புதன், 21 நவம்பர், 2012

இனிய திசைகள் நவம்பர் இதழ்

வலியை உணர்ந்தேன் (சிறுகதை)



திருக்குர்ஆனும் திருக்குறளும்


 மனிதன் இறைவழியை விட்டுத் திசைமாறிச் சென்றபோதெல்லாம் அவனைச் சரியான வழியில் செலுத்த அவ்வப்போது இறைத்தூதர்கள் இத்தரைக்கு அனுப்பப்பட்டுக்கொண்டே இருந்தனர். ஒவ்வொரு சமூகத்தாருக்கும் ஒவ்வோர் இறைத்தூதரை அல்லாஹ் அனுப்பிவைத்தான். அந்த இறைத்தூதர்கள் அந்தந்த சமூகத்தைச் சார்ந்தவர்களாகவும் அவர்களின் மொழியைப் பேசுபவர்களாகவும் இருந்துள்ளனர். அவரவர்களுக்கெனத் தனிப்பட்ட வேதங்களையும், ஆகமங்களையும் இறைவன் வழங்கியே வந்துள்ளான்.

அனைத்துச் சமுதாய மக்களுக்கும் இறைவன் தன் தூதர்கள் மூலம் அனுப்பிய செய்தி, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதேயாகும். கொள்கையளவில் அனைத்துச் சமுதாயத்தாருக்கும் ஒரே செய்திதான். ஆனால் சட்டதிட்டங்களோ ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் ஒவ்வொருவிதமாகவே இருந்தன. ஒரு சமுதாயத்துக்குத் தடைசெய்யப்பட்டவை மற்றொரு சமுதாயத்திற்கு ஆகுமாக்கப்பட்டன. ஒரு சமுதாயத்திற்கு ஆகாதவை வேறொரு சமுதாயத்திற்கு ஆகுமானவையாக இருந்தன. குறிப்பாக, வணக்க வழிபாட்டு முறைகளிலும், புனித நாள் என்பதிலும் மாற்றங்கள் இருந்தன.
ஒவ்வொரு மொழி பேசுபவருக்கும் அவர்தம் மொழியைப் பேசக்கூடிய தூதரை நாம் அனுப்பிவைத்தோம் என்று அல்லாஹ் கூறுகின்றான். அந்த அடிப்படையில், தமிழ் பேசும் மக்களுக்கு ஓர் இறைத்தூதர் வந்திருக்கலாம்தானே? அவருக்கென ஒரு வேதம் வழங்கப்பட்டிருக்கலாம்தானே? அந்த இறைத்தூதர் திருவள்ளுவராக இருக்க வாய்ப்புண்டா? அந்த மறை திருக்குறளாக இருக்கலாமா? இது பற்றிய ஆராய்ச்சியை அறிஞர்கள் பலர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தத் தூதர் எந்தக் காலத்தில் வந்திருப்பார்? இந்த மறையை யார் எழுதியிருப்பார்? திருக்குறளைப் பொறுத்தவரை இஸ்லாமியக் கொள்கைக்கு முரணான கருத்துகள் என்று எதையும் குறிப்பிட்டுக் கூற இயலாது. அதேநேரத்தில் இறைமறையின் மூலமும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலமும் கூறப்பட்டுள்ள கருத்துகள் சிலவற்றிற்கு முரணாக இருந்தாலும் பல்வேறு கருத்துகள் முஹம்மது (ஸல்) அவர்களின் கருத்துகளுக்கு ஏற்பவே இருப்பதைக் காணமுடிகின்றது.
இது ஓர் இறைவேதம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவை. 1. சுருங்கக் கூறி நிறைந்த பொருளைத் தருவது 2. சிந்தனைக்கேற்ற பொருள்கொள்ளத்தக்க முறையில் விரிந்துகொடுத்தல், 3. ஈராயிரம் ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வருதல், 4. இலக்கிய நயமான முறையில் அமைந்திருத்தல்-இவை போன்ற காரணங்களால் திருக்குறள் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட ஓர் இறைவேதமாக இருக்கலாம் என்ற எண்ணம் மேலோங்குவதில் வியப்பில்லை.

அது மட்டுமின்றி முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி முந்தைய வேதங்களில் கூறப்பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். கல்கி புராணம், தவ்ராத், இஞ்சீல் போன்ற வேதங்களிலும் முஹம்மது நபியைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அந்த வரிசையில் திருக்குறளும் இடம்பெறுகிறது. இதிலும் முஹம்மது நபியைப் பற்றிக் கூறியுள்ளார் வள்ளுவர்.
தோன்றின் புகழொடு தோன்றுக -அஃதிலார், தோன்றலின் தோன்றாமை நன்று. (பொருள்: இவ்வுலகில் பிறந்தால் முஹம்மது நபியின் சமுதாயத்தில் தோன்றுக. அவ்வாறில்லையெனில் இவ்வுலகில் தோன்றாமல் இருப்பதே மேல்). இதிலுள்ள புகழ் எனும் பதம் புகழுக்குரியவர் எனும் பொருள்கொண்ட முஹம்மது நபியைக் குறிக்கிறது என்று கூறலாம்.

நான் நபியாக இருப்பதைவிட முஹம்மது நபியின் சமுதாயத்தில் ஒருவராக இருப்பதையே விரும்புகிறேன் என்று மூசா (அலை) கூறினார்கள். முஹம்மது நபியின் சமுதாயம் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை மூசா நபியின் வார்த்தையின் மூலம் நாமறிவதைப் போலவே திருவள்ளுவர் மூலமும் நாம் தெரிந்துகொள்ளலாம். ஆக, இவையெல்லாம் இது ஓர் இறைவேதமாக இருக்கலாம் என்ற கருத்துக்கு வலுசேர்க்கின்றன.
இறைநம்பிக்கையின் அடிப்படைகள் ஏழுக்குள், “அவனுடைய வேதங்களையும் நான் நம்பிக்கை கொள்கிறேன்என்பதும் அடங்கும். அந்த அடிப்படையில், இதைத் தனியாகக் குறிப்பிட்டு, இந்த இறைவேதத்தை நம்புகிறேன் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை என்ற போதிலும் அவனுடைய வேதங்களை நம்புகிறேன் என்ற சொற்றொடருக்குள்-இது இறைவேதமாக இருந்தால்-இதுவும் அடங்கிவிடும் என்பதில் ஐயமில்லை.
இதை வலுப்படுத்தும்விதமாக புகாரீ எனும் நபிமொழித் தொகுப்பில் 7542ஆம் எண்ணில் ஒரு நபிமொழி காணப்படுகிறது.  வேதக்காரர்(களான யூதர்)கள் தவ்ராத் வேதத்தை ஹீப்ரு (எபிரேய) மொழியில் ஓதி, அதை அரபியில் இஸ்லாமியர்களுக்கு விளக்கியும் வந்தார்கள்.  அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேதக்காரர்கள் (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம். (பொய் என) மறுக்கவும் வேண்டாம். (மாறாக,) அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும், யஅகூபின் சந்ததியருக்கும் அருளப்பட்டதையும், மூசாவுக்கும் ஈசாவுக்கும் அருளப்பட்டதையும் மற்றும் நபிமார்கள் அனைவருக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பட்டவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம் என்று கூறுங்கள்எனக் கூறினார்கள். (திருக்குர்ஆன்: 2: 136)

திருக்குர்ஆன்

திருக்குர்ஆன் 14 நூற்றாண்டுகளுக்குமுன் உயர்ந்தோன் அல்லாஹ் உலக மக்கள் யாவருக்கும் பொதுவான இறைத்தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளிய வேதமாகும். இது முப்பது பகுதிகளையும், 114 அத்தியாயங்களையும் கொண்டுள்ளது. இதில் சிறிதும் பெரிதுமாக மொத்தம் 6666 இறைவசனங்கள் உள்ளன. எங்கெல்லாம் முஸ்லிம்கள் உள்ளனரோ அங்கெல்லாம் திருக்குர்ஆன் பிரதி கண்டிப்பாக இருக்கும். இது முஸ்லிம்கள் நாள்தோறும் தொழுகின்ற ஐங்காலத் தொழுகையில் ஓதப்படுவதோடு, பிற நேரங்களிலும் இது ஓதப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

திருக்குறள்

திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இது 23 நூற்றாண்டுகளுக்குமுன் இயற்றப்பட்ட நூலாகும். இது உலகப் பொதுமறை என்று தமிழர்களால் அழைக்கப்படுகிறது. இது அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று அத்தியாயங்களைக் கொண்டது. 133 அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வோர் அதிகாரத்திலும் 10 குறள்கள் வீதம் 1330 குறள்களைக் கொண்டதாகும். இதில் சிறிது பெரிது என்ற வித்தியாசமின்றி அனைத்துமே ஈரடிகளைக் கொண்டதாகும்.

குர்ஆனும்-குறளும்

இஸ்லாத்தின் அடிப்படையே ஏகத்துவம்தான். அல்குர்ஆனுக்கு முன்னர் வழங்கப்பட்ட வேதங்களிலும், முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னர் ஏகத்துவப் பரப்புரை செய்த இறைத்தூதர்கள் வலியுறுத்தியதும் ஏகத்துவம்தான். அதுபோல் திருக்குறளில் உள்ள முதல் குறளும் ஏகத்துவம் பற்றியதுதான். அகர முதல எழுத்தெல்லாம் ஆதி-பகவன் முதற்றே உலகு (1) (பொருள்: எல்லா மொழி எழுத்துகளும் அ எனும் ஓசையுடைய எழுத்தையே முதலாகக் கொண்டுள்ளது. அதுபோல் இவ்வுலகத்தின் தொடக்கம் இறைவன் ஆவான்.)

இக்குறளைப் படிக்கின்றபோது, அல்இக்லாஸ் அத்தியாயத்தின் பொருளாகிய, அல்லாஹ்  ஒருவன்; அவன் தேவையற்றவன்; அவன் (யாரையும்) பெற்றெடுக்கவுமில்லை; அவனை (யாரும்) பெறவுமில்லை; அவனுக்கு நிகராக யாரும் இல்லை என்று நபியே நீர் கூறுவீராக!-என்பதுதான் ஞாபகம் வருகிறது.

ஏகத்துவத்தில் தொடங்கி, படிப்படியாக மனித வாழ்க்கைக்குத் தேவையான நெறிமுறைகளும் ஒழுக்கங்களும், பண்புகளும் போதிக்கப்படுகின்றன. திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள பொய்யாமை, புறங்கூறாமை, களவாமை, சினங்கொள்ளாமை, பொறுமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, நடுவு நிலைமை போன்ற எண்ணற்ற நற்பண்புகள் திருக்குறளிலும் போதிக்கப்படுகின்றன.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்-நிலமிசை நீடுவாழ் வார் (2) (பொருள்: அடியாரின் உள்ளத் தாமரையில் உறையும் இறைவன் திருவடிகளை இடையறாது நினைப்போர் இவ்வுலகிலேயே பேரின்ப வாழ்வு பெற்றவராவார்.) இக்குறளைப் படிக்கின்றபோதுஅல்லாஹ்வின் நினைவைக்கொண்டே உள்ளங்கள் அமைதியடைகின்றன (13: 28) எனும் திருக்குர்ஆன் வசனம் ஞாபகம் வருகிறது.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்-மெய்ப்பொருள் காண்ப தறிவு (423) (பொருள்: எச்செய்தியை எவரிடமிருந்து கேட்டாலும் அது உண்மையா, பொய்யா என ஆராய்ந்தறிவதுதான் அறிவுடைமையாகும்.) அறிவுடைமை எனும் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள இந்தக் குறளைப் படிக்கின்றபோது (49: 06)    இறைநம்பிக்கைகொண்டோரே! தீயவன் உங்களிடம் ஏதேனும் செய்தியைக் கொண்டுவந்தால் (அதை உடனே அங்கீகரித்து) அறியாமையால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கிழைத்துவிடாமல் இருப்பதற்காக (அதன் உண்மையை அறிவதற்காக அதைத் தீர விசாரித்துத்) தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள் (49: 06) எனும் திருக்குர்ஆன் வசனத்தை ஞாபகப்படுத்துகிறது. 

இடுக்கண் வருங்கால் நகுக அதனை-அடுத்தூர்வது அஃதொப்பது இல். (621) (பொருள்: துன்பம் வரும்போது துவண்டுவிடாமல் புன்முறுவல் செய்துவிடு; ஏனென்றால் அதனை அடுத்து வருவது இன்பமே ஆகும்.) இடுக்கணழியாமை எனும் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள இந்தக் குறளைப் படிக்கின்றபோது,    திண்ணமாகத் துன்பத்திற்குப்பின் இன்பமே. திண்ணமாகத் துன்பத்திற்குப்பின் இன்பமே (94: 5-6) எனும் திருக்குர்ஆன் வசனங்களை ஞாபகப்படுத்துகிறது.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்-அறங்கூறும் ஆக்கம் தரும். (183) (பொருள்: பிறரைப் பற்றிப் புறங்கூறி, பொய்சொல்- வாழ்வதைவிடத் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோவது மேல்) இதன்மூலம் புறங்கூறுவதின் கடுமையை நாம் விளங்கிக்கொள்ளலாம். புறங்கூறாமை எனும் அதிகாரத்தில் உள்ள இக்குறளைப் படிக்கின்றபோது,   உங்களுள் ஒருவர் மற்றொருவரைப் புறம்பேச வேண்டாம். உங்களுள் ஒருவர் தம் சகோதரரின் இறைச்சியை, அவர் இறந்துபோன நிலையில் (அதிலிருந்து பிய்த்து) உண்ண விரும்புவாரா? அதை நீங்கள் வெறுப்பீர்கள் (49: 12) என்ற இறைவசனமே நினைவில் வந்து நிழலாடுகிறது.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்-உள்ளத் தனைய துயர்வு (595). (பொருள்: நீர்ப்பூக்களின் தண்டுகள் நீரின் ஆழத்தைப் பொறுத்து நீளும். அதுபோல் மக்களின் ஊக்கத்தைப் பொறுத்ததே அவர்களின் உயர்ச்சி). ஊக்கமுடைமை எனும் அதிகாரத்தில் உள்ள இக்குறளைப் படிக்கின்றபோது,   ஒவ்வொருவரும் தத்தம் எண்ணப்படியே செயல்படுகிறார்கள் என்று நபியே நீர் கூறுவீர் (17: 84) எனும் இறைவசனம்  நினைவுக்கு வருகிறது.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து-நோக்கக் குழையும் விருந்து (90). (பொருள்:  மிகவும் மெல்லிய அனிச்சம்பூ மோந்து பார்த்தாலே வாடிவிடும். அதுபோல் விருந்தினரோ முகம் மாறிப் பார்த்தாலே வாடிவிடுவர்.) விருந்தோம்பல் எனும் அதிகாரத்தில் உள்ள இக்குறளைப் படிக்கின்றபோது, அல்அஹ்ஸாப் அத்தியாயத்திலுள்ள 53ஆம் இறைவசனம் ஞாபகம் வருகிறது.

இறைநம்பிக்கைகொண்டோரே! நீங்கள் விருந்துக்கு அழைக்கப்பட்டு, அதற்கு அனுமதிக்கப்பட்டாலே தவிர, அது தயாராவதை எதிர்பார்க்காமல் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளுக்குள் நுழையாதீர்கள். எனினும் நீங்கள் அழைக்கப்பட்டால், அப்போது நுழையுங்கள். பின்னர் நீங்கள் உணவை உண்டுவிட்டால், (அங்கிருந்துகொண்டே) பேசுவதில் விருப்பம் கொண்டவர்களாக ஆகிவிடாமல் கலைந்து சென்று விடுங்கள். திண்ணமாக இது நபிக்குத் தொந்தரவு கொடுப்பதாக உள்ளது. ஆகவே (அதை) அவர் உங்களிடம் கூற வெட்கப்படுகிறார். உண்மையைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்படமாட்டான். (33: 53)

தம் இல்லத்துக்கு விருந்துண்ண வந்தவர்களை, “நீங்கள் உணவுண்டுவிட்டால் செல்ல வேண்டியதுதானே?” என்று முகத்தில் அறைந்தாற்போல் எப்படிக் கூறுவது என்ற கையறு நிலையில் இருந்த நபி (ஸல்) அவர்களைப் பார்த்த இறைவன் விடுத்த கட்டளையே இந்த வசனம். நபியின் அழகிய விருந்தோம்பல் பண்பு இதிலிருந்து வெளிப்படுகிறது.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு-என்புதோல் போர்த்த உடம்பு (80). (பொருள்: அன்புடையோரே உயிர் உடையோராகக் கருதப்படுவர். அஃது அற்றோர் உயிர் இருந்தும் உயிரற்றோரே ஆவார்.) அன்புடைமை அதிகாரத்தில் உள்ள இக்குறளைப் படிக்கின்றபோது, ஆலுஇம்ரான் அத்தியாயத்திலுள்ள 159ஆம் இறைவசனம் ஞாபகம் வருகிறது.
(நபியே) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (அன்புள்ளவராக) நடந்துகொள்கிறீர். (3: 159) மேலும், “நாம் உம்மை அகிலத்தாருக்கு ஓர் அன்பாளராகவே அனுப்பியுள்ளோம்என்ற இறைவசனத்தின் மூலம் நபி (ஸல்) அவர்கள் மக்கள்மீது மிக்க அன்பாளராக இருந்தார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்-சொல்லிய வண்ணம் செயல் (664). வினைத்திட்பம் எனும் அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள இந்தக் குறளைப் படிக்கின்றபோதெல்லாம், அஸ்ஸஃப் எனும் அத்தியாயத்தில் உள்ள இறைவசனமே ஞாபகம் வருகிறது: இறைநம்பிக்கைகொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கின்றீர்கள்? (61: 2) 

ஆக, திருக்குறளில் கூறப்பட்டுள்ள பல்வேறு கருத்துகள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள கருத்துகளைத் தழுவி உள்ளன என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம்.

பொய்யாநபியின் பொய்யாமொழிகள்

திருக்குர்ஆனுக்கு விளக்கவுரையாக உள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொய்யாமொழிகளும் அதன் கருத்துகளும் திருக்குறளின் கருத்துகளோடு இயைந்து அமைந்துள்ளதை நாம் காணமுடிகிறது.
இனிய உளவாக இன்னாத கூறல்- கனியிருப்பக் காய்கவர்ந் தற்று (100). (பொருள்: இனிய சொற்கள் இருக்க, அவற்றை விடுத்துக் கடும் சொற்களைக் கூறுவது பழம் இருக்கின்றபோது காயைக் கடிப்பதைப் போன்றதாகும்). இனியவை கூறல் எனும் அதிகாரத்தில் உள்ள இக்குறளைப் படிக்கின்றபோது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய பின்வரும் கூற்றே ஞாபகம் வருகிறது.

யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைகொண்டுள்ளாரோ அவர் பேசினால் நல்லதைப்  பேசட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும். (நூல்: புகாரீ-6138)

பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த-நன்மை பயக்கும் எனின் (292). (பொருள்: பிறருக்கு நன்மை பயப்பதாக இருந்தால் பொய்யும் பேசலாம். அதுவும் வாய்மையே.) வாய்மை எனும் அதிகாரத்தில் உள்ள இக்குறளைப் படிக்கின்றபோது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய பின்வரும் கூற்றே நெஞ்சில் நிழலாடுகிறது.

மூன்றில் தவிர பொய் ஆகுமானதில்லை. 1. ஒருவன் (தன்) மனைவியிடம், அவளைத் திருப்திப்படுத்துவதற்காகப் பொய்சொல்லுதல். 2. போரில் பொய் சொல்லுதல், 3. மக்கள் மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காகப் பொய்சொல்லுதல். (நூல்: திர்மிதீ-1862)

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு-மாடல்ல மற்றவை யவை (400). (பொருள்: என்றும் அழியாத செல்வம் கல்வியே. மற்றவை எல்லாம் உண்மையான செல்வம் ஆகா.) கல்வி எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள இந்தக் குறளைப் படிக்கின்றபோது, “கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக் கடமைஎன்று அண்ணல் நபியவர்கள் கூறிய வார்த்தைகள் ஞாபகம் வருகின்றன.  (இப்னுமாஜா-224)
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண-நன்னயம் செய்து விடல் (314). (பொருள்: தனக்குத் தீமை செய்தவர்களுக்கும் அவர்கள் வெட்கப்படுமாறு நன்மை செய்வதே அவர்களுக்குரிய தண்டனையாகும்). இக்குறளைப் படிக்கின்றபோது தீமை செய்தவருக்கும் நாம் நன்மையே செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்கிறோம். 

அதையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள். உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடம்  நபி (ஸல்) அவர்கள், உம் உறவைத் துண்டித்தவரோடு நீ சேர்ந்து வாழ்; உனக்கு(க் கொடுக்காமல்) தடுத்துக்கொண்டவருக்கு நீ கொடு; உனக்கு அநியாயம் செய்தவரை மன்னித்துவிடு. (நூல்: அஹ்மத்-16810)

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே-நாவினால் சுட்ட வடு (129). (பொருள்: ஒருவரைத் தீயினால் சுட்டாலும் புண் எளிதில் ஆறிவிடும். ஆனால் அவனது நாவால் சுட்ட சுடுசொல் என்றும் மாறாமல் அவனை வேதனைப்படுத்திக்கொண்டே இருக்கும்). அடக்கமுடைமை எனும் அதிகாரத்தில் உள்ள இக்குறளைப் படிக்கின்றபோது, நாவினால் ஏற்படும் தீமையை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

இக்கருத்தை ஒட்டி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதைக் காணும்போது நாவின் உச்சக்கட்ட விபரீதத்தைப் புரிந்துகொள்ளலாம்.  அல்லாஹ்வின் தூதரே! என்னில் தாங்கள் மிகவும் அஞ்சக்கூடிய உறுப்பு எது? என்று நான் வினவினேன். அதற்கவர்கள், தம் நாவைப் பிடித்துக்கொண்டு, இது என்று கூறினார்கள் என சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: திர்மிதீ)

ஆக, திருக்குறளைப் படிக்கின்றபோது திருக்குர்ஆனின் கூற்றுகளையும், திருத்தூதரின் பொய்யாமொழிகளையும் சார்ந்த எண்ணற்ற கருத்துகளை நாம் தெரிந்துகொள்ளலாம். நல்ல கருத்துகள் எங்கிருந்தாலும் நாம் அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். ஞானம் நிறைந்த சொல்  ஓர் இறைநம்பிக்கையாளரின் காணாமல் போன சொத்து. அது எங்கு கிடைக்கப்பெறினும் அதை எடுத்துக்கொள்ள அவர் முற்றிலும் தகுதியுடையவர்” (திர்மிதீ-2611) என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறிய கூற்றை நினைவில்கொண்டு அறிவைத் தேடுவோம். வெற்றியடைவோம்!









திங்கள், 22 அக்டோபர், 2012

என் கட்டுரைக்கு மறுப்புக் கட்டுரை



ஒன்றுக்கு மேற்பட்ட ஹஜ்  செய்யலாமா? - இனிய திசைகள் மாத இதழில் நான் எழுதிய கட்டுரைக்கு மறுப்பாக சமஉரிமை மாத இதழில் வெளியான கட்டுரை இது. வாசகர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்க.














வியாழன், 18 அக்டோபர், 2012

அகிம்சையைப் போதித்த அண்ணலார்



அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் இவ்வுலகில் தோன்றியது முதல் தம் தூதுத்துவப் பணியை முழுமையாக நிறைவேற்றி மரணித்தது வரை இவ்வுலக மக்கள் அவர்களை ஓர் அகிம்சாவாதியாகவே கண்டிருக்கிறது. எவ்வளவு பெரிய குழப்பம் நேர்ந்த போதிலும் அதை அமைதியாகவும் எளிமையாகவும் முடித்துவைத்துச் சேதங்கள் ஏற்படா வண்ணம் மக்களைக் காத்து வந்தார்கள் என்பதை உலகமே அறியும். அத்தகைய நபியைப் பின்பற்றுகின்ற இஸ்லாமிய இளைஞர்கள் எந்தச் சூழ்நிலையிலும் தம் உணர்வுகளுக்கும் உத்வேகங்களுக்கும் இடம்தரலாகாது.

அவர்கள் தம் உணர்வுகளுக்கும் உத்வேகங்களுக்கும் முக்கியத்துவம் அளித்தால் அதனால் பாதிக்கப்படுவது நம் இஸ்லாமியச் சகோதர சகோதரிகள்தாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அக்குழப்பத்தைக் காரணமாக வைத்துக்கொண்டு அந்நியர்கள் நம்மோடு சேர்ந்துகொண்டு நம்மையே அழிக்க முனைவது கூர்ந்து கவனிக்கத்தக்கது.

நபி  (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் காலம் முதல் இன்று வரை யூதர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகக் குழப்பம் விளைவிப்பதும் அவர்களைத் தாக்குவதும் அவர்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அவர்களின் சூழ்ச்சியை முறியடிக்க நம்மால் இயன்ற அறிவுப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, உணர்ச்சிப்பூர்வமான செயல்பாடுகளுக்கும் எதிர்வினைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கலாகாது. ஏனெனில் அதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். நம்முடைய உணர்வுகளைத் தூண்டிவிட்டு, அதில் நாம் அடைகின்ற பொருளாதார இழப்புகளையும், உயிரிழப்புகளையும் கண்டு அந்தரங்கத்தில் மகிழ்ச்சியடைகிறார்கள் என்பதே உண்மை. இதைத்தான் அவர்கள் காலங்காலமாகச் செய்துவருகிறார்கள்.

அதற்கு வரலாற்றில் எத்தனையோ சான்றுகள் குவிந்து கிடக்கின்றன. நன்றாகச் சென்று கொண்டிருந்த நபிகளாரின் இல்வாழ்க்கையில் களங்கம் கற்பிக்க நாடிய யூதன் அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள்மீது அவதூறு பரப்பினான். அதனால் நபி  (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் தம் மனைவிமீது சந்தேகம் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு மாதத்திற்குப் பின்னர் அவர் தூய்மையானவர். அவரின் கற்பு தூய்மையானது என்று அல்லாஹ் இறைவசனங்களை அருளினான். இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள் திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் காணக்கிடைக்கின்றன.

யூதர்கள் நபி  (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களைக் கேலி செய்வதும் வார்த்தைகளைத் திரித்துப் பேசி அதன்மூலம் நபியவர்களுக்கு இடும்பை ஏற்படுத்துவதும் அவர்களின் அன்றாட வாடிக்கை. இதற்குச் சான்றாகப் பின்வரும் நபிமொழி திகழ்கிறது.

ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: யூதர்களுள் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களிடம் வந்து ‘அஸ்ஸாமு அலைக்க' (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (முகமன்) கூறினர்.‘‘வ அலைக்கு முஸ்ஸாமு வல் லஅனா' (அவ்வாறே உங்களுக்கு மரணமும் சாபமும் உண்டாகட்டும்) என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள், ‘‘ஆயிஷா! நிதானம்! அனைத்துச் செயல்களிலும் நளினத்தைக் கையாள்வதையே அல்லாஹ் விரும்புகிறான்'' என்று கூறினார்கள். உடனே நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் சொன்னதைத் தாங்கள் செவியுறவில்லையா?'' என்று கேட்டேன் அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள், ‘நான் (‘அஸ்ஸாமு' எனும் சொல்லைத் தவிர்த்து)‘‘வ அலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) என்று பதிலளித்துவிட்டேன்'' என்று கூறினார்கள்.  (நூல்கள்: புகாரீ-6256, முஸ்லிம்-4027)

இதேபோல் அவர்கள் வார்த்தைகளைத் திரித்து, அல்லது இருபொருள் தருகின்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி, அதன் மூலம் கேலி செய்வதைத் தடுக்கும் வண்ணம் அல்லாஹ் பின்வரும் இறைவசனத்தில்  இவ்வாறு கூறுகின்றான்: இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் (நபியை நோக்கி) “‘ராஇனா” எனக் கூறாதீர்கள். (அதற்குப் பதிலாக “‘எங்களைப் பாருங்கள்!” என்ற பொருளைத் தரும்) “‘உன்ழுர்னா”’ எனக் கூறுங்கள். (அவர் கூறுவதை முழுமையாகச்) செவியுறுங்கள். (இதற்கு மாறாகக் கூறும்) நிராகரிப்பவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு. (2-அல்பகரா: 104)

இவ்வசனத்தில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் முக்கியமானவை. ராஇனா என்ற அரபி வார்த்தைக்கு “எங்களைப் பாருங்கள் என்ற பொருள் இருந்தாலும், “எங்களின் இடையன்” என்ற பொருளும், “எங்களின் பேதை” என்ற பொருளும் அதற்கு உண்டு. அதைத்தான் அந்த யூதர்கள் நாடினர். அதைக் கூறி நபியவர்களைக் கேலி செய்தனர். இது தெரியாமல் நபித்தோழர்களும் அவ்வாறு கூறலாயினர். எனவேதான் அதைத் தடுக்கும்வண்ணம் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு அவ்வாறு கட்டளையிட்டுள்ளான்.

இதே கருத்துள்ள மற்றொரு வசனம் வருமாறு: வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களிலிருந்து மாற்றுகின்றவர்களும் யூதர்களுள் உள்ளனர். மேலும், “செவியுற்றோம்; மாறுசெய்தோம்” என்றும், (வெளிப்படையாக) “நீர் கேட்பீராக!” என்றும் (மனதுக்குள்) “நீர் கேட்காமல் (செவிடாகப்) போய்விடுவீராக!” என்றும் ‘ராஇனா’ என்றும் கூறுகின்றனர். தங்களின் நாவுகளைக் கோணலாக்கியும் சன்மார்க்கத்தைப் பழித்தும் (இவ்வாறு கூறுகின்றனர்). (4: 46)

ஆக, முஸ்லிம்களுக்கெதிரான இந்த யூதர்களுடைய சூழ்ச்சியும் வன்மமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். அந்நேரத்தில் நபியவர்கள் கையாண்ட அகிம்சை வழியைத்தான் நாம் கடைப்பிடிக்க வேண்டுமே தவிர உள்ளுணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிடக் கூடாது. எப்படியாயினும் நம் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் நம்மையும் நம் பொருளாதாரத்தையும் அழிப்பதையும் இஸ்லாமிய மார்க்கத்தை இல்லாதொழிக்கவுமே விரும்புகிறார்கள். அதற்கு நாம் இடம் கொடுக்கலாகாது.

அதை நிரூபிக்கும் வண்ணம் கடந்த மாதம் முழுவதும் உலகெங்கும் முஸ்லிம்கள் செய்த ஆர்ப்பாட்டங்களும் அவற்றில் அவர்கள் அடைந்த காயங்களும், உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் அடங்கும். அது மட்டுமின்றி, அத்திரைப்படத்திற்கு இலவச விளம்பரமும் நாமே செய்துகொடுத்துவிட்டோம். நபிகளாரைக் கேலிச் சித்திரம் வரைந்ததற்காக உலகம் முமுவதும் உள்ள முஸ்லிம்கள் தம் எதிர்ப்பைத் தெரிவித்துள்ள ஒன்றரை ஆண்டுக்குள் மீண்டும் இதுபோன்ற திரைப்படம் வெளியிடப்படுகின்றது என்றால், அவர்கள் வேண்டுமென்றே நம்மைச் சீண்டி, வம்புக்கு இழுக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதுபோன்ற குழப்பங்கள் நிறைந்த காலத்தில் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் நவின்றுள்ளதைப் பாருங்கள்: குழப்பங்கள் மிகுந்த அக்காலத்தில் அவற்றுக்கிடையே (மௌனமாக) அமர்ந்திருப்பவன் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனைவிடச் சிறந்தவன் ஆவான். அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் (அவற்றை நோக்கி) நடந்து சென்று விடுபவனைவிடச் சிறந்தவன் ஆவான். அப்போது நடந்து சென்று விடுபவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனைவிடச் சிறந்தவன் ஆவான். அதை அடைகிறவனை அது வீழ்த்தி அழித்துவிட முனையும். அப்போது, புகலிடத்தையோ, அபயம் தரும் இடத்தையோ பெறுகிறவர் அதைக் கொண்டு பாதுகாப்புப் பெறட்டும் என்று அல்லாஹ்வின் தூதர்  (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரளி), நூல்கள்: புகாரீ-3601, முஸ்லிம்-5136)

எவ்வளவு குழப்பமாக இருந்தாலும் அந்தக் குழப்பத்தில் நம் உள்ளுணர்ச்சிகளுக்கு முதலிடம் கொடுத்துவிடாமல் அகிம்சா வழியையும் அமைதி வழியையும் கடைப்பிடிக்க வேண்டுமென அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கற்றுத் தந்துள்ளதை மனதில் பதிய வைக்க வேண்டும்.

இன்னும் இதைவிடக் கொடுமையான காட்சியை முஸ்லிம்கள் காண உள்ளனர். அந்தக் காலத்தில் நம்மை இறைவன் வாழாதிருக்கச் செய்வானாக! நாம் கிப்லா என நாள்தோறும் ஐவேளை முன்னோக்கித் தொழுகின்ற கண்ணியமான கஅபத்துல்லாஹ்-இறையாலயம் இடிக்கப்படும். அதுவும் அழிவு நாளின் அடையாளங்களுள் ஒன்றாகும். ஆம், அது பற்றி இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் நவின்றுள்ளதைப் பாருங்கள்: “அபிஷீனியாவைச் சேர்ந்த, மெலிந்த இரண்டு கால்களுள்ள (பலவீனமான) மனிதன் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவான்'' என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரளி),  நூல்கள்: புகாரீ-1596, முஸ்லிம்-5179)

ஆக, முஸ்லிம்கள் முன்னறிவிப்புச் செய்யப்பட்டுவிட்டார்கள். இந்தச் சமுதாயத்தின்மீது அளவிலாப் பாசமும் அன்பும் மிகுந்த அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) எந்தெந்தக் காலங்களில் எப்படியெப்படி வாழ வேண்டுமென்ற வழிமுறைகளை வகுத்துக் கொடுத்துவிட்டுத்தான் சென்றுள்ளார்கள். வெறுமனே சென்றுவிடவில்லை. எப்போதும் அமைதியுடன் வாழ்க்கையை மேற்கொள்வதற்கான வழிமுறைகளைக் கற்றுத்தந்துள்ளதால் அவற்றை நாம் கடைப்பிடித்து, அவர்களின் மதிப்பையும் பெருமையையும் உலகுக்கு எடுத்துச் சொல்வோம்! எதிரிகளின் சூழ்ச்சி வலையிலிருந்து விலகி வாழ்வோம்!





செவ்வாய், 18 செப்டம்பர், 2012

இனிய திசைகள் - 2012 செப்டம்பர்

இனிய திசைகள் 
செப்டம்பர் மாத இதழைப் படிக்க.

ஒன்றுக்கு மேற்பட்ட ஹஜ் செய்யலாமா?


ஒன்றுக்கு மேற்பட்ட ஹஜ் செய்யலாமா?
                                       -மௌலவி, நூ. அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில்.,

லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் எனும் இருபத்து நான்கு அரபி எழுத்துகளைக்கொண்ட திருவாசகத்தைக் கூறிய ஒவ்வொருவரும் ஐவேளைத் தொழுகையை அன்றாடம் நிறைவேற்றுவது கடமையாகும்; அதன்பின் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் செல்வந்தர்கள் ஆண்டுக்கொரு தடவை ஸகாத் வழங்குவதும் கடமையாகும்; அதற்குப்பின் செல்வந்தர்கள் தம் ஆயுளில் ஒரு தடவை ஹஜ் செய்வது கடமை. மேற்கண்ட கடமைகளுள் தொழுகை நாள்தோறும் ஐவேளைக் கடமை; நோன்பு நோற்பது ரமளான் மாதத்தில் மட்டும் கடமை; ஸகாத் வழங்குவது ஆண்டுக்கொரு முறை கடமை; அதுபோல் ஹஜ் செய்வது ஆயுளில் ஒரு முறை கடமை.

கடமைக்கு அப்பாற்பட்டு, ஏகத்துவக் கலிமாவை எத்தனை தடவை வேண்டுமானாலும் கூறலாம்; எத்தனை ரக்அத்துகள் வேண்டுமானாலும் தொழுகலாம்; எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் நோன்பு நோற்கலாம்; எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் தர்மமாக வழங்கலாம்; எத்தனை தடவை வேண்டுமானாலும் ஹஜ் செய்யலாம். இதற்கு இஸ்லாத்தில் எவ்விதத் தடையுமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

கடமையை நிறைவேற்றுவது வேறு; கடமைக்கு அப்பாற்பட்டு இறைவனுக்காக மனமுவந்து, தாமே விருப்பப்பட்டுச் செய்வது வேறு. இன்றைக்கு, செல்வந்தர்கள் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை மக்கா மாநகர் சென்று, கஅபாவைத் தரிசித்து, அதனை வலம் வந்து-இறையருளைப் பெற முனைகின்றனர். இத்தகையோரை விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர் சிலர். அடிக்கடி மக்காவுக்குச் சென்று அதற்காகப் பணத்தைச் செலவிடுவதற்குப் பதிலாக, சமுதாயச் சேவைகள் எவ்வளவோ இருக்கின்றன; அவற்றிற்கு அதைச் செலவு செய்யலாமே? என்று வினவுகின்றனர். அவர்களுடைய உள்நோக்கம் ஒரு வகையில் உண்மையென்றாலும், அதில் பொதிந்துள்ள கருத்து முற்றிலும் தவறாகும்.

சமுதாயச் சேவைகளுக்காகப் பணத்தைக் கேட்பதில் தவறேதும் இல்லை. ஆனால் அதேநேரத்தில்  அவர்கள் மனத்தூய்மையுடனும் இறையச்சத்துடனும் இறைக்காதலுடனும் அடுத்தடுத்து செய்து வருகின்ற ஹஜ்ஜைத் தடைசெய்வதும் விமர்சனம் செய்வதும் முறையாகாது. செல்வந்தர்கள் பலர் மீண்டும் மீண்டும் ஹஜ் செய்கிறார்கள். உண்மைதான். ஆனால் அவர்கள் சமுதாயத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறுவது தவறான கருத்தாகும். பள்ளிவாசல்களுக்காகவும், மத்ரசாக்களுக்காகவும், சமுதாய மேம்பாட்டிற்காகவும், ஏழைகளின் நலன்களைக் கருதியும் அவர்கள் தம் அறக்கொடைகளை வழங்கிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். செல்வந்தர்களின் அறக்கொடையால்தான் பல்வேறு பள்ளிவாசல்கள் மினாராவைப்போல் உயர்ந்து நிற்கின்றன; அரபிக்கல்லூரிகள் உயிரோட்டம் பெற்று விளங்குகின்றன; ஆங்காங்கே பைத்துல்மால்கள்- பொதுநிதியங்கள் செயல்படுகின்றன; தொண்டு நிறுவனங்கள் மூலம் சேவைகள் தொடர்கின்றன. இப்படிப் பல்வேறு கோணத்தில் செல்வந்தர்களின் நன்கொடைகளும், தர்மங்களும், ஸகாத்களும் இஸ்லாமிய மக்களின் நலனுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் உதவுகின்றன என்பது நிதர்சன உண்மை.

ஒருவன் தனக்குப் பிடித்த இஸ்லாமியப் பாடலை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை கேட்டு இன்புறுகின்றான்; பிடித்த நூலை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை படித்துச் சுவைக்கின்றான்; பிடித்த காட்சியை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை கண்டு மகிழ்கிறான்; மனதுக்குப் பிடித்த பொருளை  ஒன்றுக்கு மேற்பட்டு இரண்டு, மூன்று, நான்கு என வாங்குகிறான்; பிடித்த உணவை மீண்டும் மீண்டும் உண்டுமகிழ்கிறான். இவையெல்லாம் உலக இன்பங்கள். இவற்றையே மனிதன் ஒன்றுக்கு மேற்பட்டு ஆசைப்படும்போது, உலகையே படைத்த இறைவனின் திருஆலயமான கஅபாவை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை காண விரும்புவது எப்படிக் குற்றமாகும்? அதிலும் இறைக்காதலர்கள் எத்தனை தடவை அதைக் கண்டாலும் திருப்தியடைய மாட்டார்கள். அப்படியிருக்கும்போது அவர்களை விமர்சனம் செய்வது எவ்வகையில் நியாயமாகும்?

செல்வந்தர்களே, இந்த நற்செயலுக்குத் தாருங்கள்என்று ஒரு குறிப்பிட்ட சமுதாயச் சேவைக்காக அவர்களிடம் நிதி கேட்பது குற்றமாகாது.  அதற்கு மாறாகஒரு நற்செயலை அழித்துத்தான் மற்றொரு செயலைச் செய்ய வேண்டும் என்றில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். கஅபா எனும் இறையாலயம் கட்டப்பட்டது முதல் இன்று வரை அதை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை கண்டு மகிழ்ந்தவர்கள்தாம் அதிகம் எனக் கூறலாம். அதை மீண்டும் மீண்டும் கண்டு இன்புறுவதே இறைக்காதலர்களின் தீர்க்க முடியாத ஆசை. இறைக்காதலால் உந்தப்பட்டவர்கள் அது எவ்வளவு தொலைவானாலும் கவலைப்படுவதில்லை; அதற்கு எவ்வளவு பணம் செலவானாலும் வருத்தப்படுவதில்லை. அதற்காக எவ்வளவு தொல்லைகளையும் துன்பங்களையும் சுகமாகச் சகித்து, தம் கடும் உழைப்பால் ஈட்டிய பணத்தைச் செலவழித்து இறையன்பையும் இறைதிருப்தியையும் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் அவர்கள் மீண்டும் மீண்டும் செல்கிறார்கள். அவர்களுக்கு இறையன்பு மட்டும்தான் நோக்கமே தவிர உலகியல் சார்ந்த பெயரும் புகழும் இல்லை.

நஜ்த்வாழ் மக்களுள் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடித்த கையோடு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். (தூரத்தி-ருந்து) ஒலித்த அவரது குரல் கேட்டதே தவிர அவர் என்ன சொல்கிறார் என்பதை எங்களால் விளங்க முடியவில்லை. அவர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு) அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள்எனக் கூறினார்கள். அவர், “இவற்றைத் தவிர வேறு (தொழுகைகள்) ஏதாவது என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று வினவ, “இல்லை. நீயாக விரும்பித் தொழும் (கூடுதலான) தொழுகையைத் தவிர”  என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். மேலும் ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், “இதைத் தவிர வேறு (நோன்பு) ஏதாவது என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று வினவ, “இல்லை. நீயாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர”  என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்கள். அவர், “இதைத் தவிர வேறு (தர்மம்) ஏதாவது என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று வினவ, “இல்லை. நீயாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தர்மத்தைத் தவிர”  என்று விடையளித்தார்கள்.    அம்மனிதர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இதற்குமேல் அதிகமாகச் செய்யவுமாட்டேன்; இதைக் குறைக்கவுமாட்டேன்என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால், அவர் வெற்றியடைந்துவிட்டார்”  என்று கூறினார்கள். (நூல்: புகாரீ-46)

மேற்கண்ட இந்த நபிமொழி மூலம், ஒருவர் தம் கடமையை மட்டும் செய்வதுடனே உபரியாகவும், கூடுதலாகவும் தாமே முன்வந்து அச்செயல்களைச் செய்வதற்கு எந்தத் தடையுமில்லை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

கடமையான வழிபாடுகளோடு உபரியான வழிபாடுகளால்தாம் நாம் அல்லாஹ்வை நெருங்க முடியும் என்பதைப் பின்வரும் நபிமொழி நமக்கு உணர்த்துகிறது. எவன் என் நேசரைப் பகைத்துக்கொண்டானோ அவனுடன் நான் போர்ப் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றைவிட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான வழிபாடுகளால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன்...என அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ-6502)

ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நான்கு உம்ராக்களையும் துல்கஅதா மாதத்திலேயே செய்தார்கள். ஹஜ்ஜுடன் செய்த உம்ராவைத் தவிர! அவை, ஹுதைபியாவிலிருந்து (அவர்கள் தடுக்கப்பட்டபோது) செய்யச் சென்ற உம்ரா; அதற்கடுத்த ஆண்டின் உம்ரா; ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்ட இடமான ஜிஇர்ரானாவிலிருந்து செய்த உம்ரா; ஹஜ்ஜுடன் செய்த உம்ரா ஆகியவை ஆகும். (நூல்: புகாரீ-1780)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை உம்ரா செய்துள்ளார்கள் என்பதே, அவர்கள் இறையாலயத்தைத் தரிசிக்க எவ்வளவு ஆவல் கொண்டிருந்தார்கள் என்பதைக் காட்டப் போதுமானதாகும். கடமையைத் தவிர உபரியாகச் செய்கின்ற வழிபாடுகளே நாம் உள்ளார்ந்த முறையில் செய்யும் வழிபாடுகளாகும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை.

ஆகவே மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை செய்யும் ஹஜ்ஜும் உம்ராவும் அவர்கள் அந்த இறையாலயத்தின்மீது கொண்டுள்ள அன்பையும் காதலையும் காட்டுகிறதே தவிர பகட்டுக்காகவோ புகழுக்காகவோ இல்லை என்பதை விமர்சனம் செய்வோர் தம் மனத்தில் பதியவைத்துக்கொள்ள வேண்டும். ஆகவே நாம் மீண்டும் மீண்டும் அந்த இறையாலயத்தைக் கண்டு தரிசிக்கின்ற நற்பேற்றை அல்லாஹ் நம் யாவருக்கும் வழங்குவானாக!





வாசகர் கடிதம் 


தினமணி நாளிதழில் எழுதிய வாசகர் கடிதம்

08 09 2012 அன்று தினமணி நாளிதழில்  முனைவர் ஹாஜாகனி எழுதியிருந்த கட்டுரைக்கு நான் எழுதிய வாசகர் கடிதம்.


சனி, 8 செப்டம்பர், 2012

தமிழக வரலாற்றில் முதன் முறையாக...



ஜமாஅத்துல் உலமா சபை தொடங்கப்பட்டு 62 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் இதுவரை ஆலிம்கள் எதற்காகவும் ஒன்றிணைந்து வீதியில் களமிறங்கிப் போராடியதில்லை. ஆனால் இன்று (08.09.2012) அவர்கள் களமிறங்கி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள் என்றால் அது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. ஆம்! சென்னை-மீஞ்சூர் கவுண்டர் பாளையத்தில் இமாமாகப் பணியாற்றி வந்த அப்துர் ரவூப் நூரி என்பவரை முன்விரோதம் காரணமாக, அப்பள்ளியில் நிர்வாகத்திலுள்ள ஹயாத் பாஷா என்பவர் கூலிப்படையை ஏவிவிட்டு, அவர்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளார். பத்து நாள்களுக்குப் பிறகுதான் காவல்துறை கொலையாளியைக் கைது செய்துள்ளது.  இன்னும் கூலிப்படையினர் கைது செய்யப்படவில்லை. அதை எதிர்த்தும், தாக்குதலுக்குள்ளானவருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரியும்  தமிழக அரசின் கவனத்தை ஈர்க்குமுகமாக, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை மாநகர உலமாக்களால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை எதிரே உள்ள மெமோரியல் ஹால் முன்பாக காலை 9: 40 மணிக்குத் தொடங்கிய ஆர்ப்பாட்டம், காவல்துறை ஆணையரின் வேண்டுகோளுக்கிணங்க 10: 30 மணிக்கு முடித்துக்கொள்ளப்பட்டது. அதில் சென்னை மாநகர ஆலிம்களைத் தவிர முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். அதில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளையும் முழக்கங்களையும் காணொளியில் காணலாம்.











செய்தி: மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி