சனி, 15 ஜூன், 2024

இரத்தத்தைச் சுத்தப்படுத்துவோம்!

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

மனித உடல் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் குருதி தூய்மையாக இருந்தால்தான் அவனது உடல்  ஆரோக்கியமாக இருக்கும். குருதி கெட்டுவிட்டால் நோய் ஆக்கிரமித்துக்கொள்ளும். எனவே நாம் நம் குருதியைத் தூய்மையாக வைத்துக்கொள்ளும் வழிமுறைகளைத் தெரிந்துகொண்டு அதன்படி செயல்பட வேண்டும். நம் குருதியைத் தூய்மையாக வைத்துக்கொள்ள நபியவர்கள் என்னென்ன வழிமுறைகளைச் சொல்லியுள்ளார்கள் என்பதை அறிந்து அந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் நாம் இறுதி வரை ஆரோக்கியமாக இருக்கலாம்.

 

குருதி குத்தி எடுத்துக்கொள்ளுதல்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திற்கு முன்பே குருதி குத்தி எடுத்துக்கொள்ளும் சிகிச்சை முறையை அரபியர்கள் மேற்கொண்டு வந்துள்ளார்கள். அந்தச் சிகிச்சை முறையை நபியவர்கள் அங்கீகரித்ததுடன், தாமும் அந்தச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்கள். அது குறித்து அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “நீங்கள் எவற்றால் சிகிச்சை பெறுகிறீர்களோ அவற்றிலெல்லாம் சிறந்தது குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்வதும், வெண்கோஷ்டமும்தான்...’’ என்று சொன்னார்கள். (புகாரீ: 5696)

 

அது மட்டுமின்றி, வானவர்களே நபியவர்களிடம், அவர்களுடைய சமுதாய மக்களை இரத்தம் குத்தி எடுத்துக்கொள்ளக் கட்டளையிடுமாறு கேட்டுக்கொண்டார்கள். அது குறித்து நபிமொழி ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.  அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: நான் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டபோது (வானவர்களுள்) ஒரு குழுவினரைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள், “முஹம்மதே! குருதி குத்தியெடுத்துக்கொள்ளுமாறு உம்முடைய சமுதாயத்தாருக்கு ஏவுங்கள் என்று கூறாமல் (நான் கடக்கவே) இல்லை. (இப்னுமாஜா: 3479 / 3470)

 

அதாவது ஒருவர் இரத்தம் குத்தி எடுத்துக்கொள்வதால் அவருடைய உடலில் உள்ள கெட்ட இரத்தம் வெளியேறிவிடும்; அவருடைய இரத்தம் தூய்மையடையும்; பார்வை கூர்மையாகும்; இரத்த அழுத்தம் (பி.பீ.) குறையும்; இரத்த ஓட்டம் சீராகும். எனவே இந்தச் சிகிச்சையை நாம் மேற்கொள்வதால் பல்வேறு நன்மைகள் உள்ளன.

 

இரத்தத்தில் உள்ளவை: மனிதக் குருதியில் மூவகை முக்கியப் பொருள்கள் உள்ளன. அவை பிளாஸ்மா, சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள் ஆகும். பிளாஸ்மா என்பது திரவப்பகுதி ஆகும். சிவப்பணுக்கள்  நுரையீரலிலிருந்து மற்ற பகுதிகளுக்கு உயிர்வளியை (ஆக்ஸிஜனை) எடுத்துச் செல்கின்றன. வெள்ளை அணுக்கள் நோய்களை எதிர்த்துப் போராடுகின்றன.

 

இரத்த வகைகள்: அல்லாஹ் நுட்பமான படைப்பாளன் என்பதற்கு மனித உடலுக்குள் உள்ள இரத்தப் பிரிவுகள் ஒரு சான்றாகும். ஏ, ஏபி, பி, ஓ ஆகிய நான்கு வகைகள் உள்ளன. அவற்றுள் ஒவ்வொன்றிலும் பிளஸ், மைனஸ் என்ற பாகுபாடு உண்டு. ஆகவே அந்த நான்கு வகைகள் எட்டாகின்றன. இந்த எட்டு வகை இரத்தங்களுள்  சிலருக்குச் சில வகை பொருந்தும்; வேறு சிலருக்கு அவை பொருந்தா. ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு, மிகுதியான இரத்தம் வெளியேறிவிட்டால், அவருக்கு மற்றொருவர் இரத்தம் கொடுத்து உதவுகிறார். ஆனால் அந்த இரத்தம் அவருடைய உடலுக்கு ஏற்ற வகையைச் சார்ந்ததுதானா என்பதை ஆய்வு செய்துதான் அந்த இரத்தத்தை விபத்துக்குள்ளானவரின் உடலில் ஏற்றுவார்கள். தவறான வகை இரத்தம் ஒருவருக்கு ஏற்றப்பட்டால் அது அவருடைய உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

 

இரத்தம் உறைதல்: ஒருவருக்குக் காயம் ஏற்பட்டுவிட்டால் அவரது உடலிலிருந்து உதிரம் வெளியேறும். ஆனால் அது சற்று நேரத்தில் நின்றுவிடும். அவ்வாறு நின்றுபோவதற்கான காரணம் அதில் உறைதல் தன்மை உள்ளதேயாகும். உறைதலுக்கான காரணம், அதிலுள்ள பைபிரினோஜென் எனும் பொருளாகும். உறைதல் தன்மை மட்டும் இல்லாதிருந்தால் உடலிலிருந்து எல்லாக் குருதியும் மடமடவென வெளியேறிவிடும். அதனால் மனிதன் இறந்துவிடும் நிலைகூட ஏற்படலாம். அல்லாஹ் நுட்பமான படைப்பாளன் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

 

இரத்தம் அசுத்தமானது: இரத்தம் அசுத்தமானது என்பதால்தான் அதனை உட்கொள்வது நமக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகின்றான்: (இறைநம்பிக்கையாளர்களே!) தாமாகச் செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாத (வேறு) பெயர் கூறப்பட்டவை ஆகியவற்றைத்தான் அல்லாஹ் உங்களுக்குத் தடைசெய்துள்ளான். (2: 173) தாமாகச் செத்த பிராணியில் அதன் இரத்தம் அதனுள் தேங்கிவிடுவதால் அது தடைசெய்யப்பட்டது.

 

இரத்தம் உணவு ரீதியாகத் தடைசெய்யப்பட்டது என்பதற்கு மேற்கண்ட குர்ஆன் வசனம் ஆதாரமாகும். ஆன்மிக ரீதியாகவும் இரத்தம் அசுத்தமானதாகும். அது குறித்து ஒரு செய்தி இதோ.

அஸ்மா பின்த் அபீபக்ர் ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: ஒரு பெண்மணி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து எங்களுள் ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டு விட்டால், அவள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “(இரத்தம் பட்டுக் காய்ந்துவிட்ட) அந்த இடத்தைச் சுரண்ட வேண்டும்; பின்னர் அதைத் தண்ணீர்விட்டுக் கசக்கிக் கழுவ வேண்டும்; பின்னர் அந்தத் துணியுடன் தொழுதுகொள்ளலாம் என்று கூறினார்கள். (புகாரீ: 227)

 

இதயம்: இரத்தத்தை உந்தித் தள்ளும் பணியை இதயம் செய்துவருகிறது. இரத்த நாளங்கள் வழியாக அந்த இரத்தம் உடலின்  எல்லாப் பாகங்களுக்கும் சென்றுகொண்டே இருக்கிறது. இதயத்தின் பணி நிறுத்தப்பட்டால் இரத்த ஓட்டம் நின்றுபோய்விடும். இரத்த ஓட்டம் நின்றுபோய்விட்டால் மனிதன் மரணத்தையே தழுவுவான். இதையெல்லாம் உள்ளடக்கியவாறு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு செய்தியைச் சொல்லியுள்ளார்கள்: அறிந்துகொள்க: உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்துவிடும். அறிந்துகொள்ளுங்கள்: அதுதான் உள்ளம். (புகாரீ: 52)   

 

இரத்தத்தைச் சுத்தப்படுத்துபவை: இரத்தம் தூய்மையாக இருந்தால் உடல் சீராக இயங்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடலிலுள்ள இரத்தம் கெட்டுப்போய்விட்டால் நோய் ஏற்படும். ஆகவே நம் உடலிலுள்ள இரத்தத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள நாம் என்னென்ன உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து நபியவர்கள் நமக்குத் தெளிவாக வழிகாட்டியுள்ளார்கள். அவற்றைப் பேணினால் நாம்  ஆரோக்கியத்தோடு வாழலாம். நீங்கள் இரண்டு நிவாரணிகளைக் கடைப்பிடியுங்கள்: (அவை) 1. தேன், 2. (திருமறைக்) குர்ஆன் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.  (இப்னுமாஜா: 3452/ 3443)

 

உங்கள் மருந்துகளுள் ஏதேனும் ஒன்றில் நன்மையேதும் இருக்குமானால் தேன் அருந்துதல், அல்லது குருதி உறிஞ்சும் கருவியால் (உடம்பில்) கீறி இரத்தத்தை வெளியேற்றுதல், அல்லது நெருப்பால் சூடிட்டுக்கொள்வதில்தான் அது இருக்கும். (ஆயினும்,) நான் சூடிட்டுக் கொள்வதை விரும்பவில்லை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரீ: 5702) குருதி குத்தி எடுத்துக்கொள்ளுதல், தேன் அருந்துதல் ஆகிய இரண்டு சிகிச்சை முறைகளை நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். ஆக இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதற்கான இரண்டு வழிமுறைகளை நபியவர்கள் கூறியுள்ளார்கள். அது மட்டுமின்றி நபியவர்கள் தேனை விரும்பியுள்ளார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இனிப்புப் பண்டத்தையும் தேனையும் விரும்பிவந்தார்கள். (புகாரீ: 5599)

 

ஆக நபியவர்கள் தேனை விரும்பியதன் நோக்கம், தேன் நம் உடலிலுள்ள இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, உடலைச் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. எனவே நம்முள் ஒவ்வொருவரும் அதனை உட்கொள்வது அவசியமாகும். தேனை அப்படியே உண்ண முடியாது. எனவே இளஞ்சூடான நீரில் அதனைக் கலந்து காலை, இரவு என இரண்டு தடவை அருந்துவதால் இரத்தம் தூய்மையடையும்; நோய்க் கிருமிகள் அழியும்.

உள்ளங்கையில் தேனை ஊற்றி, நாவால் சுவைத்து உமிழ்நீருடன் உட்கொள்வதால் சளி நீங்கும்; இரைப்பையின் மந்தநிலையைப் போக்கி, சுறுசுறுப்படையச் செய்யும்; கழிவுகளை வெளியேற்றும் என இப்னுல் கய்யிம் ரஹிமஹுல்லாஹ் ஸாதுல் மஆத் எனும் தமது நூலில் கூறியுள்ளார்.

 

இரத்தத்தை வெளியேற்றுதல்: கோழி, ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்ட பிராணிகளின் இறைச்சிகளை உண்பதற்குமுன் அவற்றை, அல்லாஹ்வின் பெயர்கூறி அறுத்து, அதன் இரத்தத்தை வெளியேற்றிவிடுகிறோம். ஏனெனில் இரத்தத்தில் கிருமிகள் உள்ளன. அவை மனித உடலுக்கு ஊறு விளைவிக்கக்கூடியவை. எனவேதான் அவற்றிலிருந்து இரத்தத்தை வெளியேற்றிவிடுகிறோம்.

 

இறந்தவற்றையோ இரத்தத்தையோ சாப்பிடக்கூடாது. அவற்றை அல்லாஹ் தடைசெய்துள்ளான் என்பதை அல்பகரா அத்தியாயத்தின் 173ஆம் வசனத்தில் பார்த்தோம். மனித உடலுக்கு ஊறுவிளைவிக்கக்கூடியதையே அல்லாஹ் தடைசெய்துள்ளான் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அதேநேரத்தில் அனுமதிக்கப்பட்ட இறந்தவையும் இரத்தங்களும் உள்ளன. அவற்றை உண்பதால் உடலுக்குத் தொல்லையோ தீங்கோ இல்லை. அதைப் பற்றித் தெரிந்துகொள்வோம். இறந்தவை இரண்டும் இரண்டு இரத்தங்களும் நமக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன. அறிந்துகொள்க! இறந்தவை இரண்டு மீனும் வெட்டுக்கிளியுமாகும். அறிந்துகொள்க! இரண்டு இரத்தங்கள், கல்லீரலும் மண்ணீரலும் ஆகும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (இப்னுமாஜா: 3314 / 3305)

 

இன்றைய இளைஞர்களும் இளைஞிகளும் துரித உணவு வகைகளை அதிகமாக உண்கின்றனர்.  அதில் அவர்கள் கேஎஃப்சி சிக்கனை அதிகமாக விரும்பி உண்கின்றார்கள். அந்தக் கோழியை யார் அறுத்தார் என்பது அவர்களுக்குத் தெரியுமா? முஸ்லிமா, முஸ்லிம் அல்லாதவரா? உரிய முறையில் பிஸ்மில்லாஹ்வும் தக்பீரும் சொல்லி அறுக்கப்பட்டனவா? என்பதையெல்லாம் கவனிப்பதில்லை. ஊறுவிளைவிக்கின்ற உணவுகளை மிகுதியாக உண்கின்ற இளைஞர்கள் பலர் மிகக் குறுகிய காலத்திலேயே மரணத்தைத் தழுவுகின்றனர் என்பது வருத்தத்திற்குரியது.

 

ஆகவே நம் இரத்தத்தைத் தூய்மைப்படுத்தக்கூடிய உணவுப் பொருள்களையும் மாதுளை உள்ளிட்ட பழங்களையும் உண்டு, ஹராம் எனத் தடைசெய்யப்பட்டதை விலக்கி வாழ்ந்தால் நாம் ஆரோக்கியமாக வாழலாம். ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனி மருந்து என்பது தேவையில்லை. இரத்தம் தூய்மையாக இருந்தாலே எல்லா நோய்களும் குணமாகிவிடும் என மனிதநேயமிக்க மருத்துவர்கள் கூறுகின்றார்கள். எனவே அதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு அதன்படி செயல்பட முனைவோம். 

======================================







கருத்துகள் இல்லை: