வெள்ளி, 18 மே, 2018

எது பித்அத்?


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

நவீனக் காலத்தில் பெரும்பாலோர் உச்சரிக்கின்ற வார்த்தை "பித்அத்' ஆகும். தெரிந்தோர், தெரியாதோர் அனைவரும் மிகச் சாதாரணமாக இந்த வார்த்தையை உச்சரித்துக்கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் அதற்கான விளக்கத்தை  அறிய முற்படுவதில்லை. எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமலோ, முட்டாள்தனமாகவோ ஒரு செயலைப் புதிதாகத் தோற்றுவித்து  அது "தீனில்' உள்ளதுதான் என்று கூறுவதே "பித்அத்' ஆகும். மேலும் நபி (ஸல்) அவர்களால் கட்டளையிடப்படாத ஒன்றை நபிகளாரின் கட்டளையாகக் கூறுவதும் கருதுவதும் "பித்அத்' ஆகும். இதுவல்லாத நற்செயல்கள், தீனுக்குப் பக்கபலமாக உள்ளவை, உபரியான வழிபாடுகள்  ஆகியவை "பித்அத்' ஆகா.

நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடாததை, புதிதாக ஏற்படுத்திக்கொண்டு அதை நபியவர்கள் சொன்னதாகவோ செய்ததாகவோ அதற்குப் பலவீனமான ஹதீஸையாவது தேடிப்பிடித்து ஆதாரமாகக் காட்ட முற்படுவதோ அறவே கூடாது. அதைக் கடமையைப்போல் நம்ப வைப்பது முற்றிலும் கூடாது. அதேநேரத்தில் தீனுக்கு உறுதுணையாக உள்ளவற்றைப் புதிதாகத் தோற்றுவிப்பதில் தவறில்லை. அவை "பித்அத்' அல்லாதவை என்பதை நடுநிலையோடு உணர வேண்டும்.    

"எனக்குப் பின்னர் பலத்த கருத்து வேறுபாடுகளை நீங்கள் காண்பீர்கள். அப்போது எனது வழிமுறையையும் நல்வழியில் செலுத்தப் பெற்ற நேர்வழி "கலீஃபா'களின் நடைமுறையையும் கடைப்பிடியுங்கள். அவற்றை உங்கள் கடைவாய்ப் பற்களால் இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். மேலும் (மார்க்கத்தில்) புதிதாக எதையும் உருவாக்கவேண்டாமென உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு செயலும் வழிகேடாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை இர்பாள் பின் சாரியா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: இப்னுமாஜா: 42)

"நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ  அவனுடைய அந்தப் புதுமை  நிராகரிக்கப்பட்டதாகும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 2697)

மேற்கண்ட இரண்டு நபிமொழிகள்தாம் "பித்அத்' குறித்த விளக்கத்தை முன்வைக்கும் ஆதாரங்களாகும். முதலாம் நபிமொழியில் இடம்பெற்றுள்ள "புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு செயலும் வழிகேடாகும்'' என்ற வாக்கியம் கூர்ந்து கவனிக்கத்தக்கதாகும். இந்த வாக்கியத்தைப் பொத்தாம் பொதுவாகக் கூறி, அதன் உண்மையான விளக்கத்தை உணர மறுத்தால் நாம் இன்றைக்குச் செய்துவருகின்ற நற்செயல்களுள் எதையும் செய்ய முடியாது. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இல்லாதவை அனைத்தும் "பித்அத்' என்று வாதிட முற்பட்டால், குர்ஆனை ஒரே நூலாகத் தொகுத்ததும் ஒரே விதமாக ஓதவைத்ததும் "பித்அத்' என்று சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே இதற்கான விளக்கத்தை அறிய முற்பட வேண்டும்.

அதனால்தான் "பித்அத்'தை இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர். 1. நல்லது, 2. கெட்டது. அதாவது தீனுக்குச் சாதகமாகவோ உறுதுணையாகவோ உள்ள எதுவும் "பித்அத்' ஆகாது. மாறாக அவை தீனின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் உருவாக்கப்பட்டவை என்ற கோணத்தில் அங்கீகரிக்கப்பட்டவை ஆகும்.

அபூபக்ர் ஸித்தீக் (ரளி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களிடம் உமர் (ரளி) அவர்கள் வந்து, திருக்குர்ஆனை ஒருங்கிணைக்க வேண்டும் என்று தெரிவித்தபோது நபி (ஸல்) அவர்கள் செய்யாததை நான் எப்படிச் செய்வேன்? என்று கூறித் தயங்கினார்கள். அதன்பிறகு அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கான கட்டளையைப் பிறப்பித்தார்கள். அதன் பயனாக இன்று நாம் அனைவரும் திருக்குர்ஆனை ஓதிக்கொண்டிருக்கிறோம். இதற்குப் பெயர் "பித்அத் ஹஸனா-நல்ல புதுமைச் செயல்' ஆகும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இல்லாத, அவர்கள் சொல்லாத எதையும் நாம் புதிதாகத் தோற்றுவித்தால் அவை அனைத்தும் பித்அத்தே ஆகும். ஆனால் அவை இந்த மார்க்கத்திற்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருந்தால் அத்தகைய புதுமைச் செயல்கள் வரவேற்புக்குரியவை. அவை இந்த மார்க்கத்தின் பெயரைக் கெடுப்பவையாகவும் ஏகத்துவக் (தவ்ஹீத்) கொள்கைக்கு முரணாகவும் இருந்தால் அவை புறந்தள்ளப்பட வேண்டியவை ஆகும். இதை அளவுகோலாக வைத்துக்கொண்டு நாம் புதுமைச் செயல்களைக் கூர்ந்து நோக்கினால் அவை நல்லவையா, கெட்டவையா என்பது நமக்குத் தெள்ளென விளங்கிவிடும்.

பின்வரும் நபிமொழி கூர்ந்து கவனிக்கத்தக்கது.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஒரு நற்செயலைத் தோற்றுவித்து, அவருக்குப் பிறகும் அது செயல்படுத்தப்படுகிறதோ அவருக்கு அதற்கான நற்கூலியும், அதைச் செயல்படுத்துவோரின் கூலிகளிலிருந்து எதுவும் குறைந்துவிடாமல் அவர்களின் கூலிகளைப் போன்றும் அவருக்கு உள்ளது.  யார் ஒரு தீயசெயலைத் தோற்றுவித்து, அவருக்குப் பிறகும் அது செயல்படுத்தப்படுகிறதோ அவருக்கு அதற்கான தீமையும், அதைச் செயல்படுத்துவோரின் தீமைகளிலிருந்து எதுவும் குறைந்து விடாமல் அவர்களின் தீமைகளைப் போன்றும் அவருக்கு உள்ளது. (நூல்: இப்னுமாஜா: 203) இதை அபூஜுஹைஃபா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

இந்த நபிமொழியின் அடிப்படையில்தான் உமர் (ரளி) அவர்கள், தராவீஹ் தொழுகையைத் தனித்தனியாகத் தொழுதுகொண்டிருந்த மக்களை ஒரே இமாமின்கீழ் தொழுமாறு கட்டளையிட்டுவிட்டு, மறுநாள் அவ்வாறே ஒரே இமாமின்பின்னால் மக்கள் தொழுவதைக் கண்ட  அவர்கள், "இந்த பித்அத் நல்லது'' என்று கூறினார்கள். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் தராவீஹ் தொழுகையை ஒரு சில நாள்கள் தொழுதுவிட்டு, (பிறகு இது தம் சமுதாயத்தார்மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில்) அதை விட்டுவிட்டார்கள். அதன்பின் அபூபக்ர் (ரளி) அவர்களின் ஈராண்டு ஆட்சிக் காலத்திலும் இவ்வழக்கம் இல்லை. உமர் (ரளி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்தான் இத்தொழுகை முறைப்படுத்தப்பட்டது. அவர்களின் ஆட்சிக் காலத்தில் இருபது ரக்அத்கள் தொழுது வந்தனர் என்பது வரலாறு. அதனடிப்படையில்தான் இன்றும் மக்கள் அதனைப் பின்பற்றித் தொழுது வருகின்றனர். ஆக இது ஒரு நன்மைக்குரிய புதுமைச் செயல் என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

"யார் ஒரு நற்செயலைத் தோற்றுவித்து, அவருக்குப் பிறகும் அது செயல்படுத்தப்படுகிறதோ...'' என்ற நபிமொழியின் அடிப்படையில், ஷரீஅத்திற்குச் சாதகமான, மக்களுக்கு நன்மையைப் பெற்றுத்தரக்கூடிய புதிய நடைமுறைகளை ஏற்படுத்துவதில் தவறில்லை என்பதோடு அதற்கான நன்மையும் கிடைக்கும், அதைப் பின்பற்றுவோரின் நன்மையும் அதை ஏற்படுத்தியவருக்குக் கிடைக்கும் என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. நூல்கள் எழுதுதல், பொது நிதியகம் (பைத்துல் மால்) ஏற்படுத்தி ஏழைகளுக்கு உதவுதல், நற்பணி மன்றங்கள் அமைத்து மக்கள் சேவையில் ஈடுபடுதல், கல்வி நிலையங்களை உருவாக்குதல், திருக்குர்ஆனை நவீனச் சாதனங்கள்மூலம் எளிய முறையில் கற்பித்தல், திருக்குர்ஆனை வேற்று  மொழிகளில் மொழிபெயர்த்தல், கணினியைப் பயன்படுத்தி ஆய்வுகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட எத்தனையோ நன்மைக்குரிய புதுமைச் செயல்கள் உள்ளன.

தொழுகைக்குப்பின் கூட்டாகப் பிரார்த்தனை செய்தல், வெள்ளிக்கிழமை யாசீன் ஓதி இறந்தோருக்கு அதன் நன்மையைச் சேர்த்துவைத்தல், வீட்டில் அபிவிருத்தி ஏற்பட இமாமை அழைத்துப் பிரார்த்தனை செய்தல், கூட்டாக அமர்ந்து திருக்குர்ஆன் ஓதுதல், கூட்டாக திக்ர் செய்தல், குறிப்பிட்ட நாள்களில் நோன்பு நோற்றல், தராவீஹ் தொழுதல், ஒவ்வோர் இரண்டு ரக்அத்திற்குப் பிறகும் தஸ்பீஹ் ஓதுதல், பெண்கள் தொழுவதற்கெனத் தனி ஏற்பாட்டைச் செய்தல், பெண்கள் பயான் கேட்பதற்கான ஏற்பாட்டைச் செய்தல், குறிப்பிட்ட நாள்களில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்துதல், மிஅராஜ், பராஅத் போன்றவற்றைக் குறிப்பிட்ட நாள்களில் நினைவூட்டுவதற்காக மக்களை ஒருங்கிணைத்தல் முதலான நற்செயல்கள் "பித்அத்'தான். ஆனால் இவற்றின்மூலம் நன்மைதானே தவிர தீது ஒன்றுமில்லை.  அதேநேரத்தில் புதிய செயல்பாடுகளைச் செயல்படுத்துவது அவரவர் சொந்த விருப்பமே தவிர கட்டாயமில்லை என்பதைத் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். அதில்தான் சிக்கலும் குழப்பமும் ஏற்படுகின்றன. இவற்றைக் கட்டாயக் கடமையைப்போல் கருதுவதும் அவ்வாறு பிரச்சாரம் செய்வதும்தான் சிக்கலுக்கான ஆணிவேர்.

"கவாஇத்' எனும் நூலின் இறுதியில் அதன் ஆசிரியர் இமாம் அபூமுஹம்மத் அப்துல் அஸீஸ் பின் அப்துஸ் ஸலாம் (ரஹ்) கூறியுள்ளதாவது: "பித்அத்' ஐவகைப்படும். 1. வாஜிப்-கடமையானது: அல்லாஹ்வின் வேதத்தையும் அவனுடைய தூதரின் பொன்மொழிகளையும் விளங்க உறுதுணையாக உள்ள அரபி இலக்கணத்தை உருவாக்குவதில் ஈடுபடுதல். ஏனென்றால் ஷரீஅத்தைக் காப்பது கட்டாயக் கடமையாகும். இதுபோன்ற நிலையிலுள்ளவை அனைத்தும் வாஜிப் ஆகும். புராதன நூல்களைப் பாதுகாத்தல், அடிப்படை மார்க்கச் சட்ட நூல்களைத் தொகுத்தல், ஹதீஸ் துறையில் ஜரஹ் வ தஅதீல்- அதன் அறிவிப்பாளர்கள் குறித்த குறை-நிறைகளைப் பேசுதல், பலவீனமான ஹதீஸ்களிலிருந்து  ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களைப் பிரித்தெடுத்தல் உள்ளிட்டவை வாஜிப் என்ற பிரிவில் வரும்.

2. ஹராம்-தடைசெய்யப்பட்டது: கத்ரிய்யா, ஜப்ரிய்யா, முர்ஜிய்யா, முஜஸ்ஸமா உள்ளிட்ட பிரிவினர் ஏற்படுத்திக்கொண்ட மத்ஹபுகள். இத்தகைய கொள்கைகள் இஸ்லாமிய ஷரீஅத்திற்கு முரணானவை.  அதேநேரத்தில் இவர்களைப் போன்ற வழிகெட்ட கூட்டத்தினருக்கு உரிய முறையில் பதிலடி கொடுப்பது ஃபர்ளு கிஃபாயா ஆகும். ஏனென்றால் இதுபோன்ற பித்அத்வாதிகளிடமிருந்து ஷரீஅத்தைக் காப்பது கட்டாயக் கடமையாகும்.

3. மன்தூப்-சுன்னத்: தற்காப்புப் படையை உருவாக்குதல், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் ஆகியவற்றை உருவாக்குதல், இஸ்லாத்தின் தொடக்கக் காலத்தில் கவனம் செலுத்தப்படாத நன்மைக்குரிய எல்லா நற்செயல்களையும் உருவாக்குதல், தராவீஹ் தொழுகையைக் கூட்டாகத் தொழுதல், ஆன்மிகத் துறையிலுள்ள நுட்பங்களை மக்கள் மத்தியில் பேசுதல், பிரச்சனைகளுக்குரிய தீர்வுகளைத் தேடும் ஆய்வுமையங்களை அமைத்தல் முதலானவை.

4. மக்ரூஹ்-விரும்பத்தகாதவை: மஸ்ஜிதுகளை அலங்கரித்தல், குர்ஆன் பிரதிகளை அலங்கரித்தல் முதலானவை. 5. முஸ்த்தஹப்பு-விரும்பத்தக்கவை: ஸுப்ஹு, அஸ்ர் தொழுகைகளுக்குப்பின் முஸாஃபஹா செய்தல், சுவையான உணவுகளைச் சமைத்து ஏழைகளுக்கு வழங்குதல், பானங்கள், ஆடைகள் ஆகியவற்றை வழங்குதல் முதலானவை.
இன்று மக்கள் மத்தியில் உள்ள இபாதத்-வழிபாடு சார்ந்த பித்அத்கள் வரவேற்கத்தக்கவையே. ஒவ்வொரு ஃபர்ள் தொழுகைக்குப் பிறகு ஓதப்படும் கூட்டு துஆ, வெள்ளிக்கிழமை யாசீன் ஓதி நன்மையைச் சேர்த்து வைத்தல், தொழுகைக்குப்பிறகு முஸாஃபஹா செய்தல், திருமணத்தில் தம்பதியரின் நலன்நாடிக் கேட்கப்படும் கூட்டுப் பிரார்த்தனை உள்ளிட்ட நற்செயல்களை பித்அத் என்று கூறிக்கொண்டு, அவற்றைச் செய்வோரை இழித்துரைப்பது குறைமதியாளர்களின் குழப்பமான செயல்பாடுகளாகும்.

அதேநேரத்தில் மக்கள் மத்தியில் புரையோடிப்போய்க் கிடக்கின்ற மூடப்பழக்கங்களை அகற்ற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. காரணம் அவை ஏகத்துவக் கொள்கைக்கு எதிரான செயல்பாடுகளும் மூடப்பழக்கங்களும் ஆகும். முஹர்ரம் மாதத்தில் பஞ்சா எடுத்தல், தீ மிதித்தல்,  இறைநேசர்கள் பெயரில் சந்தனக்கூடு, உரூஸ், கொடியேற்றம், ஸஃபர் மாதத்தில் ஸஃபர் கழிவு அனுஷ்டித்தல், பந்தக்கால் ஊன்றும் ஃபாத்திஹா, பூரி-கீர் ஃபாத்திஹா, திருஷ்டி கழிக்க ஆரத்தி எடுத்தல், பூசணிக்காய் உடைத்தல், தர்ஹாக்களில் மயிலிறகு ஆசி பெறுதல், தர்ஹாவை தவாஃப் வருதல், பெரியார்களின் கப்ர் முன்னிலையில் சஜ்தா செய்தல், பொது கப்ரஸ்தானில் கப்ரை சந்தனத்தால் பூசி மெழுகுதல், திக்ர் என்ற பெயரில் ஆட்டம் போடுதல், மாப்பிள்ளையைப் பூக்களால் அலங்கரித்து முகம் தெரியாமல் அழைத்து வருதல் முதலானவை முற்றிலும் களையப்பட வேண்டியவை.

எப்பக்கமும் சாயாமல் துலாக்கோலைப் போல் நேர்மையாக நின்று ஷரீஅத்தைப் புரிந்து, அதன்படி நடக்க இன்றைய இளைஞர்கள் உள்பட அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு ஏதாவது ஒரு கொள்கையை மனத்தில் பதிய வைத்துக்கொண்டு அதற்கேற்ப நபிமொழிகளை வளைத்துக்கொள்ள முயற்சி செய்வது அறியாமையின் வெளிப்பாடாகும். உண்மையின் பக்கம் மனத்தைச் சாய்ப்பதே வெற்றிக்கான வழியாகும்.








செவ்வாய், 24 ஏப்ரல், 2018

முனைவர் பட்டம் பெற்ற ஆலிம்கள்!



(ஒரு காணொலித் தொகுப்பு)


வியாழன், 19 ஏப்ரல், 2018

புகாரீ (ரஹ்) அவர்கள் எழுதிய ‘அதபுல் முஃப்ரத்’


------------------------------------------------------------------
புகாரீ (ரஹ்) அவர்கள் எழுதிய புகாரீ எனும் நூல் மட்டுமே பலருக்குத் தெரியும். ஆனால் அவர்கள் எழுதிய வேறு பல நூல்களும் உள்ளன. அவற்றுள் மிக முக்கியமான ஒன்று ‘அதபுல் முஃப்ரத்’ ஆகும்.

தம்முடைய நிபந்தனைக்கு உட்படாத, அதேநேரத்தில் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை அதில் தொகுத்துள்ளார்கள். ஒரு தனி மனிதன் தன் அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய இஸ்லாமிய ஒழுக்கங்கள் குறித்த நபிமொழிகள்தாம் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அதனால்தான் இந்நூல் ‘அதபுல் முஃப்ரத்-தனிமனித ஒழுக்கம்’-எனும் பெயர் பெறுகிறது.

இந்நூலை மொழிபெயர்த்த அப்துர் ரஹ்மான் மன்பஈ வாழ்த்துக்குரியவர். சாஜிதா பதிப்பகத்தின் உரிமையாளர் ஜனாப் முஹம்மது ஜகரிய்யா இந்நூலைப் பிழைதிருத்தம் செய்து தருமாறு என்னிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, தமிழ் வார்த்தைகளையும் நடையையும் செம்மைப் படுத்தியுள்ளேன். அதுவே இந்நூலில் எனது பங்காகும்.

இந்நூலை வாங்கி வாசிக்கும் வாய்ப்பை அனைவரும் பெற வேண்டும் என்பதே என் அவா. அதற்காக நான் இறைவனிடம் துஆச் செய்கிறேன். 

பக்கங்கள்: 632
விலை: ரூ. 300/-
வெளியீடு: சாஜிதா பதிப்பகம், மண்ணடி, சென்னை-1
தொடர்புக்கு: 044 2522 4821

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
(இமாம் மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார், மணலி, சென்னை-68.)






ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

இஸ்லாமியப் பார்வையில் நதிநீர்ப் பங்கீடு!



-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

வானம் பார்த்த பூமி என்பது மழை பொழிந்து, அதனால் விளையும் நிலமாகும். அதையே நன்செய் நிலம் என்கிறார்கள். பாசன நிலம் என்பது மனிதன் தன் உழைப்பால் தண்ணீர் பாய்ச்சி, வேளாண்மை செய்யும் நிலமாகும். அதையே புன்செய் நிலம் என்கிறார்கள். இஸ்லாமியப் பார்வையில், மழை பொழிந்து தானாக விளையும் நிலத்தின் விளைச்சலிலிருந்து பத்து சதவிகிதம் ஸகாத் வழங்க வேண்டும். சிரமப்பட்டுத் தண்ணீர் பாய்ச்சி விளைவிக்கும் நிலத்தின் மகசூலிலிருந்து ஐந்து சதவிகித ஸகாத் வழங்க வேண்டும்.  

மூன்று பொருள்கள் முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவானவை. அவை: (ஓடுகின்ற) நீர், புல், நெருப்பு ஆகியவையாகும். இவற்றை விற்பது விலக்கப்பட்டதாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா: 2463)  உங்களுள் ஒருவர் (தம் தேவைக்குப் போக) பொது மேய்ச்சல் நிலத்திற்குச் செல்லும் உபரி நீரைத் தேக்கிவைக்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா: 2469)

இஸ்லாமியப் பார்வையில் நீர் ஒரு பொதுச் சொத்தாகும். ஓடும் நீரைத் தடுத்து வைத்துக்கொள்வதோ குறிப்பிட்ட ஒரு சாரார் மட்டும் பயன்படுத்துவதோ கூடாது. நீரை விவசாயிகள் தம்மிடையே பகிர்ந்துகொள்ள வேண்டும். அவர்கள் மத்தியில் நீர்ப்பங்கீட்டில் சண்டை ஏற்பட்டால் அதில் அரசு தலையிட்டு, முறையாகப் பகிர்ந்தளிப்பது கடமையாகும்.

ஒரு தடவை வாய்க்கால் நீர்ப் பங்கீட்டில் இரண்டு விவசாயிகளிடையே சச்சரவு ஏற்பட்டு,  அவ்வழக்கு நபி (ஸல்) அவர்களிடம் வந்தது. அது குறித்து நபி (ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு:
அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரளி) அவர்கள் கூறியதாவது: மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த "ஹர்ரா' (என்னுமிடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்ஸாரிகளுள் ஒருவர் (என் தந்தை) ஸுபைர் (ரளி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அந்த அன்ஸாரித் தோழர், "தண்ணீரைத் திறந்து ஓடவிடு'' என்று கூறினார். ஸுபைர் (ரளி) அவர்கள் (தண்ணீரைத் திறந்துவிட) மறுத்து விட்டார்கள். (இந்தத் தகராறையொட்டி) நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்காக இருவரும் சென்றபொழுது நபி (ஸல்) அவர்கள், "ஸுபைரே! உங்கள் தோப்புக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு, பிறகு உங்கள் பக்கத்துத் தோப்புக்காரருக்குத் தண்ணீரை அனுப்பி விடுங்கள்'' என்று கூறினார்கள்... (நூல்: புகாரீ: 2360)


வாய்க்கால் நீர், நதிநீர் உள்ளிட்ட நீர்கள் அனைத்தும் மக்களுக்கான பொதுச் சொத்தாகும். அதை விவசாயிகள் முறையாகத் தம்மிடையே பிரித்துக்கொண்டு வேளாண்மை செய்ய வேண்டும். அவர்களிடையே தகராறு ஏற்பட்டால் ஒரு நடுவர் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும். அரசுதான் இதற்குப் பொறுப்பு. அதைத்தான் நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள். அது ஒரு பொதுச் சொத்து என்ற அடிப்படையில் ஒரு விவசாயி பயன்படுத்திய பிறகு மற்றொரு விவசாயி பயன்படுத்துவதற்கு அதை விட்டுக்கொடுக்க வேண்டும். இதுவே நியாயமும் நேர்மையும் ஆகும்.

ஆனால் இன்றைக்கு மிகவும் பிரச்சனையாக இருப்பது எது? தண்ணீர்தான். ஒரே நாட்டில் உள்ள இரண்டு மாநிலங்களுக்கிடையே நீண்டகாலமாக நிலவிவருகின்ற ஒரு பிரச்சனையை நாட்டின் பிரதமர் என்ற அடிப்படையில், அப்பொறுப்பை வகிப்பவர்தாமே இப்பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இரண்டு மாநிலங்களுக்கும் எவ்வளவு தண்ணீர் தேவையோ அதை முறைப்படி பங்கிட்டுக்கொடுக்காமல், பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் பல்லாண்டுகளாக அதை வளர்த்துக்கொண்டே செல்வது ஆட்சியாளருக்கு அழகா?

கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வழங்கிவந்த நீர் 400க்கும் மேலான டிஎம்சி ஆகும். காலம் செல்லச் செல்ல, படிப்படியாகக் குறைந்து, 192 டிஎம்சி நீர் தருவதாக ஒத்துக்கொண்டு, வழங்கிக்கொண்டிருந்தபோது, தற்போது 177 டிஎம்சி நீரையே தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளது. அதையாவது ஒழுங்காகக் கொடுக்காமல் அதையும் தரமுடியாது என்று கூறுவது என்ன நியாயம்?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேர்களுடன் மறுமையில் அல்லாஹ் பேசவும் மாட்டான்;  அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்... தன் தேவைக்கு மேல் எஞ்சியிருந்த தண்ணீரை (மக்கள் உபயோகிப்பதை)த் தடுத்தவன். (மறுமையில்) அவனை நோக்கி, "உன் கரங்கள் உருவாக்காத தண்ணீரின் மீதத்தை மக்கள் உபயோகிக்கவிடாமல் தடுத்ததைப் போலவே இன்று நான் எனது அருளிலிருந்து உன்னைத் தடுக்கின்றேன்'' என்று அல்லாஹ் கூறுவான். (நூல்: புகாரீ: 2369) தேவைக்குப்போக எஞ்சிய தண்ணீரைத்தான் தமிழக விவசாயிகள் கேட்கின்றார்கள். அதைப் பெற்றுத் தருவதில்தான் எத்தனையெத்தனை அரசியல் சூழ்ச்சிகள்!  

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்காதீர்கள். (அவ்வாறு தடுத்தால், அப்பகுதியில்) தேவைக்கு மேல் உள்ள புல் பூண்டுகளைத் தடுத்தவராக நீங்கள் ஆகிவிடுவீர்கள். (நூல்: புகாரீ: 2354) கர்நாடக விவசாயிகள் தம் வேளாண்மைக்குத் தேவையான தண்ணீரைப் பயன்படுத்திக்கொண்டு, மீதித் தண்ணீரைத் தமிழக விவசாயிகளுக்குத் தாராளமாக வழங்க முன்வந்தால் இரண்டு மாநிலங்களுக்கிடையே எந்தப் பிரச்சனையும் இல்லை. 

ஊட்டி மலையிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கின்ற தண்ணீரை அணைபோட்டுத் தடுத்துவிடாமல் அது செல்லும் வழியே அதைச் செல்லவிட்டு, எந்த விவசாயிக்கும் ஏமாற்றமளிக்காத தமிழக மக்கள் பாராட்டுக்குரியவர்கள். அதே போன்ற பெருந்தன்மை மிக்கோராகக் கர்நாடக மக்கள் நடந்துகொண்டால் நாடும் நாட்டு மக்களும் நலமோடு வாழ்வார்கள். 

உலகில் வேறெங்கும் இத்தகைய பிரச்சனை இருப்பதாகத் தெரியவில்லை.
எகிப்தில் பாய்ந்தோடுகின்ற நைல் நதி உலகின் மிக நீளமான நதிகளுள் ஒன்றாகும். இது 6,650 கி.மீ. நீளம் கொண்டதாகும். இது வடகிழக்கு ஆப்ரிக்காவில் தொடங்கி தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புரூண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்ரியா, தெற்கு சூடான், சூடான், எகிப்து ஆகிய 11 நாடுகளைக் கடந்து மத்தியத் தரைக்கடலில் கலக்கிறது.

உலகின் மிக நீளமான ஆறுகளுள் ஒன்றான அமேசான் ஆறு தென் அமெரிக்கக் கண்டத்திலுள்ள பிரேசில் நாட்டின் ஆண்டிஸ் மலைத்தொடரில் உற்பத்தியாகி பெரு, கொலம்பியா ஆகிய நாடுகளின் வழியாக 6,760 கி.மீ. பயணித்து அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.
சிந்து நதியின் நீளம் 3,610 கி.மீ. இது இமய மலைத் தொடரில் கயிலை மலையில் மானசரோவர்  அருகே திபெத்தின் மேற்குப் பகுதியில் தோன்றி லடாக், காஷ்மீர், பாகிஸ்தான் வழியாக பஞ்சாப் வரை வந்து அரபிக் கடலில் கலக்கிறது.

மிஸ்ஸிசிப்பி ஆறு வடஅமெரிக்காவில் உள்ளது. இது மினசோட்டாவில் உள்ள இத்தாஸ்கா ஏரியிலிருந்து உற்பத்தியாகிறது. 3734 கி.மீ. நீளம். ஐக்கிய அமெரிக்காவிலுள்ள இந்த ஆறு மினசோட்டா, விஸ்கொன்சின், அயோவா, இல்லினாய், மிசூரி, கென்டக்கி, தென்னசி, ஆர்கன்ஸா, மிஸ்ஸிசிப்பி, லூசியானா ஆகிய மாநிலங்களைக் கடந்து செல்கிறது.

இப்படி உலகெங்கும் பரவலாக மக்களின் பயன்பாட்டைக் கருதி இறைவன் ஏற்படுத்திய நீர் வளத்தைக் கண்டு மனிதன் அதிசயிக்கிறான், அனுபவிக்கிறான்.  நதிகளும் ஆறுகளும் அதனதன் பாதையில் ஓடிக்கொண்டே இருந்தால் மக்கள் பயன்பெறுவார்கள். அதுதான் இறைவனின் நியதி. ஆண்டாண்டு காலமாக எந்தப் பிரச்சனையுமின்றி அவை ஓடிக்கொண்டே இருக்கின்றன. அந்தந்த நாட்டில் ஓடுகின்ற ஆறுகள் வேளாண்மைக்குப் பெரிதும் பயன்படுகின்றன. அங்கு ஓடுகின்ற நதி நீரை யாரும் தடுத்து வைத்துக்கொள்வதில்லை.

கொல்கத்தா ஹூக்ளி ஆறு 260 கி.மீ. நீளம் கொண்டது. கங்கையின் கிளை ஆறு. மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பிரிகிறது. 

கோதாவரி ஆறு மஹாராஷ்டிரா-நாசிக் அருகில் திரிம்பாக் எனுமிடத்தில் உற்பத்தியாகி மும்பையைக் கடந்து ஆந்திர மாநிலத்திலுள்ள இராஜமுந்திரி மாவட்டத்தை அடைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதில் இரண்டு மாநிலங்களுக்கிடையே எந்தப் பிரச்சனையுமில்லை. 
குடகு மாவட்டத்தில் தலைக்காவேரி எனுமிடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகின்ற இந்த ஆற்றின் நீளம் 800 கி.மீ. ஆகும். கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூரு, மாண்டியா, பெங்களூரு, சாம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக வந்து தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டணம் ஆகிய மாவட்டங்கள் வழியாக பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதில்தான் இரண்டு மாநிலங்களுக்கிடையே பிரச்சனை நீண்ட காலமாக நீண்டுகொண்டே செல்கிறது.  

அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் பருகும் இந்த நீரை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? மேகத்தில் இருந்து, நீங்கள் இதனைப் பொழியச் செய்தீர்களா? அல்லது இதனைப் பொழியச் செய்தது நாமா? நாம் நாடியிருந்தால் இதனை உவர்ப்பு நீராக்கிவிட்டிருப்போம். அப்படியிருக்க, நீங்கள் ஏன் நன்றி செலுத்துவதில்லை? (56: 68-70)

திருக்குர்ஆனின் இவ்வசனங்கள் கூர்ந்து நோக்கத்தக்கவை. இறைவனின் அருட்கொடைகளை மனிதன் உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு, அவனுக்கு நன்றி செலுத்திவர வேண்டும். அதை விடுத்து, சண்டையிட்டுக்கொண்டும் வரம்புமீறிக்கொண்டும் இருந்தால், இறைவன் மற்றொருவனை உள்ளுக்குள் கொண்டுவந்து அநியாயக்காரர்களைப் பழிதீர்ப்பான் என்பதே அவனது நியதி. அத்தகைய ஒரு சூழ்நிலை வருவதற்குள் புரிந்துணர்ந்து, நீரைப் பகிர்ந்துகொள்வதே நம் அனைவருக்கும் நலம் பயக்கும்.
========================================