வியாழன், 16 டிசம்பர், 2021

வார்த்தைகளை வடிகட்டுவோம்!

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

மனிதர்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்கு அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளே முக்கியப் பங்கு வகிக்கின்றன. வாகனத்தில் செல்லும்போது அடுத்தவர் வாகனத்தில் இலேசாக உராய்வை ஏற்படுத்திவிட்டபோது எதிராளி கோபப்பட்டுப் பேசுவான். இடித்தவனும் கோபப்பட்டுப் பேசுவான். அதனால் அங்கு ஒரு மிகப்பெரும் சண்டையே உருவாகிவிடும். "சாரி சார்' என்று இடித்தவன் அன்பாக, மெதுவாகக் கூறியிருந்தால் அவ்வளவு பெரிய சண்டையே தேவையில்லை. சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, சினத்தைத் தூண்டுகின்ற வார்த்தைகளைக் கூறாமல் மனதுக்கு இதமளிக்கின்றமனதைச் சாந்தப்படுத்தி, மகிழ்ச்சியைத் தூண்டும் வார்த்தைகளையே கூற வேண்டும்.

 

இதுபோலவே நல்ல நல்ல வார்த்தைகளை நம் பிள்ளைகளுக்குத் தொடக்கத்திலிருந்தே கற்பிக்க வேண்டும். தக்க தருணத்தில் வெளிப்படுத்துகின்ற அன்பான வார்த்தைகள் பிறரின் மனக்கவலைகளை மாற்றி மகிழ்ச்சியைக் கொண்டுவரும். துக்கத்தில் இருப்பவருக்கு நம்முடைய ஆறுதலான வார்த்தைகள்தாம் அருமருந்து. அதை விட்டுவிட்டு, துக்கத்தில் இருப்பவர் முன்னால் நாம் மகிழ்ச்சிக் கொண்டாட்டம் போடுவதோ, அவரைக் கேலி செய்யும் விதமாக நடந்துகொள்வதோ, "உனக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்'' என்று எகத்தாளமாகப் பேசுவதோ கூடாது.

 

மரியாதையற்ற வார்த்தைகளைக் கூறாமல் மதிப்புமிக்க வார்த்தைகளையே கூற வேண்டும். அதையே நம் பிள்ளைகளுக்கும் கற்பிக்க வேண்டும். மரியாதையற்ற வார்த்தைகளைப் பேசியதாலேயே பலரின் குடும்ப வாழ்வு சிதைந்திருக்கிறது. பள்ளிவாசலில் குர்ஆன் வகுப்பு நடத்தி வருகின்ற என்னிடம் பல்வேறு சூழலில் வளர்ந்த பிள்ளைகள் வருகை தருகின்றார்கள். அவர்களிடம் எப்போதும் ஒரு பிரச்சனை இருந்து வந்தது. "இவனைவிட நான் வயதில் மூத்தவன்; இவன் என்னை "டா' என அழைக்கிறான்'' என்று ஒருவருக்கொருவர் முறையீடு செய்துகொண்டே இருந்தனர். அதனால் நான், இனி அனைவரும் அவரவர் பெயரோடு "ஜீ' என்பதைச் சேர்த்து, ஆரிப்ஜீ, நூருல்லாஹ்ஜீ என்றுதான் அழைக்க வேண்டும்'' என்றொரு கட்டளை பிறப்பித்தேன். பிரச்சனை ஓய்ந்தது மட்டுமல்ல ஒருவருக்கொருவர் மரியாதையாக அழைக்கத் தொடங்கிவிட்டனர்.

 

குடும்ப உறவுகளைச் சிதைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது மரியாதையற்ற பேச்சுதான். ஆசிரியர்-மாணவர்களிடையே இருக்க வேண்டிய மரியாதையான உறவு சிதைந்துபோய்க் கிடப்பதற்கான காரணம் மரியாதையற்ற பேச்சுதான். கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதற்கான காரணம் மரியாதையற்ற போங்குதான். ஆக, எல்லா இடங்களிலும் மரியாதையற்ற பேச்சு உறவுகளையும் அன்னியோன்யத்தையும் சிதைக்கிறது. அதேநேரத்தில் மரியாதையான பேச்சுக்கு உள்ளத்தைக் கவரும் ஆற்றல் உண்டு. வார்த்தைகளைக் கோர்த்துக் கோர்த்துப் பேசுவதைவிடப் பார்த்துப் பார்த்துப் பக்குவமாகப் பேசுவதே சிறந்தது.

 

இன்றைக்கு ஆசிரியர்-மாணவர் இடையே இருக்க வேண்டிய மரியாதையான உறவு சிதைந்து போனதற்குக் காரணம், மாணவர்களின் மனதில் தம் ஆசிரியர்களைப் பற்றிய மரியாதையான எண்ணம் இல்லை. பட்டப் பெயர் சூட்டி அழைப்பது, கேலி கிண்டல் செய்வது மிகுந்து காணப்படுகிறது. ஆசிரியரைப் பற்றிய கண்ணியமான எண்ணமும் மரியாதையான பார்வையும் இல்லாதபோது அவர் நடத்துகின்ற பாடத்தை எவ்வாறு அந்த மாணவன் முக்கியத்துவம் கொடுத்துக் கவனிப்பான்?

 

ஒருவன் தன் தாய்-தந்தையை மதிப்பதில்லை என்றால் அதன் அடிப்படைக் காரணம் தன் பெற்றோரைப் பற்றிய மரியாதை அவனுடைய மனதில் இல்லை என்பதே. அதன் மூலவேர் அவர்களை மரியாதையாக அழைப்பதிலிருந்து தொடங்குகிறது. ஒருவன் தன் தாய்-தந்தையை வாங்க, போங்க என்று மரியாதையாக அழைக்கத் தொடங்கினாலே அவர்கள் இட்ட கட்டளைக்குப் பணிந்து நடக்கத் தொடங்கிவிடுவான். வா, போ என்று மரியாதைக் குறைவாக அழைப்பவன் அவர்களின் கட்டளைக்குப் பணிய மறுப்பான். இதுதான் அடிப்படை. ஆக, குடும்ப உறவுகள் மேம்பட, தாய்-தந்தைக்குப் பிள்ளைகள் பணிந்து நடக்க வார்த்தைகள் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதை ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரும் தம் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும்.

 

இவ்வாறு மரியாதையான வார்த்தைகள் சிதைந்துபோனதில் திரைப்படங்களுக்கு முக்கியப் பங்குண்டு. நகைச்சுவைக் காட்சிகளுக்காக அப்பாவை பிள்ளை வாடா, போடா என்று அழைப்பதும் அப்பாவிடம் மரியாதையின்றி நடந்துகொள்வதும், தன் தாயைக் காலால் எட்டி உதைப்பதும் காட்சிப்படுத்தப்படுகின்றன. அதைக் காணும் பிள்ளைகள் அதை அப்படியே தம் பெற்றோரிடம் பிரதிபலிக்கின்றனர். நிழலுக்கும் நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் தம் வாழ்க்கையைச் சிதைத்துக்கொள்கின்றனர்.

 

அதேகோணத்தில் அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் அதைரியப்படுத்துகின்ற வார்த்தைகள் ஏராளம். பிள்ளைகளோ மற்றவர்களோ நம்மிடம் ஒரு போட்டி குறித்தோ, ஒரு தேர்வு குறித்தோ கூறும்போது, நாம் அவர்களை வாழ்த்தி ஓரிரு வார்த்தைகள் கூறினால் அது அவர்களுக்குப் புத்துணர்வூட்டும். அதற்கு முரணாக, "போ, போ நீ உருப்புட்ட மாதிரிதான்'', "நீயெல்லாம் தேறமாட்டாய்'' என்ற அமங்கலமான, எதிர்மறையான வார்த்தைகளைக் கூறினால் அது அவர்களின் மனதைக் காயப்படுத்துவதோடு, எடுத்த முயற்சியையும் கைவிட்டுவிடுவார்கள். எனவே நாம் பேசுகின்ற வார்த்தைகள் மிக முக்கியமானவை. அவை பிறரின் வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் காரணமாக இருக்க வேண்டுமே தவிர அவர்களின் தோல்விக்கும் பின்னடைவுக்கும் ஒருபோதும் காரணமாக ஆகிவிடக்கூடாது.

 

அதுபோல், நம்முடைய அன்றாட வாழ்க்கைப் பயன்பாட்டில் உள்ள கொச்சை வார்த்தைகள், வன்முறை வார்த்தைகள் பல உள்ளன. அவற்றைக் களைந்து அவற்றின் இடத்தில் வேறு நல்ல வார்த்தைகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். அதைச் செவியுறுகின்ற நம் பிள்ளைகள் தாமாகவே அவற்றை நம்மிடமிருந்து கற்றுக்கொள்வார்கள். "நான் இதை வெற்றிகொள்ள வேண்டும் என வெறி கொண்டிருந்தேன். அதனால்தான் என்னால் வெற்றிகொள்ள முடிந்தது'' என்று சொல்கின்ற வாக்கியத்தில், "வெறி' என்ற வார்த்தைக்குப் பதிலாக "வைராக்கியம்' கொண்டிருந்தேன் என்று பயன்படுத்தலாம். "அவன்மீது எனக்குக் கொலைவெறி'' என்று சொல்வதற்குப் பதிலாக "அவன்மீது எனக்கு மிகுந்த சினம்'' என்று கூறலாம். இப்படி வார்த்தைகளில் வன்முறை கலப்பதைத் தவிர்க்கத்தான் வேண்டும். இல்லையேல் அதுவே நம்மை மீளாத் துயருக்குள் ஆழ்த்திவிடும்.     

 

நாம் பேசுகின்ற வார்த்தைகள் பிறரின் மனத்தைப் பண்படுத்த வேண்டுமே தவிர புண்படுத்திவிடலாகாது. எனவே வார்த்தைகளை வடிகட்டிப் பேசுவோம். பிறர் மகிழப் பேசுவோம். "நல்ல வார்த்தைகளைப் பேசுவது தர்மமாகும்'' (புகாரீ) என்ற நபிமொழியை நினைவில் கொள்வோம்.

 ===================






கருத்துகள் இல்லை: