சனி, 4 பிப்ரவரி, 2012

மொபைல் பயான்!

அஸர் தொழுதுவிட்டு, ஒரு தம்ளரில் தேநீரை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள் ஃபாத்திமா.
எதிர்வீட்டில் ஆமினாவும் அஸர் தொழுதுவிட்டு, கையில் தேநீரை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள்.

ஏன்டி ஆமினா,  அஸர் தொழுதுட்டியா?

ஆமாக்கா, இப்பத்தான் தொழுதுட்டு வெளியே வாறேன்.

இன்னைக்கு நம்ம ஊர் அசரத்து சொன்ன பயான கேட்டியா? நம்ம வீட்டுப் பெண் பிள்ளைங்க சிலபேர் வேறு சாதிப் பசங்களோட காதல் வலையில சிக்கி, அவங்களோட வார்த்தையில மயங்கி அவங்களோடவே ஓடிப்போறாங்களாம். இது மாதிரி நம்ம பெண் பிள்ளைங்க கெட்டுப் போறதுக்குக் காரணம் அவங்களோட வறுமையும், தகாத பழக்க வழக்கமும்தானாம்.

வேறு என்ன சொன்னாங்க ஃபாத்திமாக்கா?

இத ஒழிக்கிறதுக்கு எத்தனையோ வழிமுறைகளைப் பலரும் சொல்றாங்களாம். ஆனா, அதையெல்லாம் விட பெற்றோருடைய கவுன்சிலிங் மூலமாத்தான் இத நம்ம பெண் பிள்ளைகளுக்குப் புரிய வைக்க முடியும்னு சொல்றாங்க.

எப்படிக்கா கவுன்சிலிங் செய்யுறது?

அதுக்கு நாமதான் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கணும். இரவு சாப்புடும்போது, ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளோட  ஒண்ணா உட்கார்ந்து சாப்புடுற பழக்கத்த ஏற்படுத்திக்கணும். அந்த நேரத்துல ஒவ்வொருவரும் காலை முதல் மாலை வரை நடந்த விசயங்களை ஒருத்தருக்கொருத்தர் பரிமாறிக்கணும். இப்படிப் பேசினா, ஒவ்வொருவருக்கும் என்ன பிரச்சனை இருக்கு என்பதை மற்றவர் புரிந்துகொள்வதோட தாய்-தந்தை அதற்குத் தீர்வையும் சொல்லலாம்.

அந்த நேரத்துல, ஒரு தந்தை அன்பா பேசுற பேச்சும், அவர் ஊட்டுற இஸ்லாமிய விசயங்களும் நம்ம பெண்பிள்ளைங்க மனசுல ஆழமாப் பதிஞ்சிடும். அதன் பிறகு பொறுக்கிப் பசங்க என்னதான் காதல் வார்த்தயப் பேசுனாலும் அவங்கள வழிகெடுக்கவே முடியாது. இத ஒவ்வொரு பெற்றோரும் பின்பற்றணும்னு நம்ம அசரத்து பயான முடிச்சாங்க.

ஏக்கா, நீங்க ஜும்ஆ தொழுகை, வீட்லதானே தொழுதீங்க? பிறகெப்படி அசரத்து பயான கேட்டீங்க?

அதுவா, என்னோட வீட்டுக்காரர் பள்ளிக்குப் போயி, அசரத்து பயான் பேச ஆரம்பிச்சதும் என்னோட மொபைலுக்கு அழைப்பாரு. நான் அத எடுத்து, ஆன் செய்துட்டு சப்தமா (லவ்டு ஸ்பீக்கர்) வச்சிடுவேன். அவ்வளவுதான். எங்க வீட்ல உள்ள எல்லோரும் அசரத்து பயான லைவா கேட்டுக்குவோம்.

இந்த விசயம் எனக்குத் தெரியாமப் போச்சே.அடுத்த வாரமே நானும் என் வீட்டுக்காரரிடம் சொல்லி, பயான் கேக்க ஆரம்பிச்சுடுறேன்.






இந்தச் சிறுகதை இந்நேரம் டாட் காமிலும் இடம்பெற்றுள்ளது.