சனி, 21 ஜூன், 2025

பசுமைப் புரட்சி செய்வோம்!

 பசுமைப் புரட்சி செய்வோம்!     

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

ஆண்டுக்கு ஆண்டு வெப்பத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட பல்வேறு பெருநகரங்களில் வெப்ப அளவு 100 டிகிரிக்கு மேல் உள்ளது. வரும் காலங்களில் இதைவிட அதிகரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. அதைத் தணிப்பதற்கான வழிமுறையைச் சுற்றுச்சூழல் அறிஞர்கள் மக்களுக்குச் சொல்லிக்கொண்டேதான் இருக்கின்றார்கள். ஆனால் அதைப் பொதுமக்கள் இன்னும் ஆர்வத்தோடு செயல்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதுதான் மரம் வளர்த்தல் ஆகும். இருப்பினும் சொந்த வீடு உள்ளவர்கள் மட்டுமே மரம் வளர்க்க முடியும். மற்றவர்களுக்கு அத்தகைய வாய்ப்பு இல்லை. எனவே அரசுதான் மிகுதியான மரங்களை மக்கள் நடமாடும் இடங்களிலும் ஏனைய இடங்களிலும் வளர்க்க முனைப்போடு செயல்பட வேண்டும். ஆனால் இன்று நகர விரிவாக்கம், சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பல்வேறு மரங்கள் மிக எளிதாக அகற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றனவே தவிர மரங்கள் அவ்வளவாக நடப்படவில்லை என்றே சொல்லலாம்.

 

சில இடங்களில் மட்டும் அகற்றப்படும் அம்மரங்கள் வேறு இடங்களில் நடப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன.  மற்ற இடங்களில் அவ்வாறு முனைப்புக் காட்டப்படுவதில்லை. மரங்கள் வளர்ப்பதால் பற்பல நன்மைகள் உள்ளன. சுற்றுச்சூழல் சார்ந்த நன்மைகள், சமூகம் சார்ந்த நன்மைகள், ஆக்கிரமிப்பில்லா வாழ்க்கைமுறை எனப் பற்பல நன்மைகள் உள்ளன.

 

சுற்றுச்சூழல் நன்மைகள்: மரங்கள் உயிரினங்களுக்குத் தேவைப்படும் உயிர்வளியை (ஆக்சிஜன்) வழங்குகின்றன. கார்பன் டை ஆக்ஸைடு, சல்பர் டயாக்ஸைடு போன்ற வாயுக்களை உறிஞ்சிக்கொள்வதோடு தூசுக்களையும் நீக்கித் தூய்மையான காற்றை வழங்குகின்றன. வெப்ப நிலையைச் சமநிலைப்படுத்தும் பணியில் மரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மழைநீரைக் குடிநீராக மாற்றும் நிலநீரின் அளவை அவை உயர்த்துகின்றன. வேர்கள் மண்ணை உறுதியாகப் பிடித்துக்கொள்வதால் மண் அரிப்பு ஏற்பட்டு, நிலச்சரிவு ஏற்படுவது தடுக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவுக்குக் காரணம், மலைப்பகுதியில் இருந்த மரங்களைப் பெருமளவில் வெட்டிவிட்டு, கட்டடங்கள் கட்டப்பட்டதே ஆகும் என்று சூழலியல் அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

 

சமூக நன்மைகள்: மரங்கள் இயற்கை அழகை அதிகரிக்கின்றன; மைதானங்கள், வீதிகள், வீடுகள் எல்லாம் அழகாகத் தோற்றமளிக்கின்றன. நிழலினால் வெப்பம் குறையும்; இதனால் திறந்த இடங்களில்கூட வசதியாக இருக்க முடியும். இயற்கைச் சூழலில் மரங்களைச் சுற்றியிருப்பது மனஅழுத்தத்தைக் குறைத்து மனநலத்தை மேம்படுத்துகிறது. பறவைகள், விலங்குகள், பூச்சிகள் மற்றும் பிற உயிரினங்களுக்கு மரங்கள் வாழிடமாக விளங்குகின்றன. மரம் வளர்ப்பு, பழ மர விவசாயம், மர அடிப்படையிலான தொழில்கள் போன்றவை வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன. பழ மரங்கள், மர உலோகம், மூலிகை மரங்கள் போன்றவை வருமானத்தை அதிகரிக்க உதவுகின்றன. மரம் கட்டடப் பொருட்களாகவும் பயன்படுவதால் பொருளாதார நன்மைகளும் இதில் உள்ளன. 

 

கலாமின் கனவை நிறைவேற்றியவர்: திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் எண்ணற்ற தனி மனிதர்கள், தன்னார்வ அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகளோடு இணைந்து மரம் நடும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். தமிழ்நாட்டில் இவர் இப்படி வளர்த்த மரங்களின் எண்ணிக்கை 30 இலட்சம் இருக்கும். ‘கிரீன் கலாம்’ என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தமிழகமெங்கும் மரம் வளர்ப்பை முன்னெடுத்து வந்தார். மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமோடு மிகுந்த நட்போடு இருந்தவர். ஒரு தடவை அவரைச் சந்தித்தபோது “ஒரு கோடி மரம் நடுங்கள் விவேக்” என்று அவர் கூறியதை மதித்து, அவரது அறிவுரையை ஏற்று அதன்படி செயல்பட்டவர்தாம் நடிகர் விவேக். கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரங்கள் வளர்க்க வேண்டும் என்ற வேட்கையோடு தொடர்ந்து இயங்கி வந்தார்.

 

அதேபோன்று உலக வன நாள், சுற்றுச்சூழல் நாள் என எந்தச் சிறப்பு நாள் வந்தாலும் அன்று மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தும் விதமாக ஏதாவது ஒன்றைச் செய்துவந்தார். ``நாட்டில் தண்ணீர் வேண்டுமென்றால் மழை வேண்டும்; மழை வேண்டுமென்றால் மரங்கள் இருக்க வேண்டும். நாட்டில், விவசாயம் செய்வதற்கான மண் வளம், மனிதர்களுக்குத் தேவையான தூய்மையான உயிர்வளி ஆகியவை குறைந்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் என்னிடம் கூறினார்” என்று நடிகர் விவேக் 2011இல் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதன்முதலில் தொடங்கியபோது பேட்டியளித்தார்.

 

சென்னையில் 10,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கினார். கோவையில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, சேலத்தில் 25,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கினார். பின்னர் பல்வேறு முக்கிய நகரங்களிலும் அப்பணியைத் தொடர்ந்தார். 

ஒவ்வொருவரும் வீட்டிலும் 2 மரக்கன்றுகளை நடவேண்டும். இந்த விஷயம் மக்கள் மனதில் பதிய வேண்டும். இவ்வாறு மரக்கன்றுகள் நட்டால் காற்றிலுள்ள நச்சுத்தன்மை குறையும். எனவே, தமிழகத்திலிருந்து மரங்களின் பசுமைப் புரட்சி தொடங்க வேண்டும்” என்று பேசிவந்தார். ஆனால் அவர் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். அப்பணிக்கு மூலவேராக இருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் நம்மைவிட்டு மறைந்துவிட்டார். இருப்பினும் அவர்கள் கூறிய நல்லுரை நம்மைத் தூண்டிக்கொண்டே இருக்கிறது.

 

சாலையோர மரங்கள்: கடந்த காலங்களில் சாலையின் இருபுறங்களிலும் புளிய மரங்களும் வேப்ப மரங்களும் இருந்தன. நடந்து செல்வோர் அந்த மரங்களின் நிழலிலேயே செல்வர். தாகமாக உள்ளோர் அந்தப் புளிய மரங்களின் காய்களை, செங்காய்களை, பழங்களைப் பறித்து உண்பர். ஆனால் தற்காலச் சாலைகளின் இருபுறங்களும் வெறுச்சோடிக் கிடக்கின்றன. ஒருக்கால் மரங்கள் இருந்தாலும் பயனற்ற மரங்கள் மட்டுமே உள்ளன. அவற்றிலிருந்து காய்களையோ கனிகளையோ பறித்து உண்ண இயலாது. எனவே மரங்கள் நடவேண்டும். ஆனால் மக்கள் பயனுறும் மரங்களை நடவேண்டும்.

 

முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ, ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: புகாரீ: 2320)

 

பயனுள்ள மரம் வளர்த்தல்: முஸ்லிம் ஒருவர் பயனுள்ள ஒரு மரத்தை நட்டு, அதைப் பராமரித்து வளர்த்து வந்தார். அதில் காய்கள் காய்த்து, கனியத் தொடங்கின. அதிலிருந்து பறவைகள், கால்நடைகள் உண்டன. கீழே விழுந்தவற்றைச் சிறுவர் சிறுமியர் எடுத்து உண்டனர். அக்கம் பக்கம் வசிப்போர் அதிலிருந்து பறித்துச் சென்றனர். இவை அனைத்தும் அவருக்கு நன்மையாக மாறிவிடும். அதிலிருந்து அவருக்குத் தெரியாமல் யாரும் பறித்துச் சென்றால் அது குறித்து அவர் கவலைப்படத் தேவையில்லை. அவை அனைத்தும் அவருக்கு நன்மைகளாகக் கிடைத்துவிடும். இதுதான் இஸ்லாமியப் பார்வை. ஆக மற்றவர்கள் மரங்களை நட வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பயனுள்ள மரங்களை நடவேண்டுமெனக் கூறுகின்றார்கள்.

 

அன்னையின் பெயரில் ஒரு மரம்: உலகச் சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு, அதன் தொடர்ச்சியாக, நிலமெங்கும் பசுமையை ஏற்படுத்துமுகமாக ‘அன்னையின் பெயரில் ஒரு மரம்’ எனும் பிரச்சார இயக்கத்தைத் தமிழக ஆளுநர் ஆர்.என். இரவி முன்னெடுத்துள்ளார். அப்பிரச்சார இயக்கத்தைத் தொடங்கிவைத்து 27 மரங்களை நட்டுள்ளார். இது வரவேற்கத்தக்க ஒரு முயற்சி என்றே நாம் கூறலாம். அதாவது ஒவ்வொருவருக்கும் அன்னை உண்டு. அந்த அன்னையின் மீதுள்ள அன்பின் அடையாளமாக ஒவ்வொருவரும் ஒரு மரம் நட்டால் தமிழ்நாடு பசுமை நாடாக மாறிவிடும் அல்லவா? நாம் ஏன் அதைச் செய்ய முயலக் கூடாது?

 

நிரந்தர நன்மை: ஒரு முஸ்லிம் தம் பெற்றோர் இறந்துவிட்டால், அவர்களுக்கு நன்மையைச் சேர்த்துவைக்க வேண்டும் என்று எண்ணுவார். அவர் தம் பெற்றோருக்காக அன்னதானம் செய்வார்; ஆடை தானம் செய்வார்; தர்மம் செய்வார். மிக அரிதாகச் சிலர் தம் பெற்றோருக்காக ஒரு கிணற்றைத் தோண்டி, அதன் நீரை எல்லோரும் எடுத்துப் பயன்படுத்த பொதுஅனுமதி வழங்கிடுவர். அதனால் அதிலிருந்து பயன்பெறக்கூடியோரின் நன்மைகள் அவர்களின் பெற்றோருக்குப் போய்ச் சேரும். இந்த வரிசையில் ஒருவர் தம் அன்னைக்காக ஒரு மாமரத்தையோ அதுபோன்ற பயனுள்ள கனிகளைத் தரும் வேறு மரத்தையோ நட்டு, அது பெரிதாக வளரும் வரை பராமரித்து, அதன்பின் அதன் பயனைப் பொதுமக்கள் அனுபவித்துக்கொள்ள பொதுஅனுமதி வழங்கிவிட்டால், அதிலிருந்து யாரெல்லாம் பயன்பெறுகின்றார்களோ அதன் நன்மைகள் யாவும் அவருடைய அன்னைக்கு நன்மையாகச் சென்றடையும். இது அவர் தம் தாய்க்குச் செய்யும் ஒரு நிரந்தர நன்மையாகும்.

 

போத்து நடவு முறை: ‘மரம் நடுவிழா என்று சொல்லிவிட்டுச் செடியை நடுகின்றார்களே’ என்று கேலி செய்து சிலர் சிரிப்பதுண்டு. செடியை நட்டால் அது பெரிய மரமாகும்; அது எதிர்காலத்தில் ஆகும் நிலையை முன்னரே சொல்வதுதானே உலக வழக்கு? இன்றைய செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் அனைத்தையுமே துரிதமாகப் பெற வேண்டும் என்று துடிக்கும் இளைஞர் இளைஞிகளே அதிகம். எனவே அவர்களின் எண்ண ஓட்டத்திற்கேற்பவே மரம் நடுதலில் ஒரு புதிய முறையும் பரவலாக்கப்பட்டுள்ளது. செடிகளை நடுவதற்குப் பதிலாக நல்ல வாட்டமான மரக்கிளைகளை ஏழு அடி உயரத்திற்குக் குறையாமல் வெட்டி பச்சை காய்ந்து விடாமல் பாதுகாப்பாக நட்டுவைத்தால் அது மிக விரைவாகத் துளிர்த்து, வளர்ந்து காய் காய்க்கத் தொடங்கிவிடும். மிக விரைவிலேயே அதன் பயன்களை நாம் அனுபவிக்கலாம். இவ்வாறு செய்வதால் மிகக் குறுகிய காலத்திலேயே மிகப்பெரும் சோலையை உண்டுபண்ணிவிடலாம். இந்த எளிய முறைக்கு ‘போத்து நடவு முறை’ என்று பெயர். இம்முறை குறிப்பிட்ட சில வகை மரங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

 

நிழலின் அருமை: பொதுவாக மரம் வளர்த்தலின் பயன் அதன் காய், கனிகள் என்பதைத் தாண்டி, அதன் நிழல் என்பதும் மிக முக்கியமானதாகும். ‘நிழலின் அருமை ª வயிலில் தெரியும்’ என்பார்கள். உச்சி வெயிலில் நடந்து வருகின்ற எத்தனையோ பேர் மரநிழலைக் கண்டதும் அங்குச் சற்றுநேரம் நின்று ஓய்வெடுத்துச் செல்வது இயல்பு. அவ்வாறு ஓய்வெடுக்கும் சிலர் அங்கு மரம் வைத்தவரை மனதார வாழ்த்துவார்கள். அந்த வாழ்த்தைப் பெறுவதற்காகவேனும் நாம் மரங்களை ஆங்காங்கே வளர்க்க வேண்டும். மேலும் நிழல் தரும் மரங்களுக்குக் கீழே நாம் ஒருபோதும் அசுத்தம் செய்துவிடக்கூடாது. ஏனெனில் அது மக்கள் ஓய்வெடுக்கும் இடமாகும். இது குறித்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “நீர்த் துறைகள், நடைபாதைகள், நிழல் (தரும் மரங்கள்-இடங்கள்) ஆகிய மூவிடங்களில் (மலஜலம் கழிப்பதால் மக்களின்) சாபத்திற்கு ஆளாகாமல் நீங்கள் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். (நூல்: அபூதாவூத்: 24)

 

ஆக மரங்கள் வளர்ப்பது ஒரு நிலையான அறச்செயல் (ஸதக்கத்துன் ஜாரியா) என்பதை உணர்வோம். அதன்மூலம் மக்களின் அன்பையும் வாழ்த்தையும் (துஆ) பெறுவோம். நாம் ஒவ்வொருவரும் செய்யும் பசுமைப் புரட்சியே புவிவெப்பமயமாதலைத் தடுக்கும் எதிர்காலக் கேடயம் என்பதை மக்களுக்கு உணர்த்துவோம்.

===============







புதன், 4 ஜூன், 2025

இருப்பதைப் பகிர்ந்துகொள்வோம்

 

      

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28   

 

ஒருவர் தம்மிடமுள்ளதைப் பிறருக்கு மனமுவந்து வழங்குவதே பகிர்தல் ஆகும். உணவு, நீர், கல்வி, செல்வம், மகிழ்ச்சி என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எல்லோருக்கும் இன்றியமையாதது உணவே ஆகும். அந்த








உணவைப் பகிர்ந்துகொள்வதே மிக முக்கியமானதாகும். இன்று பல நாடுகளில் ஏழ்மை பரவியிருக்கிறது;  இரவு உணவின்றிப் பலர் தூங்கச் செல்கின்றார்கள் என்றால் உணவுப் பகிர்தலைக் கைவிட்டதே உரிய காரணியாகும்.

 

இன்று பசுமைப் புரட்சி ஏற்பட்டுள்ளதால், நவீன உத்திகளைக் கையாண்டு நல்லவிதமாக உணவு தானியங்களை உற்பத்தி செய்கின்றார்கள். மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களைத் தாராளமாக விளைவிக்கின்றார்கள். தேவையுடையோர் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. அப்படியிருந்தும் பல கோடிப்பேர் இரவு உணவு உண்ணாமல் உறங்கச் செல்கின்றார்கள் என்றால் சமஅளவில் பகிர்தல் இல்லை என்பதே அடிப்படைக் காரணமாகும்.

 

உணவைப் பகிர்ந்துகொள்ளல்: இது குறித்து இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ள செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது: “ஒரு மனிதருடைய உணவு இருவருக்குப் போதுமாகும். இருவரின் உணவு நால்வருக்குப் போதுமாகும். நால்வரின் உணவு எண்மருக்குப் போதுமாகும்.” (முஸ்லிம்: 4184) அதாவது தமக்கான உணவை மட்டுமே வைத்துள்ள ஒருவர் தம்மோடு உணவில்லாத ஒருவரைச் சேர்த்துக்கொண்டு, அவரோடு அவ்வுணவைப் பகிர்ந்துண்ண வேண்டும். தமக்கான உணவை வைத்துள்ள இருவர் தம்மோடு மற்ற இருவரை இணைத்துக்கொண்டு அவ்வுணவை அவர்களோடு பகிர்ந்துண்ண வேண்டும். தமக்கான உணவை வைத்துள்ள நால்வர் தம்மோடு மற்ற நால்வரை இணைத்துக்கொண்டு அவ்வுணவை அவர்களோடு பகிர்ந்துண்ண வேண்டும்  என்பதே இந்நபிமொழி நமக்கு உணர்த்தும் பாடமாகும். அவ்வாறே எத்தனை பேருக்கான உணவு இருக்கிறதோ அத்தனை பேரைக் கூடுதலாக இணைத்துக்கொண்டு அவர்களோடு அவ்வுணவைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

 

இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழியைத் தலைமேல் தாங்கிய முஸ்லிம்கள் உலகெங்கும் தம்மால் இயன்ற வரை உணவைப் பகிர்ந்துகொண்டு இருப்பதால்தான் ஓரளவுக்கு மக்கள் பசியிலிருந்து காக்கப்படுகின்றார்கள். ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் பலர் உணவுக்காகப் போராடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். எனவே அத்தேவையைத் தம்மால் இயன்ற அளவிற்கு முஸ்லிம்கள் பகிர்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். அது மட்டுமின்றி, அவர்கள் இயற்கைச் சீற்றங்களின்போது சாதி, சமய வேறுபாடின்றிப் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் உணவு சமைத்துப் பரிமாறிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.  

 

இதே கருத்தைப் பொய்யாமொழிப் புலவர் இவ்வாறு வலியுறுத்திக் கூறுகிறார்:

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. (குறள்: 322) நற்கருத்துகளைத் தாங்கி நிற்கும் பல்வேறு அறநூல்கள் உள்ளன. அவற்றையெல்லாம்விடத் தம்மிடமுள்ள உணவைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதுதான் சிறந்தது; தலையாயது என்கிறார்.

 

நான் என் குடும்பத்தாருடன் வெளியே புறப்பட்டுச் செல்லும்போது வழியில் எங்கேனும் ஏதேனும் சாப்பிட முனைந்தால் இரண்டு வாங்கி நாங்கள் நால்வர் பகிர்ந்துகொள்வோம். இதை ஒரு வழக்கமாகவே நான் வைத்துள்ளேன். அதாவது இரண்டு இளநீர் வாங்கி, ஒன்றை நான் அருந்திவிட்டு அதில் பாதியை என் மனைவிக்குக் கொடுப்பேன். மற்றொன்றை என் மூத்த மகனிடம் கொடுத்து அருந்தச் சொல்லிவிட்டு அதில் பாதியை இளையவனுக்குக் கொடுக்கச் சொல்வேன். வெளிப்படையாகக் காணும்போது இது கஞ்சத்தனமாகத் தெரியலாம். ஆனால் நம் உணவை நமக்குள் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நற்பழக்கத்தை ஊட்டவே இவ்வாறு செய்கிறேன். வீட்டில் சாப்பிடும்போதும் இவ்வாறு நாம் செய்யலாம். இது பாலர் பருவத்திலேயே நம் பிள்ளைகள் மத்தியில் பகிர்ந்துண்ணும் பழக்கத்தை விதைத்துவிடும்.

 

இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போதித்துள்ள எண்ணற்ற அறநெறிகளில் உணவுப் பொருளைப் பகிர்ந்துகொள்ளப் பல்வேறு வழிகாட்டல்கள் உள்ளன. நோன்பு நோற்றுள்ள ஒருவருக்கு நோன்பு துறப்பதற்கான உணவுப் பொருளை வழங்குபவருக்கு நோன்பு நோற்றவருக்குக் கிடைக்கும் நன்மையைப் போன்று கிடைக்கும் என்ற போதனை; ‘பசித்தோருக்கு உணவூட்டுங்கள்’ என்ற போதனை; தியாகத் திருநாளில் ஆட்டையோ மாட்டையோ அறுத்தால் அதன் இறைச்சியை மூன்று பங்குகளாகப் பிரித்து ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் வழங்குங்கள் என்ற போதனை; திருமணம் முடித்து, தம்பதிகளுக்கு ஓரிரவு கழிந்தபின் வலீமா எனும் மணவிழா விருந்து வழங்குங்கள் என்ற போதனை; குழந்தை பிறந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்விதமாக அகீகா-ஓர் ஆடு அல்லது ஈராடு அறுத்து அதன் இறைச்சியை மூன்று பங்குகளாகப் பிரித்து ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் வழங்குங்கள் என்ற போதனை- இவை அனைத்தும் உணவுப் பொருளைத் தமக்கிடையே பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன.

 

நீரைப் பகிர்ந்துகொள்ளல்: உணவும் தண்ணீரும் ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைத் தேவையாகும். தம்முடைய தேவைக்குப் போக எஞ்சியதைப் பிறருக்கு வழங்குவது நற்பண்பாகும்; அது ஓர் அறமாகும். இன்று குடிநீர் இன்றித் தவிப்போர் பலர் உள்ளனர். பலருக்குத் தூய குடிநீர் கிடைப்பதில்லை. மனிதனின் அடிப்படைத் தேவையான குடிநீர் விலைக்கு விற்கப்படுகிற நிலை உருவானதிலிருந்து மக்களுக்கு இயல்பாகக் கிடைக்க வேண்டிய குடிநீர் பணத்தைக் கொடுத்துப் பெற வேண்டிய நிலைக்கு மாறிவிட்டது. அதனால் பல நாடுகளில் குடிநீர் என்பது வியாபாரப் பொருளாகிவிட்டது. எனவே அது இயல்பாக எல்லோருக்கும் கிடைப்பதில்லை. பணம் உள்ளோர் நல்ல குடிநீரைப் பெற்றுக்கொள்கின்றனர். மற்றோர் தூய்மையற்ற குடிநீரையே பருகிவருகின்றனர்.

 

குடிநீரைப் பகிர்ந்துகொள்வது குறித்து இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வலியுறுத்திக் கூறியுள்ளது நினைவுகூரத்தக்கது. “தண்ணீர் கிடைக்கின்றபோது, யார் ஒரு முஸ்லிமுக்கு ஒரு மிடர் தண்ணீர் கொடுத்தாரோ, அவர் ஓர் அடிமையை விடுதலை செய்தவரைப் போன்றவராவார். தண்ணீர் கிடைக்காதபோது, யார் ஒரு முஸ்லிமுக்கு ஒரு மிடர் தண்ணீர் கொடுத்தாரோ அவர் அவரை உயிர்ப்பித்தவரைப் போன்றவராவார்” (இப்னுமாஜா: 2465) என்று கூறித் தண்ணீரைத் தர்மம் செய்யத் தூண்டியுள்ளார்கள். தண்ணீர், நெருப்பு, உப்பு ஆகியவை எல்லோருக்கும் பொதுவானவை எனக் கூறி இவற்றைப் பொதுவுடைமையாக்கி யுள்ளார்கள். குடிநீரை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள வழிகாட்டியுள்ளார்கள்.

 

கல்வியைப் பகிர்ந்துகொள்ளல்: கல்லாத மக்கள் மத்தியில் கற்றோர் சிலருண்டு. அச்சிலரே மற்றோருக்குக் கல்வியைப் போதித்து, எல்லோரையும் கல்வியாளர்களாகவும் கற்றோராகவும் உருவாக்க வேண்டும். ஒருவருக்கு வழங்கப்பட்ட கல்வி அவருக்கு மட்டுமே சொந்தமானது கிடையாது. கல்வி என்பது பொதுவுடைமை ஆகும். அது எல்லோருக்குமானது. எனவே கற்றோர் பிறருக்குக் கற்பிப்பது கடமையாகும்; அது ஓர் அறச் செயலாகும்.

 

உங்களுள் சிறந்தவர் குர்ஆனைக் கற்று, அதைப் பிறருக்குக் கற்பிப்பவரே ஆவார்” (புகாரீ: 5014) எனும் இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனை, கல்வியை மக்கள் மத்தியில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை நிலைநாட்டுகிறது.

 

எந்த மனிதரிடம் கல்வியைப் பற்றி வினவப்பட்டு, அதை அவர் மறைத்துவிடுகின்றாரோ அவருக்கு மறுமைநாளில் நெருப்பாலான கடிவாளம் இடப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். (இப்னுமாஜா: 260)  

 

வேதத்தில் அல்லாஹ் இறக்கியவற்றை மறைத்துவிட்டு அதற்கு விலையாகச் சொற்பத் தொகையைப் பெற்றுக்கொள்கின்றவர்கள் நிச்சயமாகத் தங்கள் வயிற்றில் நெருப்பையே நிரப்பிக் கொள்கின்றார்கள். மேலும், மறுமையில் அல்லாஹ் அவர்களுடன் (விரும்பிப்) பேசவும் மாட்டான். அவர்களை (மன்னித்து)ப் புனிதப்படுத்தவுமாட்டான். அவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனைதான் உண்டு” (2: 174) என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான். ஆக கல்வி என்பது பொதுவுடைமை. எனவே அதை அறிந்தோர் பிறரிடம் அதை மறைக்கக்கூடாது என்று அல்லாஹ் எச்சரிக்கின்றான்.

 

யார் என்னுடைய இந்த மஸ்ஜிதுக்கு வந்தாரோ அவர் நன்மைக்காகவே தவிர வரவில்லை. அவர் அங்கு வந்து (எதையேனும்) கற்றுக்கொள்கிறார். அல்லது கற்பிக்கிறார் என்றால் அவர் அல்லாஹ்வின் பாதையில் போராடுகின்றவரைப் போன்றவராவார்” (இப்னுமாஜா: 227) என்று இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். ஆக கல்வியைப் பகிர்ந்துகொள்பவர் இறைவழியில் போராடுகின்ற சிறப்பையும் உயர்வையும் பெறுகிறார்.

 

மேலும்  “என் சொல்லைக் கேட்டு அதை (ப் பிறருக்கு) எடுத்துரைத்தவனை அல்லாஹ் மகிழ்ச்சிப்படுத்துவானாக” (இப்னுமாஜா: 230) என்ற போதனை மனித சமுதாயத்திற்குக் கல்வியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. கல்வியைப் போதித்தல், பிறருக்கு எடுத்துரைத்தல், பகிர்ந்துகொள்ளல் ஆகியவை இறைவனுக்கு உவப்பான செயல்களாகும். ஆகவேதான் கல்வியைப் பகிர்ந்துகொள்வது குறித்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மிகவும் வலியுறுத்திச் சொல்லியுள்ளனர்.

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் இறுதி ஹஜ்ஜின்போது உரையாற்றிய நேரத்தில், “(இங்கு) வந்தவர் வராதவருக்கு எடுத்துரைக்கட்டும்” (இப்னுமாஜா: 233) என்று கூறினார்கள். இதுதான் கல்வியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நபியவர்கள் தூண்டிய உச்சமாகும். 

 

செல்வத்தைப் பகிர்ந்துகொள்ளல்: பணக்காரர் ஒவ்வொருவரும் தமக்கு வழங்கப்பட்ட மிகையான செல்வம் தமக்காக மட்டுமே வழங்கப்பட்டதாக எண்ணிக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் தேவைக்குப் போக எஞ்சியதை ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் பகிர்ந்து வழங்கவே அவர்களுக்கு மிகுதியான செல்வத்தை அல்லாஹ் வழங்கியுள்ளான். இதை உணர்ந்து செயல்படுவோரின் செல்வம் வளர்ச்சியடைந்துகொண்டே செல்கிறது. இதை உணராமல், ஏழைகளுக்கோ உறவினர்களுக்கோ வழங்காதோரின் செல்வம் காலப்போக்கில் கரைந்துபோய்விடும். அல்லது அவர்களின் சந்ததிகளுக்கு அச்செல்வம் கிடைக்காமல் போய்விடும்.

 

செல்வம் என்பது செல்வர்களுக்கிடையே மட்டும் சுற்றிச் சுற்றி வரக்கூடாது” (59: 7) என்று அல்லாஹ் கூறுகின்றான். மாறாக அது உறவினர்கள், ஏழைகள், தேவையுடையோர், அநாதைகள், பயணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பதே அல்லாஹ்வின் நாட்டமாகும். 

 

செல்வர்கள் ஒவ்வொருவரும் தத்தமது செல்வத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதற்காகவே இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியுள்ளான். ஸகாத் கடமையான செல்வர்கள் ஒவ்வொருவரும் தமக்குரிய ஸகாத்தை உரிய முறையில் கணக்கிட்டு ஏழைகளுக்கும், ஏழைகளாக உள்ள உறவினர்களுக்கும் வழங்கினால் காலப்போக்கில் நம் சமுதாயத்தில் ஏழ்மை முற்றிலும் அகன்றுவிடும். அத்தகைய பொருளாதாரத் திட்டமே ஸகாத் ஆகும். ஆகவே ஸகாத்தை ஒவ்வோராண்டும் உரிய முறையில் ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் வழங்குவதோடு ஒவ்வொரு நாளும் தம்மால் இயன்ற அளவிற்குத் தர்மம் செய்தால் அவர்களுக்கு வரக்கூடிய விபத்துகள் விலகிவிடும்.

 

புன்னகையைப் பகிர்ந்துகொள்ளல்: உணவு, கல்வி, பணம் ஏதும் இல்லாதவர்கள் நன்மையை அடைந்துகொள்ள வழியுண்டா? இவர்கள் எதைப் பிறரோடு பகிர்ந்துகொள்வார்கள்? இவர்கள் தம்மிடமுள்ள புன்னகையைப் பிறரிடம் பகிர்ந்துகொண்டால் அதுவும் அறச்செயல் ஆகும். புன்னகை தவழும் நம் முகத்தைப் பார்க்கின்ற மற்றவர்கள் தம் சோகத்தையும் துக்கத்தையும் மறந்து புன்னகை செய்வார்கள்; மகிழ்ச்சியடைவார்கள். “நீ உன் சகோதரனின் முகத்தைப் புன்னகையோடு பார்ப்பது அறச்செயலாகும்” என்று இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்.

 

ஆக நம்மிடம் உள்ளவற்றைப் பிறரிடம் பகிர்ந்துகொள்வதால் நாமும் மகிழ்ச்சியாக இருப்பதோடு பிறரும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். பகிர்ந்து வாழும் மனப்பக்குவத்தை நம் அனைவருக்கும் உயர்ந்தோன் அல்லாஹ் நல்குவானாக.     


=================0










 

கையேந்துவோர் ஏழைகள் அல்லர்


__________
குர்பானிக் கடாவை அறுத்து, அதன் இறைச்சிகளைப் பங்கிட்டு, ஏழைகளைத் தேடிச் சென்று அவர்களின் குடியிருப்புகளில் நேரடியாக இன்முகத்தோடு வழங்கச் சோம்பல் பட்டு, பள்ளிவாசல்களிலும் பொது மையவாடிகளிலும் (கப்ரஸ்தான்) அமர்ந்து கொண்டு கையேந்துவோருக்கு ஒவ்வொரு பொட்டலம் வழங்கி விட்டு, நம்முடைய பொறுப்பு முடிந்தது என நினைத்துக் கொள்ளும் செல்வர்கள் பலர் உள்ளனர்.

அவ்வாறு கையேந்துவோருள் முஸ்லிம்கள் அல்லாதோரும் உள்ளனர். நான் பார்த்த வரை, இந்நிலைதான் சென்னையின் பெரும்பாலான இடங்களில் உள்ளது.

அவ்வாறு முஸ்லிம்கள் பலர் குர்பானி இறைச்சியை வழங்குவதால் ஒருவருக்கு / ஒருத்திக்கு 15 முதல் 20 பொட்டலங்கள் வரை கிடைக்கின்றன. அவற்றைச் சரியான முறையில் பராமரிக்கத் தெரியாததால் சிலர் வீணாக்கி விடுகின்றனர். வேறு சிலர் சாதாரண உணவகங்களில் விற்று விடுகின்றனர்.

"ஓரிரு கவள உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில் அவன் தன் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள எந்தச் செல்வத்தையும் பெற்றிருக்க மாட்டான்; பிறரும் அவனது நிலையை அறிந்து தர்மம் செய்ய மாட்டார்கள். தானும் வலியச் சென்று கேட்கமாட்டான் (இத்தகையவனே உண்மையான ஏழையாவான்)" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரீ: 1479)

கையேந்த வெட்கப்பட்டுக் கொண்டு ஒவ்வொரு மஹல்லாவிலும் தன்மானத்தோடு எத்தனையோ ஏழைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தம் சிரமங்களை வெளியில் சொல்வதில்லை. அத்தகையோர் குறித்துக் கவலைப்படுவோர் அரிதிலும் அரிதாகவே உள்ளனர்.

இவ்வாறு அச்செல்வர்கள் செய்வது குறித்து அவர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளையும் தான்...

ஒவ்வொரு மஹல்லாவிலும் ஸகாத் பெறத் தகுதியானோர் பட்டியல் / ஸதக்கா பெறுவதற்குத் தகுதியானோர் பட்டியல் ஏதாவது அந்தந்தப் பள்ளிவாசலில் இருக்கிறதா? அவ்வாறு பட்டியல் இருந்தால் அல்லவா அதனை வாங்கி, அதிலுள்ளோருக்கு நேரடியாகச் சென்று கொடுக்க முடியும்? அத்தகைய எந்த ஏற்பாடும் இல்லாத போது எப்படி ஏழைகளைக் கண்டறிந்து நேரடியாகக் கொடுக்க முடியும் என்று அச் செல்வர்கள் கேட்டால் நம்மிடம் பதில் இல்லை.

ஆக நம்முள் பலர் தத்தமது பொறுப்பைச் சரியாகச் செய்யாததாலும் சமுதாய அக்கறையோடு செயல்படாததாலும் ஏழைகள் ஏழைகளாகவே இருக்கின்றார்கள்.

இனியேனும் நாம் ஒவ்வொருவரும் சமுதாய அக்கறையோடு செயல்பட முனைவோம்.

சமுதாய அக்கறையோடு திட்டங்களை வகுத்துச் செயல்படுவோம்.

அன்புடன்
நூ. அப்துல் ஹாதி பாகவி
04.06.2025

செவ்வாய், 3 ஜூன், 2025

எல்லோருக்கும் கிடைக்கிறதா?


----------------------------------------------------------

#ஈதுல்அள்ஹா-தியாகத் திருநாள் அன்று நம்முள் பெரும்பாலோர் தத்தம் குடும்பங்களில் ஒன்று அல்லது  ஒன்றுக்கு மேற்பட்ட ஆடுகளை அல்லாஹ்விற்காக அறுத்துப் பலியிடுகின்றனர். ஒவ்வொருவரும் தமக்குத் தேவையான இறைச்சியை-மூன்றில் ஒரு பங்கை அல்லது அதைவிடக் குறைவாக எடுத்துக்கொண்டு எஞ்சியுள்ளதை உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் பங்கிட்டுக் கொடுக்கின்றனர். அவ்வாறு கொடுக்கும்போது  சில குடும்பங்களுக்கு மட்டும் பலரின் வாயிலாக மிகுதியான இறைச்சி சேர்ந்துவிடுகின்றதுவேறு சில குடும்பங்களுக்கு அறவே இறைச்சி கிடைக்காமல் போவதும் உண்டு.

 

மிகுதியான இறைச்சி கிடைக்கப் பெற்றோர்அவ்வளவு இறைச்சிகளையும் பாதுகாத்து வைக்ககுளிர்சாதனப் பெட்டியில் போதிய இடமில்லாததால்அதில் ஒரு பகுதியை வீணாக்கிவிடுகின்றனர். இதைத் தவிர்க்ககூட்டு முயற்சி செய்தால் எல்லோருக்கும் சமஅளவில் குர்பானி இறைச்சி கிடைக்கும்படி செய்யலாம்.

 

ஒரு மஹல்லாவில் 500 குடும்பங்கள் என்று வைத்துக்கொண்டால் அதில் குறைந்தபட்சம் 200 குடும்பத்தினராவது குர்பானி கொடுப்போராக இருப்பார்கள். நூறு குடும்பத்தினர் கூட்டுக் குர்பானி கொடுப்போராக இருக்கலாம்.  ஏழைகளாகவோகுர்பானி கொடுக்க வாய்ப்பில்லாதவராகவோ இருப்போரை மட்டும் கணக்கெடுத்துக்கொண்டு ஒரு பட்டியல் தயார் செய்துகொள்ளலாம்.

 

குர்பானி கொடுப்போர் தமக்குத் தேவையான இறைச்சியை எடுத்துக்கொண்டுஏழைகளுக்கான பங்கை அந்த மஹல்லாவிலுள்ள பள்ளிவாசலில் ஒப்படைத்துவிட வேண்டும். ஒவ்வொருவரும் 10 அல்லது 15 கிலோ இறைச்சியை வழங்குகின்றார்கள் என்றால் ஏறத்தாழ 3000 கிலோ இறைச்சி சேர்ந்துவிடும். அதைச் சரியான விகிதத்தில் பைகளில் போட்டுஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ளபடி அந்த மஹல்லாவாழ் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கினால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தாராளமாகக் கிடைக்கும். இவ்வாறு செய்வதால் எல்லோருக்கும் குர்பானி இறைச்சி கிடைக்குமல்லவா?

பல்வேறு மஹல்லாக்களில் இளைஞர் நற்பணி மன்றங்கள் உள்ளன. அந்த இளைஞர்களை இச்சேவைக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

குர்பானி இறைச்சியை எடுத்துக்கொண்டு, ஏழைகளைத் தேடி, ஒவ்வொரு வீடாகச் சென்று கொடுக்க முடியவில்லை என்பதற்காகவே குர்பானி கொடுப்பதைத் தவிர்ப்போர் உள்ளனர். அவர்களுக்கு இச்சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தொழுகையில் மட்டுமின்றி எல்லாவற்றிலும் கூட்டு முயற்சி செய்தால் நாம் பற்பல வெற்றிகளை அடையலாம்.