திங்கள், 10 பிப்ரவரி, 2020

இஸ்லாத்தின் தூண்...


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
-------------------------------------------------------------

இன்றைய அநியாயக்கார ஆட்சிக்கு எதிராக ஆங்காங்கே மக்கள் கண்டனப் பேரணி, கண்டனப் போராட்டம், அமைதிப் பேரணி, மனித சங்கிலிப் போராட்டம் முதலானவற்றை நடத்துகின்றார்கள். அத்தோடு துஆ மஜ்லிஸ், ஸலவாத் மஜ்லிஸ், புர்தா மஜ்லிஸ், நோன்பு நோற்றல், குனூத் ஓதுதல் உள்ளிட்ட ஆன்மிகச் செயல்பாடுகளிலும் ஈடுபடுகின்றார்கள். இதையெல்லாம் குறிப்பிட்ட நாள்களில் செய்து முடித்துவிட்டுக் கலைந்துவிடுவார்கள். ஆனால் அல்லாஹ் அடியார்களிடம் எதிர்பார்ப்பதென்ன? எதற்காக மனிதன் படைக்கப்பட்டுள்ளதாக இறைவன் திருக்குர்ஆனில் கூறுகின்றான்? அந்த வழியை நோக்கி நாம் அவர்களை அழைக்க வேண்டாமா? அந்த வழிபாட்டை நோக்கி மக்கள் சுயமாக விரைந்து வர வேண்டாமா?

ஒவ்வோர் ஆணும் பெண்ணும் தன்னைப் படைத்த இறைவனை ஒவ்வொரு நாளும் ஐவேளை தொழுக வேண்டுமல்லவா? அதற்காகத்தானே அல்லாஹ் இந்த மனித இனத்தைப் படைத்துள்ளான்? அதை ஏன் நாம் மறந்தோம்? தொழுகை எனும் வழிபாட்டில் நாம் குறையுடையோராக இருக்கும் காலம் வரை சோதனைகள் நம்மை ஒன்றன்பின் ஒன்றாகத் தொடரவே செய்யும். ஐவேளைத் தொழுகைதானே ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர்மூச்சாக இருக்க வேண்டும்?

ஒருவன் பிற வேலைகளைச் செய்கிறானோ இல்லையோ ஐவேளை தொழுதுதானே ஆக வேண்டும்? ஒவ்வொரு நாளும் மனிதன் தன் இறைவனுக்கு மாறு செய்துவிட்டு, சோதனைக் காலத்தில் இறைவா! என்னைக் காப்பாற்று!என்று பிரார்த்தனை செய்தால் அவன் ஏற்றுக்கொள்வானா? சோதனைதான் நீங்கிவிடுமா?

ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர்மூச்சான தொழுகையைத் தவறவிடலாமா? அதிகாலை நேரத்தில் ஃபஜ்ர் தொழுகாமல் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருக்கின்றார்கள். லுஹர், அஸர், மஃக்ரிப், இஷா ஆகிய தொழுகை நேரங்கள் உலக அலுவல்களிலும் பொருளீட்டுவதிலும் கழிந்துவிடுகின்றன. வாரம் ஒரு தடவை வெள்ளிக்கிழமை மட்டும் தொழுதால் போதும் என்ற எண்ணமே பலரின் உள்ளத்தில் பதிந்துகிடக்கிறது. தொழுகையைக் குறித்து அறிந்தோரும் நேரம் தவறித் தொழுவதையும், அசட்டையாகத் தொழுவதையும் உரிய முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதையும் காண முடிகின்றது. கூட்டுத் தொழுகையில் (ஷமாஅத்) பங்கு கொள்ளாமல் தாமதமாக வந்து, தனித்துத் தொழுவோர் பலருண்டு. இவ்வளவு அசட்டையாகவும் கவனக் குறைவாகவும் இருந்தால் அல்லாஹ்வின் கோபமும் சினமும் அத்தகையோர்மீது ஏற்படாமல் எவ்வாறு தவிர்த்துக்கொள்ள முடியும்?

மனிதன் ஒவ்வொரு நாளும் தான் செய்ய வேண்டிய எச்செயலையும் தவற விடுவதில்லை. எல்லாவற்றையும் செவ்வனே செய்துகொள்கிறான். எல்லாவற்றிற்கும் நேரம் ஒதுக்க முடிகின்ற அவனுக்கு, தன்னைப் படைத்த இறைவனை வணங்க நேரம் ஒதுக்க முடியவில்லை என்பது வியப்பாக உள்ளது. அப்படியானால் அவனுக்கு அதன் முக்கியத்துவம் இன்னும் விளங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜுனைதுல் பஃக்தாதி (ரஹ்) அவர்கள் மிகப்பெரும் இறைநேசர். அவர்தம் பாசறையில் பற்பல சீடர்கள். அவர்தம் கண்ணியத்தையும் உயர்வையும் கேள்விப்பட்டு புதிதாக ஒரு சீடர் அங்கே வருகிறார். பத்தாண்டுகளாகத் தங்கியிருக்கிறார். தம் ஆன்மிக ஆசானின் செயல்பாடுகளை உற்று நோக்குகிறார். அவர்தம் செயல்பாடுகளில் ஆச்சரியமோ அற்புதமோ ஏதாவது வெளிப்படுகிறதா என்று எதிர்பார்த்துச் சோர்ந்துபோன அவர் தம் ஊருக்குத் திரும்ப முற்படுகிறார். அதைத் தம் ஆன்மிக ஆசானிடம் தெரிவிக்கிறார். இவ்வளவு காலம் தங்கியிருந்த நீ, எதற்காகத் திடீரென ஊருக்குப் புறப்படுகிறாய்?” என்று வினவ, “நான் தங்களின் உயர்வையும் சிறப்பையும் கேள்விப்பட்டு, தங்களின் செயல்களில் அற்புதம் எதையாவது காணலாம் என்றுதான் இங்கு வந்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தங்களிடமிருந்து அற்புதம் எதையுமே நான் காணவில்லை. அதனால்தான் ஊர் திரும்ப முடிவு செய்துள்ளேன்என்று அவர் கூறினார். ஓர் அற்புதத்தைக்கூடவா நீ என்னிடம் காணவில்லை?” என்று கேட்க, “ஆம்! ஓர் அற்புதத்தைக்கூட நான் தங்களிடம் காணவில்லைஎன்று சீடர் பதிலுரைத்தார். நான் எப்போதாவது கூட்டுத் தொழுகையின் முதல் தக்பீரைத் தவறவிட்டதை நீ பார்த்துள்ளாயா?” என்று கேட்க, “இல்லை. ஒருபோதும் தவறவிட்டதில்லைஎன்று சீடர் பதிலளித்தார். அதுதான் அற்புதம்என்று ஆன்மிக ஆசான் விடையளித்தார். அப்போதுதான் அச்சீடர் அற்புதம் என்றால் என்ன என்பதையே உணர்கிறார்.

ஆம்! ஐவேளை தொழுகையைப் பேணித் தொழுவதுதான் அற்புதங்களிலெல்லாம் அற்புதமாகும். இறைநேசர் என்று போற்றப்படுவோரெல்லாம் ஐவேளை தொழுகையைப் பேணித் தொழுதவர்களே. ஐவேளை தொழுகையைப் பேணித் தொழாத யாரும் இறைநேசராக ஆக முடியாது. ஒருவர் ஐவேளை தொழுகையைப் பேணித் தொழுகத் தொடங்கிவிட்டால் அவரின் மற்ற செயல்பாடுகள் சிறப்பாகவும் உயர்வாகவும் இருக்கும். ஐவேளை தொழுகை நமக்குப் பல்வேறு பாடங்களைக் கற்றுத் தருகிறது. குறிப்பிட்ட நேரத்தில் தொழுது பழகிவிடுவதால் அவரது மற்ற செயல்பாடுகளும் குறிப்பிட்ட நேரத்தில் அமையும். கொடுத்த வாக்குறுதியைச் சரியாக நிறைவேற்றுபவராக இருப்பார். நேர மேலாண்மையைப் பேணுவார். கொடுக்கப்பட்ட பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்றுவார். இவ்வாறு பல்வேறு நற்பண்புகளை அவரிடம் காணலாம். இதுதான் தொழுகையைப் பேணுவோரின் தனித்தன்மையாகும்.

அல்லும் பகலும் வியாபாரத்தில் மூழ்கிக் கிடப்போரே, விளையாட்டிலும் கேளிக்கையிலும் இன்பம் காண்போரே, வெற்றுப் பேச்சுகளில் நேரத்தை வீணாக்குவோரே, தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் நேரத்தைக் கழிப்போரே, இணையதளத்தில் இளமையைத் தொலைப்போரே நீங்கள் அனைவரும் சிந்திப்பீர். தொழுகையை விட்டோருக்கும் இறைமறுப்பாளருக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. இறைநம்பிக்கையாளருக்கும் இறைமறுப்பாளருக்கும் இடையே உள்ள வித்தியாசமே தொழுகைதான். அதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்துள்ளோம்?

நயவஞ்சகர்கள் குறித்து இறைவன் பேசுகின்றபோது, “அவர்கள் தொழுகைக்காக எழுந்து நின்றால் சோம்பல் பட்டுக்கொண்டே நிற்கின்றார்கள்” (4: 142) என்று கூறுகின்றான். சோம்பல்பட்டுக்கொண்டு தொழுகையில் நிற்பதே நயவஞ்சகத்தின் அடையாளம் என்றால் தொழுகையில் அசட்டையாக இருப்பதும் நேரம் கிடைக்கும்போது தொழுவதும் வாரம் ஒரு முறை தொழுவதும் எதன் அடையாளம்? வாரம் ஒரு முறை தொழுபவர்கள் எப்படி அல்லாஹ்வின் அருளையோ அன்பையோ எதிர்பார்க்க முடியும்? அவனது கோபம் அவர்கள்மீது இறங்காதா?
நயவஞ்சகர்களுக்கு மிகவும் சிரமமான தொழுகை இஷாவும் ஃபஜ்ரும் ஆகும். அவர்கள் அவ்விரு தொழுகைகளிலுள்ள சிறப்பை அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள்...என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்: 1041)

இஷா, ஃபஜ்ர் ஆகிய இரண்டு தொழுகைகளும் நயவஞ்சகர்களுக்கு மிகவும் சிரமமான தொழுகை என்று கூறியுள்ளார்கள். ஆனால் அவ்விரண்டும் நம்முள் பலருக்கும் கடினமாகத்தானே உள்ளது? அப்படியானால் நயவஞ்சகம் நம் மனதிலும் படிந்து கிடக்கிறது என்றுதானே பொருள்? அப்படியிருக்கும்போது எப்படி அல்லாஹ்வின் உதவி நமக்குக் கிடைக்கும்?

நாம் ஒவ்வொரு பள்ளியிலும் காணும் தொழுகையாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு? ஆயிரக்கணக்கானோர் தொழுகும் விதத்திலான மிக விசாலமான பள்ளிகளில் மிகக் குறைந்த நபர்களே ஐவேளை தொழுகையை நிறைவேற்றுகின்றனர். பிறரெல்லாம் தத்தம் அலுவல்களைத்தான் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். பள்ளியின் அருகில் உள்ளோர்கூடத் தொழுக வருவதில்லை. இந்த அளவிற்குத்தான் நாம் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இறைவா! என் சமுதாயத்தாருக்கு அதிகாலை நேரத்தில் அருள்புரிவாயாக” (அபூதாவூத்: 2239) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்காகப் பிரார்த்தனை செய்துள்ளார்கள். அந்நேரத்தில்தான் நம்முள் பலர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஏன் ஃபஜ்ர் தொழுகைக்கு வருவதில்லைஎன்று கேட்டால், “ஷுகர் மாத்திரை போட்டுக்கொள்வதால் அதிகாலை ஏழு மணிக்குத்தான் எழ முடிகிறது இமாம் ஸாப்என்று பதிலளிக்கிறார்கள்.

ஆதமின் மகனே! (மனிதா!) என் வழிபாட்டிற்காக நீ நேரத்தை ஒதுக்கு! உனது நெஞ்சத்தை நான் தன்னிறைவால் நிரப்புவேன். உனது வறுமையை அடைத்துவிடுவேன். அவ்வாறு நீ செய்யாவிட்டால் உன் கைகளை வேலைகளால் நிரப்பிவிடுவேன். உனது வறுமையை அடைக்க மாட்டேன்என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 2390)

ஐவேளை தொழுகையை முறையாக நிறைவேற்றாத பலர் சொல்லும் ஒரே காரணம் நேரமின்மை. அதனால்தான் அல்லாஹ், “என் வழிபாட்டிற்காக நேரம் ஒதுக்குஎன்கிறான். நேரம் ஓடிக்கொண்டே இருக்கும்; காலம் கரைந்துகொண்டேதான் இருக்கும். நாம்தாம் ஒவ்வொரு செயலுக்கும் உரிய நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். நேரம் ஒதுக்காமல் நாம் எதையும் செய்ய முடியாது. அல்லும் பகலும் அயராது உழைத்தும் வறுமை தீரவில்லை; வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்று புலம்புவோர் பலருண்டு. அதேநேரத்தில் அவர்கள் தொழுவதும் இல்லை. அவர்களின் புலம்பலுக்கு ஒரே தீர்வு ஐவேளை தொழுகைதான். இறைவழிபாட்டிற்காக நாம் நேரம் ஒதுக்கும்போது நம்முடைய வறுமையை நீக்குவதாக அல்லாஹ் சொல்கிறான். நிச்சயமாக நம் வறுமை தீரும்; வாழ்க்கையில் திருப்தியும் நிம்மதியும் கிடைக்கும். இறைவழிபாட்டிற்காக நேரம் ஒதுக்கவில்லையானால் நாம் எவ்வளவுதான் உழைத்தாலும் நம் வறுமையும் தீராது; வேலையும் முடியாது. அந்த வேலையிலேயே உழன்று கொண்டிருக்குமாறு அல்லாஹ் நம்மை விட்டுவிடுவான்.


ஆக, தொழுகைக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து அதைச் சீராக நிறைவேற்றாத வரை இறைவனின் உதவி நமக்குக் கிட்டாது என்பது திண்ணம். முஸ்லிம்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படும் துன்பத்திற்கும் சோதனைகளுக்கும் காரணம் ஐவேளை தொழுகையில் அலட்சியம் செய்வதுதான். ஐவேளை தொழுகையைச் சீராக நிறைவேற்றினால் நிம்மதியான வாழ்க்கையும் ஈருலக வெற்றியும் நிச்சயம் உண்டு என்பதை உணர்ந்து இன்றே அதற்கான உறுதிமொழி ஏற்போம். ஐவேளை தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றாமல் நான் ஒரு நாளும் துயில்கொள்ள மாட்டேன். இது இறைவன்மீது ஆணை!
========================================







கருத்துகள் இல்லை: