வியாழன், 26 மே, 2011

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 22)



அல்லாஹ்வின் மறுப்பு

* வேதக்காரர்களே! இப்ராஹீம் தொடர்பாக நீங்கள் ஏன் தர்க்கம் புரிகிறீர்கள்? தவ்ராத் மற்றும் இஞ்சீல் (வேதங்கள்) அவருக்குப் பிறகே அருளப்பெற்றன. நீங்கள் புரிந்துகொள்ளமாட்டீர்களா? இதோ (பாருங்கள்)! நீங்கள் (இதுவரை) உங்களுக்குத் தெரிந்த விசயங்களில் தர்க்கம் செய்தீர்கள். (இப்போது) ஏன் உங்களுக்குத் தெரியாத விசயங்களில் தர்க்கம் செய்கிறீர்கள்? அல்லாஹ்வே அறிகின்றான். நீங்கள் அறியமாட்டீர்கள்.

இப்ராஹீம் ஒரு யூதராகவோ கிறித்தவராகவோ இருந்ததில்லை. மாறாக, அவர் உண்மை வழியில் நின்றவராகவும் (ஏக இறைவனுக்கு) அடிபணிந்தவராகவுமே இருந்தார். இணைவைப்பாளர்களுள் ஒருவராக அவர் இருந்ததில்லை. மனிதர்களுள் இப்ராஹீமுக்கு மிகவும் நெருக்கமானவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த (முஹம்மத்) நபியும், (இந்தச் சமுதாயத்தில்) இறைநம்பிக்கை கொண்டோரும்தாம். அல்லாஹ் இறைநம்பிக்கை கொண்டோரின் பாதுகாவலன் ஆவான். (3: 65-68)

யூதர்களும் கிறித்தவர்களும், இப்ராஹீம் (அலை) எங்கள் மார்க்கத்தில்தான் இருந்தார் என்று வாதிடுவதை அல்லாஹ் மறுக்கிறான். மேலும், அவர் அவர்களின் மார்க்கத்தில் இருக்கவில்லை என்று அவரை அவர்களிலிருந்து விடுவித்துவிட்டான். அவர்களின் அதீத அறியாமையையும் குற்றறிவையும் பின்வருகின்ற வசனத்தின் மூலம் தெளிவாக்குகிறான். தவ்ராத் மற்றும் இஞ்சீல் (வேதங்கள்) இப்ராஹீம் நபிக்குப் பிறகே அருளப்பெற்றன. அதாவது அவருடைய மார்க்கம் வகுக்கப்பட்டு, அவர் வாழ்ந்த நீண்ட காலத்துக்குப் பின்னரே உங்களுக்கு உங்கள் மார்க்கம் வகுக்கப்பட்டது. பிறகு எப்படி அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்திருக்க முடியும்? இதனால்தான், அவர்களைப் பார்த்து, நீங்கள் புரிந்துகொள்ளமாட்டீர்களா? என்று கேட்டுவிட்டு, பின்வருகின்ற வசனத்தையும் கூறுகின்றான்.

இப்ராஹீம் ஒரு யூதராகவோ கிறித்தவராகவோ இருந்ததில்லை. மாறாக, அவர் உண்மை வழியில் நின்றவராகவும் (ஏக இறைவனுக்கு) அடிபணிந்தவராகவுமே இருந்தார். இணைவைப்பாளர்களுள் ஒருவராக அவர் இருந்ததில்லை. (3: 67)

மேற்கண்ட வசனத்தில், அவர் அல்லாஹ்வுடைய நேரிய மார்க்கத்தில் இருந்தார் என்று அல்லாஹ் தெளிவுபடுத்திவிட்டான். `ஹனீஃப் என்பது மனத்தூய்மையை நாடி, தவறான பாதையிலிருந்து விலகி உண்மையான பாதையில் செல்லுதல் ஆகும். அது யூதர்கள், கிறித்தவர்கள் மற்றும் இணைவைப்பாளர்களுக்கு எதிரானதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்: தன்னை அறியாதவனைத் தவிர வேறு யார் இப்ராஹீமின் சன்மார்க்கத்தைப் புறக்கணிக்கப்போகிறார்? நாம் அவரை இவ்வுலகில் (இறைத்தூதராகத்) தேர்ந்தெடுத்தோம். மறுமையிலும் அவர் நல்லடியார்களுள் ஒருவராகத் திகழ்வார். அவருடைய இறைவன் அவரிடம், நீர் (எமக்குக்) கட்டுப்பட்டு நடந்துகொள்வீராக! என்று கூறினான். அதற்கு அவர், அகிலங்களின் அதிபதி(யாகிய அல்லாஹ்வு)க்குக் கட்டுப்பட்டேன் என்று கூறினார்.

இப்ராஹீமும் யஅகூபும் தம் பிள்ளைகளுக்கு இதையே அறிவுறுத்தினர். என் மக்களே! அல்லாஹ் உங்களுக்கு இ(ஸ்லா)ம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளான். ஆகவே, (அல்லாஹ்வுக்கு அடிபணிகின்ற) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணித்துவிடக் கூடாது (என்று கூறினர்). யஅகூபுக்கு இறப்பு நெருங்கியபோது நீங்கள் (அவர் அருகில்) இருந்தீர்களா? அவர்தம் மக்களிடம், எனக்குப் பின்னர் எதை வழிபடுவீர்கள்? என்று வினவினார். அதற்கு அவர்கள், உங்கள் இறைவனும் உங்கள் தந்தையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய (அந்த) ஓரிறைவனையே வழிபடுவோம். நாங்கள் அவனுக்கு (முற்றிலும்) அடிபணிந்தவர்கள் ஆவோம் என்று கூறினார்கள்.

அவர்கள் (வாழ்ந்து) மறைந்த சமுதாயத்தார்; அவர்கள் தேடிக்கொண்டது அவர்களுக்கு; நீங்கள் தேடிக்கொண்டது உங்களுக்கு; அவர்கள் செய்துகொண்டிருந்ததைப் பற்றி நீங்கள் விசாரணை செய்யப்படமாட்டீர்கள். அவர்கள், யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ ஆகிவிடுங்கள்; நேர்வழி பெறுவீர்கள் என்று கூறுகிறார்கள். அவ்வாறன்று; உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் சன்மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அவர் இணைவைப்பாளர்களுள் ஒருவராக இருந்ததில்லை என்று (நபியே) கூறுவீராக!

அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பெற்றதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் மற்றும் (அவருடைய) வழித்தோன்றல்கள் ஆகியோருக்கு அருளப்பெற்றதையும், மேலும் மூசா, ஈசா ஆகியோருக்கு வழங்கப்பெற்றதையும், (இதர) நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து வழங்கப்பெற்றதையும் நாங்கள் நம்பிக்கைகொண்டோம். அவர்களுள் யாருக்கிடையிலும் பாகுபாடு காட்டமாட்டோம். நாங்கள் அவனுக்கே அடிபணிந்தவர்கள் ஆவோம் என்று கூறுங்கள். நீங்கள் நம்பிக்கைகொண்டதைப் போன்றே அவர்களும் நம்பிக்கைகொண்டால் நேர்வழி பெறுவர்.

புறக்கணிப்பார்களாயின், அவர்கள் மனவேறுபாட்டில்தான் இருக்கிறார்கள். ஆகவே, அவர்கள் விசயத்தில் அல்லாஹ்வே உமக்குப் போதுமானவன். அவன் நன்கு செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான். அல்லாஹ் தீட்டும் வண்ணத்தையே (மார்க்கத்தையே நாங்கள் ஏற்போம்). வண்ணம் தீட்டுவதில் (நேர்வழியைக் கூறுவதில்) அல்லாஹ்வைவிட அழகானவன் வேறு யார் இருந்திட முடியும்? நாங்கள் அவனையே வழிபடுபவர்கள் ஆவோம் (என்று கூறுங்கள்).

அல்லாஹ்வைப் பற்றி எங்களிடம் தர்க்கம் புரிகின்றீர்களா? அவனே எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கே. உங்கள் செயல்கள் உங்களுக்கே. நாங்கள் அவனுக்காகவே உளப்பூர்வமாகச் செயல்படுபவர்கள் ஆவோம் என்று (நபியே) கூறுவீராக! அல்லது இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் மற்றும் (யஅகூபுடைய) வழித்தோன்றல்கள் ஆகியோர் யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ இருந்தார்கள் என்று கூறுகிறீர்களா? நன்கறிந்தவர்கள் நீங்களா? அல்லது அல்லாஹ்வா? என்று (நபியே) கேட்பீராக! அல்லாஹ்விடமிருந்து தமக்குக் கிடைத்துள்ள சான்றை மறைப்பவரைவிடப் பெரும் அநியாயக்காரர் வேறு யார்? நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை.
அவர்கள் மறைந்துவிட்ட சமுதாயத்தார். அவர்கள் தேடிக் கொண்டது அவர்களுக்கு. நீங்கள் தேடிக்கொண்டது உங்களுக்கு. அவர்கள் செய்துகொண்டிருந்ததைப் பற்றி நீங்கள் விசாரணை செய்யப்படமாட்டீர்கள். (2: 130-141)

இப்ராஹீம் நபி யூதராகவோ கிறித்தவராகவோ இருந்தார் என்ற அவர்களின் கூற்றை அல்லாஹ் முறியடித்து அவரைத் தூய்மைப்படுத்தினான். அவர் உண்மை வழியில் நின்றவராகவும் ஏக இறைவனுக்கு அடிபணிந்தவராகவும் இருந்தார். அவர் இணைவைப்பாளர்களுள் ஒருவராக இருக்கவில்லை.
இதனால்தான் அல்லாஹ் கூறுகின்றான்: மனிதர்களுள் இப்ராஹீமுக்கு மிகவும் நெருக்கமானவர்கள், அவரைப் பின்பற்றியோர்...(3: 68) அதாவது அவருடைய காலத்தில் அவருடைய மார்க்கத்தில் இருந்துகொண்டு, அவரைப் பின்பற்றியோரும், அவர்களுக்குப் பிறகு அவருடைய மார்க்கத்தை யார் பற்றிக்கொண்டாரோ அவருமே இப்ராஹீம் நபிக்கு மிக நெருக்கமானவர்கள் ஆவர். `ஹாதன் நபிய்யு என்று அந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள வார்த்தை, முஹம்மத் (ஸல்) அவர்களைக் குறிக்கிறது.

ஏனென்றால், அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு ஒரு நேரிய மார்க்கத்தை வகுத்துக்கொடுத்ததைப் போல், முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் ஒரு நேரிய மார்க்கத்தை வகுத்துக் கொடுத்தான். மேலும், அவர்களுக்கு அதை முழுமைப்படுத்திக் கொடுத்தான். அவர்களுக்கு முன்பு எந்த நபிக்கும், இறைத்தூதருக்கும் கொடுக்காததை அவர்களுக்குக் கொடுத்தான்.

அல்லாஹ் அதைப் பின்வரும் வசனங்களில் கூறுகின்றான்: (நபியே) நீர் கூறுவீராக! என் இறைவன் எனக்கு நேரிய வழியைக் காட்டியுள்ளான். அதுவே நிலையான மார்க்கமாகும். உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கமுமாகும். அவர் இணைவைப்போருள் ஒருவர் அல்லர். (நபியே) நீர் கூறுவீராக! என் தொழுகை, என் (குர்பானி) வழிபாடு, என் வாழ்வு, என் மரணம் (ஆகிய அனைத்தும்) அனைத்துலகங்களையும் படைத்துப் பரிபாலிக்கின்ற அல்லாஹ்வுக்கே உரியவை. அவனுக்கு இணை (துணை) இல்லை. இவ்வாறே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. நானே முஸ்லிம்களுள் முதலாமவன் ஆவேன். (6: 161-163)

* நிச்சயமாக இப்ராஹீம் ஒரு தலைவராகவும், அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவராகவும், சத்திய வழியைச் சார்ந்தவராகவும் இருந்தார். மேலும், அவர் இணைவைப்போருள் ஒருவராக இருந்ததில்லை. (மேலும்) அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக அவர் இருந்தார். அவன் அவரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டான். இன்னும், அவரை நேரான பாதையில் செலுத்தினான். மேலும், நாம் அவருக்கு இவ்வுலகத்தில் நன்மையானதையே கொடுத்தோம். நிச்சயமாக மறுமையிலும் அவர் நல்லவர்களுள் ஒருவராக இருப்பார். (நபியே) பின்னர், சத்திய வழியைச் சார்ந்தவரான இப்ராஹீமின் மார்க்கத்தை நீர் பின்பற்ற வேண்டும் என்று நாம் உமக்கு வேத அறிவிப்புச் செய்தோம். அவர் இணைவைப்போருள் ஒருவராக இருந்ததில்லை. (16: 120-123)

இறையில்லம் கஅபாவுக்குள் நபி (ஸல்) அவர்கள் உருவப்படங்களைப் பார்த்தபோது, அவை அங்கிருந்து அகற்றப்படுகின்ற வரை அவர்கள் அதனுள் நுழையவே இல்லை. பின்னர் அவற்றை அழிக்க நபிகள் நாயகம் (ஸல்) ஏவினார்கள். அதன்பின், அவர்கள், இப்ராஹீம்-இஸ்மாயீல் இருவரின் கைகளில் குறிசொல்லும் அம்புகளைப் பிடித்த நிலையில் (உருவங்களாகப்) பார்த்தார்கள். அல்லாஹ் தன் கருணையிலிருந்து அவர்களை (குறைஷியர் களை) அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் இருவரும் ஒருபோதும் அம்புகளின் மூலம் குறிபார்த்ததில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரீ)1


புகாரீ (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், அல்லாஹ் தன் கருணையிலிருந்து அவர்களை (குறைஷியர்களை) அப்புறப்படுத்துவானாக! நிச்சயமாக நம்முடைய தலைவர் (இப்ராஹீம்-இஸ்மாயீல்) ஒருபோதும் அம்புகளின் மூலம் குறிபார்த்ததில்லை என்று அந்த குரைஷியர்கள் அறிந்தே இருந்தனர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ளது.

மேற்கண்ட வசனங்களில், `உம்மா என்பதன் பொருள், நல்வழி பெற்ற தலைவராகவும் நன்மையின்பால் அழைக்கின்றவராகவும் அவர் இருந்தார். அவ்விசயத்தில் அவர் பிறரால் பின்பற்றப்படுகிறார் என்பதாகும். `கானித்தன் லில்லாஹ் என்பதன் பொருள், அவர் எல்லா நிலைகளிலும், அசைவுகளிலும், அமைதியான நிலைகளிலும் இறைவனைப் பயந்திருந்தார் என்பதாகும். `ஹனீஃபன்- நல்வழியில் செல்கின்ற மனத்தூய்மையாளர். அவர் இணைவைப்போருள் ஒருவராக இருந்ததில்லை. (மேலும்) அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக இருந்தார். (16: 120-121)

அதாவது அவர் தம் உள்ளம், நாவு மற்றும் செயல்பாடுகள் மூலம் தம்முடைய இறைவனுக்கு நன்றிசெலுத்துபவராக இருந்தார் என்பதாகும்.
அவன் அவரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டான் என்பதன் பொருள், அல்லாஹ் அவரைத் தனக்காகவும் தன்னுடைய தூதுத்துவத்துக்காகவும் தேர்ந்தெடுத்துக்கொண்டான்; அவரை நண்பராக எடுத்துக்கொண்டான்; மேலும் அவன் அவருக்கு ஈருலக நன்மையையும் ஒன்றிணைத்தான் என்பதாகும்.

அல்லாஹ்வுடைய நண்பர்

அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வுக்காகத் தம்மை அடிபணியச் செய்து, நற்செயல்கள் புரிந்து, உண்மை வழியில் நின்று இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றியவரைவிட மார்க்கத்தால் சிறந்தவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை (த் தன்) உற்ற நண்பராக ஆக்கிக்கொண்டான். (4: 125)

இப்ராஹீம் (அலை) அவர்களைப் பின்பற்றுவதற்கு அல்லாஹ் ஆர்வப்படுத்துகின்றான். ஏனென்றால், அவர் நேரிய மார்க்கத்திலும் செம்மையான வழியிலும் இருந்தார். மேலும் அல்லாஹ் அவருக்கு ஏவிய அனைத்தையும் நிறைவேற்றினார். அது பற்றி அல்லாஹ் அவரைப் புகழ்ந்து கூறியுள்ளான்: (இறைவனின் கட்டளைகளை) முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம். (53: 37) இதனால்தான் அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களைத் தன் உற்ற நண்பராக ஆக்கிக்கொண்டான். நட்பு என்பது அன்பின் இறுதிநிலையாகும்.

கவிஞர் ஒருவர் கூறியுள்ளார்:
நீ என்னுடைய உயிர்ப்பாதையில் நுழைந்துவிட்டாய்;
எனவேதான், உற்ற நண்பன் நண்பன் என்றே அழைக்கப்படுகிறான்.
இவ்வாறுதான் நபிமார்களின் முத்திரையான, இறைத்தூதர்களின் தலைவரான முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த உயர்வையும் சிறப்பையும் பெற்றார்கள். புகாரீ, முஸ்லிம் உள்ளிட்ட நபிமொழித் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நபிமொழி ஒன்று அதைத் தெரிவிக்கிறது. அதை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஜுன்துப் அல்பஜலீ, அப்துல்லாஹ் பின் அம்ர், இப்னு மஸ்ஊத் (ரளி-அன்ஹும்) அறிவிக்கின்றார்கள்: மக்களே! நிச்சயமாக அல்லாஹ், இப்ராஹீம் நபியை (தன்) உற்ற நண்பராக ஆக்கிக்கொண்டதைப்போல என்னையும் அவன் (தன்) உற்ற நண்பராக ஆக்கிக்கொண்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமது இறுதிப்பேருரை ஆற்றியபோது கூறினார்கள்: மக்களே! புவிவாழ் மக்களிலிருந்து நான் ஓர் உற்ற நண்பரை ஆக்கிக்கொண்டிருந்தால் அபூபக்ரை நான் (என்னுடைய) உற்ற நண்பராக ஆக்கிக்கொண்டிருப்பேன். எனினும், உங்கள் தோழர் (முஹம்மது) அல்லாஹ்வின் உற்ற நண்பராவார் என்று கூறினார்கள். (நூற்கள்: புகாரீ, முஸ்லிம்)2


அம்ர் பின் மைமூன் (ரஹ்) கூறியுள்ளார்: முஆத் (ரளி) யமன் நாட்டுக்குச் சென்றபோது, அம்மக்களுக்கு அதிகாலைத் தொழுகை நடத்தினார்கள். அதில் இந்த வசனத்தை (4: 125) ஓதினார்கள். அப்போது ஒருவர், இப்ராஹீம் (அலை) அவர்களைப் பெற்ற அன்னையின் கண் (மகிழ்ச்சியால்) குளிர்ந்துவிட்டது என்று சொன்னார். (நூல்: புகாரீ)
இப்னு அப்பாஸ் (ரளி) கூறினார்கள்: ஒரு தடவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் சிலர் நபியவர்களின் வருகையை எதிர்பார்த்து அமர்ந்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்தபோது, அந்தத் தோழர்கள் தங்களுக்கு மத்தியில் பேசிக்கொண்டிருந்ததைச் செவியுற்றார்கள். அவர்களுள் ஒருவர், அல்லாஹ் தன் படைப்புகளுள் ஒருவரைத் தன் உற்ற நண்பராக ஆக்கிக்கொள்ள விரும்பி, இப்ராஹீம் (அலை) அவர்களைத் தன் நண்பராக ஆக்கிக்கொண்டான். இது ஆச்சரியமானதாகும் என்று கூறினார்.
மற்றொருவர், அல்லாஹ் மூசா (அலை) அவர்களிடம் நேரடியாக உரையாடியது இதைவிட ஆச்சரியமானது என்று கூறினார். இன்னொருவர், ஈசா (அலை) அல்லாஹ்வின் உயிர் (ரூஹ்) ஆகவும் வார்த்தையாகவும் உள்ளார். (இது மிகவும் ஆச்சரியமானதாகும்) என்றும், பிறிதொருவர், ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான் (இது மிகவும் வியப்பானதாகும்) என்றும் கூறினர்.
அப்போது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் சென்று முகமன் (சலாம்) கூறிவிட்டு, பின்வருமாறு தெரிவித்தார்கள்: நீங்கள் ஆச்சரியப்பட்டுப் பேசிக்கொண்டிருந்ததை நான் செவியுற்றேன். இப்ராஹீம் (அலை) அல்லாஹ்வின் உற்ற நண்பர் (கலீலுல்லாஹ்); மூசா (அலை) அல்லாஹ்வுடன் உரையாடியவர்; ஈசா (அலை) அல்லாஹ்வின் உயிர்; அவனது வார்த்தை; ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்துக்கொண்டான். இவையெல்லாம் சரியே! அவ்வாறுதான் முஹம்மத் (ஆகிய நானும்). அறிந்துகொள்ளுங்கள். பெருமைக்காகச் சொல்ல வில்லை. நான் அல்லாஹ்வின் நேசர் (ஹபீபுல்லாஹ்) ஆவேன். பெருமைக்காகச் சொல்லவில்லை; மறுமை நாளில் முதலாவதாகப் பரிந்துரை செய்பவரும், பரிந்துரை ஏற்கப்படுபவரும் நானே! பெருமைக்காகச் சொல்லவில்லை; நான்தான் முதன்முதலாகச் சொர்க்க வாசலின் வளையத்தை அசைப்பவன்.
அப்போது அல்லாஹ் சொர்க்கத்தைத் திறந்து, என்னை (முதலில்) சொர்க்கத்தில் நுழையச் செய்வான். என்னுடன் இறைநம்பிக்கைகொண்ட ஏழைகள் இருப்பார்கள். பெருமைக்காகச் சொல்லவில்லை. ஆரம்பம் முதல் இறுதிவரை தோன்றியவர்களுள் நான்தான் மறுமைநாளில் மிகவும் கண்ணியமானவராக இருப்பேன். (நூல்: இப்னு மர்தவைஹி)3

இப்னு அப்பாஸ் (ரளி) கூறியுள்ளார்கள்: இப்ராஹீம் நபி (அல்லாஹ்வுக்கு) உற்ற நண்பராக இருப்பதையும், மூசா நபி அல்லாஹ்விடம் பேசியதையும், முஹம்மத் நபி (அல்லாஹ் வைப்) பார்த்ததையும் நீங்கள் மறுக்கின்றீர்களா? (மறுக்காதீர்கள்). (நூல்: அல்முஸ்தத்ரக்)




----------அடிக்குறிப்பு------------
1. இந்த நபிமொழியை முஸ்லிம் (ரஹ்) பதிவுசெய்யவில்லை.

2. இரண்டு இமாம்களும் இந்த நபிமொழியை அபூசயீத் (ரளி) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள். மேலும், இந்த நபிமொழியை அப்துல்லாஹ் பின் ஜுபைர், இப்னு அப்பாஸ், இப்னு மஸ்ஊத் (ரளி-அன்ஹும்) போன்றோர் அறிவித்துள்ளனர்.

3. இது ஒரு ஃகரீப் வகை ஹதீஸாகும். இதில் இடம்பெற்றுள்ள சில கருத்துகள் ஆதாரப்பூர்வமானவை ஆகும்.

கருத்துகள் இல்லை: