சனி, 10 பிப்ரவரி, 2018

முஹம்மது வசீம் அவர்களுடன் ஒரு நேர்காணல்



மனை வணிகம் செய்யும்
முஹம்மது வசீம் அவர்களுடன் ஒரு நேர்காணல்

இவர் பெயர் முஹம்மது வசீம். இவர் பர்மாவில் 1973ஆம் ஆண்டு பிறந்தவர். 1978ஆம் ஆண்டு தம் பெற்றோருடன் சென்னைக்கு வந்து இங்கே வளர்ந்து, பர்மா பஜாரில் சின்னச் சின்ன வேலைகள் செய்து, செல்போன் கடை வைத்து நடத்தி, தற்போது சென்னை, முத்தமிழ் நகரில் மனை வணிகத் தொழில் செய்து வருகிறார். இப்போது இவர் இத்தொழிலில் நன்கு வெற்றிபெற்றுள்ளார். அவர் ஜொர்னலிஸ்ட் வாய்ஸ் மாத இதழுக்கு மனமுவந்து அளித்த பேட்டி. அவரது பேட்டி வாசகர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்று நம்புகிறோம்.

நாம்: நீங்கள் இந்தத் தொழிலுக்கு எப்படி வந்தீர்கள்?

அவர்: எதையாவது செய்து நல்ல நிலையை அடைய  வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் 2008ஆம் ஆண்டு பர்மா பஜாரில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஒருவர் என்னிடம், “எனக்கொரு வீடு பார்த்துக் கொடுங்களேன்” என்று கேட்டார். அதற்கு நான், “எனக்கு அது பற்றியெல்லாம் தெரியாது” என்று சொன்னேன். அதன் பிறகு அவருடைய மேலாளர் என்னிடம், “இந்தத் தொழில் செய்பவரிடம் சென்று சொல்லுங்கள். அவர் பார்த்துக் கொடுப்பார். அப்படியே நீங்களும் அதற்கான கமிஷன் தொகையை வாங்கிக்கொள்ளலாம்” என்று சொன்னார். அவருடைய யோசனை எனக்கு நல்லதாகப் பட்டது. எனவே என்னால் இயன்ற முயற்சி செய்தேன். இறைவனின் நாட்டப்படி ஐந்து மாதத்தில் ஒரு வியாபாரத்தை முடித்தேன். அப்போதிருந்துதான் நான் இந்தத் தொழிலைச் செய்து வருகிறேன்.

நாம்: நீங்கள் மனை வணிகம் செய்யும் நிலப் பகுதி வீடு கட்டிக் குடியேறும் பகுதியா? அல்லது நீண்ட காலம் கழித்துதான் அப்பகுதியெல்லாம் முன்னேற்றமடையுமா? 

அவர்: சில ஆண்டுகளில் வீடு கட்டிக் குடியேறும் பகுதிதான். செங்குன்றம் பகுதியில் நான் விற்பனை செய்த நிலப் பகுதியில் பலர் வீடு கட்டிக் குடியேறிவிட்டார்கள். சோழவரத்தில் விற்பனை செய்த நிலப்பகுதியிலும் பாதிப்பேர் வீடு கட்டிக் குடியேறிவிட்டார்கள். அதுதான் எனக்கு இந்தத் தொழிலில் கிடைத்த மிகப்பெரிய திருப்தி.

நாம்: எத்தனை ஆண்டுகளாக இந்தத் தொழிலைச் செய்கிறீர்கள்?

அவர்: பத்தாண்டுகளாகச் செய்து வருகிறேன். அப்போது செங்குன்றம் பகுதியில் ஒரு சதுரடி முந்நூறு ரூபாய்க்கு விற்றேன். இப்போது அங்கு ஒரு சதுரடி ஐந்நூறு, அறுநூறுக்கு மேல் விலை போகிறது.

நாம்: இதுவரை உங்களிடம் நிலம் வாங்கிய யாராவது ‘நிலத்தில் பிரச்சனை’ என்று உங்களிடம் வந்துள்ளாரா?

அவர்: அப்படி யாரும் இதுவரை வந்ததில்லை. எந்தப் பிரச்சனையும் இல்லாத நிலப்பகுதியைத்தான் விற்பனை செய்து வருகிறேன். ஒருவருக்கு விற்பனை செய்த நிலத்தை வேறு யாருக்கும் விற்பனை செய்து மோசடி  செய்யும் பழக்கம் என்னிடம் இல்லை. இறைவனுக்குப் பயந்துதான் இந்தத் தொழிலைச் செய்து வருகிறேன்.

நாம்: விவசாய நிலத்தை விற்பனை செய்யக் கூடாது என்று தடை இருந்ததே! இப்போது அது நீக்கப்பட்டுவிட்டதா?

அவர்: அந்த வழக்கு நீதிமன்றத்தில்தான் உள்ளது. அதன் இறுதித் தீர்ப்பு விரைவில் வரும். கிட்டத்தட்ட அது முடிந்த மாதிரிதான்.

நாம்: அந்தத் தீர்ப்புக்குப்பின் மனைகளின் விலை குறைய வாய்ப்புண்டு என்று சொல்லப்படுகிறதே! அது பற்றி உங்களின் கருத்தென்ன?

அவர்: மனைகளின் விலை குறையும் என்று சொல்வது தண்ணீரில் எழுதுவதற்கு ஒப்பாகும். காலம் செல்லச் செல்ல விலைவாசி உயருமே தவிர குறைய வாய்ப்பில்லை. இது வீட்டு மனைகளுக்கு மட்டுமில்லை. எல்லாப் பொருள்களுக்கும் பொருந்தும். இது என்னுடைய பத்தாண்டு அனுபவம் ஆகும்.

நாம்: ஒருவர் வாங்கி வைத்துள்ள நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்த முடியுமா?

அவர்: தேசிய நெடுஞ்சாலை, மேம்பாலம், இரயில்வே தண்டவாளம் போன்றவை அமைப்பதற்காக அரசாங்கம் ஒருவரின் நிலத்தைக் கேட்டால் நில உரிமையாளர் தமது நிலத்தை அரசாங்கத்திற்குக் கொடுக்க வேண்டியதுதான். உதாரணமாக, கோயம்பேட்டில் மேம்பாலம் கட்டுவதற்காக நடிகர் விஜயகாந்தின் கல்யாண மண்டபம் அமைந்துள்ள இடத்தை அவர் அரசாங்கத்திடம் ஒப்படைக்க நேரிட்டது. ஆனால் அரசாங்கம் அதற்கான நிலமதிப்பு எவ்வளவோ அதைக் கொடுத்துவிடும். இதுதான் பொதுச் சட்டம். 
 
நாம்: தங்கத்தில் முதலீடு செய்வது நல்லதா? நிலத்தில் முதலீடு செய்வது நல்லதா? 

அவர்: தங்கத்தில் முதலீடு செய்வதற்கும் நிலத்தில் முதலீடு செய்வதற்கும் இடையே சிறிய வித்தியாசம் உள்ளது. தங்கத்தை விற்றால் உடனடியாகப் பணம் கிடைத்துவிடும். எனவே விற்பது எளிது. நிலத்தை விற்பது அவ்வளவு எளிதல்ல. பட்டா, சிட்டா, சட்ட ஆலோசனை எல்லாம் பெற்றபின்னர்தான் ஒரு நிலத்தை விற்க முடியும். அதனால் என்ன நன்மையென்றால் நிலம் நீண்டகாலம் ஒரு சொத்தாக நம்மிடம் நிலைத்திருக்கும். அது மட்டுமில்லை, காலப்போக்கில் அந்நில மதிப்பு நாம் போட்ட முதலீட்டைவிடப் பன்மடங்கு பெருகிவிடும்.

நாம்: ரியல் எஸ்டேட் என்றாலே பெரும்பாலும் மக்கள் பயப்படுகின்றார்கள். பணத்தைக் கொடுத்து நிலத்தை வாங்க அஞ்சுகிறார்களே! ஏமாந்துபோகாமல் இருக்க ஏதேனும் வழியுண்டா?

அவர்: பொதுவாகச் சமுதாயத்தில் நிலவும் எல்லாச் செயல்களிலும் பெரும்பான்மை, சிறுபான்மை என்று உள்ளது. நன்மை செய்பவர்கள் அதிகம். தீமை செய்பவர்கள் குறைவுதான். திருடாமல் இருப்போர் அதிகம். திருடர்கள் குறைவுதான். இப்படித்தான் இந்த ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள். அதேநேரத்தில் நேர்மையாக வியாபாரம் செய்வோர் நிறையப் பேர் இருக்கின்றார்கள். அவர்களைக் கண்டறிந்து நிலத்தை வாங்க வேண்டும். மற்றொரு விஷயம், நிலத்தை வாங்குவதற்குமுன், முன்பணம் கொடுத்த பிறகு, அவர்களிடம் அந்நிலத்திற்கான ஆவணங்களை வாங்கி, ஒரு வழக்கறிஞரிடம் காண்பித்து, “சார், நான் இந்த நிலத்தை வாங்கப்போறேன். இதன் ஆவணங்களெல்லாம் சரியா இருக்கா என்று பார்த்துச் சொல்லுங்க” என்று கேட்டுக்கொண்டால், அவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இ.சி. (வில்லங்கச் சான்றிதழ்) போட்டுப் பார்ப்பார். தாய்ப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள பெயரில் அந்நிலம் இருந்தால், அது சரியானது என்று அர்த்தம். சரியாக இருந்தால், வாங்குங்கள் என்று சொல்லப்போகிறார். சரியாக இல்லையென்றால் வாங்க வேண்டாம் என்று சொல்வார். இதன்மூலம் நாம் ஏமாறுவதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

நாம்: வழக்கறிஞர் துணையின்றி, இ.சி. (வில்லங்கச் சான்றிதழுக்கு) நாமே சுயமாக விண்ணப்பம் செய்யலாமா?

அவர்: தாராளமாகச் செய்யலாம். ஆனால் அந்த ஆவணங்கள் அனைத்தையும் பொறுமையாகப் படித்துப் பார்த்துச் சரிபார்ப்பது சிரமம். அதன் நுணுக்கங்கள் தெரிந்தவர்கள் வழக்கறிஞர்கள்தாம். எனவே அந்தந்தத் தொழிலுக்கு உரியவர்கள் அதையதைப் பார்த்தால்தான் சரியாக இருக்கும்; நமக்கும் திருப்தியாக இருக்கும். அது மட்டுமில்லை. “இந்நிலத்தின் ஆவணங்கள் அனைத்தும் சரியாகத்தான் உள்ளன” என்று குறிப்பிட்டு, ‘லீகல் ஒப்பீனியன்’ எனும் பெயரில் அவருடைய ‘லெட்டர் பேடில்’ அவரிடமே நாம் ஒரு கடிதமும் வாங்கிக்கொள்ளலாம். ‘பிற்காலத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு நான் பொறுப்பு’ என்று அதற்கு அர்த்தம். அப்படி ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அவரை நாம் அணுகலாம். மேலும் நாம் அந்நிலத்தை யாருக்கேனும் விற்பதாக இருந்தாலும் அந்த ‘லீகல் ஒப்பீனியன்’ கடிதம் ஒருபடி மதிப்பையும் நம்பிக்கையையும் அதிகரித்துக்காட்டும்.   

நாம்: தற்போது நீங்கள் எங்கே நில விற்பனை வரைவுத் திட்டம் போட்டிருக்கிறீர்கள்?

அவர்: திருநின்றவூர் குடியிருப்புப் பகுதியின் அருகிலுள்ள நிலப்பகுதியில் போட்டுள்ளோம். அதனைத் தொடர்ந்து அத்திப்பட்டு அருகில் போடவுள்ளோம். மனை தேவைப்படுவோர் என்னை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம்: 86819 21999. மிக்க நன்றி.


-நேர்காணல்: நூ. அப்துல் ஹாதி பாகவி, துணை ஆசிரியர்
 (நான்கு  மாதங்களுக்கு முன்னர் எடுத்த பேட்டி)
========================== 



கருத்துகள் இல்லை: