ஞாயிறு, 9 டிசம்பர், 2018

ஏகத்துவ நம்பிக்கை!



-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

ஒவ்வொரு மதத்தாருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை உள்ளதைப்போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொருவரும் தத்தமது நம்பிக்கையின் அடிப்படையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.  அவர் நம்பிய தெய்வத்தின்மீது கடவுள்மீதும் சிலைகள்மீதும் நம்பிக்கை வைத்துள்ளார். அவரின் நம்பிக்கைக்கேற்பவே அவரது கடவுள் அவருக்கு எல்லாவற்றையும் வழங்குவதாக நம்பிக்கொண்டிருக்கிறார். ஆனால் பிரபஞ்சங்களைப் படைத்த ஒரே இறைவன் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நம்பிக்கை ஒன்றே ஒன்றுதான். அதுதான் ஏகத்துவ நம்பிக்கை. அந்த ஒரே இறைவன்மீது நம்பிக்கை கொள்வதோடு வேறு யாரையும் அவனுக்கு நிகராகக் கருதாமல் இருக்க வேண்டும். அவர்தாம் ஏகத்துவவாதி ஆவார்.

நம்மைப் படைத்த இறைவன் ஒருவனே. அவனே நம்மைப் பாதுகாப்பவன். அவனே நம் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறான். நோயைக் கொடுப்பதும் அதை நீக்குவதும், பசியைக் கொடுப்பதும் அதற்கான உணவைக் கொடுப்பதும், தாகத்தைக் கொடுப்பதும் அதற்கான நீரைக் கொடுப்பதும் எல்லாம் அவனே. அன்றாட வாழ்வில் நமக்கு ஏற்படும் எல்லாவித இன்ப-துன்பங்களுக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். அவனே நமக்கு  இன்பத்தைக் கொடுக்கிறான். அவன் நாடினால் சிலவேளை நமக்குத் துன்பத்தைக் கொடுக்கிறான். இரண்டு வேளைகளிலும் அவனிடமே நாம் கையேந்தவேண்டும். இன்ப வேளையில் நம் நன்றியை அவனுக்கு உரித்தாக்க வேண்டும். துன்பம் ஏற்படும்போது அத்துன்பத்தை நீக்க அவனிடமே கையேந்திக் கேட்க வேண்டும்.

மக்கள் சிலர் கற்சிலைகள்மீதும், வேறு சிலர் உருவப் படங்கள்மீதும், வேறு சிலர் யேசு எனும் ஈஸா நபிமீதும், வேறு சிலர் இறந்துவிட்ட இறைநேசர்கள்மீதும்-இப்படிப் பல்வேறு வகையான நம்பிக்கைகள் கொண்டுள்ளனர்.  வேறு சிலர் ஒரே இறைவன்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் அதேவேளையில், ஏதாவது துன்பம், துயரம் ஏற்பட்டால் அத்துன்பத்தை நீக்க எங்கேனும் ஒரு தர்ஹாவிற்குச் சென்று, அங்கு துஆ செய்கிறார்கள். அங்கு சென்று வந்த பின் அத்துன்பம் நீங்கிவிட்டால், அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள இறைநேசர்மீது நம்பிக்கை வந்துவிடுகிறது. அதன்பிறகு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அங்கு செல்லத் தொடங்கிவிடுகின்றார்கள். அங்குள்ள இறைநேசர் மீது அளவுகடந்த நம்பிக்கை மனத்தில் பதிவாகிவிடுகிறது. இதைத்தான் தவறான நம்பிக்கை என்கிறோம்.

சிலர் கேட்கலாம். அவர் அங்கு சென்றுவந்த பிறகுதானே அவருடைய துன்பம் நீங்கியது. அதனால் அந்த இறைநேசர் அல்லாஹ்விடம் துஆ செய்ததால்தான் அல்லாஹ் அவருடைய துஆவின் பொருட்டால் அவருக்கு அத்துன்பத்தை நீக்கினான். எனவே அவர் மீண்டும் மீண்டும் அங்கு செல்வதில் என்ன தவறு? இப்படித்தான் ஷைத்தான் மனிதர்களை வழிகெடுக்கிறான். இறைவன்மீது கொள்ள வேண்டிய நம்பிக்கையை பிறர்மீது வைக்குமாறு இப்படித்தான் மடை மாற்றுகிறான். அதற்கான விடை என்னவெனில், அவர் அங்கு செல்லாவிட்டாலும் குறிப்பிட்ட காலத்தில் அவருடைய துன்பம் நீங்குமாறு இறைவிதி இருந்தால், அவ்வாறே அது நீங்கிவிடும். ஆக, இறைவன்தான் நீக்குகிறானே தவிர, அந்த இறைநேசரின் துஆ அல்ல என்பதை எவ்வாறு புரிய வைக்க முடியும்?

ஒருவர் தமக்குக் குழந்தை இல்லை என்று நீண்ட காலமாக வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். பிறகு யாரோ ஒருவர் சொல்ல, அவர் குறிப்பிட்ட தர்ஹாவிற்குச் சென்றார். அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளவரிடம் துஆ கேட்டார். பின்னர் குறிப்பிட்ட காலத்தில் அவருக்குக் குழந்தை பிறந்தது. இப்போது அவர் அந்த தர்ஹாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள இறைநேசர்மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளார். எதைக் கேட்டாலும் அவர் கொடுத்துவிடுவார் என்று நம்பத்  தொடங்கிவிட்டார். இதுதான் தவறான நம்பிக்கையாகும். இவ்வாறுதான் இன்றைய அறியாமக்கள் பலர் தம் ஈமானை இழந்துகொண்டிருக்கின்றார்கள்.
யார் அல்லாஹ்வைச் சார்ந்திருக்கிறாரோ அவருக்கு அவனே போதும்” (65: 3) என்று அல்லாஹ் கூறிவிட்ட பிறகு, பிறவற்றின்மீது நம்பிக்கை கொள்ளவேண்டிய அவசியம் என்ன? நன்மையும் தீமையும் இறைவனின் ஏற்பாட்டின்படியே நடைபெறுகிறது என்று நம்பியுள்ள ஓர் இறைநம்பிக்கையாளர் பிறர்மீது-உயிருள்ளவரோ, இறந்தவரோ-நம் துன்பத்தை நீக்குவார் என்றோ, குழந்தையைத் தருவார் என்றோ எவ்வாறு நம்பிக்கைகொள்ளலாம்?
ஸியாரத் செய்வதன் நோக்கம் என்ன? மரணத்தை நினைவுகூர்வதும், இவ்வுலக வாழ்வில் பற்றின்மை ஏற்படுவதும்தானே நோக்கம்? அதை விட்டுவிட்டு, “நான் அந்த தர்ஹாவிற்குச் சென்றேன்; என் தேவைகளைக் கூறி துஆச் செய்தேன்; அந்த வலியுல்லாஹ்வின் துஆவால் எனக்கு என் தேவை நிறைவேறிவிட்டது" என்று சொல்வது எப்படிச் சரியாகும்? இவ்வாறு சொல்வது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயல் இல்லையா?
இப்படித்தான் தவறான நம்பிக்கையுடையோரை அவரவர் வழியிலேயே அல்லாஹ் விட்டுவிடுகின்றான்.  அவர் எதை நம்பிச் செயல்படுகின்றாரோ அந்த நம்பிக்கையிலேயே அவர் தொடர்கிறார். ஷைத்தான் அவனுடைய நம்பிக்கையை மேன்மேலும் வளர்க்கிறான். அவருடைய நாட்டமெல்லாம் நிறைவேறுவதைப்போல் காட்டுவான்.  இவ்விடத்தில் முஸ்லிம்கள் ஒரு கணம் நின்று நிதானமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதாவது, முஸ்லிம் அல்லாத மக்கள் தத்தம் கடவுளான கற்சிலைகளை வணங்குகின்றார்கள். நாங்கள் இந்தக் கடவுளை வணங்குவதால்தான் நிம்மதியாக வாழ்கிறோம்என்று அவர்களும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.  அப்படியென்றால் அல்லாஹ்வை வணங்காத அவர்களுக்கு உணவளிப்பவன் யார்? ஆரோக்கியத்தைக் கொடுப்பவன் யார்? அந்தக் கற்சிலைகள்தாம் அவற்றையெல்லாம் செய்கின்றன என்று ஒரு முஸ்லிம் சொல்வானா? அல்லாஹ்தானே கொடுக்கின்றான்? ஏனென்றால் இவ்வுலகில் அவன் தன்னை வணங்குகின்ற, வணங்காத அனைவர்மீதும் அன்புடையவன்; கருணையாளன்.

அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் நிச்சயமாக எங்களை அணுகாது. அவன்தான் எங்களுடைய இறைவன்என்று (நபியே) நீங்கள் கூறுங்கள்.

 இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்வையே சார்ந்திருக்கட்டும். (9: 51) இந்த இறைவசனத்தின் பொருளை முழுமையாக விளங்காததால்தான் இன்றைய முஸ்லிம்கள் பலர் தமக்குத் துன்பம் வரும்போது துவண்டுவிடுகின்றார்கள். அதை நீக்க எதையும் செய்யத் துணிந்துவிடுகின்றார்கள். அல்லாஹ் விதித்ததைத் தவிர வேறெதுவும் நம்மை அணுகாதுஎன்ற ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்கள் எதையும் அலட்டிக்கொள்ளாமல் அல்லாஹ்வின்மீது மட்டும் நம்பிக்கைகொண்டு, மிக இயல்பாக இருக்கின்றார்கள். அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பம் எவ்வழி வந்ததோ அவ்வழியே திரும்பிச் சென்றுவிடுகின்றது.  

இறைநம்பிக்கையாளர்களின் நம்பிக்கைகள் சிதறிப்போய்விட்டன. ஒரே இறைவன்மீது வைக்க வேண்டிய நம்பிக்கையை இங்கு கொஞ்சம், அங்கு கொஞ்சம், அதில் கொஞ்சம், இதில் கொஞ்சம் எனப் பிரித்துப் பிரித்து வைத்திருப்பதால்தான் ஏக இறைவனை வணங்கியும் ஏற்றம் பெறாமல் இருக்கிறார்கள் பலர். ஒரே இறைவன்மீது நம்பிக்கை வலுவாக இல்லை. பரவலாகக் காணப்படுகின்ற சூரிய வெப்பத்தைக் குவியாடி (லென்ஸ்) மூலம் ஒரே இடத்தில் குவித்தால் அதன் கீழுள்ள காகிதம் தீப்பற்றி எரிவதைக் காணலாம். அதுபோலவே நம் நம்பிக்கை முழுவதும் ஒரே இறைவன்மீது குவிந்திருந்தால் நினைத்ததைச் சாதிக்கும் ஆற்றலையும் மனவலிமையையும் அல்லாஹ் நமக்கு வழங்கிடுவான். அது மட்டுமின்றி, அப்போதுதான் ஈமானின் சுவையை நாம் உணர முடியும்.

நோய் ஏற்படும்போது அறியாமக்கள் தாயத்து, தகடு, முடிகயிறு எனப் பல்வேறு வடிவங்களில் அதற்கான தீர்வைத் தேடுகின்றார்கள். அல்லாஹ்வைத் தவிர யாரும் நமக்கு நன்மையையோ தீமையையோ செய்துவிட முடியாது என்ற நம்பிக்கை எங்கே போனது? இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் இறைவன் குறித்துத் தம் சமுதாய மக்களிடம் கூறியதைப் பாருங்கள்: அவன்தான் என்னைப் படைத்தான். அவனே என்னை நேரான வழியில் நடத்துகிறான்; அவனே எனக்கு உண்ண உணவளிக்கிறான்; குடிக்க நீர் தருகிறான்; நான் நோயுற்ற தருணத்தில் அவனே என்னைக் குணப்படுத்துகிறான்; அவனே என்னை மரணிக்கச் செய்வான்; பின்னர் அவனே என்னை (மறுமையில்) உயிர்ப்பிப்பான்; கூலி கொடுக்கும் (மறுமை) நாளில் என்னுடைய குற்றங்களை மன்னிக்க அவனையே நான் நம்பியிருக்கிறேன்.” (26: 78-82)

 செய்யும் தொழிலில், வியாபாரத்தில் அபிவிருத்தி (பரகத்) ஏற்பட வேண்டுமென்பதற்காகவும் கண்ணேறிலிருந்து பாதுகாப்புத் தேடவும், தர்ஹாவில் விற்பனை செய்யப்படுகின்ற, துணியில் சுருட்டப்பட்ட தேங்காயை வாங்கி வந்து, தம் கடைவாசலில் மாட்டிவிடுகின்றார்கள். அல்லாஹ்வின்மீது வைக்க வேண்டிய நம்பிக்கையை, மந்திரிக்கப்பட்டுத் துணியில் சுருட்டப்பட்ட தேங்காய்மீது வைக்கின்றார்கள். திருக்குர்ஆனிலுள்ள கடைசி இரண்டு அத்தியாயங்களை (அல்ஃபலக், அந்நாஸ்) ஓதிக்கொண்டால் கண்ணேறிலிருந்து பாதுகாப்புப் பெறலாம் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இல்லாமல் போனதேன்?

ஒவ்வொருவரும் ஒவ்வொன்றின்மீது நம்பிக்கை வைத்து, தமது தேவைகளை முன்வைக்கின்றார்கள். அவை நிறைவேறியபின், தாம் நம்பிக்கை வைத்துள்ள அந்த - கற்சிலை, கடவுள் உருவம், இறைநேசர், மகான்- தான் அதை நிறைவேற்றித் தந்ததாகக் கருதிக்கொள்கிறார்கள். இதைத்தான் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:  “(நபியே) ஒவ்வொருவரும் தத்தமது எண்ணப்படியே செயல்படுகின்றார்கள். உங்கள் இறைவன்தான் (அவர்களுள்) யார் மிகவும் நல்வழி நடப்பவர் என்பதை நன்கறிவான்என்று கூறுவீராக. (17: 84) ஆக ஒவ்வொருவரும் தத்தம் எண்ணப்படியே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் யாருடைய நம்பிக்கை உண்மையானது என்பதை அல்லாஹ்வே நன்கறிவான். அதற்கேற்ப நாளை மறுமையில் தீர்ப்பளிப்பான். 

அல்லாஹ் ஒருவன்மீதே அசைக்க முடியாத நம்பிக்கைகொண்டு அவனை மட்டுமே சார்ந்திருக்கக் கூடியவர்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள செய்தி மிக முக்கியமானது. அதுவே நம் அனைவருக்கும் போதுமானது.
என் சமுதாயத்தைச் சேர்ந்த எழுபதாயிரம் பேர் கேள்வி கணக்கின்றிச் சொர்க்கம் நுழைவார்கள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, “அவர்கள் யார்?” என்று கேட்கப்பட்டது. அவர்கள் ஓதிப்பார்க்க மாட்டார்கள்; சூடு வைத்துக்கொள்ள மாட்டார்கள்; குறி பார்க்க மாட்டார்கள்; தங்கள் இறைவனையே (முழுமையாகச்) சார்ந்திருப்பார்கள்என்று விடையளித்தார்கள். (நூல்: அஹ்மது: 19345)

ஆக அல்லாஹ் ஒருவனையே சார்ந்து வாழ்வோருக்குக் கேள்வி கணக்கே இல்லை எனும்போது நாம் ஏன் அவ்வாறு முயற்சி செய்யக்கூடாது? அவன்தானே நம்மைப் படைத்து, வளர்த்து, உணவளித்துப் பாதுகாப்பவன். பிறகென்ன கவலை? எனவே நாம் அனைவரும் நம்மைப் படைத்த ஒரே இறைவன்மீதே நம்பிக்கைகொள்வோம்; அவனையே சார்ந்திருப்போம்; ஈருலகிலும் வெற்றி பெறுவோம்!
===========================.








கருத்துகள் இல்லை: