செவ்வாய், 2 நவம்பர், 2010

தினமணி ஆசிரியருக்குக் கடிதம்

ஆர். நடராஜ் எழுதியிருந்த `விழலுக்கு நீர் பாய்ச்ச மாட்டோம் எனும் கட்டுரை படித்தேன். இலஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்று பொது அறிவிப்புச் செய்துவிட்டதாலோ `வாங்காதீர்கள்! கொடுக்காதீர்கள்! என்று வெறுமனே பரப்புரை செய்துகொண்டிருப்பதாலோ இதற்கு நிரந்தரத் தீர்வு கண்டுவிட முடியாது. பொதுவாக, ஒரு பிரச்சினையின் ஆணிவேரைக் கண்டுபிடித்து அதை முற்றிலும் களைவதுதான் அதற்குரிய தீர்வாகும். இலஞ்சத்தின் ஆணிவேர் `செய்யும் வேலைக்கு அதிகபட்சப் பிரதிபலனை எதிர்பார்ப்பதுதான்.
அரசு அலுவலகங்களில் ஒரே வகையான வேலைக்குப் பல ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அச்சமயத்தில் அவர்களுள் பலர் அலட்சியப்போக்கோடு செயல்படுகிறார்கள். அத்தகைய அலுவலகங்களில் `அவர் பார்த்துக்கொள்வார் என்ற பொறுப்பற்ற தன்மை சிலருக்கு உண்டு. `அவர் கையொப்பம் இட்டால்தான் அது முடியும் எனும் வகையான பணியிலுள்ள ஊழியர்களும் உள்ளனர். இவர்களிடம்தான் இலஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. இதைத் தடுக்க, அனைத்து அலுவலகங்களிலும் `டோக்கன் முறையைச் செயல்படுத்தலாம்.  யார் யார் எத்தனை வாடிக்கையாளர்களை, நுகர்வோர்களைச் சந்தித்துள்ளனர் என்பதற்கான கணக்கீடுதான் அந்த டோக்கன். அவற்றின் எண்ணிக்கைக்கேற்ப ஆண்டின் இறுதியில் அவர்களுக்கு `போனஸ்  வழங்கலாம். பொதுவாக வழங்கப்படுகின்ற போனசை இரத்துச் செய்து விட்டுப் பொதுமக்களுக்குப் பணிபுரிந்த டோக்கன் எண்ணிக்கை அடிப்படையில் `புள்ளிகள் வழங்கப்பட்டு அதற்கேற்ப போனஸ்   வழங்கலாம். இதனால் முந்திவந்தவர்கள், பிந்தி வந்தவர்கள் என்று நுகர்வோரிடையே சண்டை ஏற்படாது. அரசு ஊழியர்களும் தம் எதிர்காலப் பிரதிபலனை மனதிற்கொண்டு மகிழ்ச்சியுடன் பணிபுரிவர். இது நடைமுறைப்படுத்தப்பட்டால் இலஞ்சம் தானாகவே விடைபெற்றுக்கொள்ளும்.
-நூ. அப்துல் ஹாதி பாகவி,

கருத்துகள் இல்லை: