வியாழன், 3 மார்ச், 2011

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 18)

மற்றொரு சான்று

நிச்சயமாக அறுக்கப்பட்டவர் இஸ்மாயீல் நபிதான் என்று முஹம்மத் பின் கஅப் அல்குரழீ உள்ளிட்டவர்கள் கூறுகின்றனர். மேலும், நிச்சயமாக இஸ்ஹாக்கை அறுக்க ஏவ முடியாது. ஏனெனில், அல்லாஹ் அவருடைய பிறப்பைப் பற்றியும் அவருக்குப்பின் பிறக்கவுள்ள மகன் யஅகூபைப் பற்றியும் நற்செய்தி கூறிவிட்டான்.

வந்திருந்த வானவர்களுக்கு இப்ராஹீம் நபியவர்கள் இளம் கன்றைப் பொரித்துக் கொண்டுவந்து வைத்தார். அத்துடன் மக்கா நகர் ரொட்டி, நெய், பால் போன்றவையும் இருந்தன. அவர்கள் அவற்றை உண்டார்கள் என்று வேதக்காரர்கள் கூறுகின்றனர். இது முற்றிலும் தவறானதாகும். வானவர்கள் சாப்பிடுவதாகவும் ஆனால், அந்த உணவு காற்றில் கரைந்துவிடுவதாகவும் அவர்கள் கருதிக்கொண்டிருந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ் இப்ராஹீம் நபியிடம் சொன்னான்: சாரா உம்முடைய மனைவி ஆவார். அவருடைய பெயர் சாரா இல்லை. மாறாக, அவருடைய பெயர் `சார்ரா ஆகும். அவர் மீது நான் அருள்புரிகிறேன். அவர் மூலம் ஒரு மகனை நான் உமக்குக் கொடுக்கிறேன். அந்த மகனுக்கும் நான் அருள்புரிகிறேன். அவர் மூலம் பற்பல வமிசத்தினர் தோன்றுவர். அந்த வமிசங்களிலிருந்து அரசர்கள் தோன்றுவார்கள். இத்தகவலை வேதக்காரர்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்ட இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்தும்விதமாக சிரம் பணிந்தார். அவர் தம் மனதுக்குள், நூறு வயதுக்குப் பிறகா எனக்குக் குழந்தை பிறக்கப்போகிறது? மேலும், தொண்ணூறு வயதிலா சார்ரா ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கப்போகின்றார்? என்று கூறிக்கொண்டார்.

இஸ்மாயீல் உன் முன்னிலையில் வாழ வேண்டுமென நான் விரும்புகிறேன் என்று இப்ராஹீம் (அலை) அல்லாஹ்விடம் கூறினார். அப்போது அல்லாஹ், நிச்சயமாக உம் மனைவி சார்ரா ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கப்போகிறார். எதிர்வரும் ஆண்டின் இந்நேரத்தில் அவர் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து அதனை இஸ்ஹாக் என்று அழைத்துக்கொண்டிருப்பார். என்னுடைய வாக்குறுதியை காலம் முழுவதும் அவருக்கும் அவரது சந்ததியினருக்கும்நான் நிறைவேற்றுவேன். நான் இஸ்மாயீல் விசயத்தில் உமது பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டேன்; அவர் மீது நான் அருள்புரிந்தேன்; அவரைப் பெரியவராக ஆக்கினேன்; அவரை நான் நன்றாக வளர்த்தேன்; அவருக்குப் பன்னிரண்டு குழந்தைகள் பிறப்பார்கள். மிகப்பெரும் சமுதாயத்திற்கு அவரை நான் தலைவராக ஆக்குவேன் என்று கூறினான்.*

அவருக்கு நாம் இஸ்ஹாக்கைப் பற்றியும் இஸ்ஹாக்குக்குப்பின் (பேரர்) யஅகூபைப் பற்றியும் நற்செய்தி கூறினோம். (11: 71) நிச்சயமாக சார்ரா அம்மையார், தமக்கு இஸ்ஹாக் எனும் பெயருடைய மகன் பிறப்பதன் மூலம் மகிழ்வார்; பேருவகை கொள்வார் என்பதற்கு இந்த வசனமே தக்க ஆதாரமாகும். இஸ்ஹாக்குக்குப் பின்னர், அவருடைய மகன் யஅகூப் (இப்ராஹீமின் பேரர்) பிறப்பார். அதாவது இப்ராஹீம்-சார்ரா இருவருடைய வாழ்நாளிலேயே யஅகூபும் பிறப்பார். சார்ரா அம்மையாரும் இப்ராஹீம் (அலை) அவர்களும் இஸ்ஹாக் பிறந்ததின் மூலம் அடைந்த மகிழ்ச்சியைப்போல் தம்முடைய பேரர் மூலமும் மகிழ்ச்சியடைவர்.
இவையெல்லாம் நடக்காது என்றிருந்தால், இந்த வசனத்தில் அல்லாஹ் யஅகூபையும், இஸ்ஹாக்குடைய மற்ற சந்ததிகளையும் விட்டுவிட்டு, யஅகூப் எனும் சந்ததியை மட்டும் குறிப்பிட்டுக் கூறியிருப்பதில் எந்தப் பயனும் இல்லை. மேலும், யஅகூப் என்று குறிப்பிட்டுக் கூறப்பட்டிருப்பதால், அவ்விருவரும் அக்குழந்தை மூலம் மகிழ்ச்சியடைவார்கள் என்றே இவ்வசனம் தெரிவிக்கிறது.

அதாவது இதற்கு முன்பு யஅகூப் உடைய தந்தை இஸ்ஹாக் பிறந்தபோது, இப்ராஹீம்-சார்ரா இருவரும் மகிழ்ந்தார்கள். அதைப்போலவே, யஅகூப் மூலம் சார்ரா-இஸ்ஹாக் மகிழ்ச்சியடைவார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: `(இப்ராஹீமாகிய) அவருக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் பரிசளித்தோம். (அவர்கள்) அனைவருக்கும் நல்வழி காட்டினோம். (7: 84) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: (இவ்வாறு) அவர் அவர்களையும், அவர்கள் வழிபட்டுக்கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற் றையும் விலக்கிக் கொண்டபோது, இஸ்ஹாக்கையும் யஅகூபையும் அவருக்கு நாம் பரிசளித்தோம். (19: 49)

மஸ்ஜிதுல் அக்ஸாவைக் கட்டுதல்

இறைத்தூதரே! எந்த மஸ்ஜித் முதன் முதலில் கட்டப்பட்டது? என்று நான் கேட்டேன். அல்மஸ்ஜிதுல் ஹராம்-மக்காவிலுள்ள இறையாலயம் ஆகும் என்று பதிலளித்தார்கள். பிறகு எது? என்று நான் கேட்டேன். அல்மஸ்ஜிதுல் அக்ஸா என்று பதிலளித்தார்கள். அவ்விரண்டுக்கும் இடையே உள்ள காலம் எவ்வளவு? என்று நான் வினவினேன். நாற்பது ஆண்டுகள் என்று பதிலளித்தார்கள். பிறகு எது? என்று நான் கேட்டேன். நீர் எங்கு தொழுகையை அடைந்துகொள்கின்றீரோ அங்கு தொழுது கொள்வீர்! ஏனெனில், அவை அனைத்தும் (சம மதிப்புள்ள) மஸ்ஜிதுகள் ஆகும் என்று பதிலளித்தார்கள் என அபூதர் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)
நிச்சயமாக யஅகூப் நபிதான் அல்மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு அடித்தளமிட்டார். அதுதான் ஈலியா மஸ்ஜித் என்றும் பைத்துல் மக்திஸ் மஸ்ஜித் என்றும் அழைக்கப்படுகிறது என்று வேதக்காரர்கள் கூறுகின்றனர்.

இது ஏற்கத்தக்கதுதான். இதற்கு, மேலே நாம் எடுத்துக்கூறிய நபிமொழியே ஆதாரமாகும். இதன்படி, இப்ராஹீம்-இஸ்மாயீல் (அலைஹிமஸ்ஸலாம்) இருவரும் இணைந்து மக்காவில் அமைந்துள்ள இறையாலயத்தைக் கட்டி முடித்த நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர்தான், யஅகூப் (அலை) மஸ்ஜிதுல் அக்ஸாவைக் கட்டினார். இப்ராஹீம்-இஸ்மாயீல் (அலைஹிமஸ்ஸலாம்) இருவரும் இணைந்து கட்டிய இறையாலயம், நபி இஸ்ஹாக் (அலை) அவர்கள் பிறந்த பின்பே ஆகும். ஏனெனில், இறையாலயத்தைக் கட்டி முடித்த பின்னர், இப்ராஹீம் (அலை) அவர்கள் தமக்குப் பிள்ளைகள் வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவில்லை. அவர்கள் செய்த பிரார்த்தனையை அல்லாஹ்வே கூறுகின்றான்.

என் இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக ஆக்குவாயாக! என்னையும் என் பிள்ளைகளையும் சிலைகளை வழிபடுவதிலிருந்து விலக்கிவைப்பாயாக என்று இப்ராஹீம் வேண்டியதை எண்ணிப்பாருங்கள். என் இறைவா! நிச்சயமாக அவை மனிதர்களுள் பெரும்பாலோரை வழிதவறச் செய்துவிட்டன. எனவே, என்னைப் பின்பற்றியவர் என்னைச் சேர்ந்தவர் ஆவார். எனக்கு யாரேனும் மாறுசெய்தால், நிச்சயமாக நீ மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவாய் (என்றும் இப்ராஹீம் கூறினார்).

எங்கள் இறைவா! நான் என்னுடைய வழித்தோன்றல்களுள் சிலரைப் பயிரற்ற பள்ளத்தாக்கு ஒன்றில், உனது புனித ஆலயத்திற்கு அருகே குடியமர்த்தியுள்ளேன். எங்கள் இறைவா! இவர்கள் தொழுகையைக் கடைப்பிடிப்பதற்காகவே (இவ்வாறு செய்தேன்). எனவே, மக்களுள் சிலருடைய இதயங்களை இவர்களின்பால் கவரச்செய்வாயாக! இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக! (இதன் மூலம் ) இவர்கள் நன்றி செலுத்துவோர் ஆகலாம் (என்றும் இப்ராஹீம் பிரார்த்தனை செய்தார்).
எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பதையும் நாங்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகின்றாய்; பூமியிலும் வானத்திலும் அல்லாஹ்வுக்கு எதுவும் மறைந்ததன்று (என்றும் இப்ராஹீம் கூறினார்).

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன; அவனே எனக்கு முதுமையிலும் இஸ்மாயீலையும் இஸ்ஹாக்கையும் (குழந்தைகளாக) வழங்கினான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைச் செவியேற்பவன் ஆவான் (என்றும் இப்ராஹீம் கூறினார்).
என் இறைவா! என்னையும் என் வழித்தோன்றல்களையும் தொழுகையைக் கடைப்பிடிப்பவர்களாக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! என் பிரார்த்தனையை ஏற்பாயாக! (என்றும் இப்ராஹீம் கூறினார்). எங்கள் இறைவா! விசாரணை நடைபெறும் நாளில் எனக்கும் என் பெற்றோருக்கும் இறைநம்பிக்கை கொண்டோருக்கும் மன்னிப்பு வழங்குவாயாக! (என்றும் இப்ராஹீம் கூறினார்). (14: 35-41)

சுலைமான் பின் தாவூத் (அலை) அவர்கள் பைத்துல் மக்திஸைக் கட்டி முடித்தபோது, அவர் தம் இறைவனிடம் மூன்று விசயங்களைக் கேட்டார். அவர் செய்த பிரார்த்தனையை அல்லாஹ் கூறுகின்றான்: என் இறைவா! என்னை மன்னிப்பாயாக! மேலும்,பின்னர் எவருமே அடையமுடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக (38: 35) அதாவது 1. மன்னித்தல், 2. ஆட்சியை வழங்குதல், 3. அதுபோன்ற ஆட்சியைப் பிறருக்கு வழங்காதிருத்தல் ஆகிய மூன்றாகும். இது பற்றிய விளக்கத்தை சுலைமான் (அலை) அவர்களின் வரலாற்றில் நாம் தெளிவாகக் கூறுவோம். அவர் கேட்டதன் நோக்கம் என்ன என்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

மேற்கண்ட நபிமொழியிலிருந்து, பைத்துல் முகத்தசை சுலைமான் (அலை) கட்டினார் என்பதன் நோக்கம், அவர் அதனைப் புதுப்பித்துக் கட்டினார் என்பதாகும். கஅபாவிற்கும் பைத்துல் முகத்தசுக்கும் இடையே உள்ள கால அளவு நாற்பது ஆண்டுகளாகும் எனும் நபிமொழியிலிருந்து இதனை நாம் விளங்க முடியும். சுலைமான் நபிக்கும் இப்ராஹீம் நபிக்கும் இடையே நாற்பது ஆண்டுகளே இடைவெளி இருந்தன என்று இப்னு ஹிப்பான் (ரஹ்) தவிர யாரும் சொல்லவில்லை. அவருடைய இக்கூற்று நபிமொழிக்கு எதிராக உள்ளது. இக்கருத்தை வேறு யாரும் கூறவில்லை. உயர்ந்தோன் அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

----------------அடிக்குறிப்பு------------------------

* இது பற்றி விரிவாக நாம் ஏற்கெனவே கூறிவிட்டோம். அல்லாஹ்வே நன்கறிபவன்.

அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.

கருத்துகள் இல்லை: