திங்கள், 19 ஜனவரி, 2015

தாயும் சேயும்








மருமகனும் மருமகளும் பிள்ளைகளே!

-மௌலவி நூ.அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில்., ஓர் ஆண் திருமணம் செய்துகொண்டால் அவனுடைய மனைவியின் பெற்றோருக்கு மற்றொரு மகனாக ஆகிவிடுகின்றான். அதனால்தான் அவனுக்கு அவனுடைய மனைவியின் தாய்-மாமியார் திரையிட வேண்டிய அவசியமில்லை. அதேபோல் திருமணத்திற்குப் பின் ஒரு பெண் தன் கணவரின் பெற்றோருக்கு மற்றொரு மகளாக ஆகிவிடுகின்றாள். அதனாலேயே அவள் தன் கணவனின் தந்தைக்குமுன் திரையிட வேண்டிய அவசியமில்லை என்று இஸ்லாம் கூறுகிறது. ஆக திருமணத்திற்குப்பின் பெண்வீட்டாருக்கு ஒரு மகனும் ஆண்வீட்டாருக்கு ஒரு மகளும் கிடைக்கின்றனர். இது இயல்பாக இறைவன் ஏற்படுத்திய உறவு. இந்த உறவை இருவீட்டாரின் பெற்றோரும் எந்த அளவுக்குப் பாதுகாக்கின்றனர். அல்லது எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதே இன்று நம்முன் நிற்கும் வினா. மருமகனைப் பொறுத்தமட்டில் சில ஊர்களில் தம் மகனாகக் கருதுவோர் உண்டு. சில ஊர்களில் திருமணத்திற்குப்பின் மணமகளுக்குப் பதிலாக மணமகனே மணப்பெண் வீட்டிற்குக் குடிபெயர்கின்றார். இப்படிப்பட்ட நிலையில் அங்கு மருமகள் கொடுமை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் அவள் தாய் வீட்டிலேயே இருந்துவிடுகிறாள். பொதுவாக நாம் நாளிதழ்களில், மாமியார் தம் மருமகளுக்கு இழைக்கின்ற கொடுமையைத்தான் படிக்க நேரிடுகிறது. மிக அரிதாகவே மருமகள் தன் மாமியாரைக் கொடுமைப்படுத்துவது நடக்கிறது. இது எதனால்? ஒரு மாமியார் தம் மருமகளைத் தம் மகளாகக் கருதாததால் ஏற்படுகின்ற வினையையே நாம் அன்றாடம் காண்கிறோம். ஒவ்வொரு மாமியாரும் தம் மருமகளைத் தாம் ஈன்றெடுத்த மகளாகக் கருதத் தொடங்கிவிட்டால் இதுபோன்ற பிரச்சனைகள் அருகிவிடும். மேலும், ஒவ்வொரு மாமியாரும் தம் மருமகனை மகனாகக் கருதி வாழத் தொடங்கிவிட்டால் வாழ்க்கைப்பட்ட வீட்டிலிருந்து பிரச்சனையோ சிக்கலோ தலைதூக்காமல் பார்த்துக்கொள்ளலாம். திருமணத்திற்குப்பின் ஒவ்வொரு தாயும் தன் மகளைப் பார்த்து, எப்படிமா இருக்குறே? மாப்ளே உன்னெ நல்லா கவனிச்சுக்குறாரா? என்று கேட்பது வழக்கம். இதே வினாவைச் சற்று மாற்றி, அத்தாய் தன் மருமகனிடம், என்னங்க மருமகனே, என் மகள் உங்களை நல்லா கவனிச்சுக்குறாளா? நீங்க சொன்னபடி கேட்டு நடக்குறாளா? என்று கேட்கத் தொடங்கினால் மருமகன் மனது குளிரும். பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனுக்குடன் களைய வசதியாக இருக்கும். மணவிலக்கு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. ஆனால் இப்படிக் கேட்கின்ற துணிவு எத்தனை அன்னையருக்கு இருக்கிறது? அது போலவே ஓர் ஆணைப் பெற்றெடுத்த ஒரு தாய் தன் மகனின் வாழ்வையே முக்கியமாகக் கருதுகிறாளே தவிர தன் மருமகளைத் தன் மகன் நன்றாகக் கவனித்துக்கொள்கின்றானா, தாம்பத்திய உறவில் மருமகளுக்குத் திருப்தியளிக்கும் விதத்தில் நடந்துகொள்கின்றானா என்பதைக் கவனிப்பதில்லை. தன் மருமகளிடம் இதுகுறித்தெல்லாம் சாடைமாடையாகக் கேட்டுத்தெரிந்து கொள்ளத் துணிவதில்லை. ஆனால் இது குறித்துக் கேட்பது அவளது கடமை. இதே வினாவைப் பெண்ணைப் பெற்ற தாயும் தன் மருமகனிடம் சாடைமாடையாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். தாம்பத்திய வாழ்வில் பிணக்கு என்றால் அதை உடனடியாகத் தன் மகளிடம் பக்குவமாக எடுத்துக்கூறிச் சரிப்படுத்த முனைய வேண்டும். ஏனெனில் தம்பதியருக்கிடையே தாம்பத்திய உறவில் பிணக்கு ஏற்படாமல், இருவருக்கும் திருப்தி ஏற்படும் வகையில் ஏற்பாடு செய்துவிட்டால் மற்ற பிரச்சனைகள் நீர்த்துப் போய்விடும். இதை எத்தனை மாமியார்கள் செய்கின்றனர்? இது போன்ற பிரச்சனைகளை ஒவ்வொரு மாமியாரும் முன்னின்று கவனித்து தன் மருமகனை மகனாகக் கருதி, தன் மருமகளை மகளாகக் கருதி வாழத் தொடங்கிவிட்டால் தம்பதியருக்கிடையே மணவிலக்கு ஏற்படாது. மாமியார்-மருமகள் சண்டையும் ஏற்படாது. மாறாக, இவைபோன்ற விசயங்களில் அக்கறை காட்டாமல், முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பிரச்சனைகளையெல்லாம் பெரிதாக வளரவிட்டு, இறுதியில் வெட்ட முற்படுவதால் பல மனங்கள் உடையத் தொடங்குகின்றன. பின்னர் அவற்றை ஒட்டவே முடிவதில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கின்றபோது தெளிவான படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ஒரு தடவை, அலீ-ஃபாத்திமா (ரளி-அன்ஹுமா) இருவருக்குமிடையே ஒரு சிறு பிணக்கு ஏற்பட்டுவிட்டது. அச்சமயத்தில் நபி (ஸல்) அவர்கள் நடந்துகொண்ட முறை ஒரு மாமனார் தம் மருமகனிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் காட்டுகிறது. சஹ்ல் பின் சஅத் (ரளி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்வி) ஃபாத்திமா (ரளி) அவர்களின் இல்லத்திற்கு வந்தபோது (மருமகனான) அலீ (ரளி) அவர்கள் வீட்டில் காணவில்லை. ஆகவே, உன் பெரிய தந்தையின் புதல்வர் எங்கே?'' என்று கேட்க, அதற்கு ஃபாத்திமா (ரளி) அவர்கள், "எனக்கும் அவருக்கும் இடையே சிறிய பிணக்கு ஏற்பட்டது. ஆகவே அவர் என்னைக் கோபித்துக்கொண்டு என்னிடம் ஏதும் சொல்லாமல் (வீட்டி-ருந்து) சென்றுவிட்டார் (அவர் பள்ளிவாசலுக்குள் இருக்கலாம்)'' என்று கூறினார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், "அவர் எங்கே என்று பாருங்கள்'' என்று சொன்னார்கள். உடனே அந்த மனிதர் (சென்றுவிட்டு) வந்து, "அவர் பள்ளிவாசலில் உறங்கிக்கொண்டிருக்கிறார், அல்லாஹ்வின் தூதரே!'' என்றுரைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிக்குள்) வந்தபோது அவருடைய மேலங்கி அவரது முதுகிலிருந்து (தரையில்) விழுந்துவிட்டிருக்க அவரது மேனியில் மண் படிந்திருக்கும் நிலையில் அவர் ஒருக்களித்துப் படுத்திருக்கக் கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரளி) அவர்களின் மேனியிலிருந்த மண்ணைத் துடைத்தவாறே "எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே! எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே!!'' என்று கூறலானார்கள். (புகாரீ: 441) தம் மகளிடம் கோபித்துக்கொண்டு சென்று பள்ளிவாசலில் படுத்திருந்த அலீ (ரளி) அவர்களை மெதுவாகத் தட்டியெழுப்பி மீண்டும் தம் மகளோடு சேர்த்து வைக்கின்றார்கள். இது போன்ற மென்மையான நடைமுறையை இன்றைய மாமனார்கள் கடைப்பிடிக்க வேண்டும். மற்றொரு நிகழ்வைப் பாருங்கள்: அலீ பின் அபீதாலிப் (ரளி) அவர்கள் கூறியதாவது: (என் துணைவியார்) ஃபாத்திமா அவர்கள் (மாவு அரைக்கும்) திரிகை சுற்றியதால் தமது கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (என்னிடம்) முறையிட்டார். (இது தொடர்பாக நபியவர்களிடம் தெரிவிக்கும்படி நான் கூறினேன்.) ஆகவே, ஒரு பணியாளரை (தமக்குத் தரும்படி) கேட்க நபி (ஸல்) அவர்களிடம் ஃபாத்திமா சென்றார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அப்போது (வீட்டில்) இல்லாததால் ஆயிஷா (ரளி) அவர்களிடம் அது பற்றிக் கூறி(விட்டுத் திரும்பலா)னார்கள். நபி (ஸல்) அவர்கள் வந்தவுடன் அவர்களிடம் ஆயிஷா (ரளி) அவர்கள் விஷயத்தைத் தெரிவித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (அவர்களைக் கண்டவுடன்) நான் எழுந்திருக்க முற்பட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள், "(எழுந்திருக்க வேண்டாம்) அந்த இடத்திலேயே இருங்கள்'' என்று கூறிவிட்டு எங்களுக்கு நடுவில் வந்து அமர்ந்துகொண்டார்கள். அப்போது (என்னைத் தொட்டுக்கொண்டிருந்த) அவர்களுடைய பாதங்களின் குளிர்ச்சியை எனது நெஞ்சின்மீது உணர்ந்தேன். (அந்த அளவுக்கு நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள்.) "பணியாளரைவிட உங்களிருவருக்கும் (பயனளிக்கும்) சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் இருவரும் படுக்கைக்குச் சென்றதும் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் பெரியவன்) என்று முப்பத்து நான்கு முறையும், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்று முப்பத்து மூன்று தடவையும், அல்ஹம்து லில்லாஹ் (புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே) என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். இது பணியாளைவிட உங்கள் இருவருக்கும் சிறந்ததாகும்'' என்று சொன்னார்கள். (நூல்: புகாரீ: 6318). நபி (ஸல்) அவர்கள் தம் ஈரக்குலையான மகளின் நலத்தைப் பெரிதெனக் கருதவில்லை. திரிகை சுற்றி மாவரைத்து, அதன்மூலம் தம் கணவருக்குச் செய்கின்ற பணிவிடை காரணமாக அவருடைய கையில் காய்ப்பு ஏற்பட்டுவிட்டது. அது குறித்து அலீ (ரளி) அவர்கள்மீது சினம் கொள்ளவில்லை. மாறாக, தம் மகளுக்கு இறைவனின் துதியைக் கற்றுக்கொடுக்கின்றார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரளி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் என் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டேன். அப்போது அவள் மாதவிடாய்ப் பருவத்தில் இருந்தாள். ஆகவே (என் தந்தை) உமர் பின் கத்தாப் (ரளி) அவர்கள் இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தையாரிடம், "உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்: அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பிறகு, அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, அடுத்து மீண்டும் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுப் பின்னர் அதிலிருந்து அவள் தூய்மையடையும் வரை அவளைத் தம்மிடமே வைத்திருக்கட்டும். பிறகு அவர் விரும்பினால், (இரண்டாம் மாதவிடாயிலிருந்து தூய்மையான) பின்னர் (தொடர்ந்து அவளைத்) தம்மிடமே (தம் மனைவியாக) வைத்திருக்கட்டும். அவர் (மணவிலக்குச் செய்ய) விரும்பினால் அவளுடன் உடலுறவு கொள்வதற்கு முன்பாக அவளை மணவிலக்குச் செய்யட்டும். (மாதவிடாயிலிருந்து தூய்மையான) இந்தக் காலக் கட்டமே மனைவியரை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் (2: 228ஆம் வசனத்தில்) அனுமதித்துள்ள காலக் கட்டமாகும்'' என்று சொன்னார்கள். (நூல்கள்: முஸ்லிம், நசாயீ) மணவிலக்குச் செய்யப்பட்டு நம்மை விட்டுப் போகப்போகின்றவள்தானே என்று விட்டுவிடாமல் தம் மகன் செய்த இச்செயல் ஷரீஅத் முறைப்படி சரியானதுதானா என்று தெரிந்துகொள்வதற்காகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்கின்றார்கள். அது ஷரீஅத் முறைப்படி சரியில்லை என்று அவர்கள் விளக்கமளித்தபின் தெளிவுபெறுகின்றார்கள். எப்போது தலாக் விட்டாலும் அது செல்லுபடியாகிவிடும் என்பது வேறு விசயம். ஆனால் அதிலும் ஓர் ஒழுங்குமுறையை இஸ்லாம் போதிக்கிறது. அது பெண்களுக்குச் சாதகமானது. அது அவர்களின் அடுத்த திருமணத்திற்கான வழியை எளிதாக்குகிறது. ஆக உமர் (ரளி) அவர்கள் தம் மருமகள்மீது கொண்ட அக்கறையை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மருமகன்மீது காட்டிய அக்கறையை இன்றைய மாமனார்கள், மாமியார்கள் தம் மருமகன்கள்மீதும் மருமகள்கள்மீதும் காட்ட வேண்டும். மருமகள்களும் மருமகன்களும் உங்களின் பிள்ளைகளே என்பதை உணருங்கள்.

திங்கள், 12 ஜனவரி, 2015

நபிகளார் நவின்ற மூன்றுகள் (தொடர் 19) (மூன்றே மனிதனின் சொத்து) மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., “அடியான், ‘என் செல்வம்; என் செல்வம்’ என்று கூறுகின்றான். அவனுடைய செல்வங்களில் மூன்று மட்டுமே அவனுக்குரியவையாகும். அவன் உண்டு கழித்ததும், அல்லது உடுத்திக் கிழித்ததும், அல்லது கொடுத்துச் சேமித்துக்கொண்டதும்தான் அவனுக்கு உரியவை. மற்றவை அனைத்தும் கைவிட்டுப் போகக்கூடியவையும், மக்களுக்காக அவன் விட்டுச் செல்லக்கூடியவையும் ஆகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்: 5666) நிலையில்லா இவ்வுலக வாழ்க்கையில் மனிதன் எல்லாமே என்னுடையது, எல்லாமே எனக்குரியது என்று அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றான். அதனால்தான் தான் சம்பாதித்தவற்றிலிருந்து பிறருக்குக் கொடுத்துதவ மறுக்கின்றான். எல்லாவற்றையும் தானே அனுபவித்துவிட வேண்டுமென எண்ணுகிறான். ஆனால் அதற்குள் மரணம் அவனைக் கவ்விப் பிடித்துக்கொள்கிறது. சரி, இதைப் பார்க்கின்ற மற்றொரு மனிதனாவது திருந்துகின்றானா என்றால் இல்லை. அவனும் அப்படித்தான் செயல்படுகின்றான். ஆக மனித இனமே அத்தகைய நிலையில்தான் உள்ளது என்பதை நாம் அறிய முடிகிறது. ஒருவன் தான் வாழ்கின்றபோது சம்பாதித்துச் சேர்த்து வைத்தவையெல்லாம் அவனுக்குரியவை அல்ல என்றும் அவன் நல்லபடியாக உண்டு கழித்ததும், சிறந்த ஆடைகளை உடுத்திக் கிழித்ததும், இயன்ற வரை பிறருக்குக் கொடுத்துச் சேமித்துக்கொண்டதும்தான் அவனுக்கு உரியவை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எவ்வளவு உயரிய தூரப்பார்வை. இத்தகைய தூரப்பார்வை எல்லா மனிதருக்கும் இருந்துவிட்டால் இவ்வுலகில் பொருளாதாரத்தை ஈட்டுவதில் அவர்களுக்கு மத்தியில் போட்டி, பொறாமை, வஞ்சகம், சூது இவையெல்லாம் நொடிப்பொழுதில் அற்றுப் போய்விடும். எல்லோரும் நிம்மதியாக வாழ்வார்கள். தர்மம் செய்வதிலும் பிறருக்கு வாரி வழங்குவதிலும் மனிதன் போட்டிபோடத் தொடங்கிவிடுவான். உண்டு கழித்தது என்றால் ஒருவன் தனக்காக உண்பதையே குறிக்கும். அதேநேரத்தில் தன் பிள்ளைகள், மனைவியர் ஆகியோருக்கு வாங்கிக் கொடுப்பது தர்மம் ஆகும். ஆம். நீ உன் மனைவிக்கு ஊட்டும் ஒரு கவள உணவும் உனக்கு தர்மம் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே மனைவிக்கு வழங்கும் உணவிற்காக அல்லாஹ் நன்மையைத் தந்துவிடுகின்றான். மனிதர்களுள் சிலர் தமக்காகவே வாங்கி உண்பதில்லை. பின்னர் தம் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் எப்படி வாங்கிக் கொடுப்பார்கள்? பிறகு சக மனிதர்களுக்கு எப்படிச் செலவு செய்வார்கள்? ஒவ்வொரு நாளும் இரண்டு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவருள் ஒருவர், “அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!’’ என்று கூறுவார். மற்றொருவர் “அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக்கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!’’ என்று கூறுவார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 1442) பொதுவாக, செலவு செய்தல் என்ற பழக்கம் எல்லாருக்கும் வாய்க்காது. ஏனெனில் பணத்தைச் செலவு செய்தால் தீர்ந்து போகும் என்ற எண்ணமே முதலில் மனதில் வந்து நிற்கும். அந்த எண்ணத்தை நீக்கிவிட்டுச் செலவு செய்தல் அவ்வளவு எளிதானதன்று. ஏனெனில் அது மனம் சார்ந்தது. ஆகவே இறையச்சமும் இறைநம்பிக்கையும் மிகுதியாக உள்ளோரே செலவு செய்ய முனைவர். ஏனையோர் செலவு செய்ய யோசிப்பார்கள். சேர்த்து வைக்கவே எண்ணுவார்கள். அவ்வளவு எளிதில் தம் பணத்தைப் பிறருக்குச் செலவு செய்ய முனைய மாட்டார்கள். உடுத்திக் கிழித்தல் என்பது, ஒருவன் தன் வாழ்நாளில் நல்ல ஆடைகளையும் புத்தாடைகளையும் வாங்கி உடுத்தி அதற்காகச் செலவு செய்தலைக் குறிக்கிறது. ஆடை என்பது ஒருவர் தம் மானத்தை மறைப்பதற்காக என்றாலும் ஆள் பாதி, ஆடை பாதி என்பதற்கேற்ப நல்ல ஆடைகளை அணிவது பிறரின் பார்வைக்கு அழகாகத் தெரிவதற்கும் சேர்த்துத்தான் என்பதை அனைவரும் அறிவோம். எனவே பிறரின் பார்வைக்கு அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக உடுத்துகின்ற ஆடை நல்ல ஆடையாகவும் சுத்தமானதாகவும் இருக்க வேண்டும். அப்படியெனில் அதற்காக நாம் செலவு செய்துதான் ஆக வேண்டும். ஆதமுடைய மக்களே! உங்களுடைய மானத்தை மறைக்கக்கூடியதும் (உங்களை) அலங்கரிக்கக்கூடியதுமான ஆடைகளை நிச்சயமாக நாம் உங்களுக்கு அருள் புரிந்திருக்கின்றோம். எனினும், (பாவங்களை மறைத்துவிடக்கூடிய) இறையச்சம் எனும் ஆடைதான் மிக்க மேலானது (7: 26) என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான். இருப்பினும் எல்லா ஆடைகளுக்கும் மேலாக ஒருவர் அணிந்துகொள்ளும் இறையச்சம் எனும் ஆடையே உயர்வானது, மேலானது என்று அல்லாஹ் கோடிட்டுக் காட்டாமல் விட்டுவிடவில்லை. ஆகவே நம்முடைய ஆடைக்காக நாம் செலவு செய்கிறோம். ஆனால் அது பிறரின் பார்வைக்கு அழகாகத் தென்பட வேண்டும் என்பதற்காக இருக்கலாமே தவிர பகட்டுக்காகவும் பெருமைக்காகவும் இருக்கக் கூடாது. இருப்பினும் சிலர் போதிய வசதியிருந்தும் தம் ஆடைக்காகச் செலவு செய்ய மாட்டார்கள். பழைய ஆடையையே உடுத்திக்கொண்டிருப்பார்கள். ஆடைக்காகச் செலவு செய்தால் பணம் தீர்ந்துபோகும் என்ற கவலை. அத்தகையோருக்காக நபி (ஸல்) அவர்கள் கூறிய வார்த்தைதான் இது: திண்ணமாக அல்லாஹ் தன்னுடைய அடியானிடம் தன் அருட்கொடையின் வெளிப்பாட்டைக் காண விரும்புகிறான். (நூல்: திர்மிதீ: 2744) தான் உண்பது, தான் உடுத்துவது-இவ்விரண்டும் போக ஒருவன் இவ்வுலகில் வாழும் காலத்தில் பிறருக்காக எவ்வளவு செலவு செய்கின்றானோ அதுவெல்லாம் அவன் தனக்காகச் சேர்ப்பதாகும். இவ்வுலகில் ஒருவன் வங்கியில் சேமித்து வைத்து, தனக்குத் தேவையானபோது அதை எடுத்துச் செலவுசெய்வதுபோல் ஒருவன் இவ்வுலகில் பிறருக்காகச் செலவழித்ததையெல்லாம் மறுமையில் அவன் நன்மையாகப் பெற்றுக்கொள்வான். ஆகவே இம்மூன்றும்தான் ஒரு மனிதன் அனுபவிக்கின்ற தன்னுடைய சொத்து. மற்றவையெல்லாம் தான் சார்ந்த வாரிசுகளுக்கும் அல்லது பிற மக்களுக்கும்தான். அதிலிருந்து அவனுக்கு நன்மை சேருமா, சேராதா என்பது அவனுடைய வாரிசுகளைப் பொறுத்தே அமையும். பிறருக்காகச் செலவு செய்ய மனம் வராத மக்களுக்காக அல்லாஹ் கீழ்க்கண்ட இரண்டு வசனங்களைக் கூறுகிறான்: உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்துகொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்), “”என் இறைவனே! என் தவணையை எனக்குச் சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே’’ என்று கூறுவான். (63:10) இறைநம்பிக்கை கொண்டோரே! பேரங்களும் நட்புறவுகளும் பரிந்துரைகளும் இல்லாத அந்த (இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள். (2: 254) ஆக மனிதன் எவ்வளவு உழைத்துச் சேர்த்தாலும் அவனுக்கு மிஞ்சுவது அவன் சேர்த்த நல்லறங்கள்தாம். எனவே நாம் வாழும் காலத்தில் நல்ல முறையில் உண்டு, உடுத்தி, பிறருக்கு வழங்கி வாழ்வோம். ஈருலகிலும் நன்மையை அடைவோம். -இன்ஷா அல்லாஹ் தொடரும் ===========

புதன், 19 நவம்பர், 2014

உரிமையைப் பறிக்காதீர்!


                        -மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில்.,

"உங்களுள் யார் தாம்பத்தியத்திற்குச் சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்துகொள்ளட்டும்; ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டுப்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்: புகாரீ: 1905)

வாழும் உயிரினங்கள் யாவும் தமக்கென ஒரு துணையை ஏற்படுத்திக்கொண்டு இணை இணையாக வாழ்வதே இயற்கை அமைப்பாக இறைவன் அமைத்துள்ளான். ஒவ்வொன்றும் தத்தம் துணையை இயல்பாகத் தேடிக்கொள்கின்றன. ஆனால் மனித இனம் முறைப்படி, இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் இணைந்து இல்வாழ்வைத் தொடங்குவதையே இறைவன் விதியாக்கியுள்ளான். ஓர் ஆண் தன் மனவிருப்பப்படி தன் துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள முழு உரிமை இருப்பதைப்போல் பெண்ணுக்கும் அத்தகைய உரிமையை இஸ்லாம் தாராளமாக வழங்கியுள்ளது. ஓர் ஆணோ பெண்ணோ தன் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது வெளிப்படையாகப் பேசி முடிவெடுக்க வேண்டும். துணையைத் தேடிக்கொடுப்பதில் பெற்றோரின் பங்கு முக்கியமானது. அவர்கள் தம் பிள்ளைக்குத் தகுந்த துணையைத் தேர்ந்தெடுக்கும்போது தம் பிள்ளையின் நிறை-குறைகளை வெளிப்படையாகப் பெண்வீட்டாரிடம் தெரிவித்துவிட வேண்டும். அதுபோலவே பெண்வீட்டார் தம் பிள்ளையின் நிறை-குறைகளை வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டு, அதை மாப்பிள்ளை வீட்டார் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுவிட்டால் பின்னர் அவ்விருவரையும் இணைத்து வையுங்கள். அவ்வாறு இணைக்கப்படுகின்ற தம்பதிகள், தம் இதயங்கள் இணைந்த வாழ்க்கையைத் தொடர்வார்கள். இல்லையேல் அவ்விருவரும் மனக்கசப்புடனே வாழ நேரிடும்.

நம்முள் பலர், "ஆயிரம் பொய்யைச் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்து'' எனும் முட்டாள்தனமான பழமொழியை முதுகில் சுமந்துகொண்டு திருமணத்திற்கு வரன் தேடும் பணியில் குதிக்கின்றார்கள். "ஆயிரம் பேரிடம் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்து'' என்பதுதான் உண்மையான பழமொழி. அதைப் பொய்யாகத் திரித்து, தன் இயல்புக்குச் சாதகமாக ஆக்கிக்கொண்டான் மனிதன். பொய்யுரைத்து ஈரிதயங்கள் இணைக்கப்படுகின்ற திருமண வாழ்க்கை பொய்யுடனே தொடர்கிறது. அவர்களின் வாழ்நாளிலும் பொய் தொடர்ந்து பயணம் செய்கிறது. "ஆயிரம் பேரிடம் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்து'' என்னும் உண்மையான பழமொழிக்கேற்பவே, "திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள்'' (நூல்: முஸ்னது அஹ்மத்) எனும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாக்கு அமைந்துள்ளது.

பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டிய அவசியம் எந்த முஸ்லிமுக்கும் இல்லை.  "எவர் நம்மை ஏமாற்றினாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை''  (நூல்: முஸ்லிம்: 164) எனும் அண்ணல் நபியின் அமுத வாக்கு ஏமாற்றுவோரை எதிர்த்து நிற்கிறது. குறைபாடுகளை மறைத்து, "எல்லாம் திருமணம் செய்துவைத்தால் சரியாகிவிடும்'' எனும் ஒற்றை வாக்கியத்தினுள் மூடி மறைத்துச் செய்துவைக்கும் திருமணம் நீண்ட நாள்கள் நீடிப்பதில்லை என்பதை நாம் அன்றாட வாழ்வில் கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.

பொறுமையைக் கைக்கொண்டு பதுமையாய் வாழ்கின்ற பெண்ணோ, மறுமையை மனதில்கொண்டு மனத்திட்பத்தோடு வாழ்கின்ற ஆணோ தற்காலத்தில் முற்றிலும் குறைவு என்பதை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். எனவே குறைகளை மறைத்துத்  திருமணத்தை நடத்தி வைக்க முன்வரும் பெற்றோர் சற்றுநேரம் நிதானமாகச் சிந்தியுங்கள்.

திருமணத்திற்கு ஏழ்மைகூட ஒரு தடையில்லை. ஆனால் தாம்பத்திய உறவுக்கான ஆற்றல் அவசியம் என்பதைப் பின்வரும் நபிமொழி, இறைவசனம் ஆகியவை மூலம் அறிந்துகொள்ளலாம்.

சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஅதீ (ரளி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த மக்களிடையே இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெண்மணி (வந்து) நின்று, "என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக (-மஹ்ரின்றி மணமுடித்துக் கொள்வதற்காக-) வழங்கிவிட்டேன்; தங்கள் விருப்பப்படி செயல்படுங்கள்!'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் பதிலேதும் சொல்லவில்லை. பிறகு மீண்டும் எழுந்து நின்று, "என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டேன்; உங்கள் விருப்பப்படி செயல்படுங்கள்!'' என்று சொன்னார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்குப் பதிலேதும் சொல்லவில்லை. மூன்றாவது முறையாக அப்பெண்மணி எழுந்து, "என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டேன்; தங்கள் விருப்பப்படி செயல்படுங்கள்'' என்றுரைத்தார்.

அப்போது ஒரு மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! இவரை எனக்கு மணமுடித்துவையுங்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "(இவருக்கு மஹ்ராகக் கொடுக்க) உம்மிடம் ஏதேனும் பொருள் உள்ளதா?'' என்று கேட்டார்கள். அவர், "இல்லை'' என்று கூறினார்.  நபி (ஸல்) அவர்கள், "நீர் சென்று, (இவருக்கு மஹ்ராகச் செலுத்த) இரும்பாலான ஒரு மோதிரத்தையாவது தேடுக'' என்று சொன்னார்கள். அவர் போய்த் தேடிவிட்டு பிறகு (திரும்பி) வந்து, "ஏதும் கிடைக்கவில்லை. இரும்பாலான மோதிரம்கூடக் கிடைக்கவில்லை'' என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "குர்ஆனில் ஏதேனும் உம்முடன் (மனனமாக) உள்ளதா?'' என்று கேட்டார்கள். அதற்கவர், "ஆம் இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் என்னிடம் (மனப்பாடமாக) உள்ளது'' என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உம்முடன் (மனனமாய்) உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்துத் தந்தேன், நீர் செல்லலாம்!'' என்று கூறினார்கள்.  (நூல்: புகாரீ: 5149)

ஏதுமற்ற ஏழைக்கு ஒரு பெண்ணை நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு திருமணம் செய்து வைக்கலாம்? அவர் எப்படி அப்பெண்ணுக்கு உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை வழங்குவார்? என்றெல்லாம் வினாக்கள் தொடுக்கலாம். அவர் ஏதுமற்ற ஏழையாக இருப்பினும், திருமண உறவுக்கேற்ற ஆரோக்கியமான உடல்வளம் இருந்தது; திருமண ஆசை இருந்தது. எனவே நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அப்பெண்ணை மணமுடித்து வைத்தார்கள்.

ஒருவர் ஏதுமற்ற ஏழையாக இருந்தாலும் அவர் மணமுடிப்பதன் மூலம் அல்லாஹ் தன் அளப்பரிய அருளால் அவரைச் செல்வராக ஆக்குவான். அது குறித்து இறைமறைக் குர்ஆனில் இடம்பெற்றுள்ள வசனத்தைப் பாருங்கள்.  (ஆணாயினும், பெண்ணாயினும்) உங்களுள் எவருக்கும் வாழ்க்கைத் துணை இல்லாவிட்டால், அவர்களுக்கு(ம் விதவைகளுக்கும்) திருமணம் செய்து வையுங்கள். (அவ்வாறே) உங்கள் அடிமையிலுள்ள நல்லோர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் சரி (வாழ்க்கைத் துணைவரில்லாத) அவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாயிருந்தாலும் அல்லாஹ் தன்னுடைய அருளால் அவர்களுடைய வறுமையை நீக்கி விடுவான். (24: 32)

ஏதுமற்ற ஏழையாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ளலாம்; தவறில்லை. அவர் தம் கடுமையான உழைப்பால் தம் மனைவியையும் அவள் ஈன்றெடுக்கும் பிள்ளைகளையும் கண்ணெனக் காப்பான்; சந்தேகமில்லை. ஆனால் தாம்பத்திய உறவுக்குத் தகுதியற்றவனுக்கு ஒரு பெண்ணை மணமுடித்து வைத்து, வாழ்நாள் முழுவதும் அப்பெண்ணை மனப்புழுக்கத்தோடு வாழவைப்பது எவ்வகையில் நியாயம்? ஒரு பெண்ணின் இல்லற உறவின் உரிமையை மற்றொருவன் பறிக்கலாகுமா? இதற்குப் பெற்றோரும் உடந்தையாகலாமா?

ஆண்மையற்ற தன்மை, கடுநோய் உள்ளிட்டவற்றை மூடி மறைத்துச் செய்து வைக்கப்படும் திருமணங்கள் நெடுநாள் நீடிப்பதில்லை. இதுபோன்ற நோய்களுக்கு ஆட்பட்டவர்கள் அதைத் தெளிவாகப் பறைசாற்றிவிட வேண்டும். அதுவே இருவீட்டாருக்கும் அவர்கள்தம் உறவினர்களுக்கும் நல்லது. இன்றைக்கு ஆண்களின் உணவுப் பழக்கம், புகைப்பழக்கம், தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் பழக்கம், குடிப்பழக்கம் உள்ளிட்டவை அவர்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிவிடுகின்றன. எனவே இளமையிலேயே இவைபோன்ற பழக்கங்களுக்கு ஆட்பட்டவர்கள் திருமண வாழ்க்கையை மறந்துவிட வேண்டியதுதான். இல்லையேல் இவைபோன்ற தீய பழக்கங்களுக்கு ஆட்படாமல் இருக்க வேண்டும். ஆட்பட்டவர்கள் உடனடியாக அவற்றைக் கைவிட்டுவிட வேண்டும். மறுப்பவர்கள் திருமணம் செய்யாமலேயே இருந்துவிட வேண்டும்.

இன்றைக்குத் திருமணத்திற்கு முன்பே, மருத்துவச் சான்றிதழை ஆணும் பெண்ணும் சமர்ப்பிக்க வேண்டும் எனும் கருத்து அரசாங்க ஆலோசனையில் இருந்து வருகிறது. அதைக் கட்டாயமாக்கலாமா, வேண்டாமா என்பது விவாதத்தில் உள்ளது. ஆனால் இஸ்லாம் அதற்குத் தீர்வாக உள்ளது. "எவர் நம்மை ஏமாற்றினாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை''  (நூல்: முஸ்லிம்: 164) எனும் அண்ணல் நபியின் அமுத வாக்கு ஏமாற்றுவோரை எதிர்த்து நின்று, மருத்துவச் சான்றிதழுக்கும் வகை செய்கிறது. பொய்யுரைத்தும் சான்றிதழ்கள் வாங்கிவிடலாம். ஆனால் அவர் அல்லாஹ்விடம் மாட்டிக்கொள்வார் என்பதை நினைவில் கொள்ளட்டும். ஆகவே தற்கால இளைஞர்கள் தம் பழக்க வழக்கங்களைச் சீராக்கிக்கொண்டு, ஆரோக்கியமான உடல்வளத்தைப் பெறுவதற்கு ஆவன செய்து, திருமணத்திற்குத் தயாராகட்டும்!
====================




சனி, 8 நவம்பர், 2014

நபிகளார் நவின்ற மூன்றுகள் (தொடர்-17)


                                                               
                                                (தடுக்கப்பட்ட மூன்று செயல்கள்)

                        மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, ஃபாஸில் தேவ்பந்தீ, (பிஎச்.டி.)

ஒரு கூட்டத்தினருக்குத் தலைமை தாங்கி தொழுகை நடத்தும்போது அவர்களை விட்டுவிட்டுத் தமக்காக மட்டும் பிரார்த்தனை செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் அவர்களுக்கு அவர் துரோகம் இழைத்துவிட்டார். (வீட்டின் உள்ளே நுழைய) அனுமதி பெறுவதற்கு முன்பு வீட்டின் உட்பகுதிகளை அவர் பார்க்கக் கூடாது.  அவ்வாறு அவர் பார்த்துவிட்டால் (அனுமதி பெறாமலேயே வீட்டில்) நுழைந்தவராவார். மலலத்தை அடக்கிக்கொண்டு சிரமத்துடன் தொழக்கூடாது. ஆக இம்மூன்று காரியங்களும் செய்ய உங்களுள் யாருக்கும் அனுமதி இல்லை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.   (நூல்கள்: அபூதாவூத்: 83, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மது)

ஒரு குழுவினருக்குத் தலைமையேற்றுத் தொழுகை நடத்தும்போது அந்த இமாம் பொதுநலன் கருதிப் பிரார்த்தனை செய்தல், ஏதேனும் வீட்டினுள் நுழைவதற்குமுன் அவ்வீட்டாரிடம் அனுமதி கோருதல், சிறுநீர், மலம் ஆகியவற்றை அடக்கிக்கொண்டு தொழுகாதிருத்தல் ஆகிய மூன்று கருத்துகள் இங்கே கூறப்பட்டுள்ளன. இம்மூன்றினுள் கடைசி இரண்டை ஏற்றுக்கொள்ளும் அறிஞர்களுள் சிலர் முதலாம் விசயத்தை ஏற்க மறுக்கின்றனர். அதனால் இந்த நபிமொழியே பலவீனமானது என ஒதுக்கிவிடுகின்றனர் சிலர். காரணம் மேற்கண்ட ஹதீஸில் உள்ள முதலாம் கருத்து நபிகளாரின் செயல்பாடுகளுக்கு முரணாகத் தெரிகிறதே என்பது அவர்களின் எண்ணம். ஆனால் அந்தக் கருத்தில் எந்த முரண்பாடும் இல்லை என்பதை மற்றொரு நபிமொழியின் மூலம் நாம் அறியலாம்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரளி) அவர்கள் அறிவித்துள்ள பின்வரும் நபிமொழி மேற்கண்ட நபிமொழிக்கு ஆதாரமாக உள்ளது. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தபோது "அஸ்ஸலாமு அலல்லாஹி மின் இபாதிஹி, அஸ்ஸலாமு அலா ஃபுலானின் வஃபுலான்' (அடியார்கள் சார்பாக அல்லாஹ்வுக்கு சலாம் உண்டாகட்டும்) என்று கூறிக்கொண்டிருந்தோம். (இதனை அறிந்த) நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீது சலாம் உண்டாகட்டும்' என்று கூறாதீர்கள் ஏனெனில், அல்லாஹ்தான் "சலாம்' ஆக இருக்கிறான். மாறாக, "அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத்து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வ ரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன்'' எனக் கூறுங்கள்.
இதை நீங்கள் கூறினால் வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்கள் மீதும் சலாம் கூறியதாக அமையும். (பின்னர்) "அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு'' என்றும் கூறுங்கள். இதன் பிறகு உங்களுக்குப் பிடித்தமான பிரார்த்தனையைத் தேர்ந்தெடுத்து (வேண்டி)க்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 835)

இந்த ஹதீஸில் வந்துள்ள, "உங்களுக்குப் பிடித்தமான பிரார்த்தனையைத் தேர்ந்தெடுத்து வேண்டிக்கொள்ளுங்கள்'' எனும் கடைசி வாக்கியம் மிகுந்த கவனத்திற்குரியது. அதாவது அத்தஹிய்யாத்து ஓதி முடித்தபின், ஒவ்வொருவரும் தத்தம் விருப்பம்போல் பல்வேறு துஆக்களை வேண்டலாம். அதில், என்னை நரகத்தைவிட்டுக் காப்பாற்று, என் பாவங்களை மன்னித்துவிடு, என் கல்வியைப் பெருகச் செய் என்பன போன்ற துஆக்கள் இருக்கலாம். ஆனால் இவ்வாறு ஓர் இமாம் ஓதுகின்றபோது அவர் தமக்காக மட்டும் ஒருமையில் கேட்காமல், தம்மைப் பின்பற்றித் தொழுகின்ற அனைவருக்கும் சேர்த்துப் பிரார்த்தனை செய்ய வேண்டும். எனவே, எங்களை நரகத்தைவிட்டுக் காப்பாற்று, எங்கள் பாவங்களை மன்னித்துவிடு என்று பன்மையாகக் கேட்க வேண்டும் என்பதையே முதலாம் ஹதீஸில் உள்ள முதல் கருத்து சுட்டிக்காட்டுகிறது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

பொதுவாக, நாம் தொழுகையில் அத்தஹிய்யாத்து, தரூதே இப்ராஹீம், துஆ ஆகியவற்றை ஓதுகின்றோம். அத்தஹிய்யாத்து, தரூதே இப்ராஹீம் ஆகிய இரண்டும் ஹதீஸ்கள் மூலம் தீர்மானிக்கப்பட்டவை. ஆனால் துஆ என்னும் இடத்தில் குறிப்பிட்ட துஆவை மட்டும் ஓதாமல் குர்ஆன், ஹதீஸில் வருகின்ற பல்வேறு துஆக்களை நாம் ஓதலாம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. பதிவுசெய்யப்பட்ட ஒரு கருவியைப் போன்று நாம் நம் தொழுகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். குழுவாகத் தொழுகின்றபோது இமாம் தாம் விரும்புகின்ற துஆவைத் தம்மைப் பின்பற்றித் தொழுவோருக்கும் சேர்த்துப் பன்மையாகக் கேட்க வேண்டும். அந்நேரத்தில் பின்னால் உள்ளவர்கள், இமாம் சலாம் கொடுத்துத் தொழுகையை முடிக்கின்ற வரை, தமக்குத் தெரிந்த துஆக்களை ஓதிக்கொண்டிருக்க வேண்டும். அது முடிந்தபின், அவரவர் தொழுகின்ற உபரித்தொழுகைகளில் அத்தஹிய்யாத்து இருப்பில் இருந்துகொண்டு அத்தஹிய்யாத்து, தரூதே இப்ராஹீம் ஆகிய இரண்டையும் ஓதி முடித்தபின் தாம் விரும்பிய துஆக்களை, தமக்குத் தெரிந்த துஆக்களை ஓத வேண்டும். ஒரே ஒரு துஆதான் ஓத வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு அதை மட்டும் எந்தவித உயிரோட்டமுமின்றி, மனனமாக ஓதி முடித்துவிட்டு, உடனடியாக சலாம் கொடுத்துத் தொழுகையை முடித்துவிட்டு ஓடுவதில் கவனம் செலுத்தக்கூடாது. மாறாக, அந்த அத்தஹிய்யாத்து இருப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் அது துஆ அங்கீகரிக்கப்படுகின்ற இடமும் நேரமும் ஆகும். 

இரண்டாவது, பிறரின் வீட்டினுள் நுழைய அனுமதி பெறுவதற்கு முன்பு வீட்டின் உட்பகுதிகளைப் பார்க்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடைவிதிக்கின்றார்கள். அவ்வாறு அவர் பார்த்துவிட்டால் அனுமதி பெறாமலேயே வீட்டினுள் நுழைந்தவராவார் என்று எச்சரிக்கின்றார்கள். பொதுவாக ஒரு வீட்டிற்குச் சென்று, அங்குள்ளோருக்கு சலாம் கூறி, அங்குள்ளோர் பதிலளித்து அனுமதி கொடுத்தால்தான் அவ்வீட்டிற்குள் நுழையலாம். இல்லையேல் திரும்பி வந்துவிட வேண்டும் என்பது இஸ்லாமிய மரபாகும். அந்த அடிப்படையில் இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள கருத்து நமக்குத் தெளிவாகவே விளங்குகின்றது.  

மூன்றாவதாக, மலலத்தை அடக்கிக்கொண்டு சிரமத்துடன் தொழக்கூடாது  என்று நபி (ஸல்) அவர்கள் தடைவிதிக்கின்றார்கள். காரணம் தொழுகை என்பது மனஓர்மையோடு செய்யப்படுகின்ற ஒரு வழிபாடு. அத்தகைய வழிபாட்டை மேற்கொள்கின்றபோது உடலும் உள்ளமும் இயல்பாக இருந்தால்தான் ஒருவர் தாம் ஈடுபடுகின்ற அந்த வழிபாட்டைச் செவ்வனே நிறைவேற்ற முடியும். மாறாக, படபடப்பும் பதற்றமும் இருக்கும் நிலையில் ஒருவர் எவ்வாறு தம்  தொழுகையில் மனஓர்மையோடு ஈடுபட முடியும்? எவ்வாறு மனமுருகி இறைவனிடம் வேண்ட முடியும்? ஒருவருக்குச் சிறுநீரோ, மலமோ முட்டிக்கொண்டு வெளியேற இருக்கும் நிலையில் அவற்றை அடக்கிக்கொண்டு அவர் எவ்வாறு மன ஓர்மையோடு தொழ முடியும்? எப்போது இமாம் தொழுகையை முடிப்பார், நாம் கழிவறை செல்லலாம் என்ற சிந்தனைதானே தொழுகை முழுக்க நீடிக்கும்? எனவேதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் தடைசெய்தார்கள். ஆக, நபி (ஸல்) அவர்கள் தடை செய்த இம்மூன்று செயல்பாடுகளையும் விட்டு நாம் நீங்கிட இறைவனிடம் இறைஞ்சுவோம்.
                                                                                                      -இன்ஷா அல்லாஹ் தொடரும்