புதன், 3 மே, 2017

மலரும் நினைவுகள்


நான் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியில் பயின்ற காலத்தில் என்னுடைய பேராசிரியர் மௌலவி நூர்முஹம்மது ஹைதர் அலீ பாகவி குறிப்பிடத்தக்கவர். எங்களுக்கு மிகச் சிறப்பாகப் பாடம் நடத்தக்கூடியவர். தொடக்க வகுப்பு முதல் ஆறாம் ஆண்டு வரை மொத்தம் ஏழு ஆண்டுகள் அவரிடம் பயின்றுள்ளேன். நான் அங்கு பயின்ற காலத்திலேயே அண்ணாமலை திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தில் (தொலைநிலை) இளநிலை வரலாறு (பி.ஏ.) பயின்று வந்தேன். அதனை அவர் ஊக்கப்படுத்தியதோடு கல்விக் கட்டணம் செலுத்துவதற்காகக் கடனுதவி கொடுத்து உதவியதையும் இந்நேரத்தில் நன்றியுணர்வோடு நான் நினைத்துப் பார்க்கிறேன்.

அவர் எங்களுக்குப் பாடம் நடத்தியதோடு தன்மான உணர்வையும் சுய மரியாதைச் சிந்தனையையும் அவ்வப்போது ஊட்டியவர். ஆலிம்கள் மிகவும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்; பிறர் கையை எதிர்பார்க்கக்கூடாது; பிறர் தரும் உணவுக்காகக் காத்திருக்கக்கூடாது உள்ளிட்ட அறிவுரைகள் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன.

சுயமரியாதையையும் தன்மான உணர்வையும் ஊட்டும்விதமாக அவர் போதித்த ஒளவைப் பாடல் ஒன்று. அதன் பெயர் நாலு கோடிப் பாடல். இப்பாடலில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு விஷயமும்  ஒரு கோடிக்குச் சமமாகும். இதோ அந்தப் பாடல்:

மதியாதார் முற்றம் மதித்தொருகால் சென்று
மிதியாமை கோடி யுறும்.

உண்ணீர் உண்ணீரென் றூட்டாதார் தம்மனையில்
உண்ணாமை கோடி யுறும்.

கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுவதே கோடி யுறும்.

கோடானு கோடிகொடுப்பினும் தன்னுடையநாக்
கோடாமை கோடி யுறும்.

(பொருள்: தம்மை மதிக்காதவர்களின் வீட்டு வாயிலில் அவரையும் ஒரு பொருட்டாகக் கருதிச் சென்று மிதியாதிருத்தல் கோடிபெறும்.

“உண்ணுங்கள் உண்ணுங்கள்” என்று உபசரிக்காதோரின் வீட்டில் உண்ணாதிருத்தல் கோடி பெறும்.

கோடிப் பொன் கொடுத்தாயினும் நல்ல குடிப்பிறப்பு உடையவர்களோடு. தோழமைகொள்வது கோடி பெறும்.

எத்தனை கோடி தந்தாலும் தன்னுடைய வாக்குத் தவறாமல் இருப்பது
(உண்மையே பேசுவது) கோடி பெறும்.)

இப்பாடலை நான் ஏழாம் வகுப்பில் படித்திருந்தாலும் இதன் பொருளெல்லாம் என் மனதில் இல்லை. இவர் போதித்த பிறகே இப்பாடலும் இதன் பொருளும் என் மனதில் நீங்கா இடம்பெற்றன.

(பின்குறிப்பு: பேராசிரியர் மௌலவி நூர்முஹம்மது ஹைதர் அலீ பாகவி தற்போது அதிராம்பட்டினத்திலுள்ள மகளிர் கல்லூரியில் முதல்வராகப் பணி மேற்கொள்கின்றார். தொடர்புக்கு: 99 44 78 33 03)

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
=================

கருத்துகள் இல்லை: