சனி, 15 ஜூன், 2019

இரவும் பகலும்


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, பிஎச்.டி.
=====================================

இரவும் பகலும் இறைவனின் இரண்டு சான்றுகள் ஆகும். மனிதன் தனக்கான வாழ்வாதாரத்தை ஈட்டிக்கொள்வதற்காகப் பகலையும் நிம்மதியாக ஓய்வெடுப்பதற்காக இரவையும் படைத்திருப்பதாக இறைவன் திருக்குர்ஆனில் கூறுகின்றான். இரவும் பகலும் மாறி மாறி வருவதில் அறிவுடையோருக்குச் சான்றுகள் உள்ளதாகவும் கூறுகின்றான். மற்றோர் இடத்தில், "நாம் இரவை ஆடையாக ஆக்கினோம். பகலை வாழ்க்கைக்குரிய(வற்றைத் தேடிக்கொள்ளும்) நேரமாக ஆக்கினோம்'' என்று கூறுகின்றான். ஆக இரவையும் பகலையும் மனிதனின் நன்மைக்காகவே படைத்துள்ளான்.

ஒருவேளை நிரந்தரமாகவே இரவாகவோ பகலாகவோ ஆக்கிவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? யார் உங்களுக்கு இரவையோ பகலையோ கொண்டு வருவார்? என்று அல்லாஹ் அறைகூவல் விடுக்கின்றான். அது குறித்து அல்கஸஸ் அத்தியாயத்தில் இறைவன் கூறுவதைப் பாருங்கள்.

(நபியே!) நீங்கள் கேளுங்கள்: "இரவை மறுமை நாள் வரை அல்லாஹ் நீட்டித்துவிட்டால், உங்களுக்கு(ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டு வரக்கூடிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறு ஒருவன் இருக்கின்றானா?'' (இதனை) நீங்கள் செவியுற மாட்டீர்களா?

(மேலும் நபியே!) நீங்கள் கேளுங்கள்: "பகலை இறுதி நாள் வரை உங்களுக்கு அல்லாஹ் நீட்டித்துவிட்டால், நீங்கள் இளைப்பாறக் கூடிய இரவை உங்களுக்குக் கொண்டு வரக்கூடிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறொருவன் இருக்கின்றானா?'' (இதனை) நீங்கள் (சிந்தித்துப்) பார்க்க வேண்டாமா? (28: 71-72)

சரி, உலகில் எங்கேனும் சூரியன் மறையாமல் பகலாகவே இருக்கிறதா என்று ஆய்வுசெய்தபோது என்னே ஆச்சரியம்! அப்படியும் சில நாடுகளை அல்லாஹ் இப்புவிப் பரப்பில் அமைத்துவைத்துள்ளான். குறிப்பிட்ட மாதங்களில் சூரியன் மறையாமல் எப்போதும் பகலாகவே நீடிக்கிறது. இங்குதான் அல்லாஹ்வின் அறைகூவல் நிதர்சனமாகிறது. அத்தகைய காலங்களில் யாரும் அந்தப் பகலை இரவாக மாற்ற முனைவதில்லை. அது மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது என்பதை நாம் எளிதாக அறிந்துகொள்ளலாம். சூரியன் மறையாமல் பகலாகவே நீடிக்கின்ற சில நாடுகள் இதோ.

நார்வே: ஆர்டிக் சர்க்கிளில் அமைந்திருக்கிறது இது. நள்ளிரவு சூரியனுக்கு இந்நாடு மிகவும் பிரபலம். இங்கே இரவில் சூரியனைக் காணவே பல்வேறு சுற்றுலாப்பயணிகள் வருகை தருகிறார்கள். இங்கே இன்னொரு சுவையான விஷயம் என்னவென்றால், சுமார் 100 ஆண்டுகள் பகலில் சூரியனே தெரியாமல் இருட்டாகவே இருந்திருக்கிறது. ஃபின்லாந்து: ஆயிரம் ஏரிகளுடன் இயற்கைச் சூழல் நிரம்பிய இடம். இங்கு கோடைக்கால ஆரம்பத்தில் சூரியன் உதிக்கிறது. அதன்பிறகு 73 நாள்கள் கழித்தே மறைகிறது. தொடர்ந்து 73 நாள்களும் சூரியனை நாம் பார்க்க முடியும். அலஸ்கா: பனிக்கட்டிகள் நிறைந்த இடம். மே முதல் ஜூலை வரை சுமார் 1440 மணி நேரங்கள் இங்கே பகலாகத்தான் இருக்கும். இந்தக் காலத்தில் சூரியன் மறையாது. ஐஸ்லாந்து: ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய தீவு இது. மே முதல் ஜூலை கடைசி வரை இங்கே சூரியன் தெரிந்து கொண்டேயிருக்கும். கோடைக்காலங்களில் நள்ளிரவில்தான் சூரியன் மறையும். மீண்டும் அதிகாலை மூன்று மணிக்குச் சூரியன் உதித்துவிடும். எங்கு பார்த்தாலும் அழகிய நீர்வீழ்ச்சிகளும் எரிமலைகளும் பனிப்பாறைகளும் மட்டும் அல்லாமல் ஏராளமான வெந்நீர் ஊற்றுகளையும் கொண்ட அழகிய நாடு. கனடா: அதிக நாள்கள் ஐஸ்கட்டி உறைந்திருக்கும் நாடுகளின் பட்டியலில் கனடா இரண்டாவது இடம் வகிக்கிறது. இங்கே கோடைக்காலங்களில் 50 நாள்கள் சூரியன் மறையாது.
ஆக இத்தனை நாடுகளில் சூரியன் தொடர்ந்து உதிக்கும் நிலையை உயர்ந்தோன் அல்லாஹ் ஏற்பாடு செய்துள்ளான். இது அவனுடைய வல்லமைக்கும் ஆற்றலுக்கும் தக்க சான்றாகும்.

இந்தத் தகவல் அண்மைக் காலத்தில்தான் மனிதனுக்குத் தெரிய வந்தது. ஆனால் இது குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே பதிவுசெய்துள்ளான். அவன் திருக்குர்ஆனில் துல்கர்னைன் குறித்துக் கூறுகின்றான். அதன் விரிவுரையில் அவர் உலகைச் சுற்றி வந்த வரலாற்றுக் குறிப்புகள் இடம்பெறுகின்றன. "முதலில் அவர் ஓரிடத்திற்குச் சென்றார். அங்கு கருஞ்சேற்று நீரில் சூரியன் மறைவதைக் கண்டார். அங்கு மக்கள் சிலர் வசித்து வந்தனர். பிறகு அவர் நெடுந்தூரப் பயணத்தை மேற்கொண்டு வேறோர் இடத்தை அடைந்தார். அங்கு சூரியன் உதித்துக் கொண்டிருந்ததைக் கண்டார். அதனையன்றி எந்தத் திரையும் இல்லாத நிலையைக் கண்டார்'' என்று அல்கஹ்ஃபு அத்தியாயத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.

முதலில் அவர் சென்றதும் இரண்டாவது சென்றதும் நீண்ட நிலப்பரப்பின் இருமுனைகள் சந்திக்கின்ற ஒரே இடம்தான் என்பதைச் சிந்தித்தால் உணர்ந்துகொள்ளலாம். ஏனெனில் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள "ஃபீ அய்னின் ஹமிஅத்தின்' என்ற சொற்கோவையிலுள்ள "ஹமிஅத்தின்' என்பது "ஹாமியத்தின்' என்றும் படிக்கப்படுகிறது. அதனடிப்படையில் "அது வெந்நீர் ஊற்று நீரில் மறைவதைக் கண்டார்'' என்று பொருள்படுகிறது. ஐஸ்லாந்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெந்நீர் ஊற்றுகள் உள்ளன என்பது உண்மைத் தகவல். அதனுள் சூரியன் மறைவதையே இங்கு அல்லாஹ் கூறுகின்றான்.

அத்தோடு "சூரியன் உதித்துக்கொண்டிருப்பதைக் கண்டார். அதற்கு அதனையன்றி எந்தத் திரையும் இல்லை'' என்பதன்மூலம் அங்கு சூரியன் மறையாமல் பகலாகவே நீடித்திருந்ததைச் சுட்டிக்காட்ட விரும்புகிறான் என்பதையும் உணர முடிகிறது. ஐஸ்லாந்தில் மே முதல் ஜூலை வரை சூரியன் மறைவதில்லை. இந்த நிகழ்வையே அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான். அதாவது பகலாகவே நீடிக்கக்கூடிய சில நாடுகளையும் இப்புவிப்பரப்பில் அவன் அமைத்துள்ளான் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

இங்கே இஸ்லாமியப் பார்வையின் அடிப்படையில் ஒரு கேள்வி எழுகிறது. தொடர்ந்து பகலாகவே நீடித்தால் அவர்கள் ஐவேளைத் தொழுகையை எவ்வாறு நிறைவேற்றுவார்கள். இதற்கான விடையை நபிமொழிகளில் தேடிப் பார்க்கும்போது அதற்கான தீர்வு கிடைக்கிறது. ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது தஜ்ஜால் குறித்துக் கூறினார்கள். அப்போது தோழர்கள் இவ்வாறு கேட்டார்கள்:

"அல்லாஹ்வின் தூதரே! அவன் பூமியில் எத்தனை நாள்கள் தங்கியிருப்பான்?'' என்று கேட்டோம். அதற்கு, "நாற்பது நாள்கள்'' என்று பதிலளித்த நபியவர்கள், "அன்றைய ஒரு நாள் ஓர் ஆண்டைப் போன்றும், மறுநாள் ஒரு மாதத்தைப் போன்றும், அதற்கு அடுத்த நாள் ஒரு வாரத்தைப் போன்றும், மற்ற நாள்கள் உங்களின் (சாதாரண) நாள்களைப் போன்றும் இருக்கும்'' என்று குறிப்பிட்டார்கள்.

நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஓர் ஆண்டிற்குச் சமமாக இருக்கும் அந்த ஒரு நாளில், வழக்கமாகத் தொழும் (ஐவேளைத்) தொழுகைகளைத் தொழுதால் போதுமா?'' என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள், "இல்லை (போதாது); அந்த (நீண்ட) நாளை, அதற்கேற்ப மதிப்பிட்டு(த் தொழுது)கொள்ளுங்கள்'' என்று பதிலளித்தார்கள். (நூல்: இப்னுமாஜா: 4065)

இந்த நபிமொழியின் அடிப்படையில், அவர்கள் தம் தொழுகைக்காகவும் நோன்புக்காகவும் மக்கா மாநகரின் நேரத்தையே பின்பற்றி வருகின்றார்கள். ஆக இறைவனின் சான்றுகளாக உள்ள இரவும் பகலும் முறையாக மாறி மாறிச் சுழன்று வந்தால்தான் மனிதன் நிம்மதியாக வாழ முடியும் என்பதை நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது.
==================




கருத்துகள் இல்லை: