வியாழன், 3 மார்ச், 2011

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 18)

மற்றொரு சான்று

நிச்சயமாக அறுக்கப்பட்டவர் இஸ்மாயீல் நபிதான் என்று முஹம்மத் பின் கஅப் அல்குரழீ உள்ளிட்டவர்கள் கூறுகின்றனர். மேலும், நிச்சயமாக இஸ்ஹாக்கை அறுக்க ஏவ முடியாது. ஏனெனில், அல்லாஹ் அவருடைய பிறப்பைப் பற்றியும் அவருக்குப்பின் பிறக்கவுள்ள மகன் யஅகூபைப் பற்றியும் நற்செய்தி கூறிவிட்டான்.

வந்திருந்த வானவர்களுக்கு இப்ராஹீம் நபியவர்கள் இளம் கன்றைப் பொரித்துக் கொண்டுவந்து வைத்தார். அத்துடன் மக்கா நகர் ரொட்டி, நெய், பால் போன்றவையும் இருந்தன. அவர்கள் அவற்றை உண்டார்கள் என்று வேதக்காரர்கள் கூறுகின்றனர். இது முற்றிலும் தவறானதாகும். வானவர்கள் சாப்பிடுவதாகவும் ஆனால், அந்த உணவு காற்றில் கரைந்துவிடுவதாகவும் அவர்கள் கருதிக்கொண்டிருந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ் இப்ராஹீம் நபியிடம் சொன்னான்: சாரா உம்முடைய மனைவி ஆவார். அவருடைய பெயர் சாரா இல்லை. மாறாக, அவருடைய பெயர் `சார்ரா ஆகும். அவர் மீது நான் அருள்புரிகிறேன். அவர் மூலம் ஒரு மகனை நான் உமக்குக் கொடுக்கிறேன். அந்த மகனுக்கும் நான் அருள்புரிகிறேன். அவர் மூலம் பற்பல வமிசத்தினர் தோன்றுவர். அந்த வமிசங்களிலிருந்து அரசர்கள் தோன்றுவார்கள். இத்தகவலை வேதக்காரர்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்ட இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்தும்விதமாக சிரம் பணிந்தார். அவர் தம் மனதுக்குள், நூறு வயதுக்குப் பிறகா எனக்குக் குழந்தை பிறக்கப்போகிறது? மேலும், தொண்ணூறு வயதிலா சார்ரா ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கப்போகின்றார்? என்று கூறிக்கொண்டார்.

இஸ்மாயீல் உன் முன்னிலையில் வாழ வேண்டுமென நான் விரும்புகிறேன் என்று இப்ராஹீம் (அலை) அல்லாஹ்விடம் கூறினார். அப்போது அல்லாஹ், நிச்சயமாக உம் மனைவி சார்ரா ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கப்போகிறார். எதிர்வரும் ஆண்டின் இந்நேரத்தில் அவர் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து அதனை இஸ்ஹாக் என்று அழைத்துக்கொண்டிருப்பார். என்னுடைய வாக்குறுதியை காலம் முழுவதும் அவருக்கும் அவரது சந்ததியினருக்கும்நான் நிறைவேற்றுவேன். நான் இஸ்மாயீல் விசயத்தில் உமது பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டேன்; அவர் மீது நான் அருள்புரிந்தேன்; அவரைப் பெரியவராக ஆக்கினேன்; அவரை நான் நன்றாக வளர்த்தேன்; அவருக்குப் பன்னிரண்டு குழந்தைகள் பிறப்பார்கள். மிகப்பெரும் சமுதாயத்திற்கு அவரை நான் தலைவராக ஆக்குவேன் என்று கூறினான்.*

அவருக்கு நாம் இஸ்ஹாக்கைப் பற்றியும் இஸ்ஹாக்குக்குப்பின் (பேரர்) யஅகூபைப் பற்றியும் நற்செய்தி கூறினோம். (11: 71) நிச்சயமாக சார்ரா அம்மையார், தமக்கு இஸ்ஹாக் எனும் பெயருடைய மகன் பிறப்பதன் மூலம் மகிழ்வார்; பேருவகை கொள்வார் என்பதற்கு இந்த வசனமே தக்க ஆதாரமாகும். இஸ்ஹாக்குக்குப் பின்னர், அவருடைய மகன் யஅகூப் (இப்ராஹீமின் பேரர்) பிறப்பார். அதாவது இப்ராஹீம்-சார்ரா இருவருடைய வாழ்நாளிலேயே யஅகூபும் பிறப்பார். சார்ரா அம்மையாரும் இப்ராஹீம் (அலை) அவர்களும் இஸ்ஹாக் பிறந்ததின் மூலம் அடைந்த மகிழ்ச்சியைப்போல் தம்முடைய பேரர் மூலமும் மகிழ்ச்சியடைவர்.
இவையெல்லாம் நடக்காது என்றிருந்தால், இந்த வசனத்தில் அல்லாஹ் யஅகூபையும், இஸ்ஹாக்குடைய மற்ற சந்ததிகளையும் விட்டுவிட்டு, யஅகூப் எனும் சந்ததியை மட்டும் குறிப்பிட்டுக் கூறியிருப்பதில் எந்தப் பயனும் இல்லை. மேலும், யஅகூப் என்று குறிப்பிட்டுக் கூறப்பட்டிருப்பதால், அவ்விருவரும் அக்குழந்தை மூலம் மகிழ்ச்சியடைவார்கள் என்றே இவ்வசனம் தெரிவிக்கிறது.

அதாவது இதற்கு முன்பு யஅகூப் உடைய தந்தை இஸ்ஹாக் பிறந்தபோது, இப்ராஹீம்-சார்ரா இருவரும் மகிழ்ந்தார்கள். அதைப்போலவே, யஅகூப் மூலம் சார்ரா-இஸ்ஹாக் மகிழ்ச்சியடைவார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: `(இப்ராஹீமாகிய) அவருக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் பரிசளித்தோம். (அவர்கள்) அனைவருக்கும் நல்வழி காட்டினோம். (7: 84) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: (இவ்வாறு) அவர் அவர்களையும், அவர்கள் வழிபட்டுக்கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற் றையும் விலக்கிக் கொண்டபோது, இஸ்ஹாக்கையும் யஅகூபையும் அவருக்கு நாம் பரிசளித்தோம். (19: 49)

மஸ்ஜிதுல் அக்ஸாவைக் கட்டுதல்

இறைத்தூதரே! எந்த மஸ்ஜித் முதன் முதலில் கட்டப்பட்டது? என்று நான் கேட்டேன். அல்மஸ்ஜிதுல் ஹராம்-மக்காவிலுள்ள இறையாலயம் ஆகும் என்று பதிலளித்தார்கள். பிறகு எது? என்று நான் கேட்டேன். அல்மஸ்ஜிதுல் அக்ஸா என்று பதிலளித்தார்கள். அவ்விரண்டுக்கும் இடையே உள்ள காலம் எவ்வளவு? என்று நான் வினவினேன். நாற்பது ஆண்டுகள் என்று பதிலளித்தார்கள். பிறகு எது? என்று நான் கேட்டேன். நீர் எங்கு தொழுகையை அடைந்துகொள்கின்றீரோ அங்கு தொழுது கொள்வீர்! ஏனெனில், அவை அனைத்தும் (சம மதிப்புள்ள) மஸ்ஜிதுகள் ஆகும் என்று பதிலளித்தார்கள் என அபூதர் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)
நிச்சயமாக யஅகூப் நபிதான் அல்மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு அடித்தளமிட்டார். அதுதான் ஈலியா மஸ்ஜித் என்றும் பைத்துல் மக்திஸ் மஸ்ஜித் என்றும் அழைக்கப்படுகிறது என்று வேதக்காரர்கள் கூறுகின்றனர்.

இது ஏற்கத்தக்கதுதான். இதற்கு, மேலே நாம் எடுத்துக்கூறிய நபிமொழியே ஆதாரமாகும். இதன்படி, இப்ராஹீம்-இஸ்மாயீல் (அலைஹிமஸ்ஸலாம்) இருவரும் இணைந்து மக்காவில் அமைந்துள்ள இறையாலயத்தைக் கட்டி முடித்த நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர்தான், யஅகூப் (அலை) மஸ்ஜிதுல் அக்ஸாவைக் கட்டினார். இப்ராஹீம்-இஸ்மாயீல் (அலைஹிமஸ்ஸலாம்) இருவரும் இணைந்து கட்டிய இறையாலயம், நபி இஸ்ஹாக் (அலை) அவர்கள் பிறந்த பின்பே ஆகும். ஏனெனில், இறையாலயத்தைக் கட்டி முடித்த பின்னர், இப்ராஹீம் (அலை) அவர்கள் தமக்குப் பிள்ளைகள் வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவில்லை. அவர்கள் செய்த பிரார்த்தனையை அல்லாஹ்வே கூறுகின்றான்.

என் இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக ஆக்குவாயாக! என்னையும் என் பிள்ளைகளையும் சிலைகளை வழிபடுவதிலிருந்து விலக்கிவைப்பாயாக என்று இப்ராஹீம் வேண்டியதை எண்ணிப்பாருங்கள். என் இறைவா! நிச்சயமாக அவை மனிதர்களுள் பெரும்பாலோரை வழிதவறச் செய்துவிட்டன. எனவே, என்னைப் பின்பற்றியவர் என்னைச் சேர்ந்தவர் ஆவார். எனக்கு யாரேனும் மாறுசெய்தால், நிச்சயமாக நீ மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவாய் (என்றும் இப்ராஹீம் கூறினார்).

எங்கள் இறைவா! நான் என்னுடைய வழித்தோன்றல்களுள் சிலரைப் பயிரற்ற பள்ளத்தாக்கு ஒன்றில், உனது புனித ஆலயத்திற்கு அருகே குடியமர்த்தியுள்ளேன். எங்கள் இறைவா! இவர்கள் தொழுகையைக் கடைப்பிடிப்பதற்காகவே (இவ்வாறு செய்தேன்). எனவே, மக்களுள் சிலருடைய இதயங்களை இவர்களின்பால் கவரச்செய்வாயாக! இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக! (இதன் மூலம் ) இவர்கள் நன்றி செலுத்துவோர் ஆகலாம் (என்றும் இப்ராஹீம் பிரார்த்தனை செய்தார்).
எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பதையும் நாங்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகின்றாய்; பூமியிலும் வானத்திலும் அல்லாஹ்வுக்கு எதுவும் மறைந்ததன்று (என்றும் இப்ராஹீம் கூறினார்).

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன; அவனே எனக்கு முதுமையிலும் இஸ்மாயீலையும் இஸ்ஹாக்கையும் (குழந்தைகளாக) வழங்கினான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைச் செவியேற்பவன் ஆவான் (என்றும் இப்ராஹீம் கூறினார்).
என் இறைவா! என்னையும் என் வழித்தோன்றல்களையும் தொழுகையைக் கடைப்பிடிப்பவர்களாக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! என் பிரார்த்தனையை ஏற்பாயாக! (என்றும் இப்ராஹீம் கூறினார்). எங்கள் இறைவா! விசாரணை நடைபெறும் நாளில் எனக்கும் என் பெற்றோருக்கும் இறைநம்பிக்கை கொண்டோருக்கும் மன்னிப்பு வழங்குவாயாக! (என்றும் இப்ராஹீம் கூறினார்). (14: 35-41)

சுலைமான் பின் தாவூத் (அலை) அவர்கள் பைத்துல் மக்திஸைக் கட்டி முடித்தபோது, அவர் தம் இறைவனிடம் மூன்று விசயங்களைக் கேட்டார். அவர் செய்த பிரார்த்தனையை அல்லாஹ் கூறுகின்றான்: என் இறைவா! என்னை மன்னிப்பாயாக! மேலும்,பின்னர் எவருமே அடையமுடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக (38: 35) அதாவது 1. மன்னித்தல், 2. ஆட்சியை வழங்குதல், 3. அதுபோன்ற ஆட்சியைப் பிறருக்கு வழங்காதிருத்தல் ஆகிய மூன்றாகும். இது பற்றிய விளக்கத்தை சுலைமான் (அலை) அவர்களின் வரலாற்றில் நாம் தெளிவாகக் கூறுவோம். அவர் கேட்டதன் நோக்கம் என்ன என்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

மேற்கண்ட நபிமொழியிலிருந்து, பைத்துல் முகத்தசை சுலைமான் (அலை) கட்டினார் என்பதன் நோக்கம், அவர் அதனைப் புதுப்பித்துக் கட்டினார் என்பதாகும். கஅபாவிற்கும் பைத்துல் முகத்தசுக்கும் இடையே உள்ள கால அளவு நாற்பது ஆண்டுகளாகும் எனும் நபிமொழியிலிருந்து இதனை நாம் விளங்க முடியும். சுலைமான் நபிக்கும் இப்ராஹீம் நபிக்கும் இடையே நாற்பது ஆண்டுகளே இடைவெளி இருந்தன என்று இப்னு ஹிப்பான் (ரஹ்) தவிர யாரும் சொல்லவில்லை. அவருடைய இக்கூற்று நபிமொழிக்கு எதிராக உள்ளது. இக்கருத்தை வேறு யாரும் கூறவில்லை. உயர்ந்தோன் அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

----------------அடிக்குறிப்பு------------------------

* இது பற்றி விரிவாக நாம் ஏற்கெனவே கூறிவிட்டோம். அல்லாஹ்வே நன்கறிபவன்.

அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.

வியாழன், 24 பிப்ரவரி, 2011

யாருக்கு உங்கள் வாக்கு?

இலட்சியத்தூது மாத இதழில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரையின் கருத்து இன்றும் பொருந்துகிறது. எனவே நான் அதை இங்கு வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.







புதன், 23 பிப்ரவரி, 2011

வெளிவந்துவிட்டது


முஹம்மது முஸ்தபா அல்ஜிபாலீ ஆங்கிலத்தில் எழுதிய முஸ்லிம் பேமிலி எனும் நூலை   இஸ்லாமிய இல்லறம் எனும் தலைப்பில் நான் (நூ அப்துல் ஹாதி பாகவி) 
 தமிழாக்கம் செய்துள்ளேன். படிக்கப் படிக்கச் சுவையான தமிழ் நூல்.

 சென்னையில் உள்ள சாஜிதா பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.  இந்நூலில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகள், திருமணம் தொடர்பான அனைத்துத் தகவல்களும் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஆதாரங்களோடு அ முதல் ஃ வரை கூறப்பட்டுள்ளன. தம்பதிகள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய அரிய நூல். 
 பக்கங்கள்:  448  விலை:  ரூ. 170/-   நூலைப்பெற தொடர்புகொள்ள வேண்டிய செல்பேசி எண்:  9840977758




திங்கள், 14 பிப்ரவரி, 2011

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 17)

இஸ்ஹாக் நபியின் பிறப்பு

அல்லாஹ் கூறுகின்றான்: நல்லோர்களிலுள்ள நபியாக இஸ்ஹாக்கை அவருக்கு (மகனாகத் தருவதாக) நாம் நற்செய்தி கூறினோம். இன்னும் நாம் அவர்மீதும், இஸ்ஹாக்மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம். மேலும், அவ்விருவருடைய சந்ததியருள் நன்மை செய்பவர்களும் இருக்கின்றார்கள். மேலும், தமக்குத்தாமே பகிரங்கமாக அநியாயம் செய்துகொள்வோரும் இருக்கின்றனர். (37: 112-113)

வானவர்கள், லூத் (அலை) அவர்களுடைய சமுதாய மக்களின் இறைமறுப்பாலும் வரம்பு மீறிய பாவத்தாலும் அவர்களை அழிப்பதற்காக இப்ராஹீம் மற்றும் சார்ரா அம்மையாரைக் கடந்துசென்ற வேளையில், அவர்கள் அவ்விருவரையும் சந்தித்து மேற்கண்ட நற்செய்தியைத் தெரிவித்தனர். லூத் (அலை) அவர்களுடைய சமுதாயத்தினர் பற்றி-இன்ஷா அல்லாஹ்-வரும் பக்கங்களில் காணலாம்.

* அல்லாஹ் கூறுகின்றான்: நம் தூதர்கள், (இறைத்தூதர்) இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டுவந்து, (உம்மீது) சாந்தி நிலவட்டுமாக! என்று கூறினார்கள். அவரும் (பதிலுக்கு) (உங்கள்மீதும்) சாந்தி உண்டாவதாக! என்று கூறினார். பின்னர் சற்று நேரத்திற்குள், பொரித்த (இளம்) கன்று ஒன்றை அவர் கொண்டுவந்(து அவர்களுக்கு விருந்தளித்)தார்.

அவர்களின் கைகள் அதை நோக்கி நீளாததை அவர் கண்டபோது, அவர்களைப் புதிராகப் பார்த்தார். மனத்துக்குள் அவர்களைப் பற்றி அவர் அஞ்சினார். அப்போது அவர்கள், நீர் அஞ்சாதீர்; நிச்சயமாக நாங்கள் லூத்தின் சமூகத்தாரிடம் அனுப்பப்பட்டுள்ளோம் என்று கூறினார்கள். (அங்கு) அவருடைய துணைவியும் நின்றிருந்தார். அவர் (இதைக் கேட்டதும்) சிரித்தார். நாம் அவருக்கு இஸ்ஹாக் (பிறக்கப்போவது) குறித்தும், இஸ்ஹாக்குக்குப் பின்னர் (பேரர்) யஅகூப் குறித்தும் நற்செய்தி கூறினோம்.

அதற்கு அவர் (துணைவி), அந்தோ! துயரமே! நானும் முதியவளாகி, இதோ என் கணவரும் மூப்படைந்துவிட்ட நிலையில் எனக்குக் குழந்தை பிறக்குமா? நிச்சயமாக இது வியப்பான விஷயம்தான்! என்று கூறினார். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் முடிவு குறித்தா நீர் வியப்படைகிறீர்? (நபியின்) குடும்பத்தாரே! இறையருளும் அவன் வளங்களும் உங்களுக்குக் கிடைக்கட்டும்! நிச்சயமாக அவன் புகழுக்குரியோனும் மகத்துவமிக்கோனும் ஆவான் என்று கூறினார்கள்.(11: 69-73)

* (நபியே!) இப்ராஹீமின் விருந்தினர்கள் பற்றி அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவர்கள் அவரிடம் வந்ததும், சாந்தி உண்டாகட்டும்! என்று (முகமன்) கூறினார்கள். (அதற்கு) அவர், உங்களைக் குறித்து நாம் அச்சமடைகிறோம் என்று கூறினார். நீர் அஞ்சாதீர்! நிச்சயமாக நாங்கள், உமக்கு அறிவார்ந்த ஆண் குழந்தை (பிறக்கப்போவது) குறித்து நற்செய்தி கூறுகிறோம் என்று அவர்கள் கூறினர். என்னை முதுமை வந்தடைந்துவிட்ட நிலையில் எனக்கு நற்செய்தி கூறுகின்றீர்களா? எந்த அடிப்படையில் நற்செய்தி கூறுகிறீர்கள்? என்று (இப்ராஹீம்) வினவினார்.

உண்மையாகவே, உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம். எனவே, அவநம்பிக்கை கொள்வோருள் ஒருவராக நீர் ஆகிவிடாதீர்! என்று அவர்கள் கூறினர். (அதற்கு இப்ராஹீம்), வழிதவறியோர் தவிர வேறு யார் தம் இறைவனின் அருள்மீது அவநம்பிக்கை கொள்வார்? என்று கூறினார். (15: 51-56)
* இப்ராஹீமின் கண்ணியமான விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள், அவரிடம் நுழைந்தபோது, (அவரை நோக்கி, உங்கள் மீது) சாந்தி உண்டாவதாக! என்று கூறினார்கள். (அதற்கவர், உங்கள் மீது) சாந்தி உண்டாவதாக! என்று (பதில்) கூறினார். இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லா சமூகத்தாராக இருக்கின்றார்களே (என்று எண்ணிக்கொண்டார்). எனினும், அவர் தம் குடும்பத்தாரிடம் விரைந்து சென்று, ஒரு கொழுத்த காளைக் கன்றை(ப் பொரித்து)க் கொண்டுவந்தார்.

அதை அவர்கள் முன்வைத்து, நீங்கள் உண்ணமாட்டீர்களா? என்று கேட்டார். (அவர்கள் அதை உண்ணாததால்) அவர்களைப் பற்றிய பயத்தை உணர்ந்தார். (இதனை அறிந்த) அவர்கள் `பயப்படாதீர்! எனக் கூறினர். மேலும், அவருக்கு அறிவுமிக்க குழந்தை (பிறக்கப்போகிறது) என்ற நற்செய்தியைக் கூறினர். பின்னர், இதைக் கேட்ட அவருடைய மனைவி சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக்கொண்டு நான் குழந்தைப்பேறற்ற முதியவளாயிற்றே! என்று கூறினார். அதற்கு அவர்கள், இவ்வாறே, உம் இறைவன் கூறினான். திண்ணமாக அவன் ஞானம் மிக்கோனும், (யாவற்றையும்) நன்கறிந்தோனும் ஆவான் என்று கூறினார்கள். (51: 24-30)
அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் கூறியுள்ள வானவர்கள் மூவர் என்று அறிஞர்கள் பலர் கூறியுள்ளனர். அவர்கள், ஜிப்ரீல், மீகாயீல், இஸ்ராஃபீல் ஆகியோர் ஆவர். இம்மூவரும் இப்ராஹீம் நபியிடம் வந்தபோது, அவர்களை விருந்தினர்கள் என்றே முதலில் அவர் நினைத்தார். எனவே, விருந்தினர்களைக் கவனிப்பதைப் போன்றே அவர் அவர்களைக் கவனித்தார். அவருடைய மாடுகளுள் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதை அவர்களுக்காகப் பொரித்தார். அதைக் கொண்டுவந்து அவர்கள் முன்னிலையில் வைத்தார்.

அவர்கள் அதைச் சாப்பிடத் தம் கைகளை நீட்டாதபோது, அவர்களிடம், நீங்கள் சாப்பிடமாட்டீர்களா? என்று வினவினார். முற்றிலும் சாப்பிடத் தயங்குபவர்களாக அவர்களைக் கண்டார். ஏனென்றால், வானவர்களுக்கு உண்கின்ற ஆசையோ தேவையோ இல்லை. வந்தவர்கள் சாப்பிடாமல் இருந்ததைக் கண்ட இப்ராஹீம் (அலை) அதிருப்தியடைந்தார். அதன் பின்னர், அவர்களைப் பற்றிய பயத்தையும் அவர் (தம்) மனதில் உணர்ந்தார். (ஆனால்) அவர்களோ (அவரைப் பார்த்து) பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத் சமுதாயத்தாரிடம் அனுப்பப்பட்டுள்ளோம் என்று கூறினார்கள். (11: 70)

அந்நேரத்தில் அல்லாஹ் கோபம் கொண்டுள்ள அவர்களை நினைத்து சார்ரா அம்மையார் மகிழ்ந்தார். அரபியர்கள் மற்றும் மற்றவர்களின் பழக்கத்தைப் போன்றே அவர் திண்ணையில் உறங்கிக்கொண்டிருந்தார். அந்த நற்செய்தியைக் கேட்டவுடன் அவர் சிரித்தார். அப்போது அல்லாஹ் கூறுகின்றான்: அவருக்கு நாம் இஸ்ஹாக்கைக் குறித்தும் இஸ்ஹாக்குக்குப்பின் யஅகூபையும் நற்செய்தி கூறினோம். (11: 71) அதாவது வந்திருந்த வானவர்கள் அவருக்கு அந்த நற்செய்தியைக் கூறினார்கள்.

இதைக் கேட்ட அவருடைய துணைவி சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக்கொண்டார். (51: 29) அதாவது ஆச்சரியமான செய்தியைக் கேட்டு, பெண்கள் செய்வதைப் போன்று செய்தார். அந்தோ! துயரமே! நானும் முதியவளாகி, இதோ என் கணவரும் மூப்படைந்துவிட்ட நிலையில் எனக்குக் குழந்தை பிறக்குமா? என்று கேட்டார்.(11: 72) அதாவது முதியவளாகவும் குழந்தை பெறமுடியாத மலடியாகவும் இருக்கின்ற என்னைப் போன்றவர் எப்படிக் குழந்தை பெற முடியும் என வினவினார். இவர் என்னுடைய கணவர்; இவர் முதியவர். இந்நிலையில் குழந்தை பிறக்குமா என்று அவர் ஆச்சரியப்பட்டார். இதனால்தான் அவர், ‘நிச்சயமாக இது வியப்பான விஷயம்தான்!’ என்று கூறினார். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் முடிவு குறித்தா நீர் வியப்படைகிறீர்? (நபியின்) குடும்பத்தாரே! இறையருளும் அவன் வளங்களும் உங்களுக்குக் கிடைக்கட்டும்! நிச்சயமாக, அவன் புகழுக்குரியோனும் மகத்துவமிக்கோனும் ஆவான் என்று கூறினார்கள். (11: 72-73)

இப்ராஹீம் (அலை) அவர்களின் ஆச்சரியம்

அதேபோலவே, இப்ராஹீம் நபியும் இந்த நற்செய்தியைக் கேட்டு, அதை உறுதிப்படுத்திக்கொண்டு, அதன் மூலம் ஆச்சரியப்பட்டார்; அவர் மகிழ்ந்தார். என்னை முதுமை வந்தடைந்துவிட்ட நிலையில் எனக்கு நற்செய்தி கூறுகின்றீர்களா? எந்த அடிப்படையில் நற்செய்தி கூறுகிறீர்கள்? என்று (இப்ராஹீம்) வினவினார்.

உண்மையாகவே, உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம். எனவே, அவநம்பிக்கை கொள்வோருள் ஒருவராக நீர் ஆகிவிடாதீர்! என்று அவர்கள் கூறினர். (15: 54-55) இந்த நற்செய்தி மூலம் அவர்கள் அச்செய்தியை உறுதிப்படுத்தினார்கள். அவ்விருவருக்கும் அவர்கள் அறிவுமிக்க ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என்ற நற்செய்தியைக் கூறினர். அவர்தாம் இஸ்மாயீலின் சகோதரர் இஸ்ஹாக் ஆவார். அவர் அறிவுமிக்க குழந்தை ஆவார்; அவர் உயர்வுக்கும் பொறுமைக்கும் உகந்தவர். அவர் தம் வாக்குறுதியை உண்மைப்படுத்துவதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பதிலும் இவ்வாறுதான் அல்லாஹ் அவரை வர்ணிக்கின்றான். அல்லாஹ் மற்றொரு வசனத்தில் கூறுகின்றான்: அவருக்கு நாம் இஸ்ஹாக்கைப் பற்றியும் இஸ்ஹாக்குக்குப்பின் யஅகூபைப் பற்றியும் நற்செய்தி கூறினோம். (11: 71)


அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.





இளைஞர்களே எங்கு செல்கிறீர்?





திங்கள், 7 பிப்ரவரி, 2011

மாநபியும் மருத்துவமும்- மருத்துவ நூல்


இப்போது வெளிவந்து விட்டது `மாநபியும் மருத்துவமும்' அழகிய மருத்துவ நூல்.

அடையாள அட்டை இல்லாதோர் கவனிக்க!

கண்ணியத்திற்குரிய உலமாக்களே!
தமிழக அரசின் இலவச மிதிவண்டித் திட்டத்தின்கீழ் உலமாக்கள் மற்றும் மஸ்ஜித் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு மிக விரைவில் மிதிவண்டி வழங்கப்பட உள்ளதால் அடையாள அட்டை இல்லாதோர் அதைப் பெற முயற்சி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
சமுதாயச் சேவையில் உங்கள்
நூ. அப்துல் ஹாதி பாகவி

சனி, 29 ஜனவரி, 2011

´புலால் உணவு மனிதனுக்கு அனுமதிக்கப்பட்டதா? விலக்கப்பட்டதா?

டாக்டர், திரு.ஜாகிர் நாயக்-டாக்டர்,திரு. ரஷ்மிபாய் ஸவேரி இருவருக்குமிடையே நடைபெற்ற ´´புலால் உணவு மனிதனுக்கு அனுமதிக்கப்பட்டதா? விலக்கப்பட்டதா?´´ எனும் தலைப்பிலான விவாதத்தை சகோதரர் நூ. முகம்மது கனி நூல் வடிவில் தொகுத்துள்ளார். அந்நூலுக்கு முன்னுரை எழுதித் தருமாறு என்னிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நான் எழுதிய முன்னுரையை இங்கே பதிவதில் மகிழ்ச்சியடைகிறேன்.இந்நூலைச் சென்னையிலுள்ள சாஜிதா புக் சென்டர் வெளியிட்டுள்ளது.
------------------------------------------------------------

முன்னுரை

உலகிலுள்ள எல்லா உயிரினங்களையும் படைத்து அவற்றிற்குரிய உணவு முறைகளை வகைப்படுத்தி, முறைப்படுத்திய பேரிறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் யாவும் உரித்தாகுக! அவனால் ஆகுமாக்கப்பட்டவற்றையும் தடுக்கப்பட்டவற்றையும் எடுத்துரைத்த இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள்மீது அல்லாஹ்வின் அளவிலா அன்பும் கருணையும் என்றென்றும் உண்டாவதாக!
உயர்ந்தோன் அல்லாஹ் பல்வேறு உயிரினங்களைப் படைத்து அவற்றிற்குரிய உணவு வகைகளை நெறிப்படுத்தியுள்ளான். அவற்றுள் சில தாவர உண்ணிகளாகவும் வேறு சில மாமிச உண்ணிகளாகவும் இருக்கின்றன. தாவர உண்ணிகள் மாமிசத்தையோ மாமிச உண்ணிகள் தாவரங்களையோ உண்பதில்லை. ஆனால் மனிதன் தாவர உண்ணியாகவும் மாமிச உண்ணியாகவும் இருக்கின்றான். இது இறைவனின் நியதி. ஏனெனில் இருவகை உணவுகளையும் உண்ணக்கூடிய வகையில் மனிதன் படைக்கப்பட்டுள்ளான்.

படைத்த இறைவன் மனிதனுக்குச் சில வகை உணவுகளைத் தடைசெய்துள்ளான். காரணம் அல்லாஹ் எவற்றை உண்ணக் கட்டளையிட்டுள்ளானோ அவை மனித உடலுக்கு ஆரோக்கியமானவையாகவும் எவற்றைத் தடைசெய்துள்ளானோ அவை மனித உடலுக்குக் கேடு விளைவிப்பவையாகவும் உள்ளன. ஏனெனில் படைத்த இறைவனுக்குத்தான், மனிதன் எதைச் சாப்பிட வேண்டும் எதைச் சாப்பிடக் கூடாது என்று தெரியும்.

இஸ்ரவேலர்கள் தீஹ் தீவில் இருந்தபோது அல்லாஹ் அவர்களுக்கு வானத்திலிருந்து உணவு வழங்கினான். அதைப் பின்வரும் இறைவசனம் தெரிவிக்கிறது: மர்யமின் மைந்தர் ஈசா, “அல்லாஹ்வே! எங்கள் இறைவா! எங்களுக்கு வானத்திலிருந்து ஓர் உணவை இறக்குவாயாக. அது (அருளப்பெறும் நாள்) எங்களுள் ஆரம்பமானவருக்கும் இறுதியானவருக்கும் ஒரு பெருநாளாகவும் உன்னிடமிருந்து வந்த ஒரு சான்றாகவும் அமையும். எங்களுக்கு வாழ்வாதாரமும் வழங்குவாயாக! வாழ்வாதாரம் வழங்குவோருள் நீயே மிகச் சிறந்தவன்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ் “அதை நான் இறக்கிவைக்கிறேன்” என்று கூறினான். (05: 114-115)

அல்லாஹ் அவர்களுக்கு மன்னு, சல்வா எனும் உயர் வகை யான உணவை நாள்தோறும் கொடுத்துவந்தான். ஆனால் ஒரே வகை உணவை உண்டு வந்த அவர்கள் அதில் சலிப்புற்று, அதற்குப் பகரமாகக் காய்கறி உணவைக் கேட்டனர். அது பற்றிப் பின்வரும் இறைவசனம் தெரிவிக்கிறது:
(அவர்கள் மூசாவை நோக்கி) “மூசாவே! ஒரே (விதமான) உணவை உட்கொண்டிருக்க எங்களால் முடியாது. பூமியில் முளைக்கக்கூடிய கீரை, வெள்ளரிக்காய், கோதுமை, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை வெளிப்படுத்தித் தரும்படி உம்முடைய இறைவனிடம் எங்களுக்காக நீர் கேட்பீர்” என அவரிடம் கேட்டார்கள். (02: 61)

ஆக ஒரே வகையான உணவை மனிதன் தொடர்ந்து உண்டால் அவன் சலிப்படைந்துவிடுகிறான். எனவேதான் அவனுக்குப் பல்வகையான உணவுகளையும் உண்ண அல்லாஹ் அனுமதியளித்துள்ளான்.
திரு. ஜாகிர் நாயக்-திரு. ஸவேரி இருவருக்குமிடையே நடைபெற்ற விவாதத்தை முழுமையாகக் கேட்டேன். புலால் உணவு உண்ணக் கூடாது என்பதற்கு திரு. ஸவேரி எடுத்து வைத்த எந்த வாதமும் ஏற்புடையதாக இல்லை. அவை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. புலால் உணவு உண்ணக் கூடாது என்பதற்கு அவர் எடுத்து வைத்த வாதங்கள் ஜைன மதத்தில் கூறப்பட்டவையே தவிர அறிவியல்பூர்வமானவையாகவோ பகுத்தறிவுக்கு உட்பட்டவையாகவோ இல்லை. அதேநேரத்தில் புலால் உணவு உண்ணலாம் என்பதற்கு திரு. ஜாகிர் நாயக் எடுத்துரைத்த மறுமொழிகள் அறிவுப்பூர்வமானவையாகவும் அறிவியல்பூர்வமானவையாகவும் இருந்தன.

திரு. ஸவேரி எடுத்து வைத்த வாதங்கள் சில ஏற்கத்தக்கவை யாக இருந்தாலும், அதற்காக மாமிச உணவு தடைசெய்யப்பட்டது என்றோ சாப்பிடவே கூடாது என்றோ சொல்ல முடியாது. ஏனெனில் அல்லாஹ் அனுமதித்துள்ளதைத் தடைசெய்ய நாம் யார்?
மாமிச உணவை உட்கொள்வதால் தேவையற்ற கொழுப்புச் சத்து மனித உடலில் சேர்ந்து உடல் ஆரோக்கியத்துக்கு ஊறுவிளைவிக்கிறது என்று திரு. ஸவேரி எடுத்துவைத்த வாதத்திற்குப் பதிலளிக்குமுகமாக, திரு. ஜாகிர் நாயக், தாவரங்களி லும்தான் கொழுப்புச் சத்து உள்ளது. இதனால்தான் கொழுப்பில்லா தாவர எண்ணெய் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது என்று கூறியது சிந்தனைக்கு விருந்தாக அமைந்துள்ளது.

எவற்றைச் சாப்பிடக் கூடாது என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: (இறைநம்பிக்கையாளர்களே! தானாகச்) செத்தது, இரத்தம், பன்றி இறைச்சி, அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறி அறுக்கப்பட்டது ஆகியவை உங்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளன. அடிபட்டுச் செத்தது, (உயரத்திலிருந்து கீழே) விழுந்து செத்தது, கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தது, ஒன்றோடு ஒன்று முட்டிமோதிச் செத்தது, வனவிலங்குகள் கடித்(துச் செத்)தது ஆகியவையும் (தடைசெய்யப்பட்டுள்ளன). எனினும், (அவற்றுள் உயிருடன்) எதை நீங்கள் அறுத்தீர்களோ அதைத் தவிர. மேலும் நட்டுவைக்கப்பட்ட (சிலை போன்ற)வற்றுக்கு அருகில் அறுக்கப்பட்டதும் அம்புகள் மூலம் (குறி கேட்டு நன்மை தீமையை) நீங்கள் முடிவு செய்வதும் (தடைசெய்யப்பட்டுள்ளன). அது பாவமாகும். (05: 03)

எவற்றைச் சாப்பிடலாம் என்றும் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) “தமக்கு (உண்ண) அனுமதிக்கப்பட்டவை எவை?” என அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறுவீராக: தூய்மையான (உண்) பொருட்கள், வேட்டையாடும் மிருகங்களுள் எவற்றுக்கு நீங்கள் பயிற்சி அளித்து, அல்லாஹ் உங்களுக்குக் கற்றுக்கொடுத்ததைக் கற்றுத் தந்தீர்களோ அவை (வேட்டையாடிய பிராணிகள்) ஆகியவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. உங்களுக்காக அவை பிடித்(துக்கொண்டு வந்)தவற்றை நீங்கள் உண்ணலாம். (வேட்டைக்கு அனுப்பும்போது) அவற்றின்மீது அல்லாஹ்வின் பெயர் கூறுங்கள். அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன். (05: 04)

ஆக, சாப்பிடக் கூடாதவற்றையும் சாப்பிட வேண்டியவற்றை யும் திருக்குர்ஆனில் அல்லாஹ் தெளிவாகக் கூறிவிட்டான். பிறகென்ன குழப்பம்? இனி யாரும் வந்து இதைச் சாப்பிடக் கூடாது என்று தடைபோட முடியாது என்பதை நாம் திருக்குர்ஆன் மூலம் விளங்கிக்கொள்கிறோம்.
சகோதரர் நூ. முகம்மது கனி, திரு. டாக்டர் ஜாகிர் நாயக் எடுத்து வைத்த வாதங்களை மட்டும் தொகுத்து, தமிழாக்கம் செய்து ஒரு சிறுநூலாக வெளியிட்டுள்ளார். அவருடைய இச்சிறிய நூலுக்கு நான் முன்னுரை எழுதுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அவருடைய இச்சீரிய முயற்சி பாராட்டுக்குரியது. உயர்ந்தோன் அல்லாஹ் அவருடைய இந்நூலை மக்களுக்குப் பயனுள்ளதாக ஆக்குவானாக!

அன்புடன்
நூ. அப்துல் ஹாதி பாகவி, M.A., M.Phil.
ஆலங்குடி.

திங்கள், 24 ஜனவரி, 2011

வெள்ளி, 21 ஜனவரி, 2011

நூல் அறிமுக விழா