அண்ணலார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அண்ணலார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 அக்டோபர், 2012

அகிம்சையைப் போதித்த அண்ணலார்



அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் இவ்வுலகில் தோன்றியது முதல் தம் தூதுத்துவப் பணியை முழுமையாக நிறைவேற்றி மரணித்தது வரை இவ்வுலக மக்கள் அவர்களை ஓர் அகிம்சாவாதியாகவே கண்டிருக்கிறது. எவ்வளவு பெரிய குழப்பம் நேர்ந்த போதிலும் அதை அமைதியாகவும் எளிமையாகவும் முடித்துவைத்துச் சேதங்கள் ஏற்படா வண்ணம் மக்களைக் காத்து வந்தார்கள் என்பதை உலகமே அறியும். அத்தகைய நபியைப் பின்பற்றுகின்ற இஸ்லாமிய இளைஞர்கள் எந்தச் சூழ்நிலையிலும் தம் உணர்வுகளுக்கும் உத்வேகங்களுக்கும் இடம்தரலாகாது.

அவர்கள் தம் உணர்வுகளுக்கும் உத்வேகங்களுக்கும் முக்கியத்துவம் அளித்தால் அதனால் பாதிக்கப்படுவது நம் இஸ்லாமியச் சகோதர சகோதரிகள்தாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அக்குழப்பத்தைக் காரணமாக வைத்துக்கொண்டு அந்நியர்கள் நம்மோடு சேர்ந்துகொண்டு நம்மையே அழிக்க முனைவது கூர்ந்து கவனிக்கத்தக்கது.

நபி  (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் காலம் முதல் இன்று வரை யூதர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகக் குழப்பம் விளைவிப்பதும் அவர்களைத் தாக்குவதும் அவர்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அவர்களின் சூழ்ச்சியை முறியடிக்க நம்மால் இயன்ற அறிவுப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, உணர்ச்சிப்பூர்வமான செயல்பாடுகளுக்கும் எதிர்வினைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கலாகாது. ஏனெனில் அதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். நம்முடைய உணர்வுகளைத் தூண்டிவிட்டு, அதில் நாம் அடைகின்ற பொருளாதார இழப்புகளையும், உயிரிழப்புகளையும் கண்டு அந்தரங்கத்தில் மகிழ்ச்சியடைகிறார்கள் என்பதே உண்மை. இதைத்தான் அவர்கள் காலங்காலமாகச் செய்துவருகிறார்கள்.

அதற்கு வரலாற்றில் எத்தனையோ சான்றுகள் குவிந்து கிடக்கின்றன. நன்றாகச் சென்று கொண்டிருந்த நபிகளாரின் இல்வாழ்க்கையில் களங்கம் கற்பிக்க நாடிய யூதன் அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள்மீது அவதூறு பரப்பினான். அதனால் நபி  (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் தம் மனைவிமீது சந்தேகம் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு மாதத்திற்குப் பின்னர் அவர் தூய்மையானவர். அவரின் கற்பு தூய்மையானது என்று அல்லாஹ் இறைவசனங்களை அருளினான். இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள் திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் காணக்கிடைக்கின்றன.

யூதர்கள் நபி  (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களைக் கேலி செய்வதும் வார்த்தைகளைத் திரித்துப் பேசி அதன்மூலம் நபியவர்களுக்கு இடும்பை ஏற்படுத்துவதும் அவர்களின் அன்றாட வாடிக்கை. இதற்குச் சான்றாகப் பின்வரும் நபிமொழி திகழ்கிறது.

ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: யூதர்களுள் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களிடம் வந்து ‘அஸ்ஸாமு அலைக்க' (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (முகமன்) கூறினர்.‘‘வ அலைக்கு முஸ்ஸாமு வல் லஅனா' (அவ்வாறே உங்களுக்கு மரணமும் சாபமும் உண்டாகட்டும்) என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள், ‘‘ஆயிஷா! நிதானம்! அனைத்துச் செயல்களிலும் நளினத்தைக் கையாள்வதையே அல்லாஹ் விரும்புகிறான்'' என்று கூறினார்கள். உடனே நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் சொன்னதைத் தாங்கள் செவியுறவில்லையா?'' என்று கேட்டேன் அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள், ‘நான் (‘அஸ்ஸாமு' எனும் சொல்லைத் தவிர்த்து)‘‘வ அலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) என்று பதிலளித்துவிட்டேன்'' என்று கூறினார்கள்.  (நூல்கள்: புகாரீ-6256, முஸ்லிம்-4027)

இதேபோல் அவர்கள் வார்த்தைகளைத் திரித்து, அல்லது இருபொருள் தருகின்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி, அதன் மூலம் கேலி செய்வதைத் தடுக்கும் வண்ணம் அல்லாஹ் பின்வரும் இறைவசனத்தில்  இவ்வாறு கூறுகின்றான்: இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் (நபியை நோக்கி) “‘ராஇனா” எனக் கூறாதீர்கள். (அதற்குப் பதிலாக “‘எங்களைப் பாருங்கள்!” என்ற பொருளைத் தரும்) “‘உன்ழுர்னா”’ எனக் கூறுங்கள். (அவர் கூறுவதை முழுமையாகச்) செவியுறுங்கள். (இதற்கு மாறாகக் கூறும்) நிராகரிப்பவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு. (2-அல்பகரா: 104)

இவ்வசனத்தில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் முக்கியமானவை. ராஇனா என்ற அரபி வார்த்தைக்கு “எங்களைப் பாருங்கள் என்ற பொருள் இருந்தாலும், “எங்களின் இடையன்” என்ற பொருளும், “எங்களின் பேதை” என்ற பொருளும் அதற்கு உண்டு. அதைத்தான் அந்த யூதர்கள் நாடினர். அதைக் கூறி நபியவர்களைக் கேலி செய்தனர். இது தெரியாமல் நபித்தோழர்களும் அவ்வாறு கூறலாயினர். எனவேதான் அதைத் தடுக்கும்வண்ணம் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு அவ்வாறு கட்டளையிட்டுள்ளான்.

இதே கருத்துள்ள மற்றொரு வசனம் வருமாறு: வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களிலிருந்து மாற்றுகின்றவர்களும் யூதர்களுள் உள்ளனர். மேலும், “செவியுற்றோம்; மாறுசெய்தோம்” என்றும், (வெளிப்படையாக) “நீர் கேட்பீராக!” என்றும் (மனதுக்குள்) “நீர் கேட்காமல் (செவிடாகப்) போய்விடுவீராக!” என்றும் ‘ராஇனா’ என்றும் கூறுகின்றனர். தங்களின் நாவுகளைக் கோணலாக்கியும் சன்மார்க்கத்தைப் பழித்தும் (இவ்வாறு கூறுகின்றனர்). (4: 46)

ஆக, முஸ்லிம்களுக்கெதிரான இந்த யூதர்களுடைய சூழ்ச்சியும் வன்மமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். அந்நேரத்தில் நபியவர்கள் கையாண்ட அகிம்சை வழியைத்தான் நாம் கடைப்பிடிக்க வேண்டுமே தவிர உள்ளுணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிடக் கூடாது. எப்படியாயினும் நம் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் நம்மையும் நம் பொருளாதாரத்தையும் அழிப்பதையும் இஸ்லாமிய மார்க்கத்தை இல்லாதொழிக்கவுமே விரும்புகிறார்கள். அதற்கு நாம் இடம் கொடுக்கலாகாது.

அதை நிரூபிக்கும் வண்ணம் கடந்த மாதம் முழுவதும் உலகெங்கும் முஸ்லிம்கள் செய்த ஆர்ப்பாட்டங்களும் அவற்றில் அவர்கள் அடைந்த காயங்களும், உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் அடங்கும். அது மட்டுமின்றி, அத்திரைப்படத்திற்கு இலவச விளம்பரமும் நாமே செய்துகொடுத்துவிட்டோம். நபிகளாரைக் கேலிச் சித்திரம் வரைந்ததற்காக உலகம் முமுவதும் உள்ள முஸ்லிம்கள் தம் எதிர்ப்பைத் தெரிவித்துள்ள ஒன்றரை ஆண்டுக்குள் மீண்டும் இதுபோன்ற திரைப்படம் வெளியிடப்படுகின்றது என்றால், அவர்கள் வேண்டுமென்றே நம்மைச் சீண்டி, வம்புக்கு இழுக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதுபோன்ற குழப்பங்கள் நிறைந்த காலத்தில் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் நவின்றுள்ளதைப் பாருங்கள்: குழப்பங்கள் மிகுந்த அக்காலத்தில் அவற்றுக்கிடையே (மௌனமாக) அமர்ந்திருப்பவன் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனைவிடச் சிறந்தவன் ஆவான். அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் (அவற்றை நோக்கி) நடந்து சென்று விடுபவனைவிடச் சிறந்தவன் ஆவான். அப்போது நடந்து சென்று விடுபவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனைவிடச் சிறந்தவன் ஆவான். அதை அடைகிறவனை அது வீழ்த்தி அழித்துவிட முனையும். அப்போது, புகலிடத்தையோ, அபயம் தரும் இடத்தையோ பெறுகிறவர் அதைக் கொண்டு பாதுகாப்புப் பெறட்டும் என்று அல்லாஹ்வின் தூதர்  (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரளி), நூல்கள்: புகாரீ-3601, முஸ்லிம்-5136)

எவ்வளவு குழப்பமாக இருந்தாலும் அந்தக் குழப்பத்தில் நம் உள்ளுணர்ச்சிகளுக்கு முதலிடம் கொடுத்துவிடாமல் அகிம்சா வழியையும் அமைதி வழியையும் கடைப்பிடிக்க வேண்டுமென அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கற்றுத் தந்துள்ளதை மனதில் பதிய வைக்க வேண்டும்.

இன்னும் இதைவிடக் கொடுமையான காட்சியை முஸ்லிம்கள் காண உள்ளனர். அந்தக் காலத்தில் நம்மை இறைவன் வாழாதிருக்கச் செய்வானாக! நாம் கிப்லா என நாள்தோறும் ஐவேளை முன்னோக்கித் தொழுகின்ற கண்ணியமான கஅபத்துல்லாஹ்-இறையாலயம் இடிக்கப்படும். அதுவும் அழிவு நாளின் அடையாளங்களுள் ஒன்றாகும். ஆம், அது பற்றி இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் நவின்றுள்ளதைப் பாருங்கள்: “அபிஷீனியாவைச் சேர்ந்த, மெலிந்த இரண்டு கால்களுள்ள (பலவீனமான) மனிதன் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவான்'' என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரளி),  நூல்கள்: புகாரீ-1596, முஸ்லிம்-5179)

ஆக, முஸ்லிம்கள் முன்னறிவிப்புச் செய்யப்பட்டுவிட்டார்கள். இந்தச் சமுதாயத்தின்மீது அளவிலாப் பாசமும் அன்பும் மிகுந்த அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) எந்தெந்தக் காலங்களில் எப்படியெப்படி வாழ வேண்டுமென்ற வழிமுறைகளை வகுத்துக் கொடுத்துவிட்டுத்தான் சென்றுள்ளார்கள். வெறுமனே சென்றுவிடவில்லை. எப்போதும் அமைதியுடன் வாழ்க்கையை மேற்கொள்வதற்கான வழிமுறைகளைக் கற்றுத்தந்துள்ளதால் அவற்றை நாம் கடைப்பிடித்து, அவர்களின் மதிப்பையும் பெருமையையும் உலகுக்கு எடுத்துச் சொல்வோம்! எதிரிகளின் சூழ்ச்சி வலையிலிருந்து விலகி வாழ்வோம்!





திங்கள், 20 பிப்ரவரி, 2012

அன்பைப் போதித்த அண்ணலார்


                                                                                          
அகிலத்தில் ஆற்றல்மிகு வார்த்தை அன்பேயாகும்’- Love is the most powerful word in the world, அன்பே கடவுள்’- Love is God  போன்ற முதுமொழிகள் அன்பின் மதிப்பையும் உயர்வையும் விளக்குகின்றன. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்று தமிழ்மறை கூறுகிறது. அன்பைப் போதிக்காத சமயங்கள் இல்லை என்றே கூறலாம். அன்புதான் அனைத்து நற்செயல்களுக்கும் அடிப்படைக் காரணமாகும். சிறுவர்கள் மீது அன்பு காட்டுங்கள்; பெரியவர்களுக்கு மரியாதை செய்யுங்கள்என்பது அண்ணலாரின் அன்புக் கட்டளை.

அன்பு எனும் வேர்ச்சொல்லுக்குப் பல கிளைகள் உள்ளன. ஓர் அன்னை தன் செல்லக் குழந்தைகள்மீது காட்டும் அன்பு, ஓர் இளைஞன் தன் வயதொத்த ஓர் இளைஞியிடம் காட்டும் அன்பு, ஏழைகள் மீது காட்டும் அன்பு, இறைவன் மீது கொள்ளும் அன்பு என எல்லாமே அன்புதான். எனினும் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி பதத்தைத் தருகிறது தேனினுமினிய தமிழ்மொழி.


1. ஓர் அன்னை தன் செல்லக் குழந்தைகளிடம் காட்டும் அன்பும், குழந்தைகள் தம் அன்னையிடம் காட்டும் அன்பும் பாசம் (Affection) ஆகும். இதே அன்பை அரபியில் ஷஃபகத் என்று கூறப்படுகிறது.

2. ஒருவன் அல்லது ஒருத்தி தன் வயதொத்தவனிடம் அன்புகொண்டு தோழமையோடு பழகுதல் நட்பு (Friendship) ஆகும். இதே அன்பை அரபியில் ஸதாகத் என்று கூறப்படுகிறது.

3. நாம் ஏழைகளிடம் காட்டும் அன்பு இரக்கம் (Pity) ஆகும்.

4. ஒரு தொழிலாளி தன் முதலாளியிடம் காட்டும் அன்பு விசுவாசம் ஆகும்.

5. ஓர் இளைஞன் தன் வயதொத்த ஓர் இளைஞியிடம் காட்டும் அன்பு காதல் (Lust) ஆகும். இதே அன்பை அரபியில் இஷ்க் என்று கூறப்படுகிறது. கணவன்-மனைவிக்கிடையே உள்ள அன்பு காதலாகும்.

6. உறவினர்களிடம் காட்டும் அன்பு பந்தம் (Relationship) ஆகும். இதை அரபியில் ஸிலத்துர் ரஹ்ம் என்று கூறுகின்றனர்.

7. உயிரினங்களிடம் காட்டும் அன்பு ஜீவகாருண்யம் ஆகும்.

8. நாம் இறைவனிடம் காட்டும் அன்பு பக்தி (Piety) ஆகும். இதை அரபியில் தக்வா என்று கூறுகின்றனர். இதனால்தான் இறைபக்தி என்று கூறுகிறோம்.

9. இறைவன் தன் அடியார்களிடம் காட்டும் அன்பே கருணை (Mercy) ஆகும். இதை அரபியில் ரஹ்மத் என்று கூறுகின்றனர். அதனால்தான் திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னை ரஹீம்-கருணையாளன் என்று கூறுகின்றான்.

10. பொருள்களின் மீது நாம் கொள்ளும் வேட்கையே ஆசை (Like) ஆகும். இதனால்தான் மண்ணாசை, பொன்னாசை என்று கூறுகிறோம்.

11. தாய் நாட்டின் மீதும் தாய்மொழியின்மீதும் நாம் கொள்ளும் அன்பு பற்று (Patriotism) ஆகும். இதை அரபியில் ஹுப்புல் வத்தன் என்று கூறுகின்றனர். இதனால்தான் நாட்டுப்பற்று, மொழிப்பற்று என்று அழைக்கிறோம்.

12. பொதுவாக ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் காட்டும் அன்பு சகோதரத்துவம் (Brotherhood) ஆகும். இதை அரபியில் உக்வத் என்று கூறுகின்றனர்.

ஆக, மேற்கண்ட பதங்கள் யாவும் அன்பு எனும் கட்டத்தைத் தாண்டியபிறகுதான் பிறக்கின்றன. மேற்கண்ட அனைத்துப் பதங்களுக்குள்ளும் அன்பு எனும் வேர் உள்ளது. ஒரு பொருளையோ மனிதனையோ நாம் பார்க்கும்போது நம் உள்ளத்தில் ஏற்படும் இயல்பான உணர்வுதான் அன்பு. அந்த அன்பு எப்பொருளை அல்லது எவ்விடத்தைச் சார்ந்து நிற்கிறதோ அதை வைத்துத்தான் அதற்குரிய பெயர் மாறுபடுகின்றது. ஆக, அன்பு என்பது ஒன்றுதான். அதன் கிளைகள்தாம் பற்பல.

தமிழில் உள்ள அன்பு எனும் பதத்திற்கு இணையாக அரபியில் ஹுப்பு எனும் பதம் உள்ளது. இந்த ஹுப்பு உடைய கிளைகள்தாம் மஹப்பத், ஷஃபகத், இஷ்க், சதாகத், உக்வத், உத்து, சிலத்து ரஹ்ம், ஹுப்புல் வத்தன், ரஹ்மத் ஆகும். மேற்காணும் பதங்கள் யாவற்றுக்கும் ஹுப்பு எனும் அன்புதான் அடிப்படை. எனவே அந்த அன்பு எங்கு பொருந்துகிறதோ அதை வைத்தே அதற்குரிய பெயர் சொல்லப்படும்.

மேற்கண்ட அனைத்து வகையான அன்பையும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளதோடு, அதன்படி வாழ்ந்தும் இருக்கின்றார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவே அன்புமிக்கவர்களாக இருந்தார்கள். அவர்களின் நற்குணங்களும் அன்பான பேச்சும் இனிய நடைமுறைகளும்தாம் பிறரைக் கவர்ந்தன. பிறருடன் பழகும்போதும் தம் குடும்பத்தாருடன் பேசும்போதும் தம் துணைவியருடன் உரையாடும்போதும் இனிய வார்த்தைகளையே பேசினார்கள்; அன்பாகவே நடந்துகொண்டார்கள். அவர்களின் அன்பான பேச்சும் புன்னகை தவழும் முகமும் காண்போரைக் கவரும்.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

அன்பு உடையோரே உயிர் உடையோராகக் கருதப்படுவர். அது அற்றோர் உயிர் இருந்தும் உயிரற்றோரே ஆவர் என்று வள்ளுவர் கூறுகிறார். அவரின் வாய்மொழிக்கேற்ப அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மிகுந்த அன்புகொண்டவர்களாக வாழ்ந்து காட்டினார்கள் என்பதை நாம் வரலாற்றின் மூலம் அறிகிறோம்.

அல்லாஹ் திருக்குர்ஆனில், “இவ்வுலக மக்களுக்கு ஓர் அருட்கொடையாகவே-அன்பாளராகவே நாம் உம்மை அனுப்பியுள்ளோம்என்று கூறுகின்றான். அல்லாஹ்வின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில்தான் அண்ணலார் அனைவரிடமும் அன்பாகவே நடந்துகொண்டார்கள். நாளுக்கு நாள்  பற்பல துன்பங்களும் துயரங்களும் அவர்களை வாட்டியபோதும் தம் இனிய பண்பாலும் சகிப்புத்தன்மையாலும் அவற்றைப் பொறுத்துக்கொண்டார்கள்.

தாயிஃப் நகர மக்கள் கல்லால் அடித்து அவர்களின் மேனியைக் காயப்படுத்தி, கடுஞ்சொற்களால் வதைத்து, அவர்கள்தம் நெஞ்சைப் புண்ணாக்கியபோதும் அவர்களைப் பழிவாங்க எண்ணவில்லை. கடின உளம் கொண்ட கல்நெஞ்சக்காரர்களிடமும் அண்ணலாரின் அன்பே மிகைத்து நின்றது. அம்மக்களின் நல்வழிக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்.

திருக்குர்ஆனில் அல்லாஹ், தன்னுடைய இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் எவ்வளவு அன்பாக நடந்துகொண்டார்கள் என்பதைப் புகழ்ந்து கூறுகின்றான். அல்லாஹ்வின் கருணையால் அவர்களிடம் நீங்கள் மிகவும் நளினமாக நடந்துகொண்டீர்கள். நீங்கள் மட்டும் சற்றுக் கடினமானவராகவும் கல்நெஞ்சினராகவும் இருந்திருப்பின் அம்மக்கள் உம்மைவிட்டு வெருண்டோடியிருப்பார்கள். (3: 159)

அதாவது நீங்கள் மிகவும் அன்பானவர்; நளினமானவர். நீங்கள் அம்மக்களிடம் அன்பாக நடந்துகொண்டதால்தான் அவர்கள் உங்களின் இனிய பேச்சைச் செவியுற முற்பட்டனர்; பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர் என்று விரித்துரைக்கின்றான்.  அவ்வளவு அன்புமிக்கவராக அண்ணல் நபியவர்கள் திகழ்ந்தார்கள். இதனால்தான் அவர்களுடன் சேர்ந்தே இருந்த ஆருயிர்த் தோழர்களைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றான்.

முஹம்மது (இவர்) அல்லாஹ்வின் தூதர். அவரோடு இருப்பவர்கள் நிராகரிப்போரிடம் கடினமானவர்களாகவும் தங்களுக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் அன்புமிக்கோராகவும் இருக்கின்றார்கள். (48: 29) அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்பைப் போதித்ததால்தான் அவர்களின் அன்புத் தோழர்கள் தங்களுக்கு மத்தியில் எவ்விதப் பிணக்குகளுமின்றி அன்பாகவும் சகோதரத்துவ உணர்வோடும் திகழ்ந்தார்கள்.
உன் உறவைத் துண்டித்தவரோடு சேர்ந்து வாழ்; உனக்கு அநீதி செய்தவரை மன்னித்துவிடு; உனக்குத் தீங்கிழைத்தவருக்கு நன்மைசெய்என்று கூறி மற்றோர்மீது அன்புடையோராக வாழ வழிகாட்டியுள்ளார்கள்.

பாசம்

நாம் நம்முடைய குழந்தைகளிடம் எவ்வாறு நடந்துகொள்கிறோம். எவ்வாறு பேணி வளர்க்கிறோம் என்று சிந்தித்துப் பார்க்கும்போது, அண்ணல் நபியின் சமுதாயத்தினர் என நாம் சொல்-க் கொள்ளவே வெட்கப்படவேண்டும். இன்றைய அவசர யுகத்தில் ஒரு தாய் தன் குழந்தைக்கு அன்பு முத்தம் கொடுப்பதற்கோ குழந்தை தன் அன்னைக்குப் பாசமுத்தம் கொடுப்பதற்கோ நேரமில்லை. வேகமாகப் புறப்படும் வேளையில், குழந்தை தன் வாயில் கைவைத்து முத்தமிட்டு, அதைத் தன் அன்னையிடம் காட்டுகிறது. அவளும் அதை (Plain Kiss) அன்புடன் ஏற்றுக்கொள்கிறாள். இந்த வேகத்தில் இன்றைய சமுதாயம் சென்றுகொண்டிருக்கிறது.

அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் பேரர்களைக் கொஞ்சி, முத்தமிட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். அச்சமயத்தில், கிராமப் புறத்தி-ருந்து நபித்தோழர் ஒருவர் வந்தார். அண்ணலாரின் இச்செயலைக் கண்டு ஆச்சரியப்பட்டு, நீங்கள் இவ்வாறு செய்கின்றீர்களா? எனக்குப் பத்துக் குழந்தைகள் உள்ளனர். நான் ஒரு நாளும் என் குழந்தைகளை முத்தமிட்டதில்லை என்று கூறினார். இதைக்கேட்ட அண்ணலார், அல்லாஹ் உன் உள்ளத்தி-ருந்து அன்பை எடுத்துவிட்டால் நானா பொறுப்பு? என்று மறுவினாத்தொடுத்தார்கள். (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)

ஆக, பெற்றோர் தம் குழந்தைகளை முத்தமிட்டுக் கொஞ்சுவதும் நபிவழியேயாகும். அப்போதுதான் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் மத்தியிலுள்ள பாசம் அதிகமாகும்.

குழலினிது யாழினிது என்ப தம்மக்கள்
மழலைமொழி கேளா தவர்.

யார் தம்  செல்லக்குழந்தைகளின் மழலைமொழிகேட்டு இரசிக்கவில்லையோ அவர்கள்தாம் குழலோசையையும் யாழிசையையும் கேட்டு இரசித்துக்கொண்டிருப்பர் என்றுரைக்கிறார் வள்ளுவர். ஆம், மழலைமொழி கேட்டு இரசிப்பதுதான் பேரின்பம். தற்காலத்திலும் தம் பிள்ளைகளிடம் கொஞ்சிப்பேசி அவர்களின் மழலைமொழி கேட்டு இரசிக்கும் அன்னைகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.  

பந்தம்

ஒருவர் தம்முடைய உறவினர்களிடம் கொள்ளும் அன்புதான் பந்தம் ஆகும். உறவு என்பது நம் வாழ்வின் முக்கிய அங்கம். உறவைப் பிரிந்து நாம் வாழ இயலாது. உறவோடு நாம் சேர்ந்து வாழும்போதுதான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். அதனால் நமக்குப் பக்கபலமும் மனதிடமும் உண்டாகின்றன. உறவை வெறுத்தொதுக்கினால் அவன் தனிமனிதனாக வாழும் நிலை ஏற்படும்.  அதனால் அவனை அவனுடைய எதிரிகள் எளிதில் வீழ்த்துவர்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் உறவினர்களோடு சேர்ந்து வாழ்ந்திருக்கின்றார்கள். பிறருக்கும் அதையே ஏவியிருக்கின்றார்கள். உங்களைத் துண்டிப்போருடன் சேர்ந்து வாழுங்கள் என்று கூறியுள்ளார்கள்.

உறவைத் துண்டித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)

உறவைச் சேர்ந்து வாழ்வதால் என்ன நன்மை என்பதை திருக்குர்ஆன் வாயிலாகத் தெரிந்துகொள்வோம். நபி ஷுஐப் (அலை) அவர்கள்தம் சமுதாய மக்களிடம் ஏகத்துவப் பிரச்சாரம் செய்தார்கள். அவர்களின் அழைப்பைக் கேட்டுக் கொதிப்படைந்த மக்கள், ஷுஐபே! நீர் சொல்வதில் எதுவுமே எங்களுக்குப் புரியவில்லை. உம்மை எங்களுள் பலவீனராகக் காண்கிறோம். உம் குடும்பம் மட்டும் இல்லையெனில் உம்மைக் கல்லால்  அடித்தே கொன்றிருப்போம் (11: 91) என்று கூறினர். ஆக, நபி ஷுஐப் (அலை) அவர்களுக்குப் பக்கபலமாக இருந்தது அவர்களின் குடும்பமும், அவர்களின் உறவினர்களும்தாம். அதேபோல், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்தபோது, அவர்களுக்குப் பக்கபலமாக இருந்தவர் அவர்களுடைய பெரிய தந்தை அபூதாலிப் ஆவார் என்பதை நாம் நினைவுகூரவேண்டும்.

உயிர்பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் நேரம் கொடுமையானது என்று கூறுவர். ஏனெனில் உயிர் பிரிவதால் ஓர் உயிர் மட்டுமே பிரிகிறது. உறவு பிரிவதால் எத்தனையோ உறவினர்கள் நம்மைவிட்டுப் பிரிகின்றனர். எத்தனையோ சொந்தங்களும் பந்தங்களும் நம்மைவிட்டுப் பிரிகின்றன. எனவே உறவைப் பேணி வாழ்வது இன்றியமையாதது. ஙப்போல் வளை என்று ஆத்திச்சூடிப் பாடல் ஒன்று உண்டு. ங எனும் எழுத்தைப்போல் உறவினர்களை இணைந்து வாழவேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது.

அதற்கு மேலாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்துவதைப் பாருங்கள். உறவினர்கள் ஒன்றாக இருக்கும்போது சேர்ந்து வாழ்பவன் உறவை இணைப்பவன் அல்லன். ஒருவனுடைய உறவு அறுந்துவிட்ட நிலையில், தானாக முன்வந்து அவர்களிடம் சென்று சேர்ந்துகொள்பவனே உறவை இணைப்பவன் ஆவான்என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரீ) 

ஜீவகாருண்யம்

உயிரினங்களிடம் அன்பு காட்டுவதே ஜீவகாருண்யம் ஆகும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டியிருக்கின்றார்கள். அவற்றிற்குரிய உரிமைகளை நிறைவேற்றியிருக்கின்றார்கள்; நிறைவேற்ற ஏவியிருக்கின்றார்கள்.  அண்ணல் நபியவர்கள் எந்த ஓர் உயிருக்கும் தீங்கிழைக்கவோ, வதை செய்யவோ அனுமதிக்கவில்லை. அண்ணல் நபியவர்களின் வாழ்வில் நடந்த எத்தனையோ நிகழ்வுகள் இதற்குச் சான்றளிக்கின்றன.

நபித்தோழர்களுள் ஒருவர், ஒரு குருவிக்கூட்டி-ருந்து ஒரு குருவிக்குஞ்சைப் பிடித்துக்கொண்டு, நபி (ஸல்) அவர்களிடம் வந்துகொண்டிருந்தபோது, அக்குஞ்சின் தாய்ப்பறவை அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதைச் சிறிதும் பொருட்படுத்தாத அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அமர்ந்துவிட்டார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “உங்கள் கையிலுள்ள குஞ்சைப் பெற்றிடத் தாய்ப்பறவையின் ஏக்கத்தைப் பாருங்கள். நீங்கள் விளையாட அந்தக் குருவிக்குஞ்சுதான் கிடைத்ததா? அதை விட்டுவிடுங்கள். எவ்வுயிர்க்கும் நோவினை கொடுக்காதீர்கள்என்று கூறினார்கள்.

ஒரு குருவியின் ஏக்கத்தைப் புரிந்துகொண்டு அதன்மீது இரக்கம் காட்டிய அண்ணல் நபியின் ஜீவகாருண்யத்தை இங்கு நாம் நினைவுகூர வேண்டும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் சுயதேவையைப் பூர்த்திசெய்துகொள்ள ஒரு தோட்டத்திற்குள் சென்றார்கள். வெகுநேரமாகியும் திரும்பவில்லை. நபித்தோழர்கள் சிலர் அத்தோட்டத்திற்குள் சென்றபோது, ஓர் ஒட்டகம் அண்ணல் நபியவர்களிடம்  அழுதுகொண்டு, என் முதலாளி என்மீது அதிகச் சுமையை ஏற்றுகிறான்; எனக்குச் சரியாகத் தீனி தருவதில்லை; என்னை அடித்துத் துன்புறுத்துகிறான் என்று முறையிட்டது. இதைக் கேட்ட நபியவர்கள், இந்த ஒட்டகத்தின் உரிமையாளர் யார்? என வினவ, நான்தான் அல்லாஹ்வின் தூதரே! என ஒருவர் நபியவர்கள்முன் வந்து நின்றார். அவரை நோக்கி, இனிமேல் நீ இதை அடிக்கக்கூடாது. அதிகச் சுமைகளை ஏற்றக்கூடாது. இதற்குத் தீனி போட்ட பின்னரே நீ உண்ண வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

உயிர் வதையை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. மாறாக, எல்லா உயிர்களிடத்தும் அன்புகாட்ட வேண்டுமென்றே அண்ணல் நபியவர்கள் போதித்துள்ளார்கள். இதையே நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

நட்பு

தன்னுடைய இரகசியங்களைப் பரிமாறிக்கொள்ளவும், தனக்கென ஓர் உறவை ஏற்படுத்திக்கொள்ளவும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அன்புடன் பழகுவதே நட்பாகும். இதைத் தோழமை, நேசம், நட்பு என்ற பெயர்களில் கூறலாம். அதிகமானோரை நண்பர்களாகப் பெருக்கிக்கொள்வதைவிட, ஒரு நண்பனாக இருப்பினும் சிறந்த நண்பனாக, உற்ற தோழனாக, சோகத்தில் ஆறுதல் கூறுபவனாக, தம் வெற்றியைப் பாராட்டுபவனாக, வழிதவறினால் சீர்படுத்துபவனாகத் தேர்ந்தெடுப்பது அவசியம்.

நண்பனுக்காக உயிரைக்கொடுப்பது எளிது
உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பது அரிது.

உன் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருத வேண்டும். உன் இன்பத்தைத் தன் இன்பமாகக் கருதவேண்டும்.  உன் வேலைகளில் அவனும் பங்குகொள்ள வேண்டும். உனக்காக எதையும் தியாகம் செய்யக் காத்திருக்க வேண்டும். அதுதான் உண்மையான நட்பு.

இத்தகைய நட்பே அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கும் அபூபக்ர் ஸித்தீக் (ரளி) அவர்களுக்கும் இடையே இருந்தது. அண்ணல் நபியின் வார்த்தைகளுக்காக ஈராண்டுகள் அபூபக்ர் ஸித்தீக் (ரளி) அவர்கள் காத்திருந்தார்கள். அவர்கள் மக்காவி-ருந்து மதீனாவுக்குப் புலம்பெயர அல்லாஹ்வின் கட்டளை வந்தபோது, நேராக அபூபக்ர் (ரளி) அவர்களின் இல்லம் வந்தார்கள். அவர்களோ அண்ணல் நபியின் வருகைக்காக விளக்கேற்றி வைத்துக்கொண்டு காத்திருந்தார்கள். இதுவே உண்மையான நட்புக்கு அடையாளம்.

அதேபோல் அண்ணல் நபியவர்களும் அபூபக்ர் ஸித்தீக் (ரளி) அவர்களும் குகைக்குள் இருந்தபோது இறைநிராகரிப்பாளர்கள் இருவரையும் தேடிக்கொண்டு குகையின் வாயில் வரை வந்துவிட்டார்கள். அந்நேரத்தில் மிகவும் அஞ்சிய தம்முடைய நண்பர் அபூபக்ர் ஸித்தீக் (ரளி) அவர்களுக்கு அண்ணல் நபியவர்கள் ஆறுதல் கூறினார்கள். அதைத் திருக்குர்ஆன் கூறுகிறது:

குகையில் இருந்த இருவருள் ஒருவராக அவர் இருந்த(போது எதிரிகள் வந்து சூழ்ந்துகொண்ட) சமயத்தில் தம்முடன் (குகையில்) இருந்த தோழ(ராகிய அபூபக்)ரை நோக்கி, நீங்கள் கவலைப்படாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் என்று கூறியபோதும் அல்லாஹ் அவருக்குத் தன்னுடைய மனநிம்மதியை அளித்தான். (9: 40)


ஆக, அண்ணல் நபியவர்கள் எல்லாவித அன்பையும் கற்றுத்தந்துள்ளதோடு, வாழ்ந்தும் காட்டியிருக்கின்றார்கள். எனவே அன்பிற்கு எத்தனையெத்தனை வழிகள் உள்ளனவோ அத்தனை வழிகளிலும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையை நாம் கடைப்பிடித்தால், வீண்கோபம், மன இறுக்கம், படபடப்பு, பதற்றம் இவற்றிலிருந்து விடுபட்டு, சாந்தமான உள்ளத்துடனும் மனநிம்மதியுடனும் இனிய வாழ்வு வாழலாம் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.