வெள்ளி, 20 ஜூலை, 2012
ஆன்மாவும் உண்ணா நோன்பும்
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உயிர்வாழும் ஆன்மா எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கிறது. கடிகார முள்ளைப்போல் ஓய்வின்றி ஓடிக்கொண்டே இருக்கிறது. நாம் பணி செய்து கொண்டிருந்தாலும் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தாலும் நம் ஆன்மா உறங்குவதேயில்லை. இதனால்தான் நாம் உறங்கினாலும் தொடர்ந்து மூச்சு விடுவதும், கனவுகள் காண்பதும் நடந்து கொண்டிருக்கின்றன.
பொதுவாக, ஆன்மா இறப்பதில்லை என்று அனைவரும் கூறுவர். இன்றைய விஞ்ஞானிகளும் அதைத்தான் சொல்கின்றனர். ஒரு மனிதன் நல்வினையையும் தீவினையையும் செய்யக் காரணமாக அமைவது இந்த ஆன்மாதான். அதை எப்படி நாம் பழக்குகின்றோமோ அப்படியே அது மாறிவிடுகின்றது. நல்வினைகள் பக்கம் அதைத் திருப்பினால் நற்கருமங்கள் புரியத் தூண்டும். தீவினைகளின் பக்கம் திருப்பிவிட்டால் தீச்செயல்கள் புரியத் தூண்டும். ஆக, இரண்டினுள் இரண்டாவதற்கு எந்தவிதப் பயிற்சியும் தேவையில்லை. ஏனெனில் மனிதன் தவறு செய்யக்கூடிய இயல்பிலேயே படைக்கப்பட்டுள்ளான். எனவே முதலாவதற்குத்தான் பயிற்சி தேவை.
அந்த ஆன்மாவைத் தூய்மைப்படுத்த மேற்கொள்கின்ற பற்பல பயிற்சிகளுள் முதலிடம் வகிப்பது உணவுக்கட்டுப்பாடுதான். ஒருவன் தன் உணவு முறையில் மிகுந்த கட்டுப்பாட்டைக் கடிப்பிடித்தால் அவன் தன் ஆன்மாவைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். மாறாக உணவு உட்கொள்வதில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் வரம்பு மீறி உணவுகளை உண்ணத் தொடங்குபவன் தன் உள்ளுணர்வுகளால் உந்தப்படுகின்றான்.
அதன் விளைவாக அவனது ஆன்மா தூண்டக்கூடிய எல்லாத் தீவினைகளையும் தன் சுய விருப்பத்தோடு செய்யத் தொடங்கிவிடுகின்றான். இறுதியில் அவனுடைய ஆன்மா தன் அகஒளியை இழந்து அழுக்குகளால் நிரம்பிவிடுகின்றது.
ஒருவேளை உண்பான் யோகி
இருவேளை உண்பான் போகி
முன்போது உண்பான் ரோகி
எப்போதும் உண்பான் துரோகி
-எனும் தமிழ்ப்பாடல் மிகமிகக் குறைவாக உண்பவனை யோகி-துறவி என்றும் எப்போதும் உண்பவனை துரோகி என்றும் குறிப்பிடக் காரணம், அந்த உணவுதான் ஒருவனை நல்வழிப்படுத்தவும் தீச்செயல்களைச் செய்யுமாறு தூண்டவும் துணைபுரிகிறது என்பதேயாம். ஏனெனில் அதிகமாக உண்ணும்போது மனிதனின் சிந்தனைத்திறன் மங்கி, அவனது ஆன்மா தன் அகஒளியை இழந்துவிடுகின்றது. சோம்பேறித்தனமும் மந்தநிலையும் ஆட்கொண்டு விடுகின்றன.
உணவுக் கட்டுப்பாட்டை வலியுறுத்துமுகமாக இறைவன் தன் திருமறையில், “உண்ணுங்கள்; பருகுங்கள்; விரயம் செய்யாதீர்” (7: 31) என்று கூறுகின்றான். அளவோடு, சுத்தமானதை மட்டுமே உண்ண வேண்டும் என்பது இதன் உட்பொருளாகும். மேலும், “மனிதன் நிரப்புகின்ற பைகளுள் மிகக் கெட்ட பை அவனது இரைப்பைதான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே உணவுதான் மனிதனின் முதல் எதிரி என்றால் மிகையில்லை.
நோன்பைப் பற்றிக் கூறுகின்ற இறைவசனத்தின் தொடக்கத்தில், இறைநம்பிக்கை கொண்டோரே! என்று தொடங்குகின்ற அல்லாஹ் அதன் முடிவில், நீங்கள் இறையச்சம் உடையோராகலாம் என்று முடிக்கின்றான். ஒருவன் நோன்பு நோற்பதன் மூலம் இறையச்சம் ஏற்பட வேண்டும். நோன்பு நோற்றுக்கொண்டே தகாத செயல்களைச் செய்யத் தலைப்பட்டால், அவனுடைய நோன்பு அவனுக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று பொருள். அதாவது நோன்பின் மூலம் ஏற்படவேண்டிய இறையச்சம் அவனுக்கு ஏற்படவில்லை என்று பொருளாகும்.
முஸ்லிம்களாகிய நாம் மேற்கொள்கின்ற உண்ணா நோன்புக் காலங்களில் அதிகாலையில் சிறிதளவு உணவுண்டபின் அந்தி மாலை வரை அல்லாஹ் ஒருவனுக்காகப் பசித்திருந்து, தாகித்திருந்து, நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி ஆன்மிகப் பயிற்சிபெறுகின்றோம். மாலையில் சூரியன் மறைந்ததும் நோன்பைத் துறந்து களைப்பை நீக்கிக்கொள்கிறோம். இவ்வாறே நாம் முப்பது நாள்கள் தொடர்ந்து மேற்கொள்கின்ற ஆன்மிகப் பயிற்சியால் நம் ஆன்மா அகஒளி பெற்றுவிடுகின்றது. பின்பு அஃது இறைவனை அஞ்சத் தொடங்கிவிடுகின்றது. தீச்செயல்களைச் செய்யத் தயங்குகிறது. இதுதான் ஆன்மிகப் பயிற்சியின் பலன்.
குறிப்பிட்ட காலத்தில் நாம் மேற்கொள்கின்ற இப்பயிற்சியால் நாம் செய்யும் நல்லறங்கள் அதிகம். மற்ற மாதங்களில் செய்யாத நல்லறங்களை இம்மாதத்தில் செய்கிறோம். காரணம், உண்டி சுருங்கினால் உள்ளம் பக்குவப்படும் என்பதேயாம். இதன் பிரதிபலிப்பை மற்ற மாதங்களில் நாம் பெற வேண்டுமெனில் நம் உணவில் ஒரு வரைமுறையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உணவுத் தேவை குறைந்துவிட்டால் மற்றெல்லா நற்பண்புகளும் தாமாக நம்மை வந்து சேரும்.
ஆக, நாம் மேற்கொள்கின்ற இந்த உண்ணா நோன்பு கடமைக்காக மட்டும் இல்லாமல் நம் ஆன்மாவைக் கட்டுப்படுத்துவதாகவும் அதன் போக்கை மாற்றக்கூடியதாகவும் நாம் எண்ணியதை அடையக்கூடியதாகவும் மாற்ற வேண்டும். அத்தகைய முறையில் நம்முடைய நோன்பை ஆக்கிக்கொள்வோம். நம் நோன்பின் மூலம் இறைவனிடம் நன்மைகளை அடைவதோடு, நம் ஆன்மாவுக்கு அகஒளியை ஏற்படுத்திக்கொள்ள முனைவோம்!


புதன், 27 ஜூன், 2012
இல்லறம் இனிக்க...
ஆண்-பெண் பருவ வயதை அடைந்தவுடன் ஒவ்வொருவரும் தமக்கென ஒரு துணையைத் தேடுவது இயல்பு. இது மனித இனத்துக்கு மட்டுமின்றி எல்லா உயிரினங்களுக்கும் ஒரு பொது நியதி. அதற்கு இஸ்லாம் அங்கீகாரம் கொடுப்பதோடு வரவேற்கவும் செய்கிறது. அதற்கு மாறாக, உரிய பருவத்தில் திருமணம் செய்யாமல் காலம் கடத்துதல், பிரம்மச்சாரியாக இருத்தல், தனிமையை மேற்கொள்ளுதல் போன்றவற்றை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஒரு குடும்ப வாழ்க்கை மூலமே குலம் விருத்தியடைகிறது. அக்குலம் விருத்தியடைந்தால்தான் மனித சமுதாயம் தழைக்கும். ஆகவே இஸ்லாம் இல்லற வாழ்வை வரவேற்கிறது. கட்டாயப்படுத்துகிறது. மக்களுக்கு ஓர் ஒப்பற்ற தூதராய் வந்த இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் உட்பட அவர்களுக்குமுன் வந்த ஏனைய இறைத்தூதர்கள் அனைவரும் மணவாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர். அது பற்றி உயர்ந்தோன் அல்லாஹ் திருக்குர்ஆனில், உமக்கு முன்னால் நாம் இறைத்தூதர்களை அனுப்பியிருக்கிறோம். அவர்களுக்கு மனைவியரையும் சந்ததிகளையும் ஆக்கியிருக்கிறோம் (13: 38) என்று கூறியுள்ளான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், திருமணம் எனது வழிமுறை. யார் என் வழிமுறையைச் செயல்படுத்தவில்லையோ அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை. திருமணம் செய்துகொள்ளுங்கள். திண்ணமாக நான் உங்கள் மூலம் சமுதாயத்தை அதிகமாகக் காட்டிப் பெருமிதம் கொள்வேன். யாருக்குச் செல்வம் இருக்கிறதோ அவர் திருமணம் செய்துகொள்ளட்டும். யாரிடம் அது இல்லையோ அவர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும். திண்ணமாக நோன்பு அவருடைய இச்சையைக் கட்டுப்படுத்தும் எனக் கூறியுள்ளார்கள். (நூல்: இப்னுமாஜா)
மேலும் திருமணத்தை வலியுறுத்திக் கூறுகின்ற பற்பல நபிமொழிகள் நபிமொழித் தொகுப்பு நூல்களில் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று: இளைஞர்களே! உங்களுள் யார் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில் அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும். கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும். (நூல்: இப்னுமாஜா)
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் பிரம்மச்சாரியாக இருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்துவிட்டார்கள். நபியவர்கள் அவருக்கு அனுமதி கொடுத்திருந்தால் நாங்களும் (திருமணம் செய்யாமல் இருப்பதற்காகக்) காயடித்துக்கொண்டிருப்போம். (நூல்: இப்னுமாஜா)
திருமணம் செய்யாமலிருக்க அனுமதி கேட்டும் நபியவர்கள் அதற்கு அனுமதி மறுத்துவிட்டார்கள். இன்றைய கணினி யுகத்தில் வாழுகின்ற இளைஞர்களும் இளைஞிகளும் கணினியைப் போன்ற வேகத்தில் பரபரப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதனால் முற்காலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகின்ற வாழ்க்கைக் கட்டமைப்பு சிதைந்து போகும் நிலை உருவாகியுள்ளது.
திருமணம் செய்யாமலேயே ஆண்-பெண் இருவரும் சேர்ந்து வாழ்வதும், அவர்களுக்கிடையே ஒத்த கருத்து ஏற்படாவிட்டால் இருவரும் பிரிந்து விடுவதும், பின்னர் அவன் வேறொரு பெண்ணையும், அவள் மற்றோர் ஆணைத் தேடுவதும் பெருகி வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் பாரம்பரியத் திருமண வாழ்க்கை முறை எனும் கட்டமைப்புச் சிதைந்துவிடும் என்பதில் ஐயமில்லை.
அது மட்டுமின்றி, கணினி யுகத்தில் அவசரப்படுகின்ற யுவதிகள் தனக்குப் பிடித்த யாரேனும் ஓர் ஆண் துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறாள். இவன்தான் என் காதலன் என்று அவனைத் தன் பெற்றோரிடம் அறிமுகப்படுத்துகிறாள். அவர்கள் எதிர்த்தால், தன் பெற்றோருக்கும் மற்றோருக்கும் தெரியாமல் அவனை மணந்துகொள்கிறாள். இதனால் ஒரு பெண் தன் பெற்றோரை மதிக்காத நிலை உருவாகின்றது. மட்டுமின்றி, அவளுடைய திருமணமும் செல்லாது. இதுவே இஸ்லாம் கூறும் முறையாகும்.
எப்பெண்ணுக்கு அவளுடைய வலீ-பொறுப்பாளி திருமணம் செய்துவைக்கவில்லையோ, அவளுடைய திருமணம் செல்லாது; அவளுடைய திருமணம் செல்லாது; அவளுடைய திருமணம் செல்லாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புகாரீ, இப்னுமாஜா)
கணவனின் கடமை
ஓர் ஆண்மகன் தன்னை நம்பி வருகின்ற பெண்ணுக்குக் கொடுக்க வேண்டிய உரிமைகளைக் கொடுப்பதோடு, அவளுக்கு என்னென்ன அவசியத் தேவைகள் இருக்கின்றனவோ அவற்றை நிறைவேற்றிக்கொடுப்பது அவனுடைய கடமையாகும். உண்ண உணவும், உடுத்த உடையும், இருக்க இருப்பிடமும் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
நபித்தோழர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், கணவர்மீது அவனுடைய மனைவிக்கு உள்ள உரிமைகள் என்ன? என்று வினவினார். அவன் உணவுண்டால், அவளுக்கு உணவளிப்பதும், அவன் ஆடையணிந்தால் அவளுக்கு ஆடை அணிவிப்பதும் ஆகும். (அவளுடைய) முகத்தில் அடிக்கக் கூடாது. திட்டக்கூடாது. வீட்டில் தவிர அவளைக் கண்டிக்கக் கூடாது என்று விடையளித்தார்கள். (நூல்: இப்னுமாஜா)
மனைவியின் கடமை
களைத்துப்போய், இல்லாளை நோக்கி இல்லம் திரும்பிவருகின்ற கணவனை தன் அன்பாலும் புன்னகையாலும் அரவணைப்பதும் அவனுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வதும் ஒரு மனைவியின் கடமையாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீது வைத்துள்ள இறைநம்பிக்கைக்குப் பிறகு, ஒரு முஃமினுக்கு அவருடைய நல்ல மனைவியைத் தவிர வேறெதுவும் மிகச் சிறந்த பயன்கொடுப்பதில்லை. அவர் அவளை ஏவினால் அவள் (அவருக்குப்) பணிவாள். அவர் அவளைப் பார்த்தால் அவரை அவள் மகிழ்விப்பாள். அவர் அவளிடம் சத்தியம் செய்தால் அவருக்கு அதை நிறைவேற்றிக்கொடுப்பாள். அவர் அவளைவிட்டுச் சென்றுவிட்டால், அவள் தன் கற்பிலும், கணவருடைய பொருளிலும் அவருக்கு நன்மையே செய்வாள். (நூல்: இப்னுமாஜா)
மேலும், ஒரு பெண் தன் எந்த அளவுக்குக் கடமைப்பட்டிருக்கிறாள் என்பதற்கு ஓர் உதாரணமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் மற்றொருவருக்குச் சிரவணக்கம் செய்யலாம் என்றிருந்தால், ஒரு பெண் தன் கணவனுக்குச் சிர வணக்கம் செய்ய நான் அவளை ஏவியிருப்பேன். ஒருவன் தன் மனைவியிடம், செம்மலையிலிருந்து கருமலைக்கு இடம்பெயர்ந்து செல்ல ஏவினாலும், கருமலையிலிருந்து செம்மலைக்கு இடம்பெயர்ந்து செல்ல ஏவினாலும் அதை அவள் செய்வது அவள்மீது கடமைதான். (நூல்: இப்னுமாஜா)
கணவன் தன் மனைவியைப் பார்க்கும்போது அவனை மகிழ்விக்கும் விதத்தில் சாந்தமான முகத்தோடும், புன்னகை கொஞ்சும் எழிலோடும் காட்சி தருகின்றபோது அவனுடைய உள்ளமெலாம் இளகும். இதுவரை அவன் நெஞ்சில் இருந்த கவலைகளெல்லாம் பஞ்சாகிக் காற்றில் பறந்துவிடும். அத்தகைய பெண்ணே கணவனுக்கு மகிழ்ச்சியைத் தருபவள். அத்தகைய மனைவியைப் பெற்ற இறைநம்பிக்கையாளர் இவ்வுலகிலேயே சொர்க்கத்தைக் காணலாம் என்றால் அது மிகையன்று.
ஆக, இனிமையான இல்லற வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டுமெனில் கணவன் தன் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவதும், மனைவி தன்னுடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவதும் முற்றிலும் அவசியமாகும்.
![]() |
| இனிய திசைகள் ஜூலை (2012) மாத இதழில் வெளிவந்த பாராட்டுக் கடிதம். |
செவ்வாய், 8 மே, 2012
தாயகம் திரும்புங்க!
-பாகவியார்
அன்வர் வெளிநாடு சென்று ஏறக்குறைய பத்தாண்டுகள் உருண்டோடிவிட்டன. ஈராண்டுகளுக்கு ஒரு தடவை நாற்பது நாள் விடுமுறையில் தாயகம் வருவது வழக்கம். இதன்படி அவன் தன் மனைவியோடு வாழ்ந்த காலம் 200 நாள்கள் மட்டுமே. திருமணம் முடித்த பத்தே நாள்களில் வெளிநாடு சென்றவன் இன்றைக்கு அவன்தன் இளமையில் பாதியை சவூதியிலேயே கழித்துவிட்டான் என்பதைவிடத் தொலைத்துவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டும். பத்தாம் வகுப்பு வரை படித்த அவன் படித்துக்கொண்டிருந்தபோதே சவூதி செல்ல வேண்டும் என்ற ஆசை எப்படியோ தொற்றிக்கொண்டதால் அதற்குமேல் படிப்பில் அவனுக்கு ஆர்வம் இல்லை.
அதன்பிறகு பாஸ்போர்ட் எடுப்பதிலும் உறவினர்களிடம் விசாவை அனுப்பச் சொல்வதிலுமே சில ஆண்டுகள் கழிந்தன. ஒரு வழியாக தன் அக்காவின் கணவர் மூலம் ஒரு விசா வந்தடைந்ததும் அவனுக்கோ அளவிலா மகிழ்ச்சி. முதல் தடவை சென்று ஈராண்டுகள் கழித்துத் தாயகம் வந்ததும் அவனுடைய மதிப்பே உயர்ந்துவிட்டது.
அவன் சவூதி செல்வதற்குமுன் ஊர்சுத்தி அன்வர் என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டவன் இன்று சவூதி மாப்பிள்ளை என்று மற்றவர்களெல்லாம் அழைத்ததும் அவனுக்கு இதயமே குளிர்ந்துவிட்டது. உறவுக்காரப் பெண்ணையே அவனுக்குத் திருமணம் செய்துவைத்தார்கள். திருமணம் முடிந்து தன் மனைவியோடு மகிழ்ச்சியாகக் கழித்துக்கொண்டிருந்தபோதே விடுமுறை நாள்கள் முடிவுக்கு வந்தன. புதுமனைவியோடு முழுமையாக வாழ முடியாமல் ஏக்கத்தோடே மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தான்.
அன்று தொடங்கிய பயணம் இன்னும் முடிந்தபாடில்லை. ஒவ்வொரு தடவையும் ஈராண்டுகளுக்கு ஒரு முறை ஊருக்கு வருவதும் மீண்டும் சவூதி செல்வதும் அவன் வாழ்க்கையில் தொடர்ந்துகொண்டிருந்தன. வெண்பாலைவன வெயிலில் நாள்தோறும் படும் சிரமமும் தொல்லைகளும் அவனை நிம்மதியிழக்கச் செய்தன.
அன்றொரு நாள், வேலை பார்த்துக் களைத்துப் போயிருந்த அன்வருக்குக் கண்கள் சொக்கின. படுக்கத் தயாரானபோது அவனுடைய அன்பு மனைவி மொபைலில் அழைத்தாள். அன்போடு எடுத்துப் பேசியதும் அவனுக்குச் சற்று ஆறுதலாக இருந்தது. அவளுக்கும்தான்.
அவள் பேச்சைத் தொடர்ந்தாள். என்னங்க, நான் இன்னைக்கி வெள்ளிக்கிழமை பயான் கேட்க பள்ளிவாசலுக்குப் போயிருந்தேன். ஹஜ்ரத் உடைய பயானைக் கேட்டதும் எனக்கே இனம்புரியாத ஒரு மாற்றம் வந்துருச்சுங்க. ஏழையாகவோ, நடுத்தரமாகவோ, பணக்காரியாகவோ எப்டி வாழ்ந்தாலும் ஒரே வாழ்க்கைதானேங்க. ஒரு சாண் வயித்துக்கு எதைச் சாப்பிட்டா என்னங்க. நம்மைவிட ஏழையாக இருந்தும் எத்தனையோ பேர் சந்தோஷமாத்தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. அப்படி இருக்கும்போது நீங்க ஏன் வெளிநாட்டுல சிரமப்படணும்?
சாப்புடுவது இருபது ரூபா அரிசியா இருந்தாலும் நாம் இருவரும் ஒன்னா இருந்து சாப்பிட்டாத்தான் சந்தோஷமா இருக்கும். நமக்கு மூணு பொம்பளப் புள்ளைங்க இருந்தாலும் இப்ப அதப் பத்தி கவலையே இல்லீங்க. ஏன்னா, நம்ம ஊர்ல யாரும் வரதட்சணை வாங்கக் கூடாதுன்னு சட்டம் போட்டுட்டாங்க. போன வாரம்கூட எங்க அக்கா மகளுக்குக் கல்யாணம் நடந்துச்சு. மாப்பிள்ளை நல்லா படிச்சவரு. வரதட்சணை எதுவுமே வாங்கலை. எங்க அக்காவா பாத்து தன்னால முடிஞ்சதப் போட்டாங்க. அவ்வளவுதான். இனி பொம்பளைப் புள்ளையப் பெத்தாக்க நம்ம ஊர்ல எந்தக் கவலையும் இல்லீங்க. அதனால நீங்க இவ்வளவு காலம் சிரமப்பட்டது போதுமுங்க. கூடிய சீக்கிரம் நம்ம ஊருக்கு வந்துருங்க. இங்கேயே ஏதாவது நீங்க வேலையப் பாத்துக்குட்டு, நாம ரெண்டுபேரும் சேர்ந்து சந்தோஷமா வாழலாம் என்று சொல்லி முடித்தாள். இதையெல்லாம் கேட்கக் கேட்க அன்வரின் ஆனந்தத்துக்கு அளவே இல்லை. தாயகம் திரும்பப்போற மகிழ்ச்சியில் அன்றிரவு நிம்மதியாக உறங்கினான். ---
புதன், 18 ஏப்ரல், 2012
திங்கள், 16 ஏப்ரல், 2012
உற்சாகம்! (சிறுகதை)
-பாகவியார்
அடியே ஆயிஷா, என்னடி வேலயப் பாக்காம இப்டி வந்து உக்காந்துட்டே? ஒன்னோட புருஷன் சாப்பாட்டுக்கு வந்துருவான்.
சீக்கிரம் போயிச் சோறாக்குடி-மைமூனா தன் மருமகளை ஏவினாள்.
இப்பத்தானே மாமி வீடெல்லாம் கூட்டிக் கழுவுனேன். சற்றுப் பொறுங்க மாமி. உடம்பெல்லாம்
அலுப்பா இருக்கு. கொஞ்ச நேரம் இளைப்பாறிட்டு செய்யிறேன் என்று மறுமொழி கூறினாள்.
என்னடி நீ ஊர் ஒலகத்துல செய்யாத வேலையச் செய்துட்டே. ஒரே அலுப்பா இருக்குதோ?
வீட்டைக் கூட்டிக் கழுவிவிடுறது
ஒரு பெரிய வேலையா? நானும்தான் காலையிலிருந்து வேலை செய்யிறேன். களைச்சா போயிட்டேன்? நீ என்னடான்னா ஒன்னு ரெண்டு
வேலையச் செய்ததும் களைச்சுப் போறியே? என்று கடினமொழி கூறினாள் மைமூனா.
அதைக் கேட்டு யோசித்துக்கொண்டிருந்த ஆயிஷாவைப் பார்த்து, என்னடி ஆழ்ந்த யோசனை?
எதிர்வீட்டு ஃபாத்திமாவைப்
பாரு. அவளுக்கும் ஒன்னோட ஒத்த வயசுதான். என்னென்ன
வேலை பாக்குறா. காலைல எழுந்ததுலேர்ந்து ராத்திரி படுக்குற வரைக்கும் வேலை பாத்துக்கிட்டுதான்
இருக்கா. அவ என்னைக்காவது இப்படிக் களைப்பா உக்காந்து இருப்பாளா?-மாமி கேட்டாள்.
இச்செய்தி ஆயிஷாவுக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. அதை ஆயிஷாவே நேரடியாகப் பார்த்திருக்கிறாள்.
ஃபாத்திமா தொடர்ந்து வேலை செய்துகொண்டுதான் இருக்கிறாள். ஆனால் ஒரு நாள்கூட களைப்பாக
உக்கார்ந்ததில்லை. இதைப் பற்றி ஆயிஷாவிடமே கேட்டுவிட வேண்டும் என்று முடிவுசெய்துகொண்டாள்.
மாலைப் பொழுதில் அஸ்ர் தொழுதுவிட்டு, எதிர்வீட்டு ஃபாத்திமாவைச் சந்திக்கச்
சென்றாள் ஆயிஷா. வா, ஆயிஷா! தொழுதுட்டியா? இன்னைக்கி என்ன சோறு? என்ன சால்னா? என்று அடுக்கடுக்காய் கேள்விகளை
அள்ளி வீசினாள் ஃபாத்திமா.
எல்லாவற்றிற்கும் பதில் சொல்லிவிட்டு, ஏக்கா! நான் ஒங்களிடம் ஒன்னு கேக்கலாமா?
என்று பூடகமாகத் தொடங்கினாள்.
ஒன்னு என்ன, ஒன்பது கேளு. நான் பதில் சொல்றேன் என்று தாராளமாகக் கேட்க அனுமதித்தாள் ஃபாத்திமா.
நாங்களெல்லாம் ஒன்னு, ரெண்டு வேலையச் செய்தாலே களைப்படஞ்சி போறோம். ஆனா,
நீங்க மட்டும் நாள்
பூரா வேலை செய்தாலும் களைப்பே அடையறதில்லையே? அது எப்படிக்கா ஒங்களால மட்டும் முடியுது?
அதன் இரகசியம் என்னன்னு
சொன்னா நானும் அதைத் தெரிஞ்சுக்குவேன் இல்லையா? என்று பட படவெனக் கேட்டாள்.
ஆயிஷா, ஒனக்கு விசயமே தெரியாதா? ஒரு தடவை ஃபாத்திமா நாயகி தம்மோட தந்தையான முஹம்மது நபியிடம்
போனாங்க. அப்ப, நபிகளாரிடம் போரில் கிடைத்த அடிமைகள் இருந்தாங்க. அதுல ஒரு அடிமைய வாங்கிட்டு
வரலாம்னு போனாங்க. அந்த நேரம் பாத்து வீட்ல முஹம்மது நபி இல்லை. வந்த விசயத்த ஆயிஷா
நாயகியிடம் சொல்லிட்டு, வீட்டுக்குத் திரும்பி வந்துட்டாங்க.
நபிகளார் வீட்டுக்கு வந்தபோது, அவங்களோட மகள் ஃபாத்திமா வந்துட்டுப் போன விசயத்தச்
சொன்னாங்க. உடனே ரசூலுல்லாஹ் தம்மோட மகள் வீட்டுக்குப் போனாங்க. அந்த நேரம் பாத்து,
ஃபாத்திமா நாயகியும்
அலீயாரும் தூங்குறதுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தாங்க. அந்த நேரத்துல அவங்க ரெண்டு
பேருக்கும் இடையிலே நபிகள் நாயகம் உக்காந்துகிட்டாங்க.
மகளே! நான் ஒரு விசயத்தச் சொல்றேன். அதை நீ ஓதிக்கொண்டால் அது ஓர் அடிமையைவிடச்
சிறந்தது என்று சொன்னாங்க. அது என்ன அல்லாஹ்வின்
தூதரே! என்று ஆவலாக் கேட்டாங்க. நீ தூங்குமுன் 33 தடவை சுப்ஹானல்லாஹ், 33 தடவை அல்ஹம்து லில்லாஹ், 34 தடவை அல்லாஹு அக்பர் ஓதிக்கொள் என்று
சொன்னாங்க.
அன்று முதல் அந்த திக்ரை ஃபாத்திமா நாயகி தவறாம ஓதி வந்தாங்க. அதைத்தான் நானும்
கடைப்பிடிக்கிறேன்.
அது மட்டுமில்ல ஆயிஷா, நான் வேலை செய்யும் போதே சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ்,
அல்லாஹு அக்பர் போன்ற
திக்ருகளை செய்துகொண்டே என்னோட வேலைகளச் செய்யறதால எனக்கு எந்த அலுப்பும் தெரியிறதில்ல.
களைப்பும் ஏற்படுறதில்ல என்று சொல்லி முடித்தாள் ஃபாத்திமா.
அட, ரொம்ப
எளிதாவும் சுருக்கமாவும் இருக்கே. இத ஓத எனக்கென்ன சிரமம்? இனி நானும் உங்க வழிய, இல்ல இல்ல, அன்னை ஃபாத்திமா நாயகி வழியக்
கடைப்புடிக்கிறேன் என்று உற்சாகத்துடன் புறப்பட்டாள் ஆயிஷா.
லேபிள்கள்:
அல்லாஹு அக்பர்,
ஆயிஷா,
உற்சாகம்
புதன், 28 மார்ச், 2012
நிழற்படத்தின் சட்டமென்ன?
அரபி மூலம்: ரவாயிஉல் பயான்- முஹம்மது அலீ அஸ்ஸாபூனீ (ரஹ்)
தமிழாக்கம்: நூ.அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில்.
நிழற்படம் கையால் வரையப்படுகின்ற ஓவியத்தின் (ஹராம் என்ற) சட்ட வரையறைக்குள் வராது. கையால் வரையப்படுகின்ற ஓவியம் ஹராம் என்று நபிமொழிகளில் காணப்படுகின்ற நேரடியான மூல ஆதாரம் நிழற்படத்தைத் தடைசெய்வதைக் குறிக்காது. ஏனென்றால் இதில் அல்லாஹ்வின் படைப்புக்கு ஒப்பாக்குதல் என்ற நிலை இல்லை. இதனுடைய சட்டம் ஆடையில் பதியவைத்து வரைகின்ற ஓவியத்தின் சட்டத்தைப் போன்றதாகும் என்று பிற்கால மார்க்க அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர்.
அஷ்ஷைக் அஸ்ஸாயிஸ் (ரஹ்) கூறியுள்ளதாவது: நிழற்படத்தின் சட்டமென்ன என்பதைத் தெரிந்துகொள்ள நீ விரும்பலாம். அதன் சட்டம் ஆடையில் பதித்து வரையப்படுகின்ற சட்டத்தைப் போன்றதாகும். அதற்கு விதிவிலக்கு உண்டு என்பதை நான் அறிவேன். அது ஓர் ஓவியம் இல்லை. மாறாக, அது உருவத்தைப் பதியவைப்பதாகும். ஒரு கண்ணாடியில் தெரிகின்ற ஓர் உருவத்தைப் போன்றதுதான் இதுவும் என்று கூறலாம். கண்ணாடியில் தெரிகின்ற ஓர் உருவத்தைப் பார்த்து, யாரோ ஒருவன் வரைந்துள்ள ஓவியம்தான் அது என்று கூறமுடியாது. நிழற்படக் கருவி பிடித்துத் தருகின்ற உருவப்படமும் கண்ணாடியில் தெரிகின்ற பிம்பத்தைப் போன்றதுதான். ஆக, நிழற்படக் கருவியிலுள்ள கண்ணாடியோ அதில் விழுகின்ற பிம்பத்தை (நிழலை)ப் பிடித்துத் தக்கவைத்துக்கொள்கிறது. ஆனால் முகம் பார்க்கும் கண்ணாடியோ அதன் பிம்பத்தை (நிழலை)த் தக்கவைத்துக்கொள்வதில்லை. இதுதான் இரண்டுக்குமிடையே உள்ள வித்தியாசமாகும். பின்னர் அந்தப் பிம்பம் குறிப்பிட்ட ஒரு வேதிப்பொருளில் கழுவப்பட்டு, அதி-ருந்து பலப்பல உருவங்கள் உருவாக்கப்படுகின்றன. உண்மையில் இது கையால் வரையப்படுகின்ற ஓவியத்திற்கு ஒப்பானதில்லை. இருக்கின்ற உருவங்களை ஒருமுகப்படுத்திக் காட்டுகின்ற ஒரு வடிவமாகும். அந்தப் பிம்பம் நீங்காமல் இருக்குமாறு தேக்கிவைத்துள்ளது. அவ்வளவுதான்.
அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர்: எல்லாப் பொருள்களுக்கும் உருவங்கள் (பிம்பங்கள்) இருக்கவே செய்கின்றன. எனினும் அவை சூரிய வெளிச்சத்தில் இடப்பெயர்ச்சி செய்யத்தக்கவையாக உள்ளன. அந்த இடப்பெயர்ச்சியை தடுக்கக்கூடிய ஏதேனும் தடை இல்லாத வரை அவை தங்குதடையின்றி இடம்பெயர்கின்றன. அந்தத் தடைதான் அந்த வேதிப்பொருள். ஆடையில் பதித்து வரையப்படுவதைப்போல் இதற்கு ஷரீஅத்தில் இடம் இருக்கும்வரை இது ஹராம் என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. குறிப்பாகத் தற்காலத்தில் மக்களுக்கு இதன் தேவை மிகுதியாக உள்ளது.
முஹம்மது அலீ அஸ்ஸாபூனீ (ரஹ்) கூறுகிறார்: நிழற்படம் ஓவியத்தின் ஒரு வகை என்பதற்கு அப்பாற்பட்டதில்லை. நிழற்படக் கருவியிலிருந்து எடுக்கப்படுகின்ற படத்துக்கு நிழற்படம் என்றும் இதைத் தொழிலாகச் செய்பவருக்கு வழக்கத்தில் நிழற்படம் எடுப்பவர் (முஸவ்விர்) என்றும் கூறப்படுகிறது. இதைத் தெளிவான ஆதாரத்தின் மூலம் சொல்ல முடியாவிட்டாலும் அவர் முஸவ்விர்தான். எனினும் அவர் அதைக் கையால் வரையவில்லை. அல்லாஹ்வின் படைப்புக்கு ஒப்பாக்குகின்ற எதுவும் அதில் இல்லை. எனினும் அது ஓவியத்தின் ஒரு வகை என்பதற்கு அப்பாற்பட்டதில்லை. ஆகவே அதைத் தேவைக்கேற்ப குறைத்துக்கொள்வது அவசியமாகும். அதில் ஒரு வகையில் நன்மை இருந்தாலும் மற்றொரு புறம் அதில் மிகப்பெரும் கேடும் உள்ளது என்பதை மறந்துவிடலாகாது. இன்றைய பத்திரிகைகளே அதற்கான ஆதாரமாகும்.
லேபிள்கள்:
ஓவியம்,
நிழற்படம்,
வேதிப்பொருள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










