செவ்வாய், 19 அக்டோபர், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 11)

புனிதபூமிக்கு வருகை தருதல்

பின்னர், இப்ராஹீம் நபி, எகிப்தை விட்டுவிட்டுப் புண்ணிய நாட்டை நோக்கி  நடக்கலானார். அது அங்கிருந்த பைத்துல் முகத்தஸ் ஆகும். அவருடன் கால்நடைகள், அடிமைகள் மற்றும் மிகுதியான பொருள்கள்  இருந்தன. அவர்களுடன் கிப்தி வமிசத்தையும் எகிப்து நாட்டையும் சேர்ந்த ஹாஜர் என்பவர் சேர்ந்து வந்தார்.

திண்ணமாக லூத் (அலை) இப்ராஹீம் நபியின் கட்டளையின்பேரில் அவருடைய அதிகமான பொருட்களிலிருந்து ஹவ்ர் எனும் நகருக்காகச் செலவுசெய்தார். ஹவ்ர் என்று அறியப்படுவது ஸுஹர் எனும் நகரமாகும். அவர் சதூம் எனும் நகரத்தில் தங்கினார். அதுதான் அந்தக் காலத்தில் அந்நகரங்களின் தாயாக இருந்தது. ஆனால், அந்நகர மக்களெல்லாம் தீயவர் களாகவும் இறைமறுப்பாளர்களாகவும் பாவிகளாகவும் இருந்தனர்.
அச்சமயத்தில், அல்லாஹ் இப்ராஹீம் நபிக்கு வேத அறிவிப்புச் செய்து, அவர் தம் பார்வையை எல்லாப் பக்கமும் விசாலப்படுத்தக் கட்டளையிட்டான். வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு எல்லாத் திசைகளிலும் கவனம் செலுத்துமாறு கட்டளையிட்டான். இந்த நிலமனைத்தையும் கடைசிக்காலம் வரை உமக்காகவும் உம்முடைய சந்ததியினருக்காகவும் நான் ஆக்கவுள்ளேன் என்ற நற்செய்தியையும், உம் சந்ததியை நிலமண்ணின்  எண்ணிக்கை அளவுக்கு நான் அதிகப்படுத்துவேன் என்ற நற்செய்தியையும் அல்லாஹ் கூறினான்.
அந்த நற்செய்தி இந்தச் சமுதாயத்தை வந்தடைந்தது. ஆனால், அது இன்னும் முழுமையடையவில்லை. இந்த முஹம்மத் நபியின் சமுதாயத்தைவிடப் பெரிதாகவும் இல்லை.  



அதை உறுதிப்படுத்துகின்றவிதமாக நபி (ஸல்) அவர்களின் கூற்று அமைந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் பூமிப்பரப்பை எனக்காக ஒன்றாகக் குவித்தான். நான் அதன் மேற்கில் அமைந்திருக்கின்ற பகுதிகளையும் அதன் கிழக்கில் அமைந்திருக்கின்ற பகுதிகளையும் ஒருசேரக் கண்டேன். என் சமுதாயத்தின் ஆட்சிஅதில் எனக்காக அல்லாஹ் எவ்வளவு ஒன்றுகுவித்தானோ அதுவரை அடைய இருக்கிறது.

அடக்கி ஆள்கின்ற ஒடுக்குமுறையாளர்களுள் ஒரு குழுவினர்லூத் (அலை) அவர்களைத் தாக்கிவிட்டு,   அவரைக் கைதுசெய்துஅவருடைய பொருட்களை எடுத்துக்கொண்டு அவருடைய கால்நடைகளைப் பிடித்துச் சென்றுவிட்டனர்.  இப்ராஹீம் நபிக்கு இச்செய்தி கிடைத்தவுடன், 318 ஆண்களை எதிர்நோக்கிச் சென்று லூத் (அலை) அவர்களை மீட்டிக்கொண்டுஅவருடைய பொருட்செல்வங்களையும் மீட்டிக்கொண்டு வந்தார். அவர்அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் எதிரிகளுள் பலரை வெட்டிவீழ்த்தினார். அவர்களை அவர் தோற்கடித்து அவர்களின் பொருட்களை எடுத்து வந்தார். டமாஸ்கசின் வட பகுதியை வந்தடைந்து அதன் வெளிப்புறத்தில் `பரஸா எனும் இடத்தில் முகாமிட்டார். இன்று  மகாமு இப்ராஹீம் எனும் இடத்தோடு `பரஸா எனும் வார்த்தை   இணைக்கப்படுகிறது. இவ்வாறு இணைக்கப்படுவதற்குக் காரணம் அந்த இடத்தில்தான் இப்ராஹீம் நபியின் படை முகாமிட்டுத் தங்கியது. அதன் காரணமாகத்தான் அப்பெயர் வந்தது என்று தாம் கருதுவதாக இப்னு கஸீர் (ரஹ்) கூறியுள்ளார். அல்லாஹ்வே நன்கறிபவன்.

பின்னர்அவர் அல்லாஹ்வின் உதவியைப் பெற்றவராக தம் நாட்டுக்குத் திரும்பினார். அதன் பின்னர்பைத்துல் மக்திஸ் நகரைச் சுற்றியிருந்த அரசர்கள் மிகவும் பணிந்தவர்களாகவும் கண்ணியப்படுத்துபவர்களாகவும் வந்து இப்ராஹீம் நபியைச் சந்தித்தார்கள். அந்த ஊரிலேயே இப்ராஹீம்  நபி தங்கிவிட்டார்.

ஸ்மாயீல் நபியின் பிறப்பு

வேதக்காரர்கள் கூறியுள்ளனர்: நிச்சயமாக இப்ராஹீம் நபி தம்முடைய இறைவனிடம் சிறந்தநல்ல சந்ததியைக் கேட்டார். அல்லாஹ்அவ்வாறே தருவதாக அவருக்கு நற்செய்தி கூறினான். இப்ராஹீம் பைத்துல் மக்திஸ் நகருக்கு வந்து பத்தாண்டுகள் ஆனபோதுஒரு நாள் சார்ரா அம்மையார் இப்ராஹீம் நபியிடம்திண்ணமாக இறைவன்எனக்குக் குழந்தை பாக்கியத்தைத் தடுத்துவிட்டான். எனவேநீர் என்னுடைய அடிமைப்பெண்ணை உறவுகொள்வீர்! அவள் மூலம் அல்லாஹ் நமக்கு ஒரு வாரிசைத் தரலாம் என்று கூறினார்.

அவர் தம் அடிமைப் பெண்ணை தம் கணவருக்கு வழங்கிய போதுஅவர் அப்பெண்ணுடன் உறவுகொண்டார். எனவேஅப்பெண் அவர் மூலம் கருவுற்றார். அவர் கருவுற்றபோது அவருடைய எண்ணம் உயர்வடைந்தது. அவர் தம்முடைய எஜமானியைவிடப் பெரியவராகக் கருதிக் கொண்டார். எனவேசார்ரா அம்மையார் அவரைப் பார்த்துப் பொறாமைகொண்டார்அதைத்  தம் கணவர் இப்ராஹீமிடம் முறையிட்டார்.

நீர் விரும்பியதைச் செய்துகொள்வீர்! என்று இப்ராஹீம் நபி பதிலளித்தார். எனவேஹாஜர் பயந்து ஓடினார். அங்கிருந்த ஓர் ஊற்றின் அருகில் தங்கினார். அங்குஅவரிடம் தோன்றிய ஒரு வானவர், “நீர் பயப்படாதீர்! நிச்சயமாக அல்லாஹ்நீர் கருவுற்றிருக்கின்ற இந்தக் குழந்தை மூலம் நன்மையைச் செய்யவுள்ளான். அல்லாஹ் உம்மைத் திரும்பிச் செல்லுமாறு கட்டளையிட்டிருப்பதுடன்நீர் ஒரு மகனைப் பெற்றெடுப்பீர். அவருக்கு இஸ்மாயீல் என்று நீர்  பெயர் சூட்டுவீர் என்ற நற்செய்தியையும் கூறியுள்ளான். அந்தக் குழந்தைதான் எல்லோரின் அன்பிற்குரியவராக ஆகுவார்எல்லோரின் மீதும் அவரின் ஆதிக்கம் இருக்கும்எல்லா மக்களின்  பக்கபலமும் ஆதரவும் அவருக்கு இருக்கும்அவர் அனைத்து நாடுகளையும் ஆட்சிசெய்வார் என்று கூறினார். இதைக்கேட்ட ஹாஜிர்அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்.

நற்செய்தி மெய்யாகுதல்

அந்த நற்செய்தி அவருடைய பிள்ளை முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலம் மெய்யானது. நிச்சயமாகமுஹம்மத் (ஸல்) மூலம் அரபியர்கள் தலைவர்களாயினர். மேற்கிலிருந்து கிழக்கு வரை அனைத்து நாடுகளையும் ஆட்சிசெய்தனர். முன்சென்ற எந்தச் சமுதாயத்துக்கும் கொடுக்காத பயனுள்ள கல்வியையும் நற்செயல்களையும் இந்த அரபியர்களுக்கு அல்லாஹ் கொடுத்தான். இதுவெல்லாம்மற்ற இறைத்தூதர்களைவிட இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய சிறப்பின் காரணத்தால்தான் கிடைத்தன. அவர்களுடைய தூதுத்துவத்தின் அருளாலும் அந்த நற்செய்தியின் மோட்சத்தாலும் அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் முழுமையாலும் அவர்கள் இவ்வுலக மாந்தர் அனைவருக்கும் தூதராக அனுப்பப்பட்டதாலுமே இந்த உயர்வும் சிறப்பும் அரபியர்களுக்குக் கிடைத்தன. ஆகஹாஜிர் திரும்பி வந்தபோதுஅவர் இஸ்மாயீலைப் பெற்றெடுத்தார்.

வேதக்காரர்கள் கூறுகின்றனர்: அவர் அக்குழந்தையைப் பெற்றெடுத்தபோது இப்ராஹீம் நபியின் வயது எண்பத்து ஆறு.  அது இஸ்ஹாக் (அலை) பிறப்பதற்கு 13 ஆண்டுகளுக்கு முன்பாகும். இஸ்மாயீல் (அலை) பிறந்தபோதேஅல்லாஹ் சார்ரா அம்மையார் மூலம் இஸ்ஹாக்கை வழங்கப்போவதாக இப்ராஹீமுக்கு நற்செய்தி நவின்றான். இதைக் கேட்டவுடன் அவர் அல்லாஹ்வுக்குச் சிரம்பணிந்துஅவனை வணங்கினார். அப்போது அல்லாஹ் அவரிடம்நான் உமக்கு இஸ்மாயீல் விசயத்தில் பதிலளித்தேன். மேலும்நான் அவர்மீது அருள்புரிந்தேன். அவருக்கு அருள்வளத்தை அதிகப்படுத்தி அவரை மேன்மையடையச் செய்தேன்.  அவருக்கு 12 தலைவர்கள் பிறப்பார்கள். அவரை நான் மிகப்பெரும் சமுதாயத்துக்குத் தலைவராக ஆக்குவேன் என்று கூறினான்.

முஹம்மத் நபியின் சமுதாயம்-ஒரு நற்செய்தி

இந்த  நற்செய்தி முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் மிகப்பெரிய சமுதாயம் பற்றிய நற்செய்தியாகும். அந்த 12 தலைவர்கள் எனும் கூற்றுநல்வழிபெற்ற ஜனாதிபதிகளான 12 பேர்களைக் குறிக்கிறது. அவர்களைக் கொண்டே நற்செய்தி கூறப்பட்டது. ஜாபிர் பின் சமுரா (ரளி) அறிவிக்கின்ற நபிமொழி அதைத் தெளிவாகத் தெரிவிக்கிறது. பன்னிரண்டு தலைவர்கள் உருவாகுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். பிறகு ஒரு வார்த்தையைச் சொன்னார்கள். ஆனால்என்னால் அதை விளங்க முடிய வில்லை. எனவேஅது பற்றி நான் என் தந்தையிடம் கேட்டேன். அவர்கள் அனைவரும் குரைஷி வமிசத்தைச் சேர்ந்தவர்கள் என்று நபியவர்கள் கூறியதாக அறிவித்தார். (நூற்கள்: புகாரீமுஸ்லிம்)*1

மற்றோர் அறிவிப்பில், 12 கலீஃபாக்கள் வருகின்ற வரைஇவ்விசயம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும். அவர்கள் அனைவரும் குரைஷி வமிசத்தைச் சேர்ந்தவர்கள்  என்று வந்துள்ளது. (நூல்: முஸ்லிம்)
அவர்களுள் உள்ளவர்கள்தாம் நான்கு  இமாம்களான அபூபக்ர்உமர்ஸ்மான் மற்றும் அலீ (ரளி-அன்ஹும்) ஆவர். அவர்களுள் உள்ள மற்றொருவர்உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) ஆவார். அப்பாஸ் (ரளி) அவர்களின் சந்ததிகளுள் சிலரும் அந்த 12 பேர்களுள் உள்ளோராவர். அவர்கள் 12 பேரும் வரிசையாக வருவார்கள் என்று பொருள் இல்லை. மாறாகஅவர்கள் வருவார்கள் என்பது மட்டும் உறுதி.

ஷீஆக்கள் நம்பிக்கைகொண்டுள்ள 12 இமாம்கள் இங்கு நோக்கமன்று. அவர்கள் அந்த 12 இமாம்களுள் முதலாவது இமாமாக அலீ பின் அபீதாலிப் (ரளி) அவர்களைக் கூறுவார்கள். அவர்களுள் கடைசியானவர்சாமர்ரா (சுர்ர மர்ரஆ) நகரைச் சேர்ந்த பிஸ்ரிதாப் என்பவர் ஆவார். இவர் (வருவார் என) எதிர்பார்க்கப்படுகிறார். இவருடைய பெயர்அவர்கள் எண்ணுவதைப்போல்முஹம்மத் பின் அல்ஹசன் அல்அஸ்கரீ ஆகும். திண்ணமாக  இவர்கள் (ஷீஆக்கள்) கூறுகின்ற 12 நபர்களுள் அலீ (ரளி) அவர்கள் மற்றும் அவரின் மகனார் ஹசன்-இவ்விருவரைத் தவிர மற்றவர்களால் எவ்விதப் பெரும் பயனும் ஏற்படவில்லை.

அலீ (ரளி) அவர்கள் ஜனாதிபதி பொறுப்பேற்றுமக்களுக்குப் பெரும் சேவைசெய்தார்கள். ஹசன் (ரளி) அவர்கள் முஆவியா (ரளி) அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துபெரும் சண்டையைத் தவிர்த்துக்கொண்டார்குழப்பம் எனும் தீயை அணைத்தார்முஸ்லிம்களின் மத்தியில் போர் ஏற்படாமல் அமைதியாக்கினார். மற்றவர்கள்  பொதுமக்களுள் ஒருவராகவே கருதப்பட்டனர். சமுதாயத்தில் அவர்களுக்கு எந்த விசயத்திலும் ஆளுமையோ அதிகாரமோ இல்லை.  சாமர்ரா (சுர்ர மர்ரஆ) நகரைச் சேர்ந்த பிஸ்ரிதாப் என்பவர்எதிர்காலத்தில் வருவார் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ள விசயம் அவர்களின் குறுமதியையே காட்டுகிறது. அது ஓர் உளறலாகும். அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. 

----------------அடிக்குறிப்பு------------------------

*1.(அ.கு) இந்த நபிமொழிக்குப் பல விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. மக்களின் ஒருமித்த ஆதரவைப் பெற்ற ஆட்சித் தலைவர்களாக 12 பேர் வருவார்கள்அவர்களுக்குப் பின் குழப்பம் தலை தூக்கும் என்று சிலர் விளக்கமளித்துள்ளார்கள். இதன்படி வலீத் பின் யஸீத் காலம்வரை இந்நிலை நீடித்தது என்றும்அவரது காலத்தில் குழப்பம் வெடித்து உமய்யா-அப்பாசிய்யா என்ற குழுப்பூசல் தலை தூக்கியது என்றும் கூறப்படுகிறது. வேறு சிலர்உமய்யா ஆட்சியாளர்களுள் முதலாவது நபரான யஸீத் பின் முஆவியாவுக்கும் இறுதியானவரான மர்வானுக்கும் இடையே 12 ஆட்சித் தலைவர்கள் இடம்பெற்றனர்பனூஉமய்யாக்களிடமிருந்து ஆட்சி மாறியபோது பயங்கரமான அரசியல் மோதல் ஏற்பட்டது என்று விளக்கமளித்துள்ளனர். வேறு பல விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளன.  (நூல்: ஃபத்ஹுல் பாரீ)

அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.

  

வெள்ளி, 15 அக்டோபர், 2010

நீங்கள் அஃப்ஸலுல் உலமா பட்டதாரியா?

தமிழக மேலவைக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதில் பட்டதாரிகள் வாக்களிக்கலாம் என்பதும் தங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அஃப்ஸலுல் உலமா பட்டதாரியாக உள்ள நீங்களும் மேலவைத் தேர்தலில் வாக்களிக்கலாம் என்பதே நான் சொல்லவரும் கூடுதல் தகவலாகும்.

நீங்கள் அஃப்ஸலுல் உலமா பட்டதாரியாக இருக்கலாம்; அல்லது அதீபே பாஜிலாக இருக்கலாம்; அல்லது முன்ஷி பாசில், தபீபே காமில், அஃப்ஸலுல் அதிப்பா ஆகிய ஏதேனும் பட்டம் பெற்றவராக இருக்கலாம். ஆக உங்களுக்கும் மேலவைத் தேர்தலில் வாக்களிக்க உரிமை உண்டு.

என்ன செய்ய வேண்டும்?

படிவம் 18 அல்லது படிவம் 19 ஐ உரிய முறையில் நிரப்பி வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது நிர்ணயிக்கப்பட்ட அலுவலரிடம் கொடுக்க வேண்டும்.

தகுதிகள்
1. இந்தியக் குடிமகன்\ள் ஆக இருக்க வேண்டும்.
2. இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3. பட்டம் பெற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். அதாவது ௦01.11.2007க்கு முன்னர் அவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 06 11 2010
விண்ணப்பப் படிவம் தரவிறக்க (தமிழ்)
மேலும் விவரங்களுக்கு: http://epaper.dinakaran.com/index.php?rt=index/frontpage
 http://epaper.dinamani.com/newsview.aspx?parentid=18964&boxid=3122484&archive=false
விண்ணப்பப் படிவம் தரவிறக்க (ஆங்கிலம் )
தலைமைத் தேர்தல் அலுவலக இணைய தளம்

செவ்வாய், 12 அக்டோபர், 2010

செவ்வாய், 5 அக்டோபர், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 10)

இப்ராஹீம் நபி கூறியது பொய்யா?


இப்ராஹீம் மூன்று பொய்களைத் தவிர கூறவில்லை. அவற்றுள் இரண்டு அல்லாஹ்விற்காக இருந்தன. ஒன்று: நான் நோயாளி என்று கூறியதாகும். இரண்டாவது: மாறாக, அவற்றுள் பெரியதுதான் அதைச் செய்தது என்று கூறியதாகும். ஒரு நாள் இப்ராஹீம் நபியும் சார்ரா அம்மையாரும் ஓர் ஊரில் இருந்த கொடுங்கோல் அரசனிடம் வந்துவிட்டார்கள். இச்செய்தி அங்கிருந்த அந்த அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டது: இங்கு ஒருவருடன் ஓர் அழகான பெண் இருக்கிறாள். அதைக் கேட்டவுடன் அவரை (இப்ராஹீம்) அழைத்து வர ஆள் அனுப்பினான். அப்பெண் பற்றி அவரிடம் அந்த அரசன், அவள் யார்? என்று கேட்டான். இப்ராஹீம் நபி, அவள் என் சகோதரி என்று கூறிவிட்டார். அவர் சார்ரா அம்மையாரிடம் வந்தார். சார்ரா! உன்னையும் என்னையும் தவிர இந்நிலப்பரப்பில் (தற்போது) எந்த நம்பிக்கையாளரும் இல்லை. அவன் என்னிடம் (உன்னைப் பற்றிக்) கேட்டான். திண்ணமாக நீ என்னுடைய சகோதரி என்று கூறிவிட்டேன். எனவே நீ (உண்மையைச் சொல்லி) என்னைப் பொய்யனாக்கிவிடாதே! என்று தம் மனைவியிடம் கூறினார்.




அப்போது அந்த அரசன் சார்ரா (அலை) அவர்களை அழைத்துவர ஆள் அனுப்பினான். சார்ரா அவனிடம் சென்றபோது, அந்த அரசன் சார்ராவை அடைய வேண்டுமென்ற நோக்கத்தில், அவரை நெருங்கினான். அதேநேரத்தில், அவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப்பட்டான். எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வீர்! நான் உமக்கு எந்தத் தொல்லையும் கொடுக்க மாட்டேன் என்று அவன் கெஞ்சினான். எனவே அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்; அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, இரண்டாம் தடவையும் அவன் அவரை அணைக்க நெருங்கினான்; இப்போது அவன் முன்பு போலவே தண்டிக்கப்பட்டான். அல்லது அதைவிடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போது, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வீர்! நான் உமக்கு எந்தத் தொல்லையும் கொடுக்க மாட்டேன் என்று அவன் கெஞ்சினான். எனவே, அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்; அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். அப்போது அவன் தன்னுடைய காவலர்களுள் ஒருவனை அழைத்து, நீங்கள் என்னிடம் மனித (இனத்தி)னைக் கொண்டு வரவில்லை. நீங்கள் என்னிடம் கொண்டு வந்தது ஷைத்தானைத்தான் என்று கூறினான். பின்னர், அந்த அரசன் சார்ராவுக்குத் தன்னுடைய பணிப்பெண் ஹாஜிரை அன்பளிப்பாக வழங்கினான். சார்ரா அம்மையார் இப்ராஹீம் நபி தொழுதுகொண்டிருந்த போது வந்தார். எனவே, அவர் தம் கையால் சைகை செய்து, என்ன ஆனது? என்று கேட்டார். அல்லாஹ் இறைமறுப்பாளனின் சூழ்ச்சியை முறியடித்துவிட்டான். மேலும், அவன் ஹாஜிரைப் பணிப்பெண்ணாக அனுப்பி யுள்ளான் என்று பதிலளித்தார் என அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். வான்மழை (ப் பிரதேச) மக்களே! அவரே(ஹாஜர்) உங்கள் தாய் என்று அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரீ)*1




இப்ராஹீம் நபி மூன்று பொய்களைத் தவிர அறவே பொய் சொன்னதில்லை. அவை அனைத்தும் அல்லாஹ்வுக்காகத்தான். நான் நோயாளி என்பதும், மாறாக, அவற்றுள் பெரியதான இதுதான் அதைச் செய்தது என்பதும் அவர் கூறிய கூற்றுக்களாகும். ஒரு கொடுங்கோல் அரசனின் ஊருக்கு அவர் சென்று, அங்கு ஒரு வீட்டில் தங்கினார். இச்செய்தி அந்த அரசனுக்குச் சென்றது. இங்கு ஒரு மனிதர் வந்துள்ளார். அவருடன் ஓர் அழகான பெண் இருக்கிறாள் என்று அவரிடம் கூறப்பட்டது. உடனே அவரை அழைத்துவர ஆள் அனுப்பினான். அவனிடம் இப்ராஹீம் நபி சென்றதும், அவரிடம் அந்த அரசன் அவருடைய மனைவியைப் பற்றிக் கேட்டான். திண்ணமாக அவர் என் சகோதரி என்று இப்ராஹீம் (அலை) கூறிவிட்டார். அவர் தம் மனைவி சார்ராவிடம் சென்று, அவன் உன்னைப் பற்றிக் கேட்டான். நீ என்னுடைய சகோதரி என்று கூறிவிட்டேன். இன்றைய நாளில் உன்னையும் என்னையும் தவிர வேறு எந்த முஸ்லிமும் இங்கு இல்லை. எனவே நீ என்னுடைய சகோதரி ஆவாய். ஆகவே, நீ அவனிடம் (உண்மையைச் சொல்லி) என்னைப் பொய்யனாக்கிவிடாதே! என்று கூறினார். சார்ரா (அந்த அரசனிடம்) சென்றார். அவர் சென்றபோது அந்த அரசன் அவரைத் தொட நெருங்கினான். அப்போது அவன் பிடிக்கப்பட்டான். ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வீர்! நான் உமக்கு எந்தத் தொல்லையும் கொடுக்க மாட்டேன் என்று அவன் கெஞ்சினான். எனவே, அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்; அவன் விடுவிக்கப்பட்டான். பிறகு, இரண்டாம் தடவையும் அவன் அவரை நெருங்கினான்; இப்போது அவன் மிகவும் கடுமையாகப் பிடிக்கப்பட்டான். அந்நேரத்தில், எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வீர்! நான் உமக்கு எந்தத் தொல்லையும் கொடுக்க மாட்டேன் என்று அவன் கெஞ்சினான். எனவே, அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்; அவன் விடுவிக்கப்பட்டான். இவ்வாறு மூன்று தடவை நடந்தது.


உடனே, அவன் திகைத்தவனாக, அவனுடைய பணியாளர்களுள் ஒருவனை அழைத்து, நீ என்னிடம் மனித (இனத்தி)னைக் கொண்டு வரவில்லை; மாறாக, ஒரு ஷைத்தானைத்தான் கொண்டு வந்துள்ளாய். அவரை வெளியேற்று; அவருக்கு ஹாஜிரைக் கொடுத்தனுப்பு என்று கூறினான். இப்ராஹீம் நபி தொழுதுகொண்டிருந்தபோது, அவர் வந்தார். அவர் வந்ததை உணர்ந்த இப்ராஹீம் நபியவர்கள் திரும்பினார்; அவரைப் பார்த்து, என்ன நடந்தது? என்று வினவினார். அநியாயக்காரனின் சூழ்ச்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன். மேலும், அவன் எனக்கு ஹாஜிரைப் பணிப்பெண்ணாக அனுப்பியுள்ளான் என்று கூறினார். *2 (நூல்: பஸ்ஸார்)




இமாம் அஹ்மத் (ரஹ்) கூறியுள்ளார்: இப்ராஹீம் நபி மூன்று பொய்களைத் தவிர (வேறு எதையும்) கூறவில்லை. அவர், அவர்களின் தெய்வங்களிடம் திருவிழாவுக்காக அழைக்கப்பட்ட போது, நிச்சயமாக நான் நோயாளி என்று கூறினார். (இச்சிலைகளை யார் உடைத்தார்? என்று கேட்கப்பட்டபோது) மாறாக, அவற்றுள் பெரியதான இதுதான் அதைச் செய்தது என்று கூறினார். (தம் மனைவியான) சார்ராவைப் பார்த்து, இவர் என் சகோதரி என்று கூறினார். (நூல்:முஸ்னத் அஹ்மத்)


இப்ராஹீம் நபி ஒரு சிற்றூருக்கு வந்தார். அதில் அடக்கி ஆள்கின்ற ஓர் அரசன் இருந்தான். இரவு நேரத்தில் இப்ராஹீம் நபி தம்முடைய அழகான மனைவியுடன் அங்கு சென்றார் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, அந்த அரசன் அவரிடம் ஓர் ஆளை அனுப்பினான். உம்முடன் உள்ள இவர் யார்? என்று வினவினான். அதற்கு அவர், என் சகோதரி என்று பதிலளித்தார். (வந்தவர்) அவரை என்னோடு அனுப்பிவைப்பீர்! என்று கேட்டார். அவர் அவரை வந்தவருடன் அனுப்பிவைத்தார். (அவர் தம் மனைவியை அவரோடு அனுப்பியபோது) என் சொல்லை நீ பொய்யாக்கிவிடாதே! நீ என் சகோதரி என்று நான் அவரிடம் சொல்லியிருக்கிறேன். திண்ணமாக, இந்நிலத்தில் (தற்போது) உன்னையும் என்னையும் தவிர எந்த நம்பிக்கையாளரும் இல்லை என்று கூறினார். அவர் அந்த அரசனிடம் சென்றபோது, அவன் அவரை நோக்கி எழுந்துவந்தான். அவர் (சார்ரா) உடற்சுத்தி செய்துவிட்டுத் தொழுக ஆரம்பித்தார். பின்னர், அவர் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்: இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கைகொண்டுள்ளதையும், நான் என் கணவரைத் தவிர (அனைவரிடமும்) என் கற்பைப் பாதுகாத்திருக்கிறேன் என்பதையும் நீ அறிந்திருந்தால், ஓர் இறைமறுப்பாளனை என்மீது சாட்டிவிடாதே! இதன் பின்னர், அவன் (குரல்வளை நெரிக்கப்பட்டாற்போல்) மிக உயர்ந்த சப்தமிட்டான்; அவன் தன்னுடைய காலை உதைத்துக் கொண்டான்.




அபூஸினாத் (ரஹ்) கூறியுள்ளார்: இறைவா! அவன் இறந்துவிட்டால், `அவள் அவனைக் கொன்றுவிட்டாள் என்று சொல்லப்படும் என்று தம் இறைவனிடம் அவர் பிரார்த்தனை செய்தவுடன், அவன் விடப்பட்டான் என்று அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். அவன் அவரை நோக்கி எழுந்துவந்தான். அவர் (சார்ரா) உடற்சுத்தி செய்துவிட்டுத் தொழுக ஆரம்பித்தார். பின்னர், அவர் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்: இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கைகொண்டுள்ளதையும், நான் என் கணவரைத் தவிர (அனைவரிடமும்) என் கற்பைப் பாதுகாத்திருக்கிறேன் என்பதையும் நீ அறிந்திருந்தால், ஓர் இறைமறுப்பாளனை என்மீது சாட்டிவிடாதே! இதன் பின்னர், அவன் (குரல்வளைநெரிக்கப்பட்டாற்போல்) மிக உயர்ந்த சப்தமிட்டான்; அவன் தன்னுடைய காலை உதைத்துக்கொண்டான். அபூ ஸினாத் (ரஹ்) கூறுகிறார்: இறைவா! அவன் இறந்துவிட்டால், `அவள் அவனைக் கொன்றுவிட்டாள் என்று சொல்லப்படும் என்று தம் இறைவனிடம் அவர் பிரார்த்தனை செய்தவுடன், அவன் விடப்பட்டான் என்று அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். மூன்றாவது அல்லது நான்காவது தடவைதான் அந்த அரசன், நீங்கள் என்னிடம் ஒரு ஷைத்தானையே அனுப்பியுள்ளீர். அவரை இப்ராஹீமிடம் அனுப்பிவையுங்கள்; அவருக்கு ஹாஜிரை (பணிப்பெண்ணை)க் கொடுங்கள் என்று கூறினான்.




அவர் (தம் கணவர்) இப்ராஹீமிடம் திரும்பிச் சென்று, கூறினார்: திண்ணமாக அல்லாஹ் இறைமறுப்பாளனின் சூழ்ச்சியை முறியடித்துவிட்டான்; ஒரு பணிப்பெண்ணையும் (எனக்கு) அவன் வழங்கியிருக்கிறான் என்பதை நீர் உணர்வீரா? என்று கேட்டார்.*3




இப்னு அபூஹாத்திம் (ரஹ்) கூறியுள்ளார்: இப்ராஹீம் மூன்று வார்த்தைகளைக் கூறினார். அவற்றுள் ஒவ்வொன்றும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தைவிட்டு அப்பாற்பட்டதாக இல்லை. நான் நோயாளி என்று கூறினார். (இச்சிலைகளை யார் உடைத்தார்? என்று கேட்கப்பட்டபோது) மாறாக, அவற்றுள் பெரியதுதான் அதைச் செய்தது என்று கூறினார். அந்த அரசன் தம் மனைவி (சார்ரா)வை நாடிய போது, இவர் என் சகோதரி என்று கூறினார் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூசயீத் (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர்)


மேற்கண்ட நபிமொழியில், இவர் என் சகோதரி என்று கூறியதன் பொருள், அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் என் சகோதரி என்பதாகும். மேலும் அவர் தம் மனைவியிடம், திண்ணமாக இந்நிலத்தில் (தற்போது) உன்னையும் என்னையும் தவிர எந்த நம்பிக்கையாளரும் இல்லை என்று கூறினார். இதன் பொருள் என்னவெனில், உன்னையும் என்னையும் தவிர முஃமினான கணவன்-மனைவி யாரும் இல்லை என்பதாகும். ஏனென்றால், அவர்களுடன் லூத் இருந்தார். அவர் ஒரு நபி ஆவார். எனவே அந்தப் பொருள்தான் இங்கு மிகச் சரியானதாகும். சார்ரா (அலை) அவர்கள் தம் கணவர் இப்ராஹீம் நபியிடம் திரும்பி வந்தபோது, அவர் தம் மனைவியிடம், `மஹ்யம் என்று கேட்டார். அதாவது என்ன ஆனது? என்று பொருளாகும்.


அதற்கு அவர், திண்ணமாக அல்லாஹ் இறைமறுப்பாளனின் சூழ்ச்சியைத் திருப்பிவிட்டான் என்று பதிலளித்தார். மற்றோர் அறிவிப்பில், அந்த அரசனைப் பற்றிக் கூறியபோது, `பாவி என்றும், `பணிப்பெண்ணைக் கொடுத்தான் என்றும் வந்துள் ளன. தம் மனைவி சார்ராவை அரசனிடம் அனுப்பியபோது, இப்ராஹீம் நபி அல்லாஹ்வைத் தொழுக ஆரம்பித்துவிட்டார். தம் மனைவியைப் பாதுகாக்கக் கோரினார். தம் மனைவியைத் தீய நோக்கத்தோடு நாடிய அந்த அரசனின் தீங்கை அப்புறப்படுத்தும்படி வேண்டினார். அதேபோலவே அவரும் (சார்ரா) செய்தார்.


அல்லாஹ்வின் விரோதியான அந்த அரசன் தீய எண்ணத்தோடு அவரை அடைய முற்பட்டபோது, அவர் எழுந்துசென்று உடற்சுத்தி செய்து, தொழுகத் தொடங்கிவிட்டார். பின்னர் முன்சென்ற அந்த இனிய பிரார்த்தனையை அல்லாஹ் விடம் கேட்டார். அதனால்தான் அல்லாஹ் கூறுகின்றான்: தொழுகை மற்றும் பொறுமையின் மூலம் (அல்லாஹ்விடம்) உதவிதேடுங்கள். (2: 45) தன்னுடைய அடியார், தூதர், நண்பர் இப்ராஹீமின் மாசற்றதன்மைக்காக அவரை (சார்ரா) அல்லாஹ் பாதுகாத்தான்.


அறிஞர்கள் சிலர், சார்ரா, மூசாவின் தாய் மற்றும் மர்யம் ஆகிய மூன்று பேரும் நபிப்பட்டம் பெற்றவர்கள் என்று கூறுகின்றனர். ஆனால் பெரும்பான்மையோர், அவர்கள் மூவரும் வாய்மையாளர்கள் என்றும் அல்லாஹ் அவர்களைத் திருப்தி கொண்டான் என்றும் கூறியுள்ளனர்.
திண்ணமாக அல்லாஹ் இப்ராஹீம்-சார்ரா இருவருக்கிடையே இருந்த திரையை அகற்றினான். இப்ராஹீம் நபியிடமிருந்து சென்றதிலிருந்து அவரிடம் அவர் திரும்பி வருகின்றவரை, அவர் அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தார். ஆனால், அவர் அந்த அரசனிடம் (மாட்டிக்கொண்டு) இருந்தபோது, அவரை அவர் நேரடியாகக் கண்டார். அவனிடமிருந்து அவரை அல்லாஹ் எவ்வாறு காப்பாற்றுகிறான் என்று பார்த்தார். அது அவருடைய உள்ளத்திற்கு இதமாகவும் மிகுந்த மகிழ்ச்சியாகவும் மிக அமைதியாகவும் இருப்பதற்காக (அவர் நேரடியாகக் கண்டார்). ஏனென்றால், அவர் சார்ராவை மிகுந்த மார்க்கப்பற்றிற்காகவும் அவருடைய உறவினராக இருந்ததாலும் அவருடைய மிகுந்த அழகுக்காகவும் மிக அதிகமாக விரும்பினார். ஹவ்வாவிற்குப் பிறகு சார்ராவின் காலம் வரை அழகுமிக்கவர் அவரைத் தவிர யாருமில்லை எனக் கூறப்படுகிறது. மேற்கண்ட விசயத்தை, தாம் சில வரலாற்று நூற்களில் கண்டதாக இப்னு கஸீர் (ரஹ்) கூறியுள்ளார். (நூல்: கஸஸுல் அன்பியா லிஸ்ஸஆலபீ)


வரலாற்று ஆசிரியர்கள் சிலர், திண்ணமாக எகிப்து நாட்டின் ஃபிர்அவ்ன், மிகவும் பிரபலமான அநியாயக்கார அரசனான ளஹ்ஹாக் உடைய சகோதரனாக இருந்தான். எகிப்தில் அவனுடைய சகோதரனுக்குக்கீழ் நகராட்சித் தலைவனாக இருந்தான். அவனுடைய பெயர், சினான் பின் உல்வான் பின் உபைத் பின் ஊஜ் பின் இம்லாக் பின் லாவத் பின் சாம் பின் நூஹ் ஆகும்.
அத்தீஜான் எனும் தம்முடைய நூலில் இப்னு ஹிஷாம் கூறியுள்ளார்: சார்ராவை அடைய நாடியவன் அம்ர் பின் இம்ரவுல்கைஸ் பின் மாயிலபூன் பின் சபா ஆவான். அவன் எகிப்தில் இருந்தான். இதை சுஹைலீ (ரஹ்) அறிவித்துள்ளார். அல்லாஹ்வே நன்கறிந்தவன்.






----------------அடிக்குறிப்புகள்------------------------


*1 (அ.கு) இந்த அறிவிப்பாளர் வரிசையில் அவர் மட்டுமே தனியாக இதைப் பதிவுசெய்துள்ளார். இது `மவ்கூஃப் தரத்தில் உள்ளது.


*2 (அ.கு) இதை அல்ஹாஃபிழ் அபூபக்ர் அல்பஸ்ஸார் (ரஹ்) அறிவித்துள்ளார். பிறகு, அல்பஸ்ஸார் கூறுகிறார்: ஹிஷாம் என்பவர்தாம் முஹம்மத் மற்றும் அபூஹுரைரா (ரளி) அவர்களோடு இதை இணைத்துள்ளார். வேறு யாரும் அவ்வாறு இணைத்ததாக நான் அறியவில்லை. மற்றவர்கள் இதை நபித்தோழர்களோடு முடிவுறுகின்ற வகையில் (மவ்கூஃப் தரத்தில்) அறிவித்துள்ளனர்.




*3 (அ.கு) இம்முறையில் இந்த நபிமொழியை இமாம் அஹ்மத் (ரஹ்) மட்டுமே அறிவித்துள்ளார். ஆனால், இது சரியான நபிமொழியின் தரத்தில் அமைந்துள்ளது. இதே நபிமொழியை அபூஹுரைரா (ரளி) மூலம் புகாரீ (ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளார்.


அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.
  

சனி, 2 அக்டோபர், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 9)



உணவுப்பொருளைப் பெறச் செல்லுதல்


மஅமர் என்பவரிடமிருந்து அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அறிவித்துள்ளார்: நிச்சயமாக நும்ரூதிடம்தான் சேமிக்கப்பட்ட உணவுப்பொருள் இருந்தது. அந்த உணவுப் பொருளைப் பெறுவதற்காக மக்களெல்லாம் கூட்டம் கூட்டமாக அவனிடம் செல்வார்கள். யாரெல்லாம் உணவுப்பொருள் வாங்குவதற்காகச் சென்றார்களோ அவர்களோடு இப்ராஹீம் நபியும் சென்றார். அன்றுதான் மக்களெல்லாம் உணவுப்பொருளுக்காக அங்கு ஒன்றுகூடுவார்கள். அன்றுதான் அவ்விருவருக்கும் இடையே அந்த வாக்குவாதம் ஏற்பட்டது. அவன் மற்றவர்களுக்கு உணவுப்பொருள் வழங்கியதைப் போன்று இப்ராஹீம் நபிக்கு வழங்கவில்லை. எனவே, அவர் எந்த உணவுப்பொருளும் இன்றி திரும்பிவந்துவிட்டார்.


அவர் தம் வீட்டை நெருங்கியபோது, அங்கு ஒரு மண்குவியலைப் பார்த்தார். அவர் வைத்திருந்த இரண்டு பைகளையும் அம்மண்ணால் நிரப்பினார். நான் என் குடும்பத்தினரிடம் வந்தால், என்னைச் சூழ்ந்து கொள்வார்கள் என்று தமக்குத்தாமே கூறிக்கொண்டார். அவர் தம் வீட்டை அடைந்தபோது தம்முடைய பைகளை வைத்துவிட்டு, படுக்கையில் சாய்ந்து அசதியில் ஆழ்ந்துறங்கிவிட்டார்.


அவருடைய துணைவி சாரா அம்மையார் அவ்விரண்டு பைகளையும் கண்டார். அவ்விரண்டிலும் இனிய உணவுப் பொருள் நிறைந்திருந்ததைக் கண்டு, மகிழ்ச்சியுடன் அதனை எடுத்து, உணவு சமைக்கத் தொடங்கினார். அவர் தம் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தபோது, அவரின் குடும்பத்தினர் உணவை உண்டுகொண்டிருந்தார்கள். அதைக் கண்ட அவர், இது உங்களுக்கு ஏது? என்று வினவினார். நீர் கொண்டு வந்ததிலிருந்துதான் (செய்தோம்) என்று பதிலளித்தார். அப்படியானால், இது அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த உணவு என்பதை அறிந்துகொண்டார். (நூல்: தஃப்சீர் அப்துர் ரஸ்ஸாக் )


நிராகரித்த நும்ரூத்


ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) கூறியுள்ளார்: அந்த அகங்கார அரசனிடம் அல்லாஹ் ஒரு வானவரை அனுப்பி, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளும்படி அவனுக்கு அழைப்புவிடுக்கச் செய்தான். ஆனால், அவனோ அதை மறுத்துவிட்டான். இரண்டாம் தடவை, அவர் அவனை அழைத்தார். அப்போதும், அவன் மறுத்துவிட்டான். பின்னர், மூன்றாம் தடவை அவர் அவனை அழைத்தார். அப்போதும், அவன் மறுத்துவிட்டான். நீர் உம் படைகளைத் திரட்டுவீர்; நான் என் படைகளைத் திரட்டுகிறேன் என்று கூறினான். நும்ரூத் தன்னுடைய படைகளைச் சூரியன் உதிக்கின்ற நேரத்தில் திரட்டினான். எனவே அல்லாஹ், அவன் சூரியனையே பார்க்க முடியாதவாறு அதிகமான கொசுக்களை அனுப்பினான். அல்லாஹ் அவற்றை அவர்கள் மீது ஏவினான். அவை அவர்களின் உதிரங்களைக் குடித்து இறைச்சிகளைச் சாப்பிட்டன. அவர்களை வெறும் எலும்புக்கூடுகளாக விட்டுவிட்டன. அவற்றுள் ஒரு கொசு மட்டும் அந்த அரசனின் மூக்குத் துவாரத்தினுள் நுழைந்துகொண்டது. அது அவனுடைய மூக்குத் துவாரத்தினுள் 400 ஆண்டுகள் தங்கியிருந்தது. அதன் மூலம் அவனை அல்லாஹ் வேதனைப்படுத்தினான். அதன் காரணமாக, அவன் அத்தனை ஆண்டுகளும் தன்னுடைய தலையில் சுத்தியலால் அடித்துக்கொண்டிருந்தான். அதன் மூலம் அவனை அல்லாஹ் அழிக்கின்ற வரை இந்நிலை நீடித்தது. அல்லாஹ்வே நன்கறிபவன். (நூல்: தஃப்சீர் தப்ரீ)


சிரியா செல்லுதல்


* (இதன் பின்னரும்) லூத் (மட்டுமே) அவர் மீது நம்பிக்கை கொண்டார். (அவரிடம் இப்ராஹீம்,) திண்ணமாக நான் என் இறைவனை நாடி (இவ்வூரை விட்டுத்) துறந்து செல்கிறேன். நிச்சயமாக அவன் (யாவற்றையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன் என்று கூறினார். மேலும், அவருக்கு இஹாக்கையும் யஅகூபையும் அளித்தோம். இன்னும் அவருடைய சந்ததியில், நபித்துவத்தையும் வேதத்தையும் ஏற்படுத்தினோம். அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம். மறுமையில் அவர் நல்லவர்களுள் ஒருவராவார். (29: 26-27)


* நாம் அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் அகிலத்தாருக்கெல்லாம் நாம் பாக்கியத்தை நல்கிய பூமியின் (பைத்துல் முகத்த)பால் (வரச் செய்து) ஈடேற்றம் பெறச் செய்தோம். இன்னும் நாம் அவருக்கு இஹாக்கையும் மேலதிகமாக யஅகூபையும் அளித்தோம். அவர்கள் ஒவ்வொரு வரையும் நல்லோராக ஆக்கினோம். இன்னும், நம் கட்டளையால் (மக்களுக்கு) நல்வழிகாட்டும் தலைவர்களாக நாம் அவர்களை ஆக்கினோம். மேலும், நன்மையான செயல்களைப் புரியுமாறும், ஸகாத்தைக் கொடுத்து வருமாறும் நாம் அவர்களுக்கு வேத அறிவிப்புச் செய்தோம். அவர்கள் நம்மையே வழிபடுபவர்களாக இருந்தனர். (21: 71-73)


இப்ராஹீம் நபியின் சந்ததிகள்


இப்ராஹீம் (அலை) அவர்கள், அல்லாஹ்வுக்காக தம்முடைய சமுதாயத்தாரைவிட்டுப் புறப்பட்டார். அவர்களுக்கு முன்னிலையில் அவர் நாடு துறந்து சென்றார். அவருடைய துணைவி குழந்தையே பெற்றெடுக்காதவராக இருந்தார். எனவே, இப்ராஹீம் நபிக்கு எந்தக் குழந்தையும் இல்லை. அவருடன் அவருடைய சகோதரர் லூத் பின் ஹாரான் பின் ஆஸர் இருந்தார். அதன் பிறகு அல்லாஹ் இப்ராஹீம் நபிக்கு நற்குழந்தைகளைக் கொடுத்தான். அவருடைய சந்ததிகளில் நபித்துவத்தையும் வேதத்தையும் வழங்கினான். அவருக்குப் பிறகு வந்த ஒவ்வொரு நபியும் அவருடைய வமிசத்தைச் சார்ந்தவர்களே ஆவர். அவருக்குப்பின் வழங்கப்பட்ட வேதங்கள் யாவும் அவருடைய வமிசத்தைச் சார்ந்த நபிமார்களுக்கே வழங்கப்பட்டன. ஏனென்றால், அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குவதற் காகவும் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பதற்காகவும் அவர்தம் குடும்பத்தையும் உறவினர்களையும் சொந்த நாட்டையும் தியாகம் செய்ததை அல்லாஹ் கண்ணியப்படுத்தி அவருக்கு வெகுமதியளிக்கவே இவ்வாறு செய்தான்.


எந்த நாடு?


இப்ராஹீம் நபி எந்நாட்டை நோக்கிப் புலம்பெயர்ந்து சென்றார் என்பதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. அவர் சென்ற நாடு சிரியாதான். அது பற்றித்தான் அல்லாஹ் கூறுகின்றான்: அகிலத்தாருக்கெல்லாம் நாம் பாக்கியத்தை நல்கிய பூமியின் (பைத்துல் முகத்தஸ்)பால் (வரச் செய்து) ஈடேற்றம் பெறச்செய்தோம். (21: 71) இக்கருத்தை உபை பின் கஅப் (ரளி), அபுல்ஆலியா மற்றும் கத்தாதா (ரஹ்-அலைஹிம்) கூறியுள்ளனர். இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களிடமிருந்து அல்அவ்ஃபீ (ரஹ்) அறிவித்துள்ளார்: அகிலத்தாருக்கெல்லாம் நாம் பாக்கியத்தை நல்கிய பூமியின் (பைத்துல் முகத்த)பால் (வரச் செய்து)... என்ற வசனத்தில் அந்த பூமி `மக்காதான் என்று கூறிவிட்டு, அதற்கான ஆதாரமாக, மற்றொரு வசனத்தை ஓதிக்காட்டுகிறார்: (அல்லாஹ்வை வழிபடுவதற்கென) மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் திண்ணமாக `பக்கா (எனும் மக்கா)வில் உள்ளதுதான். அது பாக்கியம் மிக்கதாகவும் உலக மக்கள் யாவருக்கும் நல்வழியாகவும் இருக்கிறது(3: 96) என்ற வசனத்தை நீங்கள் பார்க்கவில்லையா? என்று கேட்கிறார். கஅபுல் அஹ்பார் (ரளி) அவர்கள், அது ஹர்ரான் என்னும் ஊராகும் என்று கருதுகிறார்.


வேதக்காரர்களின் கூற்றினை நாம் ஏற்கெனவே கூறியுள்ளோம். அதாவது இப்ராஹீம் நபி பாபில் நகரத்திலிருந்து புறப்பட்டார். அவருடன் அவருடைய சகோதரரின் மகன் லூத், அவருடைய சகோதரர் நாஹூர், இப்ராஹீம் நபியின் மனைவி சார்ரா மற்றும் அவருடைய சகோதரர் நாஹூரின் மனைவி மல்கா ஆகியோர் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஹர்ரான் எனும் இடத்தில் தங்கினர். அவ்விடத்தில் இப்ராஹீம் நபியின் தந்தை தாரிஃக் இறந்துவிட்டார்.


சுத்தீ (ரஹ்) கூறியுள்ளார்: இப்ராஹீம் நபியும் லூத் நபியும் சிரியாவை நோக்கிப் புறப்பட்டனர். அவர் அங்கு சார்ராவைச் சந்தித்தார். அவர் ஹர்ரான் நாட்டு அரசனின் மகள் ஆவார். அவர் தம்முடைய சமுதாய மக்களின் மார்க்கத்தைப் பற்றிக் குறைகூறினார். எனவே, இப்ராஹீம் நபி அதை எந்த மாற்றமும் செய்யமாட்டேன் என்று கூறி அவரை மணந்துகொண்டார். இதை இப்னு ஜரீர் (ரஹ்) அறிவித்துள்ளார். மிகவும் பிரபலமான கருத்து என்னவெனில், சார்ரா என்பவர், இப்ராஹீம் நபியின் பெரிய தந்தை ஹாரான் என்பவரின் மகளாவார் என்பதுதான். அவர் பக்கம்தான் ஹர்ரான் என்பது இணைக்கப்படுகிறது. திண்ணமாக சார்ரா என்பவர் இப்ராஹீம் நபியின் சகோதரர் ஹாரான் உடைய மகளும் லூத் நபியின் சகோதரியும் ஆவார் என்று எவர் கருதுகின்றாரோ, அவர் உண்மையைவிட்டு வெகுதொலைவில் உள்ளார்; அறியாமல் சொல்லிவிட்டார் . இதை சுஹைலீ (ரஹ்), குதைபீ மற்றும் நக்காஷ் ஆகியோரிடமிருந்து அறிவித்துள்ளார். 


தன்னுடைய சகோதரரின் மகளைத் திருமணம் செய்வது அந்தக் காலத்தில் ஆகுமாக்கப்பட்டிருந்தது என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. ஒருவேளை யூதப் பாதிரியார்கள் சிலர் கூறுவதைப்போல், அந்தச் சட்டம் அக்காலத்தில் நடைமுறையில் இருந்தது என்று வைத்துக் கொண்டாலும் நபிமார்கள் அதைப் பயன்படுத்த மாட்டார்கள். அல்லாஹ்வே நன்கறிபவன். பிறகு, மிகவும் பிரபலமான மற்றொரு கருத்து, இப்ராஹீம் நபி பாபில் நகரத்தைத் துறந்து சென்றபோது, தம்மோடு சார்ராவையும் அழைத்துச் சென்றார் என்பதாகும். இது ஏற்கெனவே கூறப்பட்டுவிட்டது. அல்லாஹ்வே நன்கறிபவன்.


இப்ராஹீம் நபி சிரியாவை வந்தடைந்தபோது அல்லாஹ் அவருக்கு வேத அறிவிப்புச் செய்தான். அதாவது நான் இந்நிலத்தை உமக்குப் பின்னால் வருகின்றவர்களுக்காக ஆக்கப்போகிறேன் என்று கூறினான். எனவே, இப்ராஹீம் (அலை) அவர்கள், அல்லாஹ்வின் இந்த அருட்கொடைக்கு நன்றிசெலுத்தும் விதமாக, அவனுக்காக ஓர் அறுக்குமிடத்தை உருவாக்கினார். அதன் குப்பாவை பைத்துல் மக்திஸின் கிழக்கு நோக்கி அமைத்தார். பிறகு, அவர் யமன் நாட்டை நோக்கி நடந்தார். அப்போது அந்நாடு மிகவும் வறட்சியாகக் காணப்பட்டது. எனவே, அவர்கள் எகிப்து நாட்டை நோக்கிப் பயணம் செய்தனர்.


எகிப்து நாட்டு அரசனுடன் சார்ரா அம்மையாருக்கு நிகழ்ந்த நிகழ்ச்சி கூறப்படுகிறது. இப்ராஹீம் நபி சார்ரா அம்மையாரிடம், நான் இவருடைய சகோதரி என்று கூறிவிடு என்று சொல்லிக்கொடுத்தார். பின்னர், அந்த அரசன் சார்ரா அம்மை யாருக்குப் பணிவிடை செய்யத் தன்னுடைய அடிமைப்பெண் ஹாஜிர் (அலை) அவர்களை அனுப்பிவைத்தான் என்பது பற்றிக் கூறியுள்ளனர். பிறகு, அவர்களை அங்கிருந்து வெளியேற்றினான். எனவே அவர்கள் அருள்நிறைந்த நாட்டை நோக்கிச் சென்றனர். அதாவது பைத்துல் மக்திஸ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தங்கினர். அவருடன் கால்நடைகள், பணியாளர்கள் மற்றும் பொருட்கள் இருந்தன.




அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.