திங்கள், 17 அக்டோபர், 2016

மறதி ஒரு வெகுமதி!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

மறதி என்பது மனித இயல்பாகும். அதனால்தான், "மக்களுள் முதலாமவர் மறதியில் முதல்வர்'' என்று ஓர் அரபுப் பழமொழி உண்டு. முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள்தாம் அல்லாஹ்வின்  கட்டளையை மறந்து, தடை செய்யப்பட்ட மரத்திலிருந்து உண்டுவிட்டார். அதனால்தான் அவர் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது வரலாறு. ஆக, மறதி என்பது முதல் மனிதரிடமிருந்தே தொடங்குகிறது என்பதை அறியும்போது மறதி மனித இயல்புதான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

மறதி மனித இயல்பாக இருப்பதால்தான் அவ்வப்போது மனிதன் மறந்துவிடுகின்றான். அதன் காரணமாக அவன் அல்லாஹ்விடம் தண்டனை பெற்றுவிடக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். எனவே அது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: "திண்ணமாக அல்லாஹ் என்னுடைய சமுதாய மக்கள் தவறுதலாகச் செய்துவிடுதல், மறதியாகச் செய்துவிடுதல், நிர்ப்பந்திக்கப்பட்டுச் செய்தல் ஆகியவற்றை எனக்காக மன்னித்துவிட்டான்.'' (நூல்: இப்னுமாஜா: 2033)

மேலும் நபி (ஸல்) அவர்கள், "உங்களுள் ஒருவர் உணவுண்டால் பிஸ்மில்லாஹ் சொல்லட்டும்தொடக்கத்தில் (பிஸ்மில்லாஹ் சொல்ல) மறந்துவிட்டால், பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வஆகிரிஹி என்று சொல்லட்டும்''  (பொருள்: முதலிலும் கடைசியிலும் அல்லாஹ்வின் பெயரால் உண்கிறேன்) எனக் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 1781)

ஒரு துஆவைக் கற்றுத் தருகின்றபோதே, அதைச் சொல்ல மறந்துவிட்டால் இவ்வாறு சொல்லட்டும் எனச் சொல்லித் தருகின்றார்கள் என்றால் மறதி மனித இயல்பு என்பதை எந்த அளவிற்கு உணர்ந்துள்ளார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
ஒரு தடவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். அது ஓர் அந்தி நேரத் தொழுகை. அது நான்கு ரக்அத்களைக் கொண்டது. ஆனால் மறதியால் இரண்டு ரக்அத்கள் மட்டும் தொழுது, தொழுகையை முடித்துவிட்டார்கள். அதன்பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் அது குறித்துப் பேச எல்லோருக்கும் தயக்கம். அப்போது துல்யதைன் எனும் நபித்தோழர், "அல்லாஹ்வின் தூதரே! தொழுகை(யின் ரக்அத்கள்) குறைக்கப்பட்டுவிட்டதா? அல்லது தாங்கள் மறந்துவிட்டீர்களா?'' என்று வினவினார். "இவர் சொல்வது உண்மைதானா?'' என்று சூழ இருந்த நபித்தோழர்களிடம் கேட்டார்கள். "ஆம்! இவர் சொல்வது உண்மைதான். தாங்கள் இரண்டு ரக்அத்கள்தாம் தொழுவித்தீர்கள்'' என்று மறுமொழி பகன்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானும் உங்களைப் போன்ற மனிதர்தாம்.  நீங்கள் மறப்பதைப் போலவே நானும் மறந்துவிடுகிறேன். எனவே நான் (எதையேனும்) மறந்துவிட்டால் எனக்கு நீங்கள் நினைவூட்டுங்கள்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 401)

 இந்நபிமொழியில், "நானும் உங்களைப் போன்ற மனிதர்தாம்'' என்று கூறி,  "நீங்கள் மறப்பதைப் போலவே நானும் மறந்துவிடுகிறேன்'' என்று கூறியுள்ளதன்மூலம் மறதி மனித இயல்பு என்பதை மெய்ப்பிக்கின்றார்கள். மறதி என்பது சாதாரண மனிதர்கள் முதல் இறைத்தூதர்கள் வரை அனைவருக்கும் சமமானது என்பதை உணர முடிகிறது. இருப்பினும் இறைத்தூதர்கள் நம்மைப்போன்ற மறதியாளர்கள் கிடையாது என்பதையும் நாம் மனதில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்.
இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களுக்கும் மறதி ஏற்பட்டுள்ளது என்பதைத் திருக்குர்ஆன் வாயிலாக அறிகிறோம். களிர் (அலை) அவர்களோடு மூஸா (அலை) அவர்கள் கடற்பயணம் மேற்கொண்டபோது, தாங்கள் என்னிடம் எது குறித்தும் வினா எழுப்பக்கூடாது; பொறுமையாக இருக்க வேண்டுமென நிபந்தனை விதித்தார்கள். அந்நிபந்தனையை மறந்துவிட்ட மூஸா (அலை) அவர்கள், களிர் (அலை) அவர்கள் தாம் பயணம் செய்து சென்றுகொண்டிருந்த மரக்கலத்தைத் துவாரமிட்டதைக் கண்டபோது,  "தாங்கள் ஏன் இந்த மரக்கலத்தில் துவாரமிடுகின்றீர்?'' என்று வினவினார்கள். அது குறித்துத் திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:

அவ்விருவரும் (கடலோரமாக) நடந்தனர். இறுதியில் அவ்விருவரும் மரக்கலம் ஒன்றில் ஏறியதும் அவர் அதில் துளையிட்டார். மூஸா, "இதிலுள்ளோரை மூழ்கடிக்கவா நீங்கள் துளையிட்டீர்கள்? நிச்சயமாக நீங்கள் மோசமான செயலைச் செய்துவிட்டீர்கள்'' என்று கூறினார். அதற்கு, "என்னுடன் பொறுமையாக இருக்க உங்களால் ஒருபோதும் இயலாது என்று நான் (முன்பே) சொல்லவில்லையா?'' என அவர் (களிர்) கேட்டார். அப்போது அவர் (மூஸா), "நான் மறந்துவிட்டதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர். என் விஷயத்தில் என்னைச் சிரமத்திற்குள்ளாக்கிவிடாதீர்'' என்று கூறினார்.  (18: 71-73)

மறதி மனித இயல்பாக இருந்தாலும் சில வேளைகளில் ஷைத்தான் மனிதனுக்கு மறதியை ஏற்படுத்துகின்றான். அவன் ஒரு மனித விரோதி என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் அவ்வப்போது அவன் மனிதனுக்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டே இருப்பான்.  நல்லறங்களைச் செய்ய முனையும் போது அதில் மறதியை ஏற்படுத்திக் குழப்பத்தை உண்டுபண்ண முனைந்து செயல்படுவான். அது குறித்து நபி (ஸல்) அவர்கள் நமக்கு முன்னெச்சரிக்கை செய்துள்ளார்கள்.

"உங்களுள் யாரேனும் தொழுதுகொண்டிருக்கும்போது அவரிடம் ஷைத்தான் வருவான். அவர் எத்தனை ரக்அத்கள்  தொழுதார் என்பதை அறியாத அளவுக்கு (மறதியை ஏற்படுத்தி)க் குழப்பத்தை உண்டாக்குவான். எனவே இந்த நிலையை உங்களுள் யாரேனும் அடைந்தால், (தொழுகையின் இறுதியில்) அமர்ந்தவாறு அவர் இரண்டு சஜ்தாக்கள் (சலாம் கொடுக்குமுன்) செய்துகொள்ளட்டும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 363)

மற்றொரு வரலாற்றுச் சான்றைக் காணலாம். மூஸா (அலை) அவர்கள் இறைநேசர் களிர் (அலை) அவர்களைச் சந்திக்கச் சென்றபோது தம்முடன் ஓர் இளம் பணியாளரையும் அழைத்துச் சென்றார்கள். அவர் பெயர் யூஷஉ பின் நூன் ஆகும். அல்லாஹ்வின் கட்டளைப்படி, உப்புத் தோய்க்கப்பட்ட மீனைச் சுமந்து வருமாறு தம் பணியாளரிடம் கேட்டுக்கொள்ள, அதை அவர் சுமந்து சென்றார். அந்த மீன் உயிர்பெற்று, கடலுக்குள் நழுவிச் செல்லும் இடமே களிர் (அலை) அவர்களைச் சந்திக்கும் இடம் என்று மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் அடையாளம் சொல்லியிருந்தான். அந்தத் தகவலை மூஸா (அலை) அவர்கள் தம் பணியாளரிடம் சொல்லி, தமக்கு அதைத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்கள். பின்னர் இருவரும் அவரைச் சந்திக்கப் புறப்பட்டுச் சென்றார்கள். கடற்கரை வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ஓரிடத்தில் ஓய்வெடுத்தார்கள். அப்போது அந்த மீன் உயிர்பெற்று, கடலுக்குள் சென்றுவிட்டது. சட்டென விழித்த அந்தப் பணியாளர் அந்த மீன் உயிர்பெற்றுச் சென்றதைப் பார்த்துவிட்டார். ஆனால் மூஸா (அலை) அவர்கள் தம் உறக்கத்திலிருந்து எழுந்ததும்  அந்தத் தகவலை அவர் தெரிவிக்க மறந்துவிட்டார். அது குறித்துத் திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

"பார்த்தீர்களா? நாம் அந்தப் பாறையில் ஒதுங்கியபோது அந்த மீனை நான் நிச்சயமாக மறந்துவிட்டேன். அதைப் பற்றி (உங்களிடம்) சொல்லவிடாமல் ஷைத்தான்தான் என்னை மறக்கச் செய்துவிட்டான். அது கடலில் விந்தையான முறையில் தனது பாதையை அமைத்துக்கொண்டது'' என்று கூறினார். (18: 63) ஒரு நல்வினையைச் செய்ய மனிதன் முயலும்போது மனித விரோதியான ஷைத்தான் அதை மறக்கச் செய்கிறான் என்பதை இந்நிகழ்வின் மூலம் விளங்கிக்கொள்ள முடிகிறது.
மறதி மனித இயல்பாக இருந்தாலும் நாம் மறக்காமல் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய எத்தனையோ விஷயங்கள் உள்ளன. முதலில் நம்மையெல்லாம் படைத்த இறைவனை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது; மறுமை நாள், மரணம், நம் அன்றாடக் கடமைகள் முதலியவற்றை மறக்கவே கூடாது. இன்று கடமையை மறந்த பலர் நம் அன்றாட வாழ்வில் வலம் வருகின்றார்கள். ஐவேளைத் தொழுகை ஒவ்வொரு முஸ்லிம் ஆண்-பெண்மீதும் கடமை; அதைப் பெரும்பாலோர் அலட்சியமாகக் கருதி விட்டுவிடுவது தொடர்ந்துகொண்டே உள்ளது. கணவன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்துவிடுகின்றான்; மனைவி தன் கணவனுக்குச் செய்ய வேண்டிய  கடமைகளை மறந்துவிடுகின்றாள்; முதலாளி-தொழிலாளி, தாய்-தனயன், தந்தை-மகன், மகள்-தந்தை, பெரியவர்-சிறியவர் இப்படி ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து, பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கின்றனர். இப்பழக்கத்தை முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். கடமையை நிறைவேற்றுதல் குறித்து நாம் மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் கடமை தவறாமல் செயலாற்ற முடியும்.

நன்றி மறப்பது நன்றன்று-நன்றல்லது
அன்றே மறப்பது நன்று- என்று வள்ளுவர் கூறியுள்ளார்.

மறதி மனித இயல்பாக இருந்தாலும் நாம் மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது பிறர் நமக்குச் செய்த உதவியைத்தான். அதை நாம் ஒருபோதும் மறவாமல் அவர் செய்த அந்த உதவிக்குக் கைம்மாறு செய்வது நம் கடமையாகும். எனவே பிறர் நமக்குச் செய்த உதவியை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய அதே நேரத்தில், பிறர் நமக்குச் செய்த தீவினைகளையோ துன்பங்களையோ இடர்களையோ நாம் அவ்வப்போது மறந்துவிட வேண்டும். அதுதான் நம் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உகந்ததாகும். 

மற்றொரு கோணத்தில் பார்த்தால், சில வகை மறதி அல்லாஹ்வின் அருட்கொடையும் வெகுமதியும் ஆகும் என்றே சொல்லலாம். ஆம்!  நாம் பார்க்கின்ற, செய்கின்ற, சொல்கின்ற எத்தனையோ விஷயங்களை அவ்வப்போது மறந்துவிடுகின்றோம். அந்த மறதி இயல்பாகவே நமக்குள்  நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அவற்றையெல்லாம் அவ்வப்போது மறந்துவிடும் இயல்புநிலையை மட்டும் இறைவன் வைக்காதிருந்தால் நாம் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருப்போம்.  எனவே இது இறைவனின் வெகுமதி என்றே சொல்ல வேண்டும்.
ஒரு கணவன் செய்கின்ற சின்னச் சின்ன தவறுகளை மனைவி மறந்துவிடுகின்றாள்; அவன் தன்னைத் திட்டுவதையும் அடிப்பதையும் தொல்லை கொடுப்பதையும் அவ்வப்போது மறந்துவிடுகின்றாள். அதனால்தான் காலையில் சண்டையிட்டு, திட்டிவிட்டுச் சென்ற கணவனை மாலையில் மகிழ்ச்சியோடும் இன்முகத்தோடும் வரவேற்கிறாள். அதுபோலவே மனைவி அவ்வப்போது  செய்துவிடுகின்ற சின்னச்சின்ன தவறுகளையும் குறைபாடுகளையும் கணவன் மன்னித்து, மறந்துவிடுகின்றான். அதனால்தான் காலையில் மனைவி செய்த ஏதோ ஒரு தவறுக்காக அவளைத் திட்டிவிட்டுச் சென்றவன் இரவில் இல்லம் திரும்பும்போது அவளுக்குத் தேவையானதை வாங்கிவந்து அன்போடு கொடுக்கின்றான்.

இப்படித் தம்பதியர் ஒருவருக்கொருவர் மறந்துவிடுவதால்தான் இல்லறமே நல்லறமாய் நடைபெறுகிறது; அதுபோன்றே ஒரு தொழிலாளி செய்யும் தவற்றை முதலாளி மறந்துவிடுவதால்தான் அந்தத் தொழிலாளி தொடர்ந்து அங்கேயே பணியாற்ற முடிகிறது. சிறியவர்கள் செய்யும் தவறுகளைப் பெரியவர்கள் மறந்துவிடுவதால்தான் சமூக வாழ்க்கை சீராக நடைபெறுகிறது. ஆக மறதி என்பது ஒரு கோணத்தில் இறைவனின் வெகுமதி என்றே சொல்லலாம்.

"எங்கள் இறைவா! நாங்கள் (எங்கள் கடமைகளைச் செய்ய) மறந்துவிட்டாலும் அல்லது அதில் தவறிழைத்துவிட்டாலும் அதற்காக நீ எங்களை(க் குற்றம்) பிடித்துவிடாதே!'' (2: 286) என்ற பிரார்த்தனையை நாம் நாள்தோறும் மறக்காமல் செய்துவருவோம். 






=====================                                                                   

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

ஞாயிறு, 24 ஜூலை, 2016

பொறுமையின் பலன் (சிறுகதை)



இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறதா?


மௌலவி முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.          (மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர்)

இமாம், மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார், மணலி, சென்னை-68

          இஸ்லாம் பெண்களை ஒடுக்குகிறது; அடிமைப்படுத்துகிறது என்று பல்வேறு சமுதாயத்தினர் கூறுவதற்குக் காரணம் இஸ்லாமியப் பெண்கள் அணிகின்ற புர்காதான். இஸ்லாம் பெண்களைப் பர்தாவுக்குள் அடைத்து வைக்கிறது; சிறைப்படுத்துகிறது என்று வெற்று முழக்கமிடுகின்றார்கள். அவர்கள் வெளியிலிருந்து பார்ப்பதால் உள்ளுக்குள் இஸ்லாமியப் பெண்களுக்கு உள்ள உரிமைகளும் சலுகைகளும் குறித்து அவர்களுக்குத் தெரியவில்லை. அது குறித்து ஓர் இஸ்லாமியப் பெண்ணிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முன்வந்தால் அவர்கள் இப்படிப் பேச மாட்டார்கள். உலகின் முதலாவதாக விமானம் செலுத்திய பெண் விமானியும் கின்னஸ் உலகச் சாதனையாளருமான பாகிஸ்தானின் ஜஹனாஸ் லஹோரி பர்தாவுக்குள் பாதுகாப்பாக இருக்கின்ற ஒரு முஸ்லிம் பெண்தான் என்பதை பெண்ணியவாதிகள் உணர வேண்டும். இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறதா என்று இப்போது அவர்கள் சொல்லட்டும்.

          சகோதரச் சமுதாயத்தில் கணவன் இறந்துவிட்டால் மறுமணம் உண்டா? வாழ்க்கைப்பட்ட கணவன் பிடிக்கவில்லையெனில் உடனடியாக அவனிடமிருந்து விடுதலை பெற முடியுமா? சொத்துரிமை முழுமையாக உண்டா? திருமணத்தில் விருப்ப உரிமை உண்டா? கைம்பெண்கள் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் முன்னிலை வகிக்க முடியுமா? இவையெல்லாம் இஸ்லாமியப் பெண்களுக்கு உண்டு; முடியும். இவை தவிர பிறப்புரிமை, பேச்சுரிமை, ஆலோசனை சொல்லும் உரிமை, வாக்குரிமை உள்ளிட்டவை உண்டு.

          கணவன் இறந்துவிட்டால் அவனுடைய சொத்தில் பங்குண்டு; அதே நேரத்தில் மறுமணமும் செய்துகொள்ளலாம்; மணமுடிக்கப்பட்ட கணவன் பிடிக்கவில்லையானால், உரிய காரணங்கள் இருந்தால் அவள் அவனிடமிருந்து (குலஉ) விடுதலை பெற்று, மனதிற்குப் பிடித்த மற்றொருவனை மணந்துகொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது; சொத்துரிமை முழுமையாக உண்டு; அதாவது கணவன் இறந்துவிட்டால், தந்தை இறந்துவிட்டால், தாய் இறந்துவிட்டால் அவளுக்குச் சொத்தில் பங்குண்டு; திருமணத்தில் தனக்குப் பிடித்த மாப்பிள்ளையைத் தேர்வு செய்யலாம்; தனக்கு விருப்பமில்லாத ஒருவரைத் தன் தந்தை மணமுடித்து வைத்துவிட்டால் அதை இரத்துச் செய்யவும் அவளுக்கு உரிமை உண்டு (புகாரீ: 5138); ஒரு கைம்பெண் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் எவ்விதத் தங்கு தடையின்றி முன்னிலை வகிக்கலாம்; மற்ற பெண்களைப்போல் கலந்துகொள்ளலாம். இப்படி எல்லாவித உரிமைகளையும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது.

          மேலும் ஒரு பெண் ஆண்களைப்போல் உயர்கல்வி வரை கற்க இஸ்லாம் அனுமதிக்கிறது. கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமைஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: இப்னுமாஜா) இந்த நபிமொழியின் அடிப்படையில் கல்வியைக் கற்பதில் எவ்விதத் தடையுமில்லை. அதேநேரத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறு கட்டளையிடுகின்றது.

          ஆண்-பெண் உடலமைப்பு வெவ்வேறு விதத்தில் படைக்கப்பட்டுள்ளது. ஆணைவிடப் பெண்ணின் உடலமைப்பு பார்த்த பார்வையில் கவரும் விதத்தில் அல்லாஹ் படைத்துள்ளான். எனவே படைத்த இறைவனே பெண்களை  ஆடையிட்டு மறைத்துக்கொள்ளுமாறும் அந்நிய ஆண்களின் பார்வைக்குப் படாதவாறு திரையிட்டு மறைத்துக்கொள்ளுமாறும் கட்டளையிடுகின்றான். எனவே அவர்கள் அந்நிய ஆண்களின் பார்வையிலிருந்து தங்கள் அழகை மறைத்துக்கொள்ளவும் தங்கள் அழகைத் தம் கணவன் மட்டுமே காண வேண்டும் என்று  விரும்புவது எப்படி அடிமைத்தனமாகும்?

          இன்றைய ஆடைக்கலாச்சாரம்தானே மிகுதியான வன்புணர்வுக்குக் காரணம்? யாராவது மறுக்க முடியுமா? குட்டை ஆடைகளும் இறுக்கமான ஆடைகளும் பெண்களின் அந்தரங்க உறுப்புகளின் வடிவங்களை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளன. அதுவும் மெல்லிய ஆடைகள் உள்ளே இருப்பதைப் படம் பிடித்துக் காட்டுவதைப்போல் உள்ளன. எனவேதான் உணர்ச்சியின் தூண்டுதலுக்கு ஆட்பட்ட ஆடவர் சிலர் பெண்களின் கற்புகளைச் சூறையாடுகின்றனர். பெண்களை இந்த அளவிற்குப் போகப் பொருளாகக் காட்டுவதுதான் சுதந்திரமா?

          எல்லாப் பொருள்களின் விளம்பரங்களுக்கும் பெண்கள்தாம் காட்சி தருகின்றார்கள். ஆண்கள் பயன்படுத்துகின்ற பொருள்களுக்கும் பெண்கள்தாம் காட்சி தருகின்றார்கள். ஆண்கள் விளையாடுகின்றபோது நன்றாக மறைக்கின்ற ஆடைகளையும் பெண்கள் விளையாடுகின்றபோது குட்டையான ஆடைகளையும் அணியச் செய்வது ஏன்? பெண்களின் அழகைக் காட்டி ஆண்களைக் கவர்வதற்குத்தானே? அதன்மூலம் சம்பாதிப்பதற்குத்தானே? இப்படிப்பட்ட விளையாட்டுகள் தேவையா? அதேநேரத்தில் ஈரான் போன்ற நாடுகளில் முஸ்லிம் பெண்கள் தம் உடலை முற்றிலுமாக மறைக்கின்ற விதத்தில் ஆடைகள் அணிந்துகொண்டு விளையாடுகின்றார்கள். போட்டியில் வெற்றிபெறுகின்றார்கள். அது எப்படி முடிகிறது?

          “உங்கள் இஸ்லாமிய மார்க்கத்தில், மனைவியைப் பிடிக்கவில்லையானால் தலாக், தலாக், தலாக் என்று மூன்று தடவை கூறி மணவிலக்குச் செய்துவிடுகின்றனர். இதனால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்என்ற வாதம் பரவலாக உள்ளது. இதில் அடங்கியுள்ள உண்மை அவர்களுக்குத் தெரியவில்லை. ஒரு பெண் குடும்ப வாழ்க்கையில் எல்லை தாண்டுகின்றபோதும் வரம்புமீறுகின்றபோதும்தான் சினத்தின் உச்சத்தில் ஓர் ஆணின் வாயிலிருந்து அவ்வார்த்தை வெளிப்படுகின்றது. 

விளையாட்டுக்காகவோ வேண்டுமென்றோ யாரும் அவ்வாறு செய்வதில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்றால் அவளை முறைப்படி மணவிலக்குச் செய்துவிட்டு மற்றொருத்தியை மணந்துகொள்ள இஸ்லாம் காட்டுகின்ற எளிய வழிமுறைதான் தலாக் ஆகும்.  இது இருபாலருக்கும் நன்மையைத்தான் நல்குகிறது.

          இந்த எளிய வழிமுறை ஏனைய மதங்களில் இல்லாததால்தான் மருமகளைத் தீயிட்டுக் கொளுத்துகின்றார்கள்; ஸ்டவ் வெடிக்கின்றது; கேஸ் அடுப்பு பற்றிக்கொள்கின்றது; கொலை செய்யப்படுகின்றாள்; அல்லது தற்கொலை  செய்துகொள்ளுமாறு தூண்டப்படுகின்றாள். இவற்றைத் தவிர்ப்பதற்காகத்தான் இஸ்லாம் ஓர் எளிய முறையிலான தலாக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெண்களின் உயிரைப் பாதுகாக்கிறது.

          “இஸ்லாத்தில் ஆண்கள் நான்கு பெண்களை மணந்துகொண்டு பெண்களுக்குத் துரோகமிழைக்கின்றார்கள்; அவர்களை அடிமைத்தனமாக நடத்துகின்றார்கள்என்ற வாதமும் முன்வைக்கப்படுகின்றது. ஒருவனுக்கு ஒருத்திஎன்பது மாற்றுமதக் கலாச்சாரம்; இஸ்லாமிய மார்க்கத்தில் ஒருத்திக்கு ஒருவன்என்பதே கோட்பாடு; அதேநேரத்தில் ஆணைப் பொறுத்தமட்டில் நான்கு வரை மணந்துகொள்ள உரிமம் வழங்கப்பட்டுள்ளதே தவிர கட்டாயம் இல்லை; எத்தனை முஸ்லிம் ஆண்கள் நான்கு பெண்களை மணந்துகொண்டுள்ளனர்? அதேநேரத்தில் சகோதரச் சமுதாயத்தில் உள்ள ஒருவர் ஒரு பெண்ணையே மணந்துகொள்ள வேண்டும்; திருமணமின்றிச் சின்னவீடுஎன்று எத்தனை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்; தவறில்லை. இதுதான் உண்மையில் பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகும். இஸ்லாத்தைப் பொறுத்தமட்டில், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணமுடிக்க வேண்டுமானால் அதற்குக் கடுமையான நிபந்தனைகள் இருக்கின்றன, பொருளாதார ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆணுக்கு ஆற்றல் வேண்டும்; உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை வாழ்நாள் முழுவதும் கொடுக்க வேண்டும். அத்தகையவர்தாம் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்துகொள்ளலாம். இல்லையேல் முடியாது.

          மேலும் இந்த அனுமதியை யார் கொடுத்தார்? படைத்த இறைவன் கொடுத்தான். மனிதனுக்கு என்னென்ன, எப்படியெப்படிக் கொடுக்க வேண்டும் என்பது படைத்த இறைவனுக்கு நன்றாகத் தெரியும். ஏனெனில் அவன்தான் ஆண்களின் ஹார்மோன்களையும் பெண்களின் ஹார்மோன்களையும் மாற்றியமைத்தான். பெண்களைவிட ஆண்களுடைய ஹார்மோன்களின் எண்ணிக்கை அதிகம். எனவே தாம்பத்திய உறவில் பெண்களைவிட ஆண்களுக்கு அதிகமான நாட்டமும் தேவையும் ஏற்படும். ஆகவேதான் படைத்த இறைவன் ஆணுக்கு நான்கு மனைவியர் வரை அனுமதி கொடுத்துள்ளான். இது குறித்த உண்மையை மருத்துவர் ஷாலினி தமது, ‘அர்த்தமுள்ள அந்தரங்கம்எனும் நூலில் கூறியுள்ளார். ஆதலால் ஆண்களின் தேவையைக் கருதி அவன் வழங்கியுள்ள அனுமதியைத் தடுக்க யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுவோரே இவ்வனுமதியை மறுக்கின்றனர்; கொச்சைப்படுத்துகின்றனர். இது அவர்களின் அறியாமையைத்தான் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றது.

          இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்ற வாதம் முற்றிலும் பொய்யானது. உண்மைக்கு முரணானது.  இஸ்லாமியப் பெண்கள் பல்வேறு வழிகளில் முன்னேறி வருவதை இதற்குச் சான்றாகக் காட்டலாம். ஓர் இஸ்லாமியச் சமுதாயத்தைச் சார்ந்த ஃபாத்திமா பீவி தமிழ்நாட்டின் ஆளுநராகப் பதவி வகித்துள்ளார்; ஹைதராபாத்தைச் சார்ந்த சய்யிதா சல்மா ஃபாத்திமா, பெங்களூருவைச் சார்ந்த சாரா ஹமீது அஹ்மத் ஆகியோர் விமானத்தைச் செலுத்துகிறார்கள்; சானியா மிர்ஸா இந்தியாவுக்காக டென்னிஸ் விளையாடுகிறார். இவர்கள் வெளியில் தெரிந்தவர்கள்.

          அதேநேரத்தில் புர்கா அணிந்துகொண்டு படித்துப் பட்டம் பெற்றுப் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் ஆசிரியைகளாக, பேராசிரியைகளாகப் பணிபுரிகின்றார்கள் இஸ்லாமியப் பெண்கள்; தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்கின்றார்கள்; எழுத்துப் பணியில் பல்வேறு பெண்கள் மிளிர்கின்றார்கள்; இப்படி எதற்கும் இஸ்லாம் தடைவிதிக்கவில்லை. ஆனால் எதைச் செய்தாலும் புர்காவை அணிந்து அழகை மறைத்துக்கொள்ளுங்கள் என்றே இஸ்லாம் கூறுகிறது.

          இதைத்தாண்டி மார்க்கச் செயல்பாடுகளில் பெண்களுக்கான சலுகையைப் பார்த்தால் அதுவும் ஏராளம். ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதாந்திர உதிரப்போக்கு இயல்பானது. அந்நாள்களில் அவர்கள் தொழுகத் தேவையில்லை; அது கடமையான நோன்பு நோற்கின்ற ரமளான் மாதமாக இருந்தால் நோன்பு நோற்கத் தேவையில்லை; பிள்ளையைப் பெற்ற பெண்கள் நாற்பது நாள்கள் தொழுகத் தேவையில்லை; பாலூட்டும் பெண்டிர் கடமையான ரமளான் நோன்பை நோற்கத் தேவையில்லை. பிறந்த பிள்ளை ஆணாக இருந்தால் ஈராடுகள் அறுத்துப் பலியிட வேண்டிய அதேநேரத்தில் பெண்ணாக இருந்தால் ஓர் ஆடே போதுமானது என்பதும் அவர்களுக்கான சலுகையே என்பதை நாம் உணர வேண்டும். இப்படிப் பெண்களுக்கான சலுகைகள் இஸ்லாமிய மார்க்கத்தில் ஏராளம் உள்ளன.

          அதேநேரத்தில் மாதாந்திர உதிரப்போக்கு ஏற்படும் காலங்களில் பெண்களைத் தனியாக ஒதுக்கிவிடுவதோ அவர்களுக்கெனத் தனியாகப் பாத்திரங்களை ஒதுக்குவதோ இஸ்லாத்தில் இல்லை. தாம்பத்திய உறவு மேற்கொள்வதைத் தவிர மற்றெல்லாச் செயல்பாடுகளும் ஏனைய காலங்களில் எவ்வாறு உள்ளனவோ அவ்வாறே  தொடரும். வாழ்க்கைப்பட்ட கணவனோடு ஒரே படுக்கையில் ஒன்றாகத் துயில்கொள்ளவும் தடையில்லை. ஆக மனதளவில்கூடப் பெண்களைச் சங்கடப்படுத்த இஸ்லாமிய மார்க்கம் விரும்பவில்லை.

          கிறிஸ்தவ மதத்தில் கன்னிப்பெண்கள் திருமணம் செய்துகொள்ளாமல் தம் வாழ்க்கையைக் கடவுளுக்காக அர்ப்பணிக்கின்றனர். அவர்கள் கன்னியாஸ்திரிகள்என்று அழைக்கப்படுகின்றனர். அதேபோல் இந்து மதத்தில் உள்ள கன்னிப்பெண்களும் திருமணம் செய்துகொள்ளாமல் தம் வாழ்க்கையைக் கடவுளுக்காக அர்ப்பணிக்கின்றனர். அவர்கள் இந்திரகுமாரிகள்என்று அழைக்கப்படுகின்றனர். ஆனால் இஸ்லாம் ஆண்களின் உணர்வுகளைப்போலவே பெண்களின் உள்ளுணர்வுகளுக்கு உரிய முறையில் மதிப்பளிக்கிறது. எனவே அல்லாஹ்விற்காகத் தம் இல்வாழ்க்கையைத் துறக்கவோ அர்ப்பணிக்கவோ வேண்டிய எந்த அவசியமுமில்லை. மாறாக ஆண்களைப்போலவே இல்வாழ்வில் ஈடுபட்டு, தம் கணவருக்கு உரியமுறையில் பணிவிடை செய்வதன்மூலமும் ஐவேளைத் தொழுகை உள்ளிட்ட இறைக்கடமைகளை நிறைவேற்றுவதன் மூலமுமே அவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியும். அதுவே அல்லாஹ்விற்காக அவர்கள் செய்யும் அர்ப்பணிப்பு ஆகும்.

          அப்பெண்களுக்குக் கடமைகள் இருப்பதைப்போலவே நல்லமுறையில் உரிமைகளும் உள்ளன. ஆயினும், ஆண்களுக்குப் பெண்களைவிட (ஓர்) உயர்பதவி உண்டு. (2: 228) இந்த இறைவசனத்தை முன்வைத்து இஸ்லாம் பெண்களைத் தாழ்த்துகிறது என்று வாதம் செய்கின்றனர். குடும்பத்தை நிர்வகிக்கின்ற பொறுப்பு ஆண்களைச் சார்ந்தது என்று இஸ்லாம் கூறுகிறது. இது பெண்களைத் தாழ்த்துவதோ அடிமைப்படுத்துவதோ கிடையாது. ஒரு குடும்பத்திற்குத் தேவையான வாழ்வாதாரத்திற்காகப் பொருளீட்டுவதும் மனைவி, பிள்ளைகளுக்காகச் செலவழிப்பதும் ஆண்களின் பொறுப்பேயன்றிப் பெண்களின் பொறுப்பில்லை. இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்தமட்டில் ஒரு பெண் தன் கணவனைக் காப்பாற்ற வேண்டும் என்ற எந்த அவசியமுமில்லை. ஆண்தான் சம்பாதித்துப் பொருளீட்டி, தன் மனைவி, பிள்ளைகள் ஆகியோருக்கு உணவு, உடை, உறைவிடம் முதலானவற்றை வழங்க வேண்டும். அதனால்தான் அவனுக்கு ஒருபடி உயர்வுண்டு என்று திருக்குர்ஆன் கூறுகின்றதே தவிர பெண்களைத் தாழ்த்துவதாகக் கருதக்கூடாது. ஒரு மின்விளக்கு எரிய வேண்டுமெனில் நேர் மின்னோட்டம் எதிர் மின்னோட்டம் (பிளஸ், மைனஸ்) ஆகிய இரண்டும் இணைய வேண்டும். அதுபோல் ஒரு குடும்பம் சீராக நடைபெற ஆண்-பெண் இருவரும் இணைய வேண்டும். அந்த நேர் மின்னோட்டம் இடத்தில் ஆணும் எதிர் மின்னோட்டம் இடத்தில் பெண்ணும் இருக்கின்றனரேயன்றி அவர்களுக்கிடையே எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை.

          “கர்ப்பமான பெண்களுக்குக் காத்திருப்புக் கால (இத்தாவின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரை இருக்கின்றது” (65: 4) எனும் இறைவசனத்திற்கேற்ப அவர்கள் பிரசவித்தபின் பிரசவ உதிரப்போக்கு முடிவடைந்த உடனேயே மறுமணம் செய்துகொண்டு இல்வாழ்க்கையைத் தொடர எளிய வழி காட்டுகிறது இஸ்லாம். மாறாக கணவன் இறந்தபின் உடன்கட்டை ஏறவோ கைம்பெண்ணாகவே எஞ்சிய காலத்தை வெறுமனே கழிக்கவோ வேண்டிய நிர்ப்பந்தம் இஸ்லாத்தில் இல்லை.

          “(மணவிலக்குச் செய்யப்பட்ட) அவர்களுக்கு ஆடையும் உணவும் முறைப்படி கொடுத்து வருவது குழந்தையின் தந்தைமீது கடமை” (2: 233) எனும் இறைவசனத்தின் அடிப்படையில் ஒரு பெண் மணவிலக்குச் செய்யப்பட்டுவிட்டால் அவளுடைய காத்திருப்புக் காலத்திற்குப்பின், அவள் தன் கணவனுக்காகப் பெற்றெடுத்த பிள்ளைகளை அவனிடமே விட்டுவிட்டுச் சென்றுவிடலாம். அப்பிள்ளைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு கணவனைச் சார்ந்ததுதானே தவிர, மனைவியைச் சார்ந்தது இல்லை என்று கூறி இஸ்லாம் பெண்களின் சுமையை இலகுவாக்குகிறது. ஆக இது பெண்களுக்கான சலுகையாகும். இதனால் அவள் எளிய முறையில் மறுமணம் புரிந்துகொண்டு இல்வாழ்வைத் தொடரலாம்.  தற்கால முஸ்லிம் பெண்கள் இவ்விசயத்தை அறியாமல் மணவிலக்கிற்குப்பின் பிள்ளைகளையும் சுமந்துகொண்டு மறுமணம் புரிய முடியாமல் தவிப்பது அவர்களின் அறியாமையாகும். 
  
          ஆக, இப்படி ஏராளமான சலுகைகளும் உரிமைகளும் இஸ்லாமிய மார்க்கத்தில் மகளிர்க்கு உண்டு என்பதை  பெண்ணியவாதிகள் உணர வேண்டும். படைத்த இறைவன் ஆண்-பெண் என்று ஈரினத்தைப் படைத்திருப்பது இருவரும் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்வதற்காகத்தானே தவிர ஏற்றத்தாழ்வு காண்பதற்காக அன்று. இஸ்லாம் ஒருபோதும் பெண்களை அடிமைப்படுத்தவில்லை. இஸ்லாமிய மார்க்கச் சட்டங்களையும் திருக்குர்ஆனையும் திறந்த மனதோடு படிப்போர் இதை உணர்ந்துகொள்ளலாம்.

==========================







வியாழன், 19 மே, 2016

அலைக்கழிப்பு! (சிறுகதை)



            -நூ. அப்துல் ஹாதி பாகவி

அது ஒரு கட்டுப்பாடான ஊர். ஓர் அரபுக்கல்லூரியும் அவ்வூரில் உள்ளது. அங்குள்ள ஆலிம்கள் அவ்வூரை இஸ்லாமியக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார்கள். பெண்கள் பகல் வேளைகளில் வெளியே புறப்பட மாட்டார்கள். புர்கா அணிந்துகொண்டுதான் வெளியே  செல்வார்கள். அந்நிய ஆண்களும் பெண்களும் பேசிக்கொள்ள மாட்டார்கள். வீட்டில் ஆண்கள் ஒன்றுகூடிப் பேசும்போது பெண்கள் குறுக்கிட மாட்டார்கள். குடும்பப் பெரியவர்கள் ஒன்றுகூடி ஏதேனும் முடிவெடுத்துவிட்டால் அதை எதிர்த்து, கருத்து ஏதேனும் தெரிவிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட கட்டுப்பாடான ஊரில் பிறந்தவள்தான் ஷமீமா.

ஷமீமாவுக்குப் பதினைந்து வயதிலேயே திருமணம் நடந்துவிட்டது. மிகக் குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து மூன்று பெண்பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். அவர்களை வளர்த்து ஆளாக்குவதிலேயே தன் இளமைப் பருவம் முழுவதையும் செலவிட்டாள். அவளுக்குத் தன் கணவன்மீது அவ்வளவாக ஈர்ப்பு இல்லை. கணவனுக்குத் தன்மீது ஈர்ப்பு இல்லை என்பதே அதற்கான காரணம். இந்த முடிவுக்கு அவள் எப்போது வந்தாள்?

திருமணத்திற்குப்பின் அவளுடைய கணவன் அப்துல் காலிக் கூட்டுக் குடும்பமாக இருந்த தன்னுடைய வீட்டில் ஷமீமாவைக் குடிவைத்தான். கூட்டுக் குடும்பமாக இருந்ததால் தம்பதியர் தாம் விரும்பு நேரத்தில் எதையும் செய்துவிட முடியாது.  இருந்தாலும் தன் அறைக்குள் தன்னோடு சேர்ந்து துயில்வதற்குக்கூட அம்மாவின் அனுமதியை  வேண்டி நின்ற தன் கணவனின் கையாலாகாத்தனத்தைக் கண்டபோதுதான் அவளுக்கு அவன்மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டது. அதனால் கணவன்மீது இருந்த சிறிதளவு ஈர்ப்பும் கரைந்துபோனது. ச்சீ... என்று வெறுத்துவிட்டாள். அது மட்டுமல்ல, எப்போது பார்த்தாலும் பொய்பேசுவது, கேலி, கிண்டல் செய்வது-இவையே அவனது வாடிக்கை. எதையுமே முக்கியமாகக் கருதுவதில்லை. இதுவே காலப்போக்கில் அவள் அவனை வெறுத்தொதுக்குவதற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது.

அவள் ஈன்றெடுத்த மூன்று பெண்பிள்ளைகள்தாம் அவளுடைய உலகம். அவர்களையே எப்போதும் அவள் சுற்றிச் சுற்றி வந்தாள். ஆண்பிள்ளை இல்லாதது அவளுக்கு ஒரு குறைதான். இருந்தாலும் அவள் அதை வெளிக்காட்டிக்கொள்வதில்லை.

ஆதி மனிதர் மண்ணால் படைக்கப்பட்டார் என்பதற்கேற்பத் தன் கணவனும் களிமண்ணால்தான் படைக்கப்பட்டானோ எனக் கருதிக்கொள்வாள். அவனுக்குத் தன் குடும்பம், தன் பிள்ளைகள், தன் மனைவி என்ற எண்ணமே கிடையாது. தன் அண்ணன் எதைச் சொல்கிறாரோ அதுதான் வேதவாக்கு. தன் பிள்ளைகளின் படிப்பு குறித்தோ, மகிழ்ச்சி குறித்தோ எந்தக் கவலையும் கொண்டதில்லை.  அவர்கள்மீது எந்த அக்கறையும் செலுத்தியதில்லை. எனவே ஷமீமாதான் எதற்கெடுத்தாலும் ஆம்பளையைப்போல் ஓட வேண்டும். பிள்ளைகளின் படிப்பிற்காகப் பள்ளிக்கூடம் அழைத்துக்கொண்டு செல்வது, மறுமையின் படிப்பிற்காக மத்ரசா அழைத்துக்கொண்டு செல்வது உள்ளிட்ட அனைத்தையும் இவள்தான் கவனித்தாக வேண்டும். நாளடைவில் அந்த ஊரிலிருந்து தன் தாய்வீடு அமைந்துள்ள ஊருக்கே வந்து, தன் கணவனோடும் பிள்ளைகளோடும் தாய் வீட்டில் ஐக்கியமானாள். அங்கு அவளது மூன்று அண்ணன்களும் தாய்-தந்தையும் வாழ்ந்துவந்தனர். அவர்களோடு சேர்ந்து குடும்ப வாழ்க்கையைத் தொடர்ந்தாள். தன் அண்ணன்கள் கவனித்து வந்த அரிசிக் கடையைக் கவனித்து வந்தான் அவளது கணவன் காலிக். கூட்டுக் குடும்பமாக இருந்ததால் அவளுடைய குடும்பச் செலவுகளையும் அவளுடைய அண்ணன்களே கவனித்துக்கொண்டார்கள். 

ஒரு நாள் தன்னுடைய மூத்த பெண்ணின் திருமணப் பேச்சு வந்தது. அவளுடைய தந்தையின்  முடிவின்படி அவள் தன் மூத்த பெண்ணைத் தன் சின்னம்மா மகன் தாரிக்கிற்குத் திருமணம் செய்துவைக்க ஒத்துக்கொண்டாள். "தாரிக் இன்ஜினீயரிங் படிப்பதால் பெண்ணும் இன்ஜினீயரிங் படித்தால்தான் மதிப்பாக இருக்கும்'' என்று அவளுடைய சின்னம்மா கூற, தன் அண்ணன்களிடம் உதவி கேட்டு அவளை இன்ஜினீயரிங் படிப்பில் சேர்த்துப் படிக்க வைத்தாள். மகளின் படிப்பு முடிந்ததும் இனிதே திருமணம் நடைபெற்றது. திருமணச் செலவு அனைத்தையும் அவளுடைய அண்ணன்களே ஏற்றுச் செய்து முடித்தார்கள்.

இதை நன்றாக நோட்டமிட்டுக்கொண்டே இருந்த அவளுடைய அண்ணிகள், தக்க தருணம் பார்த்து, அவளைக் குத்திப் பேசத் தொடங்கினார்கள். அவளை ஏளனமாகப் பார்ப்பதும் கீழ்த்தரமாக மதிப்பதும் தொடர்ந்துகொண்டே வந்தது. வெடுக்கென ஏற்படுகின்ற சினமும் சுயமரியாதையை விரும்புகின்ற எண்ணமும் அவளுடைய அணிகலன்கள். ஆகவே சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் தன் கணவனையும் இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு அவளுடைய சொந்த ஊரான வேலப்பன்கோட்டையிலிருந்து சிங்காரச் சென்னையை நோக்கி வந்தாள். தன் கணவனுக்குச் சென்னையிலேயே அரிசிக் கடை வைத்துத் தருமாறு தன் அண்ணன்களிடம் கோரிக்கை வைத்தாள்.  தன் தங்கையின் கணவரை பார்ட்னராக இணைத்துக்கொண்டு ஒரு முக்கிய வீதியில் அரிசிக் கடையை வைத்துக்கொடுத்தார்கள் அவளுடைய அண்ணன்கள். உழைப்பிற்கும் அவளது கணவன் காலிக்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கேலி கிண்டல் பேசுவது, அரசியல் குறித்து அலசுவது, நையாண்டி  செய்வது - இவற்றிற்கே நேரம் போதாது. எப்படியோ குடும்பச் சுமையைச் சமாளித்துக்கொண்டே வந்தாள் ஷமீமா.

இரண்டாவது மகள் ஆஷிகாவை ஒரு மகளிர் அரபுக் கல்லூரியில் சேர்த்து ஆலிமா ஆக்கினாள். அவளது படிப்பு முடிந்ததும் அவளுக்குத் தகுந்த ஜோடியைத் தானே முன்னின்று தேடிப் பிடித்துத் திருமணம் செய்துவைத்தாள். மூன்றாவது பெண் ஆயிஷாவிற்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியபோதுதான் அவளுடைய வாழ்க்கையில் ஒரு பூகம்பம் ஏற்பட்டது. அது அவளுடைய வாழ்க்கைப் பாதையையே மாற்றிப் போட்டது.

மூன்றாவது பெண் ஆயிஷாவிற்கும் அவளே முன்னின்று மாப்பிள்ளை தேடத் தொடங்கினாள்.  கடைக்குட்டிக்கு ஏற்ற ஜோடி கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் இருந்தபோதுதான் அந்தக் கடிதத்தை அவளுடைய கணவன் காலிக் அவளிடம் கொடுத்தான். "நீ என்னை மதிக்காமல் எல்லாவற்றையும் உன் விருப்பம்போல் செய்வதால் நான் உன்னைத் தலாக் விட்டுவிட்டேன்'' என்று எழுதியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள் ஷமீமா.

உடனே அவள் தனக்குத் தெரிந்த ஆலிம் ஒருவரிடம், "எழுத்து மூலம் எழுதிக்கொடுத்தால் தலாக் செல்லுமா?'' எனச் சட்ட விளக்கம் கேட்டாள். தலாக் செல்லும் என்று சொன்னதும் உரிய முறையில் இத்தா இருந்துவிட்டு, "அப்பாடா சனியன் தொலைந்தது'' எனப் பெருமூச்சுவிட்டாள். பிரியத்திற்குரிய கணவனாக இருந்திருந்தால் பிரிவு தாங்காமல் அழுகலாம். ஊரார் பார்வைக்குத் தம்பதிகளாக இருப்பவர்களுக்கு இடையே பிரிவு ஏற்பட்டால் அழுகை வருமா? கவலைதான் ஏற்படுமா? அவளுக்கு அந்தப் பிரிவு, நீண்ட சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை பெற்றதைப் போன்ற மகிழ்ச்சியைத்தான் தந்ததே தவிர சிறிதளவும் கவலையைத் தரவில்லை.
அதன்பிறகு மூன்றாவது மகளின் திருமணத்தைத் தன் விருப்பம்போல் நடத்தி முடித்தாள். அதற்கிடையே தன் மனைவியின் பிரிவால், கவனிப்பார் யாருமின்றி வாடிப்போன காலிக் தன்னோடு மீண்டும் சேர்ந்து வாழ அவளை அழைத்தான். ஆனால் அவளோ "தொலைந்தது சனியன்'' என்ற எண்ணத்தில் இருந்ததால் அவனோடு மீண்டும் வாழ்க்கையைத் தொடர விரும்பவில்லை.

ஷமீமா-காலிக் தம்பதியர் பிரிந்து, இதோ ஐந்தாண்டுகள் ஓடிவிட்டன. அவளுடைய மூத்த மகள் கத்தாரில் இருக்கிறாள். இளைய மகள் மதீனாவில் இருக்கிறாள். நடு மகளான ஆஷிகா மட்டும் உள்ளூரில் இருக்கிறாள். யாருக்கு அம்மாவின் உதவி தேவைப்படுகிறதோ அவர் சும்மா இருக்கின்ற தம் அம்மாவை அழைத்துக்கொள்வார். "அம்மா, எனக்குப் பிரசவம் பார்க்க வாம்மா'' என்று இளைய மகள் அழைத்தால் அங்கு செல்வாள். "அம்மா, நான் டூர் புறப்படறேன். நீ வந்து, இங்கு இருந்துகொண்டு ரெண்டு மாசத்துக்குச் சமைத்துக்கொடும்மா'' என்று இன்னொரு மகள் அழைத்தால் அங்கு செல்வாள். அவளும் சளைக்காமல் இங்கும் அங்கும் சென்றுகொண்டே தன்  வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருந்தாள். மற்ற நாள்களில் உள்ளூரில் உள்ள தன் மகள் ஆஷிகாவின் வீட்டிலேயே தங்கியிருப்பது வழக்கம். ஆனால் ஆஷிகா ஒரு முன்கோபி. தன் அம்மாவின் நிலைமையைப் புரிந்துகொள்ளாமலே சுடு வார்த்தைகளை அவ்வவ்போது அள்ளிவீசுவாள். உள்ளே அடுப்படியில் புழுக்கமாக இருக்கிறதென்று வெளியே காற்று வாங்கச் சென்றால் அங்கு கதிரவன் தன் கதிர்களால் சுட்டெரிப்பதைப் போன்ற நிலைதான் ஷமீமாவுக்கு. வாழ்க்கையை வெறுமையாய்க் கழிக்கும் அவளுக்கு இனிய பொழுதுகளும் இல்லை. ஆறுதலான வார்த்தைகள் பேச ஆளும் இல்லை. இருப்பினும் தன் விரலே தன் கண்ணைக் குத்திவிட்டால் தண்டிக்க முடியுமா? மன்னிக்கத்தானே செய்வோம். அதே போன்று தன் மகளை மன்னிப்பதையே அவள் தன் பழக்கமாக்கிக்கொண்டாள்.
   

 பெண் ஒரு கொடியைப் போன்றவள். ஒரு கொடி படர ஒரு தாங்குகோல் தேவை. அந்தத் தாங்குகோல்தான் கணவன். உபயோகமற்ற கணவனாக இருந்தாலும், பற்றிப் படர ஒரு தாங்குகோலாக இருந்தான் அல்லவா? இப்போது பற்றிக்கொண்டு படரவும் வாழ்க்கையைத் தொடரவும் தனக்கொரு தாங்குகோல் இல்லையே என்ற எண்ணம் அவ்வப்போது அவளுடைய மனதில் தோன்றாமல் இருப்பதில்லை. அப்படித் தோன்றும்போதெல்லாம் அது அவளை நெருஞ்சி முள்ளாய்க் குத்தும். இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் வாழ்க்கையின் அலைக்கழிப்புகளோடு, "இழந்த வாழ்க்கையை எண்ணியெண்ணி, தான் கவலைப்படுவதாகத் தன் பிள்ளைகள் நினைத்துவிடக் கூடாது'' என்பதற்காகத் தன் பிள்ளைகளுக்கு முன்னால், தான் மகிழ்ச்சியாக இருப்பதாகக் காட்டிக்கொண்டும் வெற்றுப் புன்னகையை உதிர்த்துக்கொண்டும் வெறுமனே வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருக்கிறாள் எதையும் தாங்கும் இதயம்கொண்ட ஷமீமா.






புதன், 11 மே, 2016

நீங்காத நிகழ்வு

என் மகன் அஹ்மது அப்ஷர். ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். நன்றாகப் படிப்பவன். ஒரு நாள் நான் ஒரு புதிய செல்போன் வாங்கினேன். என்னுடைய பழைய செல்போனை என் மனைவிக்குக் கொடுத்துவிட்டு, மனைவியின்  பழைய செல்போனில் ஒரு பழைய சிம்கார்டு போட்டு, அதை என்ன செய்யலாம் என்று யோசித்தபோது என் மகன், அதை எனக்குத் தந்துவிடுங்கள் என்று கேட்டான்.
நான் அதை அவனுக்குக் கொடுத்துவிட்டு, அவனுடைய செல்போன் எண்ணை அவனிடம் தெரிவித்தேன். பிறகு, "அப்ஷர், இதுதான் இனி உன்னுடைய நம்பர். உன் வகுப்பிலுள்ள உன் நண்பர்கள் எல்லோருக்கும் இந்த நம்பரைக் கொடுத்து, இனி உனக்கு இந்த நம்பருக்கு போன் செய்யச் சொல்லு'' என்றேன்.

அதைக் கேட்டுக்கொண்டிருந்த என் மனைவி, "அப்படியெல்லாம் செய்யக்கூடாது. யாருக்கும் உன் நம்பரைக் கொடுக்கக்கூடாது'' என்று குறுக்கிட்டுப் பேசினாள்.

"நான் எது செய்தாலும் குறுக்கிட்டுப் பேசுவதே உன் வாடிக்கையாய்ப் போச்சு. இப்போது நான் நல்ல விஷயம்தானே செய்திருக்கேன். இதையும் நீ தடுக்கிறீயே?'' என்று சப்தமிட்டேன்.

அதற்கு அவள் சொன்னது என் மனதைத் தொட்டது.
"இல்லைங்க. அவன் படிக்கிற வகுப்பில் எத்தனையோ ஏழைப் பசங்க படிக்கிறாங்க. அவர்களிடம் நம்ம பையன் மட்டும்  செல்போன் நம்பர் கொடுத்தா, நமக்கு ஒரு செல்போன் இல்லையே! என்ற ஏக்கம் அவர்களின் மனதில் ஏற்படும் இல்லையா? நம்மோட வசதியைப் பார்த்து பிறர் ஏங்கும் விதத்துல நடந்துக்குறது சரியில்லைங்க. அதனாலதாங்க நான் வேண்டாம்னு சொன்னேன்'' என்றாள்.
-நூ. அப்துல் ஹாதி பாகவி

திங்கள், 18 ஏப்ரல், 2016

சிறுகதை
தியாகம்
-நூ. அப்துல் ஹாதி பாகவி
அந்த ஊரின் பெரிய பள்ளிவாசலில் புதிதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெண்களுக்கான தொழுகைக்கூடத்திற்கு வெள்ளிக்கிழமை பயான் கேட்பதற்காக புஷ்ரா புறப்பட்டுச் சென்றாள். வழியில், எதேச்சையாக ருஷ்தாவைச் சந்தித்தாள். புஷ்ரா வீட்டில்தான் ருஷ்தா நீண்டகாலமாகக் குடி இருந்தாள். பிறகு அங்கிருந்து மாறி, பக்கத்து ஊருக்குக் குடிபோய்விட்டாள். காலம் உருண்டோடி பத்து ஆண்டுகள் கழிந்துவிட்டன. நீண்ட காலத்திற்குப்பின் இப்போதுதான் இருவரும் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. புஷ்ராவின் வீட்டில் ருஷ்தா குடியிருந்தபோது இருவரும் தோழிகளைப் போலப் பழகி வந்தனர். பல்வேறு விஷயங்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.  அந்தரங்க விஷயங்களைக்கூட அலசுவார்கள். ஆனால் வரம்பு மீறமாட்டார்கள். புஷ்ராவைவிட ருஷ்தா வயதில் மூத்தவள். எனவே அவள் ருஷ்தாவை "அக்கா' என்றுதான் அழைப்பாள்.
"என்னக்கா சுகமா? பார்த்து எவ்வளவு நாளாச்சு? எப்படிக்கா இருக்கீங்க?'' - விசாரித்தாள் புஷ்ரா.  "அல்ஹம்து லில்லாஹ். நல்லவிதமா இருக்கேன். ஒரு கவலையும் இல்லை'' - ருஷ்தா பதிலளித்தாள்.
"என்னக்கா இந்தப் பக்கம்? எங்கெ வந்திருக்கீங்க?''
"பக்கத்துத் தெருவுல உள்ள எங்க அக்கா வீட்டுக்கு வந்திருக்கேன். நீ எப்டி இருக்கே?''
"ம். நான் அல்லாஹ்வின் கிருபையாலே நல்லா இருக்கேன்.''
"புஷ்ரா உனக்கு எத்தனை பிள்ளைங்க?''
"ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணுதான் ருஷ்தாக்கா''
"என்னம்மா சொல்றே. கல்யாணமாயி எத்தனையோ வருஷமாச்சு. ஒரே ஒரு குழந்தைதானா? அதுக்குப் பிறகு ஒன்னுமே இல்லையா?'' - ருஷ்தா ஆச்சரியமாகக் கேட்டாள்.
"அந்த ஒன்னுக்கே நான் என் கணவனோட படாதபாடு பட்டுட்டேன். அவருக்குக் கொடுக்க வேண்டிய மருந்தெல்லாம் கொடுத்து, பாதாம், பிஸ்தா, அக்ரோட் என வகை வகையாய்க் கொடுத்தேன்.  அதுக்குப் பிறகுதானே அல்லாஹ்வுடைய கிருபையாலெ ஒரு குழந்தை என்னோட வயித்துல உருவாச்சு.'' - புஷ்ரா கூறினாள்.
"ஏம்மா இப்டிச் சொல்றே? அவருக்கு என்ன கொற?'' - ஆர்வமாகக் கேட்டாள்.

"அவருக்கு ஆரம்பத்திலிருந்து உடலில் தெம்பு இல்லை, மனசுல தைரியம் இல்லை, மனைவியப் பார்த்தா காதல் இல்லை. மொத்தத்தில், "மனிதன் மண்ணால் படைக்கப்பட்டவன்' என்பது அவருக்குத்தான் சரியாப் பொருந்தும்'' என்று வருத்தத்தோடு சொல்லி முடித்தாள் புஷ்ரா.
"கேக்குறதுக்கே ரொம்ப வருத்தமாயிருக்கு புஷ்ரா. நீயாச்சும் ஏதாவது முயற்சி செய்யக்கூடாதா?'' என்று கரிசனத்தோடு கேட்டாள்.

"நானும் எத்தனை தடவைதான் முயற்சி செய்யிறது? ஊர் ஒலகத்துல சேவல்தான் கோழியைத் தொறத்திட்டு ஓடுறதப் பார்த்திருக்கோம். இங்க எல்லாம் தலைகீழாவுல இருக்கு? நானே எத்தனை தடவதான் சேவலா மாறுறது? இந்த நிலையில நான் எப்டி இன்னொரு குழந்தைக்கு முயற்சி செய்ய முடியும்? எனக்கு ஒரு குழந்தையாவது கொடுத்து "மலடி'ங்கிற பேரெ நீக்கி வச்சானே அந்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' - புஷ்ரா ஆதங்கத்தோடு சொல்லி முடித்தாள்.

உன் கணவனைப் பத்தி ஆரம்பத்துலயே இதுவெல்லாம் உனக்குத் தெரியாதா? இதையெல்லாம் உன் அப்பா, அம்மாவிடம் சொல்லி, ஒரு முடிவு செய்திருக்கலாமே? ஷரீஅத்படி மற்றொரு நிகாஹ் செய்திருக்கலாமே? - ருஷ்தா கேட்டாள்.
தெரியும்க்கா, அம்மாவிடம் சொன்னேன். "முதல் பந்தம்தான் இறுதி வரை தொடரணும். முறிச்சு முறிச்சு நிகாஹ் செய்யக்கூடாது. இத முறிச்சிட்டு இன்னொரு திருமணம் முடிச்சாலும், அவன் எப்டி இருப்பானோ யாருக்குத் தெரியும்? எல்லாம் சரியாயிடும். பொறுமையா இரு''ன்னு சொல்லிட்டாங்க. நானும் அவருக்கு எதையெதையோ கொடுத்துப் பாத்தேன். ஒன்னும் தேரல. அதனால அந்த முயற்சியெல்லாம் கைவிட்டுட்டேன். இதையெல்லாம் அம்மாவிடம் போய் அடிக்கடி சொல்லிட்டு இருக்க முடியுமா? - சோகத்துடன் சொன்னாள் புஷ்ரா.

உன்னோட உணர்வுகளை என்னால புரிஞ்சுக்க முடியுது புஷ்ரா. ஆனா, நான் புரிஞ்சுகிட்டு உனக்கென்ன இலாபம்? ஏன், உன்னோட அம்மாவுக்கு இதெல்லாம் புரியாதா? முதல் பந்தம் எப்டி இருந்தாலும் முறிக்கக் கூடாதா? நல்லா இருந்தா வேண்டுமென்றே முறிக்கக் கூடாதுதான். சரியா இல்லைன்னா முறிக்கலாம்தானே? பிறகு ஏன் உன்னோட உணர்வுகளை அவங்களாலெ புரிஞ்சுக்க முடியல? - ஆதங்கப்பட்டாள் ருஷ்தா.

விடுங்கக்கா. இதையெல்லாம் அம்மாவிடம் போய் அடிக்கடி சொல்ல முடியுமா? "பொறுமையா இரு'ன்னு சொல்லிட்டாங்க. நானும் பொறுமையாத்தான் இருக்கேன். அவ்வப்போது நோன்பு வைக்கிறேன். அப்படியே ஓடுது வாழ்க்கை! - மனதைத் தேற்றிக்கொண்டாள் புஷ்ரா.

ருஷ்தா ஆரம்பித்தாள்... இந்தக் காலத்துல யாரைப் பார்த்தாலும் இதே பிரச்சனைதான். என்னோட பக்கத்து வீட்ல ஷப்னம்ன்னு ஒரு பொண்ணு இருக்கா. அவ கணவருக்குச் சர்க்கரை நோய் இருக்காம். அதனால அவங்க ரெண்டு பேருக்கும் இப்படித்தான் உறவு சரியில்லையாம். இருந்தாலும் பரவாயில்லைன்னு பொறுமையா இருக்கா. என்ன செய்யிறது? அவளுக்கு விதிச்சது அவ்வளவுதான்.
நெறைய ஆம்பளைங்க தம்மோட உடல் நிலைய நல்லா வச்சுக்குறதே இல்லை. பான்பராக், குட்கா, ஹான்ஸ், பீடி, சிகரெட், போதைப் பொருள்கள்ன்னு ஏகப்பட்ட கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாயிடுறாங்க. அதனால ஏற்படுற விளைவுகளையெல்லாம் யோசிக்கிறதேயில்ல. அவங்க உடலுக்குக் கேடு ஒரு பக்கம். நம்பி வந்தவ வாழ்க்கையக் கெடுக்குறது மறு பக்கம். அதே நேரத்துல நாம பீடி, சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சா இந்த ஆம்பளைங்க சும்மா விட்டுடுவாங்களா? ஊரக் கூட்டிப் பஞ்சாயத்து வச்சு, உண்டு இல்லைன்னு செஞ்சுறமாட்டாங்க? - விரிவாகப் பேசினாள் ருஷ்தா.

அது மட்டும் இல்லக்கா. அளவுக்கு மீறிச் சாப்பிடுறதும் சர்க்கரை நோய்க்கு ஒரு காரணம்தான். வயிறு முட்டச் சாப்பிடுவது உடலுக்குப் பெருங்கேடு. மூச்சே விட முடியாம, ஒழுங்கா செரிக்காம படாதபாடு படுது வயிறு. "மூச்சு முட்டச் சாப்பிடாதே. பின்னெ, நோய்கள் வந்து அவஸ்தைப் படணும்''ன்னு என்னோட தம்பிக்கு நான் சொல்வதுண்டு. "அதெல்லாம் வந்தாப் பாத்துக்குவோம்''ன்னு ஏளனமாச் சொன்னான். இப்ப அவனுக்குச் சர்க்கரை நோய் வந்துடுச்சு. திருமணம் செய்து வச்சாங்க. நாலே மாசத்துல அவ அம்மா வீட்டுக்கு ஓடிப்போயிட்டா. என்ன செய்யிறது? எல்லாரும் என்னெ மாதிரி பொறுமையா இருப்பாங்களா? - அனுபவப்பூர்வமாகப் பேசினாள் புஷ்ரா.
புஷ்ரா தொடர்ந்தாள்... பாருங்க, நான் என்னெப் பத்தியே பேசிக்கிட்டு இருக்கேன். உங்களைப் பத்திச் சொல்லுங்கக்கா. உங்களுக்கு எத்தனை புள்ளைங்க? - சுயநினைவோடு விசாரித்தாள்.

எனக்கு நீண்ட காலத்துக்குப் பிறகுதான் குழந்தை பிறந்துச்சு. இப்போது எனக்கு ரெண்டு பிள்ளைங்க - சுருக்கமாகக் கூறினாள்.
ஏன் நீண்ட காலமாச்சு? - ஆர்வத்தோடு விசாரித்தாள் புஷ்ரா.

அவரு என்னோட இருந்தாத்தானே? திருமணமாகி ஒரு மாசத்துல மலேசியா போயிட்டாரு. அவரு ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவ ஒரு மாத லீவுல வருவாரு. அக்கா வீடு, தங்கச்சி வீடு, நண்பர்கள் வீடுன்னு போயிப் போயி சுத்திட்டு, அப்டி இப்டி கொஞ்ச நாள் என்னோட தங்குவாரு. ஆக, இந்த இருபது வருஷத்துல அவரோட வாழ்ந்த காலம் ஏழெட்டு மாதம்தான் இருக்கும். என்ன செய்யிறது. இப்படித்தான் என்னோட வாழ்க்கை ஓடுது.

இங்கேயே வந்து, உள்ளூர்ல ஒரு தொழிலப் பாக்க வேண்டியதுதானே? - யோசனை கூறினாள்.
ம்... நானும் எத்தனையோ தடவ சொல்லிப்புட்டேன். அங்கேயே இருந்து பழகிப்போச்சாம். இங்கெ வந்து வேலை செய்ய முடியாதாம். இங்கெ எதுவுமே சரியில்லையாம். ரோடுகூடச் சரியில்லையாம்.  ஆனாலும் இந்தத் தடவ நான் அவரிடம் கறாராச் சொல்லிப்புட்டேன். "என்னங்க நம்ம ஊருக்கே திரும்பி வந்துடுங்க. நேரடியா உங்க முகத்தப் பாத்துக்கிட்டே நிம்மதியா கண்ண மூடிடுறேன். எத்தனை காலத்துக்குத்தான் வாட்ஸ் அப்லயும், ஸ்கைப்லயும் உங்க முகத்தப் பாக்குறது. நேரடியா எப்பத்தான் உங்களோட சேர்ந்து வாழுறது? இந்த ஒடம்பு உங்களுக்காகத்தானே இருக்கு. இதுக்கு நீங்க உரிமைகொண்டாடம வேறு யாரு உரிமை கொண்டாட முடியும்?''ன்னு கேட்டுப்புட்டேன். அதான், அவருக்கும் கொஞ்சம் இரக்கம் வந்து, "உள்ளூர்லயே ஏதாவது செய்யிறேன். நான் இந்தத் தடவை கண்டிப்பா முடிச்சுக்கிட்டு வந்துடுறேன்''னு சொல்லிட்டாரு - மகிழ்ச்சி பொங்கக் கூறினாள்.

சரி, இளமையெல்லாம் முடிஞ்சு போச்சு. ரெண்டு பேரும் சேர்ந்து இப்ப என்ன செய்யப் போறீங்க?- கிண்டலாகக் கேட்டாள்.
"நீ சொல்றது உண்மைதான். குளிருக்கும் மழைக்கும் ஒரு போர்வையா எடுத்துப் போர்த்திக்கொள்ளலாமே? அதுக்காகவாவது அவரு என் பக்கத்துல இருக்க வேண்டாமா? அவரு முகத்தப் பாத்துப் பாத்தாவது நான் தெம்பா இருப்பேன்ல'' - ருஷ்தா தீர்க்கமாகச் சொன்னாள்.

அக்கா, ரொம்ப நேரம் பேசியாச்சு. தொழுகைக்கு நேரமாச்சு. நான் வாரேன்க்கா என்று விடைபெற்றாள் புஷ்ரா. விடைபெற்றபோது, "இவங்க பெரிய தியாகிதான்''னு மனதில் நினைத்துக்கொண்டாள்.

"சேதாரமான கணவனை ஆதாரமா வச்சுக்கிட்டு, உணர்வுகள அடக்கிக்கொண்டு, மெல்லவும் முடியாம சொல்லவும் முடியாம, அல்லாஹ்வுக்காகப் பொறுமையா வாழுற இவதான் மிகப் பெரிய தியாகி''ன்னு நினைத்துக்கொண்டே சென்றாள் ருஷ்தா.
=========================================




புதன், 13 ஏப்ரல், 2016

அஹ்லுஸ் சுன்னா மாத இதழில்...

அஹ்லுஸ் சுன்னா மாத இதழில் வெளிவந்த நூல் விமர்சனம்: 



இந்நூல் கிடைக்கும் இடங்கள்:


சலாமத் புக் ஹவுஸ், மண்ணடி : 044 4216 7320


பஷாரத் பப்ளிகேஷன், மண்ணடி: 97899 99256


த்ரீஎம் பப்ளிஷர், அங்கப்பன் தெரு, மண்ணடி: 98842 83949/ 984000 4168/ 98403 61227


ரஹ்மத் ஆங்கில நூல் நிலையம், மயிலாப்பூர்,
சென்னை: 9940 059400



சாஜிதா புக் சென்டர், மண்ணடி, சென்னை: 984097 7758