ஞாயிறு, 9 டிசம்பர், 2018

ஏகத்துவ நம்பிக்கை!



-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

ஒவ்வொரு மதத்தாருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை உள்ளதைப்போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொருவரும் தத்தமது நம்பிக்கையின் அடிப்படையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.  அவர் நம்பிய தெய்வத்தின்மீது கடவுள்மீதும் சிலைகள்மீதும் நம்பிக்கை வைத்துள்ளார். அவரின் நம்பிக்கைக்கேற்பவே அவரது கடவுள் அவருக்கு எல்லாவற்றையும் வழங்குவதாக நம்பிக்கொண்டிருக்கிறார். ஆனால் பிரபஞ்சங்களைப் படைத்த ஒரே இறைவன் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நம்பிக்கை ஒன்றே ஒன்றுதான். அதுதான் ஏகத்துவ நம்பிக்கை. அந்த ஒரே இறைவன்மீது நம்பிக்கை கொள்வதோடு வேறு யாரையும் அவனுக்கு நிகராகக் கருதாமல் இருக்க வேண்டும். அவர்தாம் ஏகத்துவவாதி ஆவார்.

நம்மைப் படைத்த இறைவன் ஒருவனே. அவனே நம்மைப் பாதுகாப்பவன். அவனே நம் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறான். நோயைக் கொடுப்பதும் அதை நீக்குவதும், பசியைக் கொடுப்பதும் அதற்கான உணவைக் கொடுப்பதும், தாகத்தைக் கொடுப்பதும் அதற்கான நீரைக் கொடுப்பதும் எல்லாம் அவனே. அன்றாட வாழ்வில் நமக்கு ஏற்படும் எல்லாவித இன்ப-துன்பங்களுக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். அவனே நமக்கு  இன்பத்தைக் கொடுக்கிறான். அவன் நாடினால் சிலவேளை நமக்குத் துன்பத்தைக் கொடுக்கிறான். இரண்டு வேளைகளிலும் அவனிடமே நாம் கையேந்தவேண்டும். இன்ப வேளையில் நம் நன்றியை அவனுக்கு உரித்தாக்க வேண்டும். துன்பம் ஏற்படும்போது அத்துன்பத்தை நீக்க அவனிடமே கையேந்திக் கேட்க வேண்டும்.

மக்கள் சிலர் கற்சிலைகள்மீதும், வேறு சிலர் உருவப் படங்கள்மீதும், வேறு சிலர் யேசு எனும் ஈஸா நபிமீதும், வேறு சிலர் இறந்துவிட்ட இறைநேசர்கள்மீதும்-இப்படிப் பல்வேறு வகையான நம்பிக்கைகள் கொண்டுள்ளனர்.  வேறு சிலர் ஒரே இறைவன்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் அதேவேளையில், ஏதாவது துன்பம், துயரம் ஏற்பட்டால் அத்துன்பத்தை நீக்க எங்கேனும் ஒரு தர்ஹாவிற்குச் சென்று, அங்கு துஆ செய்கிறார்கள். அங்கு சென்று வந்த பின் அத்துன்பம் நீங்கிவிட்டால், அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள இறைநேசர்மீது நம்பிக்கை வந்துவிடுகிறது. அதன்பிறகு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அங்கு செல்லத் தொடங்கிவிடுகின்றார்கள். அங்குள்ள இறைநேசர் மீது அளவுகடந்த நம்பிக்கை மனத்தில் பதிவாகிவிடுகிறது. இதைத்தான் தவறான நம்பிக்கை என்கிறோம்.

சிலர் கேட்கலாம். அவர் அங்கு சென்றுவந்த பிறகுதானே அவருடைய துன்பம் நீங்கியது. அதனால் அந்த இறைநேசர் அல்லாஹ்விடம் துஆ செய்ததால்தான் அல்லாஹ் அவருடைய துஆவின் பொருட்டால் அவருக்கு அத்துன்பத்தை நீக்கினான். எனவே அவர் மீண்டும் மீண்டும் அங்கு செல்வதில் என்ன தவறு? இப்படித்தான் ஷைத்தான் மனிதர்களை வழிகெடுக்கிறான். இறைவன்மீது கொள்ள வேண்டிய நம்பிக்கையை பிறர்மீது வைக்குமாறு இப்படித்தான் மடை மாற்றுகிறான். அதற்கான விடை என்னவெனில், அவர் அங்கு செல்லாவிட்டாலும் குறிப்பிட்ட காலத்தில் அவருடைய துன்பம் நீங்குமாறு இறைவிதி இருந்தால், அவ்வாறே அது நீங்கிவிடும். ஆக, இறைவன்தான் நீக்குகிறானே தவிர, அந்த இறைநேசரின் துஆ அல்ல என்பதை எவ்வாறு புரிய வைக்க முடியும்?

ஒருவர் தமக்குக் குழந்தை இல்லை என்று நீண்ட காலமாக வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். பிறகு யாரோ ஒருவர் சொல்ல, அவர் குறிப்பிட்ட தர்ஹாவிற்குச் சென்றார். அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளவரிடம் துஆ கேட்டார். பின்னர் குறிப்பிட்ட காலத்தில் அவருக்குக் குழந்தை பிறந்தது. இப்போது அவர் அந்த தர்ஹாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள இறைநேசர்மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளார். எதைக் கேட்டாலும் அவர் கொடுத்துவிடுவார் என்று நம்பத்  தொடங்கிவிட்டார். இதுதான் தவறான நம்பிக்கையாகும். இவ்வாறுதான் இன்றைய அறியாமக்கள் பலர் தம் ஈமானை இழந்துகொண்டிருக்கின்றார்கள்.
யார் அல்லாஹ்வைச் சார்ந்திருக்கிறாரோ அவருக்கு அவனே போதும்” (65: 3) என்று அல்லாஹ் கூறிவிட்ட பிறகு, பிறவற்றின்மீது நம்பிக்கை கொள்ளவேண்டிய அவசியம் என்ன? நன்மையும் தீமையும் இறைவனின் ஏற்பாட்டின்படியே நடைபெறுகிறது என்று நம்பியுள்ள ஓர் இறைநம்பிக்கையாளர் பிறர்மீது-உயிருள்ளவரோ, இறந்தவரோ-நம் துன்பத்தை நீக்குவார் என்றோ, குழந்தையைத் தருவார் என்றோ எவ்வாறு நம்பிக்கைகொள்ளலாம்?
ஸியாரத் செய்வதன் நோக்கம் என்ன? மரணத்தை நினைவுகூர்வதும், இவ்வுலக வாழ்வில் பற்றின்மை ஏற்படுவதும்தானே நோக்கம்? அதை விட்டுவிட்டு, “நான் அந்த தர்ஹாவிற்குச் சென்றேன்; என் தேவைகளைக் கூறி துஆச் செய்தேன்; அந்த வலியுல்லாஹ்வின் துஆவால் எனக்கு என் தேவை நிறைவேறிவிட்டது" என்று சொல்வது எப்படிச் சரியாகும்? இவ்வாறு சொல்வது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயல் இல்லையா?
இப்படித்தான் தவறான நம்பிக்கையுடையோரை அவரவர் வழியிலேயே அல்லாஹ் விட்டுவிடுகின்றான்.  அவர் எதை நம்பிச் செயல்படுகின்றாரோ அந்த நம்பிக்கையிலேயே அவர் தொடர்கிறார். ஷைத்தான் அவனுடைய நம்பிக்கையை மேன்மேலும் வளர்க்கிறான். அவருடைய நாட்டமெல்லாம் நிறைவேறுவதைப்போல் காட்டுவான்.  இவ்விடத்தில் முஸ்லிம்கள் ஒரு கணம் நின்று நிதானமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதாவது, முஸ்லிம் அல்லாத மக்கள் தத்தம் கடவுளான கற்சிலைகளை வணங்குகின்றார்கள். நாங்கள் இந்தக் கடவுளை வணங்குவதால்தான் நிம்மதியாக வாழ்கிறோம்என்று அவர்களும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.  அப்படியென்றால் அல்லாஹ்வை வணங்காத அவர்களுக்கு உணவளிப்பவன் யார்? ஆரோக்கியத்தைக் கொடுப்பவன் யார்? அந்தக் கற்சிலைகள்தாம் அவற்றையெல்லாம் செய்கின்றன என்று ஒரு முஸ்லிம் சொல்வானா? அல்லாஹ்தானே கொடுக்கின்றான்? ஏனென்றால் இவ்வுலகில் அவன் தன்னை வணங்குகின்ற, வணங்காத அனைவர்மீதும் அன்புடையவன்; கருணையாளன்.

அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் நிச்சயமாக எங்களை அணுகாது. அவன்தான் எங்களுடைய இறைவன்என்று (நபியே) நீங்கள் கூறுங்கள்.

 இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்வையே சார்ந்திருக்கட்டும். (9: 51) இந்த இறைவசனத்தின் பொருளை முழுமையாக விளங்காததால்தான் இன்றைய முஸ்லிம்கள் பலர் தமக்குத் துன்பம் வரும்போது துவண்டுவிடுகின்றார்கள். அதை நீக்க எதையும் செய்யத் துணிந்துவிடுகின்றார்கள். அல்லாஹ் விதித்ததைத் தவிர வேறெதுவும் நம்மை அணுகாதுஎன்ற ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்கள் எதையும் அலட்டிக்கொள்ளாமல் அல்லாஹ்வின்மீது மட்டும் நம்பிக்கைகொண்டு, மிக இயல்பாக இருக்கின்றார்கள். அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பம் எவ்வழி வந்ததோ அவ்வழியே திரும்பிச் சென்றுவிடுகின்றது.  

இறைநம்பிக்கையாளர்களின் நம்பிக்கைகள் சிதறிப்போய்விட்டன. ஒரே இறைவன்மீது வைக்க வேண்டிய நம்பிக்கையை இங்கு கொஞ்சம், அங்கு கொஞ்சம், அதில் கொஞ்சம், இதில் கொஞ்சம் எனப் பிரித்துப் பிரித்து வைத்திருப்பதால்தான் ஏக இறைவனை வணங்கியும் ஏற்றம் பெறாமல் இருக்கிறார்கள் பலர். ஒரே இறைவன்மீது நம்பிக்கை வலுவாக இல்லை. பரவலாகக் காணப்படுகின்ற சூரிய வெப்பத்தைக் குவியாடி (லென்ஸ்) மூலம் ஒரே இடத்தில் குவித்தால் அதன் கீழுள்ள காகிதம் தீப்பற்றி எரிவதைக் காணலாம். அதுபோலவே நம் நம்பிக்கை முழுவதும் ஒரே இறைவன்மீது குவிந்திருந்தால் நினைத்ததைச் சாதிக்கும் ஆற்றலையும் மனவலிமையையும் அல்லாஹ் நமக்கு வழங்கிடுவான். அது மட்டுமின்றி, அப்போதுதான் ஈமானின் சுவையை நாம் உணர முடியும்.

நோய் ஏற்படும்போது அறியாமக்கள் தாயத்து, தகடு, முடிகயிறு எனப் பல்வேறு வடிவங்களில் அதற்கான தீர்வைத் தேடுகின்றார்கள். அல்லாஹ்வைத் தவிர யாரும் நமக்கு நன்மையையோ தீமையையோ செய்துவிட முடியாது என்ற நம்பிக்கை எங்கே போனது? இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் இறைவன் குறித்துத் தம் சமுதாய மக்களிடம் கூறியதைப் பாருங்கள்: அவன்தான் என்னைப் படைத்தான். அவனே என்னை நேரான வழியில் நடத்துகிறான்; அவனே எனக்கு உண்ண உணவளிக்கிறான்; குடிக்க நீர் தருகிறான்; நான் நோயுற்ற தருணத்தில் அவனே என்னைக் குணப்படுத்துகிறான்; அவனே என்னை மரணிக்கச் செய்வான்; பின்னர் அவனே என்னை (மறுமையில்) உயிர்ப்பிப்பான்; கூலி கொடுக்கும் (மறுமை) நாளில் என்னுடைய குற்றங்களை மன்னிக்க அவனையே நான் நம்பியிருக்கிறேன்.” (26: 78-82)

 செய்யும் தொழிலில், வியாபாரத்தில் அபிவிருத்தி (பரகத்) ஏற்பட வேண்டுமென்பதற்காகவும் கண்ணேறிலிருந்து பாதுகாப்புத் தேடவும், தர்ஹாவில் விற்பனை செய்யப்படுகின்ற, துணியில் சுருட்டப்பட்ட தேங்காயை வாங்கி வந்து, தம் கடைவாசலில் மாட்டிவிடுகின்றார்கள். அல்லாஹ்வின்மீது வைக்க வேண்டிய நம்பிக்கையை, மந்திரிக்கப்பட்டுத் துணியில் சுருட்டப்பட்ட தேங்காய்மீது வைக்கின்றார்கள். திருக்குர்ஆனிலுள்ள கடைசி இரண்டு அத்தியாயங்களை (அல்ஃபலக், அந்நாஸ்) ஓதிக்கொண்டால் கண்ணேறிலிருந்து பாதுகாப்புப் பெறலாம் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இல்லாமல் போனதேன்?

ஒவ்வொருவரும் ஒவ்வொன்றின்மீது நம்பிக்கை வைத்து, தமது தேவைகளை முன்வைக்கின்றார்கள். அவை நிறைவேறியபின், தாம் நம்பிக்கை வைத்துள்ள அந்த - கற்சிலை, கடவுள் உருவம், இறைநேசர், மகான்- தான் அதை நிறைவேற்றித் தந்ததாகக் கருதிக்கொள்கிறார்கள். இதைத்தான் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:  “(நபியே) ஒவ்வொருவரும் தத்தமது எண்ணப்படியே செயல்படுகின்றார்கள். உங்கள் இறைவன்தான் (அவர்களுள்) யார் மிகவும் நல்வழி நடப்பவர் என்பதை நன்கறிவான்என்று கூறுவீராக. (17: 84) ஆக ஒவ்வொருவரும் தத்தம் எண்ணப்படியே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் யாருடைய நம்பிக்கை உண்மையானது என்பதை அல்லாஹ்வே நன்கறிவான். அதற்கேற்ப நாளை மறுமையில் தீர்ப்பளிப்பான். 

அல்லாஹ் ஒருவன்மீதே அசைக்க முடியாத நம்பிக்கைகொண்டு அவனை மட்டுமே சார்ந்திருக்கக் கூடியவர்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள செய்தி மிக முக்கியமானது. அதுவே நம் அனைவருக்கும் போதுமானது.
என் சமுதாயத்தைச் சேர்ந்த எழுபதாயிரம் பேர் கேள்வி கணக்கின்றிச் சொர்க்கம் நுழைவார்கள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, “அவர்கள் யார்?” என்று கேட்கப்பட்டது. அவர்கள் ஓதிப்பார்க்க மாட்டார்கள்; சூடு வைத்துக்கொள்ள மாட்டார்கள்; குறி பார்க்க மாட்டார்கள்; தங்கள் இறைவனையே (முழுமையாகச்) சார்ந்திருப்பார்கள்என்று விடையளித்தார்கள். (நூல்: அஹ்மது: 19345)

ஆக அல்லாஹ் ஒருவனையே சார்ந்து வாழ்வோருக்குக் கேள்வி கணக்கே இல்லை எனும்போது நாம் ஏன் அவ்வாறு முயற்சி செய்யக்கூடாது? அவன்தானே நம்மைப் படைத்து, வளர்த்து, உணவளித்துப் பாதுகாப்பவன். பிறகென்ன கவலை? எனவே நாம் அனைவரும் நம்மைப் படைத்த ஒரே இறைவன்மீதே நம்பிக்கைகொள்வோம்; அவனையே சார்ந்திருப்போம்; ஈருலகிலும் வெற்றி பெறுவோம்!
===========================.








சனி, 24 நவம்பர், 2018

சனி, 17 நவம்பர், 2018

மீ-டூவிற்கான தீர்வு என்ன?



-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்ற மீ-டூ (நானும் பாதிக்கப்பட்டேன்) எனும் முழக்கத்திற்கான தீர்வென்ன? அது எங்கே இருக்கிறது? அதை யார் சொல்லியிருக்கிறார்? இஸ்லாம் அதற்கான விடையை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே சொல்-விட்டது. அதைக் கடைப்பிடிப்போர் பாதுகாப்பாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதைப் புறக்கணித்தோர், அன்றாடம் தாம் எதிர்கொள்கின்ற சமுதாயச் சிக்கல்களை வலைதளங்களில் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
மதுக்கடைக்குள் சென்று, அங்கேயே நீண்ட நேரத்தைக் கழித்த ஒருவன், என்னையும் மது குடிக்க வைத்துவிட்டார்கள் என்று சொல்லலாமா? விபச்சார விடுதிக்குள் சென்று, நீண்ட நேரத்தைக் கழித்த ஒருவன், என்னை விபச்சார வழக்கில் அநியாயமாகக் கைது செய்துவிட்டார்கள் என்று கூறலாமா? திரைப்படத் துறையில் சென்று மனமுவந்து நடிக்கத் தொடங்கிவிட்ட ஒரு நடிகை, என்னைக் கண்ட கண்ட இடங்களில் தொடுகின்றார்கள் என்று சொல்ல முடியுமா? அவ்வாறு சொன்னால் சமூகம் ஏற்குமா?

ஒவ்வொருவரும் இருக்க வேண்டிய இடங்களில் ஒழுக்கமாக இருந்துகொண்டால், இருக்க வேண்டிய எல்லைக்குள் எல்லைமீறாமல் இருந்துகொண்டால் யாருக்கும் தொல்லை இல்லை. சந்தேகத்திற்குரிய இடங்களுக்குச் செல்லாமல் பாதுகாப்பாக இருந்துகொள்வது நம் கடமை. தெரிந்தே அசிங்கமான இடங்களுக்குச் சென்றுவிட்டு, பின்னர் அவன் என்னைச் சீண்டிவிட்டான் என்று சொல்வது ஏற்புடையதல்ல.

"பொம்பள சிரிச்சா போச்சு'' எனும் பழமொழி எதை உணர்த்துகிறது? ஒரு பெண்ணின் சிரிப்பும் குழைவான பேச்சும் எதிரே உள்ள எதிர்பாலினத்தின் மனத்தில் ஊடுருவி சில இரசாயன மாற்றங்களை உண்டுபண்ணும். பிறகு தொட்டுப் பார்க்கத் தூண்டும். பிறகுதான் மற்றவை அரங்கேறத் தொடங்கும். அதற்குள் நிதானத்திற்கு வந்துவிட்டால் கற்பைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.
பெண்சீண்டல், வன்புணர்வு உள்ளிட்ட அசிங்கங்களுக்குத் தாழ்போடும் விதமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ள எச்சரிக்கை கவனிக்கத்தக்கது.

"தனிமையில் அந்நிய ஆடவர் ஒருவர் அந்நியப் பெண் ஒருத்தியுடன் இருக்கும்போது அங்கு மூன்றாம் ஆளாக ஷைத்தான் இருக்கவே  செய்வான்.'' (நூல்: திர்மிதீ: 1091)
சுதந்திரம், பெண்விடுதலை எனும் நாகரிகப் பெயர்களில், ஆணும் பெண்ணும் தனிமையில் சந்தித்துப் பேசுவது, ஒன்றாக ஒரே அறையில் தங்குவது, தன்னோடு பணிசெய்பவர்தாமே என்ற அசட்டு நம்பிக்கையில் இருப்பது முதலானவை பெண்களுக்கு ஆபத்து. இதை எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் பெண்கள் உணர்வதே இல்லை. பட்டபின்னரே கதறி அழுகின்றார்கள்.
ஒன்றாகப் பணி செய்யும் ஆண்களோடு அசட்டு நம்பிக்கையில் ஒன்றாகத் தங்கும் பெண்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை. ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஆண்களும் பெண்களும் வேறு மாநிலத்திற்கோ நாட்டிற்கோ பயணம் செய்ய வேண்டிய தேவை ஏற்படும். அதைத் தவிர்க்க முடியாது. அது போன்ற சமயங்களில் தவறு நடக்க நிறைய வாய்ப்புண்டு. ஒரு நடிகை, தன் இயக்குநர் எங்கெல்லாம் அழைக்கின்றாரோ அங்கெல்லாம் பயணம் செய்ய வேண்டிய தேவை ஏற்படும். நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும்போது தனிமையும் தொலைவும் தவறு செய்வதற்கு ஒருவிதத் துணிச்சலைக் கொடுத்துவிடும். அதனால்தான் பெண்கள் ஆண்களின் ஆசைக்கு இரையாகின்றார்கள்.

இத்தகைய சூழ்நிலையிலிருந்து ஒரு பெண் தன் கற்பைக் காத்துக்கொள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓர் அறிவுரையை வழங்குகின்றார்கள். "ஒரு பெண் (மணமுடிக்கத்தகாத) நெருங்கிய ஆண் உறவினர் துணையில்லாமல் (தனியாக) ஒரு பகல் ஓர் இரவு தொலைவுக்குப் பயணம் மேற்கொள்ளக்கூடாது.''  (நூல்: திர்மிதீ: 1090)

கற்பு, உயிர், உடைமை ஆகியவற்றைக் காத்துக்கொள்ள ஒரு பெண்ணுக்கு ஓர் ஆண் துணை தேவை. அந்த ஆண் துணை, தன் கணவனாக இருக்க வேண்டும். அல்லது தன்னை மணமுடிக்க முடியாத தந்தை, சகோதரன், மாமன், சிற்றப்பா, பெரியப்பா முதலான உறவாக இருக்க வேண்டும்.  ஒரு பெண்ணுக்கு மயக்கம் ஏற்பட்டு, மயங்கிக் கீழே விழுந்தால், அவளை ஆதரவோடு அள்ளியெடுக்கின்ற கை ஓர் அந்நியக் கையாக இருக்கக்கூடாது என்பதில் இஸ்லாமிய மார்க்கம் தெளிவாக இருக்கிறது.
காலம் செல்லச் செல்ல மோசமான மனிதர்கள் அருகி, படுமோசமான மனிதர்கள் பெருகி வருகிறார்களே தவிர நல்லவர்கள் மிகுந்து வருகிறார்கள் என்று சொல்ல முடியுமா? அந்தக் காலத்தில்தான் அப்படியெல்லாம் நடந்தன. இப்போதெல்லாம் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்று உளமாரக் கூற முடியுமா? ஏனெனில் காணும் காட்சிகளெல்லாம் மோசமானவை. அவை மனித மனங்களில் பதிந்துபோய் கிடக்கின்றன. நேரம் பார்த்து அவை ஒவ்வொரு மனிதனுக்குள்ளிருந்தும் வெளிப்படுகின்றன.

அதுபோலவே பெண்கள் குறித்து, ஆண்களுக்கும் சில எச்சரிக்கைகள் உண்டு. ஓர் ஆண் தன் கற்பைக் காத்துக்கொள்ள, பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பள்ளிக்கூடம், அலுவலகம், நிறுவனம், தொழிற்கூடம் முதலான இடங்களில் ஆண்களும் பெண்களும் இணைந்து பணியாற்றுகின்றார்கள். அங்குள்ள ஓர் அதிகாரி அல்லது மேலாளர் தனக்குப் பிடிக்கவில்லையென்றால் அவர்மீது வீண்பழி சுமத்தி, ஒரு பெண் அவதூறு கூறலாம். அசிங்கப்படுத்த முனையலாம். அழகான ஓர் ஆணைக் கண்டு, அவனால் ஈர்க்கப்பட்டுவிட்டால் அவனை அடைய எதையும் செய்வாள் பெண் என்பதையும் ஆண்கள் மறக்கக்கூடாது. குடும்ப ஆண்கள் பலர், தம் சபலப் புத்தியால் பெண்களிடம் மாட்டிக்கொண்டு, மத்தளத்திற்கு இருபுறமும் அடி என்பதைப்போல், கட்டிய மனைவியிடமும் தொட்டுவிட்ட பெண்ணிடமும் திண்டாடுகின்றார்கள். பெண் விரிக்கும் வலையில் சிக்கிக்கொண்டால் அதிலிருந்து மீளுவது கடினம். பொருளாதாரமும் கரைந்து நிம்மதியும் பறிபோய்விடும்.

இவ்விடத்தில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ள அறிவுரையைத் தெரிந்துகொள்வது ஆண்களுக்கு ஓர் எச்சரிக்கையாக அமையும்: "திண்ணமாக இவ்வுலகம் பசுமையானது; இனிமையானது. அல்லாஹ் அதில் உங்களைப் பிரதிநிதிகளாக ஆக்கியுள்ளான். நீங்கள் எப்படிச் செயல்படுகின்றீர்கள் என்பதைக் கண்காணித்துக்கொண்டிருக்கிறான். அந்தோ! உலகத்தில் எச்சரிக்கையாக இருங்கள்; பெண்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.''  (நூல்: இப்னுமாஜா: 3990)

பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னெச்சரிக்கை செய்துள்ளார்கள்.  ஆண்களிடம் பெண்கள் எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டுமோ அதேபோல், பெண்களிடம் ஆண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து அறியலாம்.

ஓர் ஆண் ஒரு பெண்ணைத் தனிமையில் சந்திக்கக் கூடாது என்பதில் பல்வேறு நன்மைகள் உள்ளன. ஓர் ஆணால் ஒரு பெண்ணின் கற்புக்கும் மானத்திற்கும் களங்கம் ஏற்பட்டுவிடாமல் பாதுகாக்கும் முன்னேற்பாடே இது. மேலும் ஒரு பெண்ணால் ஓர் ஆணின் மானத்திற்கும் ஒழுக்கத்திற்கும் இழுக்கு ஏற்பட்டுவிடாமல் பாதுகாக்கும் முன்னேற்பாடும் இதில் உள்ளடங்கியுள்ளது. ஒரு பெண்ணால் ஓர் ஆணுக்கு அப்படி என்ன களங்கம் ஏற்பட்டுவிடப்போகிறது என்று கேட்கலாம். ஒரு பெண் நினைத்தால், ஓர் ஆண் ஒழுக்கமானவன் என்ற நற்சான்றிதழையும் பெற்றுத் தரலாம். ஒழுக்கங்கெட்டவன் என்ற அவப்பெயரையும் பெற்றுத்தரலாம். இரண்டும் அவளால் மட்டுமே முடியும். மேலும் ஒரு பெண்ணைக் கண்டதும் ஆணுக்கு ஏற்படும் இரசாயன மாற்றங்களைப் போலவே அவளுக்கும் ஏற்படும். அப்போது பெண்ணின் ஈர்ப்பாற்றல் மிகுதியாக இருந்தால் அவள் அந்த ஆணை இழுத்துவிடுவாள். ஏனென்றால் ஆண்-பெண் அனைவரின் நாடி நரம்பெல்லாம் ஷைத்தான் உட்புகுந்து ஓடிக்கொண்டிருக்கின்றான். அவனுடைய வேலையே மனித மனங்களைக் கெடுப்பதும் எண்ணங்களைச் சிதைப்பதும் தவறு செய்யத் தூண்டுவதுமே ஆகும்.

நபி (ஸல்) அவர்கள், "(கணவன் உடனில்லாமல்) தனியாக இருக்கும் பெண்களிடம் நீங்கள் செல்லாதீர்கள். ஏனென்றால் ஷைத்தான் உங்களின் ஒருவரது இரத்த நாளங்களில் எல்லாம் ஓடுகிறான்'' என்று கூறினார்கள். "தங்களி(ன் உடலி)லுமா?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "என்னிலும்தான்; எனினும் அவனுக்கெதிராக அல்லாஹ் எனக்கு உதவி செய்துவிட்டான் (அவனிடமிருந்து நான் பாதுகாப்புப் பெற்றிருக்கிறேன்)'' என்று கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 1092)

ஷைத்தான் ஒருவரின் நாடி நரம்பெல்லாம் ஓடிக்கொண்டிருப்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமம்தானே? ஆண் மனத்தளவில் உறுதியாக இருந்தால், பெண்ணின் மனத்திற்குள் புகுந்து வழிகெடுத்துவிடுவான். முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் மனத்தளவில் வலுவாக இருந்ததால்,  ஹவ்வா அம்மையாரிடம் சென்று, தடுக்கப்பட்ட மரத்திலிருந்து உண்ணுமாறு தூண்டினான். அதன்பின்னர் அவர் தம் கணவரிடம் சென்று வலியுறுத்தவே, பிறகுதான் ஆதம் (அலை) அவர்கள் அம்மரத்திலிருந்து புசித்தார்கள் என்பது வரலாறு. அதுபோலவே யூசுஃப் (அலை) அவர்களின் அழகிய தோற்றத்தில் மயங்கிய அமைச்சரின் மனைவி, சமயம் பார்த்து, அவரை அள்ளிப் பருகிட முனைந்து, ஆசைக்கிணங்க அழைத்தபோது, அவளுக்கிணங்காது மறுத்து, அவளிடமிருந்து வெருண்டோடுகிறார். அப்போது அவரது சட்டையைப் பின்புறமாகக் கிழித்துவிடுகிறாள். எதிர்பாராவிதமாக அவளின் கணவர் உள்ளே வருகிறார். அச்சமயத்தில் அப்பெண் தன் குற்றத்தை மறைப்பதற்காக இறைத்தூதர் யூசுஃப்மீது பழிபோடுகிறாள். இதுவே பெண்ணின் இயல்பு.

செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ளத் துணிவில்லாத பெண்கள் ஆண்கள்மீது பழிபோட்டுத் தப்பித்துக்கொள்வார்கள். எனவே ஆண்கள் பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்பது  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னெச்சரிக்கை.

அதன் கண்ணோட்டத்தில் பின்வரும் நபிமொழியைப் பாருங்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு நாள் காலையும் இரண்டு வானவர்கள் (இவ்வாறு) அழைத்துக் கூறாமல் இருப்பதில்லை: "பெண்களால் ஆண்களுக்குக் கேடே. ஆண்களால் பெண்களுக்குக் கேடே.'' (நூல்: இப்னுமாஜா: 3989)

ஆகவே ஆணிடம் பெண் எச்சரிக்கையாக இருப்பதைப் போலவே, பெண்ணிடம் ஆண் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதுவே இருபாலரும் தத்தம் கற்பைப் பாதுகாத்துக்கொள்ளச் சிறந்த வழியாகும்.









பள்ளிவாசலின் கரும்பலகையில் எழுதியவை

பள்ளிவாசலின் கரும்பலகையில் எழுதியவை - ஒரு காணொலித் தொகுப்பாக...