சனி, 2 அக்டோபர், 2021

“திருக்குர்ஆனை எளிதில் ஓதிட” நூல் வெளிவந்துவிட்டது

 


“திருக்குர்ஆனை எளிதில் ஓதிட”
நூல் வெளிவந்துவிட்டது
=============
திருக்குர்ஆனை எல்லோரும் எளிதில் ஓதக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற முயற்சியில் நான் நீண்ட காலம் ஈடுபட்டு வருகிறேன் என்பது உங்களுள் பலருக்குத் தெரிந்திருக்கலாம்.
முதல் முயற்சியாகக் காணொலிக் குறுவட்டு வெளியிட்டேன். அதன் மூலம் பலர் எளிய முறையில் திருக்குர்ஆனை ஓதக் கற்றுக்கொண்டதாகக் கூறினார்கள். இப்போது அது நூல் வடிவில் வெளிவந்துள்ளது.
அல்ஹம்து லில்லாஹ்.

அதில் நான் எழுதியுள்ள முன்னுரையைப் படித்தால் நூலின் உள்ளடக்கம் என்னவென்று உங்களுக்கு நன்றாக விளங்கும்.
இதோ

முன்னுரை
==========

அன்பான சகோதர, சகோதரிகளே!
மாணவ மாணவிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

திண்ணமாக அறிவுரை பெறுவதற்காகவே நாம் இந்தக் குர்ஆனை எளிமையாக்கியிருக்கிறோம். எனவே அறிவுரை பெறுவோர் யாரேனும் உண்டா? (54: 17) என்று உயர்ந்தோன் அல்லாஹ் கேட்கின்றான்.

படித்தால் எளிதில் புரியும்; ஓதினால் நாவு எளிதாக உச்சரிக்கும்; மனனம் செய்தால் எளிதில் மனத்தில் பதியும். ஆக எல்லா வகைகளிலும் அல்லாஹ் இந்தக் குர்ஆனை எளிமையாக அமைத்துள்ளான்.

அதனால்தான் இவ்வுலகில் வாழும் கோடானு கோடி இதயங்கள் இந்தக் குர்ஆனை மனனம் செய்துள்ளன. இச்சிறப்பு வேறு எந்த வேதத்திற்கும் இல்லை.

அதிகாலை எழுந்து தம் மஹல்லா பள்ளிவாசலில் உள்ள மக்தப் மத்ரஸாவிற்குத் தம் பிள்ளைகளை அனுப்பிவைத்து, திருக்குர்ஆனைக் கற்றுக்கொள்ளச் செய்தார்கள் அன்றைய பெற்றோர்கள். அவர்கள் அதைத் தம் கடமையாகக் கருதினார்கள். இன்றும் கிராமங்களில் அப்பழக்கம் தொடர்கிறது என்ற போதிலும் நகரங்களில் குறைந்துள்ளதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.


இந்தத் திருக்குர்ஆனை ஒவ்வொருவரும் ஓதுமாறும் ஆய்வு செய்யுமாறும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான். இதனை ஓதுவோருக்கு ஓரெழுத்துக்குப் பத்து நன்மை உண்டு என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஊக்கப்படுத்தியுள்ளார்கள்.


ஓத வேண்டும் என்ற உந்துதலால் கண்பார்வையற்றோரும் புதிதாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டோரும் திருக்குர்ஆனை ஓதத் தொடங்கிவிட்டார்கள். ஓதுவது மட்டுமல்ல, மனனம் செய்த ஹாஃபிழ்களாகவும் திகழ்கின்றார்கள். அக்காட்சியைக் காணும்போது கண் இருந்தும் திருக்குர்ஆனைப் பார்த்து ஓதத் தெரியவில்லையே என்று ஏங்குவோர் உண்டு. அவர்களின் ஏக்கத்தைப் போக்கும்வண்ணம் ஒரு நூலை வெளியிட வேண்டுமென எண்ணினேன். அந்த எண்ணத்தின் வெளிப்பாடே, “திருக்குர்ஆனை எளிதில் ஓதிட” எனும் இந்நூல்.

பதினைந்தே பாடங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்நூலை வைத்துக்கொண்டு எளிய முறையில் நீங்களே சுயமாகத் திருக்குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ளலாம். அதேநேரத்தில் கற்றுக்கொள்ள ஓர் ஆசிரியரின் உதவி தேவை என்பதைத் தவிர்க்க முடியாது. அதற்காகவே ஓர் ஆசிரியர் உங்களோடு இருந்து உங்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் விதத்தில் காணொலி வடிவில் பாடங்கள் நடத்தப்பட்டு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதை நீங்கள் உங்கள் கணினியிலோ அலைபேசியிலோ இயக்கி, காட்சியைப் பார்த்துக்கொண்டே இந்நூலைக்
கவனித்தால் அல்லாஹ்வின் உதவியால் நீங்கள் சுயமாகவே திருக்குர்ஆனை எளிய முறையில் ஓதக் கற்றுக்கொள்ளலாம். அதன்பின் சில மாதங்களில் திருக்குர்ஆனை அதன் மூலமொழியான அரபியில் சரளமாக வாசிக்கத் தொடங்கிவிடலாம்.


இவ்வளவு வயதானபின்னர் இனி என்னால் எவ்வாறு கற்றுக்கொள்ள இயலும் என்று மலைப்பாக எண்ணாதீர்கள். “என்னால் முடியும்” என்ற நேர்மறை எண்ணத்தோடு ஓத முன்வாருங்கள். “ஓதியே தீருவேன்” என்று மனத்தில் வைராக்கியம் கொள்ளுங்கள். உங்கள் உயர்வான எண்ணமே உங்களை உயர்த்தும். உயர்ந்தோன் அல்லாஹ் நம் அனைவரின் முயற்சிகளையும் வெற்றிபெறச் செய்வானாக.


Dr.N.Abdul Hadi Baquavi எனும் யூடியூப் சேனலில் “திருக்குர்ஆனை எளிதில் ஓதிட...” எனும் தலைப்பிலான பிளே லிஸ்டில் காணொலி வடிவிலான பாடங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம்.
இந்நூலை வெளியிட இன்முகத்தோடு முன்வந்த சாஜிதா பதிப்பக உரிமையாளர் ஜனாப் ஜகரிய்யா அண்ணன் அவர்களுக்கு இறைவன் தன் அருளையும் பொருளையும் அளவின்றி அள்ளி வழங்குவானாக! ஆமீன்.

அன்புடன்
மௌலவி காரீ Dr. நூ. அப்துல் ஹாதி பாகவி
02 10 2021 24 02 1443
============


நூல் விவரம்:

நூல் பெயர் : திருக்குர்ஆனை எளிதில் ஓதிட...

ஆக்கம் : முனைவர் மௌலவி. நூ. அப்துல் ஹாதி பாகவி

விலை : ரூ. 35/-

மதரஸாவுக்கும் நண்பர்களுக்கும் அன்பளிப்பு செய்ய மொத்தமாக வாங்குபவர்களுக்கு விலையில் சலுகை உண்டு.

பக்கங்கள் : 56 (டபுள் கிரவுன் சைஸ்)

வெளியீடு : சாஜிதா புக் சென்டர்
248, தம்புச் செட்டி தெரு, மண்ணடி, சென்னை - 600 001.

போன் : (044) 2522 4821 / 98409 77758


98409 77758, 72996 94049 - என்ற எண்ணில் கூகுள் பே மூலமாகவும் பணம் செலுத்தலாம்.
=================


கருத்துகள் இல்லை: