வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

அழைப்புப் பணியில் பேச்சாற்றல் - எழுத்தாற்றலின் பங்கு!

 



-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

(பொறுப்பாசிரியர், இனிய திசைகள் மாதஇதழ்,

இமாம், மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம், சென்னை-28)


பேச்சாற்றல், எழுத்தாற்றல் இரண்டும் இரண்டு கண்களைப் போன்றவை. இரண்டையும் கற்றுக்கொள்வதும் இரண்டிலும் பயிற்சி பெறுவதும் மிகவும் அவசியமாகும். இவ்விரண்டும் ஒரு கல்வியாளர் தம் கல்வியை மக்களுக்குத் எடுத்துச் சொல்ல உதவும் ஊடகங்கள் ஆகும்.  ஆகவே கற்கும் காலத்திலேயே ஒவ்வொரு மாணவரும் இந்த இரண்டு ஆற்றல்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவப் பருவத்தில் கவனக் குறைவாக இருந்துவிட்டு, பிறகு வருத்தப்படுவதில் பயனில்லை. அதனால்தான் “சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்” என்று பாடி வைத்தார்கள். 


இன்றைய பெரும்பாலான அறிஞர்களின் கல்வி அவர்களுக்குள்ளேயே முடங்கிவிடுகிறது என்பதே உண்மை. அதேநேரத்தில் பேச்சாற்றல் மட்டும் உள்ளோர், தாம் கற்ற கல்வியைத் தம் பேச்சின் மூலம்  மக்களுக்குச் சேர்த்துவிடுகின்றனர். அத்தோடு எழுத்தாற்றலும் இருந்தால், அவர்கள்தாம் தம் கல்வியை  எழுத்தின் மூலம் இச்சமுதாயத்திற்கு என்றென்றும் பயனுள்ளதாக ஆக்க முடியும். அத்தகைய எழுத்தாளர்களின் உழைப்பைத்தான் இன்று நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.


எழுத்தின்மூலம் நாம் பதிவு செய்கின்ற நற்கருத்துகள் நூல்களாகப் பாதுகாக்கப்படுகின்றன. அவை எதிர்காலச் சமுதாயத்திற்கு மிகுந்த பயனளிக்கும் என்பது உறுதி. கடந்த காலங்களில் வாழ்ந்த முன்னோர்கள்  பதிவு செய்தவற்றைத்தான் இன்று நாம் வாசித்துக்கொண்டிருக்கிறோம். திருக்குர்ஆனின் விரிவுரைகள்,  நபிமொழித் திரட்டுகள், இஸ்லாமியச் சட்டவியல் (ஃபிக்ஹு) சார்ந்த நூல்கள், வரலாற்று நூல்கள் உள்ளிட்ட அனைத்தும் நமக்குக் கிடைத்துள்ளனவென்றால் அது அவர்களுடைய எழுத்தின் பயனே ஆகும். 


இஸ்லாத்தை நோக்கி அழைக்கின்ற அழைப்புப் பணியில் இரண்டு ஆற்றல்களும் பெரும் பங்கு வகித்துள்ளன. முதன்முதலாகப் பேச்சாற்றல்தான் பயன்படுத்தப்பட்டது. அந்த வகையில் ஒவ்வொரு மொழி பேசுவோருக்கும் அந்தந்த மொழிபேசும் இறைத்தூதர்களை அல்லாஹ் அனுப்பினான். அதனால் ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தமது தாய்மொழியில் பேசி, மக்களை ஓரிறைக் கொள்கை நோக்கி அழைத்தனர் என்பது திருக்குர்ஆன் கூறும் வரலாறு. அல்லாஹ் கூறுகின்றான்: “எந்தத் தூதரையும் அவருடைய சமுதாயத்தினர் பேசும் மொழியை உடையவராகவே நாம் அனுப்பி வந்திருக்கிறோம்.”     (அல்குர்ஆன்: 14: 4)

 

அந்த வகையில் நம்முடைய இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அரபிமொழியில் சிறப்பாகப் பேசுகின்ற ஆற்றலை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருந்தான். அவர்களின் இலக்கிய நயமிக்க பேச்சால் பலர் ஈர்க்கப்பட்டனர். “பேச்சுக்கு ஓர் ஈர்ப்பு உள்ளது” என்ற நபிமொழியே அதற்குச் சான்றாக உள்ளது. மேலும் அல்லாஹ் தன் தூதருக்கு அழகிய இலக்கிய நயத்தோடு பேசும் ஆற்றலை வழங்கியிருந்ததாலேயே அந்தத் தூதர் அரபியக் கவிஞர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஓரிறைக் கொள்கை நோக்கி ஈர்க்கவும் அழைக்கவும் இயன்றது.


அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் தோழர்கள் மத்தியில் அவ்வப்போது ஆற்றிய சின்னச்சின்னச் சொற்பொழிவுகளும் வழங்கிய அறிவுரைகளும் மக்கள் மனங்களைப் பண்படுத்தின;  தாமும் அவ்வாறே வாழவேண்டும் என்ற வேட்கையை விதைத்தன. அவர்களின் உரை அனைவருக்கும் ஓர் உற்சாகப் பானமாக இருந்தது. புதிது புதிதாகப் பலர் இஸ்லாமிய மார்க்கத்தை நோக்கி வந்தனர். 


நபியவர்களுக்குப்பின், அவர்களின் பாசறையில் பயின்ற நல்வழிபெற்ற கலீஃபாக்கள் தம் திறமைமிகு பேச்சால் மக்களை ஓரிறைக்கொள்கை நோக்கி அழைத்தார்கள். அத்தோடு தம் ஆட்சியைச் சிறப்பாக நடத்திய காரணத்தால் அதைப் பார்த்தே பலர் ஓரிறைக் கொள்கையை ஏற்றுக்கொண்டனர். அனைவரையும் சமமாக நடத்தினர். அனைவருக்கும் சமநீதி வழங்கினர் என்பது வரலாறு. 


பேச்சாளர்கள் செய்த அழைப்புப் பணி: ஷேக் அப்துல் காதிர் ஜீலானீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் சபையில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து அவர்தம் பேச்சைக் கேட்பார்கள். ஆயிரக்கணக்கானோர் அவர்தம் பேச்சால் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்று வரலாறு பதிவு செய்துள்ளது. அவர்களைத் தொடர்ந்து ஒவ்வொரு காலக் கட்டத்திலும் பேச்சாளர்கள் இருந்துள்ளார்கள். தமிழ்நாட்டில் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரி தொடங்கப்பட்ட பின் அங்கிருந்து படித்துப் பட்டம் பெற்றுச் சென்ற ஆலிம்கள் பலர் பேச்சாளர்களாக உலா வந்தார்கள். ஒவ்வோர் ஊரிலும் தங்கியிருந்து மார்க்கப் பணியாற்றினார்கள். தம் பேச்சுத் திறனால் மக்கள் மத்தியில் மார்க்கப் போதனைகளைப் போதித்தார்கள். அவர்களுள் ஷம்ஸுல் ஹுதா பாகவி, கலீல் அஹ்மத் கீரனூரி, மணிமொழி மௌலானா எம்.ஜி. கலீல் ரஹ்மான் பாகவி, டிஜேஎம். ஸலாஹுத்தீன் ரியாஜி, கலந்தர் மஸ்தான் மஹ்ழரி, முஹம்மது ஷப்பீர் அலீ பாகவி, பி.எஸ்.பி.ஜைனுல் ஆபிதீன் பாகவி -ரஹிமஹுமுல்லாஹ் - உள்ளிட்ட பலர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். 


கடிதம்மூலம் அழைப்புப் பணி: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எழுதப் படிக்கத் தெரியாத உம்மி நபியாக இருந்தாலும், தம் பேச்சால் மக்களை ஓரிறைக் கொள்கை நோக்கி ஈர்த்ததைப்போன்று, அழைப்புப் பணிக்கு எழுத்தையும் பயன்படுத்தினார்கள். அந்த அடிப்படையில் எழுதத் தெரிந்த எழுத்தர்கள் மூலம் அண்டை நாட்டு அரசர்களுக்குக் கடிதம் எழுதி, தூதர்கள்மூலம் அழைப்பு விடுத்தார்கள். அவர்களுள் சிலர் இஸ்லாத்தை ஏற்றனர்; வேறு சிலர் மறுத்தனர். அந்த நேரத்தில் மறுத்தவர்கள் பிற்காலத்தில் முஸ்லிம்களால் வெற்றிகொள்ளப்பட்டார்கள் என்பது வரலாற்று உண்மை.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எழுதிய கடிதத்தை எடுத்துக்கொண்டு தூதராகச் சென்றார் நபித்தோழர் திஹ்யத்துல் கல்பீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். புஸ்ரா நகர ஆட்சியர் (ஹாரிஸ் பின் அபீஷம்ர்) வாயிலாக ஹெராக்ளியஸிடம் ஒப்படைக்கும்படி கூறியிருந்தார்கள். ஹெராக்ளியஸ் அதை வாசிக்கச் செய்தார். அந்தக் கடிதத்தில் (பின்வருமாறு) எழுதப்பட்டிருந்தது:


அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்... இது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாகிய முஹம்மதிடமிருந்து ரோமாபுரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்படும் கடிதம்:) நேர்வழியைப் பின்பற்றியவர் மீது சாந்தி நிலவட்டும்.


இறை வாழ்த்துக்குப்பின் (விஷயம் என்னவென்றால்); இஸ்லாத்தை ஏற்குமாறு உங்களை நான் அழைக்கின்றேன். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். (ஏற்றுக்கொண்டால் ஈருலகிலும்) நீங்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். (நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால்,) அல்லாஹ் உங்களுக்குச் சேரவேண்டிய நன்மையை இருமடங்காகத் தருவான். நீங்கள் புறக்கணித்தால், (உங்கள் நாட்டுக்) குடிமக்களின் பாவமும் (அவர்கள் இஸ்லாத்தை ஏற்காமல் போவதன் குற்றமும்) உங்களையே சாரும்... என்று கடிதம் தொடர்கிறது. (புகாரீ: 7) ஆக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுத்து மூலமும் அழைப்புப்பணியை மேற்கொண்டுள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது. 

 

அழைப்புப் பணியாளர்கள்: இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்புவதற்கும் போதிப்பதற்கும் நபித்தோழர்கள் பல்வேறு நாடுகளுக்கும் நகரங்களுக்கும் சென்றார்கள். கடல் கடந்து சென்றவர்களும் உண்டு. அவர்கள் ஆங்காங்கே இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்துக்கூறி, அதன் அறவுரைகளைப் போதித்தார்கள் என்பது நாம் அறிந்த வரலாறு. அவர்களைத் தொடர்ந்து அந்தந்த நாடு நகரங்களில்  கற்றவர்களுக்கும் அத்தகைய உணர்வு ஏற்பட்டு, அவர்களும் அழைப்புப் பணிக்காகப் பயணம் செய்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

 

அந்த வகையில் நபியவர்களின் காலத்திலேயே அரபு வணிகர்கள் வியாபாரத்திற்காக இந்தியாவிலுள்ள கேரளாவிற்கு வருகை தந்தார்கள். அவர்களுள் மாலிக் பின் தீனார் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர். அவர்மூலம்தான் அம்மாகாண அரசரான சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா (Cheraman Perumal) என்பவர் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றார். இவரே இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும், தமிழரும் ஆவார். அவர் இறுதித்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறித்துக் கேள்விப்பட்டு, மக்கா சென்று நேரடியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கிறார். திரும்பி வரும் வழியில்  அவர் மரணத்தைத் தழுவுகிறார். அவரின் கட்டளைப்படியே கேரள மாநிலம் கொடுங்கலூரில் மாலிக் பின் தீனார் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையில் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டது. அது இன்று ‘சேரமான் பெருமாள் ஜும்ஆ மசூதி’ என்று அழைக்கப்படுகிறது. 


முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும்: அழைப்புப் பணியில் முஸ்லிம்களைப் போன்றே கிறிஸ்தவர்களும் ஈடுபட்டு வந்தனர். இந்தியாவில் தற்போது முஸ்லிம்களின் அழைப்புப் பணியின் வேகம் குறைந்துவிட்டாலும் அவர்களின் அழைப்புப் பணி இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அழைப்புப் பணியில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே மாபெரும் வித்தியாசம் இருந்தது. அதாவது அழைப்புப் பணி செய்வது முஸ்லிம்களுக்கு எளிதாகவும் கிறிஸ்தவர்களுக்குச் சிரமமானதாகவும் இருந்தது. ஏனெனில் முஸ்லிம்கள் ஏகத்துவக் கலிமாவைச் சொல்லிக்கொடுத்து எளிதில் முஸ்லிமாக்கிவிடுவார்கள். அதன்பிறகு அரபி எழுத்துகளைக் கற்பித்து, குர்ஆனை ஓதவைத்து விடுவார்கள். 


ஆனால் கிறிஸ்தவர்கள் ஞானஸ்நானம் செய்து கிறிஸ்தவராக மாற்றியபின் அவர்களுக்குத் தம்முடைய வேதத்தைக் கற்பிப்பது மிகப்பெரும் சவாலாக இருந்தது. ஏனெனில் அவர்களுடைய வேதம் ஹீப்ரு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. இந்திய மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது. அவர்களோ தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காளி உள்ளிட்ட பல்வேறு மொழிகளைப் பேசுபவர்கள். ஒவ்வொரு மாகாணத்திலும் கிறிஸ்தவத்தைப் போதிக்க ஒவ்வொரு மொழியைக் கற்க வேண்டிய நிர்ப்பந்த நிலை அவர்களுக்கு இருந்தது. எனவே அவர்கள் தம் வேதத்தை இங்குள்ளோருக்குக் கற்பிக்க மிகவும் சிரமப்பட்டார்கள். அதனால்தான் மதத்தைப் பரப்ப வந்த ஜி.யு. போப் (வீரமா முனிவர்) தமிழைக் கற்று, அதன்மூலம் திருக்குறளைப் படித்து, அதன் இலக்கிய அழகால் ஈர்க்கப்பட்டு, திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் என்பது வரலாற்று உண்மையாகும்.


மொழிபெயர்ப்புக் கலை: அப்பாஸிய கலீஃபா மன்சூர் (714  - 775 கி.பி.) முதல் கலீஃபா ஹாரூன் அர்ரஷீது (769 - 809 கி.பி.) காலக் கட்டம் வரை சமஸ்கிருதம், கிரேக்கம் ஆகிய மொழிகளிலிருந்து பற்பல நூல்கள் அரபிக்கு மொழி பெயர்க்கப்பட்டன.  கி.பி. 786இல் ஹாரூன் அர்ரஷீது பதவி ஏற்றபின் அறிஞர்கள் பலரை ஒன்றுகூட்டி ‘தாருல் ஹிக்மா’ என்ற அறிவாலயத்தை நிறுவி கல்விக்கண் திறந்தார். அவர்தம் மகன் கலீஃபா மஃமூன் அர்ரஷீது  அதை விரிவுபடுத்தி தந்தையின் பணியைத் தொடர்ந்தார். இவருடைய காலத்தில் ஹுனைன் பின் இஸ்ஹாக், யுஹன்னா, கஸ்தா பின் லூகா, அப்துல் மஸீஹ் பின் நயீமா, பனூ மூஸா சகோதரர்கள், அல்-குவாரிஸ்மி, ஸாபித் பின் குர்ரா, அல்கிந்தீ உள்ளிட்ட பலர் மொழிபெயர்ப்பு வல்லுனர்களாக இருந்தனர்.


இஸ்லாம் குறித்த பல்வேறு செய்திகளையும் அறிவுக் கருவூலங்களையும் பிற நாட்டினர் தெரிந்துகொள்ள இந்த மொழிபெயர்ப்பு நூல்கள்தாம் உதவியாக அமைந்தன. அத்தகைய அறிவுப் புரட்சியைத்தான் மன்னர் ஹாரூன் அர்ரஷீது தொடங்கிவைத்தார். அவருக்குப்பின் அவர்தம் மகன் கலீஃபா மஃமூன் அர்ரஷீது அதனைத் தொடர்ந்தார். மேலும் பிறநாட்டு அறிவுகளும் இஸ்லாமிய நாடுகளை நோக்கி வந்தன. அங்கிருந்துதான் மற்ற நாடுகளுக்கு இந்தக் கல்வியறிவெல்லாம் பரவின.    


இறைநேசர்களின் அழைப்புப் பணி: நாகூர் ஷாஹுல் ஹமீது ரஹிமஹுல்லாஹ்,  ஏர்வாடி இப்ராஹீம் ரஹிமஹுல்லாஹ், திருச்சி நத்தர்ஷா ரஹிமஹுல்லாஹ் உள்ளிட்டோர் தம் அழகிய பேச்சாலும் இனிய நற்குணங்களாலும் மக்கள் மத்தியில் இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்பினார்கள். ஷேக் ஸதக்கத்துல்லாஹ் அப்பா  ரஹிமஹுல்லாஹ், உமறுப்புலவர்  ரஹிமஹுல்லாஹ் உள்ளிட்டோர் இஸ்லாமிய மார்க்கத்தைத் தம் கவித்திறனால் பரப்பினார்கள். ஷேக் ஸதக்கத்துல்லாஹ் அப்பா  ரஹிமஹுல்லாஹ், உமறுப்புலவருக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்றை உரைநடையில் சொல்ல, அதைக் கேட்டுக் கேட்டு அவர் காவியமாகப் பாடினார். அதுவே ‘சீறாப்புராணம்’ என்றழைக்கப்படுகிறது. 


பாமர மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், கேள்வி-பதில் வடிவிலும், பாடல்களாலும் இயற்றப்பெற்ற பல்வேறு நூல்கள் முஸ்லிம்கள் மத்தியில் உலா வந்தன. நூறு மசாலா, ஆயிரம் மசாலா, பக்திப் பாமாலை, நசீகத்து நாமா, தரீக்குல் ஜன்னா, பெண்புத்தி மாலை உள்ளிட்டவை பெண்கள் மத்தியில் பிரபலமாக விளங்கின. சேக் பீர்முகம்மது சாகிபு எழுதிய இருபதுக்கும் மேற்பட்ட இஸ்லாமியத் தமிழ் ஞான இலக்கியங்கள் உள்ளன. மச்சரேகைச் சித்தரின் பேரின்பச் சதகம், சாம் நைனா லெப்பை ஆலிம் எழுதிய அதபுமாலை, ஆலிப்புலவர் எழுதிய மிகுராசு மாலை, திருப்பாலைக்குடி சீதக்காதிப் புலவர் எழுதிய அபூசகுமா மாலை, செய்யது அனபிய்யா புலவர் எழுதிய நபிகள் நாயகம் பிள்ளைத்தமிழ், அபீபு முகமது லெப்பை எழுதிய மக்காக் கலம்பகம் முதலான நூல்கள் அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள் இஸ்லாமியக் கொள்கையையும், நன்னெறிகளையும், வரலாறுகளையும் தெரிந்துகொள்ளப் பேருதவியாக இருந்தன. முன்னோர்களின் காலம் முடிந்தபோதே அவர்களோடு அந்த நூல்களின் ஞானமும் முடிவுக்கு வந்தது.


 திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு: ஆயிரம் ஆண்டுகளாகத் தேவைப்பட்ட ஒரு நூலான திருக்குர்ஆன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 1949ஆம் ஆண்டு முதன்முதலாக வெளிவந்தது. கண்ணியத்திற்குரிய மௌலவி ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்கள் அதனை மொழிபெயர்த்தார். அதன்பின்னர்தான் தமிழ் முஸ்லிம்கள் திருக்குர்ஆனைப் படித்து, அதன் பொருளை அறிந்துகொள்ளத் தொடங்கினார்கள். பின்னர் அவர்களின் செயல்பாடுகளில் மாற்றமும் முன்னேற்றமும் காணப்பட்டன. 


நபிமொழித் தொகுப்பு தமிழாக்கம்: திருக்குர்ஆன் தமிழாக்கம் வெளிவந்து, நாற்பதாண்டுகளுக்குப் பிறகு, 1994ஆம் ஆண்டு ரஹ்மத் பதிப்பகத்தின்மூலம் ஸஹீஹுல் புகாரீ  தமிழாக்கம் வெளியிடப்பட்டு, அது தமிழ்நாட்டைத் தாண்டி, தமிழ்பேசும் மக்கள் வாழும் நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, துபை, குவைத் முதலான நாடுகளுக்கும் பரவியது. அதுவரை நபிமொழிக் கலை குறித்து மக்கள் மத்தியில் அவ்வளவாக விழிப்புணர்வு இல்லாதிருந்தது. அதன்பிறகுதான் நபிமொழிகள் குறித்த புரிதல் மக்கள் மத்தியில் ஏற்பட்டது. புகாரீ தமிழாக்கத்தைத் தொடர்ந்து முஸ்லிம், ஜாமிவுத் திர்மிதீ, சுனன் அபூதாவூத், சுனனுந் நஸாயீ, சுனன் இப்னுமாஜா ஆகிய ஆறு (ஸிஹாஹ் ஸித்தா) நூல்கள் வெளிவந்தன. நபிமொழிக் கலை குறித்த தெளிவு மக்கள் மத்தியில் ஏற்படுவதற்கு இந்த மொழிபெயர்ப்பு நூல்கள் மிகப்பெரும் காரணமாக அமைந்தன. 


பின்னர் அந்த நிறுவனமே திருக்குர்ஆன் விரிவுரை நூலான தஃப்ஸீர் இப்னுகஸீர் தமிழாக்கத்தை வெளியிட்டது. பிறகு ஆயிஷா பதிப்பகம் என்றொரு நிறுவனம் இப்னுகஸீர் ரஹிமஹுல்லாஹ் எழுதிய ‘அல்பிதாயா வந்நிஹாயா’ (தொடக்கமும் முடிவும்) எனும் இஸ்லாமிய வரலாற்று நூலைத் தமிழில் வெளியிடத்தொடங்கியது. அடுத்தடுத்த நிறுவனங்கள் தோன்றி, தாமும் சமுதாய நன்மைக்காக ஏதாவது ஒரு வகையில் உழைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் வெவ்வேறு நபிமொழித் தொகுப்பு நூல்களை வெளியிடத் தொடங்கின. ஆக இன்று ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நிறுவனங்கள் சென்னையில் அமைந்துள்ளன. அவை இச்சமுதாய மக்களுக்கான நூல்கள் தேவையை நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றன.


இவ்வாறு எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் இஸ்லாமிய மார்க்கம் மக்கள் மத்தியில் பரவத் தம்மால் இயன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைச் செய்திருக்கின்றார்கள். கடந்த காலங்களில் மட்டுமல்லாது தற்காலத்திலும் இம்மார்க்கத்திற்காக உழைப்பவர்களை அல்லாஹ் இப்புவியில் தோன்றச் செய்துகொண்டே இருக்கின்றான் என்பதே நிதர்சனமான உண்மை. எனவே நாமும் இஸ்லாமிய மார்க்கத்தைப் பிற சமுதாய மக்கள் மத்தியில் பரவச் செய்வதற்கு நமது பேச்சாலும் எழுத்தாலும் நம்மால் இயன்றதைச் செய்ய முனைவோம். வல்லோன் அல்லாஹ் அதற்கான நல்வாய்ப்பை நமக்கு நல்குவானாக. 

==============================0

 


திங்கள், 24 பிப்ரவரி, 2025

எழுதித் தீராக் கட்டளைகள்

    

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி 

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28

 

   

படைத்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நீங்கள் கூறுங்கள்: கடல் நீர் அனைத்தும் மையாக இருந்து என் இறைவனின் வாக்கியங்களை எழுத ஆரம்பித்தால், என் இறைவனின் (கட்டளை) வாக்கியங்கள் முடிவதற்கு முன்னதாகவே இந்தக் கடல் மை அனைத்தும் தீர்ந்துவிடும். அதைப் போல் இன்னொரு பங்கு (கடலைச்) சேர்த்துக் கொண்டபோதிலும்கூட! (16: 109)

 

 

மற்றொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்: பூமியிலுள்ள மரங்கள் (செடிகள்) அனைத்தும் எழுதுகோல்களாகவும், கடல் நீரை மையாகவும் வைத்து (அது தீர்ந்து) பின்னும் ஏழு கடல் நீரையும் மையாக வைத்(து எழுதி முடித்)த போதிலும் அல்லாஹ்வுடைய (கட்டளை) வாக்கியங்கள் (எழுதி) முடிவு பெறா. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (31: 27)

 

 

இந்த வசனங்களைச் சிந்தித்தவாறே என்னுடைய கட்டுரையைத் தட்டச்சு செய்துகொண்டிருந்தேன். கணினித் தட்டச்சு விசைப்பலகையில் ஒவ்வோர் எழுத்துக்கும் ஒரு விசை (ரிமீஹ்) யைத் தட்ட வேண்டும். பல எழுத்துகளுக்கு இரண்டு தடவையும் வேறு பல எழுத்துகளுக்கு மூன்று தடவையும் அந்த விசையைத் தட்ட வேண்டியுள்ளது.  இடையிடையே அழித்தல் விசையையும் பயன்படுத்த வேண்டியிருந்தது. முற்றுப்புள்ளிக்குத் தனியே ஒரு விசையை அழுத்த வேண்டியிருந்தது. அதிலுள்ள ஒவ்வொரு விசையும் ஒரு கட்டளையாகும். நாம் இடுகின்ற கட்டளைக்கேற்பவே அந்தத் தட்டச்சு எழுத்துகள் பதிவாகின்றன. நூறு பக்கங்கள் கொண்ட ஒரு நூலைத் தட்டச்சு செய்து முடிக்க எத்தனைக் கட்டளைகளை நாம் இட வேண்டும்? அதாவது எத்தனைத் தடவை அந்த விசைப்பலகையின் விசையை நாம் தட்ட வேண்டும்? இதனைச் சிந்தித்துப் பார்த்தால், அவற்றை எழுத்துகளால் பதிவு செய்ய முடியாத அளவிற்கு எண்ணற்ற கட்டளைகள் உள்ளன என்பதை நாம் உணரலாம்.

 

 

ஒரு நூலைத் தட்டச்சு செய்ய இத்தனைக் கட்டளைகள் தேவைப்படுகிறதென்றால், இந்தப் பிரபஞ்சத்தை வழிநடத்த எத்தனையெத்தனைக் கட்டளைகள் தேவைப்படும் என்று சிந்திக்கும்போது பெரும் வியப்பாக இருந்தது.  அப்போதுதான் மேற்கண்ட வசனங்களின் பொருள் புரிந்தது. புவியின் மரங்களையெல்லாம் எழுதுகோல்களாக்கிஏழு கடல் நீரையும் மையாக்கி எழுதினாலும் அல்லாஹ்வின் கட்டளைகளை எழுதி முடித்துவிட முடியாது என்பதைத் தெளிவாகவும் எளிதாகவும் புரிந்துகொள்ள முடிந்தது.

 

 

இவ்வுலகில் எத்தனையோ மரங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு எத்தனையெத்தனை இலைகள் உள்ளன. அவை முளைப்பதும் வளர்ச்சியடைவதும் பின்னர் முதிர்ச்சியடைவதும், பிறகு அவை பழுத்துக் கீழே விழுவதும் இறைவனின் கட்டளையின்றி நடைபெறுவதில்லை. அப்படியானால் எண்ணற்ற மரங்களின் எண்ணிறந்த இலைகள் முளைப்பதற்கும், பசுமையாவதற்கும், முதிர்ச்சியடைந்து உலர்வதற்கும், பழுத்துக் கீழே விழுவதற்கும் எத்தனையெத்தனைக் கட்டளைகள் தேவைப்படும் என்பதை நாம் சிந்தித்தால் எழுதித் தீராக் கட்டளைகள் உள்ளன என்பதைப் புரிந்துகொள்ளலாம். அது குறித்துப் பின்வரும் இறைவசனம் பேசுகிறது:

 

  

மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்(றில் உள்ளவற்)றை அவனையன்றி வேறெவரும் அறியமாட்டார். நிலத்திலும், நீரிலும் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் அறியாமல் யாதோர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும் (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை. (6: 59)

 

 

உதிர்ந்துவிழும் இலைகளும் அல்லாஹ்வின் கட்டளைப்படியே செயல்படுகின்றன என்றால், முதிர்ந்துவரும் பயிர்களுக்குக் கட்டளைகள் இல்லாமல் போய்விடுமா? ஒவ்வொரு நாட்டிலும் கோடிக்கணக்கான டன்கள் அளவிற்கு விளையும் நெற்பயிர்கள், கோதுமைப் பயிர்கள் உள்ளிட்ட எத்தனையெத்தனைத் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் இப்புவியில் விளைகின்றன. அவையெல்லாம் தாமாகவே விளைந்துவிடுவதில்லை. எல்லாம் அல்லாஹ்வின் கட்டளைப்படியே விளைகின்றன. அவன் நாடிய நெல்மணியை ஏழு முதல் எழுநூறு மடங்கு வரை முளைக்கச் செய்வான்; அவன் நாடியவற்றைப் பதர்களாக ஆக்கிவிடுவான். எல்லாமே அவனுடைய கட்டளைகளுக்குப் பணிகின்றன; எல்லாம் அவனது கட்டளைப்படியே இயங்குகின்றன.

 

 

இப்புவியில் எத்தனையெத்தனை மரங்களும் செடிகளும் உள்ளன. அவற்றில் எத்தனையோ பூக்கள் பூக்கின்றன. அவை இறைவனின் கட்டளைப்படியே மலர்கின்றன. அவனுடைய கட்டளையில்லாதவை மலர்வதில்லை. பூப்பூத்து, காயாகி, பின்னர் கனியாகும் மரங்கள் ஏராளம் உள்ளன. அவனுடைய கட்டளை உள்ளவை மட்டுமே காய்க்கின்றன. அவனுடைய கட்டளை உள்ளவை மட்டுமே கனிகின்றன. அவனுடைய கட்டளை இல்லாதவை  பூவாகவே மடிந்துபோய்விடுகின்றன. இப்படிச் சிந்திக்கின்றபோது இறைவனின் பேராற்றல் நமக்குப் புலப்படுவதோடு  அவனுடைய வசனத்திற்கான பொருளும் புரியும்.

 

 

இப்புவியின் நிலப்பரப்பைவிட நீர்ப்பரப்பு நீளமானது. நிலப்பரப்பின் கட்டளைகளே எண்ணற்றவை எனும்போது  நீர்ப்பரப்பில் வாழும் உயிரினங்களுக்கு எத்தனையெத்தனைக் கட்டளைகள் இடப்பட வேண்டும் என்பதைச் சிந்தித்தால் சிந்தை அயர்ச்சியாகிவிடும். அதில் வாழும் ஒவ்வொரு மீனின் வாழ்நாள்களும் அது மீனவனின் வலையில் பிடிபடும் காலமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஒன்று மற்றொன்றிற்கு இரையாவதும், தன்னைவிடப் பெரிதுக்கு இரையாவதும் உண்டு. எதுவும் இறைவனின் பதிவேட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை.

 

 

ஆழிக்குள் அலைந்து திரியும் எண்ணற்ற வகை மீன்களோடு மனிதன் சாப்பிடுகிற, சாப்பிடக்கூடாத கோடானு கோடி உயிரினங்கள் உள்ளன. அவை அனைத்திற்கும் எந்தெந்த நேரத்தில் உணவு கொடுக்க வேண்டும் என்பதும், அவை மனிதன் வீசுகிற வலையில் சிக்குதல், அவை முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துத் தம் சந்ததிகளைப் பெருக்குதல் உள்ளிட்ட அத்தனையும் இறைவனின் கட்டளைப்படியே நடைபெறுகின்றன. ஆக அத்தனை உயிரினங்களுக்குமான கட்டளைகளைச் சற்றுச் சிந்தித்துப் பார்த்தால், அத்தனையும் எழுதித் தீராக் கட்டளைகள் என்பதை நாம் உய்த்துணர்ந்துகொள்ளலாம். 

 

 

உலகில் உலா வருகின்ற தேனீக்களைக் கவனித்தீர்களா? கோடானு கோடித் தேனீக்கள் உள்ளன. அவை  ஒன்றிணைந்து கூட்டுக் குடும்பமாக வாழ்கின்றன. ஒரு கூட்டில் ஒரு படி தேனைச் சேமிக்க அவை எத்தனையெத்தனை மலர்களை நாடிச் செல்கின்றன. ஒவ்வொரு மலராகப் பறந்து சென்று, அதன்மீது சில முறை வட்டமிட்டு, அதன் நுண்ணுணர்வுகளைத் தூண்டியபின் அதிலுள்ள தேனை உறிஞ்சி உட்கொண்டு, அதைத் தேனாகக் கக்கி, கூட்டில் சேர்க்கிறது. தேனீயின் ஒவ்வொரு செயலிலும் இறைவனின் கட்டளை உள்ளது. அது குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் பேசுகின்றான்:

 

 

உங்கள் இறைவன் தேனீக்கு மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள்ளும்படி அறிவூட்டினான். மேலும் "நீ ஒவ்வொரு பூவிலிருந்தும் புசித்து, உன் இறைவன் உனக்கு அறிவித்த எளிதான வழியில் (உன்னுடைய கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்’ (எனக் கட்டளையிட்டான்.) இதனால் அதன் வயிற்றிலிருந்து பல நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகின்றது. அதில் மனிதர்களுக்கு நிவாரணமுண்டு.  (16: 68-69)

 

 

மனித உடல் இறைவனின் ஓர் அற்புதமான படைப்பு. அது கோடானு கோடி செல்களால் ஆனது. பிறந்தது முதல் 21 வயது வரை வளர்ச்சியடைந்துகொண்டே செல்கிறான். அதன்பின் ஒவ்வொரு பருவத்திலும் வளர்சிதை மாற்றம் அவனுள் நிகழ்கிறது. அதாவது அவனுடைய பழைய செல்கள் இறந்துபோகின்றன; அவ்விடத்தில் புதிய செல்கள் பிறக்கின்றன. இவ்வாறு அவனது உடலில் பழைய செல்கள் இறப்பதும் புதிய செல்கள் தோன்றுவதும் தொடர்கின்றன. அதனால்தான் அவன் ஒவ்வொரு பருவத்திலும் மாற்றங்களைக் காண்கின்றான். ஆக அல்லாஹ் உயிர்கொடுத்தல், மரணிக்கச் செய்தல் ஆகிய பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கின்றான். ஒரு மனித உடலுக்கே கோடானு கோடிக் கட்டளைகள் எனும்போது கோடானு கோடி மனிதர்களுக்கு எத்தனையெத்தனைக் கட்டளைகள் என்பதை எண்ணிப் பார்க்கும்போது வியப்பு மேலிடுகிறது; சிந்தை நிலைகுலைந்து போகிறது.

 

 

மனித உடலின் வளர்ச்சிக்கு இத்தனைக் கட்டளைகள் என்றால், அவனுடைய அன்றாடச் செயல்பாடுகளுக்கு எத்தனையெத்தனை கட்டளைகள் இட வேண்டிவரும்? அவனது செயல்பாடுகள் அனைத்தும் அல்லாஹ்வின் அடக்கியாளும் ஆற்றலுக்குக்கீழ்தான் நடைபெறுகின்றன. ஒருவனின் முயற்சி வெற்றிபெறுவதும் மற்றொருவனின் முயற்சி தோல்வியில் முடிவதும் இறைவனின் கட்டளைப்படியே நடக்கின்றன. அவற்றிற்கெல்லாம் எத்தனையெத்தனைக் கட்டளைகள் தேவைப்படும் என்பதை எண்ணிப் பார்க்கும்போது இறைவனின் பேராற்றலை நாம் விளங்கிக்கொள்ளமுடிகிறது.

 

 

நிலத்தில் வாழும் மனிதர்களுக்கு மட்டும் அவன் கட்டளையிடுவதில்லை. நிலத்திற்குள் புதையுண்ட மனிதர்களை  எவ்வெப்போது என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நிலத்திற்குக் கட்டளையிடுகின்றான். புதையுண்ட மனிதர்களுள் யாரைத் தின்ன வேண்டும், எவ்வளவு தின்ன வேண்டும், எதைத் தின்னக் கூடாது, யாரைத் தின்னக்கூடாது என்றெல்லாம் இறைவன் கட்டளையிட்டுக்கொண்டே இருக்கின்றான். அது உண்மைதான் என்பதை நாம் காஃப் அத்தியாயத்திலுள்ள ஒரு வசனத்தில் காணலாம். “(மரணித்த) பின் அவர்களின் தேகத்தை மண் தின்று (கொஞ்சம் கொஞ்சமாகக்) குறைத்து (அழித்து)க் கொண்டிருப்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.” (50: 4)

 

 

ஆக அவன் கட்டளையிடாமல் எந்த அணுவும் அசைவதில்லை என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது. எனவே மனிதன் தனக்கு நடக்கும் எதைக் குறித்தும் கவலைப்படத் தேவையில்லை. எல்லாம் இறைவனின் கட்டளைப்படியே நடைபெறுகின்றன. அவனுடைய அறிவுக்கு அப்பாற்பட்டு எதுவும் நடந்துவிடுவதில்லை. ஆகவே ஏற்படும் சின்னச் சின்ன இழப்புகள் குறித்து வருந்தத் தேவையில்லை. நமக்கு வேண்டியதை இறைவனிடம் கேட்டுக்கொண்டே இருந்தால் அவன் நிச்சயம் நமக்கான தருணம் வரும்போது தந்துவிடுவான். எனவே கேட்பதை விட்டுவிடக் கூடாது.

 

  

என் இறைவன் மறைவானவை அனைத்தையும் அறிந்தவன். அவன் அறியாது வானங்களிலோ பூமியிலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் தப்பிவிடாது. அணுவைவிடச் சிறியதோ பெரியதோ (ஒவ்வொன்றும் "லவ்ஹுல் மஹ்ஃபூள்' என்னும்) தெளிவான குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை” (34: 3) என்று அல்லாஹ் கூறுகின்றான்.

 

 

ஆகவே அவனுடைய கட்டளையின்றி, அவனுடைய ஞானமின்றி இங்கு எதுவும் அசைந்திட முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை நம் அனைவருக்கும் அவன் தருவானாக.

====================


வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

எல்லோரும் நல்லோரே!

 


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

இந்தக் காலத்தில் நல்லவர்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்டதுஎன்று சிலர் அங்கலாய்த்துக் கொள்வதைக் கேட்டிருப்பீர்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. காட்சி ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் குற்றச் செய்திகளை மிகைப்படுத்தி வெளியிடுவதே அவ்வாறு நினைக்கத் தூண்டுகிறது.

 

 

இயல்புக்கு மாறாகவும் எதிராகவும் நடப்பதே செய்தி என்கிறோம். எனவே இயல்புக்கு மாறாக நடக்கின்ற எல்லாக் குற்றச் செயல்களையும் செய்தித்தாள்களில் வெளியிடுகின்றனர். காட்சி ஊடகங்களில்  ஒளிபரப்புகின்றனர்.  அவற்றைப் பார்க்கின்ற, கேட்கின்ற நாம் எல்லோரும் கெட்டவர்கள் அல்லது கெட்டவர்கள் அதிகரித்துவிட்டனர் என்ற மாய எண்ணத்திற்கு ஆளாகின்றோம்.

 

 

ஆனால் உண்மையில் பத்திலிருந்து இருபது சதவிகிதத்தினர் மட்டுமே இறைவிதிக்கு எதிரான குற்றங்களைச் செய்துகொண்டிருக்கின்றார்கள். அந்தச் செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பதால் குற்றங்கள் பெருகிவிட்டதைப் போலவும்  எல்லோரும் கெட்டவர்கள் என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கிறது. மாறாக எண்பது சதவிகிதத்தினர் இறைவனுக்குப் பயந்து நேர்மையாகவும் நீதியாகவும்  வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மத வேறுபாடின்றி  எல்லா மதங்களிலும்  நல்லோர் பலர் இருக்கவே செய்கின்றார்கள். சிற்சிலரே தவறுகளையும் குற்றச் செயல்களையும் செய்துகொண்டிருக் கின்றார்கள். அவர்களும் திருந்த வாய்ப்புண்டு.

 

 

எனவே எல்லோரும் குற்றம் செய்கின்றார்கள்; நாம் செய்தால் என்ன என்ற தவறான முடிவுக்கு வந்துவிடக் கூடாது. மீண்டும் சொல்கிறேன்- தவறு செய்வோர் மிக மிகக் குறைவு. குற்றச் செய்திகள் மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் வந்துகொண்டே இருப்பதால் தவறுகளும் குற்றங்களும் பெருகிவிட்டதைப் போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

நாம் ஒருவரைப் பார்க்கும்போது தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கிறோம். அதனால்தான் பிறரைப் பார்த்து அஞ்சுகிறோம். பிற மனிதர்களிடமிருந்து பாதுகாப்பைப் பெறுவதற்காகப் பல்வேறு பாதுகாப்புகளைக் கையாள்கிறோம். வீட்டைப் பூட்டுகிறோம்; வாகனத்தைப் பூட்டுகிறோம். வீட்டின் முன்பகுதியில் சுழல் கேமரா பொருத்துகிறோம். இவை அனைத்தும் அந்தப் பத்துச் சதவிகித மனிதர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளத்தானே தவிர, எல்லா மனிதர்களிடமிருந்து  தற்காத்துக்கொள்ள அன்று என்பதை நாம் உணர வேண்டும்.

 

 

ஒருவரைப் பார்த்தவுடன், இவர் நம் பொருள்களைத் திருடிச் சென்று விடுவாரோ, நம்மை ஏமாற்றிவிடுவாரோ, நம்மிடம் உள்ளதைப் பிடுங்கிக்கொள்வாரோ என்று எண்ணுகிறோம். இது தவறான எண்ணம். இப்படி ஓர் இறைநம்பிக்கையாளரை எண்ணக்கூடாதென நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்துள்ளார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும்.” (முஸ்லிம்: 5010)

 

 

ஒருவன் தன் சகோதரனைக் கேவலமாகக் கருதுவதே அவனுடைய பாவத்திற்குப் போதுமானதாகும். அதாவது ஒருவன் பாவம் செய்துவிட்ட பாவி என்று சொல்வதற்கு, அவன் பிறரைக் கேவலமாகக் கருதுவதே போதுமானதாகும். அதுவே அவனுக்கு அப்பெயரைப் பெற்றுத்தந்துவிடும். எனவே ஒரு மனிதரைப் பார்த்ததும் அவரை நல்லவராகவே கருத வேண்டும். அதைத்தான் பின்வரும் நபிமொழி உணர்த்துகிறது.

 

 

ஓர் இறைநம்பிக்கையாளரை நல்லவராகவே தவிர எண்ண வேண்டாம்என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். (இப்னுமாஜா: 3922)

 

 

பிறர் பொருளைத் திருடாத, பிறரை ஏமாற்றாத, நற்குணமுடையவன்தான் பிறரைப் பற்றி நல்லவிதமாக நினைப்பான். தவறுகளும் குற்றங்களும் செய்துகொண்டே இருப்பவன்தான் தன்னைப் போலவே பிறரும் இருப்பார்கள் என்று அஞ்சுவான். குற்றங்களோ தவறுகளோ செய்யாதவன் பிறரைப் பார்க்கும் பார்வையே வேறு. அவன் எல்லோரையும் நல்லவர்களாகவே பார்ப்பான்.

 

 

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்; காமாலைக் கண்ணுக்குக் காண்பதெல்லாம் மஞ்சள் ஆகிய பழமொழிகள் உணர்த்துவது, நாம் யாரை எந்தக் கோணத்தில் பார்க்கின்றோமோ அவ்வாறுதான் அவர்கள் தெரிவார்கள்; நம் உள்ளத்தில் கசடு இருந்தால் பார்ப்போரையெல்லாம் அந்த எண்ணத்தோடுதான் பார்க்கத் தூண்டும். நம் உள்ளம் தூய்மையாக இருந்தால் பார்ப்போரையெல்லாம் நல்லோராகப் பார்ப்போம். எனவே முதலில் தூய்மைப்படுத்த வேண்டியது நம் உள்ளத்தைதான்.

 

 

அப்படித்தான் இன்று பல்வேறு கோணங்களில் பயம் படரவிடப்பட்டுள்ளது. யாரைப் பார்த்தாலும் பயம். தொடரியில் பயணிக்கும்போது, எவ்வளவுதான் தாகம் ஏற்பட்டாலும் பக்கத்தில் உள்ளோரிடம் தண்ணீர் வாங்கிக் குடிக்க மாட்டோம்; எவ்வளவுதான் பசி ஏற்பட்டாலும் அருகில் உள்ளோரிடம் பிஸ்கட் வாங்கிச் சாப்பிட மாட்டோம்; அவர்களே தாமாக முன்வந்து கொடுத்தாலும் நாம் அதை வாங்கிக்கொள்ள மாட்டோம். எல்லாமே பயம்தான்; சந்தேகம்தான். திருடனாக இருப்பானோ, நம் பணத்தை அபகரித்துக்கொள்வானோ என்ற அச்சம்தான்.

 

 

ஊடகங்களின் அதீத வளர்ச்சியாலும் துரிதச் செய்திகளாலும் மனித உள்ளங்களில் பெருமளவில் பயம் விதைக்கப்பட்டுள்ளது. அவை பிற மனிதர்களின் மீதான நம்பிக்கையைக் கெடுத்துள்ளன; குறைத்துள்ளன. யாரைப் பார்த்தாலும் தவறாக எண்ணும் போக்கையே வளர்த்துள்ளன. இந்நிலையிலிருந்து வெளியேறி, யாரையும் தவறாகவோ இழிவாகவோ எண்ணாமல், இயல்பான வாழ்க்கை வாழ நாம் முற்பட வேண்டும்.

 

 

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: இறைநம்பிக்கைகொண்டோரே! மிகுதியான சந்தேகங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். ஏனென்றால், நிச்சயமாகச் சந்தேகங்களில் சில பாவமானவையாக இருக்கின்றன. (எவருடைய குற்றத்தையும்) நீங்கள் துருவித்துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம்... (49: 12)

 

 

ஆசிரியரைப் பார்க்கும் பார்வை மரியாதையான பார்வையாக இருக்க வேண்டும். அவர்மீது மரியாதை இருந்தால்தான் அவர் கற்றுத் தருவதை நாம் கவனிக்க முடியும்; அதை உள்வாங்க முடியும். ஆசிரியர்மீது மரியாதை கலந்த பயம் இருந்தால்தான் நாம் அவர் சொல்லித் தருவதைக் கற்றுக்கொள்ள முடியும். இப்படி ஒவ்வொருவர்மீதும் மரியாதையும் அன்பும் இருந்தால்தான் நாம் காண்போர்மீது மரியாதை செலுத்தத் தோன்றும். ஆகவே நாம் காணும் எல்லோரும் நல்லோரே என்று எண்ணுவோம். நம் எண்ணத்திற்கேற்பவே இறைவன் நம் செயல்பாடுகளை அமைப்பான்.

==========================

செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

இந்தக் காலத்தில் இப்படியும் ஒருவரா?!

 


--------------------------------------------------

எனக்குத் தெரிந்த ஒருவர் (இப்ராஹீம்) நேற்று (10.02.2025) என்னை அலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

 

நான் 45 ஆண்டுகளுக்குமுன் அரிசி வியாபாரம் செய்துகொண்டிருந்தபோது, அதே தொழிலைச் செய்துவந்த ஒருவரோடு எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. அப்போது எனக்கு 18 அல்லது இருபது வயது இருக்கும். அவருக்கு அப்போது 45 வயது இருக்கும். அவரும் நானும் தொழில் செய்து வந்த வேளையில், ஒரு நாள் நான் அவரிடம்  இருபது ரூபாய் கடன் வாங்கினேன். பிறகு அதைத் திருப்பிச் செலுத்த மறந்துவிட்டேன்.

 

இப்போது நான் என்னுடைய 66ஆம் அகவையில் ஓய்வுக் கட்டிலில் படுத்துக்கொண்டு, பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டிருந்தபோது, அது என் நினைவுக்கு வந்தது. உடனடியாக எழுந்து அமர்ந்துகொண்டு, அதைத் திருப்பிக் கொடுப்பது பற்றிச் சிந்தித்தேன். அந்தத் தொகையை எடுத்துக்கொண்டு, என் மகனுடைய துணையோடு அவருடைய மஹல்லாவிற்கு, அவரைத் தேடிச் சென்று விசாரித்தேன். அவருடைய பெயரைச் சொல்லி (உஸ்மான்), அவர் இருக்கின்றாரா அல்லது அவர்தம் உறவினர்கள் யாரேனும் இருக்கின்றாரா என்றெல்லாம் விசாரித்துப் பார்த்தேன். அந்தப் பெயரில் வயதான யாரும் இங்கு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியவில்லையே என்ற மனவருத்தத்தோடு திரும்பி வந்துவிட்டேன்.

 

பிறகு ஆலிம்கள் சிலரிடம் இதற்கான தீர்வு கேட்டேன். திருப்தியான பதில் இல்லை. அதனால் உங்களிடம் கேட்டால் ஒரு தீர்வு கிடைக்குமே என்ற எண்ணத்தில்தான் உங்களை அழைத்தேன் என்றார்.

 

எப்போது, எவ்வளவு கடன் வாங்கினீர் என்று விசாரித்தேன்.

 

1980ஆம் ஆண்டு இருக்கலாம்; இருபது ரூபாய் மட்டும் கடன் வாங்கினேன் என்றார்.

 

இப்போது எவ்வளவு அவருக்குக் கொடுக்கப்போகிறீர்?”

 

கணக்குப் பார்த்ததில் 2700 ரூபாய் சொச்சம் வருது. முழுமையாக 3000 ரூபாய் கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

 

எப்படிக் கணக்குப் போட்டீங்க?”

 

அன்றைய தங்கத்தின் விலையையும் இன்றைய விலையையும் ஒப்பிட்டுக் கணக்கிட்டேன் என்றார்.

 

அப்படியா? சரியாகத்தான் கணக்குப் போட்டுள்ளீர் என்றேன்.

சரி ஹஜ்ரத், அந்தத் தொகையை நான் எப்படி அவருக்குக் கொடுப்பது? அதற்கான தீர்வைச் சொல்லுங்க என்றார்.

 

அதற்கு ஒரு வழி இருக்கு. அதாவது அவருடைய பெயரில் (நிய்யத் வைத்து) யாரேனும் ஓர் ஏழைக்கு அந்தத்  தொகையைத் தர்மம் செய்துவிடுங்கள். அல்லாஹ் அதற்கான நன்மையை அவருடைய கணக்கில் சேர்த்துவிடுவான்; உங்களுக்கும் நன்மை உண்டு என்றேன்.

 

அதைக் கேட்ட மகிழ்ச்சியில், “அல்ஹம்து லில்லாஹ் என்றார். நீங்க இந்தத் தீர்வைச் சொன்ன பிறகுதான் என்னுடைய கவலை நீங்கியது. ரொம்ப ஷுக்ரியா (நன்றி) ஹஜ்ரத் என்றார்.

 

என் பதிலைக் கேட்டு மனத்திருப்தியடைந்த அவரைப் பார்த்து நான் பெருவியப்படைந்தேன். இந்தக் காலத்தில் இப்படியும் ஒருவரா!

 

எத்தனையோ பேர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடிக்கிறார்கள்; இறுதி வரை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றிவிடுகின்றார்கள். அப்படிப்பட்ட காலத்தில், தம் நினைவுகளை அசைபோட்டு, தாம் வாங்கிய இருபது ரூபாயை நினைவில் கொண்டுவந்து, அதை இன்றைய மதிப்பிற்கேற்ப நிறைவேற்ற வழிதேடுகிறாரே என்று வியந்தேன்.  

    

இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போதித்த போதனைகளைப் பின்பற்றுவதில் எவ்வளவு ஆர்வமுடையவராய் இருக்கின்றார்! மறுமையை எண்ணி எவ்வளவு அஞ்சுகிறார்!

 

அடியார்கள் தனக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்துவிட்டால் அதை அல்லாஹ்  மன்னித்துவிடுவான். ஆனால் ஓர் அடியார் மற்றோர் அடியாருக்குக் கொடுக்க வேண்டிய உரிமைகளில் குறை செய்தால் அதற்கான தீர்வை அந்த அடியாரிடம்தான் பெற வேண்டும். ஒருக்கால் அந்த அடியாரிடம் அவர் மன்னிப்புக் கேட்கலாம். பாதிக்கப்பட்ட அடியார் இறந்துபோயிருந்தால், அவருக்காகவும் தமக்காகவும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரலாம். அது தொகையாக இருக்கும் பட்சத்தில், அந்தத் தொகையை அந்த அடியார் பெயரில் யாரேனும் ஏழைக்குத் தர்மம் செய்துவிடலாம். இதை இன்றைய மனிதர்கள் உணர வேண்டும்.

 

இல்லையேல் மறுமையில் - தீர்ப்பு நாளில் அவ்விருவருக்கிடையே அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான். அங்கே பாதிக்கப்பட்ட மனிதருக்கு நியாயத் தீர்ப்பு வழங்கப்படும். உரிமை மீறலில் ஈடுபட்டவருடைய நன்மை பாதிக்கப்பட்டவருக்குக் கொடுக்கப்படும் என்பதை நினைவில் கொள்வோம்.

 

கடன் வாங்கியோர் இயன்ற அளவிற்குத் துரிதமாக அதனைத் திருப்பிச் செலுத்த முயலுங்கள்.


 ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகையில் துஆ செய்யும் போது, "இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று கூறுவார்கள்.  (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே!  தாங்கள் கடன் படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன?'' என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், "மனிதன் கடன்படும் போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்'' என்று பதிலளித்தார்கள். (புகாரீ: 2397)

 

அன்புடன்

மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

11 02 2025

=============================