செவ்வாய், 20 டிசம்பர், 2011

சமய நல்லிணக்க கிறிஸ்துமஸ் பெருவிழா




சமய நல்லிணக்க கிறிஸ்துமஸ் பெருவிழா 
பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக நடைபெற்ற இந்த விழாவில் நான் கலந்துகொண்டு இஸ்லாமியக் கருத்துகளைக் கூறக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 

இது ஆழ்வார்பேட்டையில் உள்ள மாநகராட்சி சமூகநலக் கூடத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி, காலை 11 மணிக்கு நடைபெற்றது. 
மாலை மலர் வெளியிட்ட  புகைப்படம்.   


பாட்டாளி மக்கள் கட்சித் தலைவருக்கு அருகில் நான். (மாலைமலர்)

அழைப்பிதழில் என் பெயர் இடம்பெற்றுள்ளது. 

வெள்ளி, 16 டிசம்பர், 2011

இனிய திசைகள் (டிசம்பர் மாத இதழ் )

இனிய திசைகள் (டிசம்பர் இதழ் 15-14.01.12)

படிக்க இங்கே சொடுக்குக:

திரைப்படங்களும் முஸ்லிம்களும்

‘முஸ்லிம்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே ஓர் ஒவ்வாமை நிலையை உருவாக்கப் பல்வேறு கோணங்களில் தீய சக்திகள் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கின்றன. “அவன் கெட்டவன்”, “நாட்டுக்கு விரோதி”, “தேசத் துரோகி” என்ற மனப்பான்மையை மக்கள் மனங்களில் பதிய வைக்க அவை போட்டிபோடுகின்றன.

 மக்களை வெகுவாகச் சென்றடையக்கூடியதும் அவர்களை எளிதில் கவரக்கூடியதும் திரைப்படம். அதைக் கேளிக்கையாகப் பார்த்து, விளையாட்டாக விட்டுவிடக்கூடிய நிலையில் உருவாகி வந்த திரைப்படங்கள் இன்று முஸ்லிம்களைக் குறிவைத்துத் தாக்குவதற்காகவும் அவர்கள் கெட்டவர்கள், தீவிரவாதிகள் என்ற பொய்யான கருத்தாக்கத்தை ஏற்படுத்தவுமே தயாரிக்கப்படுகின்றன.

 தமிழக மக்களைப் பொறுத்தவரை, எதன்மூலமும் சாதிக்க முடியாததைத் திரைப்படத்தின் வாயிலாகச் சாதித்துவிடலாம். இந்தத் தமிழகத்தை இதுவரை ஆண்டவர்கள், மக்கள் சேவை செய்வதைப் போன்ற திரைப்படக் காட்சிகளால் மக்களைக் கவர்ந்ததாலேயே ஆட்சிக்கு வந்தார்கள். அத்தகைய மாபெரும் மாற்றத்தைத் திரைப்படங்கள் செய்துவருகின்றன.

 ஆகவேதான் முஸ்லிம்களுக்கு எதிரான தீயசக்திகள் முஸ்லிம்களைக் கெட்டவர்களாகக் காட்டத் திரைப்படத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்திவருகின்றார்கள். முஸ்லிம்கள் திரைப்படத்துறையைக் கையிலெடுக்கமாட்டார்கள் என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டுதான் அவர்கள் மிகத் துணிவோடு இவ்வழியைக் கையாள்கிறார்கள்.

 ரோஜா எனும் திரைப்படம் முதல் பம்பாய் எனும் திரைப்படம் வரை எடுத்தவர்கள், தொடர்ந்து அவ்வப்போது முஸ்லிம் பெயர்கள் தாங்கிய கதாபாத்திரங்களைத் தேசத்துரோகிகளாகக் காட்டிக்கொண்டே இருக்கின்றார்கள். குண்டு வைப்பவர்களும், தேசத்தைக் காட்டிக்கொடுப்பவர்களும் முஸ்லிம் கதாபாத்திரங்கள். அவர்களைக் காப்பாற்றப் போராடுபவர்களும், அதற்காக முயற்சிசெய்பவர்களும் இந்துக் கதாபாத்திரங்கள். இப்படிப்பட்ட திரைப்படங்கள் அன்று முதல் இன்று வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க யாரும் இதுவரை முன்வரவில்லை. அதற்கான வழியையும் இதுவரை நம்முள் யாரும் யோசிக்கவும் இல்லை.

 அண்மையில் வெளிவந்துள்ள இரண்டு திரைப்படங்கள் அத்தகைய திரைப்படங்களே. வானம் எனும் திரைப்படம் ஐந்து கதைக்கருவைக் கொண்டுள்ளது. அதில் ஒன்று இளவயதில் வீட்டைவிட்டுச் சென்றவன் தீவிரவாதக் கும்பலுடன் சேர்ந்து சமூக விரோதியாக மாறுவதாகச் கதை அமைந்துள்ளது.

 விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது முஸ்லிமை (அண்ணன்) வீண் வம்புக்கிழுத்து இந்துக்கள் அடிக்கின்றபோது, அதைத் தடுக்கத் தம்பி ஓடி வருகிறான். இருவரையும் அவர்கள் கண்டபடி தாக்குகின்றபோது, ஒரு காவலர் வந்து அதைத் தடுத்து அனுப்பி வைப்பதாகக் காட்சி அமைந்துள்ளது. அதில் மனமுடைந்த தம்பி வீட்டைவிட்டே சென்றுவிடுகிறான். அவனைத் தேடித்தான் அண்ணன் சென்னைக்குச் செல்கிறான்.

 அங்கு அவன் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படுகிறான். அங்கு ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு இருக்கின்ற முஸ்லிம் கதாபாத்திரங்கள் தீவிரவாதிகளாகக் காட்டப்படுகின்றனர். அவர்களுள் ஒருவன், “அழுதுகொண்டே இருக்கக்கூடாது. அழ வைக்கணும். மற்ற இடங்களில் குண்டு வைத்தால் மருத்துவமனைகளில் வந்து பிழைத்துக்கொள்வார்கள். மருத்துவமனையிலேயே குண்டு வைத்தால் யாரும் பிழைக்க முடியாது” என்று கூறுகிறான். ஒரு முஸ்லிம் கதாபாத்திரம் சொல்வதாக அமைந்துள்ள இந்தக் காட்சி முற்றிலும் அப்பட்டமானது. எந்த முஸ்லிமுடைய சிந்தனையிலும் தோன்றாதது. இப்படிக் குரூரமாகச் சிந்தித்து, அதை முஸ்லிம் கதாபாத்திரம் பேசுவதாகக் கதை அமைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

 இறுதியில், காணாமல் போன தம்பியைத் தேடிச் சென்ற முஸ்லிம் கதாபாத்திரம் குர்ஆனைக் கையில் பிடித்துக்கொண்டு, துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருக்கின்ற தீவிரவாதிகளைப் பார்த்து, “அல்முஸ்லிமு மன் சலிமல் முஸ்லிமூன மின் லிசானிஹி வயதிஹி” (தம் நாவாலும் கையாலும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப்பெற்றவர்களாக இருக்கக் காரணமானவரே உண்மையான முஸ்லிம்) என்ற நபிமொழியையும், “லைசஷ் ஷதீதுல்லதீ யக்த்துலு...” (போர்க்களத்தில் எதிரிகளை வெட்டுபவன் வீரன் அல்லன். மாறாக, தம் கோபத்தைக் கட்டுப்படுத்துபவனே வீரன்) என்ற நபிமொழியையும் உரத்து உச்சரிக்கிறது.

 முஸ்லிம் சமுதாயம் படித்துவருகின்ற நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகளை அவர்களுக்கே எடுத்துக்காட்டுகின்றார்களா? அல்லது அதையெல்லாம் அவர்கள் மறந்துவிட்டார்கள் என்று எண்ணிக்கொண்டு ஞாபகப்படுத்த முனைகின்றார்களா?ஆக, இதில் “முஸ்லிம்கள் தீவிரவாதிகள்” என்று அப்பட்டமாகக் காட்டத் தவறவில்லை.

 இரண்டாவது திரைப்படம் வேலாயுதம். பேரைக் கேட்டாலே அதில் எந்த அளவு இந்துத்துவம் உள்ளது என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம். இந்தத் திரைப்படத்தின் தொடக்கமே பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில்தான். அங்கே ஒரு முஸ்லிம் பெரியவர், உர்தூ மொழியில் பேச, அதை மற்றொருவர் தமிழாக்கம் செய்கிறார். “இந்தியாவின் அமைதியைக் கெடுக்க வேண்டும். அதற்குச் சென்னையில் ஆங்காங்கே குண்டுகள் வெடிக்க வேண்டும்.”

 அந்தத் தீவிரவாதக் குழுவுக்குத் தமிழக உள்துறை அமைச்சர் விலைபோகிறார். இப்படித் தொடங்குகின்ற இந்தத் திரைப்படத்தில், அவ்வப்போது குண்டுகள் வெடிக்கின்றன. வேலாயுதம் எனும் பெயரில் கதாநாயகன் அதைத் தடுக்கிறார். அவர் எதார்த்தமாகச் செய்வது மக்களுக்கு நன்மையாக ஆகிவிடுகிறது. எனவே மக்கள் மத்தியில் “வேலாயுதம் காப்பாற்றுவார்” எனும் நம்பிக்கை வளர்ந்துவருகிறது. இறுதியில் அந்த நம்பிக்கையைத் தகர்த்தெறிய பாகிஸ்தான்காரன் ஜிஹாத் என்று சொல்லிக்கொண்டு வருகிறான்.

 வேலாயுதத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தப்போவதாக உள்துறை அமைச்சர் கூற, அதைக் கேட்டு ஆவலோடு மக்கள் திரண்டு வருகின்றனர். மக்கள் நிறைந்துள்ள அத்திடலைச் சுற்றி குண்டுகளை வைத்துத் தகர்க்க எதிரி திட்டமிடுகிறான். “நான்தான் வேலாயுதம்” என்று அவன் தன்னை அறிமுகப்படுத்தும்போது அவனது பொய்முகம் கிழிகிறது. அப்போது அவன், “இந்தத் திடலைச் சுற்றிக் குண்டு வைத்துள்ளோம். யாரும் இங்கிருந்து தப்பிச் செல்ல முடியாது” என்று அறைகூவல் விடுக்கும்போது, உண்மையான வேலாயுதம் அதை முறியடித்து, மக்களைக் காப்பாற்றி, சில வசனங்களைப் பேசுகிறார். ஒவ்வொருவரும் வேலாயுதமாக மாறவேண்டும் என்று துணிவை வரவழைக்கிறார்.

 இத்திரைப்படம் முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கு எதிரானதாகும். இப்படத்தில் பாகிஸ்தான் முஸ்லிம்களைக் காட்டினாலும், அது முஸ்லிம்கள் என்ற பொதுவான பார்வையைத்தான் குறிக்குமே தவிர பிரித்துப் பார்க்க முடியாது. இத்தகைய இத்திரைப்படத்துக்கு நம் சமுதாயத்தில் யாரும் எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. இதிலிருந்தே “முஸ்லிம்கள் சாந்தமானவர்கள்” என்பதைத் தீயசக்திகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

 “இத்திரைப்படத்தில் வருகின்ற கதை, காட்சிகள், வசனங்கள் யாவும் கற்பனையே. இவை யாரையும், எதையும் குறிப்பிடுவன அல்ல” என்று திரைப்படம் தொடங்குமுன்னரே குறிப்பிட வேண்டும். இது திரைப்படத்தின் விதிகளுள் ஒன்றாகும். மேற்கூறப்பட்ட இரண்டு திரைப்படங்களிலும் அந்த வாசகம் இடம்பெறவே இல்லை.

 ஊடகங்கள் மூலம் முஸ்லிம்களைக் கெட்டவர்களாகவும் சமூக விரோதிகளாகவும் தேசத்துரோகிகளாகவும் கற்பனை செய்து காட்டுவது நீண்டகாலமாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் பல்வேறு கோணங்களில் முஸ்லிம்கள் சிரமத்திற்கும் துன்பத்திற்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற போக்கு காணப்படுகிறது. இதனால் வீடு வாடகைக்குப் பெறுவதுகூட மிகச்சிரமமாக உள்ளது.

 இதைக் களைய நாம் செய்ய வேண்டியதென்ன? நம்முடைய எதிர்ப்பைக் காட்டுவதோ, அதேபோல் திரைப்படம் எடுப்பதோ இல்லை. மாறாக, கதாசிரியர்களையும் தயாரிப்பாளர்களையும் நம்முள் ஒரு குழு சந்திக்க வேண்டும். அதுவே இஸ்லாமிய அழைப்புப் பணிக்குழு. அக்குழு நேரடியாக அவர்களைச் சந்தித்து, இஸ்லாம் என்ன சொல்கிறது; அது எதை நோக்கி அழைக்கிறது; திருக்குர்ஆனில் என்ன உள்ளது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். இதுவே நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி. திருக்குறளின் கூற்றுகள் பதிந்துள்ள அளவுக்குத் திருக்குர்ஆனின் கூற்றுகள் மனித நெஞ்சங்களில் பதியவில்லையே ஏன்? அதைப் புனிதமாகக் கருதி, அது முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம் என்று ஒதுக்கி வைத்ததால்தான் நம்முள் பலருக்கு அதன் அர்த்தம்கூடத் தெரியவில்லை. நமக்கே அதைப் பற்றி முழுமையாகத் தெரியாதபோது, பிறருக்கு எப்படித் தெரியும்?

 எனவே திருக்குர்ஆனின் கூற்றுகளை மற்றவர்களுக்கு எடுத்துரைப்போம்! அதன் கருத்துகளைப் பல்வேறு கோணங்களில் பரப்புரை செய்வோம்! திண்ணமாக, காலப்போக்கில் ‘முஸ்லிம்கள் சாந்தமானவர்கள்; அவர்கள் நம்முடைய நண்பர்கள்’ எனும் உண்மை உலகுக்குப் புரியும். அந்த நிலை இன்ஷா அல்லாஹ் கூடியவிரைவில் வரும். அதற்காகப் பாடுபட நாம் யாவரும் நம்மால் இயன்ற அளவு முனைவோம்!




இஸ்லாமிய இல்லறம் (நூல் விமர்சனம்)

  இஸ்லாமிய இல்லறம் (நூல் விமர்சனம்)

புதன், 16 நவம்பர், 2011

இனியதிசைகள் மாதஇதழ் (நவம்பர் 2011)

இனியதிசைகள் மாதஇதழ் (நவம்பர் 2011)

படிக்க இங்கே சொடுக்குக 

இனியதிசைகள் மாதஇதழ் (நவம்பர் 2011) 

வெள்ளி, 28 அக்டோபர், 2011

பீ.எஸ். பீ.ஜைனுல் ஆபிதீன் பாகவி - ஜும்ஆ உரை

இன்றைக்கு (28/10/2011) என்னுடைய பேராசிரியர் மௌலவி  பீ.எஸ். பீ.ஜைனுல் ஆபிதீன் பாகவி அவர்கள் நுங்கம்பாக்கம் ஜும்ஆ மஸ்ஜிதில் ஆற்றிய உரையின் சுருக்கம்:

மனிதர்கள் தத்தம் அறிவுக்கேற்பச் செயல்படுவது மார்க்கம் இல்லை. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எதைக் கட்டளையிட்டிருக்கிறார்களோ அதை அப்படியே ஏற்றுச் செயல்படுவதே மார்க்கம் ஆகும். 

ஒருவர் தொழுகாமல் பல இலட்சம் தர்மம் செய்தாலும் கடமையான இரண்டு ரக்அத்தின் நன்மையை அதில் பெற்றுக்கொள்ளவே முடியாது. 

ஒருவர் கடமையான நோன்பு நோற்காமல், பிறகு ஆயிரம் நாள் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது. 

அதுபோல் குர்பானி நாளில் குர்பானி கொடுக்காமல் அதற்குப் பகரமாக பல்லாயிரம் ரூபாயை ஏழைகளுக்குத் தானமாக வழங்கினாலும் அந்தத் தியாகத்தின் நன்மையை அடைய முடியாது. 

எனவே சில அறிவிலிகள் கூறுவதைப்போல் நீங்கள் செயல்படக்கூடாது. பக்ரீத் பெருநாளில் ஒரேநேரத்தில் பல்லாயிரம் ஆடு, மாடுகள் அறுக்கப் படுகின்றன. அதற்குப் பதிலாக அதைப் பணமாக ஏழைகளுக்குக் கொடுத்தால் அவர்கள் பயன்பெறுவார்களே. இது கேட்க நன்றாக இருக்கலாம். ஆனால் ஆட்டை அறுத்து அதில் வெளிப்படுகின்ற தியாகம் மற்ற எதிலும் நாம் பெறவே முடியாது. 

ஒவ்வொரு வணக்கத்திலும் ஒரு தத்துவம் உள்ளது.  அதை அந்தந்த வணக்கத்தில்தான் பெறமுடியும்.

தொழுகையில் நாம் நம்முடைய அடிமைத்தனத்தை அல்லாஹ்வுக்குச் சமர்ப்பிக்கிறோம்.

நோன்பில் நம்முடைய பொறுமையை, சகிப்புத்தன்மையை வெளிப்படுத்துகிறோம்.

ஸகாத்  - கொடுக்கும் தன்மையை நம்மில் வளர்க்கிறது. 
ஹஜ்- விட்டுக்கொடுப்பதை வளர்க்கிறது. 

இப்படி ஒவ்வொன்றும் ஒரு தத்துவத்தைக் கூறுகிறது. 

எனவே நாம் இந்த பக்ரீத் பெருநாளில் ஆடு, மாடுகளை அறுத்துப் பலியிட்டு அல்லாஹ்விடம் முழுமையான நற்கூலியைப் பெறுவோம். 

கேட்டவர்: மாணவர் நூ. அப்துல் ஹாதி பாகவி 

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

இமாம்கள் எழுதியவை கற்பனையா?


இமாம்கள் எழுதி வைத்தவையெல்லாம் கற்பனை என்று கூறுபவர்கள் இன்று (13\09\2011) தினகரனில் வெளிவந்துள்ள செய்தியைப் படித்துப் பார்க்கட்டும்.


வடமாநில வாலிபர்களுக்கு தர்மஅடி
மாட்டுடன் சில்மிஷத்துக்கு முயற்சி

கோவை, செப். 13:
மாட்டுடன் சில்மிஷத்துக்கு முயற்சி செய்த 4 வடமாநில வாலிபர்களை கிராமத்தினர் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையத்தில் சிமென்ட் கலவை தயாரிக்கும் தனியார் ஆலை உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த தொழிற்சாலையில் வேலை செய்யும் 4 வாலிபர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் புகுந்தனர். அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி செய்தனர். அப்போது மாடு கத்தியுள்ளது. மாட்டின் சத்தம் கேட்டு யாரும் வந்துவிடுவார்கள் என, அதன் நாக்கை துண்டாக அறுத்தனர். ரத்தம் சிந்திய நிலையில் துடித்த மாடு, பயங்கர சத்தத்தில் அலறித்துடித்தது. அதைக் கேட்டு தோட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் ஓடிவந்தனர். அவர்களை பார்த்ததும் நான்கு பேரும் தப்பிஓடினர். ஆனால் கிராம மக்கள் உதவியுடன் தோட்டக்காரர்கள் அவர்களை துரத்திப் பிடித்து, தென்னை மரத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர். காலை 8 மணிவரை போலீசார் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நால்வரையும் கயிற்றால் கட்டி இழுத்துக்கொண்டு போத்தனூர் ஓராட்டுக்குப்பை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொது மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதியம் 1 மணிக்கு நால்வரையும் மீட்டனர்.

விசாரணையில் அவர்கள் ஒரிசாவைச் சேர்ந்த வினோத்(19), நிஸ்தார்(18), டேவிட்(20), பெகோர்(22) என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். நாக்கு அறுக்கப்பட்ட மாட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அது உயிர்பிழைப்பது சந்தேகம்தான் என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


மாட்டுடன் உறவு கொள்ள முயன்றபோது கதறியதால் நாக்கை அறுத்த வடமாநில வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். 

நாக்கு அறுபட்ட மாடு
 .


சனி, 3 செப்டம்பர், 2011

இஸ்லாத்தைத் துறந்துவிட்டாள்!


அண்மையில் ஒரு சோகமான நிகழ்ச்சி நடைபெற்றது. அதைப் பகிர்ந்துகொள்ளவே இக்கட்டுரையை வரைகிறேன். பராஅத் என்றால் பாவத்திலிருந்து விடுதலை பெறுதல் என்று பொருள். அந்த நாளில் ஒருத்தி, தாய் மார்க்கமாம் இஸ்லாத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டாள். ஆம், இஸ்லாத்தைத் துறந்துவிட்டாள். விடுதலை பெற்றுவிட்டாள் என்று சொல்வதைவிட குஃப்ர் என்று நரகச் சிறைக்குள் விழுந்துவிடத் துணிந்துவிட்டாள் என்றுதான் கூறவேண்டும்.

அவளுடைய தந்தை ஒரு பள்ளிவாசலின் செயலாளர் என்பது மிகவும் வியப்புக்குரியது. ஆம், அவளுடைய தந்தைக்கு அவளுடன் சேர்த்து நான்கு பெண்பிள்ளைகள். அவள் மூன்றாமவள். அவளுடைய தந்தை, வீட்டில் தம் பிள்ளைகளையோ, மனைவியையோ தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவில்லை. தம் பெண் பிள்ளைகளைக் கண்டித்து வளர்க்கவில்லை. இஸ்லாத்தைப் போதிக்கவில்லை. மாறாக, அவர் கண்டித்ததெல்லாம், பள்ளிவாசலில் அமைதியாக மார்க்கப் பணியாற்றும் ஆலிம்களைத்தான். அப்பள்ளியில் அவரால் பாதிக்கப்பட்ட மார்க்க அறிஞர்கள் பலர் உள்ளனர். ஒவ்வொருவரும் தம் மனம் வேதனைப்பட்டுத்தான் அந்தப் பள்ளிவாசலில் இருந்து வெளியேறினர். வெளியேற்றப்பட்டனர்.

அந்தப் பள்ளிவாசலில் மார்க்கப் பணியாற்றிய ஆலிம்கள் பலர், அவர்கள் பணியாற்றிய காலத்தில் அற்ப காரணங்களுக்காக அவ்வப்போது அவரால் கண்டிக்கப்பட்டனர், எச்சரிக்கப்பட்டனர். அந்தப் பள்ளியில் பணியாற்றும் முஅத்தின்கள்தாம் அவர் வீட்டின் பணியாளர்கள். பள்ளிவாசலின் பணத்தைத் தம் சொந்தப் பணமாகக் கருதித் தாராளமாகப் பயன்படுத்துவார். வெள்ளிக்கிழமை தவிர பள்ளிக்குத் தொழ வரமாட்டார். அப்படியே வந்தாலும் அங்குள்ளவர்களைக் கண்டிக்காமல் செல்லமாட்டார். அப்படிப்பட்ட ஒரு பள்ளிவாசல் செயலாளரின் மகள்தான் இன்று இஸ்லாத்தையே தூக்கியெறிந்துவிட்டுச் சென்றுவிட்டாள்.

பள்ளிவாசல் நிர்வாகம்

பள்ளிவாசல் நிர்வாகம் யார் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்: யார் அல்லாஹ்வின்மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கைகொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஸகாத் (எனும் கட்டாய தர்மத்)தை வழங்கிவருவதுடன், அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அஞ்சவில்லையோ அவர்கள்தாம் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களைப் பராமரிப்பார்கள். அவர்களே நல்வழி பெற்றவர்களுள் அடங்குவர். (09: 18)

இன்று இத்தகையோர்தாம் பள்ளிவாசலை நிர்வாகம் செய்கின்றார்களா? சரி, அத்தகைய தகுதிகளைக் கொண்டிராவிட்டாலும், மார்க்கப் பணியாற்றுகின்ற மார்க்க அறிஞர்களையாவது சீண்டாமல் இருக்க வேண்டுமல்லவா? அவ்வப்போது சீண்டுவதையும், அவர்களுக்குத் தொல்லை கொடுப்பதையுமே தம் தொழிலாகக் கொண்டுள்ளனர் பலர். அவர்களும் மனிதர்கள்தாமே? சின்னச் சின்ன சறுகுதல்களும், பிழைகளும் இருக்கத்தான் செய்யும். அதற்காக, அதையே மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டிக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் உள்ளது?

ஒரு தந்தை தம் பெண் பிள்ளைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளாமலே பலர் தந்தைகளாக உள்ளனர். தொடக்கத்திலேயே இஸ்லாமிய மார்க்கப் போதனைகளை ஊட்டி வளர்க்க வேண்டும். பணிவு என்னும் நற்பழக்கத்தைப் போதிக்க வேண்டும். பருவ வயதை அடைந்தவுடன் அந்நிய ஆண்களின் முகம் பாராமல் இருக்கவும், தேவையில்லாமல் அந்நிய ஆடவருடன் பேசாமல் இருக்கவும் போதிக்க வேண்டும். பர்தா எனும் பாதுகாப்புக் கவசத்தைக் கட்டாயமாக அணியப் பழக்க வேண்டும். இப்படிப் பற்பல ஒழுக்கங்களையும் நன்னடத்தைகளையும் போதிக்க வேண்டும். அதன்பின் அவர்களுக்குப் பருவ வயது வந்ததும் தாமதிக்காமல், தகுந்த மணாளனைப் பார்த்து மணமுடித்துக்கொடுக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால்தான், அப்பெண் நாளை மறுமையில் பெற்றோருக்கு நரகத்தைவிட்டுக் காக்கும் திரையாக ஆவாள் என்பதை நினைவில் கொள்க.

பொதுச் சொத்தை அபகரித்தல்

பொதுவாக, பொருட்செல்வத்துக்கு அடிமையாகாமல் ஒருவர் தம்மைக் காத்துக்கொள்வது மிகவும் சிரமம். அதற்கு அடிமையாகிவிட்டால் அதிலிருந்து மீள்வது அதனினும் கடினம். அதனால்தான் பொருளைக் கையாள்கின்ற பொறுப்புக்கு இறையச்சமுடையோர் முன்வருவதில்லை. ஏனெனில் அது நல்லவனையும் கெட்டவனாக்கிவிடும் என்பது நியதி. பிறர் பொருளை அபகரித்தல் மிகப்பெரும் குற்றம் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது. அதேநேரத்தில் பொதுச்சொத்தை அபகரித்தல், அதை முறைகேடாகப் பயன்படுத்துதல் அதைவிடப் பெருங்குற்றம் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். அல்லாஹ் அதற்கு எத்தகைய தண்டனையைக் கொடுப்பான் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியாது. இதுதான் அதற்குரிய தண்டனை என்பதை நாம் கணிக்கவும் முடியாது. எனவே இது விசயத்தில் நாம் மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பதே இம்மைக்கும் மறுமைக்கும் நலன் பயக்கும்.

படிப்பினைகள்

1. ஆர்.எஸ்.எஸ். கயவர்களின் சூழ்ச்சி வலை நம்மைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ளது என்பதை நாம் இன்னும் உணராமல் இருக்கிறோம். அவர்களுடைய சூழ்ச்சிகள் பலவற்றுள் இதுவும் ஒன்று. அதை முறியடிக்க நாம் மிகுந்த எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

2. ஒரு தந்தை தம் பெண்பிள்ளைகளை இஸ்லாமியக் கலாச்சாரப் பண்பாடுகளோடு வளர்த்து உரிய பருவத்தில் அவர்களுக்கு மணமுடித்துக்கொடுக்க வேண்டும். இப்பொறுப்பை முதுகுக்குப் பின்னால் தூக்கியெறிந்ததன் விளைவே இதுபோன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடக்கக் காரணம்.

3. நம்முடைய பெண்பிள்ளைகளை அந்நிய ஆடவர்களோடு பேசவோ பழகவோ கூடாது என்று எச்சரிக்கை செய்யத் தயங்குகின்றோம். அதன் விளைவே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முக்கியக் காரணம்.

4. பொதுச்சொத்தைக் கையாளும்போது மிகுந்த கவனம் வேண்டும். அதில் சிறிதளவும் நம்முடைய பொருளோடு கலந்துவிடாமல் பேணிக்கொள்ள வேண்டும். அதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

5. மார்க்க அறிஞர்களை (ஆலிம்களை)க் குறைகூறுவதை அறவே விட்டொழிக்க வேண்டும். அவர்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் இஸ்லாமியக் கருத்துகளை எடுத்துரைக்க ஆதரவு நல்க வேண்டும்.

நடந்துவிட்ட இந்த நிகழ்வு பலரின் உள்ளத்தில் சோக வடுக்களை உண்டாக்கியிருந்தாலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற ஒரு நிகழ்வுகூட நடக்காமல் நம் சமுதாயத்தைக் காப்பதே நம் தலையாய பணியாகக் கொள்ள வேண்டும். நம் சமுதாயத்தைக் காக்க நம்மால் இயன்ற அளவு முயற்சி செய்து, எதிரிகளின் சூழ்ச்சியை வெல்ல வல்லோன் அல்லாஹ் நல்லருள் புரிவானாக!


செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

நபிமார்கள் வரலாறு நூல் வெளியீட்டு விழா (இரண்டாம் பாகம்)

நபிமார்கள் வரலாறு நூல் வெளியீட்டு விழா (இரண்டாம் பாகம்)
சமஉரிமை ஜூலை 2011



சமரசம் ஜூலை 16-31


பிறைமேடை ஜூலை 01-15, 2011
முழு விவரம் அறிய:


மக்கள் ரிப்போர்ட் ஜூலை 01-07
படிக்க

பக்கங்கள்  624
விலை        225
வெளியீடு: 
ஆயிஷா பதிப்பகம் 
திருவல்லிக்கேணி 
சென்னை

புதன், 6 ஜூலை, 2011

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 24)

இறைமறைக் குர்ஆன் இப்ராஹீமைப் புகழ்தல்

அல்லாஹ் கூறுகின்றான்: (இறைவனின் கட்டளைகளை) முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம். (53: 37) அதாவது அவருக்கு ஏவப்பட்ட அனைத்தையும் அவர் நிறைவேற்றினார். இறைநம்பிக்கைக்குரிய அனைத்துக் குணங்களையும் அதன் உட்பிரிவுகளுக்குரிய அனைத்துக் குணங்களையும் அவர் மேற்கொண்டார். அவருடைய எவ்வளவு பெரிய வேலையும், அவர் செய்ய வேண்டிய சிறிய நல்லறத்தைக்கூடத் தடுத்துவிடாது. பெரிய பெரிய நற்காரியங்களை மேற்கொள்கின்ற நேரத்தில் அவருடைய சிறிய செயல்கள் அவருக்கு மறந்துபோகா.

இப்ராஹீமை அவருடைய இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்ததை எண்ணிப் பாருங்கள். அவர் அவற்றை முழுமையாக நிறைவேற்றினார். (2: 124) என்ற வசனத்திற்கு இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள். அதாவது அல்லாஹ் அவரைத் தூய்மை எனும் செயலால் சோதித்தான். அவற்றுள் ஐந்து தலையைச் சார்ந்தவை; வேறு ஐந்து உடலோடு உள்ளவை. தலையைச் சார்ந்தவை: 1.மீசையைக் கத்தரித்தல், 2. வாய்கொப்பளித்தல், 3.பல்துலக்கு(மிஸ்வாக் செய்)தல், 4. நாசிக்குத் தண்ணீர் செலுத்துதல், 5.தலைமுடியை (மாங்கு எடுத்து நடுவே) பிரித்தல். உடலோடு உள்ளவை: 1.நகங்களை நறுக்குதல், 2. அந்தரங்க உரோமங்களைக் களைதல், 3.விருத்தசேதனம் செய்தல், 4. அக்குள் முடி(யைப் பிடுங்கிக்) களைதல், 5. மலம் மற்றும் சிறுநீர் கழித்தபின் தண்ணீரால் சுத்தம்செய்தல். (நூல்: தஃப்சீர் இப்னு அபீ ஹாத்திம்)

சயீத் பின் அல்முசய்யப், முஜாஹித், அஷ்ஷஹ்பீ, அந்நஃகயீ, அபூஸாலிஹ் மற்றும் அபுல்ஜல்த் (ரஹ்-அலைஹிம்) போன்றோரிடமிருந்து இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கையானவை ஐந்து உள்ளன. அவை: 1.விருத்தசேதனம் செய்தல், 2. அந்தரங்க உரோமங்களைக் களைதல், 3.மீசையைக் கத்தரித்தல், 4. நகங்களை நறுக்குதல், 5. அக்குள் முடி களைதல் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்) இதை இப்னு கஸீர் (ரஹ்) எடுத்துரைக்கின்றார்.

இயற்கையானவை பத்து உள்ளன. அவை: 1.மீசையைக் கத்தரித்தல், 2. தாடியை வளர்த்தல், 3.பல்துலக்கு(மிஸ்வாக் செய்)தல், 4. நாசிக்குத் தண்ணீர் செலுத்துதல், 5.நகங்களை நறுக்குதல், 6. விரல் முடிச்சுகளையும் அவற்றின் இடைகளையும் கழுவுதல், 7.அக்குள் முடி(யைப் பிடுங்கிக்) களைதல் 8.அந்தரங்க உரோமங்களைக் களைதல், 9.மலம் மற்றும் சிறுநீர் கழித்தபின் தண்ணீரால் சுத்தம்செய்தல் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: முஸ்லிம்)

முஸ்அப் (ரஹ்) கூறுகிறார்: பத்தாவ(து என்ன என்ப)தை நான் மறந்துவிட்டேன். அது `வாய்கொப்பளிப்பதாகத்தான் இருக்க வேண்டும். வகீஹ் (ரஹ்) கூறுகிறார்: `இன்த்திகாஸுல் மாஹ் என்பது மலம் மற்றும் சிறுநீர் கழித்தபின் தண்ணீரால் சுத்தம் செய்தல் ஆகும். இப்ராஹீம் (அலை) அவர்களின் வயது மற்றும் அவர் விருத்தசேதனம் செய்துகொண்டது பற்றிய விரிவான விளக்கத்தை இனிவரும் பக்கங்களில் காணலாம். இன்ஷா அல்லாஹ்.
சுருக்கமாக, இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வுக்காக தூய்மையான மனதுடன் நல்லறங்களை மேற்கொள்வதும் வணக்க வழிபாடுகளை மெத்தப் பணிவுடன் செய்வதும் அவர் தம்முடைய உடல் சுத்தத்தைப் பராமரிப்பதைவிட்டுத் தடுக்கவில்லை. அதாவது அவர் தம் தலைமுடிகளையோ நகங்களையோ அதிகமாக வளர்த்துக்கொள்வதோ, அவற்றினுள் அழுக்குகளையும் அசிங்கங்களையும் சேரவிடுவதோ கிடையாது. மாறாக, அசிங்கமானவற்றைக் களைந்து, தம் உடலின் ஒவ்வோர் உறுப்புகளையும் முறையாகப் பேணி, அவற்றை அழகாக வைத்துக்கொள்ளத் தவறியதில்லை.

`(இறைவனின் கட்டளைகளை) முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம்.’ (53: 37) என்று அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களைப் புகழ்ந்து கூறியுள்ளதின் அடிப்படையே இதுதான்.

இப்ராஹீம் நபியின் கோட்டை

அல்ஹாஃபிழ் அபூபக்ர் அல்பஸ்ஸார் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: நிச்சயமாக சொர்க்கத்தில் ஒரு கோட்டை உள்ளது. (அது முத்துக்களால் ஆனது-என்று கூறியதாக நான் எண்ணுகிறேன்). அதில் பிளவோ பலவீனமோ கிடையாது. அல்லாஹ் அதில் தன் உற்ற நண்பரான இப்ராஹீமுக்கு விருந்து ஏற்பாடு செய்துள்ளான்.1

இப்ராஹீம் நபியின் தன்மைகள்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரளி) அறிவித்துள்ளார்கள்: நபிமார்கள் எனக்கு முன்னிலையில் எடுத்துக் காட்டப்பட்டார்கள். மூசா நபி; அவர் ஆண்களுள் ஒரு வகை மனிதர்; அவர் அவலட்சணமான தோற்றமுடைய மனிதர்களுள் ஒருவரைப் போன்று காணப்பட்டார். நான் ஈசா பின் மர்யம் (அலை) அவர்களைக் கண்டேன். அவரை உர்வா பின் மஸ்ஊத் உடைய தோற்றத்தில் நான் கண்டேன். இப்ராஹீம் (அலை) அவர்களை திஹ்யத்துல் கலபீ உடைய தோற்றத்தில் நான் கண்டேன்.2 (நூல்: முஸ்னத் அஹ்மத்)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரளி) அறிவித்துள்ளார்கள்: நான் ஈசா பின் மர்யம், மூசா, இப்ராஹீம் (அலைஹிமுஸ் ஸலாம்) ஆகியோரைக் கண்டேன். ஈசா நபி சிவப்பானவர்; சுருட்டைமுடி நிறைந்தவர்; விசாலமான மார்புடையவர். மூசா நபி (கோதுமை போன்ற) பழுப்பு நிறமுடையவர்; பருமனானவர். அப்போது, (அப்படியானால்) இப்ராஹீம் நபி? என்று வினவினார்கள். நீங்கள் உங்கள் தோழரைப் பாருங்கள் என்று (தம்மைச் சுட்டிக்காட்டிக்) கூறினார்கள். (நூல்: முஸ்னத் அஹ்மத்) முஜாஹித் (ரஹ்) அறிவிக்கிறார்: இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் (சபையில்) இருந்தபோது மக்கள் தஜ்ஜாலின் இரண்டு கண்களுக்கிடையே (நெற்றியில்) `காஃபிர் (இறைமறுப்பாளன்) என்றோ, `காஃப் ஃபா ரா என்றோ எழுதப்பட்டிருக்கும் (என்பது உண்மையா?) என்று பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள், நான் அவ்வாறு செவியுறவில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்கள் (எத்தகைய தோற்றமுடையவராக இருந்திருப்பார் என்று தெரிந்துகொள்ள) உங்கள் தோழரான என்னைப் பாருங்கள்! மூசா (அலை) அவர்களோ சுருள்முடி கொண்டவர்களாகவும், (கோதுமை போன்ற) பழுப்பு நிறமுடையவராகவும் இருந்தார்.

ஈச்சை மர நாராலான கடிவாளம் இடப்பட்ட சிவப்பு வண்ண ஒட்டகத்தின் மீது சவாரி செய்வார். அவர் (ஹஜ்ஜின்போது `அல்அரக் எனும்) பள்ளத்தாக்கில் இறங்குவதை (இப்போதும்) நான் காண்பதைப் போன்று உள்ளது என்று கூறியதை நான் கேட்டேன். (நூல்: புகாரீ)3

மரணம் இப்னு ஜரீர் (ரஹ்) தம்முடைய வரலாற்று நூலில் கூறுகிறார்: இப்ராஹீம் (அலை) நும்ரூத் பின் கன்ஆன் என்ற அரசனின் காலத்தில் பிறந்தார். நும்ரூத் பின் கன்ஆன் என்பவன் பிரபலமான அரசன் அள்ளஹ்ஹாக் ஆவான். அவன் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்று கூறப்படுகிறது. அவன் மிக அதிகமாக அநியாயமும் அட்டூழியமும் செய்துவந்தான்.
அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர்: நூஹ் (அலை) தூதராக அனுப்பப்பட்ட பனூ ராசிப் உடைய குலத்தில் ஒருவனாக அவன் இருந்தான். அவன் அந்நேரத்தில் உலகையே ஆள்கின்ற அரசனாக இருந்துவந்தான். அவனது ஆட்சிக் காலத்தில் ஒரு நாள், ஒரு நட்சத்திரம் தோன்றியது. அது சூரியன் மற்றும் சந்திரனின் ஒளியையே மங்கச் செய்துவிட்டது. அக்கால மக்கள் அதைக் கண்டு திடுக்கிட்டனர். அந்தக் கொடுங்கோல் அரசன் நும்ரூதும் பயந்தான். எனவே குறிகாரர்களையும் நட்சத்திரங்களைப் பற்றித் தெரிந்தவர்களையும் அவன் ஒன்றுதிரட்டி, அவன் அது பற்றி அவர்களிடம் கேட்டான். உன் ஆட்சிப் பகுதியில் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது. அவருடைய கையில்தான் உம்முடைய ஆட்சி முடிவுக்கு வர இருக்கிறது என்று அவர்கள் கூறினர். இதைக் கேட்ட அந்த அரசன், ஆண்கள் தம் மனைவியரோடு இணைவதைத் தடுக்கவும், அந்நேரத்திலிருந்து அவ்வூரில் பிறக்கின்ற குழந்தைகள் அனைத்தையும் கொன்றிடவும் கட்டளையிட்டான். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில்தான் இப்ராஹீம் நபி பிறந்தார். எனவே, அல்லாஹ் அந்தப் பாவிகளின் சூழ்ச்சியிலிருந்து அவரைப் பாதுகாத்துவிட்டான். அதன்பின் அவர் வாலிபராக ஆனார். அல்லாஹ் அவரை நல்ல முறையில் வளர்த்து வந்தான். பின்னர், அவருடைய வாழ்க்கையில் என்னென்ன நடக்க வேண்டுமோ அவையெல்லாம் நடந்து முடிந்தன. அவை பற்றிய தகவல்கள் ஏற்கெனவே சென்று விட்டன.

அவர் பிறந்த இடம் சவ்ஸ் ஆகும். பாபில் என்றும் கூறப்படுகிறது. கூஸாவின் ஓரத்தில் அமைந்துள்ள சவாத் என்றும் கூறப்படுகிறது. அவர் டமாஸ்கசின் கிழக்கே அமைந்துள்ள பரஸா எனுமிடத்தில் பிறந்தார் என்று இப்னு அப்பாஸ் (ரளி) கூறியுள்ள நபிமொழி ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது. அல்லாஹ் நும்ரூதை, இப்ராஹீம் நபியின் கையால் அழித்தபின், அவர் ஹர்ரான் எனும் ஊரை நோக்கிப் புறப்பட்டார். பின்னர், சிரியா (ஷாம்) நோக்கிச் சென்றார். பின்னர், நாம் ஏற்கெனவே கூறியுள்ளபடி, அவர் ஈலியா என்ற ஊரில் தங்கினார். அங்குதான் அவருக்கு இஸ்மாயீல் மற்றும் இஸ்ஹாக் எனும் இரண்டு மகன்கள் பிறந்தனர்.

சார்ரா (அலை) அவர்களின் மரணம்

கன்ஆன் நாட்டிலுள்ள ஹப்ரூன் எனும் சிற்றூரில் சார்ரா (அலை) அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு முன்பே மரணித்துவிட்டார். வேதக்காரர்கள் கூற்றுப்படி, அவர் மரணித்த போது அவருடைய வயது 127 ஆகும். அவரின் மரணத்தை நினைத்து இப்ராஹீம் (அலை) மிகவும் வருந்தினார். அவர் மீது அல்லாஹ் இரக்கம்காட்டுவதற்காக அல்லாஹ்விடம் அழுது பிரார்த்தனை செய்தார். மேலும், பனூஹீஸ் குலத்தைச் சார்ந்த, இஃப்ரூன் பின் ஸஃக்ர் என்பாரிடமிருந்து மஹாரா என்ற இடத்தை 400 (ஏறத்தாழ 1600 கிராம்) வெள்ளிக்கு வாங்கி, தம் துணைவியின் பிரேதத்தை அங்கேயே நல்லடக்கம் செய்துவிட்டார்.

இஸ்ஹாக் நபிக்கு மணம் பேசுதல்

இப்ராஹீம் (அலை) தம்முடைய மகன் இஸ்ஹாக்கிற்கு ரிஃப்கா என்ற பெண்ணை மணம் பேசினார். அப்பெண்ணைத் தம் மகனுக்கு மணமுடித்து வைத்தார். இவர் ரிஃப்கா பின்த் பத்தூஈல் பின் நாஹூர் பின் தாரிக் ஆவார். அவருடைய மவ்லா, அப்பெண்ணுடைய நாட்டிலிருந்து அவருக்காக ஓர் ஒட்டகச் சுமையை ஏற்றி அனுப்பினார். அவருடன் பாலூட்டுகின்ற ஒரு பெண்ணும் அவருடைய அடிமைப் பெண்களும் இருந்தனர்.

இப்ராஹீம் நபியின் திருமணம்

இப்ராஹீம் (அலை) கன்தூரா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அப்பெண், ஸம்ரான், யக்ஷான், மாதான், மத்யன், ஷியாக், ஷூஹ் ஆகிய பிள்ளைகளைப் பெற்றெடுத்தார். இவர்கள் மூலம் பிறந்த குழந்தைகள் அனைவரையும் கன்தூராவின் குழந்தைகள் என்று கூறுகின்றனர். இப்ராஹீம் (அலை) அவர்களிடம், உயிரைக் கைப்பற்றுகின்ற வானவர் (மலக்குல் மவ்த்) வந்ததைப் பற்றி வேதக்காரர்கள் அதிகமான செய்திகளைக் கூறியுள்ளனர். இச்செய்தியை முற்கால அறிஞர்கள் பலரிடமிருந்து இப்னு அசாகிர் (ரஹ்) அறிவித்துள்ளார். இவை சரியானவையா என்பதை அல்லாஹ்வே நன்கறி வான். இப்ராஹீம் (அலை) திடீரென இறந்துவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோலவே சுலைமான் (அலை), தாவூத் (அலை) இருவரும் திடீரென இறந்துவிட்டார்கள். இதை வேதக்காரர்களும் மற்றவர்களும் இதற்கு மாற்றமாகவே கூறுகின்றார்கள்.

இப்ராஹீம் நபியின் மரணதறுவாய்

பின்னர் இப்ராஹீம் (அலை) அவர்கள் நோய்வாய்ப்பட்டார். அவர் தம் 175ஆம் வயதில் மரணமடைந்தார். 190ஆம் வயதில் மரணமடைந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. அவர் மஹாரா எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார். அது ஹப்ரூன் என்ற இடத்தில் உள்ளது. இஃப்ரூன் அல்ஹீஸீ என்பாருடைய வயல்வெளியில், அவருடைய துணைவி சார்ரா (அலை) அவர்களோடு அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார். அவரை நல்லடக்கம் செய்கின்ற பொறுப்பை அவருடைய மகன்களான இஸ்மாயீல் (அலை) மற்றும் இஸ்ஹாக் (அலை) இருவரும் ஏற்றுக்கொண்டனர். இப்ராஹீம் (அலை) அவர்கள் இருநூறு ஆண்டுகள் வாழ்ந்தார் என்று இப்னு அல்கல்பீ (ரஹ்) கூறுகிறார். (நூல்: தாரீக் அத்தப்ரீ)

இப்ராஹீம் (அலை), அவர்தம் நூற்று இருபதாம் வயதில் (கதூம் எனும்) வாய்ச்சியால் விருத்தசேதனம் செய்துகொண்டார். அதன் பிறகு அவர் எண்பது ஆண்டுகள் வாழ்ந்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: இப்னு ஹிப்பான்)4
இப்ராஹீம் (அலை), அவர்தம் நூற்று இருபதாம் வயதில் விருத்தசேதனம் செய்துகொண்டார். அதன் பிறகு அவர் எண்பது ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் (கதூம் எனும்) வாய்ச்சியால் விருத்தசேதனம் செய்துகொண்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: இப்னு ஹிப்பான்)

(இப்ராஹீம் நபி விருத்த சேதனம் செய்த போது) அவருக்கு எண்பது வயது ஆகிவிட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். இதை அல்ஹாஃபிழ் இப்னு அசாகிர் (ரஹ்) பதிவுசெய்துள்ளார்.

அல்கதூம் என்பது (அவர் விருத்தசேதனம் செய்துகொண்ட) கிராமத்தின் பெயராகும் என்று அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) கூறியதை இப்னு ஹிப்பான் (ரஹ்) அறிவித்துள்ளார்.

(இப்னு கஸீர் ஆகிய) நான் கூறுகிறேன்: புகாரீயில் வந்துள்ள, அவருக்கு எண்பது வயதானபோது அவர் விருத்த சேதனம் செய்துகொண்டார் என்பதும், மற்றோர் அறிவிப்பில், அவர் எண்பது வயதாக இருந்தபோது (விருத்தசேதனம் செய்துகொண்டார்) என்பதும் ஒன்றுக்கொன்று முரண் இல்லை. ஏனென்றால், அவர் அதன் பின்னர் எண்பது ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அல்லாஹ்வே நன்கறிபவன்.


இப்ராஹீம் நபியின் சிறப்புகள்

முதன் முதலில் முழுக்கால் சட்டை (சுர்வால்-பேண்ட்) அணிந்தவர் இப்ராஹீம் (அலை) ஆவார். முதன் முதலில் தலைமுடிகளை இரண்டாகப் பிரித்து (மாங்கெடுத்துச்) சீவிக்கொண்டவர்; முதன் முதலில் அந்தரங்க உரோமங்களைக் களைந்தவர்; தம்முடைய நூற்று இருபதாம் வயதில் (கதூம் எனும் வாய்ச்சியால்) கட்டைகளைச் செதுக்கும் கருவியால் முதன் முதலில் விருத்தசேதனம் செய்துகொண்டவர்; அதன் பிறகு, எண்பது ஆண்டுகள் வாழ்ந்தார்; முதன் முதலில் விருந்தாளிக்கு உணவளித்து உபசரித்தவர்; முதன் முதலில் நரைமுடி வரப்பெற்றவர் இவரே ஆவார் என்று அபூஹுரைரா (ரளி) கூறுகின்றார்கள். முஹம்மத் பின் இஸ்மாயீல் அல்ஹஸ்ஸானீ (ரஹ்) இதை அறிவித்துள்ளார்.

இப்ராஹீம் நபியே, முதன் முதலில் விருந்தாளிக்கு உணவளித்து உபசரித்தவர்; மக்களுள் முதன் முதலில் விருத்தசேதனம் செய்துகொண்டவர்; தம்முடைய மீசையை முதன் முதலில் கத்தரித்துக்கொண்டவர்; முதன் முதலில் நரைமுடியைப் பார்த்தவர். அந்த நரைமுடியைப் பார்த்து, இறைவா! இது என்ன? என்று வினவினார். உயர்ந்தோன் அல்லாஹ், (அது) கண்ணியம் (கம்பீரம்) என்று பதிலளித்தான். இறைவா! (அப்படியானால் கம்பீரத்தை) கண்ணியத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக! என்று கூறினார் என சயீத் பின் அல்முசய்யப் (ரளி) கூறியுள்ளார்கள். (நூல்: முஅத்தா)

மற்றவர்கள் மேற்கண்ட இரண்டையும்விட சற்று அதிகப்படுத்திக் கூறியுள்ளார்கள். அதாவது தம்முடைய மீசையை முதன் முதலில் கத்தரித்துக்கொண்டவர்; முதன் முதலில் அந்தரங்க உரோமங்களைக் களைந்தவர்; முதன் முதலில் முழுக்கால் சட்டை (சுர்வால்-பேண்ட்) அணிந்தவர். அவருடைய மண்ணறை, அவருடைய மகன் இஸ்ஹாக் உடைய மண்ணறை, இஸ்ஹாக் உடைய பிள்ளை யஅகூப் (அலை) அவர்களுடைய மண்ணறை யாவும் மர்பஆ எனும் இடத்தில் உள்ளன. அதை சுலைமான் பின் தாவூது (அலை) ஹப்ரூன் எனும் ஊரில் கட்டினார். அது இன்று, `ஃகலீல் எனும் பெயரில் அறியப்படுகிறது. மேற்கண்ட இத்தகவல்கள் அனைத்தும் தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கப்பட்டவை ஆகும். பனூ இராயீல் காலத்திலிருந்து நம்முடைய இக்காலம் வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதாவது, அவருடைய மண்ணறை மர்பஆ எனும் இடத்தில் கண்டிப்பாக உள்ளது. ஆனால், அங்கே `இதுதான் என்று ஒரு மண்ணறையைச் சுட்டிக்காட்ட இயலாது. எனவே, அந்த இடம் முழுவதையும் நல்ல முறையில் பேணுவதும் கண்ணியப்படுத்துவதும் அவசியமாகும். அதன் ஓரங்களை மிதிக்காமல் காப்பதும், அவ்விடத்தை மேன்மைப்படுத்துவதும் அவசியமாகும். ஏனென்றால், அங்கு இப்ராஹீம் நபியின் மண்ணறை இருக்கலாம்; அல்லது அதன்கீழ் அவரின் பிள்ளைகளுள் யாரேனும் ஒரு நபியின் மண்ணறை இருக்கலாம்.
வஹ்ப் பின் முநப்பிஹ் கூறுவதாக இப்னு அசாகிர் (ரஹ்) கூறுகிறார்: இப்ராஹீம் நபியின் மண்ணறை அருகே உள்ள கல்லில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

அறிவிலியை அவனுடைய மேலெண்ணம் வீணாக்கிவிட்டது.
யாருடைய தவணை வந்துவிட்டதோ அவர் மரணமடைகிறார்.
யார் மரணத்தை நெருங்கிவிட்டாரோ, அவருக்கு
அவருடைய சூழ்ச்சி ஏதும் பயனளிக்காது.
அவருடைய முன்னோர்களெல்லாம் இறந்துவிட
பின்னோராகிய இவர் மட்டும் எப்படி நீடித்திருக்க முடியும்? எந்த மனிதருக்கும் அவருடைய நற்செயல்களே அவரோடு மண்ணறையில் (துணையாக) வரும். (நூல்: தாரீக் திமஷ்க்)

இப்ராஹீம் நபியின் பிள்ளைகள்

இப்ராஹீம் நபிக்கு, முதன் முதலில் ஹாஜிர் மூலம் பிறந்தவர் இஸ்மாயீல் (அலை) ஆவார். அவர் எகிப்து நாட்டில் கிப்தீ வமிசத்தைச் சார்ந்தவர் ஆவார். பின்னர், சார்ரா (அலை) மூலம், இஸ்ஹாக் பிறந்தார். சார்ரா (அலை), இப்ராஹீம் (அலை) அவர்களின் சிற்றப்பா மகள் ஆவார். பின்னர், அவர் கன்தூரா என்ற பெண்ணை மணந்துகொண்டார். இவர் யக்துன் உடைய மகள் ஆவார். இவர் கன்ஆன் நாட்டைச் சார்ந்தவர். இவருக்கு ஆறு பிள்ளைகள் பிறந்தனர். அவர்கள்: மத்யன், ஸம்ரான், சர்ஜ், யக்ஷான், நஷக் ஆவர். ஆறாம் பிள்ளைக்குப் பெயர் சூட்டவில்லை. பின்னர், அவர் ஹஜூன் எனும் பெண்ணை மணந்துகொண்டார். இவருடைய தந்தை பெயர் அமீன் ஆகும். இவருக்கு ஐந்து பிள்ளைகள் பிறந்தனர். அவர்கள்: கைசான், சூரஜ், உமைம், லூத்தான், நாஃபி ஆவர். (நூல்: அத்தப்ரீ)

இவ்வாறுதான் அபுல்காசிம் அஸுஹைலீ (ரஹ்) தம்முடைய `அத்தஅரீஃப் வல்இஹ்லாம் எனும் நூலில் கூறியுள்ளார்.

----------அடிக்குறிப்புகள்------------


1) இதேபோன்ற நபிமொழியை அந்நள்ர் பின் ஷுமைல் (ரஹ்) நமக்கு அறிவித்துள்ளார் என்று அல்பஸார் (ரஹ்) கூறுகிறார். இந்த நபிமொழியை யஸீத் பின் ஹாரூன் மற்றும் அந்நள்ர் பின் ஷுமைல் இவ்விருவர்தாம் ஹம்மாத் பின் சலமாவோடு இணைத்துள்ளனர். இவ்விருவரைத் தவிர மற்றவர்கள் இந்த நபிமொழியை நபித்தோழர்கள் வரைதான் (மவ்கூஃப்) இணைத்து அறிவித்துள்ளார்கள் என்று அல்பஸார் கூறியுள் ளார். இந்தக் காரணம் மட்டும் இல்லையென்றால் இந்நபி மொழி `ஸஹீஹ் உடைய நிபந்தனைக்குள் வந்திருக்கும் என்று இப்னு கஸீர் (ரஹ்) கூறுகிறார்.

2. இந்த முறையில் இந்த வார்த்தைகளுடன் வந்துள்ள இந்நபிமொழியை அஹ்மத் (ரஹ்) மட்டுமே அறிவித்துள்ளார்.

3. இவ்வாறே புகாரீ மற்றும் முலிம் நூல்களில் வேறு சில வழிகளிலும் இந்த நபிமொழி பதிவுசெய்யப்பட்டுள்ளது.

4. இக்ரிமா மூலம் அபூஹுரைரா (ரளி) அவர்கள் வரை செல்கின்ற ஒரு நபிமொழியை அல்ஹாஃபிழ் இப்னு அசாகிர் (ரஹ்) அறிவித்துள்ளார்.


அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.



                                                                                                                           (முற்றும் )