செவ்வாய், 12 அக்டோபர், 2010

செவ்வாய், 5 அக்டோபர், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 10)

இப்ராஹீம் நபி கூறியது பொய்யா?


இப்ராஹீம் மூன்று பொய்களைத் தவிர கூறவில்லை. அவற்றுள் இரண்டு அல்லாஹ்விற்காக இருந்தன. ஒன்று: நான் நோயாளி என்று கூறியதாகும். இரண்டாவது: மாறாக, அவற்றுள் பெரியதுதான் அதைச் செய்தது என்று கூறியதாகும். ஒரு நாள் இப்ராஹீம் நபியும் சார்ரா அம்மையாரும் ஓர் ஊரில் இருந்த கொடுங்கோல் அரசனிடம் வந்துவிட்டார்கள். இச்செய்தி அங்கிருந்த அந்த அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டது: இங்கு ஒருவருடன் ஓர் அழகான பெண் இருக்கிறாள். அதைக் கேட்டவுடன் அவரை (இப்ராஹீம்) அழைத்து வர ஆள் அனுப்பினான். அப்பெண் பற்றி அவரிடம் அந்த அரசன், அவள் யார்? என்று கேட்டான். இப்ராஹீம் நபி, அவள் என் சகோதரி என்று கூறிவிட்டார். அவர் சார்ரா அம்மையாரிடம் வந்தார். சார்ரா! உன்னையும் என்னையும் தவிர இந்நிலப்பரப்பில் (தற்போது) எந்த நம்பிக்கையாளரும் இல்லை. அவன் என்னிடம் (உன்னைப் பற்றிக்) கேட்டான். திண்ணமாக நீ என்னுடைய சகோதரி என்று கூறிவிட்டேன். எனவே நீ (உண்மையைச் சொல்லி) என்னைப் பொய்யனாக்கிவிடாதே! என்று தம் மனைவியிடம் கூறினார்.




அப்போது அந்த அரசன் சார்ரா (அலை) அவர்களை அழைத்துவர ஆள் அனுப்பினான். சார்ரா அவனிடம் சென்றபோது, அந்த அரசன் சார்ராவை அடைய வேண்டுமென்ற நோக்கத்தில், அவரை நெருங்கினான். அதேநேரத்தில், அவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப்பட்டான். எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வீர்! நான் உமக்கு எந்தத் தொல்லையும் கொடுக்க மாட்டேன் என்று அவன் கெஞ்சினான். எனவே அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்; அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, இரண்டாம் தடவையும் அவன் அவரை அணைக்க நெருங்கினான்; இப்போது அவன் முன்பு போலவே தண்டிக்கப்பட்டான். அல்லது அதைவிடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போது, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வீர்! நான் உமக்கு எந்தத் தொல்லையும் கொடுக்க மாட்டேன் என்று அவன் கெஞ்சினான். எனவே, அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்; அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். அப்போது அவன் தன்னுடைய காவலர்களுள் ஒருவனை அழைத்து, நீங்கள் என்னிடம் மனித (இனத்தி)னைக் கொண்டு வரவில்லை. நீங்கள் என்னிடம் கொண்டு வந்தது ஷைத்தானைத்தான் என்று கூறினான். பின்னர், அந்த அரசன் சார்ராவுக்குத் தன்னுடைய பணிப்பெண் ஹாஜிரை அன்பளிப்பாக வழங்கினான். சார்ரா அம்மையார் இப்ராஹீம் நபி தொழுதுகொண்டிருந்த போது வந்தார். எனவே, அவர் தம் கையால் சைகை செய்து, என்ன ஆனது? என்று கேட்டார். அல்லாஹ் இறைமறுப்பாளனின் சூழ்ச்சியை முறியடித்துவிட்டான். மேலும், அவன் ஹாஜிரைப் பணிப்பெண்ணாக அனுப்பி யுள்ளான் என்று பதிலளித்தார் என அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். வான்மழை (ப் பிரதேச) மக்களே! அவரே(ஹாஜர்) உங்கள் தாய் என்று அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரீ)*1




இப்ராஹீம் நபி மூன்று பொய்களைத் தவிர அறவே பொய் சொன்னதில்லை. அவை அனைத்தும் அல்லாஹ்வுக்காகத்தான். நான் நோயாளி என்பதும், மாறாக, அவற்றுள் பெரியதான இதுதான் அதைச் செய்தது என்பதும் அவர் கூறிய கூற்றுக்களாகும். ஒரு கொடுங்கோல் அரசனின் ஊருக்கு அவர் சென்று, அங்கு ஒரு வீட்டில் தங்கினார். இச்செய்தி அந்த அரசனுக்குச் சென்றது. இங்கு ஒரு மனிதர் வந்துள்ளார். அவருடன் ஓர் அழகான பெண் இருக்கிறாள் என்று அவரிடம் கூறப்பட்டது. உடனே அவரை அழைத்துவர ஆள் அனுப்பினான். அவனிடம் இப்ராஹீம் நபி சென்றதும், அவரிடம் அந்த அரசன் அவருடைய மனைவியைப் பற்றிக் கேட்டான். திண்ணமாக அவர் என் சகோதரி என்று இப்ராஹீம் (அலை) கூறிவிட்டார். அவர் தம் மனைவி சார்ராவிடம் சென்று, அவன் உன்னைப் பற்றிக் கேட்டான். நீ என்னுடைய சகோதரி என்று கூறிவிட்டேன். இன்றைய நாளில் உன்னையும் என்னையும் தவிர வேறு எந்த முஸ்லிமும் இங்கு இல்லை. எனவே நீ என்னுடைய சகோதரி ஆவாய். ஆகவே, நீ அவனிடம் (உண்மையைச் சொல்லி) என்னைப் பொய்யனாக்கிவிடாதே! என்று கூறினார். சார்ரா (அந்த அரசனிடம்) சென்றார். அவர் சென்றபோது அந்த அரசன் அவரைத் தொட நெருங்கினான். அப்போது அவன் பிடிக்கப்பட்டான். ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வீர்! நான் உமக்கு எந்தத் தொல்லையும் கொடுக்க மாட்டேன் என்று அவன் கெஞ்சினான். எனவே, அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்; அவன் விடுவிக்கப்பட்டான். பிறகு, இரண்டாம் தடவையும் அவன் அவரை நெருங்கினான்; இப்போது அவன் மிகவும் கடுமையாகப் பிடிக்கப்பட்டான். அந்நேரத்தில், எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வீர்! நான் உமக்கு எந்தத் தொல்லையும் கொடுக்க மாட்டேன் என்று அவன் கெஞ்சினான். எனவே, அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்; அவன் விடுவிக்கப்பட்டான். இவ்வாறு மூன்று தடவை நடந்தது.


உடனே, அவன் திகைத்தவனாக, அவனுடைய பணியாளர்களுள் ஒருவனை அழைத்து, நீ என்னிடம் மனித (இனத்தி)னைக் கொண்டு வரவில்லை; மாறாக, ஒரு ஷைத்தானைத்தான் கொண்டு வந்துள்ளாய். அவரை வெளியேற்று; அவருக்கு ஹாஜிரைக் கொடுத்தனுப்பு என்று கூறினான். இப்ராஹீம் நபி தொழுதுகொண்டிருந்தபோது, அவர் வந்தார். அவர் வந்ததை உணர்ந்த இப்ராஹீம் நபியவர்கள் திரும்பினார்; அவரைப் பார்த்து, என்ன நடந்தது? என்று வினவினார். அநியாயக்காரனின் சூழ்ச்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன். மேலும், அவன் எனக்கு ஹாஜிரைப் பணிப்பெண்ணாக அனுப்பியுள்ளான் என்று கூறினார். *2 (நூல்: பஸ்ஸார்)




இமாம் அஹ்மத் (ரஹ்) கூறியுள்ளார்: இப்ராஹீம் நபி மூன்று பொய்களைத் தவிர (வேறு எதையும்) கூறவில்லை. அவர், அவர்களின் தெய்வங்களிடம் திருவிழாவுக்காக அழைக்கப்பட்ட போது, நிச்சயமாக நான் நோயாளி என்று கூறினார். (இச்சிலைகளை யார் உடைத்தார்? என்று கேட்கப்பட்டபோது) மாறாக, அவற்றுள் பெரியதான இதுதான் அதைச் செய்தது என்று கூறினார். (தம் மனைவியான) சார்ராவைப் பார்த்து, இவர் என் சகோதரி என்று கூறினார். (நூல்:முஸ்னத் அஹ்மத்)


இப்ராஹீம் நபி ஒரு சிற்றூருக்கு வந்தார். அதில் அடக்கி ஆள்கின்ற ஓர் அரசன் இருந்தான். இரவு நேரத்தில் இப்ராஹீம் நபி தம்முடைய அழகான மனைவியுடன் அங்கு சென்றார் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, அந்த அரசன் அவரிடம் ஓர் ஆளை அனுப்பினான். உம்முடன் உள்ள இவர் யார்? என்று வினவினான். அதற்கு அவர், என் சகோதரி என்று பதிலளித்தார். (வந்தவர்) அவரை என்னோடு அனுப்பிவைப்பீர்! என்று கேட்டார். அவர் அவரை வந்தவருடன் அனுப்பிவைத்தார். (அவர் தம் மனைவியை அவரோடு அனுப்பியபோது) என் சொல்லை நீ பொய்யாக்கிவிடாதே! நீ என் சகோதரி என்று நான் அவரிடம் சொல்லியிருக்கிறேன். திண்ணமாக, இந்நிலத்தில் (தற்போது) உன்னையும் என்னையும் தவிர எந்த நம்பிக்கையாளரும் இல்லை என்று கூறினார். அவர் அந்த அரசனிடம் சென்றபோது, அவன் அவரை நோக்கி எழுந்துவந்தான். அவர் (சார்ரா) உடற்சுத்தி செய்துவிட்டுத் தொழுக ஆரம்பித்தார். பின்னர், அவர் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்: இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கைகொண்டுள்ளதையும், நான் என் கணவரைத் தவிர (அனைவரிடமும்) என் கற்பைப் பாதுகாத்திருக்கிறேன் என்பதையும் நீ அறிந்திருந்தால், ஓர் இறைமறுப்பாளனை என்மீது சாட்டிவிடாதே! இதன் பின்னர், அவன் (குரல்வளை நெரிக்கப்பட்டாற்போல்) மிக உயர்ந்த சப்தமிட்டான்; அவன் தன்னுடைய காலை உதைத்துக் கொண்டான்.




அபூஸினாத் (ரஹ்) கூறியுள்ளார்: இறைவா! அவன் இறந்துவிட்டால், `அவள் அவனைக் கொன்றுவிட்டாள் என்று சொல்லப்படும் என்று தம் இறைவனிடம் அவர் பிரார்த்தனை செய்தவுடன், அவன் விடப்பட்டான் என்று அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். அவன் அவரை நோக்கி எழுந்துவந்தான். அவர் (சார்ரா) உடற்சுத்தி செய்துவிட்டுத் தொழுக ஆரம்பித்தார். பின்னர், அவர் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்: இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கைகொண்டுள்ளதையும், நான் என் கணவரைத் தவிர (அனைவரிடமும்) என் கற்பைப் பாதுகாத்திருக்கிறேன் என்பதையும் நீ அறிந்திருந்தால், ஓர் இறைமறுப்பாளனை என்மீது சாட்டிவிடாதே! இதன் பின்னர், அவன் (குரல்வளைநெரிக்கப்பட்டாற்போல்) மிக உயர்ந்த சப்தமிட்டான்; அவன் தன்னுடைய காலை உதைத்துக்கொண்டான். அபூ ஸினாத் (ரஹ்) கூறுகிறார்: இறைவா! அவன் இறந்துவிட்டால், `அவள் அவனைக் கொன்றுவிட்டாள் என்று சொல்லப்படும் என்று தம் இறைவனிடம் அவர் பிரார்த்தனை செய்தவுடன், அவன் விடப்பட்டான் என்று அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். மூன்றாவது அல்லது நான்காவது தடவைதான் அந்த அரசன், நீங்கள் என்னிடம் ஒரு ஷைத்தானையே அனுப்பியுள்ளீர். அவரை இப்ராஹீமிடம் அனுப்பிவையுங்கள்; அவருக்கு ஹாஜிரை (பணிப்பெண்ணை)க் கொடுங்கள் என்று கூறினான்.




அவர் (தம் கணவர்) இப்ராஹீமிடம் திரும்பிச் சென்று, கூறினார்: திண்ணமாக அல்லாஹ் இறைமறுப்பாளனின் சூழ்ச்சியை முறியடித்துவிட்டான்; ஒரு பணிப்பெண்ணையும் (எனக்கு) அவன் வழங்கியிருக்கிறான் என்பதை நீர் உணர்வீரா? என்று கேட்டார்.*3




இப்னு அபூஹாத்திம் (ரஹ்) கூறியுள்ளார்: இப்ராஹீம் மூன்று வார்த்தைகளைக் கூறினார். அவற்றுள் ஒவ்வொன்றும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தைவிட்டு அப்பாற்பட்டதாக இல்லை. நான் நோயாளி என்று கூறினார். (இச்சிலைகளை யார் உடைத்தார்? என்று கேட்கப்பட்டபோது) மாறாக, அவற்றுள் பெரியதுதான் அதைச் செய்தது என்று கூறினார். அந்த அரசன் தம் மனைவி (சார்ரா)வை நாடிய போது, இவர் என் சகோதரி என்று கூறினார் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூசயீத் (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர்)


மேற்கண்ட நபிமொழியில், இவர் என் சகோதரி என்று கூறியதன் பொருள், அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் என் சகோதரி என்பதாகும். மேலும் அவர் தம் மனைவியிடம், திண்ணமாக இந்நிலத்தில் (தற்போது) உன்னையும் என்னையும் தவிர எந்த நம்பிக்கையாளரும் இல்லை என்று கூறினார். இதன் பொருள் என்னவெனில், உன்னையும் என்னையும் தவிர முஃமினான கணவன்-மனைவி யாரும் இல்லை என்பதாகும். ஏனென்றால், அவர்களுடன் லூத் இருந்தார். அவர் ஒரு நபி ஆவார். எனவே அந்தப் பொருள்தான் இங்கு மிகச் சரியானதாகும். சார்ரா (அலை) அவர்கள் தம் கணவர் இப்ராஹீம் நபியிடம் திரும்பி வந்தபோது, அவர் தம் மனைவியிடம், `மஹ்யம் என்று கேட்டார். அதாவது என்ன ஆனது? என்று பொருளாகும்.


அதற்கு அவர், திண்ணமாக அல்லாஹ் இறைமறுப்பாளனின் சூழ்ச்சியைத் திருப்பிவிட்டான் என்று பதிலளித்தார். மற்றோர் அறிவிப்பில், அந்த அரசனைப் பற்றிக் கூறியபோது, `பாவி என்றும், `பணிப்பெண்ணைக் கொடுத்தான் என்றும் வந்துள் ளன. தம் மனைவி சார்ராவை அரசனிடம் அனுப்பியபோது, இப்ராஹீம் நபி அல்லாஹ்வைத் தொழுக ஆரம்பித்துவிட்டார். தம் மனைவியைப் பாதுகாக்கக் கோரினார். தம் மனைவியைத் தீய நோக்கத்தோடு நாடிய அந்த அரசனின் தீங்கை அப்புறப்படுத்தும்படி வேண்டினார். அதேபோலவே அவரும் (சார்ரா) செய்தார்.


அல்லாஹ்வின் விரோதியான அந்த அரசன் தீய எண்ணத்தோடு அவரை அடைய முற்பட்டபோது, அவர் எழுந்துசென்று உடற்சுத்தி செய்து, தொழுகத் தொடங்கிவிட்டார். பின்னர் முன்சென்ற அந்த இனிய பிரார்த்தனையை அல்லாஹ் விடம் கேட்டார். அதனால்தான் அல்லாஹ் கூறுகின்றான்: தொழுகை மற்றும் பொறுமையின் மூலம் (அல்லாஹ்விடம்) உதவிதேடுங்கள். (2: 45) தன்னுடைய அடியார், தூதர், நண்பர் இப்ராஹீமின் மாசற்றதன்மைக்காக அவரை (சார்ரா) அல்லாஹ் பாதுகாத்தான்.


அறிஞர்கள் சிலர், சார்ரா, மூசாவின் தாய் மற்றும் மர்யம் ஆகிய மூன்று பேரும் நபிப்பட்டம் பெற்றவர்கள் என்று கூறுகின்றனர். ஆனால் பெரும்பான்மையோர், அவர்கள் மூவரும் வாய்மையாளர்கள் என்றும் அல்லாஹ் அவர்களைத் திருப்தி கொண்டான் என்றும் கூறியுள்ளனர்.
திண்ணமாக அல்லாஹ் இப்ராஹீம்-சார்ரா இருவருக்கிடையே இருந்த திரையை அகற்றினான். இப்ராஹீம் நபியிடமிருந்து சென்றதிலிருந்து அவரிடம் அவர் திரும்பி வருகின்றவரை, அவர் அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தார். ஆனால், அவர் அந்த அரசனிடம் (மாட்டிக்கொண்டு) இருந்தபோது, அவரை அவர் நேரடியாகக் கண்டார். அவனிடமிருந்து அவரை அல்லாஹ் எவ்வாறு காப்பாற்றுகிறான் என்று பார்த்தார். அது அவருடைய உள்ளத்திற்கு இதமாகவும் மிகுந்த மகிழ்ச்சியாகவும் மிக அமைதியாகவும் இருப்பதற்காக (அவர் நேரடியாகக் கண்டார்). ஏனென்றால், அவர் சார்ராவை மிகுந்த மார்க்கப்பற்றிற்காகவும் அவருடைய உறவினராக இருந்ததாலும் அவருடைய மிகுந்த அழகுக்காகவும் மிக அதிகமாக விரும்பினார். ஹவ்வாவிற்குப் பிறகு சார்ராவின் காலம் வரை அழகுமிக்கவர் அவரைத் தவிர யாருமில்லை எனக் கூறப்படுகிறது. மேற்கண்ட விசயத்தை, தாம் சில வரலாற்று நூற்களில் கண்டதாக இப்னு கஸீர் (ரஹ்) கூறியுள்ளார். (நூல்: கஸஸுல் அன்பியா லிஸ்ஸஆலபீ)


வரலாற்று ஆசிரியர்கள் சிலர், திண்ணமாக எகிப்து நாட்டின் ஃபிர்அவ்ன், மிகவும் பிரபலமான அநியாயக்கார அரசனான ளஹ்ஹாக் உடைய சகோதரனாக இருந்தான். எகிப்தில் அவனுடைய சகோதரனுக்குக்கீழ் நகராட்சித் தலைவனாக இருந்தான். அவனுடைய பெயர், சினான் பின் உல்வான் பின் உபைத் பின் ஊஜ் பின் இம்லாக் பின் லாவத் பின் சாம் பின் நூஹ் ஆகும்.
அத்தீஜான் எனும் தம்முடைய நூலில் இப்னு ஹிஷாம் கூறியுள்ளார்: சார்ராவை அடைய நாடியவன் அம்ர் பின் இம்ரவுல்கைஸ் பின் மாயிலபூன் பின் சபா ஆவான். அவன் எகிப்தில் இருந்தான். இதை சுஹைலீ (ரஹ்) அறிவித்துள்ளார். அல்லாஹ்வே நன்கறிந்தவன்.






----------------அடிக்குறிப்புகள்------------------------


*1 (அ.கு) இந்த அறிவிப்பாளர் வரிசையில் அவர் மட்டுமே தனியாக இதைப் பதிவுசெய்துள்ளார். இது `மவ்கூஃப் தரத்தில் உள்ளது.


*2 (அ.கு) இதை அல்ஹாஃபிழ் அபூபக்ர் அல்பஸ்ஸார் (ரஹ்) அறிவித்துள்ளார். பிறகு, அல்பஸ்ஸார் கூறுகிறார்: ஹிஷாம் என்பவர்தாம் முஹம்மத் மற்றும் அபூஹுரைரா (ரளி) அவர்களோடு இதை இணைத்துள்ளார். வேறு யாரும் அவ்வாறு இணைத்ததாக நான் அறியவில்லை. மற்றவர்கள் இதை நபித்தோழர்களோடு முடிவுறுகின்ற வகையில் (மவ்கூஃப் தரத்தில்) அறிவித்துள்ளனர்.




*3 (அ.கு) இம்முறையில் இந்த நபிமொழியை இமாம் அஹ்மத் (ரஹ்) மட்டுமே அறிவித்துள்ளார். ஆனால், இது சரியான நபிமொழியின் தரத்தில் அமைந்துள்ளது. இதே நபிமொழியை அபூஹுரைரா (ரளி) மூலம் புகாரீ (ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளார்.


அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.
  

சனி, 2 அக்டோபர், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 9)



உணவுப்பொருளைப் பெறச் செல்லுதல்


மஅமர் என்பவரிடமிருந்து அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அறிவித்துள்ளார்: நிச்சயமாக நும்ரூதிடம்தான் சேமிக்கப்பட்ட உணவுப்பொருள் இருந்தது. அந்த உணவுப் பொருளைப் பெறுவதற்காக மக்களெல்லாம் கூட்டம் கூட்டமாக அவனிடம் செல்வார்கள். யாரெல்லாம் உணவுப்பொருள் வாங்குவதற்காகச் சென்றார்களோ அவர்களோடு இப்ராஹீம் நபியும் சென்றார். அன்றுதான் மக்களெல்லாம் உணவுப்பொருளுக்காக அங்கு ஒன்றுகூடுவார்கள். அன்றுதான் அவ்விருவருக்கும் இடையே அந்த வாக்குவாதம் ஏற்பட்டது. அவன் மற்றவர்களுக்கு உணவுப்பொருள் வழங்கியதைப் போன்று இப்ராஹீம் நபிக்கு வழங்கவில்லை. எனவே, அவர் எந்த உணவுப்பொருளும் இன்றி திரும்பிவந்துவிட்டார்.


அவர் தம் வீட்டை நெருங்கியபோது, அங்கு ஒரு மண்குவியலைப் பார்த்தார். அவர் வைத்திருந்த இரண்டு பைகளையும் அம்மண்ணால் நிரப்பினார். நான் என் குடும்பத்தினரிடம் வந்தால், என்னைச் சூழ்ந்து கொள்வார்கள் என்று தமக்குத்தாமே கூறிக்கொண்டார். அவர் தம் வீட்டை அடைந்தபோது தம்முடைய பைகளை வைத்துவிட்டு, படுக்கையில் சாய்ந்து அசதியில் ஆழ்ந்துறங்கிவிட்டார்.


அவருடைய துணைவி சாரா அம்மையார் அவ்விரண்டு பைகளையும் கண்டார். அவ்விரண்டிலும் இனிய உணவுப் பொருள் நிறைந்திருந்ததைக் கண்டு, மகிழ்ச்சியுடன் அதனை எடுத்து, உணவு சமைக்கத் தொடங்கினார். அவர் தம் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தபோது, அவரின் குடும்பத்தினர் உணவை உண்டுகொண்டிருந்தார்கள். அதைக் கண்ட அவர், இது உங்களுக்கு ஏது? என்று வினவினார். நீர் கொண்டு வந்ததிலிருந்துதான் (செய்தோம்) என்று பதிலளித்தார். அப்படியானால், இது அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த உணவு என்பதை அறிந்துகொண்டார். (நூல்: தஃப்சீர் அப்துர் ரஸ்ஸாக் )


நிராகரித்த நும்ரூத்


ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) கூறியுள்ளார்: அந்த அகங்கார அரசனிடம் அல்லாஹ் ஒரு வானவரை அனுப்பி, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளும்படி அவனுக்கு அழைப்புவிடுக்கச் செய்தான். ஆனால், அவனோ அதை மறுத்துவிட்டான். இரண்டாம் தடவை, அவர் அவனை அழைத்தார். அப்போதும், அவன் மறுத்துவிட்டான். பின்னர், மூன்றாம் தடவை அவர் அவனை அழைத்தார். அப்போதும், அவன் மறுத்துவிட்டான். நீர் உம் படைகளைத் திரட்டுவீர்; நான் என் படைகளைத் திரட்டுகிறேன் என்று கூறினான். நும்ரூத் தன்னுடைய படைகளைச் சூரியன் உதிக்கின்ற நேரத்தில் திரட்டினான். எனவே அல்லாஹ், அவன் சூரியனையே பார்க்க முடியாதவாறு அதிகமான கொசுக்களை அனுப்பினான். அல்லாஹ் அவற்றை அவர்கள் மீது ஏவினான். அவை அவர்களின் உதிரங்களைக் குடித்து இறைச்சிகளைச் சாப்பிட்டன. அவர்களை வெறும் எலும்புக்கூடுகளாக விட்டுவிட்டன. அவற்றுள் ஒரு கொசு மட்டும் அந்த அரசனின் மூக்குத் துவாரத்தினுள் நுழைந்துகொண்டது. அது அவனுடைய மூக்குத் துவாரத்தினுள் 400 ஆண்டுகள் தங்கியிருந்தது. அதன் மூலம் அவனை அல்லாஹ் வேதனைப்படுத்தினான். அதன் காரணமாக, அவன் அத்தனை ஆண்டுகளும் தன்னுடைய தலையில் சுத்தியலால் அடித்துக்கொண்டிருந்தான். அதன் மூலம் அவனை அல்லாஹ் அழிக்கின்ற வரை இந்நிலை நீடித்தது. அல்லாஹ்வே நன்கறிபவன். (நூல்: தஃப்சீர் தப்ரீ)


சிரியா செல்லுதல்


* (இதன் பின்னரும்) லூத் (மட்டுமே) அவர் மீது நம்பிக்கை கொண்டார். (அவரிடம் இப்ராஹீம்,) திண்ணமாக நான் என் இறைவனை நாடி (இவ்வூரை விட்டுத்) துறந்து செல்கிறேன். நிச்சயமாக அவன் (யாவற்றையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன் என்று கூறினார். மேலும், அவருக்கு இஹாக்கையும் யஅகூபையும் அளித்தோம். இன்னும் அவருடைய சந்ததியில், நபித்துவத்தையும் வேதத்தையும் ஏற்படுத்தினோம். அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம். மறுமையில் அவர் நல்லவர்களுள் ஒருவராவார். (29: 26-27)


* நாம் அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் அகிலத்தாருக்கெல்லாம் நாம் பாக்கியத்தை நல்கிய பூமியின் (பைத்துல் முகத்த)பால் (வரச் செய்து) ஈடேற்றம் பெறச் செய்தோம். இன்னும் நாம் அவருக்கு இஹாக்கையும் மேலதிகமாக யஅகூபையும் அளித்தோம். அவர்கள் ஒவ்வொரு வரையும் நல்லோராக ஆக்கினோம். இன்னும், நம் கட்டளையால் (மக்களுக்கு) நல்வழிகாட்டும் தலைவர்களாக நாம் அவர்களை ஆக்கினோம். மேலும், நன்மையான செயல்களைப் புரியுமாறும், ஸகாத்தைக் கொடுத்து வருமாறும் நாம் அவர்களுக்கு வேத அறிவிப்புச் செய்தோம். அவர்கள் நம்மையே வழிபடுபவர்களாக இருந்தனர். (21: 71-73)


இப்ராஹீம் நபியின் சந்ததிகள்


இப்ராஹீம் (அலை) அவர்கள், அல்லாஹ்வுக்காக தம்முடைய சமுதாயத்தாரைவிட்டுப் புறப்பட்டார். அவர்களுக்கு முன்னிலையில் அவர் நாடு துறந்து சென்றார். அவருடைய துணைவி குழந்தையே பெற்றெடுக்காதவராக இருந்தார். எனவே, இப்ராஹீம் நபிக்கு எந்தக் குழந்தையும் இல்லை. அவருடன் அவருடைய சகோதரர் லூத் பின் ஹாரான் பின் ஆஸர் இருந்தார். அதன் பிறகு அல்லாஹ் இப்ராஹீம் நபிக்கு நற்குழந்தைகளைக் கொடுத்தான். அவருடைய சந்ததிகளில் நபித்துவத்தையும் வேதத்தையும் வழங்கினான். அவருக்குப் பிறகு வந்த ஒவ்வொரு நபியும் அவருடைய வமிசத்தைச் சார்ந்தவர்களே ஆவர். அவருக்குப்பின் வழங்கப்பட்ட வேதங்கள் யாவும் அவருடைய வமிசத்தைச் சார்ந்த நபிமார்களுக்கே வழங்கப்பட்டன. ஏனென்றால், அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குவதற் காகவும் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பதற்காகவும் அவர்தம் குடும்பத்தையும் உறவினர்களையும் சொந்த நாட்டையும் தியாகம் செய்ததை அல்லாஹ் கண்ணியப்படுத்தி அவருக்கு வெகுமதியளிக்கவே இவ்வாறு செய்தான்.


எந்த நாடு?


இப்ராஹீம் நபி எந்நாட்டை நோக்கிப் புலம்பெயர்ந்து சென்றார் என்பதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. அவர் சென்ற நாடு சிரியாதான். அது பற்றித்தான் அல்லாஹ் கூறுகின்றான்: அகிலத்தாருக்கெல்லாம் நாம் பாக்கியத்தை நல்கிய பூமியின் (பைத்துல் முகத்தஸ்)பால் (வரச் செய்து) ஈடேற்றம் பெறச்செய்தோம். (21: 71) இக்கருத்தை உபை பின் கஅப் (ரளி), அபுல்ஆலியா மற்றும் கத்தாதா (ரஹ்-அலைஹிம்) கூறியுள்ளனர். இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களிடமிருந்து அல்அவ்ஃபீ (ரஹ்) அறிவித்துள்ளார்: அகிலத்தாருக்கெல்லாம் நாம் பாக்கியத்தை நல்கிய பூமியின் (பைத்துல் முகத்த)பால் (வரச் செய்து)... என்ற வசனத்தில் அந்த பூமி `மக்காதான் என்று கூறிவிட்டு, அதற்கான ஆதாரமாக, மற்றொரு வசனத்தை ஓதிக்காட்டுகிறார்: (அல்லாஹ்வை வழிபடுவதற்கென) மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் திண்ணமாக `பக்கா (எனும் மக்கா)வில் உள்ளதுதான். அது பாக்கியம் மிக்கதாகவும் உலக மக்கள் யாவருக்கும் நல்வழியாகவும் இருக்கிறது(3: 96) என்ற வசனத்தை நீங்கள் பார்க்கவில்லையா? என்று கேட்கிறார். கஅபுல் அஹ்பார் (ரளி) அவர்கள், அது ஹர்ரான் என்னும் ஊராகும் என்று கருதுகிறார்.


வேதக்காரர்களின் கூற்றினை நாம் ஏற்கெனவே கூறியுள்ளோம். அதாவது இப்ராஹீம் நபி பாபில் நகரத்திலிருந்து புறப்பட்டார். அவருடன் அவருடைய சகோதரரின் மகன் லூத், அவருடைய சகோதரர் நாஹூர், இப்ராஹீம் நபியின் மனைவி சார்ரா மற்றும் அவருடைய சகோதரர் நாஹூரின் மனைவி மல்கா ஆகியோர் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஹர்ரான் எனும் இடத்தில் தங்கினர். அவ்விடத்தில் இப்ராஹீம் நபியின் தந்தை தாரிஃக் இறந்துவிட்டார்.


சுத்தீ (ரஹ்) கூறியுள்ளார்: இப்ராஹீம் நபியும் லூத் நபியும் சிரியாவை நோக்கிப் புறப்பட்டனர். அவர் அங்கு சார்ராவைச் சந்தித்தார். அவர் ஹர்ரான் நாட்டு அரசனின் மகள் ஆவார். அவர் தம்முடைய சமுதாய மக்களின் மார்க்கத்தைப் பற்றிக் குறைகூறினார். எனவே, இப்ராஹீம் நபி அதை எந்த மாற்றமும் செய்யமாட்டேன் என்று கூறி அவரை மணந்துகொண்டார். இதை இப்னு ஜரீர் (ரஹ்) அறிவித்துள்ளார். மிகவும் பிரபலமான கருத்து என்னவெனில், சார்ரா என்பவர், இப்ராஹீம் நபியின் பெரிய தந்தை ஹாரான் என்பவரின் மகளாவார் என்பதுதான். அவர் பக்கம்தான் ஹர்ரான் என்பது இணைக்கப்படுகிறது. திண்ணமாக சார்ரா என்பவர் இப்ராஹீம் நபியின் சகோதரர் ஹாரான் உடைய மகளும் லூத் நபியின் சகோதரியும் ஆவார் என்று எவர் கருதுகின்றாரோ, அவர் உண்மையைவிட்டு வெகுதொலைவில் உள்ளார்; அறியாமல் சொல்லிவிட்டார் . இதை சுஹைலீ (ரஹ்), குதைபீ மற்றும் நக்காஷ் ஆகியோரிடமிருந்து அறிவித்துள்ளார். 


தன்னுடைய சகோதரரின் மகளைத் திருமணம் செய்வது அந்தக் காலத்தில் ஆகுமாக்கப்பட்டிருந்தது என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. ஒருவேளை யூதப் பாதிரியார்கள் சிலர் கூறுவதைப்போல், அந்தச் சட்டம் அக்காலத்தில் நடைமுறையில் இருந்தது என்று வைத்துக் கொண்டாலும் நபிமார்கள் அதைப் பயன்படுத்த மாட்டார்கள். அல்லாஹ்வே நன்கறிபவன். பிறகு, மிகவும் பிரபலமான மற்றொரு கருத்து, இப்ராஹீம் நபி பாபில் நகரத்தைத் துறந்து சென்றபோது, தம்மோடு சார்ராவையும் அழைத்துச் சென்றார் என்பதாகும். இது ஏற்கெனவே கூறப்பட்டுவிட்டது. அல்லாஹ்வே நன்கறிபவன்.


இப்ராஹீம் நபி சிரியாவை வந்தடைந்தபோது அல்லாஹ் அவருக்கு வேத அறிவிப்புச் செய்தான். அதாவது நான் இந்நிலத்தை உமக்குப் பின்னால் வருகின்றவர்களுக்காக ஆக்கப்போகிறேன் என்று கூறினான். எனவே, இப்ராஹீம் (அலை) அவர்கள், அல்லாஹ்வின் இந்த அருட்கொடைக்கு நன்றிசெலுத்தும் விதமாக, அவனுக்காக ஓர் அறுக்குமிடத்தை உருவாக்கினார். அதன் குப்பாவை பைத்துல் மக்திஸின் கிழக்கு நோக்கி அமைத்தார். பிறகு, அவர் யமன் நாட்டை நோக்கி நடந்தார். அப்போது அந்நாடு மிகவும் வறட்சியாகக் காணப்பட்டது. எனவே, அவர்கள் எகிப்து நாட்டை நோக்கிப் பயணம் செய்தனர்.


எகிப்து நாட்டு அரசனுடன் சார்ரா அம்மையாருக்கு நிகழ்ந்த நிகழ்ச்சி கூறப்படுகிறது. இப்ராஹீம் நபி சார்ரா அம்மையாரிடம், நான் இவருடைய சகோதரி என்று கூறிவிடு என்று சொல்லிக்கொடுத்தார். பின்னர், அந்த அரசன் சார்ரா அம்மை யாருக்குப் பணிவிடை செய்யத் தன்னுடைய அடிமைப்பெண் ஹாஜிர் (அலை) அவர்களை அனுப்பிவைத்தான் என்பது பற்றிக் கூறியுள்ளனர். பிறகு, அவர்களை அங்கிருந்து வெளியேற்றினான். எனவே அவர்கள் அருள்நிறைந்த நாட்டை நோக்கிச் சென்றனர். அதாவது பைத்துல் மக்திஸ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தங்கினர். அவருடன் கால்நடைகள், பணியாளர்கள் மற்றும் பொருட்கள் இருந்தன.




அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.
  

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 8)

பல்லியைக் கொல்லுங்கள்!

நபி (ஸல்) அவர்கள், பல்லியைக் கொல்ல ஏவினார்கள்; ஏனென்றால், அது இப்ராஹீம் நபி (நெருப்பினுள் இருந்தபோது நன்றாக எரிவதற்காக நெருப்பின்) மீது ஊதியது என்று கூறியதாக உம்மு ஷரீக் (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரீ)1

பல்லியைக் கொல்லுங்கள். ஏனென்றால், அது இப்ராஹீம் நபி (நெருப்பினுள் இருந்தபோது நன்றாக எரிவதற்காக நெருப்பின்) மீது ஊதியது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: முஸ்னத் அஹ்மத்) எனவே, ஆயிஷா (ரளி) அவர்கள் அதைக் கொன்றுவந்தார்கள் என்று இப்னு உமர் (ரளி) மூலம் விடுதலை பெற்ற நாஃபிஹ் (ரளி) கூறியுள்ளார்கள்.

ஒரு பெண் ஆயிஷா (ரளி) அவர்களின் வீட்டினுள் நுழைந்தார். அவர்களின் வீட்டில் ஓர் ஈட்டி மாட்டப்பட்டிருந்தது. அதைக் கண்ட அப்பெண், இந்த ஈட்டி எதற்காக? என்று வினவினார். நாங்கள் பல்லியைக் கொல்வோம் என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்கள் கூறிய விசயத்தைக் கூறினார்கள்: திண்ணமாக இப்ராஹீம் நபி நெருப்பினுள் போடப்பட்டிருந்தபோது, உயிரினங்கள் யாவும் அதை அணைக்க முற்பட்டன. ஆனால், பல்லி மட்டும் அவர் மீது (நெருப்பு நன்றாகப் பற்றி எரிவதற்காக) அதை ஊதத் தொடங்கியது என ஆயிஷா (ரளி) கூறியதாக நாஃபிஹ் (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: முஸ்னத் அஹ்மத்)2

ஃபாகிஹ் பின் அல்முஹீரா (ரளி) அவர்களின் மூலம் விடுதலை பெற்ற சாயிபா எனும் பெண்மணி (ரளி) அறிவித்துள்ளார்கள்: நான் அன்னை ஆயிஷா (ரளி) அவர்களின் வீட்டிற்குள் நுழைந்தேன். அவரின் வீட்டில் ஓர் ஈட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். முஃமின்களின் அன்னையே! இந்த ஈட்டியை வைத்து என்ன செய்வீர்கள்? என்று வினவினேன். இது இந்தப் பல்லிகளுக்காக (நாங்கள் வைத்திருக்கிறோம்). இதன் மூலம் அவற்றை நாங்கள் கொல்வோம் என்று பதிலளித்தார்கள். பின்னர், நபி (ஸல்) அவர்கள் கூறிய விசயத்தைக் கூறினார்கள். திண்ணமாக இப்ராஹீம் நபி நெருப்புக்குள் போடப்பட்டபோது நிலத்திலிருந்த எந்த உயிரினமும் அந்த நெருப்பை அணைக்காமல் இல்லை. ஆனால், பல்லி மட்டும் அவருக்கு (நன்றாக நெருப்பு எரிவதற்காக) ஊதத்தொடங்கியது. எனவேதான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கொல்ல ஏவினார்கள். (நூல்: முஸ்னத் அஹ்மத்)*3

இப்ராஹீம் நபியின் விவாதம்

* அல்லாஹ் தனக்கு ஆட்சியைக் கொடுத்துவிட்டான் என்பதற்காக (ஆணவங்கொண்டு) இப்ராஹீமிடம், அவருடைய இறைவன் குறித்து எதிர்வாதம் செய்தவனை (நபியே!) நீர் கவனிக்கவில்லையா? என்னுடைய இறைவன் உயிர் கொடுப்பான்; இறக்கச் செய்வான் என்று கூறியபோது, நானும் உயிர்கொடுப்பேன்; இறக்கச் செய்வேன் என்று அவன் கூறினான். (அதற்கு) இப்ராஹீம், அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; (முடிந்தால்) நீ அதை மேற்கில் உதிக்கச் செய் (பார்க்கலாம்) என்று கூறினார். அப்போது (அல்லாஹ்வை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைக்கும் மக்களுக்கு அல்லாஹ் நல்வழி காட்டமாட்டான். (2: 258)

பிடிவாதமான, வரம்புமீறிய, அநியாயக்கார அரசனுடன் இப்ராஹீம் நபி செய்த விவாதத்தை அல்லாஹ் கூறுகின்றான். அவன், தன்னைத் தானே கடவுள் என்று வாதிட்டான். ஆனால், அவன் கூறிய கூற்றை இப்ராஹீம் நபியவர்கள் ஒரு பலமான ஆதாரத்தின் மூலம் உடைத்தெறிந்தார். மேலும், அவனுடைய அதீத அறியாமையையும் குறைவான அறிவையும் அவர் அவனுக்கு விளக்கினார். அவனுடைய ஆதாரத்தை உடைத்தெறிந்தார். ஆதாரம் காண்பிக்கின்ற வழிமுறையை அவனுக்கு விளக்கினார்.

திருக்குர்ஆன் விரிவுரையாளர்களும் வரலாறு மற்றும் வமிசம் பற்றிய ஆய்வாளர்களும் கூறியுள்ளதாவது: அவன் பாபிலோன் நகரத்தின் அரசனாவான். அவனுடைய பெயர், நும்ரூத் பின் கன்ஆன் பின் கூஷ் பின் சாம் பின் நூஹ் ஆகும். இதை முஜாஹித் (ரஹ்) கூறியுள்ளார். நும்ரூத் பின் ஃபாலஹ் பின் ஆபிர் பின் ஸாலிஹ் பின் அர்ஃபக்ஷத் பின் சாம் பின் நூஹ் என்பதாகும் என்று மற்றோர் கூறியுள்ளனர். முஜாஹித் (ரஹ்) அவர்களும் மற்றோரும் கூறியுள்ளதாவது: அவன் உலகம் முழுமைக்கும் அரசனாக இருந்தவர்களுள் ஒருவனாவான். அவன் உலகம் முழுவதையும் ஆட்சி செய்தான். அவ்வாறு ஆட்சி செய்தவர்கள் நால்வர் ஆவர். அவர்களுள் இருவர் இறைநம்பிக்கையாளர்கள்; வேறு இருவர் இறைமறுப்பாளர்கள் ஆவர். இறைநம்பிக்கையாளர்களான இருவர், துல்கர்னைன் மற்றும் சுலைமான் (அலை) ஆவர். இறைமறுப்பாளர்களான இருவர், நும்ரூத் மற்றும் புஃக்த்துநஸ்ஸர் ஆவர்.

நும்ரூத் என்பவன் நானூறு ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்து வந்தான். அவன் மிகவும் வரம்பு மீறினான்; அடக்கி ஆண்டான்; அநியாயம் செய்தான்; இவ்வுலக வாழ்க்கையையே தேர்ந்தெடுத்துக்கொண்டான்.

நும்ரூதின் கர்வம்

இப்ராஹீம் நபி, இணையில்லாத, தனித்தவனான அல்லாஹ் ஒருவனையே வழிபட வேண்டும் என்று அவனை அழைத்தார். ஆனால், அவனுடைய அறியாமையும், வழிகேடும், நீண்ட ஆசையும் அவனைத் தன் படைப்பாளனையே மறுக்கச் செய்தன. அது குறித்து இப்ராஹீம் நபி அவனுடன் தர்க்கம் செய்தார். அவனோ, தானே இறைவன் என்று வாதிட்டான். அப்போது இப்ராஹீம், என்னுடைய இறைவன் உயிர் கொடுப்பான்; இறக்கச் செய்வான் என்று கூறியபோது, நானும் உயிர்கொடுப்பேன்; இறக்கச் செய்வேன் என்று அவன் கூறினான். (2: 258)

கத்தாதா, சுத்தீ மற்றும் முஹம்மத் பின் இஸ்ஹாக் (ரஹ்-அலைஹிம்) ஆகியோர் கூறியுள்ளனர்: இரண்டு நபர்கள் அவன் முன்னிலையில் கொண்டுவரப்பட்டார்கள். அவ்விருவருக்கும் மரண தண்டனை உறுதியாகிவிட்டது. அப்போது, அவன் அவ்விருவருள் ஒருவனைக் கொலைசெய்யுமாறும் மற்றொருவனை மன்னித்து விட்டுவிடுமாறும் ஏவினான். (அதாவது ) அவ்விருவருள் ஒருவனுக்கு அவன் உயிர்கொடுத்ததைப் போன்றும் மற்றொருவனை மரணிக்கச் செய்ததைப் போன்றும் அவன் கருதினான். ஆனால், இது விவாதம் செய்வதற்கேற்ற முறை இல்லை. மாறாக, இது விவாதம் செய்கின்ற முறைக்கு முற்றிலும் அப்பாற்பட்டது; இதில் எதிராளியின் விவாதத்தை எதிர்கொள்கின்ற எந்த வழிமுறையும் பின்பற்றப்படவில்லை; அவனது இத்தகைய செயல்பாடு எந்த விவாத முறையிலும் இல்லை; ஆகவே, இது விதண்டாவாதமே ஆகும்.

உண்மையில் இது விவாதத்தை முறிப்பதாகும்; உயிரினங்களை உயிர்ப்பித்தல் மற்றும் அவற்றை மரணிக்கச் செய்தல் இவை நேரடியாக நிகழ்வதின் மூலம் படைப்பாளன் ஒருவன் இருக்கிறான் என்ற ஆதாரத்தை இப்ராஹீம் நபி எடுத்துக் கொண்டார். மேலும், அதைச் செய்பவன் ஒருவன் கண்டிப்பாக இருக்கிறான் என்பதையும், அவன் இல்லாமல் அது தானாகவே இயங்க முடியாது என்பதையும், படைத்தல் மற்றும் அதைக் கட்டுப்படுத்துதல் போன்ற நேரடியாக நிகழக்கூடிய செயல்களுக்கு திண்ணமாக ஒரு படைப்பாளன் வேண்டும் என்ற அவசியத்தையும், விண்மீன்கள், காற்று, மேகம் மற்றும் மழை போன்றவற்றைக் கட்டுப்படுத்துதல், கண்கூடாகக் காணப்படுகின்ற உயிரினங்களைப் படைத்தல் பின்னர் அவற்றை மரணிக்கச் செய்தல் இவை அனைத்தையும் செய்யக்கூடிய படைப்பாளன் ஒருவன் இருக்கிறான் என்பதையும் இப்ராஹீம் நபி உணர்ந்து, இவற்றையே அவர், இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கான ஆதாரமாக எடுத்துவைத்தார்.

இதனால்தான் இப்ராஹீம் நபி கூறினார்: என்னுடைய இறைவன் உயிர் கொடுப்பான்; இறக்கச் செய்வான். (2: 258) அதன்பின் அந்த அறிவற்ற அரசன் கூறினான்: நானும் உயிர் கொடுப்பேன்; இறக்கச் செய்வேன். (2: 258) அவன் கூற்றுப்படி, நேரடியாகக் கண்ட இந்த நிகழ்வுகளைச் செய்யக்கூடியவன் நான்தான் என்று அவன் நாடியிருந்தால், அவன் கர்வமும் பிடிவாதமும் கொண்டுவிட்டான். அல்லது கத்தாதா, சுத்தீ மற்றும் முஹம்மத் பின் இஸ்ஹாக் (ரஹ்-அலைஹிம்) ஆகியோர் கூறியபடி, (அவன் அவ்விருவருள் ஒருவனைக் கொலைசெய்யுமாறும் மற்றொருவனை மன்னித்து விட்டுவிடுமாறும் ஏவினான். (அதாவது) அவ்விருவருள் ஒருவனுக்கு அவன் உயிர்கொடுத்ததைப் போன்றும் மற்றொருவனை மரணிக்கச் செய்ததைப் போன்றும் அவன் கருதிக் கொண்டான்.) அவன் இக்கருத்தை நாடியிருந்தால், அவன் இப்ராஹீம் நபியின் கூற்றுக்குத் தொடர்பான எதையும் கூறவில்லை. ஏனென்றால், அவன் அவரின் வாதத்தை மறுக்கவுமில்லை. அவர் காட்டிய ஆதாரத்திற்கு எதிராக எந்த ஆதாரத்தையும் காட்டவுமில்லை.

நும்ரூதை வாயடைக்கச்செய்தல்

அந்த அரசனின் விவாதம் முடிவுற்றபோது, அங்கிருந்தவர்களின் உள்ளத்தில் அந்த விவாதம் மிகச் சிறிதாகத் தோன்றியிருக்கலாம். எனவே, படைப்பாளன் ஒருவன் இருக்கிறான் என்பதை நிரூபிப்பதற்காகவும் நும்ரூதின் வாதத்தை முறியடிப் பதற்காகவும் மற்றோர் ஆதாரத்தை இப்ராஹீம் நபி எடுத்து வைத்தார். அவர் கூறினார்: திண்ணமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; (முடிந்தால்) நீ அதை மேற்கில் உதிக்கச் செய் (பார்க்கலாம்). (2: 258) 

 அதாவது இந்தச் சூரியன் ஒவ்வொரு நாளும் இறைவனுடைய கட்டுப்பாட்டில்தான் இயங்கிவருகிறது. அதனைப் படைத்தவன், அதனை ஆள்பவன், அதனைச் சுழலச் செய்பவனின் சுழற்சிக்கேற்ப அது கிழக்கில் தோன்றுகிறது. அந்த இறைவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. அவனே அனைத்துப் பொருட்களையும் படைத்தவன். நீயே உயிர்கொடுப்பவனாகவும் மரணிக்கச்செய்பவனாகவும் இருந்தால், இந்தச் சூரியனை மேற்கிலிருந்து உதிக்கச்செய். மேலும், எவன் உயிர்கொடுக்கவும் மரணிக்கச்செய்யவும் செய்கின்றானோ அவன்தான், தான் விரும்பியதையெல்லாம் செய்வான்; அவனை எதுவும் தடுக்காது; அவனை யாரும் வெல்ல முடியாது. மாறாக, அவனே எல்லாப் பொருளையும் அடக்கி ஆள்கிறான்; அவனுக்கே எல்லாப் பொருட்களும் பணிகின்றன. நீ நினைப்பதைப் போன்று நீ இருந்தால், இதைச் செய்துகாட்டு. நீ இதைச் செய்யவில்லையென்றால், நீ நினைப்பதைப் போன்றவனாக நீ இல்லை என்பதை விளங்கிக்கொள். இது போன்ற எச்செயலையும் உன்னால் செய்ய முடியாது என்பதை நீயும் ஒவ்வொருவரும் அறிவர். மேலும், ஒரு கொசுவையோ அதைவிடச் சிறிய உயிரினத்தையோ உன்னால் படைக்க முடியாது; நீ மிகவும் இயலாதவன் என்று இப்ராஹீம் (அலை) கூறினார்.

இப்ராஹீம் (அலை) அந்த அரசனுடைய வழிகேட்டையும், அறியாமையையும், அவனுடைய வாதத்தில் அவன் பொய்யன் என்பதையும் எடுத்துரைத்தார். அவன் செல்கின்ற பாதை தவறானது என்பதையும் மக்களின் அறியாமையை வைத்தே அவர்களை அவன் ஆட்சி செய்கின்றான் என்பதையும் அவனுக்கு விளக்கினார். அச்சமயத்தில், இப்ராஹீம் நபிக்குப் பதில் கொடுக்க அவனிடம் ஒன்றுமில்லை. எனவே, விவாதம் முடிந்துவிட்டது; அவன் அமைதியாகிவிட்டான். ஆகவேதான் அவர் கூறினார்: (அல்லாஹ்வை) மறுத்த அவன், வாயடைத்துப் போனான். அநீதி இழைக்கும் மக்களுக்கு அல்லாஹ் நல்வழி காட்டமாட்டான். (2: 258)

சுத்தீ (ரஹ்) கூறியுள்ளார்: அந்த விவாதம், இப்ராஹீம் நபியவர்கள் நெருப்புக் குண்டத்திலிருந்து வெளியேறிய அன்று, அவருக்கும், நும்ரூத் அரசனுக்கும் இடையே நடைபெற்றது. அந்நாளில் மக்களெல்லாம் ஒன்றுகூடவில்லை. அப்போது இந்த விவாதம் அவ்விருவருக்கிடையே நடைபெற்றது.

--------------------------அடிக்குறிப்புகள் -------------------------

1.இதே நபிமொழியை முஸ்லிம், நசயீ மற்றும் இப்னுமாஜா போன்ற நூற்களிலும் காணலாம். 2.மேற்கண்ட இரண்டு நபிமொழியையும் இமாம் அஹ்மத் (ரஹ்) மட்டுமே அறிவித்துள்ளார். *3. இதே நபிமொழியை இப்னுமாஜா நூலிலும் காணலாம்.




அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.
  

வியாழன், 23 செப்டம்பர், 2010

மாநபியும் மருத்துவமும்

நான் இதற்கு முன் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவற்றை வெளியிட்டிருந்தாலும், என்னுடைய சொந்த நூல் எனும் அடிப்படையில் இதுவே முதல் நூல் ஆகும்.  நான் முஸ்லிம் இதயக்குரல் மாத இதழில் தொடர் கட்டுரையாக எழுதிவந்த மாநபியும் மருத்துவமும் எனும் அதே தலைப்பிலேயே இந்நூலை வெளியிட்டுள்ளேன். இதில் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளுக்கேற்ப தற்கால மருத்துவக் கருத்துகளையும் ஆய்வு செய்து எழுதியுள்ளேன். இது ஒரு பயனுள்ள நூல் என்பதில் சந்தேகமில்லை. இதன் விலை ரூபாய் 20 மட்டுமே. இதைச்  சென்னை மண்ணடியிலுள்ள பஷாரத் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். நூலைப்பெற: 044 25225028

புதன், 22 செப்டம்பர், 2010

நபிமார்கள் வரலாறு (முதல் பாகம்)


தமிழாக்கம்:  காரீ நூ அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.
                         ஆலங்குடி 

வியாழன், 16 செப்டம்பர், 2010

புதன், 15 செப்டம்பர், 2010

விரைவில் வெளிவருகிறது!



முஹம்மது முஸ்தபா அல்ஜிபாலீ ஆங்கிலத்தில் எழுதிய முஸ்லிம் பேமிலி எனும் நூலை மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி தமிழாக்கம் செய்துள்ளார். இஸ்லாமிய இல்லறம் எனும் தலைப்பில் விரைவில் வெளிவருகிறது. சென்னையில் உள்ள சாஜிதா பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.  இந்நூலில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகள், திருமணம் தொடர்பான அனைத்துத் தகவல்களும் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஆதாரங்களோடு கூறப்பட்டுள்ளன.
தம்பதிகள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய அரிய நூல்.  பக்கங்கள்:  448  விலை:  ரூ. 175/-    அலைபேசி : 9840977758

சனி, 11 செப்டம்பர், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 7)

சான்றைச் சமர்ப்பித்தல்

* அவர்கள் கூறினார்கள்: இவருக்காக(ப் பெரியதொரு நெருப்புக்) கிடங்கை அமைத்து எரிநெருப்பில் அவரை எறிந்துவிடுங்கள். (இவ்வாறாக) அவர்கள் அவருக்குச் சதிசெய்ய நாடினார்கள். ஆனால், நாம் அவர்களை இழிவானவர்களாக ஆக்கிவிட்டோம்.  (37: 97-98)  போதிய ஆதாரங்கள்  இல்லாமல் தோல்வி கண்டபோது அம்மக்கள் வாதம் செய்ய முன்வரவில்லை.  எனவே, அவர்கள் தம் ஆற்றலையும் அதிகாரத்தையும் பயன்படுத்துவதைத் தவிர அவர்களுக்குச் சாதகமாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அவர்கள் தம் அறியாமையாலும் வரம்புமீறுதலாலும், தம் தெய்வங்களுக்கு உதவி செய்ய நாடினார்கள். அந்நேரத்தில் அல்லாஹ் தன்னுடைய மார்க்கத்தை நிலைநாட்டவும் அதை உயர்த்தவும் நாடினான்.

 * (இதற்கு) அவர்கள், நீங்கள் (இவரை ஏதாவது) செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள். (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கூறினார்கள். (இப்ராஹீமை தீக்கிடங்கில் எறிந்தபோது) நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும் ஆகிவிடு என்று நாம் கூறினோம். மேலும், அவர்கள் அவருக்குச் சதிசெய்ய நாடினார்கள். ஆனால், நாம் அவர்களையே இழப்புக்குரியவர்களாக ஆக்கினோம்.  (21: 68- 70)

அவர்களால் இயன்ற இடமெல்லாம் விறகுகளைச் சேகரிக்கத் தொடங்கினார்கள். அவ்வாறு விறகைச் சேகரிப்பதிலேயே நீண்ட காலம் கழிந்தது. அவர்களுள் ஒரு பெண் நோய்வாய்ப்பட்டு விடுகின்றபோது, நான் சுகம்பெற்றுவிட்டால், இப்ராஹீமை எரிக்க விறகுகளைச் சுமந்துவருவேன் என்று நேர்ச்சை செய்துகொள்வாள். பின்னர், ஒரு நாள் அவர்கள் ஒரு பெரிய பாதாளக் குழியைத் தோண்டினார்கள். அதனுள் அவர்கள் விறகுகளைப் போட்டு எரியவைத்தார்கள்.

அந்நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. அதன் மேல் தீப்பொறிகள் பறந்தன. அதைப் போன்ற நெருப்பை யாரும் பார்த்ததில்லை. பின்னர், பீரங்கி போன்ற ஒரு கருவியில் இப்ராஹீம் நபியை வைத்தார்கள். ஹைஸன் என்பவன்தான் அந்தக் கருவியைச் செய்தான். அவன்தான் முதன் முதலில் அந்தப் பீரங்கியைச்  செய்தான். எனவே, அல்லாஹ் அவனைப் பூமிக்குள் செருகி விட்டான். அவன் அதனுள் மறுமைநாள் வரை சப்தமிட்டுக் கொண்டே இருப்பான்.  (நூல்: தஃப்சீர் தப்ரீ) பிறகு, அவர்கள் அவரைக் கட்டினார்கள்; அவருடைய கைகளைப் பின்புறமாக்கி, தோளோடு சேர்த்துக்  கட்டி விட்டார்கள். அந்நேரத்தில், இப்ராஹீம் (அலை) அவர்கள், உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீ தூயவன்; அகிலத்தாரின் இறைவன்; உனக்கே புகழ் யாவும்; உனக்கே அரசாட்சி; உனக்கு இணையாக எதுவும் இல்லை என்று ஓதினார்.  (நூல்: தஃப்சீர் தப்ரீ)

இப்ராஹீம் நபி ஓதிய துஆ

இப்ராஹீம் (அலை) அவர்களை பீரங்கி போன்ற ஒரு கருவியில் வைத்து, கைகளைப் பின்புறமாக்கி, தோளோடு சேர்த்துக் கட்டி அதிலிருந்து தூக்கி எறிந்தார்கள். அப்போது அவர், நமக்கு அல்லாஹ்வே போதுமானவன்; அவனே பொறுப்பாளர்களில் நல்லவன் என்று ஓதினார்கள். இப்னு அப்பாஸ்  (ரளி) அறிவித்துள்ள நபிமொழியை புகாரீ (ரஹ்) அவர்கள் பதிவுசெய்துள்ளார்.

இப்ராஹீம் நபி நெருப்பில் போடப்பட்டபோது, நமக்கு அல்லாஹ்வே போதுமானவன்; அவனே பொறுப்பாளர்களில் நல்லவன் என்று ஓதினார். பின்வருகின்ற வசனம் முஹம்மது நபிக்குக் கூறப்பட்டபோது, அவர்களும் இந்த துஆவை ஓதினார்கள். அந்த வசனம்: அவர்களிடம் மக்கள் (சிலர்), உங்களுக்கு எதிராக (யுத்தம் புரிய) மனிதர்கள் ஒன்று திரண்டுவிட்டார்கள். எனவே, அவர்களை அஞ்சுங்கள் என்று கூறினர். ஆனால், அது அவர்களுக்கு இறைநம்பிக்கையை மேலும் அதிகமாக்கியது. (அதனால்) அவர்கள், எங்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன்; அவனே பொறுப்பாளர்களில் நல்லவன் என்று  கூறினார்கள். இதனால் அவர்கள் அல்லாஹ்வின் அருளுடனும் வளத்துடனும் திரும்பினார்கள்.  அவர்களுக்கு எத்தகைய தீங்கும் நேரவில்லை.  (3: 173-174, நூல்: புகாரீ)

இப்ராஹீம் நபி நெருப்பில் போடப்பட்ட போது, இறைவா! நீ வானத்தில் ஒருவன்;  பூமியில்  உன்னை வணங்குபவன் நான் ஒருவனே என்று கூறினார் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். இதை அபூயஅலா (ரஹ்) பதிவு செய்துள்ளார்.

அல்லாஹ் காப்பாற்றுதல்

முந்தைய அறிஞர்கள் சிலர் கூறியுள்ளனர்: ஜிப்ரீல் (அலை) அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்களின்முன் தோன்றி, இப்ராஹீமே! உமக்கு எதுவும் தேவை இருக்கிறதா? என்று கேட்டார். உம்மிடம் இல்லை  என்று இப்ராஹீம் நபி பதிலளித்தார்.

இப்னு அப்பாஸ்  (ரளி) மற்றும் சயீத் பின் ஜுபைர் (ரளி)- இருவரிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. மழையின் வானவர், நான் எப்போது ஏவப்படுவேன். (என்னை ஏவினால்) நான் மழையைப் பொழிய வைத்துவிடுவேன் என்று கூறலானார். ஆனால், அதற்குள் அல்லாஹ்வின் கட்டளை விரைந்து விட்டது. நெருப்பே! நீ இப்ராஹீமுக்குக் குளிர்ச்சியாகவும் இதமாகவும் ஆகிவிடு! என்று நாம் கூறினோம் (21: 69) என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அலீ (ரளி) அவர்கள் கூறியுள்ளார்கள்: அதாவது அவருக்கு  நீ துன்பமிழைக்காதே! என்பதுதான் அவ்வசனத்தின் பொருள். இப்னு அப்பாஸ்  (ரளி) மற்றும் அபுல்ஆலியா (ரளி) இருவரும் கூறியுள்ளார்கள்: அல்லாஹ் `சலாமன் (இதமாக) என்று சொல்லியிருக்காவிட்டால், அதன் குளிர்ச்சி இப்ராஹீமுக்கு நோவினை கொடுத்திருக்கும். கஅபுல் அஹ்பார் (ரளி) கூறியுள்ளார்கள்: அன்றைய நாளில் இப்புவியில் யாரும் நெருப்பின் மூலம் பயன்பெற முடிய வில்லை. அவரைக் கட்டப்பட்டிருந்த கயிறுகளைத் தவிர எதுவும் கரியவில்லை.  ளஹ்ஹாக் (ரஹ்) கூறியுள்ளார்: ஜிப்ரீல் (அலை) இப்ராஹீம் நபியுடன் இருந்தார். அப்போது அவர், இப்ராஹீம் நபியின் முகத்திலிருந்த வியர்வையைத் துடைத்தார். அதைத் தவிர அந்நெருப்பிலிருந்து அவரை எதுவும் தீண்டவில்லை.

சுத்தீ (ரஹ்) கூறியுள்ளார்: இப்ராஹீம் நபியுடன் நிழலின் வானவரும் இருந்தார். அவர் கரிக்குள் இருப்பதைப் போன்று இருந்தார். அவரைச் சுற்றி  நெருப்பு இருந்தது. அவர் பசுமையான தோட்டத்திற்குள் இருந்தார். அம்மக்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் அவரை அடைய முடியவில்லை. அவரும் அவர்களிடம்  வர முடியவில்லை.
அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள்: இப்ராஹீம் நபியின் தந்தை மிக அழகிய வார்த்தையைக் கூறினார். அந்த நிலையில்  அவர் தம் மகனைப் பார்த்தபோது, இப்ராஹீமே! உம்முடைய இறைவன் சிறந்த இறைவன் என்று கூறினார்.

இக்ரிமா (ரளி) அவர்களிடமிருந்து இப்னு அசாகிர் (ரஹ்) அறிவித்துள்ளார்: திண்ணமாக இப்ராஹீம் நபியின் தாய்  தம்முடைய மகனைப் பார்த்தார். என்னருமை மகனே! நான் உன்னிடம் வர விரும்புகிறேன். எனவே, உன்னைச் சுற்றியுள்ள தீக்கனலிலிருந்து என்னைப் பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்! என்று கூறினார். அவரும் பிரார்த்தனை செய்தார். அவர் தம் மகனை முன்னோக்கிச் சென்றார். நெருப்பின் சூடு அவரின் அன்னையைத் தீண்டவில்லை. அவர் அவரிடம் சென்றடைந்தபோது, தம் மகனைக் கட்டியணைத்து அவரை முத்தமிட்டார்; பின்னர், திரும்பி வந்தார். (நூல்: தாரீக் திமஷ்க்)

மின்ஹால் பின் அம்ர் (ரஹ்) கூறியுள்ளார்: திண்ணமாக இப்ராஹீம் நபி அங்கு நாற்பது அல்லது ஐம்பது நாட்கள் தங்கினார். நான் அதனுள் இருந்தபோது வாழ்ந்த இரவுகளையும் பகல்களையும் போன்ற இனிய வாழ்க்கையை (வேறெங்கும்) அனுபவிக்கவில்லை. மேலும், நான் அதனுள் இருந்தபோது, என் வாழ்க்கை முழுவதும் இதே போன்று இருக்க வேண்டும் என்று விரும்பினேன் என இப்ராஹீம் நபி கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது.       (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர்) அவர்கள் பழிவாங்க  நாடினார்கள்; ஆனால், அவர்கள் இழிவுபடுத்தப்பட்டார்கள்; அவர்கள் உயர்வடைய நாடினார்கள்; ஆனால், இழிவடைந்தார்கள்; அவர்கள் மேலோங்க நினைத்தார்கள்; ஆனால், அவர்கள் தாழ்த்தப்பட்டார்கள். அல்லாஹ் கூறுகின்றான்:  அவர்கள் அவருக்கு எதிராகச் சதிசெய்ய நாடினார்கள். ஆனால், நாம் அவர்களையே இழப்புக்குரியவர்களாக ஆக்கினோம்! (21: 70) மற்றொரு வசனத்தில், இழிவானவர்களாக ஆக்கிவிட்டோம் (37: 98) என்று கூறியுள்ளான். 

எனவே, அவர்கள் நட்டத்தையும் இழிவையுமே பெற்றார்கள். இது இவ்வுலகில்தான். மறுமையில், நிச்சயமாக அவர்களுடைய நெருப்பில் குளிர்ச்சியோ இதமோ இருக்காது. அவர்கள் அங்கே எந்த வாழ்த்துரையையும் பெறமாட்டார்கள். மாறாக, அவர்கள் தங்குமிடம் பின்வருகின்ற வசனத்தில் அல்லாஹ் கூறுவதைப் போல் இருக்கும்: திண்ணமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக்கெட்ட இடமாகும். (25: 66)

மூலம்: அல்பிதாயா வந்நிஹாயா (அரபி)
தமிழாக்கம்:நூ. அப்துல் ஹாதி பாகவி
  

புதன், 8 செப்டம்பர், 2010

நூல் மதிப்புரை (தினமணி)