வியாழன், 18 அக்டோபர், 2012

அகிம்சையைப் போதித்த அண்ணலார்



அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் இவ்வுலகில் தோன்றியது முதல் தம் தூதுத்துவப் பணியை முழுமையாக நிறைவேற்றி மரணித்தது வரை இவ்வுலக மக்கள் அவர்களை ஓர் அகிம்சாவாதியாகவே கண்டிருக்கிறது. எவ்வளவு பெரிய குழப்பம் நேர்ந்த போதிலும் அதை அமைதியாகவும் எளிமையாகவும் முடித்துவைத்துச் சேதங்கள் ஏற்படா வண்ணம் மக்களைக் காத்து வந்தார்கள் என்பதை உலகமே அறியும். அத்தகைய நபியைப் பின்பற்றுகின்ற இஸ்லாமிய இளைஞர்கள் எந்தச் சூழ்நிலையிலும் தம் உணர்வுகளுக்கும் உத்வேகங்களுக்கும் இடம்தரலாகாது.

அவர்கள் தம் உணர்வுகளுக்கும் உத்வேகங்களுக்கும் முக்கியத்துவம் அளித்தால் அதனால் பாதிக்கப்படுவது நம் இஸ்லாமியச் சகோதர சகோதரிகள்தாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அக்குழப்பத்தைக் காரணமாக வைத்துக்கொண்டு அந்நியர்கள் நம்மோடு சேர்ந்துகொண்டு நம்மையே அழிக்க முனைவது கூர்ந்து கவனிக்கத்தக்கது.

நபி  (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் காலம் முதல் இன்று வரை யூதர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகக் குழப்பம் விளைவிப்பதும் அவர்களைத் தாக்குவதும் அவர்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அவர்களின் சூழ்ச்சியை முறியடிக்க நம்மால் இயன்ற அறிவுப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, உணர்ச்சிப்பூர்வமான செயல்பாடுகளுக்கும் எதிர்வினைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கலாகாது. ஏனெனில் அதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். நம்முடைய உணர்வுகளைத் தூண்டிவிட்டு, அதில் நாம் அடைகின்ற பொருளாதார இழப்புகளையும், உயிரிழப்புகளையும் கண்டு அந்தரங்கத்தில் மகிழ்ச்சியடைகிறார்கள் என்பதே உண்மை. இதைத்தான் அவர்கள் காலங்காலமாகச் செய்துவருகிறார்கள்.

அதற்கு வரலாற்றில் எத்தனையோ சான்றுகள் குவிந்து கிடக்கின்றன. நன்றாகச் சென்று கொண்டிருந்த நபிகளாரின் இல்வாழ்க்கையில் களங்கம் கற்பிக்க நாடிய யூதன் அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள்மீது அவதூறு பரப்பினான். அதனால் நபி  (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் தம் மனைவிமீது சந்தேகம் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு மாதத்திற்குப் பின்னர் அவர் தூய்மையானவர். அவரின் கற்பு தூய்மையானது என்று அல்லாஹ் இறைவசனங்களை அருளினான். இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள் திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் காணக்கிடைக்கின்றன.

யூதர்கள் நபி  (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களைக் கேலி செய்வதும் வார்த்தைகளைத் திரித்துப் பேசி அதன்மூலம் நபியவர்களுக்கு இடும்பை ஏற்படுத்துவதும் அவர்களின் அன்றாட வாடிக்கை. இதற்குச் சான்றாகப் பின்வரும் நபிமொழி திகழ்கிறது.

ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: யூதர்களுள் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களிடம் வந்து ‘அஸ்ஸாமு அலைக்க' (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (முகமன்) கூறினர்.‘‘வ அலைக்கு முஸ்ஸாமு வல் லஅனா' (அவ்வாறே உங்களுக்கு மரணமும் சாபமும் உண்டாகட்டும்) என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள், ‘‘ஆயிஷா! நிதானம்! அனைத்துச் செயல்களிலும் நளினத்தைக் கையாள்வதையே அல்லாஹ் விரும்புகிறான்'' என்று கூறினார்கள். உடனே நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் சொன்னதைத் தாங்கள் செவியுறவில்லையா?'' என்று கேட்டேன் அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள், ‘நான் (‘அஸ்ஸாமு' எனும் சொல்லைத் தவிர்த்து)‘‘வ அலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) என்று பதிலளித்துவிட்டேன்'' என்று கூறினார்கள்.  (நூல்கள்: புகாரீ-6256, முஸ்லிம்-4027)

இதேபோல் அவர்கள் வார்த்தைகளைத் திரித்து, அல்லது இருபொருள் தருகின்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி, அதன் மூலம் கேலி செய்வதைத் தடுக்கும் வண்ணம் அல்லாஹ் பின்வரும் இறைவசனத்தில்  இவ்வாறு கூறுகின்றான்: இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் (நபியை நோக்கி) “‘ராஇனா” எனக் கூறாதீர்கள். (அதற்குப் பதிலாக “‘எங்களைப் பாருங்கள்!” என்ற பொருளைத் தரும்) “‘உன்ழுர்னா”’ எனக் கூறுங்கள். (அவர் கூறுவதை முழுமையாகச்) செவியுறுங்கள். (இதற்கு மாறாகக் கூறும்) நிராகரிப்பவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு. (2-அல்பகரா: 104)

இவ்வசனத்தில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் முக்கியமானவை. ராஇனா என்ற அரபி வார்த்தைக்கு “எங்களைப் பாருங்கள் என்ற பொருள் இருந்தாலும், “எங்களின் இடையன்” என்ற பொருளும், “எங்களின் பேதை” என்ற பொருளும் அதற்கு உண்டு. அதைத்தான் அந்த யூதர்கள் நாடினர். அதைக் கூறி நபியவர்களைக் கேலி செய்தனர். இது தெரியாமல் நபித்தோழர்களும் அவ்வாறு கூறலாயினர். எனவேதான் அதைத் தடுக்கும்வண்ணம் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு அவ்வாறு கட்டளையிட்டுள்ளான்.

இதே கருத்துள்ள மற்றொரு வசனம் வருமாறு: வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களிலிருந்து மாற்றுகின்றவர்களும் யூதர்களுள் உள்ளனர். மேலும், “செவியுற்றோம்; மாறுசெய்தோம்” என்றும், (வெளிப்படையாக) “நீர் கேட்பீராக!” என்றும் (மனதுக்குள்) “நீர் கேட்காமல் (செவிடாகப்) போய்விடுவீராக!” என்றும் ‘ராஇனா’ என்றும் கூறுகின்றனர். தங்களின் நாவுகளைக் கோணலாக்கியும் சன்மார்க்கத்தைப் பழித்தும் (இவ்வாறு கூறுகின்றனர்). (4: 46)

ஆக, முஸ்லிம்களுக்கெதிரான இந்த யூதர்களுடைய சூழ்ச்சியும் வன்மமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். அந்நேரத்தில் நபியவர்கள் கையாண்ட அகிம்சை வழியைத்தான் நாம் கடைப்பிடிக்க வேண்டுமே தவிர உள்ளுணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிடக் கூடாது. எப்படியாயினும் நம் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் நம்மையும் நம் பொருளாதாரத்தையும் அழிப்பதையும் இஸ்லாமிய மார்க்கத்தை இல்லாதொழிக்கவுமே விரும்புகிறார்கள். அதற்கு நாம் இடம் கொடுக்கலாகாது.

அதை நிரூபிக்கும் வண்ணம் கடந்த மாதம் முழுவதும் உலகெங்கும் முஸ்லிம்கள் செய்த ஆர்ப்பாட்டங்களும் அவற்றில் அவர்கள் அடைந்த காயங்களும், உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் அடங்கும். அது மட்டுமின்றி, அத்திரைப்படத்திற்கு இலவச விளம்பரமும் நாமே செய்துகொடுத்துவிட்டோம். நபிகளாரைக் கேலிச் சித்திரம் வரைந்ததற்காக உலகம் முமுவதும் உள்ள முஸ்லிம்கள் தம் எதிர்ப்பைத் தெரிவித்துள்ள ஒன்றரை ஆண்டுக்குள் மீண்டும் இதுபோன்ற திரைப்படம் வெளியிடப்படுகின்றது என்றால், அவர்கள் வேண்டுமென்றே நம்மைச் சீண்டி, வம்புக்கு இழுக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதுபோன்ற குழப்பங்கள் நிறைந்த காலத்தில் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் நவின்றுள்ளதைப் பாருங்கள்: குழப்பங்கள் மிகுந்த அக்காலத்தில் அவற்றுக்கிடையே (மௌனமாக) அமர்ந்திருப்பவன் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனைவிடச் சிறந்தவன் ஆவான். அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் (அவற்றை நோக்கி) நடந்து சென்று விடுபவனைவிடச் சிறந்தவன் ஆவான். அப்போது நடந்து சென்று விடுபவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனைவிடச் சிறந்தவன் ஆவான். அதை அடைகிறவனை அது வீழ்த்தி அழித்துவிட முனையும். அப்போது, புகலிடத்தையோ, அபயம் தரும் இடத்தையோ பெறுகிறவர் அதைக் கொண்டு பாதுகாப்புப் பெறட்டும் என்று அல்லாஹ்வின் தூதர்  (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரளி), நூல்கள்: புகாரீ-3601, முஸ்லிம்-5136)

எவ்வளவு குழப்பமாக இருந்தாலும் அந்தக் குழப்பத்தில் நம் உள்ளுணர்ச்சிகளுக்கு முதலிடம் கொடுத்துவிடாமல் அகிம்சா வழியையும் அமைதி வழியையும் கடைப்பிடிக்க வேண்டுமென அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கற்றுத் தந்துள்ளதை மனதில் பதிய வைக்க வேண்டும்.

இன்னும் இதைவிடக் கொடுமையான காட்சியை முஸ்லிம்கள் காண உள்ளனர். அந்தக் காலத்தில் நம்மை இறைவன் வாழாதிருக்கச் செய்வானாக! நாம் கிப்லா என நாள்தோறும் ஐவேளை முன்னோக்கித் தொழுகின்ற கண்ணியமான கஅபத்துல்லாஹ்-இறையாலயம் இடிக்கப்படும். அதுவும் அழிவு நாளின் அடையாளங்களுள் ஒன்றாகும். ஆம், அது பற்றி இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் நவின்றுள்ளதைப் பாருங்கள்: “அபிஷீனியாவைச் சேர்ந்த, மெலிந்த இரண்டு கால்களுள்ள (பலவீனமான) மனிதன் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவான்'' என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரளி),  நூல்கள்: புகாரீ-1596, முஸ்லிம்-5179)

ஆக, முஸ்லிம்கள் முன்னறிவிப்புச் செய்யப்பட்டுவிட்டார்கள். இந்தச் சமுதாயத்தின்மீது அளவிலாப் பாசமும் அன்பும் மிகுந்த அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) எந்தெந்தக் காலங்களில் எப்படியெப்படி வாழ வேண்டுமென்ற வழிமுறைகளை வகுத்துக் கொடுத்துவிட்டுத்தான் சென்றுள்ளார்கள். வெறுமனே சென்றுவிடவில்லை. எப்போதும் அமைதியுடன் வாழ்க்கையை மேற்கொள்வதற்கான வழிமுறைகளைக் கற்றுத்தந்துள்ளதால் அவற்றை நாம் கடைப்பிடித்து, அவர்களின் மதிப்பையும் பெருமையையும் உலகுக்கு எடுத்துச் சொல்வோம்! எதிரிகளின் சூழ்ச்சி வலையிலிருந்து விலகி வாழ்வோம்!