சனி, 2 அக்டோபர், 2021

“திருக்குர்ஆனை எளிதில் ஓதிட” நூல் வெளிவந்துவிட்டது

 


“திருக்குர்ஆனை எளிதில் ஓதிட”
நூல் வெளிவந்துவிட்டது
=============
திருக்குர்ஆனை எல்லோரும் எளிதில் ஓதக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற முயற்சியில் நான் நீண்ட காலம் ஈடுபட்டு வருகிறேன் என்பது உங்களுள் பலருக்குத் தெரிந்திருக்கலாம்.
முதல் முயற்சியாகக் காணொலிக் குறுவட்டு வெளியிட்டேன். அதன் மூலம் பலர் எளிய முறையில் திருக்குர்ஆனை ஓதக் கற்றுக்கொண்டதாகக் கூறினார்கள். இப்போது அது நூல் வடிவில் வெளிவந்துள்ளது.
அல்ஹம்து லில்லாஹ்.

அதில் நான் எழுதியுள்ள முன்னுரையைப் படித்தால் நூலின் உள்ளடக்கம் என்னவென்று உங்களுக்கு நன்றாக விளங்கும்.
இதோ

முன்னுரை
==========

அன்பான சகோதர, சகோதரிகளே!
மாணவ மாணவிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

திண்ணமாக அறிவுரை பெறுவதற்காகவே நாம் இந்தக் குர்ஆனை எளிமையாக்கியிருக்கிறோம். எனவே அறிவுரை பெறுவோர் யாரேனும் உண்டா? (54: 17) என்று உயர்ந்தோன் அல்லாஹ் கேட்கின்றான்.

படித்தால் எளிதில் புரியும்; ஓதினால் நாவு எளிதாக உச்சரிக்கும்; மனனம் செய்தால் எளிதில் மனத்தில் பதியும். ஆக எல்லா வகைகளிலும் அல்லாஹ் இந்தக் குர்ஆனை எளிமையாக அமைத்துள்ளான்.

அதனால்தான் இவ்வுலகில் வாழும் கோடானு கோடி இதயங்கள் இந்தக் குர்ஆனை மனனம் செய்துள்ளன. இச்சிறப்பு வேறு எந்த வேதத்திற்கும் இல்லை.

அதிகாலை எழுந்து தம் மஹல்லா பள்ளிவாசலில் உள்ள மக்தப் மத்ரஸாவிற்குத் தம் பிள்ளைகளை அனுப்பிவைத்து, திருக்குர்ஆனைக் கற்றுக்கொள்ளச் செய்தார்கள் அன்றைய பெற்றோர்கள். அவர்கள் அதைத் தம் கடமையாகக் கருதினார்கள். இன்றும் கிராமங்களில் அப்பழக்கம் தொடர்கிறது என்ற போதிலும் நகரங்களில் குறைந்துள்ளதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.


இந்தத் திருக்குர்ஆனை ஒவ்வொருவரும் ஓதுமாறும் ஆய்வு செய்யுமாறும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான். இதனை ஓதுவோருக்கு ஓரெழுத்துக்குப் பத்து நன்மை உண்டு என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஊக்கப்படுத்தியுள்ளார்கள்.


ஓத வேண்டும் என்ற உந்துதலால் கண்பார்வையற்றோரும் புதிதாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டோரும் திருக்குர்ஆனை ஓதத் தொடங்கிவிட்டார்கள். ஓதுவது மட்டுமல்ல, மனனம் செய்த ஹாஃபிழ்களாகவும் திகழ்கின்றார்கள். அக்காட்சியைக் காணும்போது கண் இருந்தும் திருக்குர்ஆனைப் பார்த்து ஓதத் தெரியவில்லையே என்று ஏங்குவோர் உண்டு. அவர்களின் ஏக்கத்தைப் போக்கும்வண்ணம் ஒரு நூலை வெளியிட வேண்டுமென எண்ணினேன். அந்த எண்ணத்தின் வெளிப்பாடே, “திருக்குர்ஆனை எளிதில் ஓதிட” எனும் இந்நூல்.

பதினைந்தே பாடங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்நூலை வைத்துக்கொண்டு எளிய முறையில் நீங்களே சுயமாகத் திருக்குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ளலாம். அதேநேரத்தில் கற்றுக்கொள்ள ஓர் ஆசிரியரின் உதவி தேவை என்பதைத் தவிர்க்க முடியாது. அதற்காகவே ஓர் ஆசிரியர் உங்களோடு இருந்து உங்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் விதத்தில் காணொலி வடிவில் பாடங்கள் நடத்தப்பட்டு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதை நீங்கள் உங்கள் கணினியிலோ அலைபேசியிலோ இயக்கி, காட்சியைப் பார்த்துக்கொண்டே இந்நூலைக்
கவனித்தால் அல்லாஹ்வின் உதவியால் நீங்கள் சுயமாகவே திருக்குர்ஆனை எளிய முறையில் ஓதக் கற்றுக்கொள்ளலாம். அதன்பின் சில மாதங்களில் திருக்குர்ஆனை அதன் மூலமொழியான அரபியில் சரளமாக வாசிக்கத் தொடங்கிவிடலாம்.


இவ்வளவு வயதானபின்னர் இனி என்னால் எவ்வாறு கற்றுக்கொள்ள இயலும் என்று மலைப்பாக எண்ணாதீர்கள். “என்னால் முடியும்” என்ற நேர்மறை எண்ணத்தோடு ஓத முன்வாருங்கள். “ஓதியே தீருவேன்” என்று மனத்தில் வைராக்கியம் கொள்ளுங்கள். உங்கள் உயர்வான எண்ணமே உங்களை உயர்த்தும். உயர்ந்தோன் அல்லாஹ் நம் அனைவரின் முயற்சிகளையும் வெற்றிபெறச் செய்வானாக.


Dr.N.Abdul Hadi Baquavi எனும் யூடியூப் சேனலில் “திருக்குர்ஆனை எளிதில் ஓதிட...” எனும் தலைப்பிலான பிளே லிஸ்டில் காணொலி வடிவிலான பாடங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம்.
இந்நூலை வெளியிட இன்முகத்தோடு முன்வந்த சாஜிதா பதிப்பக உரிமையாளர் ஜனாப் ஜகரிய்யா அண்ணன் அவர்களுக்கு இறைவன் தன் அருளையும் பொருளையும் அளவின்றி அள்ளி வழங்குவானாக! ஆமீன்.

அன்புடன்
மௌலவி காரீ Dr. நூ. அப்துல் ஹாதி பாகவி
02 10 2021 24 02 1443
============


நூல் விவரம்:

நூல் பெயர் : திருக்குர்ஆனை எளிதில் ஓதிட...

ஆக்கம் : முனைவர் மௌலவி. நூ. அப்துல் ஹாதி பாகவி

விலை : ரூ. 35/-

மதரஸாவுக்கும் நண்பர்களுக்கும் அன்பளிப்பு செய்ய மொத்தமாக வாங்குபவர்களுக்கு விலையில் சலுகை உண்டு.

பக்கங்கள் : 56 (டபுள் கிரவுன் சைஸ்)

வெளியீடு : சாஜிதா புக் சென்டர்
248, தம்புச் செட்டி தெரு, மண்ணடி, சென்னை - 600 001.

போன் : (044) 2522 4821 / 98409 77758


98409 77758, 72996 94049 - என்ற எண்ணில் கூகுள் பே மூலமாகவும் பணம் செலுத்தலாம்.
=================


வெள்ளி, 17 செப்டம்பர், 2021

இமாமும் முத்தவல்லியும் சமுதாயத்தின் இரு கண்கள்

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

ஒரு பள்ளிவாசல் இமாமும் அப்பள்ளியின் முத்தவல்லியும் ஒரு மஹல்லாவின் இரண்டு கண்கள் என்றால் அது மிகையாகாது. ஒவ்வொரு பள்ளியின் இமாமும் முத்தவல்லியும் (பள்ளிவாசல் தலைவர்) ஒன்றாக, ஒரே நேர்க்கோட்டில் பயணித்தால், இணைந்து களப்பணியாற்றினால் அந்த மஹல்லா மக்கள் ஏற்றம் பெறவும் அவர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படவும் வழியேற்படும் என்பது உறுதி.


கணக்கெடுப்பு: ஒரு மஹல்லாவின் பள்ளித்தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஒன்றிணைந்து ஆலோசனை செய்து, தம் மஹல்லாவில் சந்தா செலுத்துவோர், சந்தா செலுத்தாதோர், படித்துப் பட்டம் பெற்றோர், அரசுப் பணிசெய்வோர், ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள்ஸகாத் வழங்குவோர், ஸகாத் பெறத் தகுதியுடையோர் உள்ளிட்ட எல்லாவித விவரங்களையும் சேகரித்துப் பள்ளியில் வகைப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தகவல்கள்தாம் ஒரு மஹல்லாவின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாகும். இதை வைத்துக்கொண்டுதான் அடுத்தடுத்த சேவைகளைச் செய்ய முடியும். 


இந்தக் கணக்கெடுப்பிற்குப்பின் அந்த மஹல்லாவில் சந்தா செலுத்துவோர் அனைவருக்கும் ஓர் அடையாள அட்டை வழங்க வேண்டும். அந்த அட்டையில் சந்தா எண், வீட்டு முகவரி உள்ளிட்டவை இடம்பெற்றிருக்க வேண்டும். அடுத்தடுத்து அவர் பள்ளி நிர்வாகத்தைத் தொடர்புகொள்கிறபோது அந்த எண்ணை ஓர் அடையாளமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதாவது திருமணத்திற்காகத் தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி), இறப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறும்போது அந்த எண்ணைக் கூறினால் அவருடைய பெயரும் முகவரியும் தெரிந்துவிடும். ஒவ்வொரு தடவையும் அதைக் கொண்டுவா, இதைக் கொண்டுவா என்று கூறத் தேவையிருக்காது.


சந்தா எண் அடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் சந்தா செலுத்தியோர், சந்தா செலுத்தாதோர் விவரங்களைப் பதிவு செய்துகொண்டு, கடந்த ஆண்டில் தொடர்ந்து சந்தா செலுத்தாதோரிடம்  நேரடியாகச் சென்று, சந்தா செலுத்தாத காரணத்தை அறிந்து, பொருளாதார நெருக்கடி என்றால் அதை ஏற்றுக்கொண்டு, அவருக்குப் பள்ளி நிர்வாகம் பொருளாதார உதவி செய்ய முன்வர வேண்டும். பொருளாதார நெருக்கடியின்றி, வேண்டுமென்றே சந்தா செலுத்தாமல் இருந்தால், சந்தா செலுத்துமாறு கூற வேண்டும். மீண்டும் அவ்வாறே தொடர்ந்தால் "மஹல்லாவாசிகள்' பட்டியலிலிருந்து அவரை நீக்கம் செய்துவிட வேண்டும்.


மாறாக ஆண்டுக்கொரு முறை சந்தா கணக்கெடுப்பைச் சரிசெய்யாமல், ஒருவர் தம் வீட்டில் திருமணம் என்றோ, மரணம் என்றோ வரும்போது அவரை உட்கார வைத்து, மொத்தமாக ஆயிரக்கணக்கில் சந்தா வசூலிக்கக்கூடாது. இது அவருக்கு மிகப்பெரும் பொருளாதாரச் சுமையை உண்டாக்கும். அதுவும் வீட்டில் மரணம் என்று சந்தூக் பெறுவதற்காக வரும்போது, அது அவருக்கு அடிமேல் அடியாக அமைந்துவிடும். சில மஹல்லாக்களில் இது தீர்க்க முடியாத சிக்கலாக நீடிப்பதைக் கேள்விப்படுகிறோம். இது முற்றிலும் களையப்பெற வேண்டும். 


நிதியுதவி: கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர், சம்பாதிக்க எந்த ஆணும் இல்லாத பெண்கள், முதியோர் முதலானோரைக் கணக்கெடுத்து, அவர்களுக்குப் பொருளாதார உதவி தேவைப்பட்டால் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை வழங்குவது பள்ளி நிர்வாகம் செய்ய வேண்டிய முக்கியமான பணியாகும். ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டால் நம் சமுதாயத்தில் யாசகர்கள் அருகிப் போய்விடுவார்கள். இதற்கான நிதியாதாரம் பெரும்பாலான பள்ளிகளில் இருக்கவே செய்கின்றது. போதிய நிதியாதாரம் இல்லாத பள்ளி நிர்வாகத்தார், இத்திட்டத்தைச் செயல்படுத்த, பள்ளியில் பொது அறிவிப்புச் செய்தால் போதும். செல்வர்கள் பலர் பொறுப்பேற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றார்கள். நல்ல திட்டங்களுக்குச் செலவழிக்க அவர்கள் எப்போதும் தயாராகவே இருந்து வருகிறார்கள் என்பது கடந்த காலம்தொட்டு இந்நாள் வரையுள்ள யதார்த்தமான உண்மையாகும்.


ஸகாத்தை முறைப்படுத்துதல்: ஸகாத் பெறத் தகுதியுடையோர் எத்தனை பேர், ஸகாத் கொடுப்போர் எத்தனை பேர் என்ற பட்டியல் பள்ளியில் இருந்தால் ஸகாத் கொடுப்போரிடமிருந்து ஸகாத்தை வசூல் செய்து ஸகாத் பெறத் தகுதியுடைய மஹல்லாவாழ் மக்களுக்குப் பள்ளி நிர்வாகமே வழங்கலாம். இதனால் குறிப்பிட்ட சிலருக்கு மீண்டும் மீண்டும் வழங்கப்படுவதும், வேறு சிலருக்கு அறவே கிடைக்காமல் போவதும் தடுக்கப்படும். 


கல்வி உதவித்தொகை: ஒவ்வொரு மஹல்லா நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து நன்றாகப் படிக்கின்ற, அதேநேரத்தில் கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் வறுமையில் தடுமாறுகிற பத்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட துறைகளில் படித்து, பட்டம்பெற கல்வி உதவித்தொகை வழங்கலாம். குறிப்பாக மருத்துவம், பொறியியல், ஊடகத்துறை, நீதித்துறை (வக்கீல்), கணிதத்துறை, பட்டயக் கணக்கு முதலான துறைகளில் படிக்க ஆர்வமூட்டலாம். அந்தப் பத்துப்பேர்களுள் இருவரோ மூவரோ மாணவிகளாக இருக்கலாம். இவ்வாறு ஒவ்வொரு மஹல்லா நிர்வாகமும் கல்வித்துறையில் மாணவர்களுக்கு ஊக்கமளித்தால் நம் சமுதாய இளைஞர்கள் எதிர்காலத்தில் நல்லதொரு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கத் தொடங்கிவிடுவார்கள்.  அது மட்டுமல்ல அவர்கள் நல்ல நிலைக்கு வந்து பலருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிலை ஏற்படும்.


பாலர் வகுப்புகள்: சிறுவர் சிறுமியர்க்கான பாலர் வகுப்புகள் (மக்தப் மத்ரஸா) ஒவ்வொரு பள்ளிவாசலிலும்  காலை மாலை நடைபெற பள்ளிவாசல் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அவர்களின் தலையாயக் கடமையாகும். சிலருக்குக் காலை நேரம் வசதியாக இருக்கும். வேறு சிலருக்கு மாலை நேரம் வசதியாக இருக்கும். யாருக்கு எந்நேரம் வசதியாக இருக்கிறதோ அவர்கள் அந்த நேரத்தில் வந்து கற்றுக்கொள்ளலாம். தற்போது கொரோனா எனும் தொற்றுநோய் அச்சத்தில் உலக மக்கள் சிக்கவைக்கப்பட்டுள்ளதை அறிவோம். எனவே பாலர் வகுப்பு தடைபடாமல் இருக்க, ஆன்லைன் வழி வகுப்புகள் நடைபெற வழிவகை காண வேண்டும்.


அதை விடுத்து, நமக்கென்ன என்று வெறுமனே இருந்துவிடக்கூடாது. இதற்கான வழிவகை செய்யாமல் விட்டுவிட்டால் ஒரு தலைமுறையே திருக்குர்ஆனை ஓதத் தெரியாச் சமூகமாக மாறிவிடும். ஏற்கெனவே பல்வேறு சூழ்ச்சிகளால் முஸ்லிம் சிறார்களும் சிறுமியரும் குர்ஆன் ஓதக் கற்பதிலிருந்து பல்வேறு வழிகளில்  தடுக்கப்பட்டிருக்கின்றார்கள். இப்போது பாலர் வகுப்புக்கான தடை தொடர்ந்தால், கற்றுக்கொள்ள முனைகின்ற சிலரும் கற்க வாய்ப்பில்லாமல் போய்விடும். நூறு சதவிகிதம் ஒவ்வொரு மஹல்லாவிலும் திருக்குர்ஆனைப் பார்த்துப் படிக்கக் கற்றுக்கொள்வதை உறுதி செய்வது நிர்வாகத்தின் கடமையாகும்.


முதியோர் கல்வி: எத்தனையோ பேர் தம் இளம் பிராயத்தில் குர்ஆன் குறித்த புரிதல் இல்லாமல்  அதன் முக்கியத்துவம் உணராமல், ஓதக் கற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டனர். முதுமையை அடைந்த அவர்கள் இப்போதாவது திருக்குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ளலாமே என்று ஆர்வம்கொள்கின்றனர்.


அவர்களுக்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முதியோர் வகுப்பு தொடங்கப்பட்டால் முதியோர் பலர் அதன்மூலம் பயன்பெறுவார்கள். மேலும் தம் முதுமையைப் பயனுள்ள வழியில் கழிக்க இது ஒரு நல்வாய்ப்பாக அமையும். அதேநேரத்தில் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் உஸ்தாதாக அவர்களின் வயதொத்த ஒருவரை நியமித்தால் மனச் சங்கடமின்றிக் கற்றுக்கொள்வார்கள்.


மகளிர் மேம்பாடு: பெண்களின் கல்விக்கென கற்றறிந்த ஆலிமாக்களை நியமிப்பதும் வாரந்தோறும்  பெண்கள் பயான் ஏற்பாடு செய்வதும் இளம்பெண்களுக்கெனத் தனி வகுப்புகள் நடத்த அவர்களுக்கான ஷரீஅத் சட்டங்களை விளக்கிக் கூறும் வகையில் ஆலிமாக்களை நியமிப்பதும் பள்ளி நிர்வாகம் மேற்கொள்ள  வேண்டிய பணிகளாகும். 


இச்சமுதாயத்திற்குச் செய்ய வேண்டிய இன்னும் எத்தனையெத்தனையோ பணிகளும் தொண்டுகளும் உள்ளன. அவற்றையெல்லாம் தொகுத்து எழுதினால் தனி ஒரு நூலே உருவாகிவிடும். அந்தந்த மஹல்லாவின் பொருளாதார வசதிக்கேற்பவும் தேவைகளுக்கேற்பவும் அவரவர் தொண்டுகள் செய்வதும் சேவையாற்றுவதும் தற்காலத்தில் மிக மிக அவசியமாகும்.


ஒருவர் தம் மஹல்லாவின் முத்தவல்லியாக இருந்துகொண்டு, இமாமுக்கும் முஅத்தினுக்கும் சம்பளம் கொடுப்பதும் அவர்கள்மீது தமது சீற்றத்தைப் பாய்ச்சுவதும் தவிர, மஹல்லா முன்னேற்றத்திற்காக எதையுமே செய்யவில்லையெனில் அல்லது எத்தொண்டும் செய்ய ஆர்வமில்லையெனில் அவர் தம் பொறுப்பைத் தகுதியான ஒருவருக்கு விட்டுக்கொடுத்துவிட்டுதம் பதவியிலிருந்து ஒதுங்கிக்கொள்வது நல்லது. ஏனெனில், "உங்களுள் ஒவ்வொருவரும் பொறுப்பாளி; உங்களுள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பைப் பற்றி விசாரிக்கப்படுவார்'' (புகாரீ:  893) என்ற நபிமொழிசமுதாயப் பொறுப்பு வகிக்கின்ற ஒவ்வொருவரையும் எச்சரிக்கிறது என்பதை நினைவில் கொள்வோம்; நம் பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்றுவோம்.

================






சனி, 11 செப்டம்பர், 2021

நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

 Dr. A.P. முகமது அலி IPS (R) அவர்கள் எழுதிய

இளைஞனே உன் இலக்கு என்ன?

நூல் வெளியீட்டு விழா

 

நாள்: 12.09.2021 ஞாயிறு  நேரம்: மாலை 7 மணியளவில் இன் ஷாஅல்லாஹ்

இடம்: சென்னை பேலஸ், எண்: 107 (பு.எண்: 221) மூக்கர் நல்லமுத்து தெரு முனை, (சென்ட்ரல் பேங்க் பிரான்ச் அருகில்), சென்னை-1

கிராஅத் & நிகழ்ச்சித் தொகுப்பு

மௌலவி காரீ Dr. நூ. அப்துல் ஹாதி பாகவி Ph.D.

(மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர்) 

 

தலைமையேற்று நூல் வெளியிடுபவர்:

M. அப்துல் ரஹ்மான் M.A., Ex. M.P.

சேர்மன், தமிழ்நாடு வக்ஃப் போர்டு, சென்னை-1

 

நூல் பிரதிகள் பெற்று, வாழ்த்துரை வழங்குவோர்:

பேரா. டாக்டர் சேமுமு. முகமதலி Ph.D.

பொதுச் செயலாளர் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்

இயக்குநர் எஸ்-ஐஏஎஸ் அகாடமி, கோடம்பாக்கம், சென்னை.

 

திருமதி பாத்திமா முஸப்பர் B.Com., B.A. (Arabic)

(D/o சிராஜுல் மில்லத் மர்ஹூம் ஆ.கா.அ. அப்துஸ் ஸமது)

வக்ஃப் போர்டு மெம்பர்

 

பேரா. டாக்டர் ஹாஜா கனி Ph.D.

தலைவர் தமிழ்த்துறை, காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி, மேடவாக்கம், சென்னை. பொதுச்செயலாளர் த.மு.மு.க.

 

நன்றியுரை & ஏற்புரை

Dr. A.P. முகமது அலி IPS (Rtd) Ph.D.

நூலாசிரியர்

 

 

குறிப்பு: வாய்ப்புள்ளோர் வருகை தருமாறு மிக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

 

அன்புடன்

நூ. அப்துல் ஹாதி பாகவி




புதன், 18 ஆகஸ்ட், 2021

மனக்கோட்டம் நீக்குவோம்!

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
------------------------------------ 
கோட்டம் என்றால் கோணல் என்று பொருள். மனதில் தவறான எண்ணங்கள், கோணல் சிந்தனைகள் ஏற்பட்டால் அதனை மனக்கோட்டம் என்று சொல்வர். பேசும் பேச்சில் தவறான வார்த்தைகள், நெறிதவறிய சொற்கள் வெளிப்பட்டால் அதனைச் சொற்கோட்டம் என்பர்.

 கோணல் என்ற வார்த்தையை உயர்ந்தோன் அல்லாஹ் திருக்குர்ஆனில் பயன்படுத்தியுள்ளான். 
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன்தான் தன்னுடைய அடியார்மீது இவ்வேதத்தை இறக்கிவைத்தான். அதில் அவன் எவ்விதக் கோணலையும் ஆக்கவில்லை. அதனை நேர்மையானதாக (அவன் ஆக்கினான்). (18: 1-2)


இஸ்லாமிய மார்க்கம் நேர்மையையும் நேரான பாதையையுமே காட்டுகிறது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மனித குலத்திற்கு நேரிய வழியைத்தான் காட்டுகின்றார்கள். நேர்மையாகப் பேசவும் நேர்மையாக உழைக்கவும் நேர்மையாகத் தீர்ப்பளிக்கவும் கட்டளையிடுகின்றார்கள். தவறான பாதை செல்வதையும் தவறான வார்த்தைகள் பேசுவதையும் முறைதவறி உழைப்பதையும் தடை செய்கின்றார்கள்.

 
"இறைநம்பிக்கைகொண்டோரே அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். நீங்கள் சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்'' (33: 70) என்று திருக்குர்ஆன் கூறுகிறது. 
"அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைகொண்டவர் பேசினால் நன்மையைப் பேசட்டும். அல்லது (வாய்மூடி) மௌனமாக இருந்துவிடட்டும்'' (புகாரீ: 6018) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

 
நேர்மையாகச் சம்பாதிக்க வேண்டும்; உண்மையே பேச வேண்டும்; வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்; வாங்கிய கடனை உரிய முறையில் திருப்பிச் செலுத்த வேண்டும்; பதுக்கல் செய்யக்கூடாது; ஏமாற்றக்கூடாது; மோசடி செய்யக்கூடாது; பொய் பேசக்கூடாது; அளவு நிறுவையில் குறைத்தல் கூடாது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழங்கியுள்ளார்கள். இவை அனைத்தும் மனக்கோட்டம் நீக்கி, சீரான வாழ்க்கைக்கு வழிகாட்டுபவையாகும். 


கோணல் புத்தியுடையோர் எதையும் கோணலாகவே சிந்திப்பார்கள். கோணலான பாதையிலேயே செல்வார்கள். கோணல் புத்தியுடைய வியாபாரிகள் கோணலாகச் சிந்தித்து மோசடி செய்து, ஏமாற்றிச் சம்பாதிக்க நினைப்பார்கள். இன்றைய நவீன உலகில் வியாபாரிகள் பலர் கோணல் புத்தியுடையவர்களாகவே காணப்படுகின்றார்கள்.


 அதிலும் குறிப்பாக ஆள்லைன் வியாபாரிகள் பெரும்பாலும் மக்களை ஏமாற்றிப் பிழைக்கத் திட்டம் தீட்டுகிறார்கள். எந்தெந்த வழிகளிலெல்லாம் மக்களை ஏமாற்றலாம் என்று மணிக்கணக்கில், நாள்கணக்கில் யோசித்துச் செயல்படுகின்றார்கள். 
சான்றாக ஒரு பொருள் குறித்த விவரப்படங்கள், காணொலிக் காட்சி, விவரக் குறிப்பு எல்லாமே யாரையும் எளிதில் கவரும் வண்ணம் இணையதளத்தில் வெளியிடுவார்கள். அந்தக் காணொலிக் காட்சியைப் பார்க்கும் பெரும்பாலோர் அந்தப் பொருளை வாங்கிட ஆர்டர் கொடுத்துவிடுவார்கள்.

பொருள் வந்தபின் கையெழுத்துப்போட்டு, பணத்தைச் செலுத்தி, அப்பொருளைப் பெற்றுக்கொண்டபின், பிரித்துப் பார்த்தால் நாம் கேட்டது ஒன்றாகவும் அவர்கள் அனுப்பியது வேறொன்றாகவும் இருக்கும். நாம் ஆசைப்பட்டு ஆர்டர் கொடுத்த பொருள் அதனுள் இருக்காது. இதுதான் ஆன்லைன் மோசடி.

    
கோணல் புத்தியுடைய வியாபாரிகள் நாம் வாங்கும் பொருள்களின் எடையைக் குறைத்து, குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைப்பார்கள். இது காலம் காலமாக நடைபெற்று வருகின்ற மனக்கோட்டம்தான். இறைத்தூதர் ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் தம் சமுதாய மக்களுக்கு அறிவுறுத்திய நல்லுரை குறித்துத் திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:

 
என்னுடைய மக்களே! அளவையும் நிறுவையையும் நீதியாக முழுமைப்படுத்தி வழங்குங்கள். மனிதர்களுக்கு(க் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருள்களைக் குறைத்துவிடாதீர்கள். பூமியில் குழப்பம் செய்து கொண்டு அலையாதீர்கள். நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் (உங்கள் தொழிலில் இலாபகரமாக) அல்லாஹ் மீதப்படுத்துவதே உங்களுக்கு மிக்க மேலானதாகும். நான் உங்களைக் கண்காணிப்பவனல்லன்; (அல்லாஹ்தான் உங்களைக் கண்காணிப்பவன். ஆகவே, அவனுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள்)'' என்று கூறினார். (11: 85-86)


மேலும் அல்லாஹ் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சமுதாய மக்களை எச்சரிக்குமுகமாகப் பின்வருமாறு கூறுகின்றான்: 
அளவில் மோசம் செய்பவர்களுக்குக் கேடுதான். அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால், நிறைய அளந்து கொள்கின்றனர். மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுத்தாலும் அல்லது நிறுத்துக் கொடுத்தாலும் குறைத்து (அவர்களை நஷ்டப்படுத்தி) விடுகின்றனர். மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா? (83: 1-5) 


இறைத்தூதர் ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலம் முதல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலம் வரையுள்ள சமுதாய மக்கள் அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்தே வியாபாரம் மேற்கொண்டிருக்கின்றார்கள் என்பதைத் திருக்குர்ஆன் மூலம் அறிகிறோம். அந்த மனக்கோட்டம் இன்றுவரை தொடர்கிறது என்பது மட்டுமல்ல மிகவும் அதிகரித்துள்ளது என்பது கசப்பான உண்மை. 


வியாபாரத்தில் மிகப்பெரும் அளவில் மோசடி செய்வோர் தங்க வியாபாரிகள்தாம் என்றால் மிகையில்லை. ஆம். நாம் ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் வாங்கினால் அதில் 3 கிராம் செம்புக்குத் தங்கத்திற்கான பணத்தைக் கொடுக்க வேண்டியுள்ளது. அதாவது ஒரு பவுன் தங்கச் சங்கிலிக்கு 1.5 கிராம் செம்பு சேர்த்தால்தான் நகை செய்ய முடியும். 8 கிராம் தங்கத்தில் 1.5 செம்பு போக 6.5 கிராம்தான் தங்கம். பிறகு சேதாரம் என்ற பெயரில் மேலும் 1.5 கிராம் செம்பைத் தங்கத்தின் விலைக்கு பில்போட்டு விற்கின்றார்கள். ஆக 6.5 கிராம் தங்கமும், 3 கிராம் செம்பும் கொண்ட ஒரு பவுன் தங்கச் சங்கிலியில் (மொத்தம் 9.5) 3 கிராம் செம்பைத் தங்கத்தின் விலைக்கே ஏமாற்றி விற்கிறார்கள். 
ஆகவே இவர்கள்தாம் மிகப்பெரும் கோணல்புத்தியுடையவர்கள்; மோசடிக்காரர்கள் ஆவர். 


கோணல்புத்தியுடையவர்கள் குறுக்கு வழியில் பொருளீட்ட முனைகின்றார்கள். மக்கள் சாப்பிடுகிற உணவுப் பொருள்களில் கலப்படம் செய்து விற்பனை செய்கிறார்கள். சிறுவர் சிறுமியர் சாப்பிடுகிற உணவுப் பொருள்களிலும் தின்பண்டங்களிலும்கூட இரக்கமின்றிக் கலப்படம் செய்கிறார்கள். அதனால் சிறுவர்-சிறுமியர் உடல்ரீதியாகப் பாதிக்கப்படுவார்களே என்றெல்லாம் கவலைப்படுவதில்லை.

 
எல்லாத் தளங்களிலும் கோணல்புத்தியுடையோர் உள்ளனர். சமய வழிகாட்டிகளாகத் திகழ்வோர், நோயிலிருந்து மனிதர்களைக் காக்கும் மருத்துவர்கள், பிள்ளைகளுக்கு நல்வழிகாட்டியாகத் திகழும் ஆசிரியர்கள், இணையதளச் சேவைகளை வழங்குவோர், வங்கியில் பணிபுரிவோர், திருமண ஒருங்கிணைப்பாளர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகள் உள்பட அனைத்து வகையினரிலும் மனக்கோட்டம் கொண்டோர் உள்ளனர்.


மனக்கோட்டம் உடையோர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில்லை. கடன் வாங்கும்போதே எப்படியாவது ஏமாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்திலேயே வாங்குகின்றனர். பிறகு கடன் பெற்ற வங்கியை அல்லது தனி மனிதரை ஏமாற்றிவிடுகின்றனர். அல்லது விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் ஜோஷி முதலானோரைப் போல் வெளிநாடுகளுக்குச் சென்று தஞ்சமடைந்துவிடுகின்றனர்.


 
வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல்வேறு தருணங்களில் கூறியுள்ளார்கள். அவற்றுள் ஒன்று: யார்  கடனைத் திருப்பிச் செலுத்த எண்ணம்கொண்டாரோ அவருக்கு அல்லாஹ்வின் உதவி உள்ளது என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: முஸ்னத் அபீதாவூத்: 1628) 

அதாவது கடனை வாங்குகிறபோதே அதைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நல்லெண்ணம் கொள்ள வேண்டும். அந்த எண்ணம் உடையோருக்கு அதை நிறைவேற்றுவதற்கான நல்வாய்ப்பை அல்லாஹ் உருவாக்குகிறான்; உதவி செய்கிறான். மாறாக எப்படியாவது ஏமாற்றிவிட வேண்டும் என்ற மனக்கோட்டம் இருந்தால் அதை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்காமலேயே போய்விடும். 


பிறரைப் பற்றி நல்லதே எண்ண வேண்டும் என்பது நபியவர்களின் நல்லுரையாகும். தம் சமுதாய மக்கள் பிறரைப் பற்றித் தவறாக எண்ணக்கூடாது என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விடைபெறும் ஹஜ்ஜின்போது தவாஃப் செய்தார்கள். அப்போது அவர்கள், "உன்னுடைய மணம்தான் என்னே! உன்னுடைய வாசனைதான் என்னே! உன்னுடைய கண்ணியம் எவ்வளவு மகத்தானது! உன்னுடைய மதிப்பு எவ்வளவு பெரியது! எவனுடைய கையில் முஹம்மதின் ஆன்மா இருக்கிறதோ அவன்மீது சத்தியமாக! ஓர் இறைநம்பிக்கையாளரின் கண்ணியம் அல்லாஹ்விடம் உன்னுடைய கண்ணியத்தைவிட மகத்துவம் வாய்ந்தது. அவருடைய பொருளும் அவருடைய உயிரும் (உயர்வானவை). நாம் அவருக்கு நன்மையைத் தவிர எதையும் எண்ணமாட்டோம்'' என்று கூறினார்கள்.  (நூல்: இப்னுமாஜா: 3922)


அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:  இறைநம்பிக்கைகொண்டோரே அதிகமான (கற்பனை) எண்ணங்களைவிட்டுத் தவிர்ந்துகொள்ளுங்கள். திண்ணமாக எண்ணங்களுள் சில பாவம் ஆகும்.  (49: 12)


ஓர்  இறைநம்பிக்கையாளரைப் பார்த்தால் அவரைப் பற்றி நல்லவிதமாகத்தான் எண்ண வேண்டுமே தவிர தவறாக எண்ணக்கூடாது என்பதையே நபியவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அல்லாஹ்வும் அதையே வலியுறுத்துகின்றான்.


 சிலவேளைகளில் சிலரின் மனக்கோட்டம் பாவமாக ஆகிவிடுகின்றது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். 
ஆகவே நாம் நம் மனங்களிலுள்ள கோட்டங்களைக் களைந்து நல்லெண்ணத்தோடு வாழ்வோம்.  பல்வேறு தளங்களில் உள்ள கோணல்களைக் களைந்து நேரிய பாதையில் சீரிய சிந்தனையோடும்  நல்லெண்ணத்தோடும் வாழ அல்லாஹ் அருள்வானாக. 
===========

சனி, 19 ஜூன், 2021

வேண்டாம் தொடர்பிலா விஷயம்

வேண்டாம் தொடர்பிலா விஷயம் 
அரபி: டாக்டர் அப்துர் ரஹ்மான் அல்அரீஃபீ-இஸ்தம்திஉ பி ஹயாத்திக்க
தமிழில்: டாக்டர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி-வாழ்க்கையை அனுபவி
------------

முஸ்லிமான ஒருவருடைய நற்குணங்களுள் ஒன்று அவருக்குத் தொடர்பில்லாததை விட்டுவிடுவது ஆகும். உண்மையும் தூய்மையும் கொண்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய திருவாயிலிருந்து இதை நீ கேட்பது எவ்வளவு அழகானது! ஆம், "ஒருவன் தனக்குத் தொடர்பில்லாததை விட்டுவிடுவது நல்லது.''

மக்கள், தமக்குத் தொடர்பில்லாத விஷயங்களில் குறுக்கிடுவதன்மூலம் உன்னைக் கவலைப்படுத்துகின்ற தொந்தரவு கொடுக்கின்ற எத்தனையோ பேர் இருக்கின்றனர். அவர்கள் உன்னுடைய கைக்கடிகாரத்தைக் கவனிக்கின்றபோது,  "நீ இதை எவ்வளவுக்கு வாங்கினாய்?'' என்று கேட்டு உன்னைக் கவலைப்படுத்துகிறார்கள்.

"இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது'' என்று நீ கூறுகிறாய். அதன்பின் அவர்கள், "அன்பளிப்பா? யாரிடமிருந்து?'' என்று கேட்கலாம். "ஒரு நண்பரிடமிருந்து'' என்று நீ கூறுகிறாய்.

"பல்கலைக் கழகத்திலுள்ள உன்னுடைய நண்பரா? அல்லது உன்னுடைய வசிப்பிடத்தில் இருப்பவரா?அல்லது வேறு எங்கிருப்பவர்?'' என்று அவர் தொடரலாம். "ஆம், பல்கலைக்கழகத்தில் உள்ள என்னுடைய நண்பர்'' என்று நீ பதிலளிக்கிறாய். "சரி, ஆனால் என்ன தருணம்?'' என்று அவர் வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்.

"ஆம். பல்கலைக்கழக நாள்களில் ஒரு தருணம்'' என்று நீ பதிலளிக்கிறாய்.  அவர் அதன் பின், "சரி, ஆனால் குறிப்பாக என்ன தருணம்? பட்டமளிப்பா? அல்லது நீ சுற்றுலா சென்றிருந்தபோதா? அல்லது வேறு ஏதாவது தருணமா?'' என்று கேட்கிறார். 

அவர் உன்னிடம் முற்றிலும் மதிப்பற்ற விஷயங்களைப் பற்றித் தொடர்ந்து கேட்கிறார். அல்லாஹ்வின்மீது ஆணையாக, நான் உன்னிடம் கேட்கிறேன். நீ அவரிடம், "உனக்குத் தொடர்பில்லாத விஷயத்தில் தலையிடாதே'' என்று சத்தமாகக் கூறத் தோன்றுகிறதல்லவா?  அவர் உன்னிடம் சங்கடம் நிறைந்த கேள்விகளைப் பகிரங்கமாகக் கேட்பதன் மூலம் உன்னைத் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளினால் இன்னும் மோசமாக இருக்குமல்லவா?

ஒருமுறை நான் என்னுடைய நண்பர்களுடன் ஒரு கூட்டத்தில் இருந்ததை நினைவுகூர்கிறேன். மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு என்னுடைய நண்பர்களுள் ஒருவருடைய கைப்பேசி ஒலித்தது. 

அவர் எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தார். அவர் கைப்பேசியில் "ஆம்'' என்று பதிலளித்தார். எதிர்முனையில் அவருடைய மனைவி  திட்டிக்கொண்டிருந்தார். "ஹலோ நீ எங்கிருக்கிறாய், கழுதையே?''  அவருடைய குரல் மிகவும் கணீரென்றிருந்ததால் அவர்களுடைய உரையாடலை நன்றாகக் கேட்க முடிந்தது.  "நான் நன்றாக இருக்கிறேன்; அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பானாக'' என்று அவன் கூறினான். அவன் அவளிடம் அவளுடைய குடும்பத்தாரிடம் அழைத்துச் செல்வதாக வாக்குறுதி தந்துவிட்டு எங்களுடன் தங்கிவிட்டதைப்போல காணப்பட்டது. 

அவனுடைய மனைவி உண்மையாகவே கோபமாக இருந்தாள். "அல்லாஹ் உன்னைப் பாதுகாக்கமாட்டானாக;  நான் உனக்காகக் காத்துக்கொண்டிருக்கிற சமயத்தில் நீ உன்னுடைய நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கிறாயா?... நீ ஓர் எருமை!'' என்றெல்லாம் அவள் கூறினாள்.
 
"அல்லாஹ் உன்மீது அன்பு காட்டுவானாக;  நான் இஷாவிற்குப் பிறகு உன்னிடம் வருகிறேன்'' என்று கூறினான்.

அவனுடைய பேச்சு அவளுடைய பேச்சுடன் சரியாக ஒத்துப் போகவில்லை என்பதை நான் உணர்ந்தேன். அவன் தன்னைத்தானே தர்மசங்கடத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இவ்வாறு பேசிக்கொண்டிருந்தான் என்பதை அதன் பிறகு புரிந்துகொண்டேன்.

அவன் தன்னுடைய அழைப்பைப் பேசி முடித்தான்.  நான் அவர்கள் இருப்பதைப் பார்த்து, அவர்களுள் யாராவது அவனிடம், "கைப்பேசியில் யார்? உன்னிடமிருந்து அவர் என்ன வேண்டுகிறார்? அந்த உரையாடலுக்குப் பிறகு உன்னுடைய முகம் ஏன் மாறியது?'' என்று கேட்பார்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அல்லாஹ் அவன்மீது கருணை காட்டினான். எவரும் தமக்குத் தொடர்பில்லாத விஷயத்தில் தலையிடவில்லை.

இதேபோன்று, நீ ஒரு நோயாளியை நலம் விசாரிக்கச் சென்றால், அவரிடம் அவருடைய நோயைப் பற்றிக்கேள். அவர், "அல்ஹம்து லில்லாஹ், பெரிதாக ஒன்றுமில்லை; சிறிய நோய்தான்'' என்று சந்தேகமாகப் பதிலளிக்கலாம். அதற்கு அவரிடம் நீ, "நான் வருந்துகிறேன்; உங்களுடைய இந்த வாக்கியம் நான் கேட்ட கேள்விக்கு வெளிப்படையான பதில் இல்லையே. உண்மையில் என்ன வியாதி? தயவு செய்து எனக்கு அதைத் தெளிவுபடுத்துங்கள்'' என்றெல்லாம் விவரமான கேள்விகளை விடாப்பிடியாகக் கேட்பதன் மூலம் அவரைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தாதே. அவரைச் சங்கடப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

முஸ்லிமான ஒருவருடைய நற்குணங்களுள் ஒன்று அவருக்குத் தொடர்பில்லாததை விட்டுவிடுவது ஆகும். நான் சொல்ல முனைவது என்னவென்றால், "எனக்கு மூலம் இருக்கிறது'' அல்லது "எனக்கு அந்தரங்க இடத்தில் காயம் இருக்கிறது'' என்று அவர் உன்னிடம் சொல்வதற்காக உண்மையில் நீ காத்துக் கொண்டிருக்கிறாயா?  நீண்ட நேரம் அவர் உன்னிடம் மறைவான பதில் அளித்தால், அவரிடம் விவரங்களைக் கேட்பதற்கு எந்த அவசியமுமில்லை. நோயாளியிடம் அவருடைய நோயைப் பற்றிக் கேள்வி கேட்கக்கூடாது என்று நான் கூறவில்லை. நான் கூறுவது என்னவென்றால் ஒருவர் மற்றவருடைய நோயைப் பற்றி விவரமான கேள்விகளைக் கேட்கக் கூடாது என்றுதான் கூறுகிறேன். 

இதைப் பற்றி மற்றோர் உதாரணம். அதாவது ஒரு மக்கள் கூட்டத்தில் அனைவரின் முன்னால் ஒருவர் ஒரு மாணவனை அழைத்து சத்தமாக, "அஹ்மதே நீ தேர்வாகிவிட்டாயா?'' என்று கேட்கிறார். அஹ்மத் "ஆம்'' என்று கூறுகிறான். "எத்தனை சதவிகிதம்? என்ன தரம்?'' என்று கேட்கிறார்.

அவர் உண்மையாகவே அவனைப் பற்றி அக்கறை கொண்டிருந்தால், அவன் தனிமையில் இருக்கும்போது அவர் அவனிடம், "என்ன சதவிகிதம்? ஏன் நீ மறுபார்வைக்கு முறையிடவில்லை? ஏன் நீ இந்தப் பல்கலைக்கழகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை?'' போன்ற விவரங்களைக்  கேட்டிருக்கலாம். பொதுவெளியில் எல்லோரின் முன்னிலையில் கேட்பதற்கு அவசியம் இல்லை. 
அவர் உண்மையாகவே அவனுக்கு உதவி செய்வதற்குத் தயாராக இருந்தால், அவர் அவனைத் தன்னுடன் அழைத்துச்சென்று அவர் கேட்க விரும்பியதைப் பற்றி அவனிடம் கேட்டிருப்பார். ஆனால்  தம்முடைய இழுக்கான கேள்விகளைப் பொது இடத்தில் வெளிப்படுத்துகின்றார். எனவே அது மெய்யான அக்கறை இல்லை!

"முஸ்லிமான ஒருவருடைய நற்குணங்களுள் ஒன்று அவருக்குத் தொடர்பில்லாததை விட்டுவிடுவது ஆகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். 

இருப்பினும், கவனமாக இரு. ஒரு விஷயத்தை அதைவிடப் பெரிதாக்கி விட வேண்டாம். ஒரு முறை நான் மதீனாவிற்குச் சென்றிருந்தேன். அங்கு நான் பல சொற்பொழிவுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தேன். எனவே நான் ஓர் அன்பான இளைஞன் தன்னுடன் என் இரண்டு மகன்களான அப்துர் ரஹ்மானையும் இப்ராஹீமையும் அழைத்துச் செல்ல ஒத்துக்கொண்டேன். அஸருக்குப் பிறகு அங்கு குர்ஆன் மனனம் செய்யும் அமர்வும் அல்லது கோடைக்கால பொழுதுபோக்கு அமர்வும் நடைபெறுவதால் இஷாவிற்குப் பிறகுதான் அவர்களைத் திரும்ப அழைத்துவந்தான்.

அப்துர் ரஹ்மான் உடைய வயது பத்து. அந்த இளைஞன் உன் தாயின் பெயர் என்ன? உன்னுடைய வீடு எங்கு உள்ளது? உனக்கு எத்தனை சகோதரர்கள்? உங்களுடைய தந்தை உங்களுக்குச் செலவுசெய்ய எவ்வளவு பணம் கொடுப்பார்? போன்று தேவையற்ற கேள்விகளைக் கேட்கலாம் என்று நான் பயந்தேன்.

அதனால் நான் அப்துர் ரஹ்மானிடம் எச்சரித்துக் கூறினேன். அவர் உன்னிடம் தொடர்பில்லாத கேள்விகளைக் கேட்டால் அவரிடம், "முஸ்லிமான ஒருவருடைய நற்குணங்களுள் ஒன்று அவருக்குத் தொடர்பில்லாததை விட்டுவிடுவது ஆகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள் என்று சொல்.  நான் அவனிடம் அந்த நபிமொழியை அவன் மனனம் செய்யும் வரை திரும்பத் திரும்பக் கூறினேன்.

அப்துர் ரஹ்மானும் அவனுடைய சகோதரனும் காரில் அந்த இளைஞனுடன் அமர்ந்திருந்தார்கள். அப்துர் ரஹ்மான் அந்நேரத்தில் மிகவும் பதற்றமாகவும் மரியாதையாகவும் இருந்தான். அந்த இளைஞன் அன்போடு, "அல்லாஹ் உங்களுடைய வாழ்க்கையை நீடிக்கச் செய்வானாக, அப்துர் ரஹ்மானே'' என்று கூறினான். அதற்கு அப்துர் ரஹ்மான் "அல்லாஹ் உங்களுடைய வாழ்க்கையையும் நீடிக்கச் செய்வானாக'' என்று பதிலளித்தான். 

அந்த அப்பாவி இளைஞன் சூழ்நிலையை மகிழ்ச்சியாக்குவதற்காக "இன்று, ஷேக் ஏதாவது சொற்பொழிவு நிகழ்த்துகின்றாரா?'' என்று கேட்டான். அப்போது அப்துர் ரஹ்மான் அந்த நபிமொழியை நினைவூட்ட முயற்சித்தான்; ஆனால் அவனுடைய நினைவில் அது தங்கவில்லை. எனவே அவன் சத்தமாக,  "உங்களுக்குத் தொடர்பில்லாத விஷயத்தில் குறுக்கிடாதீர்கள்'' என்று கூறினான்.

 
உடனே அந்த இளைஞன், "நான் அவருடைய சொற்பொழிவில் கலந்துகொண்டு பயனடைய விரும்பினேன்; அதனால்தான் கேட்டேன்'' என்றான். தான் அறிவாளியாகச் செயல்பட முயல்கிறோம் என்று அப்துர் ரஹ்மான் தெரிந்துகொண்டான் என்பதை அறிந்துகொண்ட அந்த இளைஞன், அதே பதிலையே, "நான் என்ன நினைத்தேன் என்றால்...'' என்று மீண்டும் கூறினான். 

ஆனால் மறுபடியும் அப்துர் ரஹ்மான், "இல்லை! உங்களுக்குத் தொடர்பில்லாத விஷயத்தில் குறுக்கிடாதீர்கள்!'' என்று கத்தினான். நான் திரும்பி வருகின்ற வரை அவர்கள் அந்த நிலையிலேயே இருந்தார்கள். அப்துர் ரஹ்மான் என்னிடம் அந்த முழுக் கதையையும் பெருமிதமாகக் கூறினான். அதைக் கேட்டு நான் சிரித்துவிட்டு, மறுபடியும் நான் சொன்னதைப் பற்றி அவனுக்கு விளக்கமாகக் கூறினேன்.    
==================