சனி, 30 மார்ச், 2024

உள்பள்ளியில் சத்தமிட்டு அறிவிப்புச் செய்ய அனுமதிக்கலாமா?


காணாமற்போன ஒரு பொருளைப் பள்ளிவாசலுக்குள் தேடிக்கொண்டிருப்பவரின் குரலைச் செவியுறுபவர் "அல்லாஹ் அதை உனக்குத் திரும்பக் கிடைக்காமல் செய்வானாக!'' என்று கூறட்டும். ஏனெனில், பள்ளிவாசல்கள் இதற்காகக் கட்டப்படவில்லை என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்: 981)

 

ஒருவர் தமக்குரிய பொருளைத் தொலைத்துவிட்டு, அதைப் பள்ளிவாசலில் சத்தமிட்டுத் தேடுவதற்கே தடை செய்யப்பட்டுள்ளது என்றால், ஜமாஅத் தொழுகை முடிந்தவுடன், தாமதமாக வந்தோர் எழுந்து தொழுதுகொண்டிருக்கும் நிலையில், எந்த அனுமதியுமின்றி, ஒருவர் எழுந்து தம் குறையைச் சொல்லி, “உங்களின் உதவியை நாடி வந்திருக்கிறேன்; எனக்குத் தாராளமாக உங்கள் ஸதகா, ஸகாத்தை வழங்குங்கள்” என்று சத்தமிட்டு அறிவிப்புச் செய்கிறார். இதைப் பெரும்பாலான இமாம்களும் நிர்வாகிகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

 

அவர்களுள் யாரும் இந்த ஹதீஸைப் படிக்கவில்லையா? அல்லது நமக்கேன் வம்பு என்று அமைதி காக்கின்றார்களா?

 

தாமதமாக வந்தோர் எஞ்சிய தொழுகையைத் தொழுதுகொண்டிருக்கும்போது இவ்வாறு சத்தமிட்டு அறிவிப்புச் செய்வது அவர்களுக்கு எவ்வளவு இடைஞ்சலாகவும் தொல்லையாகவும் இருக்கும் என்பதை யாரேனும் சிந்தித்ததுண்டா?

 

தொழுது கொண்டிருக்கும்போது அலைபேசி சிணுங்கினாலே முகம் சுளிக்கின்ற நாம், இவ்வளவு சத்தமிட்டு அறிவிப்புச் செய்வோரை வெறுமனே வேடிக்கை பார்ப்பது சரியா?

 

இனியேனும் இத்தகைய அறிவிப்பை உள்பள்ளியில் அனுமதிக்காமல் நிர்வாகிகள் அதற்குரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவோம்.

பின்குறிப்பு: சில பள்ளிகளில் அத்தகைய கட்டுப்பாடு உண்டு.

 

அன்புடன்

நூ. அப்துல் ஹாதி பாகவி

30 03 2024

===========

கருத்துகள் இல்லை: