திங்கள், 18 ஆகஸ்ட், 2025

படித்த முதிர்கன்னிகள்

     

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

கால் நூற்றாண்டுக்குமுன் இருந்ததைவிடத் தற்காலத்தில் முஸ்லிம்கள் மத்தியில் கல்விசார் விழிப்புணர்வு பரவலாகவே உள்ளது. ஆண்கள்-பெண்கள் என இருசாராரும் உயர்கல்வி பயின்று உயர்வடைகிறார்கள். இளங்கலைப் பட்டம், முதுநிலைப் பட்டம், இளம்முனைவர், முனைவர் பட்டம் வரை பெறுகின்றார்கள். இது வரவேற்கத்தக்கது; பாராட்டுக்குரியது. இந்நிலை மேன்மேலும் விரிவடைய வேண்டும். ஆனால் ஒன்றைப் பெறுகின்ற அவர்கள் மற்றொன்றை இழக்கின்றார்களே என்பதை நினைத்துத்தான் நமக்குப் பெருங்கவலையாக இருக்கிறது.

 

நம் வாழ்க்கையில் இளமைக் காலம் என்பது மிகக் குறுகிய காலமே ஆகும். அதைத் தவற விட்டுவிட்டால் மீண்டும் அதைப் பெற முடியாது. இளைஞர்களும் இளைஞிகளும் ஒரு பக்கம் படிப்பு, படிப்பு என்று முன்னேறுகிறார்கள்; மறுபக்கம் அவர்கள் தம் இல்வாழ்க்கையைத் தொலைக்கின்றார்கள். பெண்களுக்கான திருமண வயது 18 என்று இருக்கும்போது 25 வயதை எட்டிய பின்னரும் திருமணம் செய்துகொள்ளாமல் படிப்பு, பணி என்பதிலேயே தம் இளமைக் காலத்தின் ஒரு பகுதியை இழந்துவிடுகின்றார்கள். 25 வயதில் திருமணத்திற்காக மாப்பிள்ளை தேடத் தொடங்கும்போது பல்வேறு நிபந்தனைகளை விதித்து, பற்பல ஒப்பீடுகள் செய்வதிலேயே 27 வயதை அடைந்துவிடுகின்றார்கள்.

 

பிறகு ஒரு மாப்பிள்ளை வந்தால் வயது பொருத்தமாக இல்லை என்கிறார்கள். பின்னர் மற்றொருவரைக் காட்டினால் வேலை பொருத்தமாக இல்லை என்கிறார்கள். பிறகு மற்றொரு மாப்பிள்ளையைக் காட்டினால் சம்பளம் குறைவாக இருக்கிறது என்கிறார்கள். அதாவது மணப்பெண்  ஒரு பெரும் நிறுவனத்தில் பணிசெய்துகொண்டிருக்கிறாள். அவள் மாதந்தோறும் வாங்கும் சம்பளத்தைவிட மாப்பிள்ளையின் சம்பளம் குறைவாக உள்ளதால் அந்த மாப்பிள்ளை நிராகரிக்கப்படுகிறார். இப்படியே பொருத்தம் பார்த்து, நிராகரிப்பதிலேயே சில ஆண்டுகள் கழிந்துவிடுகின்றன. இப்போது பெண்ணின் வயது முப்பதை எட்டிவிட்டது. எனக்குத் தெரிந்து, படித்துப் பற்பல பட்டங்களை வாங்கிய பெண்கள் சிலர் 35 வயதை எட்டியும் தகுந்த மணாளர் கிடைக்காததால் இல்வாழ்க்கைக்குள் நுழைய முடியாமல் தவிக்கின்றார்கள்.

 

பிள்ளைப்பேறு: தாமதமான திருமணத்தால் பிள்ளைப்பேறு எளிதாகக் கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றார்கள். பெண்கள் சிலருக்குக் குழந்தைப்பேறு கிடைக்காமலேயே போய்விடுகின்றது. வேறு சிலர் குழந்தை பாக்கியத்திற்காகச் செயற்கைக் கருத்தரிப்பு மையங்களை நாடுகின்றார்கள். அவர்களுள் சிலர் தத்தமது கணவரின் அணுக்களை ஊசிமூலம் உட்செலுத்தி குழந்தையைப் பெற்றுக்கொள்கின்றார்கள். சிலருக்குக் கணவரின் அணுக்களின் வீரியம் குறைந்துவிடுவதால் அதில் குழந்தை பிறப்பதற்கான சாத்தியம் இல்லாதபோது பிற ஆடவரின் அணுக்களைக் கருப்பைக்குள் செலுத்தி குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். இவ்வாறு சிலர் இஸ்லாம் தடைவிதித்துள்ள வழியில் குழந்தையைப் பெற்றுக்கொள்ளத் துணிந்துவிடுகின்றார்கள்.

 

மனநிம்மதியின்மை: நம் சமுதாயத்தில் கல்வி விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டதால் ஆணும் பெண்ணும் படித்து, பணிக்குச் செல்லும் நல்வாய்ப்பைப் பெறுகின்றார்கள். பல்வேறு நிபந்தனைகளுக்குப்பின் இளமை முதிர்ந்த வயதில் இல்வாழ்க்கைக்குள் நுழைந்த தம்பதியர் இருவரும் தம்மைப் பற்றி ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டார்களோ இல்லையோ, மறு வாரத்திலிருந்து தம்பதியர் இருவரும் வேலைக்குச் செல்லத் தொடங்கிவிடுகின்றார்கள். இவ்வாறு தம்பதியர் இருவரும் வேலைக்குச் செல்லும் இல்லங்களில் அவ்விருவருமே நிம்மதியிழக்கின்றார்கள். அதை அவர்களே ஒத்துக்கொள்கின்றார்கள். சிலரின் வீடுகளில் கணவனும் மனைவியும் ஒரே நேரத்தில் வேலைக்குச் சென்று ஒரே நேரத்தில் வீடு திரும்புகின்றார்கள். இத்தகையோரின் வீடுகளில் சிக்கல்கள் குறைவாகவே இருக்கும். ஆனால் கணவன் ஒரு நேரத்திலும் மனைவி மற்றொரு நேரத்திலும் பணிக்குச் செல்லும் இல்லங்களில் இல்லறச் சிக்கல்கள் மிகுதியாக இருக்கும்.

 

ஓர் ஆண் பகலெல்லாம் பணியாற்றிவிட்டு, ஓய்வெடுப்பதற்காக வீட்டிற்கு வந்தால், அவனை வரவேற்கவோ, அன்பான வார்த்தைகளால் மனதிற்கு இதமாக அவனோடு பேசிக்கொண்டிருக்கவோ, அன்போடு இரவு உணவைப் பரிமாறவோ மனைவி இருப்பதில்லை. மாறாக அவள் சில மணி நேரங்கள் தாமதமாக வருவாள் அல்லது இரவுப் பணிக்குச் சென்றிருப்பாள். இத்தகைய பரிதாபமான சூழ்நிலையும் சிலபல வீடுகளில் இருக்கவே செய்கின்றன.

 

அல்லாஹ் திருக்குர்ஆனில், “நீங்கள் (உங்கள்) மனைவியரிடம் மனஅமைதி பெறுவதற்காக உங்களிலிருந்தே அவர்களை உங்களுக்காக அவன் படைத்து, உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் அவன் ஏற்படுத்தியிருப்பதும் அவனுடைய சான்றுகளுள் அடங்கும்” (30: 21) என்று கூறுகின்றான். பணிக்குச் சென்று பல்வேறு சங்கடங்களுக்கு ஆளாகி, மனஅமைதியைத் தேடி வீட்டிற்கு வருகிறபோது, அவனுக்கு மனநிம்மதியைத் தர அங்கு மனைவி இல்லாததால் ஆண் விரக்தியடைகின்றான்; நிம்மதியிழக்கின்றான்.

 

மனைவியைக் காக்கும் பொறுப்பு: ஓர் ஆண் தன் மனைவியைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதால்தான் அவன் குடும்பத் தலைவனாகிறான். அவன் உழைத்துச் சம்பாதித்து, தன் மனைவி, பிள்ளைகள், வயதான பெற்றோர் ஆகியோரைக் காக்க வேண்டிய பொறுப்பு அவனுக்குத்தான் உண்டு. அதனால்தான், “அப்பெண்களைவிட ஆண்களுக்கு ஒரு படி உயர்வு உண்டு” (2: 228) என்று அல்லாஹ் கூறுகின்றான். அதற்கான காரணத்தையும் அல்லாஹ் மற்றொரு வசனத்தில் சொல்கின்றான்: “ஆண்கள் பெண்களை நிர்வகிக்கக்கூடியவர்கள். ஏனென்றால் அவர்களுள் ஒருவரைவிட மற்றொருவரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளான்; மேலும் அவர்(ஆண்)கள் தம் பொருளாதாரத்திலிருந்து அவர் (பெண்)களுக்குச் செலவுசெய்கின்றார்கள் (4: 36).

 

ஆனால் தற்காலத்தில் மனைவியே சம்பாதிக்கத் தொடங்கிவிட்டதால் கணவனைச் சார்ந்து வாழ வேண்டிய நிலை அவளுக்கு இல்லை. அதனால் அவனை உயர்வாக மதிக்க வேண்டிய நிலையிலிருந்து அவள் சற்றே விலகிவிடுகின்றாள். ஆகவே ஒரு பெண் தன் இல்லற வாழ்வில் சில இன்பங்களையும் மகிழ்ச்சிகளையும் இழக்கின்றாள் என்பதை நாம் கண்கூடாகக் கண்டுவருகிறோம்.

 

பெண்கள் படித்திருப்பதால் வேலைக்குச் செல்கின்றார்கள். அதில் என்ன தவறு? என்று கேட்கலாம். அதில் தவறேதும் இல்லை. தாராளமாகச் செல்லட்டும். ஆனால் பெண்கள் தம் உடல்நிலைக்கேற்பவும் இல்லற வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்கும் விதத்திலும் வேலையை அமைத்துக்கொண்டால் நலமாக இருக்குமே என்றுதான் சொல்கிறோம். பெண்கள் மட்டுமே பணியாற்றக்கூடிய இடங்களிலும், பெண்கள் மட்டுமே செம்மையாகச் செய்ய முடியும் என்பன போன்ற பணிகளையும் தேர்வு செய்துகொண்டால் அது அவர்களுக்குச் சாதகமாக அமையும். மாறாக, படித்திருப்பதால் கால்சென்டர்களிலும் இரவு நேரப் பணிகளிலும் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு ஏன் வந்தது?

 

இஸ்லாம் பெண்களை இராணிகளைப் போல் வீட்டில் இருந்துகொண்டு நிம்மதியாக வாழ வழிகாட்டுகின்றது; வீட்டினுள் சுதந்திரமாக வாழச் சொல்கிறது; உழைத்துப் பொருளீட்டிக் குடும்பத்தைக் காக்கவேண்டும் என்ற பொறுப்பை-பெரும் சுமையை அவர்கள்மீது சுமத்தவில்லை. எனவே எத்தனையோ பெண்கள் தம் வீடுகளில் இராணியைப் போல் நன்றாகவே வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அதை ஏற்றுக்கொள்ளாத படித்த பெண்களே, ஊடகத்தின் வலிமையால் திணிக்கப்பட்ட கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு, வீட்டைவிட்டுப் புறப்பட்டுப் பணியிடங்களுக்குச் சென்று, அங்கு இரவு பகலாக வேலைசெய்துவிட்டு, வீட்டிற்கு வந்து, அங்கும் வேலைசெய்துகொண்டு, இரட்டைச் சுமைகளைச் சுமக்கின்றார்கள். அல்லது பணிப்பெண்களை நியமித்துக்கொண்டு, தாம் தம் கணவருக்கு அன்போடு பரிமாற வேண்டிய தருணங்களை அவர்களுக்கு விட்டுக்கொடுத்துவிடுகின்றார்கள்.

 

பணிக்குச் சென்று கசப்பான அனுபவங்களைப் பெற்ற பெண்கள் சிலர், தம் மகன்களுக்குத் திருமணம் ஆனதும் தம் மருமகள்களைப் பணிக்குச் செல்ல வேண்டாமெனத் தடுத்து, வீட்டிலேயே தங்கி, வீட்டு வேலைகளைக் கவனித்துக்கொள்ளச் சொல்கின்றார்கள். தாம் பட்ட சிரமங்களைத் தம் மருமகள் பட வேண்டாம் என்ற நல்லெண்ணமும், தம் மகன் தன் மனைவியோடு மகிழ்ச்சியாக வாழட்டும் என்ற பாசச் சிந்தனையுமே அதற்கான காரணமாகும்.

 

ஆக பெண்கள் உயர்கல்வி படிப்பதும் பணிக்குச் செல்வதும் ஒரு வகையில் முன்னேற்றமாகத் தெரிந்தாலும் மற்றொரு வகையில் அதனுள் இருசாராருக்குமான இழப்பும் அடங்கியிருக்கிறது என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். மேலும் அத்தகைய பெண்களுள் பெரும்பாலோரின் இல்வாழ்வில் நிம்மதியின்மையும் விரக்தியும் அடங்கியே இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

 

உயர்படிப்பின் காரணமாகவும் பணியின் காரணமாகவும் பெண்கள் முதிர்கன்னிகளாகக் காலத்தைக் கழித்துவிட்டுத் தாமதமாகவே இல்லற வாழ்க்கைக்குள் நுழைகின்றார்கள். அதன்பின் அதனுள் தம்மை முழுமையாக இணைத்துக்கொள்ள இயலாமல் இல்வாழ்வின் சுகத்தையும் இன்பத்தையும் இழந்து நிம்மதியற்று வாழ்கின்றார்கள் என்பதே பணிக்குச் செல்லும் பெரும்பாலான பெண்களின் நிலை.

 

தீர்வு: கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் படித்துப் பட்டம்பெற்று, பணிக்குச் செல்லும் பெண்கள் தமக்குக் கிடைக்கும் மாப்பிள்ளைகளைத் தம் படிப்போடும் பணியோடும் சம்பளத்தோடும் ஒப்பிட்டு நோக்காமல், மார்க்கப்பற்றுள்ள மணாளர் கிடைத்தால் மனத்திருப்தியோடு மணந்துகொள்ளத் தயாராவது ஒன்றே இதற்கான தீர்வாகும். மேலும் தமக்கு உகந்த பணியாக இருந்தால் மட்டும் அதை ஏற்றுக்கொண்டு பணியாற்றுவது அல்லது இயன்ற வரை இல்லத்தில் இருந்துகொண்டே பணியாற்றுவது என்ற முடிவுக்கு வருவது இல்லையேல் வீட்டுவேலைகளை மட்டும் கவனித்துக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்து தம் கணவருக்கும் மனநிம்மதியைக் கொடுப்பதெனத் தீர்மானித்துக்கொள்வதும்தான் இச்சிக்கல்களுக்கான தீர்வாகும். 

 

மேலும் பெண்கள் தம் இளங்கலைப் படிப்பை முடித்த உடனேயே அவர்களுக்குத் திருமணம் செய்துகொடுத்துவிட வேண்டியது பெற்றோரின் கடமையாகும். அவர்கள் விரும்பினால் திருமணத்திற்குப்பின்  மேற்படிப்பைத் தொடரலாம். பின்னர் தேவைப்பட்டால், தம்பதியர் தமக்குள் முடிவுசெய்துகொண்டு பெண்கள் பணிக்குச் செல்லலாம். அதனால் தம்பதியரிடையே சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். ஆக இல்லற வாழ்க்கை பாதிக்கப்படாமல் முடிவெடுத்துக்கொள்வது பெண்களின் கையில்தான் உள்ளது. படித்த பெண் பரந்த சிந்தனையோடு எடுக்கும் முடிவு தன் கணவருக்கும் தன் பிள்ளைகளுக்கும்  சாதகமாக அமைவதோடு தனக்கும் எவ்விதச் சிரமமும் இல்லாத வகையில் அமைய வேண்டும். அதுவே சமுதாயக் கவலைகொண்டோரின் எதிர்பார்ப்பாகும்.

=============================








திங்கள், 11 ஆகஸ்ட், 2025

நாணத்தைத் தொலைத்தவர்கள்

 

        

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28  

 

 நீ வெட்கத்தை இழந்துவிட்டால், நீ விரும்பியதைச் செய்துகொள் (புகாரீ: 3483) என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். வெட்கம் என்பது ஓர் உயர்பண்பாகும். அது பாவங்களிலிருந்து தடுக்கின்ற கேடயமாகும். அது இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும். எனவே அத்தகைய உயர்பண்பை நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஆனால் இன்றைய மனிதர்கள் பலர் தம் வெட்கத்தை இழந்துவிட்ட காரணத்தால்தான் அசிங்கமான செயல்களையெல்லாம் செய்துகொண்டிருக்கின்றார்கள்.

 

சமூக ஊடக மோகம்: இன்றைய இளைஞர்களும் இளைஞிகளும் இஸ்லாமிய மார்க்கத்தின் கட்டுப்பாடுகளையும் வழிகாட்டுதல்களையும் ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு, தாம் விரும்பியதையெல்லாம் விரும்பியபடி செய்கிறார்கள்.   ஆண்-பெண் இருபாலரும் தம்மை மக்கள் மன்றத்தில் மதிப்பு மிக்கோராகக் காட்டுவதற்காக விதவிதமாகத் தற்படங்கள் (செல்ஃபீ) எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள்; பரவவிடுகின்றார்கள். அதன் ‘விருப்ப’ங்களை (லைக்) எண்ணியெண்ணி மகிழ்கிறார்கள்.

 

முஸ்லிம் பெண்பிள்ளைகள் தம் அழகைப் பிற ஆடவர்க்குக் காட்டாமல் அடக்கத்தோடும் ஒடுக்கத்தோடும் இருக்க வேண்டும் என்ற மார்க்க நெறிமுறைகளை மறந்துவிட்டார்கள். தாம் விரும்பியதையெல்லாம் விருப்பப்படி செய்கிறார்கள். பெற்றோரிடம் இது பற்றிக் கேட்டால், “என் மகள் ஒன்றும் சின்னப் பிள்ளை இல்லை; அவளுக்கு எல்லாம் தெரியும்; அவள் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்” என்கின்றனர்.

 

அந்தரங்கம் எதுவும் இல்லை: சில வீடுகளில் திருமண நிகழ்வு மாபெரும் திருவிழாவைப் போன்று நடக்கிறது. ஏராளமான பொருளாதாரம்  வீணடிக்கப்படுகிறது. திருமண மேடைக்கு வரும்போது மணப்பெண் ஆடிக்கொண்டே வருகிறாள். அவளோடு சேர்ந்து மற்ற பெண்களும் ஆடுகின்றார்கள். பின்னர் மணமேடையில் ஆடுகின்றார்கள். இசையும் நடனமும் ஒருங்கே அரங்கேறுகின்றன. திருமண நிகழ்வு தொடங்கியதிலிருந்து முதலிரவு அறைக்குச் செல்கின்ற வரை தம்பதியர் இருவரின் செயல்களையும் வீடியோ பதிவு செய்துகொண்டே இருக்கிறது. மற்றொரு பக்கம் கேமரா படம் எடுத்துக்கொண்டே இருக்கிறது. அந்தரங்கம் என்று எதுவும் இல்லை. எல்லாவற்றையும் சமூக வலைத்தளங்களில் படம் போட்டுக் காட்டிவிடுகின்றார்கள்.

 

பாட்டரங்குகளில் சிறுவர்-சிறுமியர்: நம் சமுதாயப் பெண்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குறுங்காணொலி வெளியிட வேண்டுமென்பதற்காக நாள்தோறும் தம்மை அலங்கரித்துக்கொண்டு, தம் அழகைப் பொதுவெளியில் விருந்து படைக்கின்றார்கள். பெற்றோர் சிலர் தம் பிள்ளைகளைப் பாட்டரங்குகளில் பாட வைத்து, அதைப் பார்த்து இரசித்துக்கொண்டிருக்கின்றார்கள். அச்சிறுவர்-சிறுமியர் பாடும் பாடல்கள் திரைப்படங்களில் காதலன்-காதலி இணைந்து பாடியவை. காதல் உணர்வுகளைத் தூண்டும் பாடல்களைத் தம்முடைய சிறுவயதுப் பிள்ளை பாடுகிறாளே என்ற எந்தவித வெட்க உணர்வும் இன்றிக் கேட்டு மகிழ்கின்றார்கள். திருக்குர்ஆனைத் தஜ்வீதுடன் ஓத வேண்டிய பிள்ளைகள் இவ்வாறு தடம் மாறிப் போவதற்குப் பெற்றோரே முதற்காரணம்.

 

மட்டமான குணங்களைக் கொண்ட மார்க்க அறிஞர்கள்: மற்றொரு புறம், பெரும் பெரும் பதவிகளில் உள்ளோர்கூடச் சின்னப் பிள்ளைத்தனமாக நடந்துகொள்கின்றார்கள். பேச்சாளர்களாகவும் எழுத்தாளர்களாகவும் அறியப்படுகின்ற மார்க்க அறிஞர்கள் சிலர் அருவருக்கத்தக்க செயல்களைச் செய்துகொண்டிருக்கின்றார்கள். பிறர் பணியாற்றக்கூடிய இடங்களில் தாம் நுழைந்துகொண்டு அதிகாரம் செலுத்துவது, ஏற்கெனவே அங்கு பணியாற்றிக்கொண்டிருக்கின்ற இமாமை நீக்க முயல்வது, தாம் தலைமைப் பொறுப்பை ஏற்க முனைவது, ஒருவனைத் தனக்குப் பிடிக்கவில்லையென்றால் அவனைப் பற்றிய தவறான பிம்பத்தை எல்லோரிடமும் பரப்புவது, சமூக ஊடகங்களில் வெளியிடுவது உள்ளிட்ட கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இவையெல்லாம் நாம் பயின்றிருக்கக்கூடிய மார்க்கக் கல்விக்கு எதிரானது என்பதை உணர்வதில்லை.

 

சிலர் பள்ளிவாசல்கள்தோறும் சென்று மத்ரஸா நடத்துவதாகச் சொல்லி வசூல் செய்கின்றார்கள். அதையே அவர்கள் தம் பிழைப்பாக வைத்துள்ளார்கள். “யாருக்காக வசூல் செய்கின்றீர்கள், உங்கள் மத்ரஸா எங்குள்ளது, அதன் நிர்வாகிகள் யார்” என்றெல்லாம் விசாரித்து, உண்மை வெளிப்படும்போது, வெட்கமின்றிக் கடந்து செல்கின்றார்கள். அத்தோடு அச்செயலை நிறுத்துவதில்லை. வேறு ஊருக்குச் சென்று தம் வசூல் வேட்டையைத் தொடர்கின்றார்கள்.

 

பிச்சைத்தொழில் செய்வோர்: கடந்த காலங்களில் பிச்சையெடுப்போர் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது பெருநகரங்களில் கோவில், தேவாலயம், பள்ளிவாசல், மக்கள் கூடுமிடங்கள், போக்குவரத்து சிக்னல்கள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் பிச்சையெடுப்போர் மிகுந்து காணப்படுகின்றார்கள். கை நீட்டிக் கேட்கக் கூச்சப்பட்ட காலம் மாறி, அதிகாரத்தோடு பிச்சை கேட்கும் காலமிது. மூன்று காரணங்களுக்காக மட்டுமே யாசகம் கேட்கலாம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய செய்தியை ஒவ்வொருவரும் தம் மனத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்:

 

கபீஸா பின் முகாரிக் அல்ஹிலாலீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: நான் (மற்றொருவர் செலுத்த வேண்டிய) ஓர் இழப்பீட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஏதேனும் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “தர்மப் பொருள்கள் நம்மிடம் வரும்வரை இங்கேயே இருங்கள். அதில் ஏதேனும் உங்களுக்குத் தரச் சொல்கிறோம்” என்று கூறினார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:

 

கபீஸா! மூன்று பேருக்கு மட்டுமே யாசிக்க அனுமதி உண்டு. ஒருவர் மற்றவரின் ஈட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டவர். அவர் அத்தொகையை (உரியவரிடம் ஒப்படைப்பதற்காக அதை)ப் பெறுகின்றவரை யாசிக்கலாம். பிறகு (யாசிப்பதை) நிறுத்திக்கொள்ள வேண்டும்.

 

மற்றொருவர் (இயற்கைச்) சேதம் ஏற்பட்டுச் செல்வங்களை இழந்தவர். அவர் "வாழ்க்கையின் அடிப்படையை' அல்லது 'வாழ்க்கையின் அவசியத் தேவையை’ அடைந்துகொள்ளும் வரை யாசிக்கலாம். இன்னொருவர் வறுமைக்கு ஆட்பட்டவர். அவருடைய கூட்டத்தாரில் (அவரைப் பற்றி) விவரம் தெரிந்த மூவர் முன்வந்து "இன்ன மனிதர் வறுமைக்கு ஆட்பட்டுள்ளார்" என்று (சாட்சியம்) கூறுகின்றனர் என்றால், அவர் 'வாழ்க்கையின் அடிப்படையை அல்லது 'வாழ்க்கையின் அவசியத் தேவையை’ அடைகின்ற வரை யாசிப்பது அவருக்குச் செல்லும்.

 

கபீஸா! இவையன்றி மற்ற யாசகங்கள் யாவும் தடை செய்யப்பட்டவையே (ஹராம்) ஆகும். (இம்மூன்று காரணங்களின்றி ஒருவர் யாசித்துச் சாப்பிட்டால்) அவர் தடை செய்யப்பட்டதையே (ஹராம்) சாப்பிடுகிறார். (சுனன் அபூதாவூத்: 1397)

 

போலி வசூலர்கள்: பள்ளிவாசல்கள்தோறும் ஐவேளைத் தொழுகையில் பெரும்பாலும் பொருளாதாரத் தேவை-வசூல் குறித்த அறிவிப்பு இல்லாமல் இருப்பதில்லை. திருமணம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட அறிவிப்புகள் அவ்வப்போது செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. தொழுகை முடிந்த கையோடு-தாமதமாக வந்தோர் எழுந்து தொழுதுகொண்டிருக்கிறபோது அவர்களின் தொழுகைக்கு இடையூறாக இருக்கும் என்பதைப் பொருட்படுத்தாமல்-  “குமர் காரியமாக வந்துள்ளோம்; தாராளமாக உதவி செய்யுங்கள்” என்று உரத்த குரலில் அறிவிப்புச் செய்வோருக்கு எந்தவிதக் கூச்ச உணர்வும் இருப்பதில்லை. இத்தகைய வசூலர்களுள் பலர் போலியானவர்கள் என்பதே உண்மை.

 

கையூட்டுப் பெறுவோர்: பெரும் பெரும் பொறுப்பிலுள்ள அதிகாரிகள் மாதந்தோறும் உரிய வகையில் ஊதியத்தைப் பெற்றுக்கொள்வதோடு, கடமையை நிறைவேற்ற மக்களிடம் கையூட்டுப் பெறுவது குறித்து சிறிதளவும் நாணம்  இல்லை. ‘சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரி’ என்ற போர்வையில் கல்லூரிகளை நடத்துவோர் அரசாங்கத்தில் சலுகையைப் பெற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் அக்கல்லூரியில் பேராசிரியராகச் சேரும் ஒவ்வொருவரிடமிருந்தும் பல இலட்சங்கள் கையூட்டாகப் பெற்றுக்கொள்கின்றார்கள். கையூட்டு பெற்று, தடை செய்யப்பட்ட உணவைச் சாப்பிடுகிறோமே என்ற எந்த நெருடலும் அவர்களுக்கு இல்லை. அந்தப் பணத்தில்தான் தன் மனைவிக்கு நகை வாங்கிக் கொடுக்கிறோம் என்ற உறுத்தலும் அவர்களுக்கு இருப்பதில்லை. மேலும் தன் கணவன் நேர்மையற்ற முறையில், தகாத வழியில் சம்பாதித்த பணத்தில்தான் தனக்கு நகை வாங்கிக் கொடுக்கின்றான் என்ற நெருடலின்றி அதை மகிழ்ச்சியோடு அணிந்துகொள்கின்ற மனைவிக்கு எந்த நாண உணர்வும் இல்லை.

 

மது அருந்துவோர்: அக்கம் பக்கத்து வீட்டார்கள் நம்மைப் பார்த்துச் சிரிப்பார்களே என்ற உறுத்தலின்றி நாள்தோறும் மது அருந்திவிட்டுத் தெருவோரம் படுத்து உருண்டுகொண்டிருப்போர் நாணத்தைத் தொலைத்தவர்கள். தம்மால் தம் குடும்பத்திலுள்ள மனைவி, பிள்ளைகள், பெற்றோர் உள்பட அனைவரும் மரியாதையை இழக்க வேண்டியுள்ளதே என்ற எந்த உறுத்தலுமின்றி நாள்தோறும் மதுக் கடைக்குச் சென்று வாங்கிக் குடிக்கின்றார்கள். உழைத்துச் சம்பாதித்த பொருளாதாரத்தைக் குடும்பத்திற்காகச் செலவு செய்யாமல் குடித்தே அழிக்கின்ற எத்தனையோ முஸ்லிம் சகோதரர்கள் இந்நிலத்திற்குமேல் உலாவிக்கொண்டிருக்கின்றார்கள்.

 

மேற்கண்ட பற்பல இழிசெயல்களைச் செய்வோர் ஒவ்வொரு துறையிலும் இருக்கின்றார்கள். சாதி, மதப் பேதமின்றி எல்லாத் தளங்களிலும் இருக்கின்றார்கள். இருப்பினும் இக்காலத்திலும் வெட்க உணர்வோடும் இறையச்சத்தோடும் வாழ்வோர் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களின் பொருட்டே உயர்ந்தோன் அல்லாஹ் இந்நிலத்தில் மழையைப் பொழியச் செய்கின்றான்; புவியில் பயிர்களை விளையச் செய்கின்றான். ‘தொல்லுலகில் நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை’ எனும் மூதுரைக்கேற்ப இவ்வுலகு இயங்கிக் கொண்டிருக்கிறது.

 

ஆகவே ‘வெட்கம் இறைநம்பிக்கையின் ஒரு கிளை’ என்ற நபிமொழிக்கேற்ப நாம் வெட்க உணர்வுள்ளவர்களாகவும் இறையச்சம் மிக்கவர்களாகவும் இறுதி வரை வாழ இறைவன் அருள்வதோடு, நம் சந்ததிகளையும் அவ்வாறே வாழச் செய்வானாக.

==========================

சனி, 26 ஜூலை, 2025

கடன்மூலம் பெறப்படும் போலிக் கௌரவங்கள்

    

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28   

 

 நிலையற்ற உலகில் நிலையாக வாழப்போவதாக எண்ணிக்கொண்ட மனிதர்கள் பிற மக்கள் மத்தியில் போலிக் கௌரவங்களைக் காட்டிக்கொள்ள முனைகின்றார்கள். அதனால் அவர்கள் தம் இயல்பான வாழ்க்கை நிலையைவிட உயர்வாக இருப்பதாகக் காட்டிக்கொள்ள மிகுதியாகக் கடன்பெறுகின்றார்கள். வீட்டிற்கு அவசியத் தேவையற்ற பொருள்கள், வாகனங்கள் வாங்கிக் குவிப்பதன் மூலம் நாங்கள் சாதாரண ஆள் இல்லை என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக்கொள்கின்றார்கள்.

 

கடன் வாங்குவது அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது எப்போது வாங்க வேண்டும்? உணவுக்கோ கல்விக்கோ பணமில்லாதபோது கடன் வாங்கலாம். அதைத் திருப்பிச் செலுத்தும் எண்ணத்தோடு வாங்குவது மிக முக்கியமானது. திருப்பிச் செலுத்தும் எந்தத் திட்டமும் இல்லை; எந்தப் பொருளாதாரப் பின்னணியும் இல்லை எனும்போது அவர் கடன் வாங்குவது எங்ஙனம் கூடும்? அவசியத் தேவைக்காக அல்லாமல் பிறர் தம்மைச் சாதாரணமாகக் கருதிவிடக் கூடாது என்பதற்காகவும் போலிக் கௌரவத்தை நிலைநாட்டிக்கொள்வதற்காகவும் கடன் வாங்குவது தவிர்க்கப்பட வேண்டும். அதிலும் குறிப்பாக, வட்டிக்குக் கடன் வாங்குவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

 

வெளிப்புற ஆடம்பரத்தையும் போலியான வாழ்க்கை நிலைகளையும் கண்டு இன்றைய மக்கள் பலர் ஏமாறுகிறார்கள். வெளிப்படையாகப் பார்த்தால் மாப்பிள்ளைக்கு எழுபதாயிரம் சம்பளம்; காரில் பயணம்; சொந்த வீடு. உள்ளே நுழைந்து பார்த்தால், அவ்வளவும் கடன். வாங்கும் சம்பளத்தில் பாதிக்கு மேல் இஎம்ஐ கட்டியே தீர்ந்துவிடும். மீதியை வைத்துத்தான் குடும்பம் நடத்த வேண்டும். அல்லது மனைவியையும் வேலைக்கு அனுப்பி அதில் வரும் வருவாயில்தான் குடும்பம் நடத்த வேண்டும்.

 

வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், கடனுக்கு வாங்கிய காரைத் திருப்பிக் கொடுக்கும் நிலையும், கடன் வாங்கிக் கட்டிய வீட்டை விற்கும் நிலையும் ஏற்பட்டுவிடுகிறது. கடன் என்றாலே வட்டியின்றி இல்லை. அப்படியிருக்கும்போது எவ்வளவுதான் செலுத்தியும் அந்த வட்டியைத்தான் செலுத்த முடிந்ததேயன்றி, வாங்கிய கடன் இன்னும் முடிந்தபாடில்லை. இந்த உண்மை நிலையை உணராத பெற்றோர், தம் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது, வந்த நல்ல நல்ல (ஸாலிஹான) மணமகன்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு, எழுபதாயிரம் சம்பளம்; சொந்தக் கார்; சொந்த வீடு உள்ளவரைத் தேடிப் பிடித்துத் தேர்வுசெய்து மணமுடித்துவைக்கின்றார்கள். திருமணம் முடிந்த பிறகுதான், எல்லாமே போலிக் கௌரவங்கள் என்பது புரிகிறது.

 

மிகுந்த படபடப்போடும் பதற்றத்தோடும் இருப்பவரைப் பார்த்து, ‘கடன்பட்டார் நெஞ்சல்போல்’ எனும் முதுமொழியை உவமையாகச் சொல்வார்கள். அதாவது கடன்பட்டவர், கடன்கொடுத்தவரைக் கண்டால் அக்கடனை அடைக்க முடியாமல் எவ்வளவு படபடப்போடும் பதற்றத்தோடும் காணப்படுவாரோ அவ்வாறு காணப்படுகிறாரே என்று உவமை கூறுவார்கள். ஆனால் இன்று கடன் வாங்குவது மிகச் சாதாரணமாகிவிட்டது.  அதைத் திருப்பிச் செலுத்த வேண்டுமே என்ற பதற்றமோ படபடப்போ இல்லை. மாறாக, கடன்கொடுத்தவர்தாம் படபடப்போடும் பதற்றத்தோடும் காணப்படுகிறார். வாங்கிய கடனை இவர் திருப்பித் தருவாரோ, மாட்டாரோ என்று குழம்பிப்போகிறார். மீண்டும் மீண்டும் கேட்டு அலைகிறார். அல்லது ‘பிறகு தருகிறேன்’ ‘பிறகு தருகிறேன்’ என்று கடன் வாங்கியவர் அவ்வப்போது சொல்வதால் அலைக்கழிக்கப்படுகிறார்.

 

இன்றைய அவசர உலகில் பலர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றிவிடுகின்றார்கள். அதற்கான தண்டனை குறித்தோ மறுமை விசாரணை குறித்தோ சிறிதளவும் அஞ்சுவதில்லை. பொதுவாகவே உறவினர்களிடமும் நண்பர்களிடமும்தான் கடன் வாங்குகின்றார்கள். ‘நம்முடைய நண்பர்தானே’, ‘நம்முடைய உறவினர்தானே’ என்ற நம்பிக்கையில் அவர்கள் கடன் கொடுக்கின்றார்கள். ஆனால் வாங்குவோர் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதில்லை. பல மாதங்களாகியும், பல ஆண்டுகளாகியும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றுவது மிகப்பெரிய பாவமாகும்.

 

சமுரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது “இன்ன குலத்தவரில் ஒருவர் இங்கே இருக்கின்றாரா?” எனக் கேட்டார்கள். அதற்கு ஒருவரும் பதில் கூறவில்லை. பின்பு “இன்ன குலத்தவரில் ஒருவர் இங்கே இருக்கின்றாரா?” என்று கேட்டார்கள்.

 

அவர்களுக்கு ஒருவரும் பதில் அளிக்கவில்லை. பின்னர் (மூன்றாம் முறையாக “இன்ன குலத்தவரில் ஒருவர் இந்த இடத்தில் இருக்கின்றாரா?” என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து “நான் இருக்கிறேன் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். அவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “முதல் இரண்டு தடவை நீ எனக்குப் பதிலளிக்காத காரணம் என்ன” என்று கேட்டுவிட்டு, “நான் உங்களிடம் நன்மையைத் தவிர வேறெதையும் பேசக்கூடாது என்று கருதுகிறேன். (அவர்களுள் நீங்கள் குறிப்பிடுகின்ற) இன்னவர் மற்றொருவருக்குக் கொடுக்க வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இறந்து விட்டதால் (சொர்க்கத்தில் நுழைய முடியாமல்) தடுக்கப்பட்டுவிட்டார்” என்று கூறினார்கள். சமுரா ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்: அந்த மனிதருக்காக மற்றொரு மனிதர் அவரது கடனை நிறைவேற்றியதையும் அதனால் யாரும் தர வேண்டிய கடனைத் தரும்படி கேட்காததையும் நான் கண்டேன். (அபூதாவூத்: 3341/ 2900)

 

 

ஆக ஒரு முஃமின் சொர்க்கம் செல்லத் தடையாக இருப்பது பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாததே ஆகும். எனவே நாம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவதில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும். இல்லையேல் ‘நாம் எவ்வளவுதான் நன்மைகள் செய்தபோதிலும்’ நாம் சொர்க்கம் செல்ல முடியாமல் போவதற்கு அதுவே காரணமாகிவிடும்.

 

இன்றைய மனிதர்கள் இளம் வயதிலேயே இறந்துவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். திடீர் திடீரென  நெஞ்சு வலி (ஹார்ட் அட்டாக்) காரணமாக மரணத்தைத் தழுவுகின்றார்கள். இதயக்கோளாறு, சிறுநீரகக் கோளாறு, கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. பின்னர் நாம் சிகிச்சையளித்துத் தேற்றிக் கொண்டுவந்துவிடலாமென நினைக்கின்ற தருணத்தில் திடீரென இறந்துபோய்விடுகின்றார்கள். நாம் ஒன்றும் செய்ய முடிவதில்லை. இத்தகைய  மரணம் யாருக்கு வரும், யாருக்கு வராது என்று வகைப்படுத்திச் சொல்வதற்கில்லை. எனவே நாம் யாரிடம் கடன் வாங்கினாலும் அதை ஒரு குறிப்பேட்டில் எழுதிவைத்துக்கொள்ள வேண்டும். நாம் வாழும் காலத்தில் அதை அடைக்க முடிந்தால், நாமே அடைத்துவிடலாம். இல்லையேல் நாம் இறந்த பிறகு நம்முடைய சந்ததிகளேனும் அந்தக் குறிப்பேட்டிலுள்ள விவரத்தைப் பார்த்து, நம் சார்பாக நம் கடனை அவர்கள் உரியவர்களிடம் திருப்பிச் செலுத்துவார்கள். அதனால் நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டுச் சொர்க்கம் செல்லலாம். ஆகவே பெற்ற கடனை உரிய முறையில் எழுதி வைத்துக்கொள்ளும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இது அல்லாஹ்வின் ஆணையும்கூட.

 

அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கைகொண்டோரே! நீங்கள் ஒரு குறித்த தவணையின் மீது (உங்களுக்குள்) கடன் கொடுத்துக் கொண்டால் அதை எழுதிவைத்துக்கொள்ளுங்கள். (2: 282)

கடன் வாங்குவதிலிருந்து நபியவர்கள் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள் என்றால் கடன் வாங்கக் கூடாது என்றுதானே அர்த்தம்? அதில் ஏன் அந்த அளவிற்குப் பேணுதலாக இருந்துள்ளார்கள் என்பதை நாம் பின்வரும் செய்தியின்மூலம் அறியலாம்.

 

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகையில் துஆ செய்யும் போது, அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் மஃஸமி வல்மஃக்ரமி (இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று கூறுவார்கள்.  (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே!  தாங்கள் கடன் படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன?'' என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், "மனிதன் கடன்படும் போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்'' என்று பதிலளித்தார்கள். (புகாரீ: 2397)

 

பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பது ஒருவரின் உரிமையைப் பறித்துக்கொள்வதற்குச் சமமாகும். எனவேதான் நபியவர்கள் யாரேனும் ஒருவருக்கு ஜனாஸா தொழுகை நடத்த முற்பட்டாலும் அதற்குமுன் அவருக்குக் கடன் ஏதும் உள்ளதா என்று கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாதவராக இருந்தால் அவருக்குத் தொழுகை நடத்தமாட்டார்கள். பிறரின் உரிமை குறித்து நபியவர்கள் எந்த அளவிற்கு எச்சரிக்கையாக இருந்துள்ளார்கள் என்பதற்குக் கீழ்க்காணும் செய்தி தக்க சான்றாகும்.

 

சலமா பின் அக்வஃ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அமர்ந்திருந்தபோது ஒரு ஜனாஸா (பிரேதம்) கொண்டுவரப்பட்டது.  நபித் தோழர்கள், “நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்!” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்கள்.  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “இவர் கடனாளியா?” என்று கேட்டபோது நபித்தோழர்கள், “இல்லை” என்றனர்.  “ஏதேனும் (சொத்தை) இவர் விட்டுச் சென்றிருக்கிறாரா?” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டபோது, “இல்லை” என்றனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது “அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “இவர் கடனாளியா?” என்று கேட்டபோது “ஆம்” எனக் கூறப்பட்டது. “இவர் ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா?” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டபோது “மூன்று தங்கக் காசுகளை விட்டுச் சென்றிருக்கிறார்” என்றனர். அவருக்கும் தொழுகை நடத்தினார்கள்.

 

பிறகு மூன்றாவது ஜனாஸா கொண்டு வரப்பட்டது. “நீங்கள் தொழுகை நடத்துங்கள்” என்று நபித்தோழர்கள் கூறினர். “இவர் எதையேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா?” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டபோது “இல்லை” என்றனர். “இவர் கடனாளியா?” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டபோது, “மூன்று தங்கக் காசுகள் கடன் வைத்திருக்கிறார்” என்று நபித்தோழர்கள் கூறினர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்” என்றனர். அப்போது அபூகத்தாதா ரளியல்லாஹு அன்ஹு “இவரது கடனுக்கு நான் பொறுப்பு; அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்!” என்று கூறியதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். (புகாரீ: 2289)

 

ஆக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எந்த அளவிற்குக் கடன் விஷயத்தில் கவனமாக இருந்துள்ளார்கள் என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஏனெனில் ஒருவரின் ஜனாஸா தொழுகையில் அல்லாஹும்மஃக்ஃபிர் லஹு வர்ஹம்ஹு (இறைவா! இவருடைய பாவத்தை மன்னித்து, இவருக்கு அருள்புரிவாயாக) என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறரின் உரிமையைப் பறித்துக்கொண்டவருக்கு ஓர் இறைத்தூதர் எவ்வாறு அங்ஙனம் பிரார்த்தனை செய்ய முடியும்? எனவேதான் நபியவர்கள் அவரது ஜனாஸாவுக்குத் தொழுவிக்கவில்லை. பின்னர் அவரின் கடனுக்கு ஒருவர் பொறுப்பேற்றுக்கொண்ட பின், அவரது ஜனாஸாவுக்குத் தொழுவித்தார்கள்.

 

ஒருவர் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏன் வருகிறது? பிறரைப் பார்த்து அவர்களைப் போலவே நாமும் வாழ வேண்டும் என்ற ஆசையால்தான் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஒவ்வொருவரும் தத்தமது வருவாய்க்குள் வாழ்க்கை நடத்தக் கற்றுக்கொண்டால், தம்மைவிட மேலே உள்ளோரைப் பார்க்காமல் தம்மைவிடக் கீழே உள்ளோரைப் பார்த்து வாழப் பழகிக்கொண்டால் கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்படாது. கார் வாங்கவும் வீடு கட்டவும் கடன் வாங்கிவிட்டு, அதைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அல்லாடுவோர் பலர் உள்ளனர். அவர்கள் சற்றேனும் சிந்திக்க வேண்டும்.

 

நம்முள் சிலர் திருமணத்திற்காகக் கடன் வாங்குகின்றனர். பிறகு அதைத் திருப்பிச்செலுத்துவதற்குள் இன்னொரு பிள்ளைக்குத் திருமண வயது வந்துவிடுகிறது. அதனால் அந்தப் பிள்ளைக்காகவும் கடன் வாங்கித் தடபுடலாகத் திருமணம் செய்து வைக்கிறார் தந்தை. அதன்பின் அந்தக் கடன்களை அடைப்பதற்குள் அவரது ஆவி பிரிந்துவிடுகிறது. இத்தகைய சூழல் ஏற்படக் காரணம், நாம் பிறரைப் பார்த்து, அதைப் போலவே செய்ய எண்ணுகிறோம். ஒவ்வொருவரும் தத்தமது சூழ்நிலைக்கேற்பச் செயல்பட முற்பட்டால், போலிக் கௌரவத்தைக் கைவிடத் துணிந்துவிட்டால் திருமணம் உள்ளிட்ட எல்லாச் செயல்பாடுகளையும் எளிதாக எதிர்கொள்ளலாம்; கடனின்றி வாழலாம். அத்தகைய நல்வாய்ப்பை நாம் உருவாக்கிக்கொள்ள இறைவனிடம் இறைஞ்சுவோம்.

========================================











புதன், 23 ஜூலை, 2025

மிகுந்த மரியாதை ஒருவரை வழிகெடுத்துவிடும்

  

---------------------------------------------

ஒருவருக்கு மக்கள் கொடுக்கின்ற மிகுந்த மரியாதை அவரை வழிகெடுக்கவும் வாய்ப்புண்டு. அதனால்தான்  அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தாம் வரும்போது மக்கள் தமக்காக எழுந்து நிற்பதை விரும்பவில்லை. “அறியாமைக் கால மக்களைப் போல் எழுந்து நிற்காதீர்கள்” என்று தடை விதித்தார்கள். 


மக்களோடு மக்களாக வாழ வேண்டியவர்கள், தமக்கென ஒரு வேடத்தைப் பூண்டுகொண்டு மற்றவர்களைவிடத் தம்மை மேலானவர்களாக எண்ணிக்கொள்கின்றார்கள். அவரை 'ஷைக்’காக ஏற்றுக்கொள்பவர்களைத் தம் சீடர்களாகப் பாவித்து, தாம் சொல்வதையெல்லாம் கேட்டு, அவற்றை அப்படியே பின்பற்றி நடக்கும் அறிவிலிகளாகக் கருதிக்கொள்கின்றார்கள். 


சீடர்கள் தம்முடைய ‘ஷைக்’ வரும்போது அவருக்காக எழுந்து நிற்பதும் அவரது கைகளை முத்தமிடுவதும் அவருக்கு மிகுந்த பெருமையை ஏற்படுத்திவிடுகின்றது. காலப்போக்கில் அந்தக் கண்ணியத்தைச் சற்று அதிகப்படுத்திக்கொள்ள, தம்மைக் குறிப்பிட்ட அந்தத் தரீக்காவிற்குக் கலீஃபாவாக ஆக்கிக்கொள்கிறார். அது இன்னும் மரியாதையை அதிகப்படுத்துகிறது. 


காலப்போக்கில் மக்கள் தம் ‘ஷைக்’ கின் காலில் விழுந்து வணங்கவும் தொடங்கிவிடுகின்றார்கள்.  அதுதான் உச்சநிலை. அத்தகைய நிலையை அடைவதையே பெரும்பாலோர் விரும்புகின்றார்கள். 

இறுதியில் சிலர் தம்மை மஹ்தி என்றும் மஸீஹ் என்றும் இறுதி நபி என்றும் கூறிக்கொள்ள முனைகின்றார்கள்.  இதுதான் அவர்களின் வழிகேடு ஆகும். மிகுந்த மரியாதையை எதிர்பார்த்தல் அவர்களுடைய ஈமானையே தின்றுவிடக் காரணமாகிறது என்பதே நிதர்சன உண்மையாகும். 


எனவே நாம் ஒவ்வொருவரும் மக்களோடு மக்களாக இணைந்து வாழ்வோம். பள்ளிவாசலில் இமாமாக இருப்போரின் ஈமானும் அவரைப் பின்பற்றித் தொழுவோரின் ஈமானும் ஒன்றுதான் என்பதை உணர்ந்து செயல்படுவோம். 


அன்புடன்  

நூ. அப்துல் ஹாதி பாகவி 

23 07 2025

------------------------

செவ்வாய், 22 ஜூலை, 2025

கவனக்குறைவு தவிர்ப்போம்!

 

    

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

நம்முள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பில் இருக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பைச் செவ்வனே செய்துவிட்டால் நம்மால் யாருக்கும் எந்தச் சிரமமும் இருக்காது. நம்முள் சிலர் தமது பொறுப்பைச் சீராக நிறைவேற்றாதபோது, அல்லது பொறுப்பில் கவனக்குறைவாக இருக்கும்போது அதனால் பிறருக்கு எவ்வளவு சிரமமும் இழப்பும் ஏற்படுகிறது என்பதை நாம் யோசிப்பதே இல்லை. அதை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். மேலும் அது மனித இயல்புதானே என்று வாதிடுகிறோம். அலட்சியத்தோடும் கவனக்குறைவோடும் செயல்படும் இன்றைய இளைஞர்களாலும் இளைஞிகளாலும் விலை மதிப்பற்ற எத்தனையோ உயிர்கள் பறிபோகின்றன. அல்லது அவர்களே தம் உயிர்களை இழக்கின்றார்கள்.

 

கவனக்குறைவோடும் அலட்சியத்தோடும் கட்டப்படும் கட்டடங்கள், மேம்பாலங்கள் திறந்துவைக்கப்பட்ட சில நாள்களிலேயே இடிந்து விழுகின்றன. அதனால் பற்பல உயிர்கள் பலியாகின்றன. வாகனங்களை உரிய முறையில் பராமரிக்காததால் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன. ஓட்டுநர் மட்டுமின்றி, அதில் பயணம் செய்வோரும், எதிர்வரும் வாகனங்களில் உள்ளோரும் மரணத்தைத் தழுவுகின்றனர். கடந்த ஜூலை 8ஆம் தேதி, இரயில்வே வாயில் காப்பாளரின் (கேட் கீப்பர்) கவனக்குறைவால் பள்ளி வேன்மீது இரயில் மோதி கடலூரில் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் மாணவர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர்; பலர் காயமடைந்துள்ளனர். வாயில் காப்பாளர் உரிய நேரத்தில் இரயில் கடவுப்பாதையை மூடாததால், அந்த வேன் தண்டவாளத்தைக் கடந்தபோது வேகமாக வந்த தொடர்வண்டியால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஆக ஒருவரின் கவனக்குறைவு பல உயிர்களின் இழப்புக்குக் காரணமாகிவிட்டது.

 

சாலையில் பயணிக்கின்ற இலகுரக வாகனங்கள், கனரக வாகனங்கள் மட்டுமின்றி, தொடரி, விமானங்கள் உள்ளிட்டவையும் விபத்துகளைச் சந்திக்கின்றன. தொடரியைப் பொருத்த வரை வெறுமனே ஓட்டுநரின் கவனக்குறைவு மட்டுமின்றி, சிக்னல் கொடுப்பவரின் அலட்சியமும் சேர்ந்துகொள்வதால்தான் விபத்து ஏற்படுகிறது.  விமானத்தைப் பொருத்த வரை அது ஒவ்வொரு தடவை புறப்படுவதற்கு முன்னும் ஏதாவது பழுது இருக்கிறதா என்று கவனிக்கப்படுகிறது. ஆனாலும் யாரோ ஒருவரின் அலட்சியத்தாலும் கவனக்குறைவாலும் அடிக்கடி விபத்து  ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது.

 

அண்மையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங்-787-8 எனும் விமானம் குஜராத்-அஹமதாபாத் விமான நிலையத்திலிருந்து இலண்டன் நோக்கிப் பறக்கத் தொடங்கிய இரண்டு நிமிடங்களிலேயே அங்குள்ள ஒரு விடுதியில் மோதித் தீப்பற்றி எரிந்துபோனது. அந்த விமானத்தில் பயணம் செய்த 241 பேரும், தரையில், விடுதியில் இருந்த 19 பேரும் என 260 பேர் இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர். மிகுதியான பொருள்களை ஏற்றியதால்தான் அது மேலெழுந்து பறக்க முடியாமல் விடுதிக் கட்டடத்தில் மோதியது என்று காரணம் கூறுகின்றனர். அதிலுள்ள கருப்புப்பெட்டி (தகவல் பெட்டி) மூலம் செய்தி வெளிவந்தால்தான் உண்மை உலகுக்குத் தெரியும்.

 

வீடுகளில் அல்லது கடைகளில் எரிவாயு உருளைமூலம் சமைக்கின்றபோது மிகவும் அலட்சியமாகவும் கவனக்குறைவாகவும் இருப்பதால் அல்லது சமையல் அறைக்குள் கைப்பேசியைப் பயன்படுத்துவதால் விபத்து ஏற்படுகின்றது. சிலர் எரிவாயு கடந்துசெல்லும் குழாயைக் குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்றுவதில் அலட்சியமாக இருந்துவிடுகின்றனர். அதன் காரணமாகவும் எரிவாயு உருளை வெடித்து விபத்து ஏற்படுகிறது. இது போன்ற செய்தியை நாம் அவ்வப்போது படிக்க நேரிடுகிறது.

 

நாம் அடிக்கடி படிக்கக்கூடிய வேதனையான செய்தி என்னவெனில், சிவகாசி தீப்பெட்டித் தொழிற்சாலை வெடித்து 10 பேர் மரணம்; வெடிமருந்துத் தொழிற்சாலை வெடித்து 20 பேர் மரணம் என்பதுதான். மிக மிகக் கவனமாக இருக்க வேண்டிய இடங்கள் என்று தெரிந்தும் மிக அலட்சியமாகவும் கவனக்குறைவாகவும் செயல்படுவதால் இத்தகைய விபத்து நடைபெறுவது தொடர்கதையாக உள்ளது. கடந்த ஜூலை 1ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த மேடாக் மாவட்டம் பாசமயிலாரம் என்ற இடத்தில் தனியார் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் கலவை எந்திரம் திடீரென வெடித்துச் சிதறியதில் அதன் அருகே பணியில் இருந்த தொழிலாளர்கள் சுமார் 100 மீட்டர் உயரத்திற்குத் தூக்கி வீசப்பட்டனர். இதில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 35 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள மகேஸ்வரி பட்டாசு ஆலையில் கடந்த ஆண்டு (2024) மே 11ஆம் தேதி காலை 6:15 மணி அளவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் இடிந்து தரைமட்டமாயின. அந்நேரத்தில் அங்கு யாரும் பணியில் இல்லாததால் யாருக்கும் காயமோ உயிர்ச்சேதமோ இல்லை. செங்கமலபட்டி சுதர்சன் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இது ஒரு தொடர்கதையாகவே தொடர்கிறது.

    

மேலும் அரசுத் துறை அதிகாரிகளின் அலட்சியத்தாலும் கவனக்குறைவாலும் ஒவ்வொரு நாளும் எத்தனையெத்தனை விபத்துகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சரியான முறையில் ஆய்வு செய்யாமல்  பன்னடுக்குக் கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கிவிடுகின்றனர். அவற்றுள் சில கட்டடங்கள் கட்டும்போதே இடிந்துவிழுந்துவிடுகின்றன. கடந்த காலங்களில் நாம் அது போன்று சில விபத்துகளைக் கண்டிருக்கிறோம். அதனால் பற்பல மனித உயிர்கள் பறிபோய்விட்டன; பறிபோகின்றன. சாலைகளைச் சரியாகப் பராமரிக்க வேண்டிய அதிகாரிகளின் கவனக்குறைவாலும் மெத்தனப்போக்காலும் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் வாகனங்களில் பயணம் செய்வோர் தவறி விழுந்து எத்தனையோ விபத்துகள் அவ்வப்போது நடைபெறுகின்றன. 

 

பெரிய பெரிய கட்டட உதிரிப் பாகங்களைக் கிரேன் மூலம் தூக்கும் பணியை மேற்கொள்வோர் மிகுந்த கவனத்தோடும் அக்கறையோடும் செயல்பட வேண்டும். ஆனால் கிரேனை இயக்குபவர்களின் கவனக் குறைவால்  அதில் சங்கிலிகளை இணைக்கக்கூடியோரின் மெத்தனப்போக்கால் எத்தனையோ விபத்துகள் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அண்மையில் சென்னை-இராமாவரம் பகுதி மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட விபத்து இதற்கொரு சான்றாகும். கடந்த ஜூன் 12ஆம் தேதி மெட்ரோ பணியின்போது 100 டன் எடைகொண்ட கான்கிரீட் தண்டவாளம் இரண்டு மேலிருந்து கீழே விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். இதுபோன்று ஆங்காங்கே நடைபெறுகின்ற எத்தனையோ விபத்துகள் செய்திகளில் வருவதில்லை.  

 

தற்காலத்தில் மிகுதியான விபத்துகள் செல்போன்களால் நிகழ்கின்றன. செல்போன் தொலைவில் உள்ளவரை எளிதில் தொடர்புகொண்டு செய்தியைப் பரிமாறிக்கொள்வதற்கு என்ற நிலை மாறி, எல்லாச் செயல்பாடுகளும் செல்போனில்தான் நடைபெறுகின்றன. செல்பேசியின்றி எந்தச் செயலும் இல்லை எனும் நிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். சாப்பாடு ஆர்டர் செய்யவும் செல்போன்தான்; ஆட்டோ தேவையென்றாலும் செல்போன்தான்.  இருப்பினும் சாலையைக் கடக்கும்போதும் இரயில்வே தண்டவாளங்களைக் கடக்கும்போதும் அதில் கவனம் செலுத்தாமல் பேசுவதிலேயே கவனத்தைக் குவிப்பதால், வாகனங்கள்மூலமும், தொடர்வண்டி மூலமும் விபத்துகள் ஏற்பட்டவண்ணமாகவே உள்ளன. அதனால் பற்பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

 

அதுபோலவே செல்போனில் மின்னூட்டம் (சார்ஜ்) ஏற்றும்போது பேசக்கூடாது என்று எத்தனை தடவை சொன்னாலும் கேட்பதில்லை. மின்னூட்டம் ஏற்றும்போதே பேசுவதால் அது வெடித்து விபத்தை ஏற்படுத்துகிறது. அதனால் ஆங்காங்கே உயிரிழப்பு ஏற்படுகிறது. நடந்து செல்லும்போது செல்போனில் பேசாவிட்டாலும், பாடல்களைக் கேட்டுக்கொண்டே செல்வதால், வாகனங்களின் எச்சரிக்கை ஒலியைக் கேட்க முடியாமல் இளைஞர்கள்-இளைஞிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர்.

 

தாய்-தந்தையரின் கவனக்குறைவால் எத்தனையோ குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மாடிப் படிக்கட்டுகளில் ஏறும்போதும், இறங்கும்போதும் குழந்தைகளைத் தனியே விட்டுவிடும் பெற்றோரால் அக்குழந்தைகள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றன. மேலிருந்து உருண்டு கீழே விழுந்து தலையில் பலத்த அடிபட்டு இறந்துவிடுகின்றார்கள்.  தற்காலத்தில் பெரு நகரங்களில் ஆங்காங்கே உள்ள பேரங்காடிகளில் (மால்கள்) நகரும் படிக்கட்டுகள் உள்ளன.  அவற்றில் பயணம் செய்யும்போது, பிள்ளைகளைத் தனியே விட்டுவிட்ட பெற்றோர்களால் அக்குழந்தைகள் விபத்தில் சிக்கி மாண்டுபோவதை அவ்வப்போது நாம் செய்திகளில் படிக்கிறோம்.

 

எத்தனையோ சிறுவர்கள், மாணவர்கள், தம் கவனக்குறைவால் பெரிய ஏரிகளில், குளங்களில், கடலில் குளிக்கும்போது அவற்றினுள் மூழ்கித் தம் இன்னுயிரை இழக்கின்றனர். எச்சரிக்கை உணர்வின்றி விளையாட்டுத்தனமாக அவர்கள் தம் தோழர்களோடு ஆனந்தமாகக் குளிக்கக் கடலில் அல்லது ஏரியில் குதித்து விடுகின்றனர். ‘ஆழம் அறியாமல் காலை விடாதே’ என்று சொல்வார்கள். அந்த அடிப்படையில் அவர்கள் நீச்சலும் தெரியாமல் அவற்றின் ஆழமும் தெரியாமல் அலட்சியப்போக்கோடு குளிப்பதால் அலையில் சிக்குண்டு அல்லது சகதியில் மாட்டிக்கொண்டு இறந்துவிட நேரிடுகிறது.

 

அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி வேலை பார்த்த எத்தனையோ தொழிலாளர்கள் மூச்சுத் திணறி இறந்துள்ளனர். கழிவுநீர்த் தொட்டிகளில் உள்ள மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு போன்ற விஷவாயுக்கள், தொழிலாளர்களின் சுவாசத்தைப் பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன. பல்லாண்டுகளாகத் திறக்கப்படாமல் அடைபட்டிருக்கும் பாதாளச் சாக்கடைக்குள் உருவாகியுள்ள நச்சு வாயுக்கள் குறித்த அறிவின்றி, எந்தவித முன்னேற்பாடும் இன்றி, அதனுள் இறங்குவதால் அந்த நச்சு வாயுவைச் சுவாசிக்கிற தொழிலாளர்கள் மூச்சுத் திணறி இறக்க நேரிடுகிறது. கோவையில் ஒரு நகைப்பட்டறை கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கித் தொழிலாளர்கள் மூவர் ஜூன் 2019இல் இறந்துபோனார்கள். 

  

இவ்வாறு எத்தனையோ செயல்பாடுகள் மனிதர்களின் கவனக்குறைவால் அன்றாடம் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. அதனால் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகிக்கொண்டே இருக்கின்றன. ஆகவே நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் மிகுந்த கவனத்தோடும் கூர்மதியோடும் செய்வோம். நம்மையும் நம்மைச் சார்ந்தோரையும் காத்து, விபத்துகளைத் தவிர்த்து வாழ்வோம்.

======================