செவ்வாய், 20 டிசம்பர், 2016

அநியாயக்காரர்களுக்கெதிராகப் பிரார்த்தனை செய்வோம்!


- முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

உலகெங்கும் முஸ்லிம்களுக்கெதிரான போக்கு அதிகரித்து வருவதைக் கண்டு மனம் வெதும்பாமல் இருக்க முடியவில்லை. முஸ்லிம்களுக்கெதிரான எதிரிகளின் சூழ்ச்சியும் வஞ்சமும்  நாளுக்கு நாள்  மிகுதியாகிக் கொண்டே வருவதை ஊடகங்கள் வாயிலாக உணர்ந்து வருகிறோம். ஆனால் முஸ்லிம்களோ, எல்லாவற்றையும் அல்லாஹ் பார்த்துக்கொள்வான் என்று மேம்போக்கான மனநிலையிலேயே இருந்து வருகின்றனர்.

குறிப்பாக இந்தியாவில் முஸ்லிம்களுக்கெதிராக மத்திய, மாநில அரசுகள் செய்யக்கூடிய அநியாயமும் சூழ்ச்சியும் அளவில் அடங்காது. மாட்டுக்கறி உண்ணக்கூடாது, மாட்டை அறுக்கக்கூடாது எனத் தொடங்கி பொது சிவில் சட்டம் கொண்டுவருதல், கூம்பு வடிவிலான ஒலிபெருக்கியை அகற்றுதல் உள்ளிட்டவை வரை ஒவ்வொன்றாக  வந்துகொண்டுதான் இருக்கின்றன.

முஸ்லிம்கள் தொடர்பான என்னென்ன வரலாற்று அடையாளங்கள் எஞ்சியிருக்கின்றனவோ அவற்றை நீக்குவது, திப்பு சுல்தான், அவுரங்கசீப் முதலான முஸ்லிம் மன்னர்களின் வரலாற்றை மாற்றுவது, அவர்கள் செய்த தொண்டுகளையெல்லாம் சதித்திட்டங்களாகத் திரித்துச் செய்தி வெளியிடுவது, பாடப்புத்தகங்களில் வரலாற்றை மாற்றி எழுதுவது உள்ளிட்ட எத்தனையோ அநியாயங்களை மத்திய அரசு செய்து வருகிறது.

அரசுக்கு அப்பாற்பட்டு, திரைப்பட இயக்குநர்கள் முஸ்லிம்களுக்கெதிரான திரைப்படங்களை உருவாக்கி, அவற்றின் மூலம் முஸ்லிம்களைத் தவறான பிம்பத்தில் மக்களுக்குக் காட்டுவது, அனைத்துக் குண்டுவெடிப்புகளுக்கும் முஸ்லிம்கள்தாம் காரணம் என்ற தவறான தோற்றத்தையும்  எதிரான கருத்துருவையும் மக்கள் மனங்களில் பதியவைப்பது உள்ளிட்ட தீச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தகைய  திரைப்படங்களின் மாயப்பிம்பத்தால் ஈர்க்கப்பட்ட முஸ்லிமல்லாத மக்கள் முஸ்லிம்களுக்கு வீடு வாடகைக்கு விட மறுத்தல், அவர்களோடு கொடுக்கல் வாங்கலில் கடுகடுப்பாக நடந்துகொள்ளுதல், இணக்கமாகப் பழகாதிருத்தல், அவர்களை ஏளனமாகக் கருதுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதை நாம் காணமுடிகிறது; அனுபவிக்க நேரிடுகிறது.

கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பின்தங்கியுள்ள நாம் பல்வேறு இன்னல்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக நேரிடுகிறது. அது மட்டுமின்றி எவ்வளவோ படித்தும் உரிய வேலை வாய்ப்பை "முஸ்லிம்' என்ற காரணத்தால் இழக்க நேரிடுகிறது. அத்தோடு காவல்துறையின் அட்டூழியங்களும் அதிகரித்துள்ளன. அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை ஆங்காங்கே கைது செய்து  விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று சிறைச்சாலைக்குள் தள்ளுவது, அவர்களின் வாழ்க்கையைச் சிறைக்குள்ளேயே பல்லாண்டு காலம் முடக்கிப்போடுவது, அதன்மூலம் முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையைச் சீரழிப்பது உள்ளிட்ட கொடுமைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

திரைப்படங்களின் தவறான பிம்பத்தால் முஸ்லிம்கள்தாம் தீவிரவாதிகள் என்ற பொய்யான கருத்துருவை உண்டாக்கியபின், ஆங்காங்கே உள்ள அரபு மத்ரஸாக்களுக்குள் புகுந்து சோதனையிடுவது, அங்குள்ள மாணவர்களை விசாரிப்பது, அவர்களுக்கான செலவீனங்கள் குறித்துத் துருவித் துருவி ஆராய்வது உள்ளிட்ட வன்கொடுமைகளும் ஒருபுறம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

முஸ்லிம் பெண்கள் அணிகின்ற பர்தாவைப் பயன்படுத்தித் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதைப் போன்ற காட்சிகளைத் திரைப்படங்களின்மூலம் மக்கள் மனங்களில் பதிவுசெய்துஅதன்மூலம் கண்ணியமான அந்த ஆடைக்கு இழுக்கை ஏற்படுத்தி, அதை அணிந்து வருகின்ற முஸ்லிம் பெண்களைச் சோதனைக்கு உள்ளாக்குவது, பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் பெண்களுக்குப் பர்தாவைத் தடை செய்வது உள்ளிட்ட அட்டூழியங்களும் மற்றொரு புறம் நடந்தேறுகின்றன.

புதிதாக வழிபாட்டுத்தலங்கள் கட்டுவதற்குத் தடைவிதித்தல், அல்லது அதற்கு ஆயிரம் கட்டுப்பாடுகளை விதித்தல், ஏற்கெனவே இருக்கின்ற பள்ளிவாசல்களில் வேண்டுமென்றே பிரச்சனைகளை ஏற்படுத்துதல், முஸ்லிம்களின் வழிபாடுகளுக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட பல்வேறு தொல்லைகளையும் துன்பங்களையும் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். முஸ்லிம்களின் அடக்கத்தலங்களை ஆக்கிரமித்துக்கொண்டு அங்கு சிலைகளை வைத்து வழிபடத் தொடங்குதல் உள்ளிட்டவையும் அரங்கேறுகின்றன. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது, வேண்டுமென்றே முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்கின்ற பாதை வழியாகச் சென்று, அப்பாதையிலுள்ள வழிபாட்டுத்தளங்களுக்கும் வணிகத் தளங்களுக்கும்  சேதத்தை விளைவிப்பது உள்ளிட்ட கொடூரங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

மற்ற நாடுகளோடு இணக்கமான உறவை மேற்கொள்கின்ற அரசு, முஸ்லிம் அண்டை நாடான பாகிஸ்தானோடு தீராப் பகையை வளர்த்துக்கொள்கிறது. அதேநேரத்தில் அண்டை நாடான சீனா அருணாச்சலப் பிரதேசத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துவிட்டதையும் கண்டுகொள்வதில்லை. இலங்கை இராணுவம் தமிழக மீனவர்களுக்கெதிராக எத்தனையோ முறை வன்முறையில் ஈடுபட்டுள்ளது. மீனவர்களைக் கைது செய்துள்ளது. அவர்களின் படகுகளைச் சேதப்படுத்தியுள்ளது.  அவர்களைக் கொன்றுள்ளது. அதனையெல்லாம் கண்டிக்காமலும் எதிர்த்துக் கேட்காமலும் விட்டுவிடுகிறது இந்திய அரசு. இதன்மூலம் இந்த அரசு முஸ்லிம்களுக்கெதிரான போக்கை மட்டுமே பிரதானமாக விரும்புகிறது என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

இப்படி அங்கிங்கெனாதபடி திரும்பும் திக்கெங்கும் முஸ்லிம்களுக்கெதிரான விரோதப்போக்கை மத்திய, மாநில அரசுகளும், முஸ்லிம்களைத் தவறாகப் புரிந்துகொண்டோரும் மேற்கொள்வது நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததில்லை. சமயச் சார்பற்ற ஜனநாயக நாட்டில் குறிப்பிட்ட ஓர் இனத்தாரை மட்டும் புறக்கணிப்பது, அவர்களை நசுக்குவது, திட்டமிட்டுத் தாக்குவது, வீண் பழி சுமத்திச் சிறையில் அடைப்பது உள்ளிட்ட அவர்களுக்கெதிரான போக்கைக் கடைப்பிடிப்பது நாட்டின் வளர்ச்சிக்கு மிகப் பெரும் ஆபத்தை உண்டாக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

இத்தனை தொல்லைகளையும் சகித்துக்கொண்டு வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்கள், இந்துக்களுக்கு ஒரு பிரச்சனையென்றால் அவர்கள்தாம் முதலில் நிற்கின்றார்கள். கடந்த டிசம்பர் (2015) மாதம் கடுமையான மழை பொழிந்து, சென்னை உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியபோது அதில் பாதிக்கப்பட்ட இந்து மக்களுக்கு ஓடோடிச் சென்று உதவி செய்தவர்கள், உணவு வழங்கியவர்கள் முஸ்லிம்கள் ஆவர். என்னதான் நாம் ஓடோடிச் சென்று உதவி செய்தாலும் அதுவெல்லாம் ஊடகக் கண்களுக்குத் தெரியாது. அவர்களைப் பற்றிய தவறான செய்தி இருந்தால் மட்டும் முதல் பக்கத்தில் வெளியிடுவார்கள். நல்ல செய்திகளை இருட்டடிப்புச் செய்வார்கள். இதுவே அவர்களுக்கு எழுதப்படாத விதியாக உள்ளது.

இத்தகைய நெருக்கடியான சூழலிலும் ஓர் அச்சமான நிலையிலும் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்கள் பின்வரும் நபிமொழிகளைக் கூர்ந்து கவனிப்பதும் அதன்படிச் செயல்படுவதும் காலத்தின் கட்டாயமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பிரார்த்தனைகளுக்குப் பதிலளிக்கப்படுகின்றது. அவற்றில் சந்தேகமில்லை. அநியாயம் செய்யப்பட்டவரின் பிரார்த்தனை, ஒரு பயணியின் பிரார்த்தனை, ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யும் பிரார்த்தனை.  இதை அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: இப்னுமாஜா: 3852)

"எவர் தமக்கு அநியாயம் செய்தவருக்கு எதிராகப் பிரார்த்தனை செய்கிறாரோ அவர் (தம் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுவதன்மூலம்) வெற்றிபெற்றுவிட்டார்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 3475)

முஸ்லிம்கள் அனைவரும் அனுதினமும் ஐவேளைத் தொழுகையைப் பேணித் தொழுது இந்த அநியாயக்காரர்களுக்கெதிராகப் பிரார்த்தனை செய்தால், திண்ணமாக உயர்ந்தோன் அல்லாஹ் அவர்களைப் பார்த்துக்கொள்வான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயம் செய்யப்பட்டோரின் பிரார்த்தனையை அங்கீகரித்துக்கொள்வான். இந்த அநியாயக்காரர்களை அடியோடு அழிப்பான், அல்லது அவர்களின் உள்ளங்களை இஸ்லாத்திற்குச் சாதகமாகப் புரட்டிப்போடுவான்.

நபி (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருந்தபோது, இறைச்சிக்காக அறுக்கப்பட்ட ஒட்டகக் கருவைச் சுற்றியிருந்த சவ்வுகளை அள்ளிக்கொண்டு வந்து அவர்களின் முதுகில் போடச்செய்து, அதைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துக்கொண்டிருந்த குறைஷியருக்கு எதிராக, "இறைவா! குறைஷிகளை நீ கவனித்துக் கொள்!'' என்று மூன்று முறை பிரார்த்தனை செய்தார்கள்.... பிறகு நபி (ஸல்) அவர்கள் (அங்கிருந்தோரின்) பெயர்களைக் குறிப்பிட்டு, "இறைவா! அபூஜஹ்லை நீ கவனித்துக்கொள்வாயாக! உத்பா பின்  ரபீஆ, வலீத் பின் உத்பா, உமய்யா பின் கலஃப், உக்பா பின் அபீமுஐத் ஆகியோரைக் கவனித்துக்கொள்வாயாக!'' என்று (அறுவரின் பெயர் குறிப்பிட்டுப்) பிரார்த்தனை செய்தார்கள். (நூல்: புகாரீ: 240)

நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை ஏற்கப்பட்டதால், அவர்கள் அனைவரும் பத்ருப் போரில் கொல்லப்பட்டு மாண்டு ஒழிந்தார்கள் என்பது வரலாறு. சிறுபான்மை மக்களாக உள்ள நாம் செய்ய வேண்டியதும் இதைத்தானே தவிர, புரட்சி எனும் பெயரில் பொங்கி எழுவதும், கிளர்ச்சி என்ற பெயரில் கிளர்ந்தெழுவதும் நம்மை நாமே அழித்துக்கொள்வதற்குச் சமமாகும். தொடர்ந்து ஏகன் அல்லாஹ்விடம் கையேந்திக் கொண்டிருந்தால் திண்ணமாக இந்த நெருக்கடி நிலை தலைகீழாக மாறும் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால் மனமுருகிச் செய்யும் பிரார்த்தனைக்கு நிகராக வலுவான எந்த ஆயுதமும் இல்லை என்பதை உணர்ந்து செயல்பட முற்படுவோம். 

=========================





கருத்துகள் இல்லை: