புதன், 6 செப்டம்பர், 2017

“கலாம் சாட்” உருவாக்கிய இளைஞருக்குத் தமிழக அரசு 10 இலட்சம் பரிசு!


கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த 18 வயது இளைஞரான ரிபாத் சாருக் தலைமையிலான ஆறு மாணவர்கள் கொண்ட குழு உருவாக்கிய 64 கிராம் எடை கொண்ட மிகச் சிறிய செயற்கைக்கோள் சமீபத்தில், அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான “நாசா” நடத்திய போட்டியில் கலந்துகொண்டு, உலகத்தின் 57 நாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட 80,000 மாதிரிகளில் முதல் பரிசு பெற்றது.

இந்தச் செயற்கைக்கோள் கடந்த 22.6.2017 அன்று விண்ணில் “கலாம் சாட்” என்ற பெயரில் “நாசா” ஏவு தளத்திலிருந்து ஏவப்பட்டது. முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்தச் செயற்கைக்கோள் வானிலை, வான்வெளியில் உள்ள கதிர்வீச்சு, வெப்பம் ஆகியவற்றை ஆராயும் திறன் கொண்டது.

சென்னையிலிருந்து செயல்படும் “ஸ்பேஸ்கிட்ஸ்” என்ற அமைப்பு இந்த மாணவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து உதவியது. இந்தச் சாதனையை நிகழ்த்திய மாணவர்கள் ரிபாத் சாருக், யக்னா சாய், வினய் பரத்வாஜ், தனிஷ்க் திவேதி, கோபிநாத், முகம்மது அப்துல் காசிப் ஆகியோருக்கும், குறிப்பாக அந்தக் குழுவின் தலைமை விஞ்ஞானியாகச் செயல்பட்ட ரிபாத் சாருக்கிற்கும் தமிழகச் சட்டசபையில் 110-ஆவது விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளைத் தெரிவித்து அறிக்கை வாசித்தார்.

மேலும் இந்தச் சாதனையைப் படைத்து, இந்தியாவிற்கு, குறிப்பாகத் தமிழகத்திற்குப் பெருமை தேடித் தந்த மாணவர் ரிபாத் சாருக் தலைமையிலான மாணவர் குழுவினை மேலும் இதுபோன்ற பல சாதனைகள் செய்ய ஊக்கப்படுத்தும் விதமாகத் தமிழக அரசின் சார்பில் 10 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் தமது அறிக்கையில் தெரிவித்தார்.

-தகவல்: நூ. அப்துல் ஹாதி பாகவி-துணைஆசிரியர்


கருத்துகள் இல்லை: