நூல் மதிப்புரைக்கு வந்திருந்த "பூபாள இராகங்கள்'' எனும் கவிதைத் தொகுப்பு நூலை எடுத்தபோது அதன்
முகப்பு அட்டை கண்ணைக் கவர்ந்தது. அதைப் புரட்டியபோது ஒவ்வொரு கவிதையின் கருவிற்கும்
ஏற்றாற்போல் அதனைப் பிரதிபலிக்கும் விதத்தில் ஒவ்வொரு படமும் இடம்பெற்றிருந்தது.
கவிதையைப் படித்தவுடன் கவிதையின் கருவும் படமும் மனதில் அப்படியே ஒட்டிக்கொள்கின்றன.
எளிய, இனிய நடையில் கவிதைகள் அமைந்துள்ளன. கவிதை என்றாலே
கடினமாக இருக்கும்; படித்தோர்தாம் புரிந்துகொள்ள முடியும் என்ற நிலையிலிருந்து
மாறி, பாமரர் படித்தாலும் புரிந்துகொள்ளும் வகையிலான
எளிய நடை. தேவையான இடங்களில் ஆங்காங்கே உவமை. 15 ஆண்டுகளாக அவ்வப்போது எழுதிய கவிதைகளை
ஒருங்கிணைத்திருப்பதாக இந்நூலின் முன்னுரை கூறுகிறது. கவிதை எழுதுவதையே தொழிலாகக்
கொள்ளாமல் அவ்வப்போது மனதில் உதிப்பதைக் கவிதையாகத் தீட்டுவதில்தான் சமூக உணர்வு
மேலிடும். அந்த உணர்வின் வெளிப்பாட்டை "பூபாள இராகங்கள்''
எனும் இந்நூலில் காணமுடிகிறது.
மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவியின் முதலாம் கவிதைத்
தொகுப்பு இனிதே அமைந்துள்ளது. அவரின் கவிதைகளுக்கு, நடைவண்டியைப் பிடித்துக்கொண்டு
நடக்கப் பழகும் ஒரு குழந்தையை அருகிலிருந்து ஆர்வமூட்டுவதைப்போல், தமிழறிஞர்கள் முனைவர் சேமுமு. முகமதலி, முனைவர் ஹ.மு. நத்தர்சா, முனைவர் ஜெ. ஹாஜாகனி
ஆகியோர் வாழ்த்துரை வழங்கி ஊக்கப்படுத்தியிருப்பது இந்நூலுக்கு அணிசேர்க்கிறது. இந்நூலை
அனைவரும் வாங்கிப் படித்து இரசிக்கும் வகையில் இதன் விலையை மிகவும் குறைவாக அமைத்துள்ளார்.
நூலை வாங்கிப் படித்து, கவிஞரை நீங்களும் ஊக்கப்படுத்தலாமே!
நூல்: பூபாள இராகங்கள் (கவிதை)
பக்கங்கள்: 150
விலை: ரூ. 100/-
வெளியீடு:
ஆயிஷா இஸ்லாமியப் பதிப்பகம்
224/733 முதல் தளம், டி.எச். சாலை,
புதுவண்ணை, சென்னை-600081
தொடர்புக்கு: 94443 54429
=========================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக