திங்கள், 17 செப்டம்பர், 2018

‘நபிவழி மருத்துவம்’- நூல் இப்போது வெளிவந்துவிட்டது




 ==================================================
இந்நூலில் இடம்பெற்றுள்ள எனது முன்னுரை... 

உலகையும் அதனுள் அடங்கியுள்ள எண்ணற்ற பொருட்களையும் மனிதனின் பயன்பாட்டுக்காகவும் அவற்றை இணை இணையாகவும் படைத்துள்ள பேரிறைவன் அல்லாஹ்வுக்கே புகழ் யாவும் உரித்தாகுக! உலக மாந்தர் யாவரும் நேரிய பாதையில் சென்று நன்னெறி வாழ்க்கை வாழ வழிகாட்டியதோடு ஆரோக்கியமான வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்களையும் வழங்கிய இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அவர்களின் வழியைச் செவ்வனே பின்பற்றி வாழ்ந்து மறைந்த அவர்கள்தம் தோழர்கள் மீதும் இறையருளும் கருணையும் பொழிவதாக! 

நபிவழி மருத்துவம் எனும் இந்நூலைப் பேரறிஞர் ஷம்சுத்தீன் முஹம்மது பின் அபீபக்ர் பின் கய்யிம் (ரஹ் - 691-751) எழுதியுள்ளார். இந்நூல் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. 37 பாடங்களை உட்கொண்டுள்ள முதல் பகுதி பொதுவான பல்வேறு மருத்துவ வழிகாட்டுதல்களைக் கூறுகிறது. 23 பாடங்களைக் கொண்டுள்ள இரண்டாம் பகுதி ஆன்மிக ரீதியான இறையியல் மருத்துவம் தொடர்பாகக் கூறுகிறது. மூன்றாம் பகுதி தனித்தனி பொருள்கள் ஒவ்வொன்றும் கொண்டுள்ள மருத்துவப் பயன்கள் குறித்துக் கூறுகின்றது.

நபிவழி மருத்துவம் என்பது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக்கொடுத்த மருத்துவத் தகவல்கள் ஆகும். மனிதப் பயன்பாட்டிற்காகவே யாவற்றையும் படைத்துள்ள உயர்ந்தோன் அல்லாஹ் அவனுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக்கொள்வதற்கான வழிமுறைகளையும் நபி (ஸல்) அவர்கள் மூலம் காண்பித்தான்.
மனநோய்களைக் களைந்து புத்துணர்வூட்ட மகத்தான வேதமான திருக்குர்ஆனையும் உடல் தொடர்பான நோய்களைத் தீர்த்துக்கொள்ள பல்வேறு மூலிகைகளையும் உயர்ந்தோன் அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு ஓர் அருட்கொடையாகவே வழங்கியுள்ளான்.  அவன் படைத்த ஒவ்வொரு பொருளும் பல்வேறு பயன்களைக் கொண்டுள்ளது. அதையே நபி (ஸல்) அவர்களின் மூலம் மனித சமுதாயத்திற்குத் தெளிவுபடுத்தியுள்ளான்.

நபி (ஸல்) அவர்களின் வாயிலாகச் செவியுற்றுப் பயன்பெற்ற அவர்கள்தம் உற்ற தோழர்கள்மூலம் அது விரிவடைந்து அதன்பின் மருத்துவர்களின் அனுபவங்கள் மூலம் அப்பொருள்களின் மருத்துவப் பயன்பாடுகள் வளர்ச்சியடைந்துள்ளன. ஆகவே நபி (ஸல்) அவர்கள் கூறியதை ஏற்றுக்கொண்ட மருத்துவர்கள் தம் அனுபவங்களையும் கூறியுள்ளார்கள். அவற்றையும்  மேற்கோள்காட்டியே இந்நூலாசிரியர் எழுதியுள்ளார்.

மருத்துவம் என்பது அனுபவத்தால் வளர்ச்சியடைந்துள்ள ஒரு துறையாகும். எனவே பயனுள்ள குறிப்புகளையும் தகவல்களையும் இணைத்தே நூலாசிரியர் எழுதியுள்ளார். அவற்றைப் படிக்கின்ற வாசகர்கள், “இதை நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா? பிறகேன் இவர் இதை எழுதுகிறார்?” என்று கேட்கலாகாது. ஏனெனில் அதை நபி (ஸல்) அவர்கள் நேரடியாகக் கூறாவிட்டாலும், அதுவும் அவர்களின் வாயிலாகக் கிடைக்கப்பெற்ற குறிப்புகளிலிருந்து பிறந்த அனுபவக் குழந்தைதான் என்பதை வாசகர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இரண்டாம் பகுதியிலுள்ள பிரார்த்தனைகள் (துஆக்கள்) மிக முக்கியமானவை. ஓதிப் பார்த்து நோய்களைக் குணப்படுத்தும் சிகிச்சை முறையை மனித சமுதாயத்திற்கு அனுமதித்து, அதைத்  தெளிவாகக் கற்றுக்கொடுத்துள்ளார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். மனித உடலுக்குள் ஓடிக்கொண்டிருக்கிற உயிரானது ஒருவிதமான காற்றைப் போன்றதாகும். அதற்கு இடையூறளிக்கும் விதத்தில் கெட்ட ஆவிகள் அதனுள் புகுந்துகொள்ளும்போது திருக்குர்ஆனின் வசனங்களை ஓதி ஊதுவதன்மூலம் அதனைக் குணப்படுத்தலாம் என்பதை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து கிடைக்கப்பெற்ற துஆக்கள் மூலம் ஓதிப் பார்த்தல், திருக்குர்ஆன் வசனங்களைக் கொண்டு ஓதிப் பார்த்தல் ஆகிய இரண்டு வகை உள்ளன. இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்தக் குர்ஆனை  நிவாரணமாகவும் அருளாகவும் இறக்கியுள்ளோம் (17: 82) என்று அல்லாஹ் கூறுகின்றான். இவ்வசனத்தின்படி திருக்குர்ஆனின் வசனங்கள் அனைத்தும் ஒவ்வொரு நோய்க்கு மருந்தாகத் திகழ்கின்றன என்பது தெளிவாகிறது.

அந்த அடிப்படையில்தான், ஒரு குழுவின் தலைவரைத் தேள் கொட்டிவிட்டபோது அல்ஃபாத்திஹா எனும் அத்தியாயத்தை ஓதி  அவர்மீது ஊதியதன்மூலம் அவருக்கு அதிலிருந்து நிவாரணம் கிடைக்கச் செய்துள்ளார் ஒரு நபித்தோழர். பொதுவாக நபி (ஸல்) அவர்கள் துயில்கொள்ளுமுன், அல்ஃபலக், அந்நாஸ் ஆகிய இரண்டு அத்தியாயங்களையும் ஓதி, தம் கையில் ஊதி, அதைத் தம் உடல் முழுவதும் தடவிக்கொள்வார்கள். இவ்வாறு செய்வதன்மூலம்  கெட்ட ஆவிகள் தீண்டாதிருத்தல், சூனியம் தாக்காதிருத்தல் உள்ளிட்ட  எல்லாவிதமான ஆபத்துகளிலிருந்தும் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள்.

ஒவ்வொரு நோயும் வெவ்வேறு விதமானது. எனவேதான் அந்தந்தத் தருணங்களுக்கேற்ற துஆவை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். தேள்கடி, சின்னம்மை, பாம்புகடி, கொப்புளம், காயம், உடல்வலி, துன்பம், துயரம், துக்கம், தூக்கமின்மை, திடுக்கம் உள்ளிட்ட ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவிதமான பிரார்த்தனை உண்டு. அதை நன்கறிந்து, உறுதியான நம்பிக்கையோடு ஓதி ஊதினால் நோய்கள் குணமாகும் என்பது உண்மை. ஏனெனில் பிரார்த்தனைகள், திருக்குர்ஆன் வசனங்கள் ஆகிய இவற்றின் ஆற்றல் மகத்தானது. இவற்றை ஓதி ஊதும்போது மனித உடலுக்குள் ஊடுருவியுள்ள வலுவற்ற கெட்ட ஆவிகள் அகன்றுவிடுகின்றன. இதுதான் ஓதிப் பார்த்தலின் பயனும் சூட்சுமமும் ஆகும்.

ஆகவே வாசகர்கள் இந்நூலை வாசிக்கும்போது அல்லாஹ்வின்  வேத வசனங்கள்மீதும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாக்குகள்மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். அவர்களுக்குத்தான் இந்நூல் பயனளிக்கும்.

சாஜிதா பதிப்பகத்தின் உரிமையாளர் ஜனாப் ஜகரிய்யா ஸாஹிபின் தம்பி ஜனாப் அப்துல் மாலிக் என்னிடம் இந்நூலைக் கொண்டு வந்து கொடுத்து, தமிழாக்கம் செய்து தருமாறு கேட்டுக்கொண்டார். நான் ஒரு கணம் மலைத்து, பின்னர் - அல்லாஹ்வின்மீது நம்பிக்கை வைத்து- ஏற்றுக்கொண்டேன். ஆனால் தமிழாக்கம் செய்யத் தலைப்பட்டபோது  நான் மலைத்தது சரியே எனப் பட்டது. நபிமொழித் தொகுப்பு நூல்களைத் தமிழாக்கம் செய்துகொண்டிருந்த நான் மருத்துவ நூலை முதன்முறையாகத் தமிழாக்கம் செய்ய முற்பட்டேன். அதனால் அரபுப் பதங்களைத் தமிழுக்குள் கொண்டுவரப் போராட வேண்டியிருந்தது. பல அகராதிகளைப் புரட்ட வேண்டியிருந்தது. தவறான பொருள்களை எழுதிவிட்டால் அது மிகப்பெரும் மருத்துவப் பிழையாகிவிடுமே என்ற அச்சம் ஒரு பக்கம் இருந்தது. ஆக எல்லாவற்றையும் கடந்து தமிழாக்கம் செய்துமுடிப்பதற்குள் ஈராண்டுகள் ஓடிவிட்டன. எளிய முறையில் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்நூலில் ஆங்காங்கே ஆங்கில வார்த்தைகளை இணைத்தே எழுதியுள்ளேன்.

இந்நூலுக்கு ஆசியுரை வழங்கிய கண்ணியத்திற்குரிய என்னுடைய மூத்த பேராசிரியர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் பி.எஸ்.பி. ஜைனுல் ஆபிதீன் பாகவி அவர்களுக்கும் ஆய்வுரை வழங்கிய மௌலானா மௌலவி அல்ஹாஜ் கே.எம். இல்யாஸ் ரியாஜி அவர்களுக்கும் அணிந்துரை வழங்கிய பன்னூலாசிரியர் முதுபெரும் எழுத்தாளர் அல்ஹாஜ் ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்களுக்கும் வாழ்த்துரை வழங்கிய சீரிய சமூகச் சிந்தனையாளர் சி.என்.எம். சலீம் அவர்களுக்கும் இந்நூலை இன்முகத்தோடு வெளியிட முன்வந்த ஜனாப் ஜகரிய்யா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நூலைத் தாங்கள் அனைவரும் படித்துப் பயன்பெறுவதோடு தங்களின் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அறிமுகப்படுத்துமாறு அன்போடு விழைகிறேன். மக்கள் யாவரும் பயன்பெறும் வகையில் இன்னும் பல நூல்களை இச்சமுதாயத்திற்கு நான் வழங்க எனக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு மெத்தப் பணிவோடும் அன்போடும்  கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

இந்நூல் கிடைக்குமிடங்கள்:

1.      சாஜிதா புக் சென்டர், 248, தம்புச் செட்டித் தெரு, மண்ணடி, சென்னை-1
தொடர்புக்கு: 98409 77758, 044-25224821 
2. சலாமத் புக் ஹவுஸ் லிங்கிச் செட்டித் தெரு, மண்ணடி, சென்னை-1    தொடர்புக்கு: 96000 12039

3. பஷாரத் புக்ஸ் (மஸ்ஜித் மஃமூர் அருகில்) அங்கப்ப நாயக்கன் தெரு, மண்ணடி, சென்னை-1  தொடர்புக்கு: 044- 25225028

4. குட்வேர்ட் புக்ஸ் 324, காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5  தொடர்புக்கு: 97908 53944

5. புராக் புக் சென்டர் காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5 தொடர்புக்கு: 044-42157847

6. ரஹ்மத் புத்தக நிலையம், 2-ஆவது முக்கியச் சாலை, சிஐடி காலனி, மயிலாப்பூர், சென்னை.  தொடர்புக்கு: 94440 25000

7. ரசூல் புக் சென்டர், சிங்காரத் தோப்பு, திருச்சி
தொடர்புக்கு: 94435 63585

8. பாரத் புக் சென்டர், திருநெல்வேலி. தொடர்புக்கு: 95666 92858

9. குர்ஆனிய்யா புக் டிப்போ, மதுரை. தொடர்புக்கு: 94432 43786

10. அல்-அமீன் புக் டிப்போ, மதுரை. தொடர்புக்கு: 98423 37700

11. பிஸ்மி ஷாப்பிங் சென்டர், கும்பகோணம். தொடர்புக்கு: 80983 20442

12. ஷேக் முஹம்மது, காரைக்கால். தொடர்புக்கு: 99658 55096

கருத்துகள் இல்லை: