திங்கள், 16 ஜூன், 2014

பிறர் நலம் பேணல்!


வியாழன், 8 மே, 2014

புதன், 30 ஏப்ரல், 2014

வியாழன், 3 ஏப்ரல், 2014

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (04 04 2014)

                                                                           அஸ்ஸலாமு அலைக்கும்
நாடறிந்த ஆலிம் பெருந்தகை, ஆன்மிகப் பேரொளி மௌலானா முஹம்மது அப்துல் கவி ஹழ்ரத் அவர்கள் குஜராத் காவல்துறையால் (மோடி அரசால்) கைது செய்யப்பட்டுள்ளார். எனவே அதைக் கண்டித்து சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அதில் தாங்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்போடு 
கேட்டுக்கொள்கிறோம்.
.
நாள்: 04 04 2014
இடம்: சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை
நேரம்: 3: 30 மாலை (அஸ்ர் தொழுகைக்குப்பின்) 






புதன், 2 ஏப்ரல், 2014

உரையாடல்-2


(மக்தப் மத்ரசா ஆண்டுவிழாவில் இரண்டு  பெண்பிள்ளைகளுக்கு இடையே நடந்த உரையாடல்)

ஆமினா: ஆயிஷா! இன்னைக்கு மத்ரசா போனாயா?

ஆயிஷா: ஆம், போனேன். நீ ஏன் வரல?

ஆமினா: எனக்கு உடம்பு சரியில்ல. அதனால வரல ஆயிஷா. இன்னைக்கு உஸ்தாத் என்ன சொல்லிக் கொடுத்தாங்க?

ஆயிஷா: தும்மியபின் ஓதுற துஆ சொல்லிக் கொடுத்தாங்க.
ஆமினா: அதை நீ மனப்பாடம் செய்துவிட்டாயா?

ஆயிஷா: ஆம்! செய்துவிட்டேன். நான் உனக்குச் சொல்லித் தரவா ஆமினா?

ஆமினா: ஆமா ஆயிஷா! அவசியம் சொல்லித்தா. நானும் அதை மனப்பாடம் செய்துக்குறேன்.

ஆயிஷா: ஒருவர் தும்மியபின், அல்ஹம்து லில்லாஹ் என்று சொல்லணும். அவரின் அருகில் இருப்பவர் அதைக் கேட்டால், யர்ஹமுகல்லாஹ் என்று கூறி அவருக்கு துஆ செய்யணும். அதன்பின் அதைத் தும்மியவர் கேட்டால், யஹ்தீகுமுல்லாஹ் வயுஸ்லிஹ் பாலகும் என்று சொல்லணும். புரிந்ததா ஆமினா?

ஆமினா: ஆமா! நன்றாகப் புரிந்தது.

ஆயிஷா: ஆமினா! நாம் தும்மியபிறகு அல்ஹம்து லில்லாஹ் என்று ஏன் சொல்கிறோம் தெரியுமா?

ஆமினா: எனக்குத் தெரியாதே ஆயிஷா. நீயே சொல்லு.

ஆயிஷா: நம்முடைய நுரையீரலுக்குள் செல்லக்கூடிய தூசுவை வெளியே தள்ளுவதற்காகத்தான் அல்லாஹ் தும்மலை ஏற்படுத்துறான். எனவேதான் நாம் அவனுக்கு நன்றை செலுத்துவதற்காக அல்ஹம்து லில்லாஹ் என்று கூறுகிறோம்.

ஆமினா: அப்படியா? இதில் இவ்வளவு பெரிய விஷயம் இருக்கா? சுப்ஹானல்லாஹ்.

ஆயிஷா: நெறைய பேர் இது பற்றி ஏதும் தெரியாம, தும்மியபிறகு அல்ஹம்து லில்லாஹ் சொல்லாம இருக்காங்க. எனவே நாம் இதை நம்முடைய வீட்டிலுள்ளோரிடம் எடுத்துச்சொல்லி அவர்களையும் இதச் சொல்ல வைக்கணும்.

ஆமினா: கண்டிப்பா. நானும் என்னுடைய வீட்ல சொல்லி, எல்லாருக்கும் இதைக் கற்றுக்கொடுக்குறேன் ஆயிஷா. வா போவோம்.

உஸ்தாத் நூ அப்துல் ஹாதி பாகவி

உரையாடல்-1


(மக்தப் மத்ரசா ஆண்டுவிழாவில் இரண்டு  பெண்பிள்ளைகளுக்கு இடையே நடந்த உரையாடல்)

ஆமினா: ஆயிஷா! விஷயம் தெரியுமா?

ஆயிஷா: என்ன விஷயம் ஆமினா? மார்க்க விஷயமா? உலக விஷயமா?

ஆமினா: மார்க்க விஷயமெல்லாம் இல்லை. உலகம் விஷயம்தான் ஆயிஷா.

ஆயிஷா: என்ன விஷயம்னு சொல்லு.

ஆமினா: பக்கத்துல வா! ஒரு இரகசியம். நம்மோட ஒன்னாப் படிச்சாலே நஃபீசா, அவ பக்கத்துத் தெருவுல உள்ள முருகேசனைக் கல்யாணம் செய்துகிட்டாளாம்.

ஆயிஷா: அஸ்தஃக்ஃபிருல்லாஹ்! நாம மூனு பேரும் ஒன்னாத்தானே ஸ்கூல் போவோம். அவ நல்லாப் படிப்பவளாச்சே? அவளா இப்படிச் செய்துட்டா? என்னாலே நம்பவே முடியலையே!

ஆமினா: ஆமா ஆயிஷா! அவளோட அப்பா, அம்மா ரெண்டு பேரும் அவளைச் செல்லமா வளர்த்தாங்க. அவ கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க. கூடவே செல்போனும் வாங்கிக் கொடுத்தாங்க. அதனால வந்த வெனைதான் இது.

ஆயிஷா: அப்படின்னா, அவளுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி எதுவும் தெரியாதா?

ஆமினா: ஆமா! அறவே தெரியாது. ஒரு பெண் பருவ வயதை அடைந்துவிட்டால் முகம், கை, கால் தவிர உடல் முழுவதும்  மறைக்க வேண்டும். பார்வையைத் தாழ்த்தி நடக்க வேண்டும் என்பதுதான் இஸ்லாம் கூறும் கட்டளை. இதைத்தான் நாம் நம்முடைய மக்தப் மத்ரசாவில் படித்தோம். அவதான் மத்ரசாவுக்கே வரவில்லையே?

ஆயிஷா: அது அவளுக்குத் தெரியாமல் போனதற்கு யார் காரணம்?

ஆமினா: அவளோட பெற்றோர்தான் காரணம். அவங்க அவளெ நாள்தோறும் மக்தப் மத்ரசாவுக்கு அனுப்பியிருந்தா அவள் இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றித் தெரிந்திருப்பா. அதனால் அவ தவறான பாதையில போயிருக்கமாட்டா.

ஆயிஷா: அப்படின்னா, பெற்றோருடைய கடமை என்ன?

ஆமினா: குழந்தை வளர்ந்து, பேசத் தொடங்கிவிட்டால் அதற்கு லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற ஏகத்துவக் கலிமாவைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். பிறகு படிப்படியா இஸ்லாமிய விஷயங்களைச் சொல்லிக் கொடுத்து, குர்ஆனைக் கற்பிக்க வேண்டும். பெற்றோருக்கு ஓதத் தெரியாவிட்டால் மத்ரசாவுக்கு அனுப்பி ஓத வைக்க வேண்டும். இப்படியெல்லாம் ஒரு பெற்றோர் செய்தால் பிள்ளைகள் வழிகெட்டுப் போகமாட்டாங்க. புரிந்ததா?

ஆயிஷா: நன்றாகப் புரிந்தது. அப்படின்னா, உலகப் படிப்பு படிக்க, பெண்பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பக் கூடாதா?

ஆமினா: அப்படியில்லை. தாராளமா அனுப்பலாம். ஆனால் பெண்பிள்ளைகளைப் பெண்கள் மட்டும் படிக்கிற ஸ்கூலில்தான் சேர்க்க வேண்டும். ஏனென்றால், ஆண்-பெண் கலந்து படிக்கும் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதால் நிறைய ஆபத்துகள் உண்டு.

ஆயிஷா: அப்படின்னா, பெண்கள் மட்டும் படிக்கிற ஸ்கூல் நம்ம மஹல்லாவில் இல்லையே? என்ன செய்வது?

ஆமினா: நம்ம மஹல்லாவில் பெண்கள் கல்விக் கூடங்களை நாமேதான் உருவாக்கணும். அது மட்டுமல்லாமல் மகளிர் அரபிக் கல்லூரியையும் நடத்தணும். அதில் படிக்கிற மாணவிகள் ஆலிமாக்களாகி நம் சமுதாய மக்களுக்கு தீன் பணி செய்வாங்க. தம்மோட பிள்ளைகளையும் ஷரீஅத்படி வளர்ப்பாங்க.

ஆயிஷா: இதையெல்லாம் நாம் இப்ப யாரிடம் சொல்வது?

ஆமினா: வா ஆயிஷா! நாம் நம்முடைய தோழிகளையும் சேர்த்துக்கொண்டு நம்ம மஹல்லா பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் மகளிர் கல்விக்கூடங்களை ஏற்படுத்துவதன் அவசியத் தேவையை எடுத்துச் சொல்லி இது போன்ற பிரச்சனை இனியும் ஏற்படாமல் தடுத்து நிறுத்துவோம்.

ஆயிஷா: சரி ஆமினா! கண்டிப்பா நானும் உன்னோட வாறேன். வா போவோம்!


 -உஸ்தாத் நூ அப்துல் ஹாதி பாகவி

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

திங்கள், 31 மார்ச், 2014

தெரிந்ததைச் சொல்கிறேன் (முன்னுரை)




முன்னுரை

எழுதுகோலால் கற்பித்த ஏக இறைவன் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகுக! நற்போதனைகளை மக்கள் யாவருக்கும் போதிக்க வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள்மீதும் அவர்கள்தம் குடும்பத்தார்மீதும் அவர்கள்தம் தோழர்கள்மீதும் அல்லாஹ்வின் கருணையும் சாந்தியும் உண்டாவதாக!

ஜனாப் டாக்டர் ஏ.பீ. முஹம்மது அலீ ஐ.பீ.எஸ். அவர்கள் எழுதியுள்ள, தெரிந்ததைச் சொல்கிறேன் எனும் நூல் என் பார்வைக்கு வந்தது. இந்நூலின் தமிழ்நடையைச் சீராக்கி, பிழைதிருத்தம் செய்து தருமாறு அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார். ஆகவே இந்நூலைப் புரட்டிப் பார்த்தபோது அவர் தம் நெஞ்சத்தில் தோன்றிய கருத்துகளை எந்த வஞ்சமும் இல்லாமல் சமுதாயம் சீராக வேண்டும் என்ற நன்னோக்கத்தில்தான் கூறியுள்ளார் என்பதைப் புரிந்துகொண்டேன்.

அவர் எதையும் நேர்படப் பேசுகின்ற பழக்கமுடையவர். அவர் காவல்துறையில் முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளதால், அவர் தம் கருத்துகளை எடுத்துச் சொல்லும்போதும்  காவல்துறைக்கே உரித்தான மிடுக்கு தென்படுகிறது. கண்டிக்கும் உணர்வோடும் ஆதங்கத்தோடும் கருத்துகளை எடுத்து வைக்கிறார். ஆனால் அவை அனைத்தும் நம் சமுதாயத்தில் புரையோடிக்கிடப்பவை.
அவர் இந்நூலில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், சிலருக்குப் பேசுவது எவ்வாறு என்றுகூடத் தெரிவதில்லை. மனைவியிடம் பேசுவதைத் தாயிடம் பேசுகிறார். தாயிடம் பேசுவதை மனைவியிடம் பேசுகிறார். அறிவாளிகளிடம் பேச வேண்டியதைப் பொதுமக்களிடம் பேசுகிறார். பொதுமக்களிடம் பேச வேண்டியதை அறிவாளிகளிடம் பேசுகிறார் என்று தெரிவிக்கிறார். ஆம்! நம்முள் இருவர் சந்தித்துக்கொண்டால் எதையாவது பேசித்தான் ஆக வேண்டும் என்று நினைத்துக்கொண்டு தொடர்பே இல்லாததையெல்லாம் பேசிக்கொள்கின்றார்கள். நாம் எதுவும் பேசவில்லையானாலும், “என்ன நீங்கள் பேசவே மாட்டீர்களா?” என்று 
கேட்கின்றார்கள்.

பேசுவதை அறிந்து பேச வேண்டும். தெரிந்ததைப் பற்றிப் பேச வேண்டும். தெரியாததைப் பற்றிப் பேசக்கூடாது. தெரியாததையெல்லாம் தெரிந்ததைப் போல் பேசினால் இறுதியில் நாம் அறிவிலிகளாக ஆகிவிடுவோம். எனவே எதைப் பேசினாலும் பொருள்படப் பேசுவோம்.

மற்றொரு கட்டுரையில், “தொலைக்காட்சிப்பெட்டி, கணிப்பொறி ஆகியவற்றைப் பிள்ளைகளின் படுக்கை அறைகளில் வைக்காமல் பொதுஅறையில் வைக்க வேண்டும். ஆடல், பாடல், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்ற போர்வையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளி பரப்பப்படுகின்றன. அதில் ஆபாசக் காட்சிகளும் காட்டப்படுகின்றன. அவை ஒளிபரப்பப்பட்டால் உடனே அந்த நிகழ்ச்சியை மாற்றிவிட வேண்டும். அதுபோன்ற காட்சிகளை நம்முடைய பெற்றோர் பார்க்கமாட்டார்கள். நாமும் பார்க்கக்கூடாதுஎன்ற எண்ணத்தைப் பிள்ளைகள் மனதில் தோன்றச் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டுப் பிள்ளைகளுடன் அமர்ந்து பெற்றோரும் அக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கக்கூடாதுஎன்று அறிவுரை கூறுகிறார்.
 
இன்றைக்கு நம்முடைய பிள்ளைகள் கெட்டுப்போக நாமே காரணமாக இருக்கின்றோம். குறிப்பாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கின்றபோது ஒரு கட்டுப்பாடு வேண்டும். எதைப் பார்க்க வேண்டும். எதைப் பார்க்கக்கூடாது என்று ஒரு பட்டியல் போட்டுத்தான் நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண்டும். நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் கட்டுப்பாடு இல்லையென்றால் பிள்ளைகள் கெட்டுப்போய்விடுவார்கள் என்பதைப் 
பெற்றோர் உணர வேண்டும். 

இன்றைக்குச் சின்னப் பிள்ளைகள்கூடத் திரைப்படங்களில் பேசப்படுகின்ற வசனங்களைத் தம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். அவற்றில் பல மோசமான பொருள்கொண்ட வசனங்கள். அவற்றின் பொருள்கூடப் புரியாமல் சிறுபிள்ளைத்தனமாக அவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். இதிலிருந்து விடுதலை பெறச் செய்வது பெற்றோரின் பொறுப்புதான். அதற்காக அவர்கள் தம்முடைய மகிழ்ச்சிகளைத் தியாகம் செய்யத்தான் வேண்டும்.
தன் செல்ல மகள் விருப்பப்பட்டுக் கேட்கின்றாளே என்று அந்த அப்பாவிப் பெற்றோரும் ஒரு செல்பேசி வாங்கிக் கொடுத்தார்கள். செல்பேசி வாங்கியதும் அவளுடைய நடை, உடை, பாவனை, பேச்சு அத்தனையும் மாறிவிட்டனஎன்று சொல்கிறார்.

நவீனச் சாதனங்கள் யாவற்றிலும் நன்மையும் தீமையும் கலந்தே உள்ளன. அவற்றை நன்மைக்காகப் பயன்படுத்துவது எப்படி என்பதை நாம் நம் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். கத்தியை வைத்துக்கொண்டு ஓர் ஆப்பிளை நறுக்கிச் சாப்பிடலாம். அதே கத்தியில்  ஒரு மனிதனின் உயிரையும் மாய்க்கலாம். ஆனால் எது அறிவுடைமை என்பதை நாம் நம் பிள்ளைகளுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும்.

செல்பேசி, இணையதள வசதியுடன்கூடிய கணினி போன்றவற்றை நாம் நம் செல்லப் பிள்ளைகளுக்கு அன்போடு வாங்கிக்கொடுக் கின்றபோது, அதன்மூலம் அவர்கள் கல்வியறிவையும் பொது அறிவையும் வளர்த்துக்கொண்டால் அது அவர்களுக்கும் சமுதாயத்திற் கும் நல்லது. அதற்கு மாறாக, அவர்கள் தேவையில்லாதவற்றைப் பார்க்கவோ படிக்கவோ தொடங்கிவிட்டால் அது அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் தீமையாகவே முடியும். அதனால்தான் அவற்றை வீட்டின் பொதுவான 
இடத்தில் வைக்குமாறு அறிவுரை கூறுகிறார்.

இன்னும் இந்தச் சமுதாயத்திலுள்ள செல்வர்கள் தம் செல்வத்தை அல்லாஹ்வின் திருப்தியையும் உவப்பையும் நாடிச் சமுதாய முன்னேற்றத்திற்காகத் தாராளமாகச் செலவு செய்கின்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் மனமுவந்து மாசற்ற மனதோடு இறைப்பாதையில் செலவழிக்கத் தொடங்கிவிட்டால் இஸ்லாமியச் சமுதாயம் மென்மேலும் வளர்ச்சிப் பாதையை நோக்கிப் பயணிக்கும் என்று தெரிவிக்கிறார்.

இந்நூலில் அவர் தம் சிந்தனையில் பட்டதை உள்ளது உள்ளபடி கூற முனைந்துள்ளார். எனவே இந்நூலின் கருத்துகள் செயல்பாட்டுக்கு வந்தால் சமுதாயம் பயனடையும் என்பதில் ஐயமில்லை.

அவர் மென்மேலும் பல நூல்களை எழுதி, இச்சமுதாய மக்களைத் தட்டி 
எழுப்ப உயர்ந்தோன் அல்லாஹ் அருள்புரிவானாக!
 அன்புடன்
மௌலவி, காரீ, நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ.,எம்.ஃபில்
ஆலங்குடி 
09-12-2013