வியாழன், 9 அக்டோபர், 2014

நபிகளார் நவின்ற மூன்றுகள் (தொடர்-16)

                                                           
(தொட்டிலில் பேசிய குழந்தைகள்) 

                   மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, ஃபாஸில் தேவ்பந்தீ, (பிஎச்.டி.)

பிறந்தவுடன் மனிதன் பேசுவதில்லை. ஓராண்டிற்குப் பிறகுதான் ஒவ்வொரு வார்த்தையாகப் பேசத் தொடங்குகின்றான். பெற்றெடுத்த அன்னை தன் அன்புப் பிள்ளைக்கு அன்போடும் பாசத்தோடும் கற்றுத் தருகின்ற ஒற்றை வார்த்தைகளை மழலை மொழியில் ஒவ்வொன்றாய்ப் பேசுகின்றான். இது பிறக்கின்ற குழந்தைகள் யாவருக்கும் பேதமில்லாமல் அமைந்துள்ள இயல்பாகும்.  இது குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:  ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலையில், உங்களது அன்னையரின் வயிறுகளிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். மேலும், உங்களுக்குச் செவிகளையும் கண்களையும் உள்ளங்களையும் கொடுத்தவனும் அவன்தான். இதற்கு நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக! (16: 78)

இயல்பை மீறி மக்கள் வியக்கும் வண்ணம் தான் நாடியதைச் செயல்படுத்துவதே இறைவனின் ஆற்றலாகும். அத்தகைய இறையாற்றலால் தான் நாடிய மூன்று குழந்தைகளைத் தொட்டில் பருவத்திலேயே அல்லாஹ் பேசவைத்துள்ளான். அது குறித்து இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியுள்ளதைப் பாருங்கள்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரைத் தவிர வேறெவரும் தொட்டிலில் (குழந்தையாக இருந்தபோது) பேசியதில்லை. ஒருவர் மர்யமின் புதல்வர் ஈசா (அலை) அவர்கள்; (மற்றொருவர்) ஜுரைஜின் பிள்ளை (என அவதூறு சொல்லப்பட்ட குழந்தை).

ஜுரைஜ் (பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த) வணக்கசாலியான மனிதராக இருந்தார். அவர் ஆசிரமம் ஒன்றை அமைத்துக்கொண்டு அதில் இருந்து (வழிபட்டு)வந்தார். (ஒரு முறை) அவர் தொழுதுகொண்டிருந்தபோது அவரிடம் அவருடைய தாயார் வந்து, "ஜுரைஜே!' என்று அழைத்தார். அப்போது ஜுரைஜ், "என் இறைவா! என் தாயா? எனது தொழுகையா?'' (என் தாய்க்குப் பதிலளிப்பதா, அல்லது தொழுகையைத் தொடர்வதா?) என்று (மனதிற்குள்) வினவிக்கொண்டு, தொழுகையில் கவனம் செலுத்தினார்.

ஆகவே, அவருடைய தாயார் (கோபித்துக்கொண்டு) திரும்பிச் சென்றுவிட்டார். மறுநாளும் அவர் தொழுதுகொண்டிருந்தபோது அவரிடம் அவருடைய தாயார் வந்து, "ஜுரைஜே!' என்று அழைத்தார். அப்போதும் அவர், "என் இறைவா! என் தாயா? எனது தொழுகையா?'' என்று (மனதிற்குள்) வினவிக்கொண்டு, தொடர்ந்து தொழுகையில் கவனம் செலுத்தினார். ஆகவே, (அன்றும்) அவருடைய தாயார் (கோபித்துக்கொண்டு) திரும்பிச் சென்றுவிட்டார்.

அதற்கடுத்த நாளும் அவருடைய தாயார் வந்தார். அப்போதும் அவர் தொழுதுகொண்டிருந்தார். அவர், "ஜுரைஜே!' என்று அழைத்தார். ஜுரைஜ், "என் இறைவா! என் தாயா? எனது தொழுகையா?'' என்று (தமக்குள்) வினவிக்கொண்டு தொழுகையில் கவனம் செலுத்தினார். ஆகவே, அவருடைய தாயார் (கோபித்துக்கொண்டு), "இறைவா! அவனை (ஜுரைஜை) விபச்சாரிகளின் முகத்தில் விழிக்கச் செய்யாமல் மரணிக்கச் செய்யாதே'' என்று பிரார்த்தனை செய்துவிட்டார்.

பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் ஜுரைஜைப் பற்றியும் அவருடைய வணக்க வழிபாடுகளைப் பற்றியும் (புகழ்ந்து) பேசிக்கொண்டனர். பனூ இஸ்ராயீலில் அழகிற்குப் பெயர்போன, விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்த பெண் ஒருத்தி இருந்தாள். அவள் (பனூ இஸ்ராயீல் மக்களிடம்), ""நீங்கள் விரும்பினால் உங்களுக்காக அவரைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறேன்'' என்று கூறிவிட்டு, அவரிடம் தன்னை ஒப்படைத்தாள். ஆனால், அவளை ஜுரைஜ் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

ஆகவே, (அவரைப் பழிவாங்குவதற்காக) அவள் ஓர் ஆட்டு இடையனிடம் சென்றாள். அவன் ஜுரைஜின் ஆசிரமத்திற்கு வருவது வழக்கம். தன்னை அனுபவித்துக்கொள்ள அந்த இடையனுக்கு அவள் வாய்ப்பளித்தாள். அவனும் அவளுடன் (தகாத) உறவில் ஈடுபட்டான்.

(இதில்) அவள் கர்ப்பமுற்றாள். குழந்தை பிறந்ததும், ""இது
ஜுரைஜுக்குப் பிறந்த குழந்தை'' என்று (மக்களிடம்) கூறினாள். எனவே, மக்கள் (வெகுண்டெழுந்து) ஜுரைஜிடம் வந்து அவரைக் கீழே இறங்கிவரச் செய்துவிட்டு, அவரது ஆசிரமத்தை இடித்துத் தகர்த்துவிட்டனர். அவரையும் அடிக்கலாயினர்.

அப்போது ஜுரைஜ், ""உங்களுக்கு என்ன நேர்ந்தது? (ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?)'' என்று கேட்டார். மக்கள், ""நீர் இந்த விபச்சாரியுடன் உறவுகொண்டு அதன் மூலம் அவள் குழந்தை பெற்றெடுத்துவிட்டாள்'' என்று கூறினார். உடனே ஜுரைஜ், ""அந்தக் குழந்தை எங்கே?'' என்று கேட்டார். மக்கள் அந்தக் குழந்தையைக் கொண்டுவந்தனர்.
அப்போது ஜுரைஜ், ""நான் தொழுது கொள்ளும்வரை என்னை விட்டுவிடுங்கள்'' என்று கூறிவிட்டுத் தொழுதார். தொழுகை முடிந்ததும் அந்தக் குழந்தையிடம் வந்து, அதன் வயிற்றில் (தமது விரலால்) குத்தினார். பிறகு ""குழந்தாய்! உன் தந்தை யார்?'' என்று கேட்டார். அதற்கு அக்குழந்தை, ""இன்ன ஆட்டு இடையன்தான் (என் தந்தை)'' என்று பேசியது.

(உண்மையை உணர்ந்துகொண்ட) அம்மக்கள், ஜுரைஜை முன்னோக்கிவந்து அவரை முத்தமிட்டு அவரைத் தொட்டுத் தடவினர். மேலும், ""தங்களது ஆசிரமத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித்தருகிறோம்'' என்று கூறினார்கள். அதற்கு ஜுரைஜ், ""இல்லை; முன்பிருந்ததைப் போன்று களிமண்ணால் கட்டித் தாருங்கள் (அதுவே போதும்)'' என்று கூறிவிட்டார். அவ்வாறே மக்களும் கட்டித்தந்தனர்.

(மழலைப் பருவத்தில் பேசிய மூன்றாமவர்:) ஒரு குழந்தை தன் தாயிடம் பாலருந்திக்கொண்டிருந்தது. அப்போது வனப்புமிக்க ஒரு மனிதன் மிடுக்கான வாகனமொன்றில் பயணம் செய்து கொண்டிருந்தான். உடனே அக்குழந்தையின் தாய், ""இறைவா!  இதோ இவனைப் போன்று என் மகனையும் ஆக்குவாயாக!'' என்று பிரார்த்தனை செய்தாள். அக்குழந்தை மார்பை விட்டுவிட்டு அப்பயணியைத் திரும்பிப் பார்த்து, ""இறைவா! இவனைப்போல் என்னை ஆக்கிவிடாதே'' என்று பேசியது. பிறகு மறுபடியும் மார்புக்குச் சென்று பால் அருந்தலாயிற்று.

பிறகு தாயும் மகவும் ஓர் அடிமைப் பெண்ணைக் கடந்துசென்றனர். மக்கள் அவளை, ""நீ விபச்சாரம் செய்தாய்; திருடினாய்'' என்று (இடித்துக்) கூறி அடித்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவளோ, ""அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; பொறுப்பாளர்களுள் அவனே நல்லவன்'' என்று கூறிக்கொண்டிருந்தாள். அப்போது அக்குழந்தையின் தாய், ""இறைவா! என் மகனை இவளைப் போன்று ஆக்கி விடாதே'' என்று கூறினாள். உடனே அக்குழந்தை பால் அருந்துவதை நிறுத்திவிட்டு அந்த அடிமைப் பெண்ணை நோக்கி(த் திரும்பி), ""இறைவா! என்னை இவளைப் போன்று ஆக்குவாயாக!'' என்று கூறியது.

அந்த இடத்தில் தாயும் மகவும் பேசிக் கொண்டனர். தாய் சொன்னாள்: உன் தொண்டை அறுபடட்டும்! அழகிய தோற்றம் கொண்ட மனிதர் ஒருவர் கடந்து சென்றபோது நான், ""இறைவா! இதோ இவனைப் போன்று என் மகனை ஆக்குவாயாக'' என்று கூறினேன். அப்போது நீ ""இறைவா! இவனைப் போன்று என்னை ஆக்கிவிடாதே!'' என்று கூறினாய்.

பிறகு மக்கள், "விபச்சாரம் செய்துவிட்டாய்; திருடிவிட்டாய்' என்று (இடித்துக்)கூறி அடித்துக் கொண்டிருந்த இந்த அடிமைப் பெண்ணைக் கடந்துசென்றபோது நான், ""இறைவா! என் மகனை இவளைப் போன்று ஆக்கிவிடாதே!'' என்று பிரார்த்தனை செய்தேன். அப்போது நீ ""இறைவா! இவளைப் போன்று என்னை ஆக்குவாயாக!'' என்று கூறினாய். (ஏன் அப்படிச் சொன்னாய்? என்று கேட்டாள்.)

அதற்கு அக்குழந்தை, "(வாகனத்தில் சென்ற) அந்த மனிதன் (அடக்குமுறைகளை அவிழ்த்து விடும்) கொடுங்கோலனாக இருந்தான். ஆகவே, நான், "இறைவா! இவனைப் போன்று என்னை ஆக்கிவிடாதே!' என்று கூறினேன். "நீ விபச்சாரம் செய்துவிட்டாய்' என்று கூறிக்கொண்டிருந்தனரே அப்பெண் விபச்சாரம் செய்யவுமில்லை. "நீ திருடிவிட்டாய்' என்று அவர்கள் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால், அவள் திருடவுமில்லை. ஆகவேதான், "இறைவா! அவளைப் போன்று என்னையும் (நல்லவளாக)  ஆக்குவாயாக!' என்று கூறினேன்'' என்று பதிலளித்தது.  (நூல்: முஸ்லிம்: 4986) இதை அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

நபி ஈசா (அலை) அவர்கள் பேசிய பேச்சில் தற்கால அறிவியல் கண்டுபிடிப்பிற்கான வழிகாட்டுதலும் உள்ளடங்கியுள்ளது. அதாவது க்ளோனிங் எனும் நவீன அறிவியல் கண்டுபிடிப்பை அனைவரும் அறிவோம். ஓர் உயிரினத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒற்றை செல் மூலம் உண்டாக்கப்படுகின்ற அதே போன்ற தோற்றமே க்ளோனிங். அவ்வாறு பிறக்கின்ற குழந்தைக்கோ உயிரினத்திற்கோ அந்த மூல செல்லின் தன்மை அப்படியே இருக்கும். அதாவது பேசும் திறன் கொண்ட செல்லிலிருந்து படைக்கப்பட்டால் அது உடனடியாகப் பேசும். அந்த அடிப்படையில்தான் ஈசா (அலை) அவர்களால் பிறந்தவுடனேயே பேச முடிந்தது என்பதும் இதில் அடங்கியுள்ளது. அதற்குமேல் அது இறையாற்றலால் இயம்பியது என்பதே முற்றிலும் உண்மையாகும். அது மட்டுமல்ல மர்யம் (அலை) அவர்களின் கற்புநெறியை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே அவரைப் பேச வைத்தான். ஆகவே அவரின் பேச்சிலிருந்து மர்யம் ஒரு விபச்சாரி அல்ல என்பதை மக்கள் விளங்கிக்கொண்டனர்.

மிகச் சிக்கலான நிலையில் மாட்டிக்கொண்ட தன் அன்பிற்குரிய அடியாரைக் காப்பாற்றுவதற்காக அந்த அடியாரின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு அல்லாஹ் தன் ஆற்றலால் அக்குழந்தையைப் பேசவைத்தான். அதன்மூலம் இறைநேசர் ஜுரைஜ் அவர்களின் அப்பழுக்கற்ற கற்புநெறி பாதுகாக்கப்பட்டது. மக்கள் அவரின் நற்பண்பையும் இறையச்சத்தையும் ஐயத்திற்கிடமின்றித் தெளிவாக விளங்கிக்கொண்டனர். மூன்றாவது குழந்தை பேசியதன் காரணமும் அதுதான். தவறாக விளங்கியிருந்த அன்னைக்கு உண்மையைத் தெளிய வைக்க வேண்டும் என்பதற்காக அவளின் குழந்தையைப் பேச வைத்தான் இறைவன். அதன்மூலம் அப்பெண் விபச்சாரி அல்ல; கற்புநெறி மிக்கவள்; அவள் திருடி அல்ல; வாய்மையானவள் என்பதையும் அந்த மிடுக்கான மனிதன் ஒரு கொடுங்கோலன் என்பதையும் அந்தத் தாய் அம்மழலையின் பேச்சிலிருந்து விளங்கிக்கொண்டாள்.

ஆக மூன்று குழந்தைகளையும் தொட்டிலில் பேச வைத்த காரணம் இறைவன் தன் ஆற்றலை மக்களுக்குக் காண்பிப்பதற்காக மட்டுமில்லை. மர்யம் (அலை), இறைநேசர் ஜுரைஜ், கொடுங்கோலனான மிடுக்கான மனிதன், விபச்சாரி-திருடி என மக்களால் அழைக்கப்பட்ட பெண்மணி ஆகியோரைப் பற்றிய உண்மை நிலையை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டதால்தான் பேசவைத்தான் என்பதை இம்மூன்று நிகழ்வுகளிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.

========================  (இன்ஷா அல்லாஹ் தொடரும்)







புதன், 17 செப்டம்பர், 2014

இருதார மணம் ஷரீஅத்திற்கு எதிரானதா?


            -மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில்.,

            உங்களுக்குப் பிடித்த பெண்களுள் இருவரையோ மூவரையோ நால்வரையோ மணமுடித்துக்கொள்ளுங்கள். (4: 3) ஒருவன் ஏதோ காரணத்திற்காக இரண்டாம் தாரமாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் அவனை இச்சமுதாயம் செய்யும் பரிகாசமும் கேலியும் கிண்டலும் கொஞ்ச நஞ்சமல்ல. இதோ போறானே, இவன் ரெண்டு பொண்டாட்டிக்காரன்; இவனுக்கு ஒன்னு இருக்கும்போதே ரெண்டாவது கேக்குதா?;  ஒன்னே வெச்சே கஞ்சி ஊத்த முடியல, இதுல ரெண்டாவது வேறயா?- இவை போன்ற கேலிப் பேச்சுகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாய நிலைதான் ஷரீஅத்படி இரண்டாம் திருமணம் முடித்த ஓர் ஆண் மகனுக்கு இருக்கிறது.

விபச்சாரம் செய்தவனைக்கூட இச்சமுதாயம் மன்னித்துவிடுகிறது. ஆனால் இரண்டாம் தாரமாக ஒருத்தியைத் திருமணம் செய்துகொண்டால் அது ஷரீஅத்திற்கே எதிரானதைப் போன்ற, அருவருக்கத்தக்க செயலைச் செய்துவிட்டதைப் போன்ற முரண்பாடான தோற்றத்தை ஏற்படுத்தி வைத்துள்ளது இச்சமுதாயம்.

திருமணம் என்பது ஓர் ஆணுக்கான தேவை. சிலரின் தேவை ஒன்றுக்கு மேற்பட்டதாக இருக்கலாம். அதற்கான தீர்வை இஸ்லாம் கூறியிருக்கின்றது. அதை அவர் பயன்படுத்திக்கொள்ளும்போது அவரைக் குறை சொல்ல வேண்டிய அவசியமில்லை. இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படி, ஒருவனுக்கு ஒருத்தி என்பது கிடையாது. மாறாக ஒருவனுக்கு ஒன்று முதல் நான்கு வரை எனச் சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. நான்கிற்கு மேல் சென்றால்தான் பழிக்க வேண்டும்; இகழ வேண்டும்; தண்டிக்க வேண்டும். அதேநேரத்தில் ஒரு பெண்ணைப் பொறுத்தமட்டில் ஒருத்திக்கு ஒருவன் என்ற நிலைப்பாட்டைத்தான் இஸ்லாம் கொண்டிருக்கிறது.

இன்றைக்கு நாம் பன்முகக் கலாச்சார மக்களோடு இணைந்து வாழ்வதால், நமக்குக் கொடையாக வழங்கப்பட்டுள்ள இஸ்லாமியப் பண்பாடுகளையும் சட்டங்களையும் பின்பற்றச் சங்கடப் படுகின்றோம்; வெட்கப்படுகின்றோம். இஸ்லாமியப் பண்பாடுகள், சட்டங்கள், நெறிமுறைகள் ஆகியவற்றின் பயன்களை நாமே புரியாமல் இருக்கின்றோம்; புரிந்தோர் பிறருக்கு அதன் நன்மைகளைப் புரிய வைக்காமல் அமைதியாக இருக்கின்றோம். அதனால்தான் நாம் பல்வேறு சிக்கல்களுக்குள் சிக்குண்டதோடு அவற்றிலிருந்து மீள வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றோம் என்பது நிதர்சன உண்மை.

ஒருத்தி இருக்கவே இரண்டாவதாக ஒருத்தியை மணமுடிப்பது ஷரீஅத்திற்கு எதிரானதைப் போன்ற தோற்றம் புரையோடிப் போயிருப்பதால்தான் நீண்ட காலம் வாரிசே இல்லாத் தம்பதிகளாகச் சிலர் வாழ்வதை நாம் காணமுடிகின்றது. இறுதி வரை வாரிசே இல்லாமல் அத்தம்பதிகள் இறந்தும் விடுகின்றனர். இந்நிலைக்கு ஆட்பட்ட ஓர் ஆண் தன் முதல் மனைவி மூலம் குழந்தையைப் பெற்றெடுக்க முடியாவிட்டால் மற்றொரு பெண்ணை மனைவியாக்கிக்கொண்டு அவள்மூலம் குழந்தையைப் பெற்றெடுத்துக்கொள்ள வழிகாட்டுகிறது இஸ்லாம். ஆனால் அத்தகைய ஒருவர் வேறொரு பெண்ணை மணமுடிக்க முன்வந்தால், அது அவ்வளவு எளிதன்று. ஏனென்றால் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வேற்று மதக் கலாச்சாரத்தில் மூழ்கிப்போயிருக்கிறது இஸ்லாமியச் சமுதாயம். அப்படியே அவர் மணமுடிக்க வேண்டுமென்றால் முதல் மனைவியை மணவிலக்குச் செய்ய வேண்டும்; அல்லது அவள் இறந்தபின் அவர் மணந்துகொள்ளலாம். இது தவிர வேறு வழியே இல்லை.

ஒரு மனைவியோடு வாழ்கின்ற ஒருவன், தன் மனைவியிடம் எத்தனையோ குறைகளைக் காணலாம். இல்வாழ்வில் நாட்டமின்மை, குழந்தைகள் பெற்றுக்கொள்ள விருப்பமின்மை, இரத்தசோகை, சர்க்கரை நோய் போன்ற தீராத நோய்கள் உள்ளிட்ட எத்தனையோ குறைபாடுகளைக் காணலாம்.  ஆனால் அவன் பெருந்தன்மையோடு அந்த மனைவியோடு வெறுமனே வாழ்ந்துகொண்டு, வேறொரு பெண்ணையும் மணந்து கொள்ளலாம் என எண்ணுகின்றான். இவ்வளவு காலம் தன்னோடு வாழ்ந்தவளைத் திடீரென ஏன் மணவிலக்குச் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு  இரண்டாம் தாரமாக ஒருத்தியை மணந்துகொள்ள நாட்டம் கொள்கின்றான். ஆனால் இத்தகைய இளைஞனுக்கு இச்சமுதாயம் அவ்வளவு எளிதில் பெண் கொடுத்துவிடாது. ஏன், ஒரு கைம்பெண்ணோ, மணமுறிவு பெற்றவளோகூட அவ்வளவு எளிதில் முன்வருவதில்லை; வாழ்க்கையைப் பங்குபோட்டுக்கொண்டு விட்டுக் கொடுத்து வாழ எப்பெண்ணும் முற்படுவதில்லை. மேலும் ஷரீஅத்திற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. 

ஒருவனுக்கு ஒருத்தி இருக்கவே இரண்டாம் தாரமாக மற்றொருத்தியை மணந்துகொள்வதற்கான இயல்பான சூழ்நிலை சமுதாயத்தில் இல்லாததால்தான், அதிகமான மணமுறிவுகள் (தலாக்) நிகழ்கின்றன. ஆம், தன் மனைவி அடிக்கடி சண்டைபோடுகிறாள்; அடிக்கடி கோபப்படுகின்றாள்இத்தகைய ஏதோ காரணத்திற்காகத் தன் மனைவியைப் பிடிக்கவில்லை. சரி, அதைப் பொறுத்துக்கொண்டு வேறொரு பெண்ணையும் மணந்துகொண்டு வாழலாம் என்று நினைத்தால் இச்சமுதாயம் பெண் கொடுக்காது. மாறாக, ஏளனம் செய்யும்; ச்சீ எனத் துப்பும். அதற்காக இவளை மணவிலக்குச் செய்துவிடுவதுதான் ஒரே வழி. அப்போதுதான் நாம் வேறொரு பெண்ணை மணந்துகொள்ள முடியும் எனத் தீர்மானித்துவிடுகின்றான். அதனால்தான் மணவிலக்குகளும் மணமுறிவுகளும் தொடர்கின்றன.

மணவாழ்க்கையை இழந்த பெண்கள், எவ்விதப் பொறுமையுமின்றி மணவாழ்க்கையை முறித்துக்கொண்ட ஆண்களை விரும்புவர். ஆனால் தன் மனைவியின் குறைகளைப் பொறுத்துக்கொண்டு பொறுமையோடும் சகிப்புத்தன்மையோடும் வாழ்கின்ற ஓர் ஆண், இரண்டாம் தாரமாக மற்றொரு பெண்ணை மணமுடித்துக்கொள்ள முன்வந்தால் அவனைக் கேலியும் கிண்டலும் செய்வர்; எள்ளிநகையாடுவர்; புறக்கணிப்பர்.

இன்னும் சற்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், இரண்டு, மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு, எதிர்பாராவிதமாக இல்வாழ்வை இடையிலேயே இழந்துவிட்ட பல பெண்கள் இச்சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள்கூட ஓர் ஆடவனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட முன்வருவதில்லை. தனக்கும் தன் குழந்தைகளுக்கும் ஒரு காப்பாளனாக இருக்கட்டுமே என்ற எண்ணமில்லை. தனக்கெனத் தனியாக ஒருவன் வேண்டும்; அவனுக்கு ஏற்கெனவே மனைவி இருக்கக்கூடாது என்ற நிபந்தனையோடுதான் திருமணத் தகவலுக்கான வலைத்தளங்களில் பதிவு செய்து வைக்கின்றார்கள் பன்முகக் கலாச்சாரத்தில் ஊறிப்போய்விட்ட  இம்மங்கையர்.

ஒருவன் நல்லதொரு நிறுவனத்தில் பணியாற்றுகின்றான்; கை நிறையச் சம்பாதிக்கின்றான்ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியை வைத்து வாழ்க்கை நடத்த முடியும்; உடல்ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் எந்தக் குறையுமில்லை. இத்தகைய ஒருவனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட இச்சமுதாயத்தில் ஒரு பெண் உண்டா? ஒரு விதவைப் பெண்ணாவது முன்வருவாளா? வாழ்க்கையில் கையறு நிலையில் உள்ள, குழந்தையோடு மணவாழ்க்கையை இழந்துவிட்ட மங்கையாவது அவனை ஏற்றுக்கொள்வாளா?

ஒருவன் ஒரு பெண்ணை இரண்டாம் தாரமாக மணமுடித்துக்கொள்ள அவன் உடல்ரீதியாகத் தகுதியானவனா என்பதைத்தான் முதலாவதாக நோக்க வேண்டுமே தவிர, பொருளாதார ரீதியாகத் தகுதியானவனா என்ற கோணத்தில் உற்று நோக்குவது சமுதாயத்தின் அறியாமையேயாகும். ஏனெனில் இவ்வுலகில் வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் உணவு கொடுக்கும் பொறுப்பு அல்லாஹ்வின் கையிலுள்ளது. அது குறித்துக் கவலை கொள்ள வேண்டிய தேவையே இல்லை. அல்லாஹ்  திருக்குர்ஆனில் கூறுகின்றான்: (மனிதர்களே!) நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொலை செய்து விடாதீர்கள். நாமே அவர்களுக்கும் உங்களுக்கும் உணவளிக்கின்றோம்.   (17: 31) உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை. அவை (வாழ்ந்து) இருக்குமிடத்தையும், அவை (இறந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிந்தே இருக்கிறான். (11: 06) ஒருத்தி இருக்கும்போது இரண்டாவதாக மற்றொருத்தியைத் தாரமாக்கிக் கொள்பவனுக்கு அதற்கேற்றாற்போல் உணவு வழங்குவது இறைவனின் பொறுப்பு. மேலும், நீங்கள் பெற்றெடுத்த பிள்ளைக்கு உணவு கொடுக்க முடியாமல்தான் அவளுக்குத் திருமணம் செய்துகொடுக்கின்றீர்களா? இல்லையே!
திருமணம் பாலுணர்வின் வடிகால் என்று எண்ணுவதைத் தவிர, ஒருவன் ஒரு பெண்ணை மணந்துகொள்வதன்மூலம் வேறு எத்தனையோ தேவைகள் இருக்கின்றன. அவ்விருவரும் நிறைவேற்ற வேண்டிய எத்தனையோ சமுதாயப் பொறுப்புகள் இருக்கின்றன; அவ்விருவரும் இணைந்து சாதிக்க வேண்டியவை இருக்கின்றன. ஒருவன் தன் மனைவியரோடு இணைந்து சமுதாயச் சேவைகள் செய்யவோ, இயலாத மக்களுக்கு உதவிகள் செய்யவோ, மார்க்கப் பிரச்சாரம் செய்யவோ, மார்க்கச் சட்டங்களைப் போதிக்கவோ விரும்பலாம். இவற்றையெல்லாம் யாரும் தொலைநோக்குப் பார்வையோடு சிந்திப்பதே இல்லை; திருமணம் என்றவுடன் சிந்தையில் முந்திக்கொண்டு வந்து நிற்கும் ஒன்றை மட்டும் நினைத்துக்கொண்டிருப்பதே நம்முள் பலரின் வாடிக்கை. அதனால்தான்  ஒருவன் இரண்டாம் தாரமாக ஒருத்தியை மணந்துகொண்டான் என்று கேள்விப்பட்டதும் ஏளனம் செய்யத் தொடங்கிவிடுகின்றார்கள்.

ஷரீஅத் சட்டப்படி இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட முன்வராத பெண்கள் அல்லது தம் மகளை இரண்டாம் தாரமாக மணமுடித்துக் கொடுக்க முன்வராத பெற்றோர், "இச்சமுதாயத்தில் வரதட்சணை மிகுந்துவிட்டது; இளைஞர்கள் வரதட்சணை வாங்கிக்கொண்டுதான் மணமுடிக்கின்றார்கள்'' என்று பேசுவது எவ்வகையில் நியாயம்? மக்கள் ஷரீஅத் சட்டங்களைப் பின்பற்றி வாழ முனையாதபோது, சமுதாயத்தில் தமக்கெதிரான பழக்கவழக்கங்கள் உண்டாகத்தான் செய்யும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அது அவர்களுக்குப் பாதகமாக அமையும்போதுதான் அதன் வலியையும் வேதனையையும் அவர்கள் உணர்வார்கள்.

இளவயதில் வாழ்க்கையை இழந்தவள்; பிள்ளையைப் பெற்றுக்கொண்டு இளவயதில் கணவனை இழந்தவள்; பிள்ளையின்றி வாழ்க்கையை இழந்து முப்பது வயதைத் தாண்டிவிட்டவள்; வாழ்க்கையை இழந்து, பிள்ளைகளை வைத்துக்கொண்டு பணிக்குச் செல்பவள்; பணிக்குச் செல்லாமல் கையறு நிலையில் இரண்டு, மூன்று குழந்தைகளோடு தாய் வீட்டில் வாழ்க்கையை வெறுமனே கழித்துக்கொண்டிருப்பவள்-இப்படிப் பல்வேறு நிலைகளில் நம் சமுதாயப் பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் எதிர்காலம் சீரும் சிறப்புமாக அமைய ஷரீஅத் தெளிவான, எளிய வழியைக் காட்டியிருக்கின்றது.

எனவே தம் வாழ்க்கை இம்மையில் இஸ்லாமிய மார்க்கச் சட்டப்படி அமைய வேண்டும் என்ற நாட்டமுள்ள பெண்கள் பிற மதக் கலாச்சாரப் பழக்கவழக்கங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தன்னை மணக்க வரும் ஆடவனுக்கு, தான் எத்தனையாவது தாரம் என்று பாராமல், தன்னை இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகளுக்கு உட்பட்டு வாழ அனுமதிப்பானா என்ற கோணத்தில் மட்டும் பார்த்து மணந்துகொள்ள முன்வாருங்கள். அல்லாஹ்விற்காகவும் அவனுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்காகவும் விட்டுக் கொடுத்து, பொறுமையோடு வாழக் கற்றுக்கொள்ளுங்கள். இங்ஙனம் செயல்பட்டால் உங்களின் இம்மை-மறுமை வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
===============