வியாழன், 17 ஏப்ரல், 2025

கூட்டாக முயல்வோம்!

 

 


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

முஸ்லிம்களின் வழிபாடுகளுள் ஒவ்வொன்றும் கூட்டாகச் செய்வதாகத்தான் அமைந்துள்ளது. அதையே அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் விரும்புகின்றனர். “தனித்துத் தொழுவதைவிடக் கூட்டாகத் தொழும் தொழுகைக்கு இருபத்தைந்து மடங்கு நன்மை உண்டு” என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனால்தான் நாம் எப்போதும் கூட்டாகத் தொழுகையை நிறைவேற்றுகிறோம். அதுபோலவே நோன்பு நோற்று, கூட்டாக நோன்பு துறக்கின்றோம்; பன்னாட்டு மக்களோடு  இணைந்து கூட்டாக ஹஜ் செய்கின்றோம்.

 

அந்த அடிப்படையில் கூட்டாக ஸகாத்தை வழங்கினால் நம் சமுதாயத்தில் பரவியுள்ள வறுமையைக் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் நீக்கிவிடலாம். அத்தோடு பல்வேறு பொருளாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தலாம். முதலில்  ஒவ்வொரு மஹல்லாவிலும் ஒரு கணக்கெடுப்பு நடத்தி, ஸகாத் வழங்குவோர், ஸகாத்தைப் பெறுவோர் யார் யார் என்ற பட்டியலைத் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின்னர் பைத்துல்மால் ஒன்றை அந்தந்த மஹல்லாவில் அல்லது நான்கைந்து மஹல்லாவிற்கு ஒன்று எனும் விதத்தில் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். பின்னர் ஸகாத் வழங்குவோரிடமிருந்து அதை வசூலித்து, ஸகாத் பெறத் தகுதியுடையோருக்கு அதைப் பங்கிட்டுக் கொடுத்துவிட வேண்டும். அல்லது ஒவ்வோராண்டும் அந்தந்த மஹல்லாவிலுள்ள நான்கு ஏழைகளைத் தேர்வு செய்து அவர்கள் ஏதேனும் தொழில் தொடங்குவதற்கு அப்பணத்தைக் கொடுக்கலாம். அல்லது அந்த நிர்வாகமே அவர்களுக்குக் கடைவைத்துக் கொடுக்கலாம். அதனால் அடுத்த சில ஆண்டுகளில் அவர்கள் ஒவ்வொருவரும் ஸகாத் கொடுக்கும் நிலைக்கு உயர்ந்துவிடுவார்கள்.

 

அவ்வாறே வசூலிக்கின்ற ஸகாத் தொகை மூலம் அந்தந்த மஹல்லாவிலுள்ள நன்கு படிக்கும் ஏழை மாணவ-மாணவிகளைத் தேர்வு செய்து அவர்கள் விரும்புகின்ற உயர்படிப்புகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கினால்,  திறமை இருந்தும் உயர்கல்வி படிக்க வாய்ப்பில்லாத மாணவ-மாணவியர் பயன்பெறுவார்கள். ஒவ்வொரு துறையிலும் நன்கு படிக்கின்ற இரண்டு மாணவ-மாணவியரைத் தேர்வு செய்து உயர்கல்வி-தொழிற்கல்வி பயில வாய்ப்பளிக்கலாம். இதனால் நம் சமுதாயத்தில் படித்தோர் எண்ணிக்கை உயர்வதோடு அவர்களின் வாழ்க்கைத்தரமும் உயரும். அவர்களுடைய சந்ததிகளும் படித்தவர்களாக மாறுவார்கள். 

 

பொருளாதாரத்தில் முஸ்லிம்கள் முன்னேறப் பல்வேறு திட்டங்கள் உள்ளன. தொழுகையில் ஒன்றிணைகிற நாம் நம்முடைய மற்ற செயல்பாடுகளிலும் ஒன்றிணைந்தால் பல்வேறு வழிகளில் நாம் சாதிக்கலாம். நாம் அதைக் கடைப்பிடிக்கத் தவறியதால்தான் இன்று முஸ்லிம்கள் பொருளாதாரச் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளார்கள். பலர் தம் அவசரத் தேவைக்காக யாரிடமாவது வட்டிக்குப் பணம் வாங்குகின்றார்கள். இறுதியில் அதைத் திருப்பிச் செலுத்த இயலாமல் தவிக்கின்றார்கள்.

 

ஒவ்வொரு மஹல்லாவிலும் பைத்துல்மால் உருவாக்கிவிட்டால் அதன்மூலம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தலாம். செல்வர்கள் ஒன்றுகூடி, தம்மால் இயன்ற அளவு பணத்தை வழங்கி, ஒரு பைத்துல்மால் உருவாக்கி, அந்த நிதியிலிருந்து தேவையுடையோருக்கு வட்டியில்லாக் கடன் கொடுத்து உதவலாம். ஒவ்வொரு மஹல்லாவின் உறுப்பினர்களும் ஒன்றிணைந்து கூட்டுறவு வங்கியைத் தொடங்கி, சிறுசேமிப்பின் மூலம் பணத்தைச் சேர்க்கலாம். அதன் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, தொழில் நிறுவனங்களில் அதை முதலீடு செய்து இலாபம் ஈட்டலாம். அந்த இலாபப் பங்கை முதலீட்டாளர்களுக்கு (சேமிப்பாளர்களுக்கு)ப் பிரித்து வழங்கலாம். அல்லது கூட்டாகச் சேர்ந்து தொழில் தொடங்கலாம். அதில் வருகின்ற இலாபத்தைச் சேமிப்பாளர்களுக்கு வழங்கலாம்.

 

சிறு சிறு தொழில்களைச் செய்துகொண்டிருக்கின்ற இளைஞர்கள், தள்ளுவண்டியில், நடைபாதைகளில் கடைவைத்துக்கொண்டு சிரமப்படுகின்ற இளைஞர்கள் ஆகியோர் பத்துப் பத்துப் பேர்களாக ஒன்றிணைந்து, பெரிய அளவில் தொழில் செய்ய முன்வரலாம். அவர்களுள் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட தொகையை முதலீடாகப் போட்டு, ஒன்றிணைந்து உழைக்கும்போது அந்தத் தொழில் நன்றாக வளர்ச்சியடைவதோடு மிகுந்த இலாபத்தையும் அவர்கள் ஈட்டலாம். அவர்கள் தமக்கு மத்தியில் இலாபத்தைச் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளலாம். அத்தோடு பலருக்கு வேலைவாய்ப்பையும் அளிக்கலாம்.

 

ஒரு வார்டு (Ward)க்கு உட்பட்ட பகுதியில் எத்தனைப் பள்ளிவாசல்கள் இருக்கின்றனவோ அத்தனைப் பள்ளிவாசல்களின் தலைவர்களும் ஒன்றிணைந்து ஆலோசனை செய்து, தம் மஹல்லாவிற்குள் தகுதியான ஒரு வேட்பாளரை ஏகமனதாகத் தேர்வுசெய்து அவரை அந்த வார்டு தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடச் செய்யலாம். அனைவரும் அவருக்கே வாக்களிக்குமாறு வெள்ளிக்கிழமை அறிவிப்புச் செய்யலாம். இதனால் அவர் வெற்றி பெற்று மக்கள் சேவையாற்றலாம். நம் சமுதாயத்திற்கு எதிராக ஏதேனும் இடையூறு ஏற்பட்டால்  அதை அவர்மூலம் தடுத்து நிறுத்தலாம். இதெல்லாம் நம்முடைய கூட்டுமுயற்சியாலும் அல்லாஹ்வுக்காகவே நாம் செயல்படுகின்றோம் என்ற மாசற்ற எண்ணத்தாலுமே சாத்தியமாகும்.

 

தற்போது முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நம்முடைய எதிர்ப்பைக் காட்ட, ஒவ்வோர் இயக்கமும் தனித்தனியாகப் போராடுவதைவிட நாம் அனைவரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப்பின் அல்லது குறிப்பிட்ட நாளில் அந்தந்த ஊர்களில், மாவட்டத் தலைநகரங்களில், ஒன்றுகூடிப் போராடினால் அதன் தாக்கம் மிகப்பெரிதாக இருக்கும். அரசையே நம் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும். அதன்பின் அதற்கொரு தீர்வு கிடைக்கும் என்று நம்பலாம்.

 

ஈதுல் அள்ஹா-தியாகத் திருநாள் அன்று நம்முள் பெரும்பாலோர் தத்தம் குடும்பங்களில் ஒன்று அல்லது  ஒன்றுக்கு மேற்பட்ட ஆடுகளை அல்லாஹ்விற்காக அறுத்துப் பலியிடுகின்றனர். ஒவ்வொருவரும் தமக்குத் தேவையான இறைச்சியை-மூன்றில் ஒரு பங்கை அல்லது அதைவிடக் குறைவாக எடுத்துக்கொண்டு எஞ்சியுள்ளதை உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் பங்கிட்டுக் கொடுக்கின்றனர். அவ்வாறு கொடுக்கும்போது  சில குடும்பங்களுக்கு மட்டும் பலரின் வாயிலாக மிகுதியான இறைச்சி சேர்ந்துவிடுகின்றது; வேறு சில குடும்பங்களுக்கு அறவே இறைச்சி கிடைக்காமல் போவதும் உண்டு.

 

மிகுதியான இறைச்சி கிடைக்கப் பெற்றோர், அவ்வளவு இறைச்சிகளையும் பாதுகாத்து வைக்க, குளிர்சாதனப் பெட்டியில் போதிய இடமில்லாததால், அதில் ஒரு பகுதியை வீணாக்கிவிடுகின்றனர். இதைத் தவிர்க்க, கூட்டு முயற்சி செய்தால் எல்லோருக்கும் சமஅளவில் குர்பானி இறைச்சி கிடைக்கும்படி செய்யலாம்.

 

ஒரு மஹல்லாவில் 500 குடும்பங்கள் என்று வைத்துக்கொண்டால் அதில் குறைந்தபட்சம் 200 குடும்பத்தினராவது குர்பானி கொடுப்போராக இருப்பார்கள். நூறு குடும்பத்தினர் கூட்டுக் குர்பானி கொடுப்போராக இருக்கலாம்.  ஏழைகளாகவோ, குர்பானி கொடுக்க வாய்ப்பில்லாதவராகவோ இருப்போரை மட்டும் கணக்கெடுத்துக்கொண்டு ஒரு பட்டியல் தயார் செய்துகொள்ள வேண்டும்.

 

குர்பானி கொடுப்போர் தமக்குத் தேவையான இறைச்சியை எடுத்துக்கொண்டு, ஏழைகளுக்கான பங்கை அந்த மஹல்லாவிலுள்ள பள்ளிவாசலில் ஒப்படைத்துவிட வேண்டும். ஒவ்வொருவரும் 10 அல்லது 15 கிலோ இறைச்சியை வழங்குகின்றார்கள் என்றால் ஏறத்தாழ 3000 கிலோ இறைச்சி சேர்ந்துவிடும். அதைச் சரியான விகிதத்தில் பைகளில் போட்டு, ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ளபடி அந்த மஹல்லாவாழ் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கினால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தாராளமாகக் கிடைக்கும். இவ்வாறு செய்வதால் எல்லோருக்கும் குர்பானி இறைச்சி கிடைக்குமல்லவா?

     

இவ்வாறு நாம் செய்கின்ற பல்வேறு கூட்டு முயற்சிகள்மூலம் நாமும் பயனடைந்து பிறரையும் பயன்பெறச் செய்யலாம். இதுதான் கூட்டு முயற்சியின் பயனாகும். இனி வரும் காலங்களில் இத்தகைய கூட்டு முயற்சிகள்தாம் முஸ்லிம் சமுதாயத்தை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும். ஆகவே தொழுகையில் மட்டுமின்றி எல்லாவற்றிலும் கூட்டு முயற்சி செய்து நமக்கான முன்னேற்றத்தை நோக்கி நாம் அனைவரும் நகர்வோம்.

======================









கருத்துகள் இல்லை: