புதன், 4 ஜூலை, 2018

ஆவிகள் உலகம்



முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
(துணை ஆசிரியர்-இனிய திசைகள் மாத இதழ், இமாம்-மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார், மணலி, சென்னை)

எதற்கெடுத்தாலும் "ஆதாரம் இருக்கிறதா?'' என்று கேட்பதுதான் இன்றைய தலைமுறையினரின் போக்கு. எல்லாவற்றிற்கும் நேரடியாக ஆதாரம் காட்ட முடியாது. அதேநேரத்தில் திருக்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகள் (ஹதீஸ்) ஆகியவற்றில் நேரடியாக இல்லாவிட்டாலும் அதன் விரிவுரைகள், விளக்கவுரைகள் ஆகியவற்றிலிருந்து பிறந்தவைதாம் இன்றுள்ள கல்விகள் யாவும். அந்த  அடிப்படையில்தான் ஆவிகள் குறித்த செய்திகள் அமையும். ஆவிகள் என்பது ஜின், ஷைத்தான்களையே குறிக்கும். இந்த ஆவிகள் மனிதர்களுக்கு எவ்வாறெல்லாம் தொல்லைகள் கொடுக்கின்றன; அவற்றிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான வழிமுறைகள் என்ன என்பதைத் தெளிவுபடக் கூறுவதே இக்கட்டுரையின்  நோக்கம். நம்புவதும் செயல்படுத்துவதும் அவரவர் விருப்பம்.  

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு ஷைத்தான் தனித்தனியே சாட்டப்பட்டுள்ளான். அந்த ஷைத்தான் அந்த மனிதரைத் தீமை செய்யுமாறு தூண்டிக்கொண்டே இருப்பான். அவனுடைய போக்கிலேயே  செல்பவர்கள்தாம் தம்மைத்தாமே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாதவர்கள்; அவர்கள்தாம் கெட்டவர்கள்-பாவிகள். அவர்களையே அவன் மது குடித்தல், சூதாடுதல், திருடுதல், கொலை செய்தல், விபச்சாரம் செய்தல் ஆகிய பஞ்ச மாபாவங்களைச் செய்ய வைக்கிறான். இவ்வளவையும் செய்ய வைத்து, இறுதியில் அவனை நரகத்தில் கொண்டுபோய்ச்  சேர்த்துவிடுகின்றான்.
அதற்கு முரணாக, ஷைத்தான் தூண்டுகின்ற தீமைகளைச் செய்யாமல் அவனுடைய போக்கில் செல்லாமல் அவனுக்கு எதிராகச் செயல்படுபவர்கள்தாம் நல்லவர்கள். அவர்கள் தம்மைப் படைத்த இறைவனை அஞ்சி வாழ்கின்றார்கள். ஒவ்வொரு தடவையும் அவன் அவர்களைத் தூண்டும்போதெல்லாம் அவனுக்கு எதிராகச் செயல்பட்டு அவனுக்குக் கட்டுப்படாமல் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டே இருக்கின்றார்கள். இறுதியில் அவன் அவர்களிடம் தோற்றுப்போய்விடுகின்றான். அவர்கள் இறைவனை அஞ்சிய நல்லடியார்களாக வாழ்ந்து மறைகின்றார்கள். மறுமையில் சொர்க்கத்தில் நுழைவார்கள்.

 ஆயிஷா (ரளி) அறிவித்துள்ளார்கள்: ஒரு நாள் இரவு நபி (ஸல்) அவர்கள் என்னருகில் காணவில்லை. பிறகு அவர்கள், அருகில் (தொழுது) துஆ செய்து கொண்டிருந்ததைக் கண்டேன். பிறகு நான், அவர்கள் குளித்திருக்கின்றார்களா என்று தெரிந்துகொள்வதற்காக என் விரல்களால் அவர்களுடைய தலைமுடியைத் தடவினேன். (அவர்கள் தம் மனைவிகளுள் யாரேனும் ஒருவரிடம் இரகசியமாகச் சென்று வந்திருப்பார்களோ என்ற சந்தேகத்தோடு அவ்வாறு செய்தேன்.) அப்போது நபியவர்கள் "நிச்சயமாக உன்னுடைய (சந்தேகம் எனும்) ஷைத்தான் உன்னிடம் வந்துவிட்டான்'' என்று சொன்னார்கள்.
அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் ஷைத்தான் இல்லையோ?'' என்று கேட்டேன்.  "ஆம்! (இருக்கிறான்). ஆனால், அல்லாஹ் அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். ஏனென்றால், அவன் எனக்குப் பணிந்து (முஸ்லிமாகி) விட்டான்'' என்று கூறினார்கள். (நூல்: நஸாயீ: 3898)

ஒவ்வோர் ஆளுக்கும் தனித்தனி ஷைத்தான் நியமிக்கப்பட்டுள்ளான் என்பதும் அவரவரின் பண்பிற்கேற்ப அவன் மாறிவிடுகின்றான் என்பதும் மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்குகிறது.

ஒரு மனிதன் இறந்தபின் அவனுடைய உயிர் அடங்கிவிடுகிறது. அவனுள் ஆட்கொண்டிருந்த ஷைத்தான் அவனைவிட்டு விலகிக்கொள்கின்றான். அவன் பிற மனிதர்களிடமுள்ள ஷைத்தானோடு தோழமை கொள்கிறான். அந்த மனிதன் எதையும் ஓதாத, இறைவனைத் தொழாத மனிதனாக இருந்தால் அவனை அவன் ஆட்கொண்டுவிடுகின்றான். கெட்ட மனிதர்களைக் கெட்ட மனிதர்களுக்குள் குடியிருந்த ஷைத்தான்கள் ஆக்கிரமித்துக்கொள்கின்றார்கள். காலப் போக்கில் அவன் மிகக் கெட்டவனாகிவிடுகின்றான். ஷைத்தான்கள் ஒன்றுகூடி அம்மனிதனைக் கெடுக்க முயல்வார்கள். அந்த ஷைத்தான்கள் அவனைத் தம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஆட்டுவிப்பார்கள். உடல் நிலையைப் பாதிப்படையச் செய்வார்கள். அவனுக்குள் இருந்துகொண்டு பேயாடுவார்கள்; கத்துவார்கள்; சேட்டை செய்வார்கள். இவை அனைத்தும் அவனுள் புகுந்துகொண்ட ஷைத்தான்களின் வேலையாகும்.

இதிலிருந்து பாதுகாப்புத் தேடுவதற்கான வழிமுறையை அல்லாஹ் தன்னுடைய தூதருக்குத் திருக்குர்ஆனில் கற்றுக்கொடுக்கின்றான்:
"என் இறைவா! (பாவமான செயல்களைச் செய்யும்படித்    தூண்டும்) ஷைத்தானுடைய தூண்டுதல்களிலிருந்து என்னைக் காப்பாற்றும்படி நான் உன்னிடம் கோருகிறேன். என் இறைவா! ஷைத்தான் என்னிடம் வராமலிருக்கவும் நான் உன்னிடம் கோருகிறேன்'' என்று (நபியே!) நீங்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருங்கள். (23: 97-98) இந்த இறைவசனங்களின் அரபி மூலத்தை ஓதிக்கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்களும் சில முக்கியமான பாதுகாப்பு வசனங்களையும் துஆக்களையும் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். அவற்றுள் ஒன்று:  அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹி, வ இகாபிஹி வ மின் ஷர்ரி இபாதிஹி, வ மின் ஹமஸாத்திஷ் ஷயாத்தீனி வ அன் யஹ்ளுரூன். (நூல்: முஸ்னது அஹ்மத்: 15978)

(பொருள்: அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு அவனுடைய சினத்திலிருந்தும் அவனுடைய தண்டனையிலிருந்தும் அவனுடைய அடியார்களின் தீங்கிலிருந்தும் ஷைத்தான்களின் ஊசலாட்டங்களிலிருந்தும் அந்த ஷைத்தான்கள் என்னிடம் நெருங்குவதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்.)   
  
நல்ல மனிதருக்குள்ளும் ஷைத்தான்  புகுந்துகொண்டு குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு என்பதை உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரளி) அவர்கள் தம்மைக் குறித்து அறிவித்துள்ள கீழ்க்கண்ட நபிமொழி தெரிவிக்கிறது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தாயிஃப் நகருக்கு ஆளுநராக அனுப்பிவைத்தபோது (அங்கு) எனக்குத் தொழுகையில் ஏதோ ஒன்று குறுக்கிடத்தொடங்கியது. நான் தொழுவது (எத்தனை, என்ன) என்பதைக்கூட என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. இதை நான் உணர்ந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பயணித்துச் சென்றேன். "(என்னைக் கண்ட அவர்கள்) நீர் இப்னு அபில்ஆஸ்தானே? '' என்று வினவினார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதரே!  எனக்குத் தொழுகையில் ஏதோ ஒன்று குறுக்கிடுகிறது. நான் தொழுவது (எத்தனை, என்ன) என்பதைக்கூட என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை'' என்று கூறினேன். 

அதற்கவர்கள், "அதுதான் ஷைத்தான். நெருங்கிவாரீர்'' என்று கூறினார்கள். எனவே நான் அவர்களிடம் நெருங்கிச் சென்று என் கால்களின் நுனிப்பகுதி (தரையில் படும் வகை)யில் அமர்ந்தேன்.  அப்போது அவர்கள்  தம் கையால் என் நெஞ்சை அடித்தார்கள். என் வாயினுள் (உமிழ்நீர் கலந்த காற்றை) ஊதினார்கள். "அல்லாஹ்வின் எதிரியே வெளியேறு' என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை செய்தார்கள். பின்னர், "நீர் உம்முடைய நல்லறங்களைச் செய்வீர்'' என்று கூறினார்கள்.
உஸ்மான் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: திண்ணமாக, அதன்பின் என்னை (எதுவும்) குழப்பத்தில் ஆழ்த்தவில்லை என்று நான் எண்ணுகிறேன். (நூல்: இப்னுமாஜா: 3538)

இந்நபிமொழியில் "அல்லாஹ்வின் எதிரியே வெளியேறு'' எனும் நபிகளாரின் வார்த்தை கூர்ந்து கவனிக்கத்தக்கது. ஷைத்தான் உள்ளே புகுந்து கொண்டதால்தான் "வெளியேறு' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதையும் இவ்வாறு ஷைத்தான்கள் மனிதருக்குள் நுழைந்துகொள்ள வாய்ப்புண்டு என்பதையும் இதன்மூலம் நாம் அறியலாம்.

பின்வரும் நபிமொழியும் உள்ளே புகுந்துகொண்ட ஷைத்தானை விரட்டுவதற்குத் தக்க ஆதாரமாக உள்ளது: நபி (ஸல்) அவர்கள், "உக்ருஜ் அதுவ்வல்லாஹ், அன ரசூலுல்லாஹ்'' (அல்லாஹ்வின் விரோதியே வெளியேறு; நான் அல்லாஹ்வின் தூதர்) என்று கூறிவந்தார்கள். (நூல்: முஸ்னது அஹ்மத்: 16890)

ஒருவர் தம் சகோதரர் தன்னிலை மறந்துள்ளதாக நபியவர்களிடம் அழைத்துக்கொண்டு வந்தார். நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனிலிருந்து முக்கியமான வசனங்களை ஓதி ஊதியதும் அவர் நிவாரணம் பெற்றுச் சென்றார் என்ற தகவலும் இப்னுமாஜா (3539) நபிமொழித் தொகுப்பு நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. "மருந்தில் சிறந்தது அல்குர்ஆன் (மூலம் நிவாரணம் தேடுவது) ஆகும்'' (நூல்: இப்னுமாஜா:  3492) என்று  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதோடு விட்டுவிடாமல் அதற்கேற்பச் செயல்பட்டுள்ளார்கள் என்பதை நாம் அறியமுடிகிறது. 

மனிதருக்குள் புகுந்துகொண்ட ஷைத்தானை-கெட்ட ஆவியை விரட்ட நபி (ஸல்) அவர்கள் "உக்ருஜ்-வெளியேறு' என்ற ஒற்றை வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்கள். அதைக் கேட்டதும் அந்த ஷைத்தான் விலகி ஓடிவிட்டான்.  ஆனால் இது மனிதர்க்கு மனிதர் மாறுபடும். சிலர் ஒரு சில பிரார்த்தனைகளை ஓதத் தொடங்கியதுமே அவன் விலகி ஓடிவிடுவான். சிலர் பலவிதமான பிரார்த்தனைகளை ஓதினால்தான் அவனிடமிருந்து அவன்  விலகுவான். இது ஓதிப்பார்ப்பவர் கொண்டுள்ள வலிமையான இறைநம்பிக்கையையும் மாசற்ற மனத்தையும் பொறுத்து அமைகிறது. அதாவது ஒருவரின் வீட்டில் அநியாயமாகப் புகுந்துகொண்டவனை ஒரு காவல்துறை அதிகாரி விரட்டுவதற்கும் சாதாரணமான மனிதன் விரட்டுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? அதுபோலவே நன்கு கற்றறிந்த இறையச்சம் மிகுந்துள்ள ஆலிம் ஓதி ஊதுவதற்கும் மற்றோர் ஓதி ஊதுவதற்கும் வித்தியாசம் உள்ளது. ஆக ஒருவனின் உடலுக்குள் புகுந்துகொண்ட ஷைத்தானை விரட்டுவதற்கான பிரார்த்தனைகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள். அவற்றை மனஉறுதியுடனும் மனஓர்மையுடனும் முழுமையான நம்பிக்கையோடும் ஓதி ஊதினால் நிச்சயமாக அந்த ஷைத்தான் விலகி ஓடிவிடுவான் என்பதில் சந்தேகம் இல்லை. அதை விட்டுவிட்டு எங்கெங்கோ கொண்டு சென்று சங்கிலியால் கட்டிப்போடுவது முறையான சிகிச்சை இல்லை என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஷைத்தான் மனிதனைத் தீண்டவோ பாதிப்பை ஏற்படுத்தவோ முடியுமா என்று கேட்போர் உண்டு. அவர்கள் பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தைக் கூர்ந்து படிக்க வேண்டும். "வட்டி (வாங்கித்) தின்பவர்கள் ஷைத்தான் பிடித்துப் பித்தம் கொண்டவர்கள் எழுவது போலன்றி (வேறு விதமாக மறுமையில்) எழ மாட்டார்கள்...'' (2: 275) 

ஷைத்தான் தீண்டினால் எவ்வாறு பித்துப் பிடித்தவர்கள் போல் இருப்பார்களோ அவர்களைப் போலவே வட்டியைத் தின்போர் எழுவார்கள் என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான். ஒரு மனிதனை ஷைத்தான்  ஆக்கிரமித்துக் கொண்டால் அவன் தன் சுயநினைவை இழந்துவிடுகின்றான். தான் செய்வதும் பேசுவதும் அவனுக்கே தெரிவதில்லை. அத்தகையோரைத்தான் நபியவர்களிடம் கொண்டுவந்து ஓதிப் பார்த்து, நிவாரணம் பெற்றுச் சென்றுள்ளார்கள். அவர்களை நோக்கித்தான் நபி (ஸல்) அவர்கள், "உக்ருஜ் அதுவ்வல்லாஹ், அன ரசூலுல்லாஹ்'' (அல்லாஹ்வின் விரோதியே வெளியேறு; நான் அல்லாஹ்வின் தூதர்) என்று கூறினார்கள். 

இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் ஸாதுல் மஆத் எனும் தமது நூலில் கூறியுள்ளதாவது:  வலிப்பு நோய் (Epilepsy) இரண்டு வகையாகும். 1. இப்பூமியிலுள்ள கெட்ட ஆவிகளால் பாதிக்கப்பட்டு வலிப்பு ஏற்படுதல், 2. உடலின் மோசமான இயல்புகளால் பாதிக்கப்பட்டு வலிப்பு ஏற்படுதல். இந்த இரண்டாவதைப் பற்றித்தான் மருத்துவர்கள் விவாதிக்கின்றார்கள். அதற்கான காரணங்களையும் சிகிச்சையையும் கூறுகின்றார்கள். முதலாவது வகை குறித்து  அவர்கள் அறிவதில்லை.  

யாரேனும் ஒருவரின் உடலுக்குள் புகுந்துவிட்ட கெட்ட ஆவியிடம் பேசுகின்ற ஒருவரை எங்களின் ஆசிரியர் அனுப்பி வைப்பதை நான் நேரடியாகக் கண்டுள்ளேன். அவர் பாதிக்கப்பட்டவரிடம் சென்று, “"கால லகஷ் ஷைக் உக்ருஜீ, ஃபஇன்ன ஹாதா  லா யஹில்லு லகி'' (நீ வெளியேறிச் செல்லுமாறு என் ஆசிரியர் கூறினார்; இது உன்னுடைய தங்குமிடமில்லை) என்று கூறுவார். உடனே பாதிக்கப்பட்டவர் தெளிவடைந்துவிடுவார். சிலவேளை சென்றவர் சுயமாகவே அந்த ஆவியிடம் பேசுவார். சிலவேளை அந்த ஆவி பிடிவாதமிக்கதாக இருக்கும். அப்போது அவர் அதை அடித்து வெளியேற்றுவார். அதன்பின் பாதிக்கப்பட்டவர் தெளிவடைவார்; அவர் அடித்த அடியின் வலியை பாதிக்கப்பட்டவர் உணரமாட்டார்.  இப்படிப் பல தடவை நாங்களும் மற்றவர்களும் அவர் செய்ததைப் பார்த்திருக்கிறோம்.

அவர் பெரும்பாலும், பாதிக்கப்பட்டவரின் காதில் ஓதுவது இதுதான்: (என்னே!) நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடம் கொண்டுவரப்படமாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா?''  (23: 115)

ஓதிப் பார்க்கின்ற அவர் எனக்குத் தெரிவித்தார்: அவர் ஒரு தடவை, பாதிக்கப்பட்டவரின் காதில், மேற்கண்ட இறைவசனத்தை ஓதினார். அப்போது அந்த ஆன்மா-ஆவி, "ஆம்!''’என்று சொன்னது. உடனே நான் கையில் கம்பை எடுத்து அதன்  கழுத்து நரம்பில் அடித்தேன். அதை அடித்து அடித்து என் கைகள் சோர்ந்துவிட்டன. அந்த அடியில் பாதிக்கப்பட்ட மனிதன் இறந்துவிடுவானோ என்று மக்கள் எண்ணினார்கள். அடித்தபோது இடையில் அது, "நான் இவனை நேசிக்கிறேன்''’என்று கூறியது. அப்போது நான், “"இவன் உன்னை விரும்பவில்லை'' என்று கூறினேன். அதற்கு அது, “"நான் இவனோடு ஹஜ் செய்ய நாடுகிறேன்'' என்று கூறியது. அதற்கு நான்,“ "இவன் உன்னோடு ஹஜ் செய்ய நாடவில்லை''’ என்று கூறினேன். அதற்கு அது,“ "உனக்கு மரியாதை கொடுத்து நான் இவனைவிட்டு வெளியேறுகிறேன்'' என்று கூறியது. அதற்கு நான், “"இல்லை, மாறாக, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் பணிந்து வெளியேறு'' என்று கூறினேன். அதற்கு அது,“ "நான் இவனைவிட்டு வெளியேறுகிறேன்'' எனக் கூறிவிட்டுச் சென்றுவிட்டது.
அதன்பின் பாதிக்கப்பட்டவர் எழுந்து உட்கார்ந்துகொண்டு வலப்புறமும் இடப்புறமும் திரும்பித் திரும்பிப் பார்த்தார். "நான் எப்படி என் ஆசிரியர் முன்னிலையில் வந்தேன்? '' என்று கேட்டார். "இதோ, இவர் அடித்த அடியில்தான் வந்தாய்'' என்று சொன்னார்கள். "நான் எந்தப் பாவமும் செய்யாத நிலையில் என்னை என் ஆசிரியர் ஏன் அடித்தார்?'' என்று கேட்டார். ஆக, அவர்மீது விழுந்த அடிகளையெல்லாம் அவர் உணரவே இல்லை.

எங்களின் ஆசிரியர் ‘"ஆயத்துல் குர்சீ'யை ஓதியபடியே சிகிச்சையை மேற்கொள்வார். பாதிக்கப்பட்டவரும் ஷைத்தானை-ஆவியை ஓட்டுபவரும் அதை ஓதிக்கொள்ளுமாறு கட்டளையிடுபவராக இருந்தார். மேலும் அல்ஃபலக், அந்நாஸ் ஆகிய அத்தியாயங்களையும் ஓதிக்கொள்ளுமாறு கூறிவந்தார். (நூல்: ஸாதுல் மஆத்) 

சில கெட்ட ஆவிகளால் தீண்டப்பட்ட வலிப்பு  நோய் தீராநோயாகவும் இருக்கலாம். அதற்கான சிகிச்சை மேற்கொள்ளாமல் பொறுமை காத்து, இறைவனிடம் பிரார்த்தனை செய்வதே சாலச் சிறந்தது என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்கிக் கூறுகிறது.

அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் என்னிடம், “"சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?'' என்று கேட்டார்கள். நான், “"ஆம்; (காட்டுங்கள்)'' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கருப்பு நிறப் பெண்மணிதான் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் வலிப்பு நோயால் (அடிக்கடி) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று வேண்டினார். நபி (ஸல்) அவர்கள், “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (அதற்குப் பதிலாக) உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்தனை செய்கிறேன்'' என்று சொன்னார்கள். இந்தப் பெண்மணி, “"நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்துகொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள் என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 5652)

ஆக, இவ்வளவு ஆதாரங்களையும் முன்வைத்துப் பார்க்கும்போது ஜின், ஷைத்தான்களால் தீண்டப்படுவது உண்மையே என்றும் அதனால் பாதிப்பு ஏற்படுவது உண்மையே என்றும் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பார்ப்போருக்கும் கேட்போருக்கும்  வேடிக்கையாகத்தான் தெரியும். பாதிக்கப்பட்டோருக்குத்தான் அதன் வேதனை புரியும். மேலும் மனித உடலுக்குள் ஜின் நுழைந்துகொண்டு பாதிப்பை ஏற்படுத்தலாம் எனும் கருத்து சுன்னத் வல் ஜமாஅத் அடிப்படைக் கொள்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான் என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
=============================================






புதன், 20 ஜூன், 2018

கேட்டல் கலை


என்ஜாய் யுவர் லைஃப் எனும் ஆங்கில நூலைத் தமிழாக்கம் செய்துகொண்டிருக்கிறேன். (மூலநூலாசிரியர்:  டாக்டர் மௌலானா அப்துர் ரஹ்மான் அரீஃபீ-சவூதி) அதில் கேட்டல் கலை எனும் தலைப்பில் ஒரு பகுதி இதோ உங்கள் பார்வைக்கு...

சிறப்புவாய்ந்த இஸ்லாமியப் பிரச்சாரகர் ஒருவரை நான் நினைவுகூர்கிறேன். அவர் ஆழமான அறிவுடையவர்; இலக்கியப் பேச்சாளர்; சொற்பொழிவுக்காக அடிக்கடி அழைக்கப்படுபவர்; வெள்ளிக்கிழமை உரையாகட்டும்; ஃபிக்ஹ் வகுப்பாகட்டும்; பல்கலைக் கழகத்தில் நிகழ்த்தும் உரையாகட்டும் அவர் தொடர்படியாகப் பேசுவார். அவர் பேசுவதை மக்கள் நேரடியாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் ஆர்வத்துடன் கேட்பார்கள். அவருடைய மனைவியைத் தவிர. ஏனென்றால் அவர் தம் மனைவியிடம் இருக்கும்போதும் வழமைபோல் அவர்தாம் பேசிக்கொண்டே இருப்பாரே தவிர, மனைவி சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கமாட்டார்.

அவரைப் பற்றி அவர்தம் மனைவி அவரிடமே புகார் தெரிவிப்பார். ஆனால் தம் மனைவி எதற்காகத் தம்மைப் பற்றிப் புகார் கூறுகிறார் என்பதை அறியாமலே இருந்துவந்தார். அவருடைய மனைவியைத் தவிர ஒவ்வொருவரும் அவரை மதிக்கிறார்கள்; பாராட்டுகிறார்கள். எனவே அவர் ஒரு நாள் தம்முடைய சொற்பொழிவைக் கேட்கத் தம் மனைவியையும் தம்மோடு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார். அப்போதாவது அவர் தம்மைப் பாராட்டுவார் அல்லவா என எண்ணிக்கொண்டார்.

"நீ என்னோடு வருகிறாயா?'' என்று கேட்டார். "எங்கே?'' என்று அவர் கேட்க, "ஒரு சொற்பொழிவாளர் ஆற்றுகின்ற உரையைக் கேட்பதற்காக உன்னை அழைத்துச் செல்ல விரும்புகிறேன். அதன்மூலம் நாம் மிகுந்த பயனடையலாம். நீ வருகிறாயா?'' என்று கேட்டார்.

அவள் தன் கணவருடன் காரில் ஏறி அமர்ந்தாள். குறிப்பிட்ட இடத்தை அவர்கள் அடைந்தவுடன் காரிலிருந்து இறங்கி, பள்ளிவாசலின் கதவு வரை நடந்து சென்றனர். ஒரு மிகப்பெரும் கூட்டம் அவருடைய சொற்பொழிவைக் கேட்க வருகை தந்திருந்தது. அவர்தம் மனைவி பெருங்கூட்டத்தின் இடையே நடந்து சென்று, பெண்கள் பகுதியில் அமர்ந்துகொண்டாள். சொற்பொழிவு தொடங்கியது. மக்கள் அனைவரும் மிகவும் கவனத்துடன் அவரது உரையைக் கேட்டனர். அவருடைய மனைவியும்கூட வியப்போடு கேட்டாள்.  சொற்பொழிவு முடிந்ததும் அவர் தமது காரில் ஏறி அமர்ந்துகொண்டார். தம்முடைய சொற்பொழிவை எண்ணி மகிழ்ந்துகொண்டார். அவருடைய மனைவியும் வந்து காரில் அமர்ந்தார். அவர்கள் இருவரும் அமர்ந்ததும், வழமைபோல் அவர் அவளுக்குப் பேச வாய்ப்புக் கொடுக்காமல், அங்கிருந்த கூட்டத்தைப் பற்றியும் மஸ்ஜிதின் அழகைப் பற்றியும் பேசத் தொடங்கிவிட்டார்.

பிறகு அவர் தம் மனைவியிடம், "இன்றைய சொற்பொழிவைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?'' என்று கேட்க,  "அது நன்றாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. அது சரி! சொற்பொழிவாளர் யார்?'' என்று கேட்டார். அவர் ஆச்சரியத்துடன், ''என்ன! உனக்கு யாருடைய குரல் என்று தெரியவில்லையா?'' என்று கேட்க,  ''சரிதான்! கூட்டத்தில், ஒலிபெருக்கி சரியில்லாததால், என்னால் சரியாகக் கவனம் செலுத்த முடியவில்லை'' என்றாள்.

அவர் பெருமையோடு, "நான்தான் உரையாற்றினேன்'' என்றார். அதற்கவள், "ஓ! அப்படியா! பேசிக்கொண்டிருந்தபோதே, இவர் எப்போது முடிப்பார் என்றுதான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன்'' என்றாள்.

எனவே மற்றவர் பேசுவதைக் கேட்பதும் ஒரு கலைதான். அது எல்லோருக்கும் வாய்க்காது என்பதை நாம் உணரலாம்...

-தமிழாக்கம்: முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி (ஆலங்குடி) 



ஞாயிறு, 17 ஜூன், 2018

வழக்குகளையும் சிக்கல்களையும் எதிர்கொள்ள...



ஆங்காங்கே முஸ்லிம்களுக்கு ஏற்படும் இன்னல்கள், சிக்கல்கள், பள்ளிவாசல் தொடர்பான பிரச்சனைகள், வழக்குகள் இவற்றையெல்லாம் தீர்ப்பதற்கும் தனிக்கவனம் செலுத்தி எதிர்கொள்வதற்கும் முஸ்லிம்கள்மீது அவ்வப்போது போடப்படுகின்ற பொய்வழக்குகளை எதிர்கொண்டு சந்திப்பதற்கும் முழுநேரம் பணியாற்றும் ஒரு குழு தேவை. 

அக்குழுவினருக்கான பொருளாதாரத் தேவையை முஸ்லிம் சமுதாயம் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் தமிழக முஸ்லிம்களுக்கு எங்கு, என்ன பிரச்சனையானாலும் நேரடியாகச் சென்று அதைப் பேசித் தீர்க்க, அல்லது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, அல்லது அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முயல்வார்கள். பொய் வழக்குகளுள் சிக்குண்ட முஸ்லிம்களை மீட்பதற்குரிய வேலைகளைச் செய்வார்கள். 

பள்ளிவாசல் நிலத்தை ஆக்கிரமித்தல், புதிதாகப் பள்ளிவாசல் கட்டுவதற்கு ஏற்படும் தடை, பொய்வழக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் கவனித்துக்கொள்வார்கள். இக்குழுவில் ஆலிம்கள், வழக்கறிஞர்கள், படித்த இளைஞர்கள் இருப்பார்கள். இத்தகைய ஒரு குழுவினர் முஸ்லிம்களுக்கு அவசிய அவசரத் தேவை என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்?  

ஜமாஅத்துல் உலமா சபை இதற்கான ஏற்பாட்டைச் செய்ய முன்வந்தால் சமுதாயம்  வரவேற்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேநேரத்தில் சமுதாயம் இதற்கான பொருளாதார உதவி செய்வது முற்றிலும் அவசியம்.  

இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து உடனடியாக ஆலோசனை செய்து, செயல்பட முன்வருமா ஜமாஅத்துல் உலமா சபை?

-மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி  

திருமண விருந்தை மாற்றுவோம்!



பொதுவாக முஸ்லிம்கள் நடத்தும் திருமணத்தில் அவர்கள் பிறமதச் சகோதரர்களையும் விருந்துக்கு அழைப்பதுண்டு. திருமணத்திற்கு வருகை தருவோருள் பிரியாணியை விரும்பி உண்போரும் சைவ உணவை மட்டுமே சாப்பிடுவோரும் உண்டு. ஏன், இன்று முஸ்லிம்களே நிறையப் பேர் மருத்துவர்களின் அறிவுறுத்தலால் (அல்லது அச்சுறுத்தலால்) சைவ உணவைச் சாப்பிடத் தொடங்கிவிட்டனர். எனவே விருந்து ஏற்பாடு செய்வோர் அசைவ உணவையும் சைவ உணவையும் தனித்தனியே ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர். விருந்துக்கு அழைப்போருக்கு இது இரட்டைச் சுமைதான் என்றால் மிகையில்லை. ஆனாலும் ஒரு சுகமான சுமையாக அதைச் செய்துவருகின்றனர். 

இந்தச் சிரமத்தை நீக்கும் முகமாக எல்லோருக்கும் சைவ உணவையே ( வெஜிடபிள் பிரியாணி) ஏற்பாடு செய்துவிட்டு, அத்தோடு பக்க உணவாக (சைடு டிஷ்) அசைவப் பொரியல் செய்துவிட்டால் எல்லோரையும் ஒரே மொத்தமாக அமர வைத்துவிடலாம். சைவம் தனி, அசைவம் தனி எனப் பிரிக்கத் தேவை ஏற்படாது. அசைவம் தேவைப்படுவோருக்கு மட்டும் அதை வழங்கலாம். சைவம் சாப்பிடுவோருக்கு அதைத் தவிர்த்துவிடலாம்.

இதனால் வேலைப்பளு குறைவதோடு, சைவ உணவு எவ்வளவு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கணக்குத்  தெரியாமல் வாங்கி அல்லது ஆக்கி, விரயம் செய்வது தவிர்க்கப்படும்.

இனி வரும் காலங்களில் எல்லோருக்கும் ஒரே உணவு என்ற முறையைக் கடைப்பிடிக்கலாமே!

-மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி


புதன், 13 ஜூன், 2018

நபிவழியில் பள்ளிவாசல் நிர்வாகம்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

தமிழ்நாட்டில் ஏறத்தாழ பத்தாயிரம் பள்ளிவாசல்கள் உள்ளன. அவற்றில் ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகை நடைபெற்று வருவதோடு பெரும்பாலான பள்ளிவாசல்களில் சிறுவர்-சிறுமியருக்கான திருக்குர்ஆன் வகுப்பும் நடைபெற்றுவருவதை நாம் அறிவோம். ஆனால் ஒரு பள்ளிவாசலில் நடைபெற வேண்டிய செயல்பாடுகள் இவ்வளவுதானா?
இதைத் தாண்டி எவ்வளவோ சேவைகளைப் பள்ளிவாசல்கள்மூலம் செய்வதற்கு வாய்ப்பிருக்கும்போது அவை எதையும் செய்யாமல் பள்ளிநிர்வாகிகள் காலத்தைக் கடத்துவது இஸ்லாமியச் சமுதாயத்திற்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை அவர்கள் உணர வேண்டும்! அது மட்டுமின்றி அவர்கள் தம் பொறுப்பைச் செவ்வனே செய்யவில்லை என்ற குற்றச்சாட்டிற்கும் ஆளாகின்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழியில் ஒரு பள்ளிவாசலை எவ்வாறு நிர்வாகம் செய்வது, அதன்மூலம் இந்தச் சமுதாயத்திற்கு என்னென்ன பயன்களைக் கொடுக்கலாம் என்பதைத் தெரிந்துகொண்டு அதன்படி செயல்பட்டால் பள்ளிநிர்வாகிகள் ஈருலகப் பயன்களைப் பெறுவதோடு சமுதாய மக்களும் தமக்குத் தேவையான பயன்களை அடைந்துகொள்வார்கள்.

கல்வி, பொருளாதாரம், அரசியல் கட்டமைப்பு, சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்திற்கும் அடிப்படையாகப் பள்ளிவாசலையே ஆக்க வேண்டும். மக்களுக்கு எந்தத் தேவையாக இருந்தாலும் அவர்கள் முதலில் பள்ளிவாசலையே அணுக வேண்டும். அத்தகைய சூழலை ஏற்படுத்திவிட்டால் மக்களின் தொடர்பும் பள்ளியைச் சார்ந்தே இருக்கும். அவர்களின் வருகை எப்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

கல்வி என்பது இருவகைக் கல்வியையும் எடுத்துக்கொள்ளும். இஸ்லாமிய மார்க்கத்தில் பாகுபாடு இல்லை. குர்ஆன் வகுப்பு நடைபெறுவது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான தொடக்கக் கல்வி வழங்குகின்ற பள்ளிக்கூடத்தையும் நிறுவ வேண்டும்.  அதற்கான வாய்ப்பு பெரும்பாலான பள்ளிவாசல்களில் உள்ளன.
நம் பிள்ளைகளுக்குப் பள்ளிவாசலிலேயே தொடக்கக் கல்விக்கான ஏற்பாட்டைச் செய்வதன்மூலம்  அப்பிள்ளைகள் லுஹர், அஸ்ர் தொழுகைகளைத் தொழ வாய்ப்புக் கிடைப்பதோடு மார்க்கம் சார்ந்த கல்வியையும் அரபிமொழியையும் ஒரு பாடமாகப் படிக்கவும் வாய்ப்புண்டு.

பத்ருப் போரில் பிடிபட்ட எதிரிப் படையைச் சார்ந்த எழுபது பேரில் சிலர் பிணைத்தொகை  கொடுத்து விடுதலையாகிச் சென்றனர். "பிணைத்தொகை கொடுக்க இயலாதோர், எங்கள் தோழர்களுக்குக் கல்வியைக் கற்பித்துவிட்டு விடுதலை பெற்றுச் செல்லலாம்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அதன்படி அவர்கள் முஸ்லிம்களுக்குக் கல்வி கற்பித்துவிட்டு விடுதலை பெற்றுச் சென்றார்கள் என்பது வரலாறு.

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத அவர்கள் முஸ்லிம்களுக்கு என்ன கற்றுக் கொடுத்திருப்பார்கள்? ஆகவே உலகக் கல்விக்கும் நபி (ஸல்) அவர்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதை இவ்வரலாற்று நிகழ்விலிருந்து அறிய முடிகிறது.

மாலைநேரச் சிறப்பு வகுப்பு: நம் பிள்ளைகள் டியூஷன் எனும் பெயரில் மாலைநேரச் சிறப்பு வகுப்பிற்குச் சென்றுவிடுவதால் அவர்கள் பள்ளிவாசலில் நடைபெறும் பாலர் வகுப்பிற்கு வர இயலாமல் போய்விடுகிறது. எனவே இப்பிள்ளைகளும் திருக்குர்ஆனைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொரு பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் பொறுப்பும் கடமையும் ஆகும். இதனை மனத்தில்கொண்டு, தமிழகத்தின் சில பள்ளிவாசல்களில் டியூஷனுக்கான ஏற்பாடும் உள்ளது. எனவே அவர்கள் அதற்காக வெளியே செல்ல வேண்டியதில்லை. இது பரவலாக்கப்பட்டால் எல்லாப் பிள்ளைகளும் திருக்குர்ஆனைக் கற்றுக்கொள்ள ஒரு நல்வாய்ப்பை ஏற்படுத்திய நன்மை அந்தந்த நிர்வாகத்தினரைச் சாரும்.

முதலில் அவர்கள் குர்ஆன் வகுப்பில் கலந்துகொண்டு, அதனைக் கற்றுக்கொண்டபின் அங்கேயே அவர்கள் தம் பள்ளிக்கூடப் பாடங்களைப் படிக்கலாம். அதற்கென அந்தந்தத் துறை ஆசிரியர்களை நியமனம் செய்யலாம். பள்ளி நிர்வாகத்தினர் முயற்சி செய்தால் இது ஒன்றும் இயலாத செயல்பாடு அல்ல. பள்ளிப் பாடங்களை நடத்த முஸ்லிம் ஆசிரியர்கள் கிடைக்காத பட்சத்தில் முஸ்லிமல்லாத ஆசிரியர்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.  அல்லது பத்து, பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் மாணவ, மாணவியரைப் பயன்படுத்தி ஐந்து முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவ மாணவிகளுக்குக் கற்பிக்கச் செய்யலாம். ஆக இரண்டும் ஒரே இடத்தில் கிடைத்துவிடுவதால் பெற்றோரும் மிகுந்த ஆர்வத்துடன் தம் பிள்ளைகளைச் சேர்க்க முன்வருவார்கள். வெளியில் டியூஷன் படித்தால் எவ்வளவு கட்டணமோ அதையே பெற்றுக்கொண்டு நிர்வாகத்தினரால் நியமிக்கப்பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கலாம். மேலும் மாணவ, மாணவியர் மாலை முதல் இரவு எட்டு மணி வரை பள்ளிவாசலிலேயே இருக்க நேரிடுவதால் அஸ்ர், மஃக்ரிப், இஷா ஆகிய தொழுகைகளையும் அங்கேயே நிறைவேற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு அமைகிறது. இதனால் பிள்ளைகள் இருவகைக் கல்விகளையும் பெற்றுக்கொள்வதோடு ஒழுக்கமானவர்களாக உருவாகவும் வழியமைத்துக் கொடுக்கப்படுகிறது. 

பைத்துல்மால்: ஒவ்வொரு மஹல்லா பள்ளிவாசலிலும் பைத்துல்மால் எனும் பொது நிதியகம் ஏற்படுத்தி, செல்வந்தர்களிடமிருந்து வசூல் செய்யப்படுகின்ற ஸகாத், மனமுவந்து வழங்குகின்ற தர்மம் ஆகியவற்றை முதலீடாகக் கொண்டு, அந்தந்த மஹல்லாவில் உள்ள ஏழைகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், ஊனமுற்றோர் உள்ளிட்டோருக்கு உதவி செய்யலாம். பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக  மாற்ற முற்படலாம். இலவசத் திருமணங்களை நடத்தி வைப்பதோடு, கல்வி உதவித்தொகையும் வழங்கலாம். மேலும் பல்வேறு சேவைகள் செய்வதற்கு பைத்துல்மால் உதவும்.

ஆனால் இத்திட்டம் பல்வேறு மஹல்லாக்களில் இல்லாதது மிகப்பெரும் குறையே ஆகும். இதனால்தான் ரமளான் மாதம் பிறந்துவிட்டால் நம் சமுதாயத்தைச் சேர்ந்த பலர் பள்ளிகள்தோறும் கையேந்தி நிற்கின்றார்கள். இந்த இழிநிலைக்குக் காரணம் யார்? பொறுப்பிலுள்ளோர் தம் பொறுப்பை முறையாகக் கையாளாததும் திட்டங்களைத் தீட்டாததுமே ஆகும்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு: ஒவ்வொரு பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் செய்ய வேண்டிய மற்றொரு முக்கியப் பணி மக்கள்தொகை கணக்கெடுப்பாகும். ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் தத்தம் மஹல்லாவில் எத்தனை பேர் வசிக்கின்றனர், அவர்களுள் படித்தோர் எத்தனைபேர், படிக்காதோர் எத்தனைபேர், ஜகாத் வழங்குவோர் எத்தனைபேர், ஜகாத் பெறத் தகுதியுடையோர் எத்தனைபேர், உதவி தேவைப்படுவோர் எத்தனைபேர் உள்ளிட்ட பல்வேறு புள்ளிவிவரங்களைத் தொகுத்து  வைத்திருக்க வேண்டும்.

அவர்களுள் ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாள அட்டை (ஐ.டி. கார்டு) கொடுக்க வேண்டும். அதன்மூலம் அவர் அந்த மஹல்லாவைச் சார்ந்தவர் என்று உறுதிசெய்யப்பட வேண்டும். அதன்மூலமே பள்ளிவாசல் சார்ந்த அவரது எல்லா நடவடிக்கைகளும் அமைய வேண்டும். அதாவது திருமணத்திற்கான என்.ஓ.சி., ஜாதிச்சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மரணித்த பின் இறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவை வழங்க ஏதுவாக அமையும். அது மட்டுமின்றி, நம் மஹல்லாவைச் சார்ந்த ஒருவரைக் காவல்துறை சந்தேக வழக்கில் பிடித்துச் சென்றால், அவர் தம் அடையாள அட்டையைக் காட்டி நான் இந்த மஹல்லாவைச் சார்ந்தவர் என்று தெரிவிக்கலாம். அல்லது தகவல் அறிந்து அப்பள்ளியின் நிர்வாகத்தினரே சென்று அவரை மீட்கலாம். இப்படி எத்தனையோ பயன்கள் இதில் உண்டு.

ஹுதைஃபா (ரளி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள், "எத்தனை பேர் இஸ்லாத்தை ஏற்றுள்ளார்கள்? என்பதை எனக்குக் கணக்கிட்டுச் சொல்லுங்கள்!'' என்று கூறினார்கள். நாங்கள் அறுநூறு முதல் எழுநூறு பேர் வரை இருக்க, எங்களைப் பற்றி அஞ்சுகிறீர்களா, அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டோம்... (நூல்: முஸ்லிம்: 235)

நபித்தோழர்கள் மதீனாவின் மக்கள்தொகையைக் கணக்கிட்டு, 600 முதல் 700 பேர் முஸ்லிம்கள் இருப்பதாகக் கூறினார்கள். ஆக, இது நம்முடைய தொன்மையான வரலாற்றில் உள்ள, நாம் மறந்துவிட்ட ஒன்றுதான் என்பதைப் பள்ளி நிர்வாகிகள் புரிந்துகொண்டு செயல்பட முனைய வேண்டும்.

ஷரீஅத் கோர்ட்: ஒவ்வொரு மஹல்லாவிலும் அல்லது நான்கைந்து மஹல்லாவாழ் மக்களுக்கு ஒரு ஷரீஅத் கோர்ட் என்ற ஏற்பாடு செய்யப்பட வேண்டும். நம் சமுதாய மக்களின் குடும்பப் பிரச்சனைகளைக் காவல் நிலையம் வரை கொண்டு செல்லாமல் நமக்குள் சுமூகமாகப் பேசித் தீர்த்துக்கொள்ளும் முயற்சியே இதுவாகும். அந்தந்த மஹல்லாவில் உள்ள நிர்வாகக் குழுவினரும் அப்பள்ளியின் இமாமும் இணைந்து ஷரீஅத் ரீதியான தீர்ப்பை வழங்கினால், அம்முடிவுக்கு அவர் கட்டுப்பட வேண்டும். அத்தகைய சூழ்நிலை அமைந்துவிட்டால் நம் சமுதாய மக்கள் தேவையின்றி காவல்நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அலைந்து திரிய வேண்டியதில்லை. பொருளாதாரமும் வீணாகும் வாய்ப்பில்லை.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பல்வேறு குடும்பப் பிரச்சனைகளுக்குப் பள்ளிவாசலில்தான் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். அம்முடிவுக்கு அவர்கள் கட்டுப்பட்டுத்தான் நடந்தார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்கத் தவறக்கூடாது.

அரசியல் கட்டமைப்பு: மஹல்லா மக்கள் அனைவரும் ஒரு குடையின்கீழ் வந்துவிட்டால் நமக்கான வார்டு கவுன்சிலர் யார் என்பதை நாமே தீர்மானிக்கலாம். அதுபோல் ஓர் எம்.எல்.ஏ.வைத் தேர்ந்தெடுக்க, அத்தொகுதியில் உள்ள பள்ளிவாசல்களின் தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு முடிவெடுத்து, குறிப்பிட்ட நபரை நமக்கான எல்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கலாம். களத்தில் நிற்கின்ற யாருமே சரியில்லையென்றால், நாமே ஒருவரை நியமித்து, அவருக்கே அனைவரையும் வாக்களிக்குமாறு மக்களிடம் எடுத்துக் கூறி, அவரைத் தேர்ந்தெடுக்கலாம். பிறகு அவர்மூலம் நமக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ளலாம். இதன்மூலம் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒரு பாதுகாப்பு நம் சமுதாயத்திற்கு ஏற்படும்.

பெண்கல்வி: ஒவ்வொரு பள்ளிவாசலிலும் பெண்களுக்கான கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க  வேண்டும். தொழுதல், பயான் கேட்டல், குர்ஆன் கற்றுக்கொள்ளல், உள்ளிட்டவற்றிற்கான வாய்ப்பு பெண்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். அதனால் அவர்கள் தம் பிள்ளைகளை நல்ல முறையில் பேணி வளர்ப்பதற்கும் தம் கணவனிடம் ஒழுக்கமாக நடந்துகொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படும். பெண்களுக்கான ஆலிமா மத்ரஸா ஏற்படுத்தப்பட்டு, மூன்றாண்டுகளில் அவர்கள் ஆலிமாவாக வெளியேறினால் எதிர்காலச் சமுதாயப் பிள்ளைகள் சீரான முறையில் வளர்வதற்கும் உருவாவதற்கும் மிகப்பெரும் வாய்ப்பாக அமையும். இஸ்லாமியப் பண்பாடுகளையும் ஒழுக்கங்களையும் ஊட்டி வளர்க்கும் அன்னையர்களாக அவர்கள் மாறிவிடுவார்கள். இதனால் சமுதாயத்திற்கு எத்தனையெத்தனை பயன்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

நபி (ஸல்) அவர்கள் ஆண்களுக்கே எல்லா நேரங்களிலும் உரையாற்றிக்கொண்டிருந்ததைக் கண்ட பெண்கள் சிலர், "அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கும் வாய்ப்புக் கொடுங்கள். எங்களுக்கும் உரையாற்றுங்கள்'' என்று கேட்டுக்கொண்டதன் பயனாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களுக்குத் தனிநேரம் ஒதுக்கி, அவர்களுக்கு உரையாற்றினார்கள் என்பது வரலாறு.

இப்படி எத்தனையெத்தனையோ சேவைகளைச் செய்ய வேண்டிய பொறுப்புதான் "பள்ளிவாசல் தலைவர்' பொறுப்பாகும். இவ்வளவு பெரிய பொறுப்பைச் சுமந்துகொண்டுள்ள இன்றைய பள்ளித் தலைவர்கள் தம் பொறுப்பின் மேன்மையையும் முக்கியத்துவத்தையும் உணராது, வெறும் சுயகௌரவத்திற்காகப் பதவி வகிப்பதைக் கண்டு மனம் வெதும்பாமல் இருக்க முடியவில்லை.  

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: யார் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு தொழுகையையும் கடைப்பிடித்து, ஸகாத்தும் கொடுத்து வருவதுடன், அல்லாஹ்வையன்றி மற்றெவருக்கும் பயப்படாமலும் இருக்கிறார்களோ, அவர்கள்தாம் அல்லாஹ்வுடைய பள்üகளைப் பராமரிக்கத் தகுதி உடையவர்கள். இத்தகையவர்கள்தாம் நேரான வழியில் இருப்பவர்கள். (9: 18)  பள்ளிவாசல் நிர்வாகப் பொறுப்பில் இருப்போர் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் என்னென்ன தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் உயர்ந்தோன் அல்லாஹ் தெளிவாகக் கூறியுள்ள இவ்வசனத்தைப் படித்த பிறகேனும் ஒவ்வொரு பள்ளிவாசல் தலைவரும் தம் பொறுப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து நபியவர்கள் செயல்படுத்திய திட்டங்களையெல்லாம் தத்தம் மஹல்லாக்களில் செயல்படுத்துவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
======================================================








வெள்ளி, 25 மே, 2018

வெயிலை வெறுக்காதீர்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

நாம் வானத்தையும்  பூமியையும் அவற்றுக்கிடையே உள்ளவற்றையும் விளையாட்டாகப் படைக்கவில்லை. (21: 16) இந்த வசனத்தின் அடிப்படையில் அல்லாஹ் எதையும் வீணாகப் படைக்கவில்லை. அதனால் அவன் வெயிலையும் வீணாகப் படைக்கவில்லை. அதில் மனிதர்களுக்குப் பலவிதமான நன்மைகள் உள்ளன என்பதை இன்றைய ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

கோடைக்காலம் வந்துவிட்டாலே நிறையப் பேருக்கு அதன்மீது ஒரு வெறுப்பு வந்துவிடுகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் அலுவலகம் செல்ல வேண்டுமே, வியாபாரம் செய்ய வேண்டுமே, வெளியில் செல்ல வேண்டுமே என்று ஒவ்வொருவரும் அதை நினைத்து வருந்துகின்றனர். வெளியில் செல்ல அஞ்சுகின்றனர். ஆனால் வெயில் உடலுக்கு நல்லது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? சுட்டெரிக்கும் வெயிலில்தான் உயிர்ச்சத்து டி (விட்டமின் டி) உள்ளது. ஒருவர் நீண்ட நேரம் வெயிலில் சென்று வருவதால் அல்லது வெயில் படுமாறு நிற்பதால் அவருடைய தோல் அதிலுள்ள உயிர்ச்சத்தான டி-யை கிரகித்துக்கொள்கிறது. இதனால் தோல் நோய் உள்ளிட்டவை அவருக்கு ஏற்படுவதில்லை.

ஓர் ஊரில் ஒரு முட்டாள் அரசன் இருந்தான். இந்தச் சூரியன் என்ன இவ்வளவு கடுமையாகச் சுட்டெரிக்கிறது? அதைப் பிடித்து வாருங்கள் என்று தம் பணியாள்களிடம் கூற, அவனுடைய பணியாள்கள் காலை முதல் மாலை வரை ஓடினர். அது மாலையில் மறைந்துபோய்விட்டது. மறுநாளும் காலை முதல் மாலை வரை அதனைத் துரத்திக்கொண்டே ஓடினர். அது மாலையில் மறைந்துபோய்விட்டது. இவ்வாறு ஒரு மாதமாக ஓடியும் அவர்களால் அதைப் பிடிக்கமுடியவில்லை. ஆனால் அவர்களுள் சிலருக்கு இருந்துவந்த தோல் நோய் முற்றிலும் குணமாகிவிட்டதைக் கண்டார்கள். ஆம்! சூரிய வெப்பத்தால் தோல் நோய் குணமாகின்றது. உடலின் கழிவுகள் வியர்வை மூலம் வெளியேற்றப்படுவதால் தோல்நோய் குணமடைகின்றது. 

வெயில் காலத்தில் சிறுநீரகத்திற்கு ஓய்வு கிடைக்கிறது. ஆம்! கோடை வெயிலால் உடலின் குளிர்ச்சி குறைந்து தாகம் ஏற்படுகிறது. அதனால் நாம் மிகுதியாகத் தண்ணீர் அருந்துகிறோம். ஆனால் நாம் எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் மிகக் குறைவாகத்தான் சிறுநீர் வெளியேறும். பெரும்பாலான நீர் நம்முடைய நுண்ணிய வியர்வைத் துளைகள்மூலம் வியர்வையாக வெளியேறிவிடும். இதனால் நம்முடைய சிறுநீரகத்திற்கு வேலைப்பளு மிச்சம். ஆகவே அதற்குக் கோடைக்காலத்தில் ஓய்வு கிடைக்கிறது.

காய்கள் பழுக்க வெயில் தேவை. பெரும்பாலான காய்கள் சூரிய வெப்பத்தால்தான் கனிகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, முக்கனிகளான மா, பலா, வாழை ஆகியவை சூரிய வெப்பத்தால் கனிகின்றன. பேரீச்ச மரங்கள் பயிரிடப்பட்டுள்ள அரபு நாடுகளில் சில குறிப்பிட்ட நாள்கள் வெயில் மிகவும் உச்சத்தில் சுட்டெரிக்கும். அதில்தான் பேரீச்சம் பழங்கள் கனியும்.

புவியிலுள்ள நீர் சூரிய வெப்பத்தால் உறிஞ்சப்பட்டு, அது மீண்டும் நமக்கு மழையாகப் பொழிவது இந்த வெயிலால்தான். அது மட்டுமின்றி, புவியில் ஆங்காங்கே ஓடுகின்ற கழிவுநீர்களை வற்றச் செய்து, வீணாகக் கொட்டப்படுகின்ற எண்ணற்ற கழிவுப் பொருள்களை அழிப்பதற்கும் சூரிய வெப்பம் பயன்படுகிறது.

உப்பளத்தில் பாத்தி பாத்தியாகக் கட்டிவைக்கப்பட்டுள்ள நீர் வற்றி உப்பு கிடைக்கிறது. செங்கல்கள் காய்ந்து வீடு கட்ட உதவுகின்றன. பெய்கின்ற மழைநீர் காய்ந்து வற்றவும் நீர் ஆவியாகி மீண்டும் மழையாகப் பெய்யவும் வெயில் பயன்படுகின்றது. மேலும் வெயில் காலத்தில்தான் தாவரங்கள், செடிகொடிகள் நன்கு செழித்து வளர்கின்றன. தாவரங்கள் சூரிய ஒளியின்மூலம் கிடைக்கின்ற ஸ்டார்ச்சை உணவாகக் கிரகித்துக்கொள்கின்றன. சூரிய ஒளியால் பயிர்கள் செழித்து வளர்கின்றன.

சூரிய சக்தியை ஈர்ப்பதன்மூலம் நம் உணவுத் தேவையைக் குறைக்க முடியும். காலை இளவெயில் நேரத்தில் சூரியனைத்  தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பதால் நம் உடலுக்குத் தேவையான ஆற்றலை அது ஈர்த்துக்கொள்கிறது. தொடக்கத்தில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை இப்பயிற்சியை மேற்கொள்ளலாம். பின்னர் படிப்படியாக உயர்த்தி, 40 நிமிடங்கள் வரை பார்க்கத் தொடங்கினால் உணவின் தேவையே ஏற்படாது. இப்படியும் சித்தர்கள் சிலர் வாழ்ந்திருக்கின்றார்கள்.

இப்பொழுது சூரிய வெப்பத்தை வைத்து எண்ணற்ற கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்துள்ளார்கள். சோலார் அடுப்பு, சோலார் வாட்டர் ஹீட்டர், சோலார் லைட், சோலார் வாகனங்கள் உள்ளிட்ட எத்தனையோ கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. தற்காலத்தில் பல கிராமங்களில் சோலார் மின்சாரம் தயாரிக்கப்பட்டு, அதன்மூலம் விளக்குகளை எரியச் செய்கின்றனர். எதிர் காலத்தில் சூரிய ஆற்றலால் இயங்கக்கூடிய வாகனங்கள்தாம் சாலைகளில் ஓடும். அந்த அளவிற்குக் கண்டுபிடிப்புகள் மிகுந்துள்ளன. இவையெல்லாம் நாம் சாதாரணமாக வெறுக்கின்ற வெயிலின் மூலம்தான் சாத்தியமாகியுள்ளன என்று நினைக்கின்றபோது அதன்மீது ஒரு மதிப்பு ஏற்படுகிறதல்லவா! ஆக வெயிலும் ஓர் அருட்கொடையே என்பதை நாம் உணரலாம்.

அதேநேரத்தில் மிகுதியான வெயிலின் கெடுதிகளிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளையும் நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் காணமுடிகின்றது. ஒருவர் தாடி வளர்ப்பது அவரின் முகத்தைக் கம்பீரமான தோற்றத்தில் காட்டுவதோடு மிகுதியான வெயிலின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. நேரடியான சூரிய ஒளியால் முகத்தின் தாடைப் பகுதி பாதிக்கப்படுவதிலிருந்து தாடி பாதுகாக்கிறது. உடலின் எல்லாப் பாகங்களிலும் ஒரேவிதமான தோல் கிடையாது. சில பகுதிகளில் மிருதுவாகவும் சில பகுதிகளில் தடிமனாகவும் உள்ளது. அந்த வகையில் முகத்தில் மிருதுவான தோல்தான் உள்ளது. சூரிய வெப்பம் அதனைத் தாக்கி அதனால் பல்வலி உள்ளிட்ட தொல்லைகள் தாடி இல்லாதோருக்கு ஏற்படலாம். ஆனால் தாடி உள்ளோருக்கு அத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதில்லை. அந்த அடிப்படையில்தான், “மீசையைக் கத்தரியுங்கள்; தாடியை வளருங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 2687)

சூரிய வெப்பம் மிகுதியாக மனித உடலுக்குள் புகுந்துவிடாமல் இருப்பதற்கான வழிகாட்டல் என்ற அடிப்படையில், வெண்மையான ஆடையை அணியுமாறு நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

“நீங்கள் வெண்ணிற ஆடை அணியுங்கள். ஏனெனில் அது தூய்மையானதும் அருமையானதும் ஆகும். உங்களுள் இறந்துவிட்டவருக்கு வெண்ணிறத்திலேயே சவக்கோடி (கஃபன்) அணிவியுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 2734) வெண்மையான ஆடை சூரிய வெப்பத்தை எதிர்த்துப் போராடுகிறது; அதை வெளியே தள்ளிவிடுகிறது. உடலின் உள்ளே சூரிய வெப்பம் ஊடுருவுவதைத் தடுத்துவிடுவதால் உடல் மிகுதியான சூட்டை அடையப்பெறாமல் நடுநிலையோடு இருக்கிறது.

இவ்வாறு பற்பல நன்மைகளைச்  சூரிய  வெப்பம் கொண்டுள்ளதால் அல்லாஹ் எதையும் வீணாகப் படைக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: அவர்கள் நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் ஒருக்களித்துப் படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைவுகூர்வார்கள். வானங்களும் பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். (இறுதியில்) எங்கள் இறைவா! இவற்றை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!,,. என்று கூறுவார்கள். (3: 191)  ஆக ஒவ்வொன்றும் ஓர் அருட்கொடை. அந்த ஓர் அருட்கொடைக்குள் ஓராயிரம் நன்மைகள் உள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்து இன்றும் வியப்படைகின்றார்கள். ஆகவே நாம் வெயிலை வெறுக்காமல் அதை அனுபவிக்கப் பழகுவோம்!