியில் ஒரு சிறப்பிற்குரியவராகவும் கண்ணியத்திற்குரியவராகவும் ஆகிவிட்டார். அவர் பருவ வயதை அடைந்தவுடன் அவர்களிலிருந்து ஒரு பெண்ணை அவருக்கு மணமுடித்து வைத்தனர்.

ஸ்மாயீலின் தாய் மரணமடைந்துவிட்டார். இஸ்மாயீல் (அலை) அவர்களின் திருமணத்திற்குப் பிறகு, தாம் விட்டுச்சென்ற தம் குடும்பத்தினரைப் பார்க்க இப்ராஹீம் (அலை) வந்தார். அவர் இஸ்மாயீலைக் காணவில்லை. அவர் தம் மகனின் மனைவியிடம் (மருமகள்) கேட்டார். அவர் எங்களுக்காக உழைத்துப் பொருளீட்டச் சென்றுள்ளார் என்று பதிலளித்தார். பின்னர், அவர்களுடைய வாழ்க்கை நிலையைப் பற்றி அவரிடம் விசாரித்தார். அதற்கு அவர், “நாங்கள் பெரும் துன்பத்தில் இருக்கிறோம்; மிகவும் சிரமமான நிலையிலும் சிக்கலிலும் வாழ்ந்து வருகிறோம் என்று கூறி அவரிடம் தம் வாழ்க்கையைப் பற்றி முறையிட்டார். உம்முடைய கணவர் வந்தால் என்னுடைய சலாமை அவருக்குச் சொல்வீர்! அவர், உம்முடைய வீட்டின் வாசற்படியை மாற்றியமைக்கச் சொன்னார் என்று தெரிவிப்பீர்! என்று கேட்டுக்கொண்டார்.

ஸ்மாயீல் (அலை) அவர்கள் தம் பணியிலிருந்து திரும்பி தம் இல்லம் அடைந்தபோது, யாரோ ஒரு மனிதர் வந்து சென்றதைப் போன்று உணர்ந்தார். யாரேனும் உம்மிடம் வந்தாரா?” என்று வினவினார். ஆம்! இந்த மாதிரி ஒரு முதியவர் வந்தார். உம்மைப் பற்றிக் கேட்டார். நான் அவருக்கு உம்மைப் பற்றித் தெரிவித்தேன். நம்முடைய வாழ்க்கையைப் பற்றிக் கேட்டார். நாங்கள் மிகுந்த சிரமத்திலும் துன்பத்திலும் வாழ்ந்து வருகிறோம் என்று கூறினேன்எனத் தெரிவித்தார். அவர் ஏதேனும் அறிவுரை கூறினாரா?” என்று விசாரித்தார். ஆம்! உமக்கு அவருடைய சலாமைத் தெரிவிக்கச் சொன்னார். உம்முடைய வீட்டின் வாசற்படியை மாற்றியமைக்கச் சொன்னார் என்று அப்பெண் கூறினார்.
.
அப்போது இஸ்மாயீல் (அலை), “வந்தவர் என்னுடைய தந்தை ஆவார். நான் உன்னைப் பிரித்துவிடுமாறு எனக்கு அவர் கட்டளையிட்டுள்ளார். எனவே, நீ உன்னுடைய தாய்வீட்டுக்குச் சென்று அவர்களோடு இருந்துகொள் என்று கூறிவிட்டு, அவரை மணவிலக்குச் செய்துவிட்டார். பின்னர், அந்த வமிசத்திலிருந்து மற்றொரு பெண்ணை அவர் மணந்துகொண்டார். பின்னர், அல்லாஹ் நாடிய காலம் வரை இப்ராஹீம் (அலை) தம் பிள்ளையைப் பார்க்க வரவில்லை. (நீண்ட காலத்திற்குப் பிறகு) ஒரு நாள் அங்கு வந்தார். ஆனால், அவர் இஸ்மாயீலைக் காணவில்லை. அவருடைய மனைவியிடம் சென்று, தம் மகனைப் பற்றி விசாரித்தார். அவர் எங்களுக்காக உழைத்துச் சம்பாதிக்கச் சென்றுள்ளார் என்று பதிலளித்தார். நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? உங்களுடைய வாழ்க்கைநிலை எப்படி இருக்கிறது? என்று அவரிடம் அவர் வினவினார். நாங்கள் நலவுடனும்  செல்வநிலையிலும் இருக்கிறோம் என்று கூறிவிட்டு அவர் அல்லாஹ்வைப் புகழ்ந்தார். பின்னர், அவர், உம்முடைய உணவு என்ன? என்று இப்ராஹீம்  (அலை)  வினவினார். `இறைச்சி என்று அவர் பதிலளித்தார். நீங்கள் அருந்துகின்ற பானம் என்ன? என்று வினவினார். `தண்ணீர் என்று விடையளித்தார். அதைக் கேட்ட அவர், “இறைவா! அவர்களுடைய இறைச்சியிலும் தண்ணீரிலும் நீ அருள்புரிவாயாக! என்று பிரார்த்தனை செய்தார். 

அந்நாளில் அவர்கள் தானியங்களைச் சாப்பிடவில்லை. அவர்களிடம் தானியம் இருந்திருந்தால் அவர் அவர்களுக்காக அதில் அருள்புரியும்படி பிரார்த்தனை செய்திருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், மக்கா அல்லாத இடத்தில் அவ்விரண்டும் கிடைக்கப் பெறாமல் யாரும் இருக்கமாட்டார் என்று கூறினார்கள்.

பின்னர், இப்ராஹீம் (அலை) அவர்கள், “உம்முடைய கணவர் வந்தால் என்னுடைய சலாமை அவருக்குச் சொல்வீர்! மேலும், அவருடைய வீட்டின் கதவை நிலைப்படுத்தி வைத்துக்கொள்ளச் சொல்வீர்! என்று கூறினார். இஸ்மாயீல் (அலை) அவர்கள்  பணியிலிருந்து  தம் இல்லம் திரும்பியபோது, “யாரேனும் வந்தாரா?” என்று வினவினார். ஆம்! நல்ல தோற்றமுடைய ஒரு முதியவர் வந்தார் என்று கூறிவிட்டு அவரை அந்தப் பெண்மணி புகழ்ந்தார். அவர் உம்மைப் பற்றிக் கேட்டார். நான் அவருக்கு உம்மைப் பற்றிச் சொன்னேன். நம்முடைய வாழ்க்கை நிலையைப் பற்றி விசாரித்தார். நான் நன்றாக இருப்பதாகத் தெரிவித்தேன் என பதிலளித்தார்.  அவர்  உன்னிடம் ஏதேனும் அறிவுரை கூறினாரா?” என்று அவர் கேட்டார். ஆம்! அவர் உமக்கு சலாம் கூறக் கேட்டுக்கொண்டார். மேலும்,  அவர் உம்முடைய வீட்டின் கதவை நிலைப்படுத்தி வைத்துக்கொள்ளும்படி கூறினார் என்று பதிலளித்தார். வந்தவர் என் தந்தைதான். வீட்டின் கதவு என்பது நீதான். நான்  உன்னை நிலையாக வைத்துக்கொள்ள அவர் என்னை ஏவியுள்ளார் என்று கூறினார்.

அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.

  




திங்கள், 25 அக்டோபர், 2010

இரத்த தானம் செய்வோம்!