அல்லாஹ்வின்
பெருங்கருணையால் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று
தராவீஹ் உள்ளிட்ட தொழுகைகளைத் தொழுது நன்மைகளை ஈட்டியுள்ளோம். அல்ஹம்து
லில்லாஹ். இந்நேரத்தில் பள்ளி நிர்வாகிகளும் சமுதாயத் தலைவர்களும் சிந்தித்துப்
பார்க்க வேண்டிய சில செய்திகள் இருக்கின்றன. அவை குறித்துச் சிந்தித்து உரிய
முடிவுகளை வருங்காலங்களில் எடுக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உண்டு.
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ரமளான்
மாதத்தில் சிரமமின்றி நோன்பு நோற்க ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது. சில
மஹல்லாக்களில் மாதம் முழுவதும் ஏற்பாடு செய்யப்படுகிறது. சில மஹல்லாக்களில்
கடைசிப் பத்து நாள்களில் மட்டும் ஏற்பாடு செய்யப்படுகிறது. நோன்பாளிகளுக்கு ஸஹர்
உணவு ஏற்பாடு செய்தல் நன்மைக்குரிய செயல்தான் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் அதன் நோக்கம்
என்னவென்பதை நம்முள் பலர் புரிந்துகொள்ளவே இல்லை. சென்னை, மதுரை, கோவை, சேலம்
உள்ளிட்ட பெருநகரங்களில் ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்படுவதன் நோக்கம், பல்வேறு
ஊர்களிலிருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும் தொழிலுக்காகவும் கல்விக்காகவும்
வந்து தங்கியுள்ள முஸ்லிம் சகோதரர்கள் பலர் உணவகங்களில்தான் சாப்பிட்டு
வருகின்றார்கள். ஸஹர் நேரத்தில் உணவகங்கள் பெரும்பாலும் திறந்திருப்பதில்லை. எனவே
அவர்கள் பயன்பெறுவதற்காகவே பெருநகரங்களில் மட்டும் தொடக்கக் காலத்தில் ஸஹர் உணவு
ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. ஆனால் அது இன்று பேரூர்கள் முதல் சிற்றூர்கள் வரை
எல்லா இடங்களிலும் பரவிவிட்டது.
பெருவணிக நிறுவனங்களோ
தொழிற்சாலைகளோ இல்லாத முஸ்லிம் ஊர்களில்கூட ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது.
‘அந்த மஹல்லாவில் செய்கின்றார்கள்; நாம் ஏன் செய்யக்கூடாது’ என்ற போட்டி மனப்பான்மையால்
ஒவ்வொரு மஹல்லாவிலும் இதற்கான ஏற்பாடு செய்யப்படுகிறது. அங்கு வந்து
சாப்பிடுபவர்கள் அனைவரும் உள்ளூர்வாசிகள்; வசதியுள்ளவர்கள்.
அப்படி இருக்கும்போது இந்த ஏற்பாடு தேவையா?
நம்முடைய
பொருளாதாரமெல்லாம் உணவுத் துறையிலேயே செலவழிந்துவிடுகிறது. நாம் கல்விக்காகச்
செலவு செய்வது மிக மிகக் குறைவு. அதனால்தான் நாம் கல்வியில் மிகவும்
பின்தங்கியுள்ளோம் என்பதை மிகுந்த வருத்தத்தோடு இந்நேரத்தில் நினைவுகூர்கிறேன்.
இந்த ஸஹர் உணவுக்காக வசூல்
செய்யப்படும்போது, பலர்
தம் ஸகாத் பணத்தைக் கொடுத்துவிடுகின்றார்கள். ஏழைகள் மட்டுமே பயன்பெற வேண்டிய
ஸகாத் பணத்தில் ஊர் மக்கள் அனைவரும் சாப்பிடுகின்றார்கள். ஆகவே ஏழைகள்
பாதிக்கப்படுகின்றார்கள். ஸகாத் உரிய முறையில் ஏழைகளை அடைவதில்லை. நம்முள் பலர்
அவர்களுக்குக் கொடுக்கின்ற அஞ்சும் பத்தும் ஸகாத் இல்லை. நாம் உரிய முறையில்
கணக்கிட்டு அதனை முழுமையாக அவர்களுக்கு வழங்குவதுதான் ஸகாத் ஆகும்.
ஸஹர் உணவு ஏற்பாடு செய்வதில் பள்ளி நிர்வாகிகள்
காட்டுகிற ஆர்வத்தில் ஒரு பகுதியேனும், அந்தந்த மஹல்லாவைச் சார்ந்த பள்ளிவாசல்களில் பைத்துல் மால்
ஏற்படுத்தி, அதன்மூலம்
ஸகாத்தை வசூல் செய்து, அந்த
மஹல்லாவில் உள்ள ஏழைகள் கணக்கிடப்பட்டு, அவர்களின் தேவையறிந்து அவர்களுக்கு அத்தொகையைப்
பங்கிட்டுக் கொடுப்பதில் காட்டுவதில்லையே ஏன்?
ஒவ்வொரு மஹல்லாவிலும்
பைத்துல்மால் உருவாக்கப்பட்டு, ஸகாத் வழங்கத் தகுதியானோரிடமிருந்து அதை வசூல் செய்து, அதைப்
பெறத் தகுதியுடையோருக்கு அது வழங்கப்படுகின்றபோதுதான் நம் சமுதாயத்தில் வறுமை
அகலும். மேலும் பைத்துல்மால் மூலம் கல்வி உதவித்தொகை, கைம்பெண்
உதவித்தொகை, முதியோர்
உதவித்தொகை, ஆதரவற்றோர்
உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தலாம். நன்றாகப் படிக்கின்ற ஏழை மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்குக்
கல்வி உதவி வழங்கலாம். இதையெல்லாம் நிறைவேற்றாமல் வெறுமனே ஸஹர் உணவு ஏற்பாடு
செய்வதால், பள்ளித்
தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தம் பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்றியவர்களாக ஆக
முடியாது.
“உங்களுள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்; உங்களுள்
ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பைக் குறித்து விசாரணை செய்யப்படுவார்” (புகாரீ: 7138) என்று
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை நினைவில் நிறுத்தி, எதிர்காலத்தில்
மக்களுக்குப் பயனுள்ள திட்டங்களைச் செயல்படுத்தவும் பைத்துல்மால் மூலம் ஸகாத்தை
வசூல் செய்து ஏழைகளுக்கு வழங்கவும் முயலுங்கள்.
-நூ. அப்துல் ஹாதி பாகவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக