திங்கள், 24 ஜூன், 2024

நாய் வளர்க்கலாமா?

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28 

 

இன்றைய நவீனக் காலத்தில் நாய் வளர்ப்பது ஒரு பொழுதுபோக்காக மாறிவருகிறது. கடந்த காலங்களில் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வளர்த்து வந்தார்கள். அதனால் அம்மக்கள் தாமும் பயன்பெற்று பிறரும் பயன்பெறுமாறு செய்துவந்தார்கள். அவற்றின்மூலம் வருமானத்தையும் ஈட்டினார்கள். ஆடு, மாடுகளின் மூலம் பால் விற்பனையும், கோழிகள் மூலம் முட்டை விற்பனையும் நடைபெற்றன. அத்தோடு அவற்றின் மூலம் மனிதர்களுக்குத் தொல்லை எதுவும் இருந்ததில்லை. ஆனால் இன்று நகரங்களில் வசிப்போர் பலர் தம் வீடுகளில் அயல்நாட்டு நாய்களை வாங்கி வளர்க்கின்றார்கள். அவற்றோடு தம் பொழுதுகளைக் கழிக்கின்றார்கள். அதனால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. மாறாக அந்த நாய்களால் பொதுமக்களுக்குத் தொல்லைதான் ஏற்படுகிறது.

 

அண்மைக்காலமாக நாம் நாளிதழ்களில் நாய்க்கடி குறித்த செய்திகளை அதிகமாகக் காண்கிறோம். நாய் கடித்து சிறுவர் பலி, ‘நாய் கடித்து சிறுமி மருத்துவமனையில் அனுமதி என்பதே அன்றாடச் செய்தி. வீட்டுக்குள்ளேயே வளரும் நாயை வெளியே அழைத்து வரும்போது, மனிதர்களைப் பார்த்துப் பீதியடைகிறது; அச்சம் கொள்கிறது. எல்லோரையும் அந்நியர்களாகக் காண்கிறது. எனவேதான் தன் அருகில் வருவோரைத் திடீரெனத் தாக்கிவிடுகிறது; கடித்துவிடுகிறது. எனவே தெரு நாய்களைவிட, வீட்டு வளர்ப்பு நாய்களே மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானவை.

 

வானவர்களின் வருகை தடைபடுதல்: வானவர்கள்மூலமே அல்லாஹ் ஒவ்வொரு கட்டளையையும் செயல்படுத்துகிறான்; மனிதர்களின் தேவைகளை நிறைவேற்றுகிறான். அதன்படி ஒரு வீட்டிற்குக் கிடைக்க வேண்டிய அருள்வளம் (பரக்கத்), வாழ்வாதாரம் (ரிஸ்க்) உள்ளிட்டவை வானவர்கள்மூலமே வழங்கப்படுகின்றன. நாயும் உருவப் படமும் உள்ள வீட்டில் வானவர்கள் வருவதில்லை என்பதால் அவ்வீட்டிற்குக் கிடைக்க வேண்டிய வாழ்வாதாரம், அருள்வளம் முதலானவை தடைபடுகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு (குறிப்பிட்ட) நேரத்தில் வருவதாக வாக்களித்திருந்தார்கள். ஆனால், அந்த நேரம் வந்தும் ஜிப்ரீல் வரவில்லை.

 

அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது கையில் குச்சியொன்று இருந்தது. அதை அவர்கள் தூக்கியெறிந்துவிட்டு, “அல்லாஹ் தனது வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டான். அவனுடைய தூதர்களும் வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டார்கள்'' என்று கூறினார்கள். பின்னர் திரும்பிப் பார்த்தபோது, தமது கட்டிலுக்குக் கீழே நாய்க்குட்டியொன்று இருப்பதைக் கண்டார்கள்.

 

உடனே ஆயிஷா! இந்த நாய் இங்கு எப்போது நுழைந்தது?'' என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தெரியவில்லை'' என்றேன். உடனே அதை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அப்புறப்படுத்தப்பட்ட பின் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் வந்தார்கள்.

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “நீங்கள் வருவதாகச் சொன்னீர்கள். உங்களுக்காக நான் (எதிர்பார்த்து) அமர்ந்திருந்தேன். ஆனால், நீங்கள் வரவில்லையே (ஏன்)?'' என்று கேட்டார்கள்.

 

அதற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம், “உங்கள் வீட்டினுள்ளிருந்த நாயே என(து வருகை)க்குத் தடையாக அமைந்துவிட்டது. (வானவர்களாகிய) நாங்கள் நாயும் உருவப்படமும் உள்ள வீட்டிற்குள் நுழையமாட்டோம்'' என்று சொன்னார்கள். (முஸ்லிம்: 4272)

 

நாய் வளர்த்தால் நன்மை குறையும்: ஒரு மனிதன் செய்துவரும் செயல்கள் யாவும் அவனுடைய வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ள வானவர்களால் பதிவுசெய்யப்படுகின்றன. அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள நன்மைகளிலிருந்து, நாய் வளர்ப்பவரின் நன்மைகள் ஒரு கீராத் (உஹுது மலை) அளவு குறைந்து விடுவதாக நபியவர்கள் கூறியுள்ளார்கள். இரண்டு கீராத் அளவு குறைந்து விடுவதாக மற்றொரு செய்தியும் உள்ளது.

 

கால்நடையைப் பாதுகாப்பதற்காகவோ, வேட்டையாடுவதற்காகவோ அல்லாமல் யார் நாய் வைத்திருக்கின்றாரோ அவருடைய நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு "கீராத்'கள் அளவு குறைந்துவிடும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரீ: 5480)

 

நாய் வளர்ப்பவரின் நாயால் மக்களுக்குத் தொல்லை அதிகமானால் இரண்டு கீராத் குறையும் என்றும் தொல்லை குறைவாக இருந்தால் ஒரு கீராத் குறையும் என்றும் மார்க்க அறிஞர்கள் இவ்விரண்டு நபிமொழிகளுக்கும் விளக்கமளிக்கின்றார்கள்.

 

மூன்று காரணங்களுக்காக: ஒருவர் தம் கிராமத்தில் விவசாயம் செய்துவருகிறார்; அந்த வேளாண்மையைப் பாதுகாப்பதற்காக அவர் நாயைக் காவலுக்கு வைத்திருக்கிறார் எனில், அவர் அவ்வாறு அதைப் பயன்படுத்துவது கூடும். ஒருவர் தம்முடைய கிராமத்தில் ஆடு, மாடுகளை வளர்க்கிறார். அவற்றைத் திருடர்களிடமிருந்தும் ஓநாய்களிடமிருந்தும் பாதுகாப்பதற்காக நாயை வளர்க்கிறார் என்றால் அதற்கு இஸ்லாம் அனுமதி வழங்குகிறது.  மூன்றாவதாக, ஒருவர் வேட்டையாட அனுமதிக்கப்பட்ட நாட்டில் வசிக்கிறார்; முயல், மான் உள்ளிட்ட  உண்ணத்தகுந்த பிராணிகளை வேட்டையாடுவதற்காக நாயை வளர்த்தால் குற்றமில்லை. ஆக இந்த மூன்று வகையான தேவைகளுக்காக நாயை வளர்க்கலாம் என்று நபிமொழிகளில் நாம் காண்கிறோம்.

 

மேற்கண்ட நபிமொழியின் கருத்துப்படி அறிஞர்கள் பலர், நபியவர்கள் கூறிய காரணங்களைத் தாண்டி மற்ற எதற்காகவும் நாயை வளர்க்கக்கூடாது என்று கூறுகின்றார்கள். அறிஞர்கள் சிலர் பாதுகாப்பு உள்ளிட்ட தேவையைக் கருதி நாய் வளர்க்கலாம். எந்தத் தேவையுமில்லாமல் நாய் வளர்க்கக்கூடாது என்கின்றார்கள்.

 

இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் முஸ்லிம் நூலின் விரிவுரையில் கூறியுள்ளதாவது: வீடுகளையும் பாதைகளையும் பாதுகாப்பதற்காக நாயை வளர்க்கலாமா என்ற கேள்விக்கு, ஹதீஸ்களின் வெளிப்படையான கருத்துப்படி வளர்க்கக்கூடாது என்பதுதான் சரி. இருப்பினும் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ள காரணங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்கிறபோது, மனிதர்களின் தேவையே அவற்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் அவற்றைப் பாதுகாக்கவும் நாய் வளர்க்கலாம் என்பதே மிகச் சரியானது.

 

தற்காலத்தில் காவல் துறையில் நாய் வளர்க்கப்படுகிறது. நாய்க்கு மோப்ப ஆற்றல் மிகுதி. அது தனது மோப்ப ஆற்றலால் திருடர்களைக் கண்டுபிடித்துவிடுகிறது. எனவே அது காவல்துறையில் மோப்ப நாயாக ((Sniffer dog)) பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் காவல்துறையில் பணியாற்றுகிற முஸ்லிம் ஒருவர், அத்தகைய நோக்கத்திற்காக நாய் வளர்த்தால் அல்லது அதற்கு உணவு வழங்கினால் அது குற்றமில்லை. அவரே அதற்குப் பயிற்சியாளராக இருந்தாலும் குற்றமில்லை. 

 

நாய் வாய்வைத்த பாத்திரம்: நாயின் எச்சிலில் மனிதனுக்கு இடர்தரும் நச்சுக்கிருமிகள் உள்ளன. நாய் ஒருவரைக் கடித்துக் காயப்படுத்திவிட்டால், அதன் பற்கள் பட்ட இடத்தில் அந்தக் காயத்தின் வழியாக நச்சுக் கிருமிகள் உடலுக்குள் ஊடுருவி விடுகின்றன. அந்தக் கிருமிக்கு ரேபீஸ் (Rabies) என்று பெயர். காயம்பட்ட இடத்தை சோப்பு போட்டு அல்லது மஞ்சள் கலந்த நீரால் நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்துவிட்டு, அதன்பிறகு மருத்துவரைச் சந்திக்க வேண்டும். இதனால் அந்தக் கிருமிகள் உடலுக்குள் ஊடுருவுவதை உடனடியாகத் தடுத்துவிட முடியும்.

 

நாயின் எச்சிலில் இவ்வளவு தீங்குகள் உள்ளன என்பதை அண்மைக் காலத்தில்தான் அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்தனர். ஆனால் அறிவியல் அறிவு மனிதனுக்கு எட்டாத காலத்திலேயே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மனித சமுதாயத்திற்கு நல்வழி காட்டியுள்ளார்கள்.

 

நாய் வாய்வைத்துவிட்ட உங்களது பாத்திரத்தைச் சுத்தம் செய்யும் முறை யாதெனில், அதை ஏழு தடவை தண்ணீரால் கழுவுவதாகும். முதல் தடவை மண்ணிட்டுக் கழுவ வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்: 279/ 471) வெறி நாயோ தெரு நாயோ, வீட்டில் வளர்க்கும் நாயோ, பூனையோ, எலியோ கடித்த இடத்தைத் தண்ணீரில் 7 முதல் 10 தடவை வரை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் என்று இன்றைய மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

 

நாயை விற்கலாமா?: மக்கள் நாயை வளர்த்து வருவதால் அது இன்று விற்பனைப் பொருளாக மாறிவருகிறது.  ஆனால் ஒரு முஸ்லிமைப் பொருத்த வரை, நாயை விற்பனை செய்து பொருளீட்டுவது கூடாது. அது அவருக்குத் தடை செய்யப்பட்டதாகும். அது குறித்து நபியவர்கள் கூறியுள்ள செய்தி புகாரீ எனும் நபிமொழித் தொகுப்பு நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், நாய் விற்ற கிரயத்தையும் இரத்தத்தின் கிரயத்தை (குருதி உறிஞ்சி எடுப்பதற்காகப் பெறுகின்ற கூலியை)யும் தடைசெய்தார்கள்...என்று அபூஜுஹைஃபா ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள். (புகாரீ: 2086)

 

நாயைக் கொல்லுங்கள்: மனிதர்களுக்கு இடையூறும் தொல்லையும் தரக்கூடிய நாய்களைக் கொல்லுங்கள் என்பதே நபியவர்களின் வழிகாட்டல் ஆகும். மிருக வதைத் தடுப்புச் சட்டம்-1960 என்ற சட்டத்தைக் காட்டி  மிருக வதைத் தடுப்பு இயக்கத்தினர் உயிரினங்களைக் கொல்வதை, குறிப்பாக நாய்களைக் கொல்வதைத் தடைசெய்கின்றனர். அதனால் மனிதர்களுக்கு எவ்வளவு இடையூறும் தொல்லைகளும் அன்றாடம் ஏற்படுகின்றன என்பதை அந்த இயக்கத்தைச் சேர்ந்தோர் பொருட்படுத்துவதில்லை.

 

அதேநேரத்தில் எல்லா நாய்களையும் கொல்லுங்கள் என்று நபியவர்கள் கூறவில்லை. மாறாக அதில் கருப்பு நாய்களை மட்டும் கொல்லச் சொல்லியுள்ளார்கள். அது குறித்து நபியவர்கள் சொன்ன செய்தி இப்னுமாஜா நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது: திண்ணமாக நாய்கள் சமுதாயங்களுள்  ஒரு சமுதாயமாக இல்லையென்றால் அவற்றைக் கொல்லுமாறு நான் ஏவியிருப்பேன். எனவே அவற்றுள் கருப்பு நாய்களைக் கொல்லுங்கள்...என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (இப்னுமாஜா: 3205/ 3196)

 

நாம் தெருக்களில் நடந்து செல்லும்போது வெறிபிடித்த நாய் நம்மைத் துரத்தும்; அதுபோன்ற வெறிபிடித்த நாய், கருப்பு நாய் ஆகியவற்றைக் கொல்லலாம் என்பதே இந்த ஹதீஸ் மூலம் தெரியவருகிறது. கருப்பு நாயைக் கொல்லச் சொன்னதற்கான காரணமென்ன என்று நபியவர்களிடம் கேட்கப்பட்டபோது, “அது ஷைத்தான் ஆகும் என்று கூறினார்கள். (இப்னுமாஜா: 3210/ 3201) அதாவது ஷைத்தானின் குணம் அதில் அதிகமாகக் காணப்படுகிறது.

 

தொல்லைதரும் நாயைக் கொல்லச் சொன்ன இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தாம் உயிரினங்கள் மீது அன்பு காட்டவும் வழிகாட்டியுள்ளார்கள். அந்த வகையில் ஒரு நாய்க்கு ஒரு முஸ்லிம் தண்ணீர் வைத்தாலும் அதன் காரணமாகக்கூட அவர் சொர்க்கம் செல்ல முடியும் என்று கூறியுள்ளதன் மூலம் ஆர்வமூட்டியுள்ளார்கள்.

 

ஒரு நாய் தாகத்தால் (தவித்து) ஈர மண்ணை (நக்கி) உண்டுகொண்டிருப்பதை ஒரு மனிதர் பார்த்தார். உடனே அவர் (தாம் அணிந்திருந்த) காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு அந்நாய் தாகம் தீரும் வரை கொடுத்தார். எனவே அல்லாஹ், அவருடைய நற்செயலைப் பாராட்டி அங்கீகரித்து அவரைச் சொர்க்கத்தில் நுழையச்செய்தான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரீ: 173)

 

ஆக தொல்லைதரும் நாய்களிடமிருந்து  நாம் எச்சரிக்கையாக இருந்துகொள்வதோடு நம் பிள்ளைகளையும்  கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்; வளர்ப்பு நாய்களிடம் சற்றுத் தூரமாகவே இருந்துகொள்வது நல்லது.  அதேநேரத்தில் கோடைக் காலத்தில் நாய், ஆடு, மாடு, பறவைகள் உள்ளிட்டவை நாவறண்டு தண்ணீருக்காக அலையும். எனவே அவற்றின்மீது இரக்கம் கொண்டு, அவற்றுக்குத் தண்ணீர் வைப்பதன்மூலம் இறையன்பைப் பெற்று இனிய சொர்க்கம் அடைவோம்.

==============================










செவ்வாய், 18 ஜூன், 2024

யார் மாற்றுவார்? எப்போது மாற்றுவார்?

 


===========

ஊர் ஊராய்ச் சுற்றிவரும்

உயர்மதிப்பு பணத்தாளை

நைலான் தாளாக 

யார் மாற்றுவார்?

எப்போது மாற்றுவார்?

 

கருவாட்டுக் கடையேறி

மீன்கடைக்குள் புகுந்து

வடைசுட்டு விற்கும்

பாட்டியின்

சுருக்குப் பையில் கசங்கி

பெண்கள் பலரின் 

முந்தானையில் சுருங்கிவரும்

உயர்மதிப்பு பணத்தாளை

நைலான் தாளாக 

யார் மாற்றுவார்?

எப்போது மாற்றுவார்?

 

 

பலப்பல கைகள் மாறி

பாரத நாட்டைச்

சுற்றிவரும்

அந்தத் தாள்

இந்தியாவின்

பொருளாதாரத்தைப்போல்.

சுருங்கி, கசங்கிக்

கிழிந்து கிடக்கிறது.

 

உயர்மதிப்பு பணத்தாளை

நைலான் தாளாக 

யார் மாற்றுவார்?

எப்போது மாற்றுவார்?

 

-நூ. அப்துல் ஹாதி பாகவி

18 06 2024





சனி, 15 ஜூன், 2024

இரத்தத்தைச் சுத்தப்படுத்துவோம்!

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

மனித உடல் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் குருதி தூய்மையாக இருந்தால்தான் அவனது உடல்  ஆரோக்கியமாக இருக்கும். குருதி கெட்டுவிட்டால் நோய் ஆக்கிரமித்துக்கொள்ளும். எனவே நாம் நம் குருதியைத் தூய்மையாக வைத்துக்கொள்ளும் வழிமுறைகளைத் தெரிந்துகொண்டு அதன்படி செயல்பட வேண்டும். நம் குருதியைத் தூய்மையாக வைத்துக்கொள்ள நபியவர்கள் என்னென்ன வழிமுறைகளைச் சொல்லியுள்ளார்கள் என்பதை அறிந்து அந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் நாம் இறுதி வரை ஆரோக்கியமாக இருக்கலாம்.

 

குருதி குத்தி எடுத்துக்கொள்ளுதல்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திற்கு முன்பே குருதி குத்தி எடுத்துக்கொள்ளும் சிகிச்சை முறையை அரபியர்கள் மேற்கொண்டு வந்துள்ளார்கள். அந்தச் சிகிச்சை முறையை நபியவர்கள் அங்கீகரித்ததுடன், தாமும் அந்தச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்கள். அது குறித்து அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “நீங்கள் எவற்றால் சிகிச்சை பெறுகிறீர்களோ அவற்றிலெல்லாம் சிறந்தது குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்வதும், வெண்கோஷ்டமும்தான்...’’ என்று சொன்னார்கள். (புகாரீ: 5696)

 

அது மட்டுமின்றி, வானவர்களே நபியவர்களிடம், அவர்களுடைய சமுதாய மக்களை இரத்தம் குத்தி எடுத்துக்கொள்ளக் கட்டளையிடுமாறு கேட்டுக்கொண்டார்கள். அது குறித்து நபிமொழி ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.  அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: நான் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டபோது (வானவர்களுள்) ஒரு குழுவினரைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள், “முஹம்மதே! குருதி குத்தியெடுத்துக்கொள்ளுமாறு உம்முடைய சமுதாயத்தாருக்கு ஏவுங்கள் என்று கூறாமல் (நான் கடக்கவே) இல்லை. (இப்னுமாஜா: 3479 / 3470)

 

அதாவது ஒருவர் இரத்தம் குத்தி எடுத்துக்கொள்வதால் அவருடைய உடலில் உள்ள கெட்ட இரத்தம் வெளியேறிவிடும்; அவருடைய இரத்தம் தூய்மையடையும்; பார்வை கூர்மையாகும்; இரத்த அழுத்தம் (பி.பீ.) குறையும்; இரத்த ஓட்டம் சீராகும். எனவே இந்தச் சிகிச்சையை நாம் மேற்கொள்வதால் பல்வேறு நன்மைகள் உள்ளன.

 

இரத்தத்தில் உள்ளவை: மனிதக் குருதியில் மூவகை முக்கியப் பொருள்கள் உள்ளன. அவை பிளாஸ்மா, சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள் ஆகும். பிளாஸ்மா என்பது திரவப்பகுதி ஆகும். சிவப்பணுக்கள்  நுரையீரலிலிருந்து மற்ற பகுதிகளுக்கு உயிர்வளியை (ஆக்ஸிஜனை) எடுத்துச் செல்கின்றன. வெள்ளை அணுக்கள் நோய்களை எதிர்த்துப் போராடுகின்றன.

 

இரத்த வகைகள்: அல்லாஹ் நுட்பமான படைப்பாளன் என்பதற்கு மனித உடலுக்குள் உள்ள இரத்தப் பிரிவுகள் ஒரு சான்றாகும். ஏ, ஏபி, பி, ஓ ஆகிய நான்கு வகைகள் உள்ளன. அவற்றுள் ஒவ்வொன்றிலும் பிளஸ், மைனஸ் என்ற பாகுபாடு உண்டு. ஆகவே அந்த நான்கு வகைகள் எட்டாகின்றன. இந்த எட்டு வகை இரத்தங்களுள்  சிலருக்குச் சில வகை பொருந்தும்; வேறு சிலருக்கு அவை பொருந்தா. ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு, மிகுதியான இரத்தம் வெளியேறிவிட்டால், அவருக்கு மற்றொருவர் இரத்தம் கொடுத்து உதவுகிறார். ஆனால் அந்த இரத்தம் அவருடைய உடலுக்கு ஏற்ற வகையைச் சார்ந்ததுதானா என்பதை ஆய்வு செய்துதான் அந்த இரத்தத்தை விபத்துக்குள்ளானவரின் உடலில் ஏற்றுவார்கள். தவறான வகை இரத்தம் ஒருவருக்கு ஏற்றப்பட்டால் அது அவருடைய உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

 

இரத்தம் உறைதல்: ஒருவருக்குக் காயம் ஏற்பட்டுவிட்டால் அவரது உடலிலிருந்து உதிரம் வெளியேறும். ஆனால் அது சற்று நேரத்தில் நின்றுவிடும். அவ்வாறு நின்றுபோவதற்கான காரணம் அதில் உறைதல் தன்மை உள்ளதேயாகும். உறைதலுக்கான காரணம், அதிலுள்ள பைபிரினோஜென் எனும் பொருளாகும். உறைதல் தன்மை மட்டும் இல்லாதிருந்தால் உடலிலிருந்து எல்லாக் குருதியும் மடமடவென வெளியேறிவிடும். அதனால் மனிதன் இறந்துவிடும் நிலைகூட ஏற்படலாம். அல்லாஹ் நுட்பமான படைப்பாளன் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

 

இரத்தம் அசுத்தமானது: இரத்தம் அசுத்தமானது என்பதால்தான் அதனை உட்கொள்வது நமக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகின்றான்: (இறைநம்பிக்கையாளர்களே!) தாமாகச் செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாத (வேறு) பெயர் கூறப்பட்டவை ஆகியவற்றைத்தான் அல்லாஹ் உங்களுக்குத் தடைசெய்துள்ளான். (2: 173) தாமாகச் செத்த பிராணியில் அதன் இரத்தம் அதனுள் தேங்கிவிடுவதால் அது தடைசெய்யப்பட்டது.

 

இரத்தம் உணவு ரீதியாகத் தடைசெய்யப்பட்டது என்பதற்கு மேற்கண்ட குர்ஆன் வசனம் ஆதாரமாகும். ஆன்மிக ரீதியாகவும் இரத்தம் அசுத்தமானதாகும். அது குறித்து ஒரு செய்தி இதோ.

அஸ்மா பின்த் அபீபக்ர் ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: ஒரு பெண்மணி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து எங்களுள் ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டு விட்டால், அவள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “(இரத்தம் பட்டுக் காய்ந்துவிட்ட) அந்த இடத்தைச் சுரண்ட வேண்டும்; பின்னர் அதைத் தண்ணீர்விட்டுக் கசக்கிக் கழுவ வேண்டும்; பின்னர் அந்தத் துணியுடன் தொழுதுகொள்ளலாம் என்று கூறினார்கள். (புகாரீ: 227)

 

இதயம்: இரத்தத்தை உந்தித் தள்ளும் பணியை இதயம் செய்துவருகிறது. இரத்த நாளங்கள் வழியாக அந்த இரத்தம் உடலின்  எல்லாப் பாகங்களுக்கும் சென்றுகொண்டே இருக்கிறது. இதயத்தின் பணி நிறுத்தப்பட்டால் இரத்த ஓட்டம் நின்றுபோய்விடும். இரத்த ஓட்டம் நின்றுபோய்விட்டால் மனிதன் மரணத்தையே தழுவுவான். இதையெல்லாம் உள்ளடக்கியவாறு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு செய்தியைச் சொல்லியுள்ளார்கள்: அறிந்துகொள்க: உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்துவிடும். அறிந்துகொள்ளுங்கள்: அதுதான் உள்ளம். (புகாரீ: 52)   

 

இரத்தத்தைச் சுத்தப்படுத்துபவை: இரத்தம் தூய்மையாக இருந்தால் உடல் சீராக இயங்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடலிலுள்ள இரத்தம் கெட்டுப்போய்விட்டால் நோய் ஏற்படும். ஆகவே நம் உடலிலுள்ள இரத்தத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள நாம் என்னென்ன உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து நபியவர்கள் நமக்குத் தெளிவாக வழிகாட்டியுள்ளார்கள். அவற்றைப் பேணினால் நாம்  ஆரோக்கியத்தோடு வாழலாம். நீங்கள் இரண்டு நிவாரணிகளைக் கடைப்பிடியுங்கள்: (அவை) 1. தேன், 2. (திருமறைக்) குர்ஆன் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.  (இப்னுமாஜா: 3452/ 3443)

 

உங்கள் மருந்துகளுள் ஏதேனும் ஒன்றில் நன்மையேதும் இருக்குமானால் தேன் அருந்துதல், அல்லது குருதி உறிஞ்சும் கருவியால் (உடம்பில்) கீறி இரத்தத்தை வெளியேற்றுதல், அல்லது நெருப்பால் சூடிட்டுக்கொள்வதில்தான் அது இருக்கும். (ஆயினும்,) நான் சூடிட்டுக் கொள்வதை விரும்பவில்லை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரீ: 5702) குருதி குத்தி எடுத்துக்கொள்ளுதல், தேன் அருந்துதல் ஆகிய இரண்டு சிகிச்சை முறைகளை நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். ஆக இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதற்கான இரண்டு வழிமுறைகளை நபியவர்கள் கூறியுள்ளார்கள். அது மட்டுமின்றி நபியவர்கள் தேனை விரும்பியுள்ளார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இனிப்புப் பண்டத்தையும் தேனையும் விரும்பிவந்தார்கள். (புகாரீ: 5599)

 

ஆக நபியவர்கள் தேனை விரும்பியதன் நோக்கம், தேன் நம் உடலிலுள்ள இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, உடலைச் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. எனவே நம்முள் ஒவ்வொருவரும் அதனை உட்கொள்வது அவசியமாகும். தேனை அப்படியே உண்ண முடியாது. எனவே இளஞ்சூடான நீரில் அதனைக் கலந்து காலை, இரவு என இரண்டு தடவை அருந்துவதால் இரத்தம் தூய்மையடையும்; நோய்க் கிருமிகள் அழியும்.

உள்ளங்கையில் தேனை ஊற்றி, நாவால் சுவைத்து உமிழ்நீருடன் உட்கொள்வதால் சளி நீங்கும்; இரைப்பையின் மந்தநிலையைப் போக்கி, சுறுசுறுப்படையச் செய்யும்; கழிவுகளை வெளியேற்றும் என இப்னுல் கய்யிம் ரஹிமஹுல்லாஹ் ஸாதுல் மஆத் எனும் தமது நூலில் கூறியுள்ளார்.

 

இரத்தத்தை வெளியேற்றுதல்: கோழி, ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்ட பிராணிகளின் இறைச்சிகளை உண்பதற்குமுன் அவற்றை, அல்லாஹ்வின் பெயர்கூறி அறுத்து, அதன் இரத்தத்தை வெளியேற்றிவிடுகிறோம். ஏனெனில் இரத்தத்தில் கிருமிகள் உள்ளன. அவை மனித உடலுக்கு ஊறு விளைவிக்கக்கூடியவை. எனவேதான் அவற்றிலிருந்து இரத்தத்தை வெளியேற்றிவிடுகிறோம்.

 

இறந்தவற்றையோ இரத்தத்தையோ சாப்பிடக்கூடாது. அவற்றை அல்லாஹ் தடைசெய்துள்ளான் என்பதை அல்பகரா அத்தியாயத்தின் 173ஆம் வசனத்தில் பார்த்தோம். மனித உடலுக்கு ஊறுவிளைவிக்கக்கூடியதையே அல்லாஹ் தடைசெய்துள்ளான் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அதேநேரத்தில் அனுமதிக்கப்பட்ட இறந்தவையும் இரத்தங்களும் உள்ளன. அவற்றை உண்பதால் உடலுக்குத் தொல்லையோ தீங்கோ இல்லை. அதைப் பற்றித் தெரிந்துகொள்வோம். இறந்தவை இரண்டும் இரண்டு இரத்தங்களும் நமக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன. அறிந்துகொள்க! இறந்தவை இரண்டு மீனும் வெட்டுக்கிளியுமாகும். அறிந்துகொள்க! இரண்டு இரத்தங்கள், கல்லீரலும் மண்ணீரலும் ஆகும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (இப்னுமாஜா: 3314 / 3305)

 

இன்றைய இளைஞர்களும் இளைஞிகளும் துரித உணவு வகைகளை அதிகமாக உண்கின்றனர்.  அதில் அவர்கள் கேஎஃப்சி சிக்கனை அதிகமாக விரும்பி உண்கின்றார்கள். அந்தக் கோழியை யார் அறுத்தார் என்பது அவர்களுக்குத் தெரியுமா? முஸ்லிமா, முஸ்லிம் அல்லாதவரா? உரிய முறையில் பிஸ்மில்லாஹ்வும் தக்பீரும் சொல்லி அறுக்கப்பட்டனவா? என்பதையெல்லாம் கவனிப்பதில்லை. ஊறுவிளைவிக்கின்ற உணவுகளை மிகுதியாக உண்கின்ற இளைஞர்கள் பலர் மிகக் குறுகிய காலத்திலேயே மரணத்தைத் தழுவுகின்றனர் என்பது வருத்தத்திற்குரியது.

 

ஆகவே நம் இரத்தத்தைத் தூய்மைப்படுத்தக்கூடிய உணவுப் பொருள்களையும் மாதுளை உள்ளிட்ட பழங்களையும் உண்டு, ஹராம் எனத் தடைசெய்யப்பட்டதை விலக்கி வாழ்ந்தால் நாம் ஆரோக்கியமாக வாழலாம். ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனி மருந்து என்பது தேவையில்லை. இரத்தம் தூய்மையாக இருந்தாலே எல்லா நோய்களும் குணமாகிவிடும் என மனிதநேயமிக்க மருத்துவர்கள் கூறுகின்றார்கள். எனவே அதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு அதன்படி செயல்பட முனைவோம். 

======================================







புதன், 22 மே, 2024

#மாற்றியோசி

 #மாற்றியோசி

_______
அயல் நாட்டிற்குச் சென்று சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணுவதை விட்டு விட்டு, அயல்நாடுகளிலிருந்து வியாபாரப் பொருள்களை #இறக்குமதி (import) செய்து அல்லது இங்குள்ள பொருள்களை அயல் நாடுகளுக்கு #ஏற்றுமதி (Export) செய்து பொருளீட்ட வேண்டும் என்று உறுதிகொள்.
முந்தையதில் நீ ஒரு தொழிலாளி.
ஆனால்
பிந்தையதில் நீ ஒரு #முதலாளி என்பதை நினைவில் கொள்.
உயர்வாக எண்ணு
இது நம்ம மண்ணு.
அன்புடன்
நூ.அப்துல் ஹாதி பாகவி
22.05.2024

வியாழன், 16 மே, 2024

அவசரப்படாதீர்!

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

 

மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான் (21: 37) என்று அல்லாஹ் அருள்மறைக் குர்ஆனில் கூறுகின்றான். இன்று நாம் அவசர யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். சுவிட்சைத் தட்டியதும் மின்விசிறி சுழல்வதைப் போல் எல்லாமே வேக வேகமாக இயங்க வேண்டும் என்று மனிதன் எதிர்பார்க்கின்றான். அந்த வகையில் உருவானதுதான் துரித உணவு (ஃபாஸ்ட் ஃபுட்), துரிதப் பயணம், துரித முன்னேற்றம் முதலானவை. எல்லாவற்றிலும் அவசர நிலை மனிதனை நோயைப் போலத் தொற்றிக்கொண்டது. நிதானம் அல்லாஹ்விடமிருந்து உள்ளதாகும்அவசரம் ஷைத்தானிடமிருந்து உள்ள குணம் ஆகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (திர்மிதீ: 2012/ 1935)

 

 



மனிதன் ஏன் அவசரப்படுகின்றான்? ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் படைத்து, அவர்களின்  தலைப்பகுதியிலிருந்து உயிர்க்காற்றை ஊதிக் கொண்டே வந்து, அது இடுப்பை அடைந்தபோது, அவர் எழுந்து அமர்ந்துகொண்டார். அவன் ஊதிய உயிர்க்காற்று இன்னும் அவரினுள் சென்று முழுமையடையவில்லை. அதற்குள் அவர் அவசரப்பட்டு எழுந்து அமர்ந்துவிட்டார்.

 

 

முதல் மனிதர் முழுமையடைவதற்குள் அவசரமாக எழுந்து அமர்ந்துகொண்டதைப்போல் மனிதன் எல்லாவற்றிலும் அவசரப்படுகின்றான். அவசரப்பட்டு முடிவெடுக்கின்ற ஆண்கள்-பெண்கள், மாணவ-மாணவிகள், தம்பதிகள் இருக்கத்தான் செய்கின்றார்கள். தேர்வில் வெற்றிபெறாததால் அல்லது மதிப்பெண்கள் குறைவாக எடுத்ததால் தம்மைத்தாமே மாய்த்துக்கொள்கின்றார்கள். தேர்வில் தேர்ச்சி பெறவில்லையானால் அடுத்த இரண்டு மாதங்களில் மறுதேர்வு நடைபெற உள்ளது. அதில் நன்றாக எழுதித் தேர்ச்சிபெற்றுக்கொள்ளலாம் என்ற தீர்வை நோக்கி நகர வேண்டுமே தவிர, அவசரப்பட்டுத் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது.

 

 

கணவன்-மனைவி இடையே பிரச்சனை என்றால், அந்தப் பிரச்சனையைப் பொறுமையாக எதிர்கொள்ள வேண்டும்; பேசித் தீர்க்க முயலவேண்டும். அதை விட்டுவிட்டு இருவருள் ஒருவரோ, இருவருமோ அவசரப்பட்டுத் தவறான முடிவெடுத்துவிடக் கூடாது. அவசரப்பட்டு, மணமுறிவு வரை சென்றுவிடக் கூடாது. அல்லது தற்கொலை முடிவெடுத்துவிடக் கூடாது.

 

 


பொறுமை, சகிப்புத்தன்மை, நிதானம் இவையே ஒவ்வொரு மனிதனும் தன் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நற்குணங்களாகும். மாறாக அவசரப்பட்டு முடிவெடுப்பது ஒருவரை நரகத்தில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். அதற்கான ஒரு நிகழ்வுதான் புகாரீயில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

 

 

(கைபர் போரின்போது) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (யூத) இணைவைப்பாளர்களிடம் போரிட்டுக்கொண்டிருந்த (குஸ்மான் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதரைப் பார்த்தார்கள். அவர் எதிரிகளுக்குப் பதிலடி கொடுப்பதில் முஸ்லிம்களிலேயே மகத்தான (பங்காற்றுப)வராக இருந்தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “நரகவாசிகளுள் ஒருவரைப் பார்க்க விரும்புகின்றவர் இவரைப் பார்த்துக் கொள்ளலாம் என்று (குஸ்மான் எனும் அந்த மனிதரைக் குறித்துக்) கூறினார்கள். (அவரைப் பற்றி நபியவர்கள் ஏன் அவ்வாறு கூறினார்கள் என்று அறிந்துகொள்வதற்காக) உடனே அவரை இன்னொரு மனிதர் பின்தொடர்ந்தார். (குஸ்மான் என்ற) அந்த மனிதரோ (எதிரிகளுடன் கடுமையாகப்) போராடிக்கொண்டு இருந்தார். இறுதியில் அந்த மனிதர் (எதிரிகளால் கடுமையாகக்) காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துவிட விரும்பி, தமது வாளின் (கீழ்ப் பகுதியைப் பூமியில் நட்டு வைத்து, அதன்) கூரான பகுதியைத் தம் மார்புகளுக்கிடையே வைத்து, அந்த வாளின் மீது உடலை அழுத்திக் (கொண்டு தற்கொலை செய்து)கொண்டார். வாள் அவருடைய தோள்களுக்கிடையே இருந்து வெளியேறியது.

 

 

அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “ஓர் அடியார் மக்களின் பார்வையில் சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளுள் ஒருவராக இருப்பார். (இதைப் போன்றே) ஓர் அடியார் மக்களின் பார்வையில் நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்துவருவார். (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளுள் ஒருவராக இருப்பார். இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன என்று சொன்னார்கள். (புகாரீ: 6493) 

 

 



போர்க்களத்தில் போர்செய்து எதிரிகளை வீழ்த்தியபோதும், சகிப்புத்தன்மையின்றி அவசரப்பட்டு முடிவெடுத்ததால் நரகம் செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டார். இவர் போன்று நாம் அவசரமான முடிவெடுப்பதைவிட்டுத் தவிர்ந்துகொள்ள வேண்டும்.

 

 

உலகு சார்ந்த செயல்களைத் தாண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்வதிலும் அது விரைவாகக் கிடைக்கவேண்டும் என்பதிலும் மனிதன் அவசரப்படுகின்றான். எவ்வளவோ துஆ செய்துவிட்டேன்; என்னுடைய  துஆ ஒப்புக்கொள்ளப்படவே இல்லை என்று மனிதன் புலம்புகின்றான். மனிதன் அவசரக்காரன்; இறைவன் நிதானமானவன். அவனுக்கு எது, எப்போது நன்மையாக அமையுமோ அதை, அப்போது வழங்குவான். அது வரை மனிதன் எதிர்பார்த்துக் காத்திருக்கவேண்டுமே தவிர அவசரப்படக்கூடாது. நான் பிரார்த்தனை செய்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை என்று கூறி, நீங்கள் அவசரப்படாத வரை உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரீ: 6340)

 

 

அதுபோலவே தம்பதியர் திருமண வாழ்க்கையைத் தொடங்கிய சில மாதங்களிலேயே, “என்னம்மா விசேஷம் ஏதும் இல்லையா?” என்று அக்கம் பக்கத்துப் பெண்களும் உறவினர்களும் கேட்கத் தொடங்கிவிடுவார்கள். ஆறு மாதம், ஒரு வருடம் கழிந்துவிட்டால், “என்னம்மா, இன்னும் விசேஷம் ஏதும் இல்லை? டாக்டரைப் பார்த்தீங்களா? என்று கேட்பார்கள்; அவர்களே ஆலோசனைகளையும் கூறுவார்கள். இரண்டு வருடங்கள் கழிந்தபின்னும் குழந்தை இல்லையென்றால் கேள்விக் கணைகளைத் தொடுத்து, அப்பெண்ணைப் பாடாய்ப்படுத்திவிடுவார்கள். நிம்மதியாக வாழவிடமாட்டார்கள். இதுதான் அவசர மனிதர்களின் நிலைப்பாடு.

 

 

குழந்தையில்லாத பெண்களுக்கு ஆறுதல் கூறி, ஆற்றுப்படுத்தமாட்டார்கள். மாறாக எதிர்மறையான பேச்சுகளைப் பேசிப்பேசிச் சங்கடப்படுத்துவார்கள். குழந்தையைப் பெற்றெடுப்பது ஆண்-பெண் கையில் இல்லை. மேலும் தாம்பத்திய உறவு கொள்வதில் மட்டும் இல்லை. மாறாக இறைவனின் முடிவில் இருக்கிறது. அது குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: அவன் விரும்பியவர்களுக்குப் பெண் சந்ததியை மட்டும் கொடுக்கின்றான். அவன் விரும்பியவர்களுக்கு ஆண் சந்ததியை மட்டும் கொடுக்கின்றான். அல்லது ஆணையும் பெண்ணையும் கலந்தே கொடுக்கின்றான். மேலும் அவன் விரும்பியவர்களை (சந்ததியற்ற) மலடாகவும் ஆக்கிவிடுகின்றான். (42: 49-50)

 

 


தம்பதிகள் குழந்தைக்காகக் காத்திருக்க வேண்டும். அது இறைவனின் கையில் உள்ளது. அது அவனுடைய அருட்கொடைகளுள் மகத்தானது. அவன் நாடுவோருக்கு நாடிய பொழுதில் குழந்தையைக் கொடுப்பான்.  இப்ராஹீம் நபிக்கு நூறு வயது; அவர்தம் மனைவி சார்ரா அம்மையாருக்கு தொண்ணூற்று ஏழு வயது. அந்நேரத்தில்தான் அல்லாஹ் அவர்களுக்கு இஸ்ஹாக் என்ற குழந்தையைக் கொடுத்தான்.

 

 

அவர்கள் (இஸ்ஹாக் என்னும்) மிக்க ஞானமுள்ள மகனை அவருக்கு நற்செய்தி கூறினார்கள். (இதனைச் செவியுற்ற) அவருடைய மனைவி (சார்ரா) கூச்சலுடன் அவர்கள் முன்வந்து, தம் முகத்தில் அறைந்துகொண்டு “(நானோ) தள்ளாடிய கிழவி; அதிலும் மலடி. (எவ்விதம் எனக்குக் குழந்தை பிறக்கும்?) என்று கூறினார். அதற்கவர்கள், “இவ்வாறே உங்கள் இறைவன் கூறுகின்றான். நிச்சயமாக அவன் மிக ஞானமுள்ளவனும், அனைத்தையும் நன்கறிந்தவனும் ஆவான் என்றார்கள். (51: 28-29)

 

 

அதுபோலவே ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமக்கொரு வாரிசின்றி நீண்டகாலம் காத்திருந்தார்கள். இறுதியில் மன உருக்கத்தோடு அல்லாஹ்விடம் துஆ-பிரார்த்தனை செய்தார்கள். இறைவா, என்னை (வாரிசு இல்லாமல்) தனித்தவனாக விட்டுவிடாதே; நீ வாரிசு வழங்குவோருள்  சிறந்தவனாக இருக்கின்றாய் (21: 89). அவர்களின் உருக்கமான பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட இறைவன் யஹ்யா என்ற குழந்தையைப் பிறக்கச் செய்தான். இதுதான் காத்திருப்பின் பலனாகும்.

 

 

எத்தனையோ தம்பதிகள் குழந்தைக்காக நீண்டகாலம் காத்திருந்திருக்கிறார்கள். பத்தாண்டுகள், பதினைந்து ஆண்டுகள் கழித்துக்கூட அவர்களுக்குக் குழந்தை பிறந்துள்ளது என்பதைச் சமுதாய மக்கள் உணர்ந்துகொண்டு பொறுமை காக்க வேண்டும். குழந்தையில்லாத் தம்பதிகளைச் சொற்களால் துன்புறுத்தக்கூடாது.

 

 

வியாபாரத்தில் அபிவிருத்தி இல்லை; இலாபம் இல்லை என்று புலம்புவோர் உள்ளனர். மிகத் துரிதமாக அதிகமான இலாபம் ஈட்ட வேண்டும்; மிகக் குறுகிய காலத்திலேயே பணக்காரனாகிவிட வேண்டும் என்றெல்லாம் மனிதன் அவசரப்படுகின்றான். எல்லாவற்றுக்கும் இறைவனிடம் ஒரு குறிப்பிட்ட காலம் உண்டு. அது அது அந்தந்தக் காலத்தில்தான் நடைபெறும்; நாம் அவசரப்படக் கூடாது.

 

 

அதேநேரத்தில் அவசரப்பட வேண்டிய சில விஷயங்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். அலீயே, மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தாதீர். 1. தொழுகைநேரம் வந்துவிட்டால்  (உடனடியாகத் தொழுதுவிடுதல்), 2. ஜனாஸா வந்துவிட்டால் (உடனடியாகத் தொழுகை நடத்திவிடுதல்), 3. பருவப்பெண்ணுக்குத் தோதுவான இணை கிடைத்துவிட்டால் (உடனடியாகத் திருமணம் செய்துவைத்துவிடுதல்). (திர்மிதீ: 1075/ 995)

 

 

ஒவ்வொரு விஷயத்திலும் நிதானமாகச் செயல்படுவது (நல்லதாகும்) மறுமையுடைய செயல்களில் தவிர என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அபூதாவூத்:  4810/ 4176)

 

 

ஆக உலகுசார் செயல்பாடுகளில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் மறுமைசார் செயல்பாடுகளில் துரிதம் காட்டுவதும் நபியவர்கள் நமக்குக் கற்றுத் தந்த பாடம். எனவே அதனை நம் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடித்தால் நாம் என்றென்றும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழலாம். 

 ==================