சனி, 17 பிப்ரவரி, 2018

பணிவு ஓர் உயர்வே!


-டாக்டர் அப்துர் ரஹ்மான் அரீஃபீ

சிறப்புவாய்ந்த மக்களோடு நான் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டேன். அவர்களுள் ஒருவர் தம்மைத்தாமே தன்னிறைவாளராகக் கருதிக்கொண்டார். அவர் பேசத் தொடங்கியபோது தம் பேச்சில்நான் ஒரு பணியாளரைக் கடந்துசென்றேன். அவர் என் கையைக் குலுக்கத் தம் கையை நீட்டினார். நான் சற்றுநேரம் தயங்கினேன். ஆனால் பின்னர் நான் அவருடைய கையைக் குலுக்கினேன் என்று கூறினார். பின்னர் மிகவும் பெருமையோடு அவர், நான் யாரிடமும் கை குலுக்குவதில்லை என்று தெரிவித்தார். மாஷா அல்லாஹ்! நான் எல்லாரிடமும் கை குலுக்குவதில்லை என்று அவர் கூறியது கவனிக்கத்தக்கது.  

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பலவீனமான ஓர் அடிமைப்பெண் தம்மை வழியில் சந்தித்து, தன் முதலாளியின் அநியாயத்தையும் தான் செய்ய வேண்டிய வேலைப்பளுவையும் பற்றி முறையிட்டபோது, அப்பெண்ணுடன் சென்று அவளுடைய முதலாளியைப் பார்த்து அவள் சார்பாகப் பேசினார்கள்.

யாரிடம் ஓர் அணுவளவு பெருமை இருக்கிறதோ அவர்  சொர்க்கத்தில் நுழையமாட்டார் என்று அவர்கள் அடிக்கடி சொல்வதுண்டு.

சகோதரரே, இன்னவர் மிகுந்த பெருமைக்காரர். அவர் தம்மைத்தாமே பெரியவராகக் கருதிக்கொள்பவர் என்று மக்கள் சொல்வதை நாம் எத்தனையோ தடவை கேள்விப்பட்டிருக்கிறோம். அம்மக்கள் அவரை வெறுக்கின்றார்கள். அவருடைய  செயல்பாட்டைக் கண்டிக்கின்றார்கள்.

நீங்கள் ஏன் உங்களுடைய அண்டைவீட்டாரின் உதவியை நாடுவதில்லை? என்று நீங்கள் யாரேனும் ஒருவரிடம் கேட்கலாம். அதற்கவர், அவர் மிகவும் பெருமைக்காரர். அவர் எங்களுடன் முகங்கொடுத்துப் பேசக்கூட விரும்புவதில்லை என்று பதிலளிப்பார்.

பெருமைக்காரர்களாக இருந்துகொண்டு, மற்றவர்களிடம் பேசும்போதும் முகத்தைத் தொங்கப்போட்டுக்கொள்பவர்கள் எவ்வளவு மோசமானவர்கள்! தன்னைத்தானே தன்னிறைவு பெற்றவனாகக் கருதிக்கொண்டு எல்லைமீறுபவன் நிராகரிக்கப்பட்டவன் இல்லையா?

பிறரை ஏளனமாகப் பார்ப்பவன் நிலத்தில் மகிழ்ச்சியாக நடக்கிறான். அவன் தொழிலாளர்களையும் பணியாள்களையும் ஏழைகளையும் கீழ்த்தரமாகப் பார்க்கிறான். அவன் அவர்களிடம் பேசவும் அவர்களிடம் கைகுலுக்கவும் அவர்களுடன் உட்காரவும் விரும்பாமல் பெருமைகொள்கிறான்.

நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றிகொண்டு  வெற்றியாளராக நுழைந்தபோது-அங்குதான் அவர்கள் திட்டப்பட்டார்கள். ஏளனம் செய்யப்பட்டார்கள்-எல்லாப் பாதைகளிலும் அமைதியாக நுழையத் தொடங்கினார்கள். நபியவர்களைப் பைத்தியக்காரனே, மாயவித்தைக்காரனே, சூனியக்காரனே, பொய்யனே என்றெல்லாம் எத்தனை தடவை அந்தப் பள்ளத்தாக்குகளில் மக்காவாசிகள் கூறியிருப்பார்கள். மக்காவை வெற்றிகொண்ட நாளில், அதிகாரம்கொண்ட தலைவராக அவர்களைக் கடந்து சென்றார்கள். நபியவர்களை எம்மக்கள் ஏளனம் செய்தார்களோ அவர்களின் கண்முன்னே அல்லாஹ் அம்மக்களைத் தாழ்த்திவிட்டான்.

மக்காவை வெற்றிகொண்டு நபியவர்கள் அதனுள் நுழைந்தபோது அவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள்? அப்துல்லாஹ் பின் அபீபக்ர் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்: சிவப்புத் தலைப்பாகை அணிந்துகொண்டு பயணம் செய்து தீதுவா எனும் இடத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அடைந்தபோது, அவர்களின் ஊர்தி ஒட்டகத்தில் இருந்தவாறே சற்று நேரம் நின்றார்கள். பின்னர் அவர்கள் பணிந்த நிலையில் தம் தலையைத் தாழ்த்தியவாறே, அல்லாஹ் தமக்குக் கொடுத்த வெற்றியைப் பார்த்துக்கொண்டு, தம் தாடி தம்முடைய குதிரையின் சேணத்தைத் தொடுமளவுக்கு இருந்த நிலையில் சென்றார்கள்.

அனஸ் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றிகொண்ட நாளில் தம் பணிவை வெளிப்படுத்தும்வண்ணம் குனிந்ததால் அவர்கள்தம் தாடை வாகனத்தின் முதுகைத் தொட்டுக்கொண்டிருந்தது.

இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்: ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து ஒரு விஷயம் குறித்துப் பேசினார். அவர் நபியவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரின் உடல் நடுங்கியது. அதைக் கண்ட நபியவர்கள், இயல்பாக இருங்கள். காய்ந்த இறைச்சித்துண்டைச் சாப்பிட்ட குறைஷிப் பெண்மணியின் மகன்தான் நான் என்று கூறினார்கள்.

ஓர் அடிமை அமர்வதைப்போல் நான் அமர்கிறேன். ஓர் அடிமை உண்பதைப்போல் நான் உண்கிறேன் என்று நபியவர்கள் சொல்வது வழக்கம். சுருக்கமாக, அல்லாஹ்விற்காக யார் பணிவாக இருக்கின்றாரோ அல்லாஹ் அவரை உயர்த்துகின்றான். யார் பணிவாக இருக்கின்றாரோ அவரின் கண்ணியத்தைத்தான் அல்லாஹ் அதிகரிக்கச் செய்கிறான். 
    
-தமிழில்: துணையாசிரியர், இனிய திசைகள்

==============================================================



வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

படித்ததும் பரப்பாதீர்!

ஆய்வுக் கட்டுரை
படித்ததும் பரப்பாதீர்!
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பி.எச்டி.

அரபு மொழியில் இருந்த மிகுதியான மார்க்க நூல்கள் இன்று தமிழில் வெளிவந்துள்ளன. படிக்கத் தெரிந்தவர்கள், படிப்பில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் அவற்றைப் படித்துத் தமது மார்க்க அறிவை வளர்த்துக்கொள்ள முனைகின்றார்கள். இது முற்றிலும் வரவேற்கத்தக்கது. ஒவ்வொருவரும் தாம் அன்றாடம் செயலாற்றத் தேவையான அடிப்படை மார்க்க அறிவை அறிந்து வைத்துக்கொள்வது கடமையாகும். இதைத்தான், "கல்வியைத் தேடுவது ஒவ்வோர் ஆண், பெண்மீதும் கடமை'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அந்த அடிப்படையில் இன்றைய இளைஞர்கள் உள்படப் பலர் அரபியிலிருந்து தமிழுக்கு வந்துள்ள மார்க்க நூல்களான திருக்குர்ஆன் தமிழாக்கம், திருக்குர்ஆன் விரிவுரை, நபிமொழித் தொகுப்பு நூல்கள், மார்க்கச் சட்ட நூல்கள் உள்ளிட்டவற்றை ஆர்வத்தோடு படித்துவருகின்றார்கள்.  அதேநேரத்தில் பொதுமக்கள் அவற்றைப் படித்துத் தெரிந்துகொள்வதுதான் அவர்கள்மீது கடமையே தவிர அதைப் பரப்ப வேண்டிய பொறுப்போ கடமையோ அவர்களுக்கு இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவற்றைப் பரப்ப வேண்டிய பொறுப்பும் கடமையும் மார்க்க அறிஞர்களைச் சார்ந்தது.

ஒரு நபிமொழியைப் படித்தவுடன், எந்தவித ஆய்வுமின்றிப் பரப்பும் போக்குதான் இன்றைக்குப் பெரும்பாலோரிடம் காணப்படுகிறது. இதுவே முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுகின்ற பல்வேறு பிரச்சனைகளுக்கும் சிக்கல்களுக்கும் முழுமுதற்காரணமாகும். பரப்புவோர், தாம் அறிந்த செய்தியைப் பிறரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் செய்கின்றனர். ஆனால் அதனுள் அடங்கியுள்ள எதிர்வினை புரிவதில்லை. அதுவே சிக்கலுக்கான ஆணிவேர்.

நபிமொழிகளைப் பொறுத்த வரை முந்தைய செய்தியா, பிந்தைய செய்தியா, காலாவதியானதா இல்லையா என்ற ஆய்வுக்கு உட்படுத்திய பிறகுதான் முடிவு செய்ய வேண்டும். திருக்குர்ஆனின் சில வசனங்கள் இஸ்லாத்தின் தொடக்கக் காலத்தில் அருளப்பட்டவை. பிற்காலத்தில் அச்சட்டங்கள் மாற்றப்பட்டுவிட்டன. இருந்தும் அப்பழைய வசனங்களும் இன்றுவரை ஓதப்பட்டே வருகின்றன.  இதை மார்க்க அறிஞர்கள்தாம் அறிவார்கள். அதற்கான சான்றைப் பார்க்கலாம்.

ஒருவர் திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்பைப் படிக்கத் தொடங்குகின்றபோது, அதை முழுமையாகப் படிக்காமல் செய்தியைப் பரப்பினால் அது தவறாகவே முடியும் என்பதற்கான ஒற்றைச் சான்றைப் பாருங்கள். திருக்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயமான "அல்பகரா'விலுள்ள 219ஆம் வசனத்தைப் படிக்கின்றபோது, "(நபியே!) மதுவைப் பற்றியும் சூதாட்டத்தைப் பற்றியும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். அவ்விரண்டிலும் பெரும் பாதிப்பும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. ஆயினும் அவற்றிலுள்ள பயனைவிடப் பாதிப்பே மிகப் பெரிது என்று கூறுவீராக'' எனும் வசனத்தைக் காணலாம். நான்காம் அத்தியாயமான "அந்நிஸா'விலுள்ள 43ஆம் வசனத்தைப் படிக்கின்றபோது, "இறைநம்பிக்கைகொண்டோரே! நீங்கள் போதையர்களாக இருக்கின்றபோது தொழுகையை நெருங்காதீர்கள்'' எனும் இறைக்கட்டளையைக் காணலாம். இன்னும் கொஞ்சம் புரட்டி, ஐந்தாம் அத்தியாயமான "அல்மாயிதா'விலுள்ள 90ஆம் வசனத்தைப் படித்தால், "இறைநம்பிக்கை கொண்டோரே! மது, சூது, நட்டு வைக்கப்பட்ட (சிலை போன்ற)வை, (குறி பார்க்கும்) அம்பு ஆகியவை ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களாகும். எனவே அவற்றைக் கைவிடுங்கள்'' எனும் இறுதி இறைக்கட்டளை இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.

முதல் வசனத்திலுள்ள "மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன' எனும் வார்த்தைகளை வைத்துக்கொண்டு, மதுவில் சில பயன்களும் உள்ளன. எனவே அதைக் குடிக்கலாம் என்று முடிவெடுத்து அதைப் பரப்பினால், இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் அல்லவா? எனவேதான் ஒரு செய்தியைப் படித்தவுடனேயே பரப்புவது முறையல்ல எனக் கூறுகிறோம்.
அதுபோலவே இஸ்லாத்தின் தொடக்கக் காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் கூறப்பட்ட சட்டங்கள் சில பிற்காலத்தில் மாற்றப்பட்டுவிட்டன. இருப்பினும் அவையும் நபிமொழித் தொகுப்பு நூல்களில் பதிவு செய்யப்பட்டே இருக்கின்றன. எனவே ஒரு நபிமொழியை மேலோட்டமாகப் படித்தவுடன் உடனடியாக எந்தச் சிந்தனையுமின்றி, ஆய்வுமின்றி, கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்), முகநூல் (ஃபேஸ்புக்), சிட்டுரை (ட்விட்டர்) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்புவது மக்களைக் குழப்பும் செயலாகும். எனவே பரப்பும் பணியை ஒத்திப்போடுவதே சமூக நலப்பணியாகும் என்பதை  நன்மையை விரும்பும் இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

அடிக்குறிப்பு எழுதப்பட்டுள்ள நபிமொழித் தொகுப்பு நூல்கள் சில இருக்கின்றன. அதே நேரத்தில் நபிமொழித் தொகுப்பு நூல்கள் அடிக்குறிப்புகளின்றியும் வெளிவருகின்றன. அவற்றை மட்டும் படிக்க நேரிடுகின்ற இளைஞர்கள், தாம் படித்த செய்தியை உடனடியாகத் தம் நண்பர்களுக்குப் பரப்பிவிடுகின்றனர். இது முறையற்ற போக்காகும். ஏனென்றால் நபிமொழிகளில் காலாவதியான சட்டங்களும் உள்ளன என்பதை அவர்கள் அறிவதில்லை.

அவ்வாறான நபிமொழிகள் மூவகைகளாகக் காணப்படுகின்றன. 1. நபியவர்களே அது குறித்துத் தெளிவாகச் சொல்லியிருப்பார்கள். 2. நபித்தோழர்கள் தெளிவுபடுத்தியிருப்பார்கள். 3. வரலாற்று நிகழ்வுகள்மூலம் அறிந்துகொள்ளலாம். இம்மூன்றுக்கும் உரிய சான்றுகளைத் தெரிந்துகொண்டால் பிறவற்றை இவற்றோடு ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளலாம்.
1. "அடக்கத்தலங்களைச் சந்திக்க வேண்டாமென்று உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் அவற்றைச் சந்தியுங்கள்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக புரைதா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்: 1778) ஆக, தொடக்கக் காலத்தில் பொது அடக்கத்தலத்தைச் சந்திக்கத் தடை இருந்தது. பின்னர் அந்தத் தடை நீக்கப்பட்டுவிட்டது என்பதை  நபி (ஸல்) அவர்களே நேரடியாகக் கூறுகின்றார்கள். இதனால் இதில் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை.

2. "(நாங்கள் "ஹுனைன்' அல்லது "அவ்தாஸ்' போரில் இருந்தபோது) எங்களிடம் அல்லாஹ்வின் தூதருடைய அறிவிப்பாளர் ஒருவர் வந்து, "முத்ஆ' (தவணை முறைத்) திருமணம் செய்து கொள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கு (தற்காலிகமாக) அனுமதியளித்துள்ளார்கள் என்று அறிவிப்புச் செய்தார்'' என ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரளி), சலமா பின் அல்அக்வஉ (ரளி) ஆகியோர் அறிவிக்கின்றார்கள். (நூல்: முஸ்லிம்: 2722) ஒரு பெண்ணை மூன்று நாள்களுக்காகவோ ஒரு வாரத்திற்காகவோ மட்டும் திருமணம் செய்துகொண்டு பின்னர் தலாக் விட்டுவிடுதலே முத்ஆ (தவணை முறைத்) திருமணம் ஆகும். இது தொடக்கக் காலத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது தடைசெய்யப்பட்டுவிட்டது. 
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் "முத்ஆ' (தவணை முறைத்) திருமணம் செய்யலாகாதெனத் தடை விதித்தார்கள்'' என சப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.  (நூல்: முஸ்லிம்: 2734) ஆக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இத்திருமண முறையைத் தடைசெய்துவிட்டார்கள் என்ற தகவலை அவர்கள்தம் தோழர்களே தெரிவிக்கிறார்கள். அதன்மூலம் நாம் பிற்காலச் சட்டத்தை எளிதாக விளங்கிக்கொள்ளலாம். பிற்காலச் சட்டத்தை அறியாத ஷீஆ  பிரிவினர் தற்போதும் முத்ஆ திருமணம் செல்லும் என்று கூறிவருகின்றனர். இது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது. 

3. மூன்றாம் வகை படித்தவுடன் புரியாது. சொல்லப்பட்ட காலத்தை ஆய்வு செய்தோ, வேறு நபிமொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தோதான் விளங்கிக்கொள்ள முடியும். எனவே அவைபோன்ற நபிமொழிகளை ஆய்வின்றியோ அறிஞர்களின் விளக்கத்தைப் பெறாமலோ பரப்புதல் கூடாது.

நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்திருந்தோம். அப்போது கிராமத்தைச் சார்ந்தவரைப் போன்ற ஒருவர் வந்து, "அல்லாஹ்வின் நபியே! ஒருவர் அங்கத்தூய்மை செய்த பிறகு தம்முடைய ஆண்குறியைத் தொடுவதால் (அவர் மீண்டும் அங்கத்தூய்மை செய்ய வேண்டுமா) என்ன?'' என்று வினவினார். அதற்கு நபியவர்கள், "அது அவருடைய ஒரு சதைத்துண்டுதான்'' என்று பதிலளித்தார்கள் எனும் செய்தியை தல்க் பின் அலீ (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: அபூதாவூத்: 182) ஒருவர் உளூ செய்துவிட்டுத் தம் ஆண்குறியைத் தொடுவதால் உளூ முறியாது என்பதை இதன்மூலம் அறிகிறோம். ஆனால் இச்சட்டம் பிற்காலத்தில் மாற்றப்பட்டுவிட்டது.

"உங்களுள் ஒருவர் தம் கையால் நேரடியாக - இடையில் துணியோ, தடையோ இன்றி- தம் ஆண்குறியைத் தொட்டால் அவர் அங்கத்தூய்மை செய்துகொள்ளட்டும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: இப்னு ஹிப்பான்: 1118) இந்த நபிமொழியின் அடிப்படையில், ஒருவர் உளூசெய்தபின் நேரடியாகத் தம் ஆண்குறியைத் தொட்டால் அவர் மீண்டும் உளூ செய்ய வேண்டும் எனத் தெரிந்துகொள்கிறோம். ஆனால் இவ்விரண்டு நபிமொழிகளுள் எது முந்தைய சட்டம், எது பிந்தைய சட்டம் என்று எவ்வாறு  தெரிந்துகொள்ள முடியும்? அங்குதான் மார்க்க அறிஞர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் இரண்டு நபிமொழிகளின் அறிவிப்பாளர்தொடரையும் ஆய்வு செய்து கண்டறிகின்றார்கள்.

அதன்படி தல்க் பின் அலீ (ரளி) அறிவித்துள்ள செய்தி பழையதாகும். ஏனெனில் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தது இஸ்லாத்தின் தொடக்கக் காலமான ஹிஜ்ரீ 1ஆம் ஆண்டாகும். மஸ்ஜித் நபவீயை முஸ்லிம்கள் கட்டிக்கொண்டிருந்த நேரமது. அதேநேரத்தில் அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்துள்ள நபிமொழி பிந்தைய காலத்தைச் சார்ந்தது. ஏனெனில் அவர் ஹிஜ்ரீ 7ஆம் ஆண்டுதான் இஸ்லாத்தை ஏற்றார். எனவே தல்க் பின் அலீ (ரளி) அவர்களின் செய்தி அபூஹுரைரா (ரளி) அவர்களின் செய்தியைவிட ஏழாண்டுகள் பழையது என்பதை அறியமுடிகிறது. ஆகவே அபூஹுரைரா (ரளி) அவர்களின் செய்தியே புதிய சட்டமாக அங்கீகரிக்கப்படுகிறது.     

 ஆக, இதுபோன்று நூற்றுக்கணக்கான நபிமொழிகளின் சட்டங்கள் பிற்கால நபிமொழிகளால் மாற்றம் கண்டுள்ளன. எனவே நபிமொழித் தொகுப்பு நூல்களைப் படிப்போர் மிகுந்த கவனத்தோடு அணுக வேண்டும். மேலும் சில சான்றுகளைப் படித்தால் இன்னும் தெளிவாக விளங்கும்.

 1. குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்பவர், அதைச் செய்பவர் (ஆகிய இருவரும்) நோன்பை முறித்துவிட்டனர் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்: இப்னுமாஜா: 1669) இதை அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

2. இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டுள்ளார்கள்; நோன்பு நோற்று இருக்கும்போதும் குருதிஉறிஞ்சி எடுத்துக்கொண்டுள்ளார்கள். (நூல்: புகாரீ: 1938)

மேற்கண்ட இரண்டு நபிமொழிகளையும் ஆய்வுக் கண்ணோட்டத்தோடு அணுகும்போது எது முந்தையது, எது பிந்தையது என்பது விளங்கும். முதல் நபிமொழி முந்தையது. இரண்டாவது நபிமொழி பிந்தையது. எனவே இரண்டாவது நபிமொழி முதலாவது நபிமொழியின் சட்டத்தைக் காலாவதியாக்கிவிட்டது என்று கூறலாம். அது எப்படி? நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியது ஹிஜ்ரீ பத்தாம் ஆண்டாகும். எனவே இதுவே பிந்தைய சட்டம் என்பதை எளிதாக அறிய முடிகிறது. 

குருதி உறிஞ்சி எடுத்தல்: எனும் இந்தச் சிகிச்சை முறைக்கு "கப்பிங்' என்பது ஆங்கிலப் பெயர்.  முற்காலத்தில் குருதி உறிஞ்சி எடுப்பவர் கொம்பு போன்ற ஒரு பொருளை வைத்துத் தமது வாயால் குருதியை உறிஞ்சித் துப்புவார். ஆனால் தற்காலத்தில் குருதி உறிஞ்சி எடுப்பவர் தம் வாயால் அதை உறிஞ்சி எடுப்பதில்லை. உறிஞ்சு குடுவையைத்தான் மருத்துவர் பயன்படுத்துகின்றார். எனவே குருதி உறிஞ்சி எடுக்கும் செயலைச் செய்பவருக்கு நோன்பு முறியாது என்பது தெளிவாகிறது. குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்பவருக்கு அவரது பலவீனத்தைக் கருதித்தான் நோன்பு முறியும் என்று சொல்லப்பட்டதே தவிர, அச்செயலால் நோன்பு முறியாது என்பதை நபி (ஸல்) அவர்களின் செயல்பாட்டிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.
மண்ணறை தரிசனம்: மண்ணறைகளைத் தரிசனம் செய்கின்ற பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: திர்மிதீ: 294)

இந்த நபிமொழியை மட்டும் படித்துவிட்டு, பெண்கள் மண்ணறைகளைத் தரிசனம் (ஸியாரத்) செய்யச் செல்லக் கூடாது என்று சிலர் மேம்போக்காகக் கூறிவருகின்றார்கள். இது தொடக்கக் காலத்தில் இருந்த தடையாகும். பிற்காலத்தில் அத்தடை மாற்றப்பட்டுவிட்டது என்பதை, முஸ்லிம் நபிமொழித் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள 1774ஆம் எண் நபிமொழியைப் படித்தால் தெளிவு கிடைக்கும். அதில், அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "நான் மண்ணறையை ஸியாரத் செய்யச் சென்றால், அங்கே என்ன ஓத வேண்டும்'' என்று கேட்டபோது, "அஸ்ஸலாமு அலைக்கும் யா அஹ்லத் தியார்...'' எனத் தொடங்கும் துஆவை ஓதுமாறு கற்றுக்கொடுத்துள்ளார்கள். இதிலிருந்து, பெண்கள் பொது அடக்கத்தலத்தை ஸியாரத் செய்யச் செல்வதற்கு எந்தத் தடையுமில்லை என்பதை விளங்கிக்கொள்ளலாம். இதுவே இன்றைய நடைமுறைச் சட்டமாகும்.  

இறந்தோருக்காக எழுந்து நிற்றல்: பிரேதத்தைக் கண்டால் அது "உங்களைக் கடந்து செல்லும்வரை' அல்லது "(கீழே) வைக்கப் படும்வரை' அதற்காக எழுந்து நில்லுங்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்: முஸ்லிம்: 1744) இது தொடக்கக் காலச் சட்டமாகும். இதுபோலவே தொடக்கக் காலத்தில் ஒரு யூதனின் பிரேதம் கொண்டு செல்லப்பட்டபோதும் நபியவர்கள் எழுந்து நின்றார்கள். அப்போது அது ஒரு யூதனின் சடலம் என்று அவர்களிடம் சொல்லப்பட்ட நேரத்தில், அதுவும் ஓர் உயிர்தானே? என்று மறுமொழி கூறினார்கள். இதுவெல்லாம் தொடக்கக் காலத்தில் இருந்த நடைமுறை.

அலீ பின் அபீதாலிப் (ரளி) அவர்கள் பிரேதங்களுக்காக எழுந்து நிற்பது தொடர்பாக "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆரம்பக் காலத்தில்) எழுந்து நின்றார்கள்; பின்னர் உட்கார்ந்துவிட்டார்கள்'' என்று கூறிய செய்தி  முஸ்லிம் எனும் நபிமொழித் தொகுப்பு நூலில் 1754ஆம் நபிமொழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிற்காலத்தில், நபியவர்கள் பிறசமயப் பிரேதத்திற்காக எழுந்து நிற்கவில்லை என்பதை இது தெரிவிக்கிறது.  அதேநேரத்தில் ஒரு முஸ்லிம் ஜனாஸா சென்றால் அதற்காக எழுந்து நிற்பது மட்டுமல்ல, அந்த ஜனாஸாவின் தொழுகையில் பற்கேற்பதும் அந்த ஜனாஸாவை அடக்கம் செய்யும் இடம் வரை செல்வதும் கடமையாகும் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதுவே ஒரு முஸ்லிம் பின்பற்ற வேண்டிய நபிவழியாகும்.    

யூதர்களுக்கு ஸலாம் கூறுதல்: உஸாமா பின் ஸைத் (ரளி) அவர்கள் கூறியதாவது:  நபி (ஸல்) அவர்கள் ஓர் அவையைக் கடந்து சென்றார்கள். அந்த அவையில் முஸ்லிம்களும் சிலை வணங்கிகளான இணைவைப்போரும் யூதர்களும் கலந்து இருந்தார்கள்...  நபி (ஸல்) அவர்கள் அந்த அவையோருக்கு ஸலாம் சொன்னார்கள். (நூல்கள்: புகாரீ: 6254, முஸ்லிம்: 3679) இந்த நபிமொழியைப் படித்துவிட்டுச் சிலர், சமய நல்லிணக்கத்தின் அடிப்படையில் மற்ற சமயத்தாருக்கும் ஸலாம் கூறலாம் என்று மேதாவித்தனமாகக் கூறிவருகின்றார்கள். இந்த நபிமொழியின் தொடக்கத்திலேயே இது பத்ருப் போருக்கு முன்னர் நடந்தது என்ற குறிப்பு உள்ளது. புகாரீ, முஸ்லிம் ஆகிய இரண்டு நூல்களிலும் இச்செய்தி தெளிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மதீனா சென்ற தொடக்கக் காலத்தில் நபி (ஸல்) அவர்கள் யூதர்களின் மனங்களைக் கவரும்விதமாக நடந்துகொண்டார்கள். அந்த அடிப்படையில்தான் யூதர்கள் புனிதமாகக் கருதும் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுதுவந்தார்கள். பின்னர்தான் தொழும் திசை (கிப்லா) இறையில்லத்தை (கஅபத்துல்லாஹ்) நோக்கி மாற்றப்பட்டது.   

நபியவர்கள் தெளிவாகக் கூறியுள்ள செய்தியை புகாரீ நபிமொழித் தொகுப்பு நூலில் 6258ஆம் எண்ணில் காணலாம். வேதக்காரர்கள் உங்களுக்கு சலாம் சொன்னால் "வ அலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) என்று (பதில்) கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்றொரு நபிமொழி: யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் நீங்கள் (முந்திக்கொண்டு) முதலில் முகமன் கூறாதீர்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்: 4376)

ஆக இவ்வாறு நூற்றுக்கணக்கான நபிமொழிகள் ஆதாரப்பூர்வமானவையாகப் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும் அவை காலாவதியான நிலையில் உள்ளன. அவற்றுள் எது முற்காலத்தில் சொல்லப்பட்டது, எது பிற்காலத்தில் சொல்லப்பட்டது என ஆய்ந்தறிந்து அதன்படி செயல்படுவதே அறிவுடைமையாகும். இத்துறை குறித்த ஆழமான பார்வை பொது மக்களுக்கு இல்லாவிட்டால் மார்க்கச் சட்ட அறிஞர்களிடமும் நபிமொழியியல் துறையில் அனுபவம் உள்ளோரிடமும் கேட்டுத் தெரிந்துகொண்டு அதன்படி செயல்படுவதே அவர்களின் கடமையாகும். தெளிவாகவும் தீர்க்கமாகவும் தெரியாத ஒரு செய்தியைப் பிறருக்குப் பரப்புவது பொய்யைப் பரப்புவதற்குச் சமமாகும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

 =================================









ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

இஸ்லாத்தைப் பற்றி 1000 கேள்விகள்



''இஸ்லாத்தைப் பற்றி 1000 கேள்விகள்'' எனும் தலைப்பில் டாக்டர் முஹம்மது இப்ராஹீம் எல்மஸ்ரி என்பார் தொகுத்துள்ள நூலை புதுக்கோட்டையைச் சேர்ந்த நூ. முகம்மது கனி தமிழாக்கம் செய்துள்ளார். எட்டுத் தலைப்புகளின்கீழ் தொகுக்கப்பட்டுள்ள இந்நூலைத் தமிழாக்கம் செய்த அவர், பிழைதிருத்தம் செய்து தருமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். நான் இந்நூலைப் பிழைதிருத்தம் செய்துகொடுத்துள்ளேன்.

இந்நூல் சிறுவர்களுக்கானது என்றாலும் பெரியவர்களும் படித்துத் தெரிந்துகொள்ளலாம். எனவே மறக்காமல் இதை உங்கள் பிள்ளைகளுக்கும் நண்பர்களின் பிள்ளைகளுக்கும் உறவினரின் பிள்ளைகளுக்கும் வாங்கிக்கொடுங்கள். எளிய முறையில் சின்னச் சின்ன வினா-விடையாக அமைந்துள்ள இந்நூல் சிறுவர்களுக்கு மிகவும் பயனுள்ளது. திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள நஸீர் புக் டிப்போ இந்நூலை வெளியிட்டுள்ளது.

தொடர்புக்கு: நஸீர் புக் டிப்போ, 323 காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5
போன்: 044 2859 3421, 98843 89280 



சனி, 10 பிப்ரவரி, 2018

முஹம்மது வசீம் அவர்களுடன் ஒரு நேர்காணல்



மனை வணிகம் செய்யும்
முஹம்மது வசீம் அவர்களுடன் ஒரு நேர்காணல்

இவர் பெயர் முஹம்மது வசீம். இவர் பர்மாவில் 1973ஆம் ஆண்டு பிறந்தவர். 1978ஆம் ஆண்டு தம் பெற்றோருடன் சென்னைக்கு வந்து இங்கே வளர்ந்து, பர்மா பஜாரில் சின்னச் சின்ன வேலைகள் செய்து, செல்போன் கடை வைத்து நடத்தி, தற்போது சென்னை, முத்தமிழ் நகரில் மனை வணிகத் தொழில் செய்து வருகிறார். இப்போது இவர் இத்தொழிலில் நன்கு வெற்றிபெற்றுள்ளார். அவர் ஜொர்னலிஸ்ட் வாய்ஸ் மாத இதழுக்கு மனமுவந்து அளித்த பேட்டி. அவரது பேட்டி வாசகர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்று நம்புகிறோம்.

நாம்: நீங்கள் இந்தத் தொழிலுக்கு எப்படி வந்தீர்கள்?

அவர்: எதையாவது செய்து நல்ல நிலையை அடைய  வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் 2008ஆம் ஆண்டு பர்மா பஜாரில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஒருவர் என்னிடம், “எனக்கொரு வீடு பார்த்துக் கொடுங்களேன்” என்று கேட்டார். அதற்கு நான், “எனக்கு அது பற்றியெல்லாம் தெரியாது” என்று சொன்னேன். அதன் பிறகு அவருடைய மேலாளர் என்னிடம், “இந்தத் தொழில் செய்பவரிடம் சென்று சொல்லுங்கள். அவர் பார்த்துக் கொடுப்பார். அப்படியே நீங்களும் அதற்கான கமிஷன் தொகையை வாங்கிக்கொள்ளலாம்” என்று சொன்னார். அவருடைய யோசனை எனக்கு நல்லதாகப் பட்டது. எனவே என்னால் இயன்ற முயற்சி செய்தேன். இறைவனின் நாட்டப்படி ஐந்து மாதத்தில் ஒரு வியாபாரத்தை முடித்தேன். அப்போதிருந்துதான் நான் இந்தத் தொழிலைச் செய்து வருகிறேன்.

நாம்: நீங்கள் மனை வணிகம் செய்யும் நிலப் பகுதி வீடு கட்டிக் குடியேறும் பகுதியா? அல்லது நீண்ட காலம் கழித்துதான் அப்பகுதியெல்லாம் முன்னேற்றமடையுமா? 

அவர்: சில ஆண்டுகளில் வீடு கட்டிக் குடியேறும் பகுதிதான். செங்குன்றம் பகுதியில் நான் விற்பனை செய்த நிலப் பகுதியில் பலர் வீடு கட்டிக் குடியேறிவிட்டார்கள். சோழவரத்தில் விற்பனை செய்த நிலப்பகுதியிலும் பாதிப்பேர் வீடு கட்டிக் குடியேறிவிட்டார்கள். அதுதான் எனக்கு இந்தத் தொழிலில் கிடைத்த மிகப்பெரிய திருப்தி.

நாம்: எத்தனை ஆண்டுகளாக இந்தத் தொழிலைச் செய்கிறீர்கள்?

அவர்: பத்தாண்டுகளாகச் செய்து வருகிறேன். அப்போது செங்குன்றம் பகுதியில் ஒரு சதுரடி முந்நூறு ரூபாய்க்கு விற்றேன். இப்போது அங்கு ஒரு சதுரடி ஐந்நூறு, அறுநூறுக்கு மேல் விலை போகிறது.

நாம்: இதுவரை உங்களிடம் நிலம் வாங்கிய யாராவது ‘நிலத்தில் பிரச்சனை’ என்று உங்களிடம் வந்துள்ளாரா?

அவர்: அப்படி யாரும் இதுவரை வந்ததில்லை. எந்தப் பிரச்சனையும் இல்லாத நிலப்பகுதியைத்தான் விற்பனை செய்து வருகிறேன். ஒருவருக்கு விற்பனை செய்த நிலத்தை வேறு யாருக்கும் விற்பனை செய்து மோசடி  செய்யும் பழக்கம் என்னிடம் இல்லை. இறைவனுக்குப் பயந்துதான் இந்தத் தொழிலைச் செய்து வருகிறேன்.

நாம்: விவசாய நிலத்தை விற்பனை செய்யக் கூடாது என்று தடை இருந்ததே! இப்போது அது நீக்கப்பட்டுவிட்டதா?

அவர்: அந்த வழக்கு நீதிமன்றத்தில்தான் உள்ளது. அதன் இறுதித் தீர்ப்பு விரைவில் வரும். கிட்டத்தட்ட அது முடிந்த மாதிரிதான்.

நாம்: அந்தத் தீர்ப்புக்குப்பின் மனைகளின் விலை குறைய வாய்ப்புண்டு என்று சொல்லப்படுகிறதே! அது பற்றி உங்களின் கருத்தென்ன?

அவர்: மனைகளின் விலை குறையும் என்று சொல்வது தண்ணீரில் எழுதுவதற்கு ஒப்பாகும். காலம் செல்லச் செல்ல விலைவாசி உயருமே தவிர குறைய வாய்ப்பில்லை. இது வீட்டு மனைகளுக்கு மட்டுமில்லை. எல்லாப் பொருள்களுக்கும் பொருந்தும். இது என்னுடைய பத்தாண்டு அனுபவம் ஆகும்.

நாம்: ஒருவர் வாங்கி வைத்துள்ள நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்த முடியுமா?

அவர்: தேசிய நெடுஞ்சாலை, மேம்பாலம், இரயில்வே தண்டவாளம் போன்றவை அமைப்பதற்காக அரசாங்கம் ஒருவரின் நிலத்தைக் கேட்டால் நில உரிமையாளர் தமது நிலத்தை அரசாங்கத்திற்குக் கொடுக்க வேண்டியதுதான். உதாரணமாக, கோயம்பேட்டில் மேம்பாலம் கட்டுவதற்காக நடிகர் விஜயகாந்தின் கல்யாண மண்டபம் அமைந்துள்ள இடத்தை அவர் அரசாங்கத்திடம் ஒப்படைக்க நேரிட்டது. ஆனால் அரசாங்கம் அதற்கான நிலமதிப்பு எவ்வளவோ அதைக் கொடுத்துவிடும். இதுதான் பொதுச் சட்டம். 
 
நாம்: தங்கத்தில் முதலீடு செய்வது நல்லதா? நிலத்தில் முதலீடு செய்வது நல்லதா? 

அவர்: தங்கத்தில் முதலீடு செய்வதற்கும் நிலத்தில் முதலீடு செய்வதற்கும் இடையே சிறிய வித்தியாசம் உள்ளது. தங்கத்தை விற்றால் உடனடியாகப் பணம் கிடைத்துவிடும். எனவே விற்பது எளிது. நிலத்தை விற்பது அவ்வளவு எளிதல்ல. பட்டா, சிட்டா, சட்ட ஆலோசனை எல்லாம் பெற்றபின்னர்தான் ஒரு நிலத்தை விற்க முடியும். அதனால் என்ன நன்மையென்றால் நிலம் நீண்டகாலம் ஒரு சொத்தாக நம்மிடம் நிலைத்திருக்கும். அது மட்டுமில்லை, காலப்போக்கில் அந்நில மதிப்பு நாம் போட்ட முதலீட்டைவிடப் பன்மடங்கு பெருகிவிடும்.

நாம்: ரியல் எஸ்டேட் என்றாலே பெரும்பாலும் மக்கள் பயப்படுகின்றார்கள். பணத்தைக் கொடுத்து நிலத்தை வாங்க அஞ்சுகிறார்களே! ஏமாந்துபோகாமல் இருக்க ஏதேனும் வழியுண்டா?

அவர்: பொதுவாகச் சமுதாயத்தில் நிலவும் எல்லாச் செயல்களிலும் பெரும்பான்மை, சிறுபான்மை என்று உள்ளது. நன்மை செய்பவர்கள் அதிகம். தீமை செய்பவர்கள் குறைவுதான். திருடாமல் இருப்போர் அதிகம். திருடர்கள் குறைவுதான். இப்படித்தான் இந்த ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள். அதேநேரத்தில் நேர்மையாக வியாபாரம் செய்வோர் நிறையப் பேர் இருக்கின்றார்கள். அவர்களைக் கண்டறிந்து நிலத்தை வாங்க வேண்டும். மற்றொரு விஷயம், நிலத்தை வாங்குவதற்குமுன், முன்பணம் கொடுத்த பிறகு, அவர்களிடம் அந்நிலத்திற்கான ஆவணங்களை வாங்கி, ஒரு வழக்கறிஞரிடம் காண்பித்து, “சார், நான் இந்த நிலத்தை வாங்கப்போறேன். இதன் ஆவணங்களெல்லாம் சரியா இருக்கா என்று பார்த்துச் சொல்லுங்க” என்று கேட்டுக்கொண்டால், அவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இ.சி. (வில்லங்கச் சான்றிதழ்) போட்டுப் பார்ப்பார். தாய்ப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள பெயரில் அந்நிலம் இருந்தால், அது சரியானது என்று அர்த்தம். சரியாக இருந்தால், வாங்குங்கள் என்று சொல்லப்போகிறார். சரியாக இல்லையென்றால் வாங்க வேண்டாம் என்று சொல்வார். இதன்மூலம் நாம் ஏமாறுவதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

நாம்: வழக்கறிஞர் துணையின்றி, இ.சி. (வில்லங்கச் சான்றிதழுக்கு) நாமே சுயமாக விண்ணப்பம் செய்யலாமா?

அவர்: தாராளமாகச் செய்யலாம். ஆனால் அந்த ஆவணங்கள் அனைத்தையும் பொறுமையாகப் படித்துப் பார்த்துச் சரிபார்ப்பது சிரமம். அதன் நுணுக்கங்கள் தெரிந்தவர்கள் வழக்கறிஞர்கள்தாம். எனவே அந்தந்தத் தொழிலுக்கு உரியவர்கள் அதையதைப் பார்த்தால்தான் சரியாக இருக்கும்; நமக்கும் திருப்தியாக இருக்கும். அது மட்டுமில்லை. “இந்நிலத்தின் ஆவணங்கள் அனைத்தும் சரியாகத்தான் உள்ளன” என்று குறிப்பிட்டு, ‘லீகல் ஒப்பீனியன்’ எனும் பெயரில் அவருடைய ‘லெட்டர் பேடில்’ அவரிடமே நாம் ஒரு கடிதமும் வாங்கிக்கொள்ளலாம். ‘பிற்காலத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு நான் பொறுப்பு’ என்று அதற்கு அர்த்தம். அப்படி ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அவரை நாம் அணுகலாம். மேலும் நாம் அந்நிலத்தை யாருக்கேனும் விற்பதாக இருந்தாலும் அந்த ‘லீகல் ஒப்பீனியன்’ கடிதம் ஒருபடி மதிப்பையும் நம்பிக்கையையும் அதிகரித்துக்காட்டும்.   

நாம்: தற்போது நீங்கள் எங்கே நில விற்பனை வரைவுத் திட்டம் போட்டிருக்கிறீர்கள்?

அவர்: திருநின்றவூர் குடியிருப்புப் பகுதியின் அருகிலுள்ள நிலப்பகுதியில் போட்டுள்ளோம். அதனைத் தொடர்ந்து அத்திப்பட்டு அருகில் போடவுள்ளோம். மனை தேவைப்படுவோர் என்னை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம்: 86819 21999. மிக்க நன்றி.


-நேர்காணல்: நூ. அப்துல் ஹாதி பாகவி, துணை ஆசிரியர்
 (நான்கு  மாதங்களுக்கு முன்னர் எடுத்த பேட்டி)
========================== 



வியாழன், 8 பிப்ரவரி, 2018

சோம்பலை விரட்டுவோம்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

ஒவ்வொரு மனிதனின் தோல்விக்கும் முதற்காரணம் சோம்பல்தான். அதேநேரத்தில் அதற்கு எதிர்க்குணமான சுறுசுறுப்பே ஒரு மனிதனின் வெற்றிக்குத் தலையாய காரணமாகும். மனித வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இன்பமாகவும் அமைய அவனது சுறுசுறுப்பே துணைபுரிகிறது.

ஒருவன் நாள் முழுக்கச் சுறுசுறுப்போடு இருக்க வேண்டுமெனில் அவன் இறைக்கடமைகளைச் செவ்வனே நிறைவேற்ற வேண்டும். நேரத்தை முறையாக மேலாண்மை செய்பவனாக இருக்க வேண்டும். அவனே வெற்றியாளன். அதிகாலை துயிலெழுவதும் அதன்பின் படைத்த இறைவனைப் போற்றிப் புகழ்வதும் அவனைத் தொழுவதும் அவனிடமே பிரார்த்தனையின் மூலம் கோரிக்கைகளை முன்வைப்பதும் வெற்றியின் முதற்படியாகும்.

அல்லும் பகலும் பாடுபட்டு உழைப்பவன் அதிகாலை துயிலெழுந்து படைத்த இறைவனை வணங்கவில்லையானால் அவர் எவ்வளவுதான் உழைத்தாலும் முன்னேற்றம் காண முடியாது. ஒருக்கால் முன்னேற்றம் கண்டாலும் அது நீடித்து நிலைக்காது. அவன் சோம்பேறியாகவே தன் வாழ்நாளைக் கழிப்பான். அதற்கான காரணம் நபிமொழியில் உள்ளது.

“நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சிலும், “இன்னும் உனக்கு நீண்ட இரவு  (ஓய்வெடுப்பதற்காக எஞ்சி) இருக்கின்றது. ஆகவே, நீ தூங்கிக் கொண்டேயிரு” என்று போதித்து (அவனை விழிக்க விடாமல் உறங்க வைத்து) விடுகின்றான். அவர் (அவனது போதனையைக் கேட்காமல் அதிகாலையில்) கண் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகின்றது. அவர் உளூ செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்து விடுகின்றது. அவர் (தஹஜ்ஜுத் அல்லது ஃபஜ்ர்) தொழுதுவிட்டால் முடிச்சுகள் முழுவதுமாக அவிழ்ந்து விடுகின்றது. அவர் சுறுசுறுப்புடனும் உற்சாகமான மனநிலையுடனும் காலைப் பொழுதை அடைவார். இல்லையென்றால் மந்தமான மனநிலையுடனும் சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 3269) இதை அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அதிகாலை எழுந்து தொழுதவன் சுறுசுறுப்போடும் மனநிம்மதியோடும் இருக்கிறான்; தொழாதவன்  சோம்பேறியாகவும் மனநிம்மதியிழந்தவனாகவும் இருக்கிறான் என்பதை மேற்கண்ட நபிமொழி மூலம் அறிகிறோம். ஆக, சோம்பலை விரட்ட ஐவேளைத் தொழுகை அவசியம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

சோம்பேறிகள் உழைப்பதில்லை. உழைக்காமல் ஊரைச் சுற்றிவிட்டு, தண்டமாக உணவுண்டு கொண்டிருப்பார்கள். குடும்பத்தார் திட்டுவதையும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டார்கள். சிலர் வேலைக்குச் சென்றாலும் குறிப்பிட்ட வேலையை நிரந்தரமாகச் செய்ய மாட்டார்கள். ஒரு வாரம் வேலைக்குச் செல்வதும் மறுவாரம் ஊரைச் சுற்றுவதும் பிறகு வேறு ஏதாவது வேலை தேடுவதும் அவர்களின் வாடிக்கை. இன்னொரு வகையினர் தம் சோம்பேறித்தனத்தால் உழைக்கச் செல்லாமல் பிச்சையெடுப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். கையை நீட்டினால் காசு வந்துவிழும்; வாய்விட்டுக் கேட்டால் உணவு கிடைத்துவிடும். இத்தகையோர் இப்படியே பழகிவிடுவதால் நல்ல வேலை கிடைத்தாலும் போக மாட்டார்கள். இறுதி வரை பிச்சையெடுப்பதையே தம் தொழிலாக ஆக்கிக்கொண்டுவிடுவார்கள்.

ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு முஸ்லிம் பிச்சையெடுப்பதை விரும்பவில்லை.  ஒரு முஸ்லிம் தன்மானத்தோடும் சுய மரியாதையோடும் வாழ வேண்டும் என்றே விரும்பினார்கள்.  எனவேதான், “தாழ்ந்த கையைவிட உயர்ந்த கையே மேலானது” என்று கூறி, சுயமரியாதையோடு வாழ வழிகாட்டினார்கள்.

ஒரு தடவை ஓர் இளைஞர் பிச்சையெடுப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து,  அவரது வீட்டிலிருந்ததை எடுத்து வரச் சொல்லி, அதை ஏலமிட்டு இரண்டு வெள்ளிக்காசுகளைப் பெற்று, ஒன்றைக் குடும்பச் செலவுக்காக அவரிடம் கொடுத்துவிட்டு, மற்றொன்றில் கோடரி வாங்கிவரச் செய்து, அதற்குத் தம் கையால் கைப்பிடி போட்டுக்கொடுத்து விறகு வெட்டி விற்று உழைத்துச் சம்பாதிக்கக் கட்டளையிட்டார்கள். பின்னர் அவர் விறகு வெட்டி உழைத்துண்ணத் தொடங்கிவிட்டார். இதுவே சோம்பல் நீக்கிய சுயமரியாதையான வாழ்க்கையாகும்.

இன்று சோம்பேறிகள் மிகுந்துவிட்டனர். மனிதர்களின் இரக்கக் குணத்தைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டு பலர் பிச்சையெடுக்கப் புறப்பட்டுவிட்டனர். சிலர் மனிதர்களை ஏமாற்றிப் பிழைக்கத் தொடங்கிவிட்டனர். இதுவும் சோம்பேறித்தனத்தின் ஒரு கிளைதான். ஏனென்றால் நேர்மையாகச் சம்பாதித்துப் பொருளீட்டச் சோம்பல்பட்டுத்தான் மனிதர்களை ஏமாற்றுகின்றார்கள்.  சிலர் திருடுகின்றார்கள்; சிலர் பொய் சொல்லிச் சம்பாதிக்கின்றார்கள். இப்படிச் சோம்பலின் கிளைகள் விரிந்துகொண்டே செல்கின்றன.

மக்காவைத் துறந்து மதீனா சென்றிருந்த நேரத்தில், ஓடியோடி உதவி செய்ய வந்த தோழர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ளாமல், சோம்பேறித்தனத்தை உதறித் தள்ளிவிட்டு, உழைப்பு ஒன்றையே நம்பி, கடைத்தெரு சென்று, வியாபாரம் செய்து செல்வச்  செழிப்பில் வாழ்ந்து, இறுதியில் ஏராளமான  செல்வங்களைத் தம் மனைவியருக்கும் பிள்ளைகளுக்கும் விட்டுச் சென்ற அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரளி) அவர்களை நினைவுகூர வேண்டும். பிறர் கொடுக்க வந்த உதவிப்பொருள்களை வாங்கி உண்டு, தம் வாழ்க்கைக் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்திருந்தால், அவர் மிகப்பெரும் வணிகராக உயர்ந்திருக்க முடியுமா?

பனூஇஸ்ரவேலர்கள் தம் சோம்பேறித்தனத்தால் நாற்பதாண்டுகள் பாலைவனத்தில் சுற்றிச்சுற்றி அலைந்ததைத் திருக்குர்ஆன் கூறுகிறது:   “மூஸாவே! அவர்கள் அதில் இருக்கும் வரை ஒருக்காலும் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். (வேண்டுமானால்) நீரும் உம்முடைய இறைவனும் (அங்கு) சென்று (அவர்களுடன்) போர் புரியுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து (கவனித்துக்) கொண்டிருப்போம்'' என்று கூறினார்கள். (5: 24) அதன்பின் மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து, தம் சமூகத்தார் தமக்குக் கட்டுப்பட மறுப்பதைத் தெரிவித்தார்கள். அதற்கு இறைவன் அளித்த பதில்:  “(அவ்வாறாயின் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட) அந்த இடம் நாற்பது வருடங்கள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது. (அதுவரை) அவர்கள் பூமியில் (நாடோடிகளாகச்) சுற்றித் திரிவார்கள்.” (5: 26)

இஸ்ரவேலர்கள் மூஸா நபியுடன் செங்கடலைக் கடந்து எகிப்திலிருந்து வெளியேறினர். அப்போது  பைத்துல் முகத்தஸ் புனித பூமியை அமலேக்கியர் (அமாலிக்கா) வமிசத்து அடக்குமுறையாளர்கள் ஆக்கிரமித்து, தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதைக் கண்டனர். ஆகவேதான் அங்கு சென்று எதிரிகளான அந்த அடக்குமுறையாளர்களுடன் போரிடுமாறு இறைத்தூதர் மூஸா (அலை) அவர்கள் தம் சமுதாய மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். அந்தக் கட்டளையை ஏற்க மறுத்ததால்தான் அதற்குரிய தண்டனையாக இஸ்ரவேலர்களை அத்தீவிலேயே நாற்பதாண்டுகள் நாடோடிகளாகச் சுற்றித் திரிய வைத்தான். இதுவே சோம்பேறிகளுக்கான முடிவாகும்.

அல்லாஹ்வின் கட்டளையை மீறினால் ஆற்றல் குறையும்; சோம்பேறித்தனம் மிகும். இது குறித்துத் திருக்குர்ஆன் கூறுவதை நாம் நோக்கலாம்.
பின்னர், தாலூத் படைகளைத் திரட்டிக் கொண்டு புறப்பட்டபொழுது அவர் (தம் இராணுவத்தை நோக்கி) “நிச்சயமாக (நீங்கள் செல்லும் வழியில்) அல்லாஹ் ஓர் ஆற்றின்மூலம் உங்களைச் சோதிப்பான். (உங்களுள்) யார் அதிலிருந்து தம் ஒரு கையளவு நீரைவிட அதிகமாகக் குடிக்கவில்லையோ அவர்தாம் என்னைச் சார்ந்தவர். யார் அதிலிருந்து (அதற்கதிகமாகக்) குடிக்கின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' எனக் கூறினார். ஆனால், அவர்களுள் சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாகக்) குடித்துவிட்டார்கள். பின்னர்,  அவர் (தம்முடன் இருந்த) நம்பிக்கையாளர்களுடன் அதனைக் கடந்து சென்ற பொழுது, (அதிகமாகக் குடித்த அவர்கள்) ஜாலூத்துடனும் அவனுடைய இராணுவத்துடனும் இன்று (போர் புரிய) எங்களுக்குச் சக்தியில்லை என்று கூறி (விலகி) விட்டார்கள்... (2: 249)

இறைத்தூதர் ஷம்ஊன் (அலை) அவர்களின் கட்டளைப்படி அரசராக நியமிக்கப்பட்ட தாலூத் என்பார் தம் படையினருடன் புறப்பட்டுச் சென்றபோது, ஜோர்டானுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே ஓடும் ‘ஷரீஆ’ எனும் பிரபலமான ஆற்றைக் கடக்க வேண்டி ஏற்பட்டது. அந்த ஆற்றின்மூலம் அல்லாஹ் அப்படையினரைச் சோதிக்க முற்பட்டான். அதில் ஒரு கையளவுக்கு மேல் அருந்தக் கூடாது என்பதே அச்சோதனை. அச்சோதனையில் சிலரைத் தவிர மற்றோர் மிகுதியாக அருந்தி, இறைக்கட்டளைக்கு மாறு செய்துவிட்டதால் அவர்களின் ஆற்றல் குறைந்து, கோழைகளாகவும் சோம்பேறிகளாகவும் ஆகிவிட்டனர். ஆக இறைக்கட்டளைக்கு மாறு செய்வதால் சோம்பேறித்தனம் உண்டாகிறது என்பதை இந்நிகழ்வின்மூலம் நாம் அறிந்துகொள்ளலாம்.

சோம்பேறித்தனத்தை விரட்ட வேண்டுமெனில் எப்போதும் சுறுசுறுப்போடு செயல்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு வேலை முடிந்ததும் அடுத்த  வேலையை முன்னரே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அதற்கு நேர மேலாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். முன்முடிவுகளும் திட்டமிடலுமே அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகரும் வழியை ஏற்படுத்தும். இதுவே சோம்பேறித்தனத்தை விரட்டி, சுறுசுறுப்போடு இயங்குவதற்கான இரகசியம் ஆகும். செயல்களைத் திட்டமிடாமல் செய்துகொண்டிருந்தால் நாம் நம் பொன்னான நேரத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இறைக்கட்டளையை நிறைவேற்ற, படிக்க, ஓத, மனனம் செய்ய, நடக்க, எடுக்க என எதிலும் சோம்பேறித்தனம் இருக்கக் கூடாது. எதிலும் பிறரின் உதவியை நாடாமல் நாமே தன்னெழுச்சியுடன் மனமுவந்து செய்ய முற்பட்டுவிட்டால் சுறுசுறுப்பு தானாகவே வந்து நம்மை ஒட்டிக்கொள்ளும். அதன்பின் சுயமாக  இயங்குவது பழக்கமாகிவிடும்.
“பிறரிடம் உதவி தேடாதீர்கள்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதைச் செவியுற்ற தோழர்கள், தம் ஒட்டகத்தில் அமர்ந்த பின்னர் சாட்டை கீழே விழுந்து விட்டாலும் பிறரிடம் அதை எடுத்துத் தருமாறு கூறாமல் தாமே கீழே இறங்கி அதை எடுத்துக்கொள்ளும் வழக்கமுடையோராக மாறிவிட்டனர். இதுதான் அவர்களை எத்துறையிலும் வெற்றிவாகை சூடச் செய்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சோம்பேறித்தனத்திலிருந்தும் கோழைத்தனத்திலிருந்தும் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள். எனவே அந்தப் பிரார்த்தனையை நாமும் இறைவனிடம் கேட்டு, சோம்பேறித்தனத்தை நம்மைவிட்டுத் துரத்தி சுறுசுறுப்போடும் துடிப்போடும் இறைக்கட்டளைகளை நிறைவேற்றி வருவோம்.

“இறைவா! துக்கம், கவலை, ஆற்றாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன்சுமை, மனிதர்களின் அடக்குமுறை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.'' (புகாரீ: 5425)
 =======================================