வெள்ளி, 9 அக்டோபர், 2020

இதுவும் இபாதத்தான்...

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

-------------------------------------------

உயர்ந்தோன் அல்லாஹ் ஒவ்வோர் இனத்தையும் இணை இணையாகப் படைத்துள்ளான். அந்தந்த இணைகள் தத்தம் தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்கான உந்து சக்தியையும் ஈர்ப்பாற்றலையும் வழங்கியிருக்கிறான். அந்தந்த இணைகள் தம் மெய்நிலை மறந்து இன்பம் துய்க்கும்போது அதன்மூலம் இனப்பெருக்கத்தையும் உண்டாக்கிவிடுகின்றான் இறைவன். ஒரே செயலில் இரண்டு நன்மைகள்.

மனித இனம் தவிர, மற்ற உயிரினங்களுக்கு எந்தச் சட்டமும் இல்லை; எந்த நிபந்தனையும் இல்லை. ஆனால் மனிதர்கள் தம் உடல்சார் தேவையை நிறைவேற்றிக்கொள்ள சில சட்டங்களும் நிபந்தனைகளும் உள்ளன. அவற்றைப் பின்பற்றியே அவர்கள் தம் தேவையை நிறைவேற்றிக்கொள்ள முடியும். அதன் அடிப்படையில்தான் குறிப்பிட்ட நிபந்தனைகளோடு திருமணம் நடைபெறுகிறது. பிறகு அவ்விருவரும் இல்லற வாழ்வில் ஈடுபடுகிறார்கள்.

இதுவரை எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் பலருக்கும் தெரியாத ஒன்று உள்ளது. கணவன்-மனைவியாக இல்லறத்தில் இணையும் இருவரும் ஒருவர் மற்றொருவரின் தேவையை நிறைவேற்றுவது குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது; இதற்கு நன்மை ஏதும் உண்டா? பின்வரும் நபிமொழி அதற்கான தீர்வைச் சொல்கிறது.

அபூதர் (ரளி) கூறியதாவது: நபித்தோழர்களில் (ஏழைகளான) சிலர் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! வசதிபடைத்தோர் நன்மைகளை (தட்டி)க் கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர்; நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர்;  (ஆனால், அவர்கள்) தங்களது அதிகப்படியான செல்வங்களைத் தானதர்மம் செய்கின்றனர். (அவ்வாறு தானதர்மங்கள் செய்ய எங்களிடம் வசதி இல்லையே!)'' என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீங்களும் தர்மம் செய்வதற்கான (முகாந்தரத்)தை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லையா? இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும்; இறைவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமாகும்; ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும்; ஒவ்வோர் "ஓரிறை உறுதிமொழி'யும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; நல்லதை ஏவுதலும் தர்மமே; தீமையைத் தடுத்தலும் தர்மமே; உங்களுள் ஒருவர் தமது பாலுறுப்பி(னைப் பயன்படுத்துகின்ற விதத்தி)லும் தர்மம் உண்டு'' என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்களுள் ஒருவர் (தம் துணைவியிடம்) ஆசைகளைத் தீர்த்துக்கொள்வதற்கும் நன்மை கிடைக்குமா?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(நீங்களே) சொல்லுங்கள்: தடை செய்யப்பட்ட வழியில் அவர் தமது ஆசையைத் தீர்த்துக்கொண்டால் அவருக்குக் குற்றம் உண்டல்லவா! அவ்வாறே அனுமதிக்கப்பட்ட வழியில் அவர் தமது ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும்போது அதற்காக அவருக்கு நன்மை கிடைக்கவே செய்யும்'' என்று விடையளித்தார்கள். (நூல்: முஸ்லிம்: 1832)

சுப்ஹானல்லாஹ் என்று தஸ்பீஹ் செய்வதும் அல்லாஹு அக்பர் என்று தக்பீர் சொல்வதும் அல்ஹம்து லில்லாஹ் என்று அல்லாஹ்வைப் புகழ்வதும் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கலிமா ஓதுவதும் அறச் செயலாகும். அதுபோலவே ஒருவன் தன் மனைவியிடம் ஆகுமான முறையில் தனது ஆசையைத் தீர்த்துக்கொள்வதும் அறச் செயலே ஆகும். எனவே அதற்கும் நன்மையுண்டு என்று இந்நபிமொழி தெரிவிக்கிறது.

முஸ்லிம் எனும் நபிமொழித் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள இந்நபிமொழிக்கு விளக்கவுரை எழுதியுள்ள நவவீ (ரஹ்) கூறியதாவது: ஒருவரது சரியான நிய்யத்-எண்ணம் அவருக்கு நன்மையாக மாறிவிடுகிறது. அதுபோலவே ஒருவன் தன் மனைவியோடு தாம்பத்திய உறவு கொள்வதும் ஒரு வகை இபாதத்தான். அதற்கும் நன்மையுண்டு. அதாவது அதன்மூலம் அவன், தன் மனைவியின் உரிமையை நிறைவேற்றுகிறான்; அல்லாஹ் கட்டளையிட்டவாறு அவளை அவன் கண்ணியமாக நடத்துகிறான்; அல்லது இறைவனுக்கு அஞ்சுகின்ற சந்ததிகளைப் பெற்றெடுக்க எண்ணுகிறான்; அவன் கற்புள்ளவனாக இருக்க அல்லது தன் மனைவி கற்புள்ளவளாக இருக்க வேண்டுமென விரும்புகிறான்; அல்லது இருவருள் ஒவ்வொருவரும் ஷரீஅத்தால் தடைசெய்யப்பட்ட  பார்வையைவிட்டு விலகிக்கொள்ள நாடுகிறார்கள். வேறு ஏதேனும் புகழத்தக்க இலக்கை நெஞ்சில் வைத்து, தன் மனைவியோடு உறவுகொண்டால் அதுவும் இபாதத்தான். (மின்ஹாஜ்)

இஸ்லாமியப் பார்வையில் கணவன்-மனைவி தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடுவது ஒரு வகை இபாதத்-வழிபாடு ஆகும். அது தம்பதியர் இருவருள் ஒருவர் மற்றொருவருக்குச் செய்ய வேண்டிய கடமை; ஒருவர் மற்றொருவருக்குக் கொடுக்க வேண்டிய உரிமை; ஒருவர் மற்றொருவரிடம் கேட்டுப் பெறும் உரிமை; ஒருவர் கேட்கும்போது மற்றொருவர் மறுத்தால் அதற்குத் தண்டனை உண்டு.

இந்தக் கோணத்தில் பின்வரும் நபிமொழியைப் பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்துவிட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர். (நூல்: புகாரீ: 3237)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒருவர் தம் மனைவியை அவளது படுக்கைக்கு அழைத்து, அவள் அவருக்கு (உடன்பட) மறுத்தால் வானிலுள்ளவன் அவள்மீது கோபம் கொண்டவனாகவே இருக்கிறான்; அவள்மீது கணவன் திருப்தி கொள்ளும்வரை. (நூல்: முஸ்லிம்: 2830) 

ஆக இந்த இரண்டு நபிமொழிகளின் அடிப்படையில், தாம்பத்திய உறவு தம்பதியரின் உரிமை. அவ்விருவருள் ஒருவருக்கொருவர் அதைக் கொடுப்பதும் பெறுவதும் அவரவர் உரிமை. அதை மறுக்கும் பெண் அல்லாஹ்வின் கோபத்திற்கும் வானவர்களின் சாபத்திற்கும் ஆளாகின்றாள். ஷரீஅத் ரீதியாக அனுமதிக்கப்பட்ட காரணம் இருந்தால் தவிர மற்ற தருணங்களில் கணவனின் தேவையை நிறைவேற்ற மறுத்தால், அவள் சாபத்திற்கு உள்ளாகின்றாள். ஏனென்றால் அவள் தன் கணவனின் உரிமையைத் தர மறுக்கிறாள். கணவனோ கற்போடு வாழ நினைக்கிறான். தன் மனைவியைத் தவிர பிற பெண்களிடமோ விலை மாதுக்களிடமோ செல்வது குற்றம் என்பதை உணர்ந்துள்ளான். எனவே மனைவியிடம் மட்டுமே தன் தேவையை நிறைவேற்றிக்கொள்ள நாடுகிறான். அத்தகைய தருணத்தில் அவனது ஆசையை நிறைவேற்ற வேண்டிய அவள், அவனுக்கு இணங்க மறுத்ததால் அவனது உரிமையைத் தர மறுத்த குற்றத்திற்கு ஆளாகின்றாள். இதை மனிதர்களிடம் சொல்ல முடியாமல் மனதுக்குள்ளேயே புழுங்குவதால் அவனுக்கு ஆதரவாக அல்லாஹ் அவள்மீது சினம்கொள்கிறான்; வானவர்கள் அவளைச் சபிக்கின்றார்கள்.







இஸ்லாம் ஆண்-பெண் இடையே சமநிலையான பார்வை கொண்டுள்ளது என்பதை நாம் அறிவோம். அந்த வகையில் கணவனின் உரிமையைத் தர மறுக்கின்ற பெண் எவ்வாறு அல்லாஹ்வின் கோபத்திற்கு உரியவளாகின்றாளோ அதேபோல் கணவன் தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றத் தவறினாலும், அவன் தன் மனைவியின் உரிமையைக் கொடுக்க மறுத்த குற்றத்திற்கு ஆளாகின்றான்.

தற்காலத்தில் கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்வதால் இரவில் களைப்பாகத் தூங்கிவிடுகின்றார்கள். இப்படியே ஒவ்வொரு நாளும் கழிந்து விடுவதுண்டு. அதன் காரணமாக அவ்விருவரிடையே முறையான தாம்பத்திய உறவு நடைபெறுவதில்லை. அதன் காரணமாக அவ்விருவரிடையே அன்பும் காதலும் குறைந்துவிடுவதோடு கோபம், படபடப்பு, பதற்றம் இவை மிகுதியாகின்றன. அமைதியான வாழ்க்கையையும் மனநிம்மதியையும் இழக்கின்றனர். இதனால்தான் இன்றையக் காலத்தில் பலர் படபடப்போடும் பதற்றத்தோடும் காணப்படுகின்றார்கள்.

கணவன் தன் மனைவியின் ஆசைகளையும் உடல்ரீதியான தேவையையும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு, நபிமொழித் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள ஒரு நபிமொழியே சான்றாகும்.

அபூஜுஹைஃபா (ரளி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சல்மான் (ரளி), அபுத்தர்தா (ரளி) ஆகிய இருவரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள்.  சல்மான் அபுத்தர்தாவைச் சந்திக்கச் சென்றபோது (அபுத்தர்தாவின் மனைவி) உம்முத் தர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். உமக்கு என்ன நேர்ந்தது? என்று அவரிடம் சல்மான் கேட்டார். அதற்கு உம்முத்தர்தா (ரளி), உம் சகோதரர் அபுத்தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையுமில்லை என்று விடையளித்தார். (சற்று நேரத்தில்) அபுத்தர்தா வந்து சல்மானுக்காக உணவு தயாரித்தார். சல்மான் (ரளி) அபுத்தர்தாவிடம், “உண்பீராக!என்று கூறினார். அதற்கு அபுத்தர்தா, “நான் நோன்பு நோற்றிருக்கிறேன்என்றார். சல்மான், “நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன்என்று கூறியதும் அபுத்தர்தாவும் உண்டார். இரவானதும் அபுத்தர்தா (ரளி) நின்று வணங்கத் தயாரானார். அப்போது சல்மான் (ரளி), “உறங்குவீராக!என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் சல்மான், “உறங்குவீராக!என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் சல்மான் (ரளி), “இப்போது எழுவீராக!என்று கூறினார். இருவரும் தொழுதனர். பிறகு அபுத்தர்தாவிடம் சல்மான் (ரளி), “நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உம் குடும்பத்தாருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக!என்று கூறினார். பிறகு அபுத்தர்தா (ரளி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சல்மான் உண்மையையே கூறினார்!என்றார்கள். (நூல்: புகாரீ: 1968)

மற்ற தேவைகளை நிறைவேற்றுவதைவிட மிக அவசரமாக நிறைவேற்ற வேண்டிய தேவைதான் ஓர் ஆணுடைய பாலுணர்வுத் தேவை. மற்ற தேவைகளை நிறைவேற்ற எவ்வளவு கால அவகாசம் எடுத்துக்கொண்டாலும் அதனால் எந்தப் பாதிப்புமில்லை. ஆனால் ஓர் ஆணுடைய இல்லறத் தேவையை அவனுடைய மனைவி மிக அவசரமாக நிறைவேற்றுவது அவளது கடமையாகும். அதை அவன் விரும்பும் எந்த நேரத்திலும் அவளிடமிருந்து அடைந்துகொள்வது அவனது உரிமையாகும். அதனால்தான்  நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: கணவர் தாம்பத்திய உறவுக்காக அழைக்கும்போது மனைவி செல்லட்டும். அப்போது அவள் அடுப்பின் அருகில் இருந்தாலும் சரியே!” (நூல்: திர்மிதீ: 1080)

ஏனெனில் ஓர் ஆண் வெளியில் சென்று சம்பாதிப்பவன். அவன் வெளியில் செல்லும்போது பல பெண்களை நிர்ப்பந்தமாகப் பார்க்க வேண்டிய நிலை ஏற்படலாம். அப்போதெல்லாம் உந்தி வருகின்ற ஆசையை அடக்கிக்கொண்டு கற்போடு வீடு வந்து சேர்ந்து, தன் மனைவியிடம் தன் தேவையை நிறைவேற்றிக்கொள்ள முயல்கின்றபோது, “கொஞ்சம் தள்ளிப்படுங்கஎன்று மனைவி கூறினால் அது அவனுக்கு எவ்வளவு ஏமாற்றமாக அமையும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இந்தக் கோணத்தில் சிந்தித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: உங்களுள் ஒருவரை ஒரு பெண்(ணின் அழகு) கவர்ந்து, அவரது உள்ளத்தில் தவறான எண்ணம் தோன்றினால், உடனே அவர் தம் மனைவியை நாடிச் சென்று, அவளுடன் உறவு கொள்ளட்டும். ஏனெனில் அது அவரது உள்ளத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்.”  (நூல்: முஸ்லிம்: 2719)   

கணவன் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய மிக முக்கியமான கடமைகளுள் ஒன்று, அவளது உடல்சார் தேவையை நிறைவேற்றுவதாகும் என்பதை மேற்கண்ட நபிமொழிகள் உணர்த்துகின்றன. ஆகவே கணவன்-மனைவியாக உள்ள தம்பதியர் இருவரும் கற்போடு வாழ வேண்டும் என்பதற்காகவும் இறைவனின் கட்டளைகளுக்கும் வரம்புகளுக்கும் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற அடிப்படையிலும் ஒருவருக்கொருவர் தத்தம் உரிமையைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் தாம்பத்திய உறவு கொள்வது இபாதத்தான் என்பதை உணர்ந்து கணவன்-மனைவி இருவரும் இணைந்து வாழ இறைவன் அருள்வானாக.

==========================