செவ்வாய், 26 ஏப்ரல், 2011

முஸ்லிம் ஆட்சியாளர்கள் சகிப்புத்தன்மையற்றவர்களா?-நீதிபதி மார்க்கண்டேய கட்சு

முஸ்லிம் ஆட்சியாளர்கள் சகிப்புத்தன்மையற்றவர்கள், வைராக்கியமுடையவர்கள் என்று வேண்டுமென்றே வரலாற்று நூல்களை மாற்றி எழுதி, இந்து-முஸ்லிம் இடையே பகைமையை வளர்த்துக்கொண்டே வந்துள்ளனர்; ஆனால், அது பொய் என்பதற்கான பெரும் ஆதாரங்கள் வரலாற்றில் உள்ளன என்று உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்சு ஞாயிற்றுக்கிழமை (18-04-11) தெரிவித்துள்ளார்.

சமஸ்கிருத-உர்தூ கலாச்சாரத்தால் இந்தியர்கள் ஒன்றாக இருந்துவந்தனர்; இந்தியா எப்போதும் ஜனநாயக நாடாகவே இருக்கும் என்பதற்கு அதுவே உத்திரவாதம் தந்தது என்றும் குறிப்பிட்டார்.

1857ஆம் ஆண்டுக்கு முன்பே, முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிரான கட்டுக்கதைகளைப் பரப்புவது பிரிட்டிஷ்காரர்களின் திட்டமாக இருந்தது. அதுவே இந்தியாவில் பற்பல ஆண்டுகளாகத் தொடர்ந்துவந்துள்ளது. இந்த அடிப்படையில்தான், மஹ்மூத் கஜினி சோம்நாத் கோயிலை அழித்த செய்தி மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில், திப்பு சுல்தான் 156 கோவில்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் நன்கொடை கொடுத்துவந்தார் என்ற உண்மை யாருக்கும் தெரியாது.


திறன்சார் படிப்புகளை வழங்குகின்ற பயிலகம் ஒன்றில் நடைபெற்ற வெள்ளிவிழா மாநாட்டில் நீதிபதி மார்க்கண்டேய கட்சு ஆற்றிய இறுதியுரையில், வரலாற்றாசிரியர் டி.என். பாண்டே எழுதிய `ஹிஸ்டரி இன் த சர்விஸ் ஆஃப் இம்பீரியலிசம்’ எனும் நூலில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள சான்றுகளை எடுத்துரைத்து, தம் வாதங் களை உறுதிப்படுத்தினார்.

1977ஆம் ஆண்டு இராஜ்ய சபா உறுப்பினர்களுக்கு ஆற்றிய உரையில் டாக்டர் பாண்டே சுருக்கமாகக் கூறியுள்ளதாவது: திட்டக் கொள்கையின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள இந்திய வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் பொய்யாகவும் திரித்தும் கூறப்பட்டுள்ளன. அதாவது, இந்திய வரலாற்றின் மத்திய கால வரலாற்றில் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக, முஸ்லிம் ஆட்சியாளர்களால் இந்துக்கள் மிகுந்த கொடுமைகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாக்கப்பட்டார்கள் என்றும், இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழ்ந்த இந்துக்கள் பல்வேறு தொல்லைகளை அனுபவித்தார்கள் என்றும் திரித்துக் கூறப்பட்டுள்ளன.

1928ஆம் ஆண்டில் திப்புசுல்தான் ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஒரு வாதத்தை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொண்ட ஆய்வில்தான் டாக்டர் பாண்டேவுக்கு உண்மை தெரியவந்தது. (டாக்டர் ஹரி பிரசாத் சாஸ்திரி தம்முடைய நூலில் அந்த வாதத்தை முன்வைத்துள்ளார். இவர் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் அப்போதைய சமஸ்கிருதத் துறைத் தலைவராக இருந்தார்) அதாவது, திப்புசுல்தான் ஆட்சிக்காலத்தில் பிராமணர்கள் 3000 பேர் இஸ்லாத்துக்கு மாறிவிடாமல் இருப்பதற்காகத் தற்கொலை செய்துகொண்டார்கள். இந்தச் செய்திக்கு ஆதாரம், மைசூர் செய்தி ஆவணத் தொகுப்பில் உள்ளது என்று டாக்டர் சாஸ்திரி முன்மொழிந்துள்ளார். ஆனால் அங்கு அத்தகைய செய்தி ஆவணம் ஏதும் இல்லை.


திப்புவைப் பற்றிய ஆராய்ச்சியில் டாக்டர் பாண்டே மேலும் கூறுவதாவது: அவர் 156 கோவில்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் நன்கொடை கொடுத்துவந்தார் என்பது மட்டுமின்றி, ஸ்ரீநகர் மடத்திலுள்ள சங்கராச்சாரியாருடன் உளப்பூர்வமான தொடர்பு வைத்திருந்தார். குறைந்த பட்சம் அவருக்கு 30 கடிதங்களையும் எழுதியுள்ளார். அன்றைய காலத்தில் இந்தியா முழுவதும் உயர்நிலைப் பள்ளிகளில் பாடத்தில் இருந்த டாக்டர் சாஸ்திரி எழுதிய நூலில் இருந்த கருத்தே பிற்காலத்தில் தவறான விளக்கத்தைக் கொடுத்தது. ஆனால், உறுதி செய்யப்படாத அந்தக் குற்றச்சாட்டு பிற்காலத்தில் எழுதப்பட்ட வரலாற்றுப் பாட நூல்களிலும் உண்மை மறைக்கப்பட்டதாகவே தொடர்கிறது.

நீதிபதி கட்சு மேலும் கூறியதாவது: இந்தியாவின் ஜனநாயகப் பன்முகம், இந்திய அரசமைப்பையும் இந்திய மக்கள் தொகையின் ஒப்பற்ற வேற்றுமையையும் கட்டிக்காத்து வந்தது. இந்த வேற்றுமை 10,000 ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்டதாகும். அதற்குமுன் இது ஒரே நிலமாகவே இருந்து வந்தது. பழைய குடிமக்களின் வருகையால்தான் இந்தியாவில் வேற்றுமையே ஏற்பட்டது.

வேற்றுமையின் காரணமாகப் பல்வேறு மதங்கள், சாதிகள், மொழிகள் மக்கள் மத்தியில் பரவியதோடு அவை சந்ததிகளிடம் தாக்கத்தையும் பிரதிபலிப்பையும் ஏற்படுத்தின. சட்ட வல்லுநர்கள் வலுவான சிறப்பம்சங்களோடு சட்டங்களை வகுத்தார்கள். நிலையான ஜனநாயகத்துக்கு உத்திரவாதமும், நமது சொத்தும் பன்முகக் கலாச்சாரமே ஆகும்.

 முன்னதாக, இந்த மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடனடியாக, இராஜிந்தர் சச்சார் குழுவின் பரிந்துரைப்படி, `சம வாய்ப்பு ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியது. சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், குறிப்பாகச் சிறுபான்மையினருக்கும், ஏனைய தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படாத வரை இந்தியா முழுமையான வளர்ச்சியை அடைய முடியாது என்றும் அந்தத் தீர்மானம் தெரிவிக்கிறது.

-இந்து நாளிதழ் 18-04-11 தமிழில்: நூ.அப்துல் ஹாதி பாகவி

கருத்துகள் இல்லை: