செவ்வாய், 30 நவம்பர், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 14)

இஸ்மாயீலை அறுக்க ஆணை


அல்லாஹ் கூறியுள்ள, பின்னர், (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய வயதை அடைந்தபோது என்ற வசனம் குறிப்பிடத்தக்கது. அதாவது அவர் வாலிபராகி, தந்தையைப் போல் நற்செயல்களில் ஈடுபட முற்பட்டபோது அல்லாஹ் இவ்வாறு ஆணையிட்டான். முஜாஹித் (ரஹ்) கூறியுள்ளார்: அந்த வசனத்தின் விளக்கம், அவர் வாலிபராகி பயணம் செய்தார்; அவருடைய தந்தை செய்கின்ற முயற்சி, நற்செயல் போன்றவற்றை அவரும் செய்ய இயன்றபோது, அல்லாஹ் இவ்வாறு ஆணையிட்டான் என்பதாகும். இவ்வாறு அவர் வாலிபராக ஆனபோது, இப்ராஹீம் தமது கனவில், அவருடைய மகனை (அல்லாஹ்வுக்காக) அறுக்குமாறு ஏவப்பட்டார்.
இப்னு அப்பாஸ் (ரளி) அறிவித்துள்ள `மர்ஃபூஉ’ ஆன ஹதீஸில் வருகிறது: நபிமார்களின் கனவு வேத அறிவிப்பு (வஹீ)தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: தப்ரானீ)1

தன்னுடைய நண்பரான இப்ராஹீமின் முதுமைப் பருவத்தில், அவரோ தளர்ந்து போய்விட்ட நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட அவருடைய அன்புக்குரிய குழந்தையை அறுக்க அல்லாஹ் உத்தரவிட்டது, இறைச்சோதனையாகும். இப்ராஹீம் (அலை) அவர்கள், தம்முடைய மகனையும் தம்முடைய மனைவியையும் யாருமில்லா வறண்ட நிலத்தில், புற்பூண்டுகளோ மனிதர்களோ எந்த விவசாயமோ விளைச்சலோ இல்லாத பள்ளத்தாக்கில் விட்டுவிடுமாறு கட்டளையிடப்பட்டார். எனவே, அவர் அல்லாஹ் தமக்கு இட்ட கட்டளைக்குப் பணிந்தார். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து அவன் மீதே உறுதிகொண்டு அவ்விருவரையும் பாலைவனத்தில் விட்டுவிட்டார். ஆனால், அல்லாஹ் அவ்விருவருக்கும் மகிழ்ச்சியையும் உணவிற்கான வழியையும் அமைத்துக்கொடுத்தான். அவ்விருவரும் எதிர்பாராவிதத்தில் அவர்களுக்கு அவன் உணவு வழங்கி னான்.
இவை அனைத்துக்கும் பிறகு, அல்லாஹ் அவருடைய குழந்தையை அறுக்கக் கட்டளையிட்டான். அல்லாஹ்வுடைய கட்டளையை அவர் நிறைவேற்ற இது ஒரு தனிப்பட்ட பெரும் சோதனையாகும். அந்த இஸ்மாயீல்தான் ஒரே குழந்தை; அவரைத் தவிர அவருக்கு வேறு குழந்தை ஏதும் இல்லை. இருப்பினும், அவர் தம் இறைவனுடைய கட்டளைக்குப் பணிந்தார்; எனவே, தம்முடைய இறைவனின் கட்டளையை நிறைவேற்ற விரைந்தார்.
பின்னர், அவரைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று நிர்ப்பந்தித்து அறுப்பதைவிட அவரது சுயவிருப்பத்துடனும் மனநிறைவுடனும் எளிய முறையில் அச்செயலை நிறைவேற்றுவதற்காகவே அவ்விசயத்தைத் தம் மகனிடம் சொன்னார். என்னருமை மகனே! திண்ணமாக நான் உன்னை அறுத்துப் பலியிடுவதாகக் கனவுகண்டேன். இதைப் பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக! (37: 102) என்று கூறினார்.

பொறுமைமிக்க அந்தச் சிற்றிளைஞர், தம் தந்தை இப்ராஹீமுக்கு நன்மை செய்ய விரைந்தார். அவர் தம் தந்தையிடம் கூறினார்: என்னருமைத் தந்தையே! நீர் ஏவப்பட்டபடியே செய்வீர். அல்லாஹ் நாடினால்- என்னை நீர் பொறுமையாளர்களுள் உள்ளவராகவே காண்பீர். (37: 102) அவருடைய இந்த பதில் மிக நேர்மையானதாகும். தம் தந்தைக்கும் அடியார்களின் இறைவனுக்கும் அவருடைய பணிவின் வெளிப்பாடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்: அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, அவர் (இப்ராஹீம்) அவரை (இஸ்மாயீலைப்) பலியிட முகங்குப்புறக் கிடத்திய போது...(37: 103) அதாவது அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்றுக்கொண்டு, அதன்மீதே அவ்விருவரும் உறுதிகொண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது இந்த வாக்கியத்தில் வார்த்தைகள் முன்-பின் ஆக்கப்பட்டுள்ளன. அவரை அவர் முகங்குப்புற கிடத்தினார் என்பதன் பொருள், அவர் அவருடைய முகத்தைக் கீழே வைத்தார் என்பதாகும். மற்றொரு கருத்து, அவர் அவருடைய முகத்தைப் பார்க்காமல் இருப்பதற்காக, அவருடைய பிடரியிலிருந்து அறுக்க நாடினார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதையே இப்னு அப்பாஸ் (ரளி), முஜாஹித், சயீத் பின் ஜுபைர், கத்தாதா, ளஹ்ஹாக் (ரஹ்-அலைஹிம்) போன்றோர் கூறியுள்ளனர்.

மாறாக, அறுக்கப்படுகின்ற பிராணிகள் எவ்வாறு படுக்கவைக்கப்படுகின்றனவோ அவ்வாறே அவர் தம் மகனைப் படுக்கவைத்தார். அவருடைய நெற்றியின் ஓரம் நிலத்தில் ஒட்டியவாறு இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. `வஅஸ்லமா என்பதன் பொருள், இப்ராஹீம் பிஸ்மில்லாஹ் கூறி, தக்பீர் கூறினார். அந்தச் சிறுவர், மரணத்திற்கான `ஷஹாதத் கலிமாவைக் கூறினார் என்பதாகும். அவர் தம் மகனின் கழுத்தில் கத்தியைச் செலுத்தினார். ஆனால், அக்கத்தி அவரைச் சிறிதளவும் அறுக்கவில்லை என்று சுத்தீ (ரஹ்) மற்றும் வேறு சிலர் கூறியுள்ளனர். அவருடைய கழுத்திற்கும் அக்கத்திக்கும் இடையே (இறைவனால்) செம்புத்தகடு வைக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வே நன்கறிபவன்.

அல்லாஹ்வின் பலிப்பொருள் அவர் தம் மகனின் கழுத்தில் கத்தியை வைத்து அறுத்தபோது, அவர் அல்லாஹ்வால் அழைக்கப்பட்டார். நாம் அவரை இப்ராஹீமே! என்று அழைத்தோம். திண்ணமாக, நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்திவிட்டீர். (37: 104) அதாவது உம்முடைய இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதில் எவ்வளவு துரிதமானவராக இருக்கிறீர்; எப்படி அவனுக்கு வழிப்படுகிறீர் என்று உம்மை நாம் சோதித்ததில் நீர் வெற்றிபெற்றுவிட்டீர். உம் உடலை நெருப்புக்கு வழங்கிடத் துணிந்ததைப்போல், உம்முடைய பொருளை விருந்தினருக்குச் செலவழிக்கத் துணிந்ததைப்போல், இப்போது உம் மகனையே இறைவனுக்காகப் பலியிடத் துணிந்துவிட்டீர். இதனால்தான், அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ்சோதனையாகும். (37: 106)

 அதாவது தெளிவான, வெளிப்படையான சோதனையாகும். நாம் ஒரு மகத்தான பலியைக்கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம் என்று அல்லாஹ் கூறுகின்றான். அதாவது, அவருடைய மகனை அறுப்பதற்குப் பகரமாக அவருக்கு எது இலகுவாக இருக்குமோ அதை நாம் அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தோம். அது வெண்மையான, நல்ல பார்வையுடைய, கொம்புகள் உடைய ஓர் ஆடு. அந்த ஆடு, மக்காவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மலை அருகில், ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்ததைக் கண்டார் என்பதே பெரும்பான்மையோரின் பிரபலமான கருத்தாகும்.

அது சொர்க்கத்தில் நாற்பது ஆண்டுகள் மேய்ந்து கொண்டிருந்த ஓர் ஆடு என்று இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறியதாக அஸ்ஸவ்ரீ (ரஹ்) அறிவித்துள்ளார். சயீத் பின் ஜுபைர் (ரஹ்) கூறியுள்ளார்: மக்காவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மலை பிளக்கின்றவரை சொர்க்கத்தில் அது மேய்ந்து கொண்டிருந்தது; அதன்மீது சிவப்பு உரோமம் இருந்தது. மேலும் இப்னு அப்பாஸ் (ரளி) கூறியுள்ளார்கள்: அவரிடம் மக்காவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மலையிலிருந்து ஓர் ஆடு இறங்கியது; அது கண்களையுடையது; கொம்புகள் உடையது; அந்த ஆடு சப்தமிடக்கூடியது; அதை அவர் அறுத்தார். ஆதமுடைய மகன் (ஹாபீல்) அல்லாஹ்வுக்காக அர்ப்பணம் செய்து, அவரிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆடுதான் அது. (நூல்: இப்னு அபீஹாத்திம்)

அந்த ஆட்டை அவர் மினாவில் அறுத்தார் என்று முஜாஹித் (ரஹ்) கூறியுள்ளார். மகாமே இப்ராஹீம் என்ற இடத்தில் அறுத்தார் என்று உபைத் பின் உமைர் (ரஹ்) கூறியுள்ளார். அந்த ஆடு ஓராண்டு பூர்த்தியான குட்டியாக இருந்தது என்று இப்னு அப்பாஸ் (ரளி) கூறியுள்ளார்கள். ஓராண்டுக்குள் உள்ள அதே வகையான ஒரு குட்டி என்று ஹசன் அல்பஸ் ரீ (ரஹ்) கூறியுள்ளார். இவ்விரண்டும் சரியாக இருக்கலாம் என்று சொல்ல முடியாது.
பின்னர், இது பற்றிக் கூறப்பட்டுள்ள பல செய்திகள் கட்டுக்கதைகளாகும். இது பற்றித் தேவையான தகவல்கள் நமக்கு திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. நிச்சயமாக அல்லாஹ் அவருக்குப் பகரமாக மிகப்பெரும் பலிப்பிராணியைக் கொடுத்தான். அது ஒரு பெரிய ஆடாகவே இருந்தது என்று நபிமொழிகள் மூலம் நாம் அறிகிறோம்.

அஹ்மத் (ரஹ்) கூறியுள்ளார்: பனூசுலைம் குலத்திலிருந்து ஒரு பெண் என்னிடம்-எங்கள் குடும்பத்தினர் அவளை வளர்த்தார்கள்- இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உஸ்மான் பின் தல்ஹா (ரளி) அவர்களின் வீட்டுக்கு ஆள் அனுப்பினார்கள் என்று கூறினாள். மற்றோர் அறிவிப்பில் அஹ்மத் (ரஹ்) கூறியுள்ளார்: அப்பெண் உஸ்மான் (ரளி) அவர்களிடம், உம்மை ஏன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள்? என்று கேட்டாள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இறையாலயத்தில் (கஅபா) நுழைந்தபோது நான் ஆட்டின் இரண்டு கொம்புகளைப் பார்த்தேன். அவ்விரண்டையும் மறைத்துவைக்குமாறு உம்மிடம் நான் சொல்ல மறந்துவிட்டேன். எனவே, நீர் அவ்விரண்டையும் மறைத்துவைப்பீராக! ஏனென்றால், தொழுபவரைத் திசைதிருப்பக்கூடிய எப்பொருளும் கஅபாவில் இருக்கக்கூடாது என்று என்னிடம் கூறினார்கள் என்று பதிலளித்தார். இதை ஸஃபிய்யா பின்த் ஷைபா அறிவித்துள்ளார். (நூல்: முஸ்னத் அஹ்மத்)

சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) கூறியுள்ளார்: ஆட்டின் இரண்டு கொம்புகள் அந்த இறையாலயத்தில் (கஅபா) மாட்டப்பட்டே இருந்தன. அந்த இறையில்லம் எரிந்துபோனபோது அவையும் எரிந்துவிட்டன.2

----------------அடிக்குறிப்புகள்------------------------


1.  இதே ஹதீஸை உபைத் பின் உமைர் (ரளி) அவர்களும் அறிவித்துள்ளார்.

2.  இஸ்மாயீல் (அலை) அவர்களுக்குப் பகரமாக வந்த ஆட்டை இப்ராஹீம் (அலை) அறுத்தார். அந்தக் காலத்தில் அவர்களின் மார்க்கப்படி அறுக்கப்பட்ட இறைச்சியை யாரும் சாப்பிடக்கூடாது. மாறாக, அதைக் குறிப்பிட்ட இடத்தில் வைத்துவிட வேண்டும். வானத்திலிருந்து ஒரு நெருப்பு இறங்கி அதைச் சாப்பிட்டுவிடும். அதுபோன்று இப்ராஹீம் (அலை) அறுத்த ஆட்டின் தலையைத் தவிர, மற்ற எல்லா பாகங்களும் குறிப்பிட்ட இடத்தில் வைக்கப்பட்டன. வானிலிருந்து நெருப்பு வந்து அதைச் சாப்பிட்டுவிட்டது. தலை மட்டும் கஅபாவின் சுவரில் மாட்டப்பட்டிருந்தது. முஹம்மத் (ஸல்) அவர்களின் காலம் வரை அவ்வாறே இருந்தது. முஹம்மத் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு முறை கஅபாவில் நெருப்புப் பிடித்துக்கொண்டது. அப்போது கஅபா எரிந்து கரிந்தபோது அந்த ஆட்டுத்தலையும் எரிந்து சாம்பலாகி விட்டது.




அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.

கருத்துகள் இல்லை: