சனி, 25 ஜனவரி, 2025

உங்கள் கைப்பேசியை அமைதி நிலையில் வையுங்கள்

 



தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும்,

"உங்கள் ஸஃப்பு (அணி)களைச் சரி செய்து கொள்ளுங்கள்" என்று இமாம் அறிவிப்புச் செய்வது வழக்கம்.


தற்காலத்தில் "உங்கள் கைப்பேசியை அமைதி நிலையில் (Silent mode) வைத்துக் கொள்ளுங்கள்" என்று ஒவ்வொரு தொழுகைக்கும் இமாம் சொல்ல வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டுள்ளது.


அதைச் சொன்னாலும் சிலர் அமைதி நிலையில் வைக்க மறந்து விடுகின்றார்கள். அதனால் அது ஒரு பக்கம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நிம்மதியாகத் தொழ முடியவில்லை. 


"தொழுகையில் இருக்கும்போது கைப்பேசி ஒலித்தால், அதை உடனே அமைதிப் படுத்துங்கள்; அதனால் உங்கள் தொழுகை முறியாது" என்றெல்லாம் சொல்லிப் பார்த்துவிட்டோம். ஆனாலும் சிலருக்கு அச்சட்டம் புரிவதில்லை. முழுமையாக ஒலித்து அடங்கும் வரை அவர்கள் அதை எதுவும் செய்வதில்லை.


மன ஓர்மையோடும் மனநிம்மதியோடும் தொழுவதற்காகத்தான் பள்ளிவாசலுக்குச் செல்கின்றோம். அங்கும் அமைதியான சூழல் இல்லையென்றால் வேறு எங்குதான் அமைதியைத் தேடுவது?


சில பள்ளிவாசல்களில், "படைத்தவனோடு தொடர்பு கொள்ளும் போது படைப்புகளோடு தொடர்பைத் துண்டியுங்கள்" என்று அதன் நுழைவாயிலில் எழுதி வைத்திருக்கின்றார்கள்.


ஆகவே இனி வரும் காலங்களில் நாம் ஒவ்வொருவரும் பள்ளிவாசலுக்குள் நுழையும்போதே நம் கைப்பேசியை அமைதி நிலையில் வைப்பதை உறுதி செய்து கொள்வோம்; அவசரத்தில் அதைச் செய்ய மறந்துவிட வேண்டாம். 


அன்புடன்

நூ.அப்துல் ஹாதி பாகவி

25.01.2025


#silentmode 

#switchoffyourmobile

#besilent

கருத்துகள் இல்லை: