வெள்ளி, 15 ஏப்ரல், 2011

வாழ்வைத் தொடக்கிவைப்போம்!



இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இனிய இல்வாழ்வுக்கு வழிகாட்டி யுள்ளார்கள். நவீனக் கலாச்சாரச் சீரழிவால் சமுதாயத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்ற மார்க்க அடிப்படையிலான இல்வாழ்வு முறையே குலைந்து வருகின்ற நேரத்தில் இது பற்றித் தெரிந்து கொள்வது முற்றி லும் அவசியமாகும். இன்றைக்கு எத்தனையோ சீரழிவுகள் சமுதாயத்தில் புதிது புதிதாகத் தோன்றிவிட்டாலும் இயற்கையான திருமணமுறையே சிதைந்து வருவது ஓர் ஆரோக்கியமான சமுதாய வளர்ச்சிக்கு உகந்ததில்லை.

ஓர் ஆண் மகனுக்குத் தோதுவான பொருத்தமான பெண் பார்த்து, நிச்சயம் பேசி, நாள் குறிப்பிட்டு, குறித்த அந்த நாளில் உறவினர் அனைவரும் ஒன்றிணைந்து மணமுடித்து வைப்பது ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்து வருகின்ற திருமண முறை. ஆனால் இன்று இதற்கெல்லாம் பிள்ளைகள் தம் பெற்றோருக்கு வாய்ப்பே கொடுப்பதில்லை. தமக்குப் பிரியமானவளைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு காதல் புரிவது, குறிப்பிட்ட நாளில் இருவரும் தம் வீட்டைவிட்டு எங்காவது ஓடிப்போய்த் திருமணம் செய்துகொண்டு வாழத் தொடங்குவது தொடர்கதையாகிவருகிறது.

சின்னஞ்சிறு வயதுமுதல் பார்த்துப் பார்த்து வளர்த்து, தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து, தாம் பசியோடு இருந் தாலும் தம் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நல்லதொரு பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தால் பிள்ளைகளோ இவ்வாறு செய்வது எந்த வகையில் நியாயம்?
அவர்கள் தம் காதலையும் காமத்தையும்தான் முன்னிலைப் படுத்துகிறார்களே தவிர தம் பெற்றோரின் கனவையும் ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் தோன்றவில்லையே ஏன்? இத்துணை காலம் பாடுபட்டு வளர்த்த பெற்றோருக்குப் பிள்ளைகள் கொடுக்கும் பரிசு இதுதானா?

தனக்குப் பிடித்தவனை அழைத்துக்கொண்டு ஒரு பெண் ஓடுவதும், தனக்குப் பிடித்தவளை அழைத்துக்கொண்டு ஓர் ஆண் ஓடிப்போவதும் தொடர்கின்ற இந்நேரத்தில் அது பற்றி இஸ்லாமிய மார்க்கம் என்ன சொல்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்வது மிக்க அவசியமாகும்.
எப்பெண் தன்னுடைய வலீ (பொறுப்பாளி)யின் அனுமதியின்றித் திருமணம் செய்துகொண்டாளோ அவளுடைய திருமணம் செல்லாது என்று மும்முறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ)

இதனடிப்படையில், ஒரு பெண் தன் பெற்றோருக்குத் தெரியாமல், தன் மனம் விரும்பியவனோடு ஓடிச் சென்றுபதிவு அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டு தன் இல்வாழ்வைத் தொடர முடியாது.  இஸ்லாமிய மார்க்கத்தின்படி அவளுடைய திருமணம் செல்லாது. இதை நாம் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால், ஒரு பெண் தன் மனம்போன போக்கில் செல்ல அனுமதி இல்லை என்பதை விளங்க முடிகிறது.

 அதற்குப் பற்பல காரணங்கள் இருக்கலாம்.  காரணங்கள் பல இருந்தாலும் இறைத்தூதரின்  கூற்றுக்கே நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒரு பெண்ணின் பொறுப்பாளராக (வலீ) அவளுடைய தந்தை, சகோதரன், சிற்றப்பா, பெரியப்பா ஆகியோர் இருப்பார்கள். அவர்களுள் யாரேனும் பொறுப்பாளராக இருந்துதான் ஒரு பெண்ணின் திருமணத்தை நடத்திவைக்க வேண்டும். ஒரு பெண்ணோ, ஆணோ தனக்குப் பிடித்த பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஓட வேண்டிய நிலை ஏன் ஏற்படுகிறது? அதற்குக் காரணம் யார்?
இந்நிலைக்கு முழு முதற்காரணம் பெற்றோரே ஆவர். இந்நிலை தொடர இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, ஒரு பெண்ணோ ஆணோ அவர்கள் படிக்கின்ற பள்ளி அல்லது கல்லூரி  ஒரு  காரணம்.
நாம்  நம் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கின்றபோது ஆண் களை ஆண்களுக்கான பள்ளிக்கூடத்திலும் பெண்களைப் பெண்களுக் கான பள்ளிக்கூடத்திலும் சேர்க்க வேண்டும். அப்படிச் செய்தால் அவர்கள் தம் படிப்பில் மட்டுமே  கவனம் செலுத்துவர். அதைவிட்டு அவர்களின் கவனம் சிதறாது. மாறாக, நாம் ஆண்-பெண் கலந்து பயில்கின்ற இருபாலர் பள்ளியில்தான் சேர்க்கிறோம். பள்ளிக்கூடத்தைக் கடந்து வந்துவிட்டால் கல்லூரியில் சேர்க்கிறோம். பெரும்பாலும் இருபாலர் கல்லூரிகளே உள்ளன. எனவே நாம் தூரநோக்கோடு சிந்திக்காமல் நம் பொறுப்பை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற அடிப்படையில் சேர்த்துவிடுகிறோம். ஆனால் அங்கு அவர்கள் பெறு வதோ கல்வியைவிட அதிகம் பெறுவது காதலைத்தான்.

இறுதியில் கல்வியா, காதலா என்ற மனப்போராட்டத்தில் கல்வி தோற்றுப்போய்விடுகிறது. காதல் வெற்றிகொள்கிறது. எனவே இதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டுமாயின் கல்லூரியில் சேர்க்கும்போதே நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக, பெண்களுக்கான கல்லூரியில் மட்டுமே பெண்களைச் சேர்க்க வேண்டும். ஆண்களுக்குப் போட்டியாகப் பெண்களைப் படிக்க வைக்க வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை நம் பிள்ளைகளின் வாழ்க்கையையே திசைதிருப்பிவிடுகின்றது. அதனால் அந்தோ பரிதாபம்!  மாற்றுச் சமுதாய ஆண்களோடு வாழ்க்கையைத் தொடர வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர்.

பருவ வயதடைந்தவுடன் திருமணம் செய்து வைக்காதிருத்தல் மற்றொரு காரணமாகும். ஒவ்வொரு பெண்ணும் தன் பருவ வயதை அடைந்தவுடன் அவளை மணமுடித்துக்கொடுத்து விடுவது  ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். இதை எத்தனை பெற்றோர் மிகச் சரியாகச் செய்துவருகின்றனர்? பெற்றோர் தம் பெண்பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும்; பணிக்கு அனுப்ப வேண்டும் என்று எண்ணுகின்ற அதேநேரத்தில் உரிய நேரத்தில் அவளுக்கு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க வேண்டும்  என்று எண்ணுவதில்லை. காலம் கடந்த பின்பே அது பற்றி யோசிக்கின்றனர். இதுவே அவர்களின் வாழ்க்கை திசைதிரும்பிவிட முக்கியக் காரணமாகும். இது பெற்றோரின் பொறுப்பின்மையால் விளைந்த கேடே தவிர பிள்ளைகளின் தவற்றினால் ஏற்பட்டதில்லை.

ஆனால், படிக்க வைப்பதே தவறு என்று விளங்கிக்கொள்ளக்கூடாது. இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றுதான் கூறுகிறோம். படிப்பும் அவசியம்; திருமணமும் அவசியம். இரண்டில் முன்னுரிமை, பருவ வயதை அடைந்தவுடன் திருமணம். இதுவே இறைத்தூதரின் பொன்மொழி. பெண்களுக்கு ஆண்களைப் போன்ற கல்வியைக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. பெண்களுக்கேற்ற துறைகளில் படிக்க வைத்து, அத்துறைகளில் பெண்கள் தாராளமாகப் பணியாற்றலாம்.

இன்னும், உங்களுள் வாழ்க்கைத் துணையில்லாதவர்களுக்கும் உங்கள் அடிமைகளாக(ப் பணியாற்றுகின்ற) ஆண்-பெண்களுள் உள்ள நல்லோர்களுக்கும் திருமணம் செய்துவையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தாலும் அவர்களை அல்லாஹ் தன் கருணையால் செல்வந்தர்களாக ஆக்கிவைப்பான். (24: 32)

இன்றைய மக்கள் பலர், திருமணம் செய்கின்றபோதே ஆண் எவ்வளவு சம்பாதிக்கிறான் என்றுதான் பார்க்கின்றார்கள். வேலை இல்லாத ஆண்களுக்குப் பெண் கொடுக்க முன்வருவதில்லை. இத்தகைய போக்கு ஆரோக்கியமான சமுதாயத்துக்கு வழிவகுக்காது. இஸ்லாமியப் பார்வையிலும் இது தவறானதே. எனவே பருவ வயதை அடைந்துள்ள ஆரோக்கியமான ஓர் ஆண்மகனுக்கு உங்கள் பெண்களைத் தாராளமாக இறைவனை நம்பித் திருமணம் செய்துவையுங்கள். அல்லாஹ் அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றப்போதுமான செல்வத்தைக் கொடுப்பான். திருமண வாழ்க்கையைத் தொடங்க, செல்வம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதை இனியாகிலும் நாம் விளங்க முற்படுவோம். 

நபியவர்களின் முன்னிலையில் வந்து நின்றுகொண்டு என்னைத் தங்களுக்கு ஒப்படைக்கிறேன் என்று கூறிய பெண்ணை, ஓர் இளைஞருக்குத்தான் நபியவர்கள் மணமுடித்துவைத்தார்கள். அந்த இளைஞரிடம் ஓர் இரும்பு மோதிரம்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் அவர் மனனம் செய்திருந்த திருக்குர்ஆன் அத்தியாயங்களுக்குப் பகரமாக மண முடித்துவைத்தார்கள். அவர்கள் வாழவில்லையா? புகாரீயில் பதிவுசெய்யப்பட்டுள்ள (5121) இத்தகவலை நீங்கள் படித்துப் பாருங்கள் புரியும்.

பதின்ம வயதினர் தம் விருப்பப்படி ஒருத்தியை அல்லது ஒரு வனை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு ஓடுவதைத் தடுக்க இஸ்லாமிய மார்க்கத்தில் மற்றொரு தீர்வும் உள்ளது.

நம் பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் திருமண உறவை நிச்சயம் செய்துவிடுவது; பின்னர் திருமண உறவுக்கான முதிர்ச்சியடைந்தவுடன் அவர்களை இணைத்து வைப்பது. இது ஒன்றும் புதிதன்று. சில பல ஊர்களில் இன்றும் நடைமுறையில் உள்ளதுதான். இதே நடைமுறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் பின்பற்றியிருக்கின்றார்கள். நபியவர்களுக்கும் அன்னை ஆயிஷா (ரளி) அவர்களுக்கும் திருமண ஒப்பந்தம் நடைபெற்றது. அப்போது அன்னை ஆயிஷா (ரளி) அவர்களுக்கு ஆறு வயது. பின்னர் மூன்றாண்டுகள் கழித்து அவர்களின் ஒன்பதாம் வயதில்தான் நபியவர்களும் அன்னை ஆயிஷா அவர்களும் ஒன்றாக இணைந்தார்கள். இது பற்றி அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கின்ற நபிமொழி புகாரீ உள்ளிட்ட பல்வேறு நபிமொழித் தொகுப்புகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. "நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது என்னை நபி (ஸல்) அவர்கள் மணந்துகொண்டார்கள். எனக்கு ஒன்பது வயதானபோது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர்களுடன் ஒன்பது ஆண்டுகள் (மனைவியாக) வாழ்ந்தேன். (புகாரீ-5158)

ஆக, ஒரு கோணத்தில் நாம் இன்றைய தலைமுறையினரைச் சிந்தித்துப் பார்க்கும்போது, அவர்கள் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறார்கள் என்பதை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். ஏனெனில் ஓர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தோரை எடுத்துக்கொண்டால் அவர்கள் தம்முடைய பதினைந்து வயதில் அறிந்து கொண்டதை இன்றைய நான்கு அல்லது ஐந்து வயதுள்ள சிறுவர்கள் தெரிந்துகொண்டு விடுகின்றார்கள். பாலியல் பற்றி திருமணத்தின்போதுதான் அன்றையவர்களுக்குத் தெரியவரும். ஆனால் இன்று பத்து வயது முதலே அது பற்றி முழுமையாக அறியத் தொடங்கி விடுகின்றார்கள்.

ஏனென்றால் அதற்கான எல்லாவிதச் சாத்தியங்களும் இன் றைக்கு உள்ளன. தொலைக்காட்சி முதல் இணையதளம் வரை மிக எளிதாகப் பயன்படுத்தும் விதத்தில் உள்ளன. தொலைக்காட்சியில் ஆண்-பெண் கலந்த நிகழ்ச்சிகளையும் ஒன்றாகக் கட்டியணைத்து நடிக் கின்ற காட்சிகளையுமே ஒளிபரப்புகின்றனர்; அக்காட்சிகளை நாள் தோறும் காண்கின்ற இளவயதினர் அதைத் தாமும் செய்ய வேண்டும் என்ற ஆவல்கொள்கின்றனர். இணையதளத்தில் அமர்ந்தால் அ முதல் ஃ வரை உடற்கூறு சார்ந்த அத்துணை தகவல்களும் படங்களுடன் கிடைக்கின்றன. ஆகவே அனைத்தையும் மிக விரைவிலேயே தெரிந்து கொண்டுவிடுகின்றனர். அது மட்டுமல்லாமல்  அதையெல்லாம் செயல்படுத்திப் பார்க்க வேண்டுமென்ற மனநிலைக்கும் வந்துவிடுகின்றனர்.

இவையெல்லாம் போதாதென்று, இன்று கைப்பேசி அனைவரின் கைகளிலும் தவழத் தொடங்கிவிட்டது. அதில் தாம் விரும்பியபடி எங்கிருந்தாலும் யாருடனும் பேசிக்கொள்கின்ற வசதி; குறுஞ்செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ளும் வசதி. இத்தனையையும் மீறித்தான் நாம் நம்முடைய பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டியுள்ளது. எனவே சிறுவர்களுக்கு ஒன்றும் தெரியாதுஒன்றும் புரியாது என்பதெல்லாம் பழைய வாதம். ஆகவே இஸ்லாமியக் கண்ணோட்டத்தின்படி ஒருவன் சிற்றிளைஞனாக ஆகின்றபோதே திருமணத்துக்கான ஒப்பந்தத்தை நிறைவேற்றலாம். `இவளுக்கு இவன்தான்' என்று முன்னரே முடிவாகிவிடுகின்றபோது அவன் மற்றவளை நோக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.

அவர்கள் எப்போது வேண்டுமானாலும் சேர்ந்துகொள்ளலாம்; அவர்கள் இருவரும் ஒன்றாகப் படிக்கலாம்; ஒன்றாகச் சேர்ந்து விளை யாடலாம்; தம்முடைய வாழ்க்கையை அவர்களே தீர்மானித்துக் கொள்ளலாம். ஆக இது ஒரு புதுமையான கருத்தாகத் தோன்றினாலும் இன்றைய தலைமுறை அவ்வளவு வேகமாக வளர்ந்துவருகிறது என்பதைத்தான் நான் சொல்ல வருகிறேன். அதே நேரத்தில் அதற்கான தீர்வையும் இஸ்லாம் சொல்லாமல் விட்டு வைக்கவில்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆக, நம்முடைய தலைமுறையினர் கெட்டுப்போகாமல் பாதுகாக்க வேண்டுமாயின் அதற்கு என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றனவோ, அதற்கு இஸ்லாம் என்னென்ன முன்னேற்பாடுகளைக் கையாளச் சொல்கிறதோ அவற்றை உரிய நேரத்தில் முறைப்படி நடைமுறைப்படுத்தி அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டுவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. ஆகவே நாம் நம் பிள்ளைகளின் படிப்பு, திருமணம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவோம். அவர்களின் எதிர்காலம் சிறக்கவும், அவர்கள் தம் வாழ்க்கையை இறைவேதத்தின்படியும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாக்குப்படியும் அமைத்துக்கொள்ள நாம் துணைபுரிவோம். அவர்களின் இல்வாழ்வை மிக விரைவாகவே தொடங்கிவைப்போம்!    ***




கருத்துகள் இல்லை: