சனி, 17 ஆகஸ்ட், 2024

கடன் வாங்காதீர்!

 


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

கடந்த காலங்களில் பெரும்பாலானோரிடம் சிறுசேமிப்புப் பழக்கம் இருந்தது. தற்போது அது குறைந்துள்ளது. அதனால் கடந்த காலங்களில் கடன் வாங்குவோர் எண்ணிக்கை குறைவாக இருந்தது.  இன்று சேமிப்புப் பழக்கம் குறைந்ததால் கடன் வாங்குவோர் எண்ணிக்கை மிகுந்துள்ளது. கடன் பட்டார் நெஞ்சம்போல்...எனும் முதுமொழிக்கேற்ப, வட்டிக்குக் கடன் பெற்றோர், அதை வசூலிக்க வருபவரைக் கண்டுவிட்டால் அவர்களை அச்சம் கவ்விக்கொள்கிறது; பதற்றம் பற்றிக்கொள்கிறது. ஏனெனில் உரிய தவணைக் காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், வசூலிக்க வந்தவன் கண்டபடி திட்டுவதையும் இகழ்ந்து பேசுவதையும் கேட்டுத்தான் ஆக வேண்டும். அது மட்டுமின்றி, அக்கம் பக்கத்தார் பார்த்துக்கொண்டிருக்க, அவன் திட்டுவதைக் கேட்கும்போது மானம் போகும்; உயிரையே மாய்த்துக்கொள்ளலாமா எனத் தோன்றும்.

 

கடந்த காலங்களில் கடன் பெறுவது மிகவும் சிரமமாக இருந்தது. தற்காலத்தில் கடன்பெறுவது மிகவும் எளிது. ஏன், நாமே கேட்காவிட்டாலும் தொலைபேசியில் தொடர்புகொண்டு கடன் வாங்கிக் கொள்ளுமாறு நம்மைத் தூண்டுகின்றார்கள்; தொடர்படியாகக் குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள். கடனை வாங்கும் வரை நம்மை அந்தத் தனியார் வங்கிகள் விடுவதில்லை. ஏனெனில் கடந்த காலங்களில் கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது வாங்கிய பணத்தை மட்டும் கொடுத்தால் போதுமானது. அதை ஓர் உதவியாகச் செய்துவந்தனர். அதனால்தான் அதனைக் கைமாற்றுஎன்று அழைத்துவந்தனர்.

 

ஒருவர் தம்மிடம் உள்ள பணத்தை வேறொருவருக்குக் குறிப்பிட்ட காலத்திற்குக் கொடுத்துவிட்டு, அதைத் திரும்பப் பெற்றுக்கொள்வதுதான் கைமாற்று ஆகும். ஆனால் தற்காலத்தில் வட்டிக்குத்தான் கடன் கொடுக்கப்படுகிறது. எனவே அது ஒரு வியாபாரமாகக் கருதப்படுகிறது. அதனால்தான் நாமே கேட்காவிட்டாலும் ஒவ்வொரு வங்கியும் நம்மீது வலிந்து கடனைத் திணிக்கப்பார்க்கிறது. அதன்மூலம் நம்மிடமிருந்து வட்டி வாங்கிச் சம்பாதிக்க முனைகிறது. அவர்களிடமிருந்து கடனை வாங்குகிற வரைதான் நம்மிடம் அவர்கள் கெஞ்சுவார்கள். கடன் வாங்கிவிட்டால் அவ்வளவுதான். அதன்பின் அவர்களின் பேச்சை நாம் கேட்க வேண்டும். அவர்கள் சொல்வதுதான் சட்டம்; அவர்கள் போடுவதுதான் வட்டி.

 

வங்கிகளின் வலியுறுத்தல்களால் கடனை வாங்கிய பலர் அதனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அல்லாடுகின்றனர். அதைத் திருப்பிச் செலுத்தும் வகையில் வருவாய் இல்லை அல்லது அந்தந்த மாதத்திற்கான செலவுகளைச் சமாளிக்கவே பணமெல்லாம் தீர்ந்துபோய்விடுகிறது. பிறகு வாங்கிய கடனை எப்படிச் செலுத்த முடியும்? இத்தகையோர் படும்பாடு சொல்லி மாளாது. எனவே அன்பர்களே, திருப்பிச் செலுத்த இயலாது எனும் நிலையில் உள்ளோர் கடன் வாங்குவதை முற்றிலுமாகத் தவிர்த்துக்கொள்ளுங்கள். அதுவே உங்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

 

அண்மையில் ஈரோட்டில் ஒரு குடும்பத்தினர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த இயலாததால் அக்குடும்பத்திலுள்ள பெண்மணி தம் இரண்டு மகள்களுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுவிட்டு, தாமும் தற்கொலை செய்துகொண்டார். (தந்தி: 20.07.2024) பெற்ற கடனை மாதந்தோறும்  திருப்பிச் செலுத்த இயலாததால் உயிரை மாய்த்துக்கொண்டார் என்பது எவ்வளவு பெரிய சோகம்; அத்தோடு இஸ்லாமியப் பார்வையில் இது எவ்வளவு பெரிய பாவம்!

 

முஹம்மது பின் ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள் தம் தலையை வானத்தை நோக்கி உயர்த்தினார்கள். பின்னர் தம் உள்ளங்கையைத் தம் நெற்றியில் வைத்தார்கள். பிறகு, சுப்ஹானல்லாஹ், எவ்வளவு கடுமையானது இறக்கப்பட்டுள்ளது? என்று கூறினார்கள். நாங்கள் அமைதியானோம்; திடுக்குற்றோம். மறுநாள் ஆனபோது, “அல்லாஹ்வின் தூதரே! இறக்கப்பட்டுள்ள கடுமையானது என்னவோ?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “எவன் கையில் என் ஆன்மா உள்ளதோ அவன்மீது ஆணையாக! ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டு, பின்னர் உயிர்கொடுத்துக் கொல்லப்பட்டு, பின்னர் உயிர்கொடுத்துக் கொல்லப்பட்டாலும் அவர்மீது கடன் இருந்தால் அதை அவர் நிறைவேற்றுகின்ற வரை சொர்க்கத்தில் நுழையமாட்டார்என்று கூறினார்கள். (நஸாயீ: 4684/ 4605)

 

இறைவழியில் தம்முயிரைத் தியாகம் செய்த ஒரு தியாகி வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால் அதற்கான பாவம் அவருக்கு மன்னிக்கப்படாது என்றால், சாதாரண மனிதர்களின் நிலை என்னவாகும்? அதிலும் அந்தப் பெண்மணி, தம் இரண்டு பெண்பிள்ளைகளைக் கொலை செய்துள்ளதோடு, தாமும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆக, கடனைத் திருப்பிச் செலுத்தாத குற்றம், மகள்களைக் கொலைசெய்த கொலைக் குற்றம், தற்கொலை செய்துகொண்ட குற்றம் என மூவகைக் குற்றங்கள் அப்பெண்மீது உள்ளன. இத்தனைக் குற்றங்களுக்கும் மூலக் காரணம் கடன்பெற்றதுதான்.

 

பொதுவாகக் கடன்பெற்றவர், உரிய நேரத்தில் அல்லது தவணைக் காலத்தில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த இயலாததால், அந்நேரத்தைச் சமாளிப்பதற்காக எதையாவது சொல்ல நேரிடுகிறது. அதாவது நாளைக்கு வா தருகிறேன்என்பார். ஆனால் அவர் நாளைக்கு வந்தால், எப்படிக் கொடுப்பார் என்று அவருக்கே தெரியாது. எனவே அது பொய்யாகும். இவ்வாறு கடன் பெற்றவர் பேசினால் பொய்பேசுவதும்   வாக்கு மாற்றம் செய்வதும் அன்றாட நிகழ்வுகள். அதனால்தான் கடன்பெறுவதிலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பாதுகாப்புத் தேடினார்கள்.

 

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகையில் துஆ செய்யும்போது, “இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்என்று கூறுவார்கள்.  (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே!  தாங்கள் கடன் படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “மனிதன் கடன்படும் போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்என்று பதிலளித்தார்கள்.  (புகாரீ: 2397)

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பாதுகாப்புத் தேடிய கடனைப் பெறுவதில் இன்று போட்டா போட்டி நிலவுகிறது. கடனை வாங்கியாவது தம் மகளின் திருமணத்தைக் கோலாகலமாக நடத்திவிட வேண்டும் என்று கருதுகிற முஸ்லிம்கள் இருப்பதால்தான் அவர்கள் அதன்பின் சிரமப்படுகின்றார்கள். கடன் வாங்கியாவது வீட்டைக் கட்டிவிட வேண்டும் என்று நினைப்பவர்கள்தாம் அதனைக் கட்டி முடித்துவிட்டு, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவ்வீட்டையே வேறொருவருக்கு விற்றுவிட்டுச் சென்றுவிடுகின்றார்கள். கடன் வாங்கியாவது குறிப்பிட்ட அந்தக் காரை வாங்கிவிட வேண்டும் என்று நினைப்பவர்கள்தாம், கார் வாங்கிய சில மாதங்களில் அல்லது அடுத்த ஆண்டில்  அதற்கான தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாததால், அந்தக் காரை இழக்கின்றார்கள். எனவே பிறர் ஒரு பொருளை வாங்கிவிட்டதால் அதைப் பார்த்து நாமும் வாங்கிவிட வேண்டும் என்று எண்ணுவது மிகப் பெரும் தவறாகும்.  

 

வாகனங்கள், வீட்டுப் பொருள்கள், கைப்பேசிகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட எதை வாங்க வேண்டுமானாலும் அவர்களே முன்வந்து மாதத் தவணையில் கொடுக்கின்றார்கள். மாதந்தோறும் பணம் செலுத்த முடியுமானால் வாங்குவதில் சிக்கல் இல்லை. சில மாதங்கள் கட்டிவிட்டு, பிற மாதங்கள் கட்ட முடியாமல் போனால் அப்பொருளைத் திரும்பப் பெற்றுக்கொள்வார்கள். இன்று நம்முள் பலர்   மாதத் தவணையில் வீட்டையோ வாகனங்களையோ வாங்கிவிட்டு, அதற்காகக் கணவனும் மனைவியும்  ஓடோடி உழைத்து, அந்தக் கடனைச் செலுத்துகின்றார்கள்.  அதனால் அவ்விருவரும்  நிம்மதியில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். மாதந்தோறும் (இஎம்ஐ) தவணைத் தொகையைக் கட்ட வேண்டுமே என்ற கவலையும் பதற்றமும் அவர்களை அவ்வாறு ஓட வைக்கின்றன. எனவே வீடு வாங்குவோர், வாகனம் வாங்குவோர் மிகுந்த கவனத்துடன் திட்டமிடுவது அவசியமாகும். ஒரு தடவைக்குப் பல தடவை யோசிக்க வேண்டும். இல்லையேல் வாழ்நாள் முழுவதும் சிரமப்பட நேரிடலாம்.

 

கடன் கொடுத்து உதவுங்கள்என்று நாம் பிறருக்கு உபதேசம் செய்யவும் அச்சமாக இருக்கிறது. ஏனெனில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்புணர்வு அற்றவர்களாகவே பெரும்பாலோர் இருக்கின்றார்கள். இறைவனை அஞ்சி நம்பிக்கையோடு திருப்பிச் செலுத்துவோர் அரிதிலும் அரிதாகவே   இருக்கின்றார்கள். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் நோக்கம் இல்லாமலும் சிலர் கடன் வாங்குகின்றார்கள். தாம் நலமாக இருந்தால் போதும் என்ற சுயநலக் கொள்கை பலருக்கும் உள்ளது.   பிறர் நலம் பேணுவோரும் பிறரின் உரிமைகளைப் பேணுவோரும் மிக மிகக் குறைவு. அந்த வகையில்  பிறரிடமிருந்து வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் நோக்கமே இல்லாதோர் குறித்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரிக்கின்றார்கள்:  கடனை நிறைவேற்றக்கூடாது என்ற முழுமையான எண்ணத்தோடு எந்த மனிதன் கடன் வாங்குகின்றானோ அவன் திருடனாக அல்லாஹ்வைச் சந்திப்பான். (இப்னுமாஜா: 2401)

 

அல்லாஹ் திருக்குர்ஆன் கூறுகின்றான்: (இறைநம்பிக்கையாளர்களே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட)  அடைமானப் பொருள்களை அதன் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடும்படியும், மனிதர்கள் மத்தியில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்சமின்றி) நீதியாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். (4: 58)

 

கடன் வாங்காதீர்என்றுதான் சொல்கிறோமே தவிர, ‘பிறருக்குக் கடன் கொடுக்காதீர்என்று சொல்ல வில்லை. பிறர் சிரமப்படும்போது அவர்களுக்குக் கடன் கொடுத்து உதவுவது மிகப்பெரும் நன்மையாகும். அது மட்டுமின்றி கடன் பெற்றவர் அதனைக் குறிப்பிட்ட தவணைக் காலத்தில் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால் அவருக்கு அவகாசம் கொடுப்பதும், சிலநேரங்களில் கொடுத்த கடனைத் தள்ளுபடி செய்வதும் அடுத்தடுத்துக் கடன் கொடுப்பதும் அறச் செயலாகும். இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாவது: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு இரண்டு தடவை கடன் கொடுத்தால் அதில் ஒரு தடவை தர்மமாக ஆகாமல் இருப்பதில்லை. (இப்னுமாஜா: 2421)

 

ஆக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எதிலிருந்து பாதுகாப்புத் தேடினார்களோ அத்தகைய கடனிலிருந்து பாதுகாப்புத் தேடுவோம். கடன் வாங்காமல் நம்மிடம் இருப்பதையே செலவு செய்வோம். சிக்கனமான வாழ்க்கையை மேற்கொள்வதே சீரான, நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். அத்தகைய பாதுகாப்பான, நிம்மதியான வாழ்க்கையை வல்லோன் அல்லாஹ் நமக்கு வழங்குவானாக.

==============


கருத்துகள் இல்லை: